Friday, December 28, 2007

'தாரே ஜமீன் பர்' - ஒரு விதிவிலக்கு


'தாரே ஜமீன் பர்' படம் பார்த்த பாதிப்பிலிருந்து இன்னும் மீள முடியாமலிருக்கிறேன். அய்யனார், குசும்பர், பெனாத்தலார், ஆசிப் என்று பலரும் எழுதிவிட்ட பிறகும், அந்த படத்தை பற்றி எழுதுவதற்கு நிறைய இருந்தாலும் விமர்சிக்க வார்த்தையில்லை என்றுதான் சொல்ல வேண்டும், குறிப்பாக தர்ஷீலின் நடிப்பு குறித்து சொல்லும் போது. என்னைக் கேட்டால் கண்டிப்பாக தர்ஷீல் நடிக்கவில்லை அந்த கதாபார்த்திரமாகவே மாறியிருக்கிறார் என்றுதான் சொல்லுவேன். கான்களையும் கப்பூர்களையும் பச்சன்களையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு சுட்டித்தனம், பிடிவாதம், மகிழ்ச்சி, பயம், அழுகை, தயக்கம், ஏக்கம், கோபம், வெறுமை என்று எல்லாவித உணர்வுகளையும் கண்களிலேயே காட்டிவிடும் அசாத்திய நடிப்பு திறமைப் படைத்தவர். கடைசிக் காட்சியில் ஆசிரியரை மிஞ்சிய மாணவனாக மட்டுமல்ல நடிப்பிலும் இயக்குனரையே மிஞ்சிவிட்ட குட்டி கதாநாயகன் - நிஜ நாயகன் தர்ஷீல். படத்தை பார்க்கும் போது என்னுடைய தம்பிதான் என் நினைவுக்கு வந்தான். அப்படி இருப்பதற்கு Dyslexia என்று பெயரென்றெல்லாம் தெரியாமலேயே இருந்து விட்டோம். ஒரு நல்ல ஆசிரியையாக இராம் ஷங்கர் நிக்கும்பாக அவனை மாற்றியெடுத்த பெருமை என் அக்காவையே சேரும்.

ஆமீர் கானின் தயாரிப்பு இயக்கமாக இருந்தாலும் பாராட்டுகள் போய் சேர வேண்டிய இடம் அதன் மூலக் காரணமான அமுல் குப்த்தை. தர்ஷீலை நமக்கு கண்டுபிடித்து தந்த பெருமையும் இவரையே சாரும் என்று பெருந்தன்மையோடு சொல்லியிருக்கிறார் ஆமீர் கான். படத்தில் பாடல் காட்சிகள் வெறும் காட்சிகளாக இல்லாமல் நம் மனதை வாட்டியெடுக்கும் விந்தையாகிறது. விந்தையின் வித்வான்கள் வித்தகர்கள் இசையமைப்பாளர் ஷங்கர் எஹ்சான் ராய்யும் பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரரான பிரசுன் ஜோஷியும். படத்தின் முதல் பாடலான 'தாரே ஜமீன் பர்' மெல்லிய இசையில் ஓங்கி ஒலிக்கும் சங்கர் மகாதேவன் குரல் முதலில் கேட்கும் போது அத்தனை வலுவாக சென்றடையவில்லை, காரணம் காட்சியில் காட்டப்படும் குழந்தைகளின் முகங்களும், அசைவுகளும், சேஷ்ட்டைகளும் இரசிக்க வைத்ததோடு, படத்தை எதிர்நோக்கி உட்கார்ந்திருந்ததாலும் கூட இருக்கலாம். ஆனால் படம் பார்த்து முடித்த பிறகு மறுபடியும் ஒலிநாடாவில் கேட்கும் போது உலுக்கியெடுக்கவே செய்கிறது பாடலின் வரிகள்.

