நாட்கள் நீளவில்லை