Dekho inhein yeh hain oss ki boodein
Patto ki good mein aasaman se khude
Angdai le phir karwat badal kar
Nazauk se moti hasde phishal kar
Kho na jaye yehh
Taaare Zaaame per


'வானத்திலிருந்து இலைகளின் மடியில் குதித்த பனித்துளிகள், சோம்பல் முறித்தெழுந்து துயில் கலையும் மிருதுவான முத்துச் சிரிப்பைக் கொண்ட தரைவாழ் நட்சத்திரங்களை கைநழுவவிடாதீர்கள்' என்று நான் பொருள் கொண்டது சரியாயென்று தெரியவில்லை. இப்படி இயற்கையோடு குழந்தையை ஒப்பிட்டு சிலாகிக்கும் அந்த பாடலின் வரிகள் அற்புதம்.

கடைசி பாடலான 'கோலோ கோலோ' ஆசிரியர் மாணவருக்கு தரும் உற்சாகமாக, தன்னம்பிக்கை தரும் சொற்களாக, புது தெம்பாகிறது. அதில் கம்பீரமாக ஒலிக்கும் 'Tu dhoop hai jham se bikhar, tu hai nadee, o bekhabar. Beh chal kahin ud chal kahin, dil khush jahan teri woh manzil he wahin' என்ற வரிகள் நமக்கே புது புத்துணர்வு தருவதாகவுள்ளது. வண்ணமயமான காட்சியமைப்பு, குழந்தைகளும் கண்ணெடுக்காமல் பார்க்கும் பாடல்.

'பம் பம் போலே' என் மகளுக்கு மிகவும் பிடித்த பாடல். சோகமான காட்சிக்கு பிறகு மனதை துள்ள வைக்க ஆமீர் கான் & ஷான் குரலில் இடைவேளையைத் தொடர்ந்து துள்ளிவரும் இந்த பாடல் எல்லா குழந்தையையும் ஆட வைக்கும் .

எல்லா பாடல்களுமே நல்ல பொருட்பட அமைந்து, அதற்கேற்ற காட்சிகள் செறிவாக வந்திருக்கிறது. எல்லா பாடல்களும் நன்றாக இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 'மே கபி பதாத்தா நஹீ' என்ற பாடல். கண்டிப்பாக எல்லோரையும் கலங்க செய்திருக்கும். இந்த கட்டத்தில் அழ ஆரம்பித்ததுதான்... இன்னும் அந்த பாடலை கேட்டாலும் தன்னாலேயே கண்கள் நிறைகிறது காரணமின்றி. 'தாரே ஜமீன் பர்' தாரை தாரையாக கண்ணீர் வடிக்க செய்தது. அதற்காக இது சோகமான அழு மூஞ்சிப்படமென்று ஒதுக்கிவிட வேண்டாம். அப்படியல்ல இது சோகத்தில் ஏற்படும் கண்ணீரல்ல உணர்ச்சியில் வசப்படும் போதும் நெஞ்சை நனைக்கும் கணங்கள் ஏற்படும் போதும் ததும்பிக் கொண்டு நம் மனதை லேசாக்க எழுமே அப்படியான கண்ணீர் அது.

எனக்கு தெரிந்த வகையில் தமிழ்படுத்தியுள்ளேன்.

Main Kabhi Batlata Nahin |நான் எப்போதும் சொன்னதே இல்லை
Par Andhere Se Darta Hoon Main Maa |ஆனால் இருட்டென்றால் பயம்தானேம்மா
Yun To Main,Dikhlata Nahin |நான் எப்போதும் வெளிக்காட்டியதில்லை
Teri Parwaah Karta Hoon Main Maa | உங்கள் மீது எனக்கு அக்கறையுண்டு அம்மா
Tujhe Sab Hain Pata, Hain Na Maa | உங்களுக்கு எல்லாமே தெரியும்தானேம்மா
Tujhe Sab Hain Pata,,Meri Maa| உங்களுக்கு எல்லாமே தெரியும்தானே.. என்னுயிர் அம்மா

குழந்தையின் ஒவ்வொரு அசைவும் யாருக்கு புரிகிறதோ இல்லையோ ஒரு தாயிக்கு சொல்லாமலே விளங்கும், அதை ஆணித்தரமாக நம்பும் குழந்தை தாயைவிட்டு விலகப் போகிறோம் என்று தவிக்கும் தவிப்பை இந்த ஒரு பாடலே சொல்லி முடிக்கிறது. எந்த ஒரு காட்சியும் ஜவ்வாக நீளமாக இழுக்காமல் கோர்வையாக டக்டகென்று முடித்திருக்கும் அபார யுக்தி அமுல் குப்த்தின் மனைவி தீபா பாட்டியாவுடையது.

Bheed Mein Yun Na Chodo Mujhe |கூட்டத்தில் என்னை விட்டுவிடாதீர்கள்
Ghar Laut Ke Bhi Aa Naa Paoon Maa |வீட்டுக்கு திரும்பி வரவும் தெரியாதேம்மா
Bhej Na Itna Door Mujkko Tu |தொலைதூரம் என்னை அனுப்ப வேண்டாமே
Yaad Bhi Tujhko Aa Naa Paoon Maa |என் நினைவுகளும் உங்களுக்கு இல்லாமல் போகும்மா
Kya Itna Bura Hoon Main Maa |நான் அவ்வளவு கெட்ட பையனாம்மா?
Kya Itna Bura Meri Maa |நான் அவ்வளவு கெட்ட பையனா...என்னுயிர் அம்மா?

தாயை பிரிந்து விடுதிக்கு செல்லும் ஒரு குழந்தையின் நிலையை, நிரந்தரமாக தாயை பிரிந்த பிஞ்சுகள் பார்த்து அழும் போது, ஏனோ அந்த பாடல் என் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்த அபியும் இடது பக்கத்திலிருந்த ஜெஸியும் (ஆசிப்பின் மக்கள்) மறைந்த அவர்களது தாயை நோக்கி 'எங்களை நன்றாக அறிந்த நீங்கள், எங்களை விட்டு தொலைதூரம் சென்றது ஏன்?' என்று கேட்பதாக பட்டது எனக்கு.

Jab Bhi Kabhi Papa Mujhe |எப்போதும் அப்பா என்னை
Jo Zor Se Jhoola Jhulate Hain Maa |வேக வேகமாக ஊஞ்சலிலாட்டும் போது அம்மா
Meri Nazar Dhoondhe Tujhe |என் கண்கள் உங்களைதான் தேடுகிறது
Sochu Yahi Tu Aa Ke Thaamegi Maa |என்னை நீங்கள் வந்து கெட்டியாக பிடித்துக் கொள்வீர்கள் என்று நினைத்தேன் அம்மா

Unse Main Yeh Kehta Nahin |அவரிடம் இது பற்றி சொல்ல மாட்டேன்
Par Main Seham Jaata Hoon Maa |ஆனால் உள்ளுக்குள் பயம் தானே அம்மா
Chehre Pe Aana Deta Nahin |முகத்தில் அதை காட்டிக் கொள்ளாமலிருந்தேன்
Dil Hi Dil Mein Ghabraata Hoon Maa |என் மனதிற்குள் நான் பயந்தேன் அம்மா

Tujhe Sab Hain Pata, Hain Na Maa | உங்களுக்கு எல்லாமே தெரியும்தானேம்மா
Tujhe Sab Hain Pata,,Meri Maa| உங்களுக்கு எல்லாமே தெரியும்தானே..என்னுயிர் அம்மா

(Main Kabhi Batlata Nahin)

பாடலை கேட்க இதை கிளிக்கவும்

பாடல் மழையில் நனைந்த நீங்கள் திரையில் குடும்பத்துடன் படத்தையும் பார்த்துவிடுங்கள். இந்த படத்தை பார்க்க குழந்தை பிரியராக, ஒரு தகப்பனாக, தாயாக இருக்க வேண்டிய அவசியமில்லை, இது நம் மனதில் ஒளிந்துக் கிடக்கும் மனிதத்தை தட்டி எழுப்பும் படம். எந்த படத்தையும் ஒப்பிட முடியாத விதிவிலக்கான அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டியப் படம்.

கொசுறு: இது எனது 100வது பதிவு

Tuesday, December 25, 2007

எம்.ஓ.பி. வைஷ்ணவாவின் மறுபக்கம்


கீழ்க்கண்ட பின்னூட்டங்கள் என்னுடைய 'கல்லூரி - நிஜமும் நிழலும்'- பதிவுக்கு வந்தவை. அரசாங்க விடுமுறையை கல்லூரிகள் தர மறுக்கிறது என்று நான் எழுதப் போக, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக அதிர்ச்சி தரும் பின்னூட்டங்கள். இது உண்மைதானா என்ற கேள்வியை எழுப்புகிறது.

hi jaseela,
even i'm a student of MOP. forget abt govt holidays atleast v can adjust. bt i want to tel an important worst thing our coll did last year.

everybody outside thinks tht our coll is gr8 and it has campus placements n all. bt the rule for the placement is tht every student who are selected in placements must give their first month salary to the coll tht too b4 receiving the salary. if they don giv the offer letters frm the company wont b given to that student.

idhu kodumailayum kodumaila...

*******************

Hello jazeela,
someone from my college has written about that campus placement. i appreciate her guts and that rule is true. so u dont have to worry about its authenticity. But she forgot to include an idiotic incident that happend last year.

A student from our college was selected from the company google. The college asked her to pay Rs.20000 (i.e) half the amount of her gross salary. She was from a middle class family and so she didnt have that amount at hand. So her father said he'll pay when she receives her first salary. The management insulted her father and asked him to get out of the office and the pathetic thing is that the girl was barred from writing her end semester exam.

How cheap it is????

கல்வி வியாபாரமயமாகி விட்டதை நாமெல்லாம் அறிந்திருந்தாலும் இந்த வகையில் தரம் தாழ்ந்து வருவதை அறியும் போது கொஞ்சம் பயமாகக் கூட இருக்கிறது. பெற்றவர்கள் பார்த்து நல்ல கல்லூரியென்று சேர்த்தால், படிக்குமிடத்திலேயே மகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய வாய்ப்பு இருப்பதாக நம்பினால் இப்படியொரு இடியா வந்து விழும்? தனியார் மயமாக்கல், தன்னாட்சி என்று கல்லூரிகளுக்கு ஆதிக்கம் வந்துவிட்டதால் இப்படி அதிகார துஷ்பிரயோகம் செய்து மாணவிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இது போன்ற கல்லூரிகளுக்கு அரசாங்கம் தன்னாட்சி அதிகாரத்தை ரத்து செய்தால்தான் என்ன? ஒரு கல்லூரிக்கு செய்துவிட்டாலே ஒட்டுமொத்த கல்லூரிக்கும் ஒருவித பயமிருக்கத்தான் செய்யும். எந்த ஒரு செயலை செய்யும் போதும் யோசிக்கவே செய்வார்கள்.

வேலை வாங்கி தரும் பிரதிநிதி நிறுவனங்கள் (recruitment agencies) கூட தனக்கான ஊதியத்தை நிறுவனங்களிடம்தான் வாங்கிக் கொள்ளுமே தவிர வேலையில் சேரும் நபரிடமிருந்தில்லை. அப்படியிருக்க அற்பத்தனமாக முதல் சம்பளத்தை வேலையில் சேரும் முன்பே மாணவிகளிடம் வாங்குவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

எங்கேயோ இருக்கும் என் காதுகளுக்கு இது போன்ற விஷயங்கள் எட்டும் போது உள்ளூரிலேயே இருக்கும் ஊடங்கள் ஊமையாக இருக்க காரணமேதும் உண்டா? சின்ன சமாச்சாரங்களையும் 'சிறப்புப் பார்வையாக' ஊதி பெருசாக்குபவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா? அல்லது அலசி செய்தி வெளியிடுகிறோம் என்ற விகடகவிகளுக்கு இதெல்லாம் பெரிய விஷயமில்லையா? ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் அல்லவே!

என் முந்தைய பதிவிற்கு பாதிக்கப்பட்ட மாணவிகளைத் தவிர, கல்லூரியின் நிழலிற்கு ( பட விமர்சனத்திற்கு) மட்டுமே பின்னூட்டமிட்ட பதிவர்கள் நிஜத்தைக் கண்டும் காணாமல் போனது ஆச்சர்யமளிப்பதாய் இருந்தது. ஊடகங்கள் அரசியல் சார்பாக, சாதி ரீதியாக, வியாபார மயமாகிப் போய்விட்டன, நம்மைப் போன்ற வலைப்பதிவர்களாவது ஒளிந்துக்கிடக்கும் சமூக அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஊடகமாக நம் வலைப்பதிவை அமைத்துக் கொள்வோமே? சேர்ந்து குரல் கொடுங்கள். அதன் மூலம் சேர வேண்டிய காதுகளுக்குச் சென்று சேர வைப்போம்.

Sunday, December 23, 2007

கல்லூரி - நிழலும் நிஜமும்

சமீபத்துல வந்த படங்களில் சில படம் ரொம்ப நல்லாயிருக்குன்னு பலர் சொல்லி கேட்கும் போது பார்த்தே தீர வேணும்னு ஆச வருது. எங்க ஊருல பெரிய பிரபலங்கள் நடிச்சாத்தான் படமே திரைக்கு வருது. இந்த வாரம் 'ஒன்பது ரூபாய் நோட்டு' வரும்னு எதிர்பார்த்து ஏமார்ந்தோம். 'எவனோ ஒருவன்', 'கல்லூரி'ன்னு சில நல்ல படங்கள் திரைக்கு வரும் வரை காத்திருக்க முடியாம குறுந்தகடுக்கு வேட்டையாடி 'கல்லூரி' கிடைச்சுது.


'கல்லூரி' படத்துல யாரு நடிச்சிருக்காங்கன்னு கேட்டுறாதீங்க சத்தியமா எனக்கு தெரியாது (தமானா, கதின்னு படிச்ச நினனவு). ஒரு முகம் கூட தெரிஞ்ச முகம் கிடையாது. இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு அசாத்திய தைரியம்தான்னு சொல்லலாம். அதுவும் பார்க்குறா மாதிரியான 'பாய்ஸ்' படத்துல வர மாதிரியான அழகழகான மூஞ்சிங்கக்கூட கிடையாது ஆனா யார் நடிப்புக்கும் பஞ்சமே இல்ல. கதாநாயகன் கதாநாயகி மட்டுமல்ல எல்லா கதாபாத்திரங்களும் நம்ம நட்பு வட்டத்துக்குள்ள வந்த உணர்வை ஏற்படுத்திடுறாங்க. படத்தை பார்க்கும் போது 'ஞாபகம் வருதே'ன்னு பாட தோணுது. கதாநாயகன் பாவம் கொஞ்சம் நடிக்க சிரமப்பட்டிருப்பார் போல தெரியுது. இயக்குனருக்கு பெண்ட் கழண்டிருக்கும். கயல் கதாபாத்திரம் தான் கதாநாயகியவிட மனசுல நிற்கிறாப்புல இருக்கு. ரொம்ப யதார்த்தமான காட்சியமைப்புகள் இருந்தாலும் நிறைய தேவையில்லாத சொருகுதலும், கூடவே சில ஓட்டைகளும். ஏதோ நிறைய சொல்ல வந்ததை அப்படியே விட்டுட்டா மாதிரி இருக்கு படம். ஒவ்வொரும் மாணவருடைய நிலைப்பாட்டையும் ஆழமா காட்டாம லேசா கொண்டு போயிருக்காங்க. ஒரு மாணவி சலீமாவின் அப்பாவுக்கு நெஞ்சுவலின்னு சொன்னதும் மொத்த மாணவர்களும் தம் தகப்பனுக்கு நேர்ந்தது போல முகத்தை வைச்சுக்கிறவங்க, அதே அப்பா இறந்த காட்சிய கனமில்லாம காட்டியிருக்காங்க. அப்பா இறந்தாலும் பரீட்சை எழுத போகிறாள் சரி, அந்த மனநிலையில் பரீட்சை எழுதுவதை சர்வசாதாரண விஷயமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கு, அதக்கூட விட்டுடலாம் ஆனா அந்த காட்சிக்கு அடுத்த காட்சியே பரீட்சை அறையிலிருந்து வெளியில் வந்த பிறகு கதாநாயகிக்கு வந்த வாழ்த்து அட்டையை பார்த்து சிரிப்பது போல காட்சியமைப்பு. அப்பா இறந்து மறுநாளே சொந்த மகள் உட்பட அடுத்த நாளே கல்லூரியில் சிரித்துக் கொண்டிருப்பது ஏதோ நாடகம் போல ஒட்டாம இருக்கு. மெல்லிய நகைச்சுவைக்கு குறைவே இல்லை. 'டாடி'ன்னு ஒவ்வொருத்தர் வீட்டிலையும் அழைப்பதா நினைத்து பார்க்கும் காட்சி அருமை. நகைச்சுவைக்காக இரண்டு மாணவர்கள் தோன்றும் போதெல்லாம் சிரிப்பு தன்னால வந்திடுது. மத்தப்படங்கள் மாதிரி 'டூயட்' கண்றாவியெல்லாமில்ல இசை ஜோஷ்வா ஸ்ரீதர்தான் இந்த படத்துல. பின்னணியோசையில் சில பாடல்கள், காதல் காட்சிகளில் பழகிய இளையராஜாவின் ஒலி கீதங்கள். அம்மன் கோயில் கிழக்காலே படத்தில் வரும் 'உன் பார்வையில் ஓராயிரம்' நல்லவேளையாக 'ரீமிக்ஸ்' சமாச்சாரமெல்லாமில்லாமல் தப்பித்து அப்படியே ஒலிப்பது நேர்த்தியா இருக்கு. கல்லூரியை பின்னணியா வைச்சு நிறைய படங்கள் வந்திருக்கு ஆனா அதையெல்லாம்விட்டு தனித்துக் காட்டவோ அல்லது பாலாஜி சக்திவேலென்றாலே ஒரு உண்மை சம்பவம் படத்தில் ஒளிந்து கிடக்கும் என்று பெயர் வாங்கவோ அந்த கடைசிக் காட்சி தர்மபுரி தீ விபத்து அமைந்திருப்பதாக எனக்கு தோன்றியது. சர்ச்சைக்குரிய படமாக்கினாலும், அரசியல் வாசனையிருந்தாலும் படத்தை ஓட்டிவிடலாம் என்பதற்கான யுக்தியாயென தெரியவில்லை ஆனா ஏதோ அவசரகதியா மனசை சஞ்சலப்படுத்தாமல் 'டபக்கென்று' முடிந்து விடுகிறது கடைசிக் காட்சி. அழுத்தமாக பதிய வேண்டிய படம், இன்னும் நல்ல வந்திருக்க வேண்டிய படம் என்றெல்லாம் இங்க உட்கார்ந்துக் கொண்டு எழுதுவது சுலபம்தான் ஆனா படம் எடுப்பவர்களுக்குத்தானே தெரியும் கஷ்டம். அதனால விட்டுடலாம். மொத்ததுல நல்ல படம்ப்பா பார்க்காம விட்டுடாதீங்க.

அப்புறம், கல்லூரின்னாலே கலகலப்புன்னு படங்களை காட்டி காட்டியே பசங்களை உசுப்பேத்தி விடுறாங்க ஆனா இன்னும் நிறைய கல்லூரி பள்ளிக்கூடத்தை விட மோசமாத்தான்ப்பா நடத்துறாங்க. இங்க துபாயில் 19ம் தேதி ஈத் (தியாகத் திருநாள்) - இங்க ஒரு பெருநாள் வாழ்த்தை சொல்லிக்கிறேன் எல்லாத்துக்கும், சென்னையில 21ந் தேதித்தான் ஈத். அமீரகத்துக்கும் இந்தியாவுக்கும் ஒன்றரை மணி நேரம்தான் வித்தியாசம் ஆனா என்ன மாயமோ தெரியல பண்டிகைகள் மட்டும் இரண்டு நாள் வித்தியாசத்துல வருது. வார விடுமுறைய கணக்கிட்டு வருதோ என்னவோ. மழைக் காரணம பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறைன்னு அரசு அறிவிச்சாலும் எம்.ஓ.பி. வைஷ்னவா மகளிர் கல்லூரி (MOP Vaishnava College for Women -Autonomous) மட்டும் அடம்பிடிச்சி கல்லூரிய திறந்து வைக்கிற மர்மம்தான் என்னவோ? அதுவாவது பரவால ஈத் பெருநாளுக்கு அரசு விடுமுறை ஆனா அன்றைக்குதான் பரீட்சை வைப்பேன்னு அடம்பிடிச்சு விடுமுறை தராம பரீட்சை வேற. பாவம் பிள்ளைகளின் கோரிக்கையெல்லாம் நிராகரிச்சிட்டு அப்புறம் போனாப் போகுதுன்னு முஸ்லிம் பிள்ளைகளுக்கு மட்டும் ஈத்துக்கு விடுமுற, அன்றைக்குள்ள பரீட்சைய ஜனவரி 2ந் தேதி தனியா எழுதிக்கிடுங்கன்னு சொல்லிட்டாங்களாம். என்ன கிறுக்குத்தனம் இது? நானும் கேட்டு வைச்சேன் "எல்லாரும் சேர்ந்து அரசு விடுமுறை அதனால பரீச்டைக்கு வராம 'பங்க்' அடிப்போம்ன்னு சொன்னா என்ன"ன்னு. "அடிச்சா எங்க மதிப்பெண்கள்தானே போகும்"னு பாவம் புலம்புறாங்க பசங்க. "சிறுபான்மையினர்னாலே எளக்காரம்தான்"னு நான் சொல்ல "ம்ஹும் முஸ்லிம்கள்னா மட்டும்தான், ஏன்னா கிருஸ்துமஸ்ஸுக்கு விடுமுறைதானே"ன்னு சொல்றாங்க. "அப்ப இது எளக்காரமில்ல ஏதோ வெறுப்பு, பகைமை"ன்னு நான் சிரிச்சேன். அதுக்கு "பார்ப்பனீயம்"னு முணுமுணுப்பு. 'இதுல பார்ப்பனத்தனம் ஒளிஞ்சுக்கிட்டிருக்கிறதா இல்ல சில பார்ப்பனத்தலைகள் ஒளிஞ்சிருக்கிறதான்னு கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஜாலியா இருக்கிற பசங்க வயித்தெறிச்சலையெல்லாம் கொட்டிக்கிறது நல்லதுக்கில்ல.

Saturday, December 15, 2007

மறுபடியும் வந்துட்டோம்ல


கொஞ்ச நாட்கள் வலைப்பக்கம் வராததால் நான் என்னவோ என் கடைசி பதிவுக்கு மிரட்டல் வந்து நான் பயந்து ஒளிந்துக் கொண்டதா வதந்தியப் பரப்பிக்கிட்டு திரியுறாங்கோ. அப்படியெல்லாம் ஒண்ணுமேயில்ல சாமி, நிஜமாவே அப்படி ஏதாவது மிரட்டல் வந்திருந்தா அதுக்காகவே வம்படியா தொடர்ந்து எழுதியிருப்பேன் 'என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றீங்களே'.

எழுத நினைத்த ஒரு புதிய பெண் வலைப்பதிவரையும் 'ஜெஸிலாவுக்கு என்ன கதியாச்சு பாத்தியா, அத மனசுல வச்சுக்கிட்டு சும்மா பின்னூட்டம் போடுவதோடு நிறுத்திக்கோன்னு' அந்த பெண் பதிவருடைய கணவர் - அவரும் பதிவர்தாங்க - மிரட்டல் விடுத்திருக்கிறார்னா பார்த்துக்கிடுங்க வதந்தி எப்படிலாம் பரவுதுன்னு. இது என் காதுக்கே எட்ட, ம்ஹும் இனி சும்மா இருக்கக் கூடாது, வாரத்துக்கு ஒரு பதிவாவது போட்டிடனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு வந்துட்டேன். 'என்ன கொடும சரவணன்'னு புலம்புறதை நான் காதில் வாங்கிக்கிறதா இல்ல.

சரி உள்ளே வரும்போதே ஒரு நல்ல தமிழ்ப்படத்தின் திரைவிமர்சனம் தரணும்னு நானும் திரையரங்கா ஏறி இறங்குறேன், ஒரு நல்ல படம் மாட்டலையே. 'அழகிய தமிழ் மகன்' அழுகிய தமிழ் மகனாப் போச்சு, 'வேல்' - சுமார் கூர்மை இல்லை. சரின்னு நேத்து 'பில்லா' படத்துக்கு டிக்கெட் வந்தது, குழந்தைகளுக்காக போவோம்னு பார்த்தா கடைசில எந்தக் குழந்தையும் வரல என் மகளைத் தவிர. அவளுக்கும் படம் பிடிக்கல போலிருக்கு.

அஜீத்தெல்லாம் கதாநாயகரா நடிக்கிறத கொஞ்சம் நிறுத்திக்கணும். முகத்துல சதையெல்லாம் தொங்கி மனுஷன் பெரிய திரையில் பரிதாபமா இருக்கார். கமல் இந்த வயசில் முகத்தில் வயசு தெரியுறாப்புல இவருக்கு இப்பவே - ரொம்ப குடிப்பாரோன்னு பக்கத்துல யாரோ கிசுகிசுத்தாங்க. கொஞ்சம் 'பேஸ் லிப்ட்' செஞ்சா தேவலைன்னு இன்னொருத்தர் அரங்கில் கத்துறார். பிரபுவுக்கும் அந்த கதாபாத்திரத்திற்கும் ஒட்டவேயில்லை, தொப்பையோடு இருப்பவர்களுக்குதான் டி.எஸ்.பி. பதவின்னு எழுதிக் கொடுத்திட்டாங்க போலிருக்கு. அந்த உயரமான போலீஸ்காரர் பக்கத்தில் பிரபுவின் உயரம் பளிச். தெரிந்த கதையை இன்னும் சுவாரஸ்யமா எடுத்திருந்தாத்தான் இன்னும் சுவாரஸ்யமே. இது வெறும் சொதப்பல். 'ச்சே! ரஜினி நடிப்பில் கால் தூசிக் கூட இல்லப்பா'ன்னு தலையில் கை வைக்கத்தான் சொல்லுது.

'நான் அவன் இல்லை' புது வடிவில் வந்த போது நிறைய பேருக்கு அந்த பழையப் படம் நினைவில் இல்லாததாலும் அதைவிட இது பிரமாதமாக சாயம் பூசப்பட்டிருந்ததாலும் கொஞ்சம் தாக்குப்பிடித்தது. ஆனால் இந்த பில்லாவில் நவீன மயமாக்கல் என்று சிகப்பு டைரியை 'பென் டிரைவ்'வாக மாற்றி, நிறைய செல்பேசி உபயோகம், பிரமாண்டமென்று ஹெலிக்காப்டர், மலேசியாவில் படப்பிடிப்பு என்று காசை வாரி இறைத்திருப்பது மட்டும்தான் புதுமையோ? படத்தை ஓட்டுபவருக்கே பிடிக்கவில்லையோ என்னவோ பழைய பில்லாவில் தேங்காய் சீனிவாசன் வரும் காட்சிகள் பிரகாஷ் ராஜ் வைத்து செய்திருப்பதாகக் கேள்வி அந்தக் காட்சிகள் அப்படியே துண்டிப்பு. கொடுத்த காசுக்கு 'கலேரியா' இப்படியா மோசம் செய்யும்? பில்லாவுக்கு எப்பவுமே ரஜினிதான் பொருத்தமென்று அஜீத் மூலமா நிரூபிக்க வேண்டும்?

நேற்று மதியம் வீட்டில் 'ப்ளைட் ப்ளேன்' என்ற அருமையான ஆங்கிலப்படம் பார்த்துவிட்டு மாலையில் 'பில்லா' பார்த்தது நல்ல சாப்பாடு சாப்பிட்டு விட்டு, ருசி கெட்டதை அதன் பிறகு வாயில் போட்டு, நாக்கே கெட்டுப் போச்சுன்னு சொல்வோம்ல அந்த மாதிரிதான். ஆனாலும் நமீதாக்காகவும், நயந்தாராக்காகவும் நம்மூரில் படம் ஓடினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நம்மவர்கள் ரசனையே தனிதானே.
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி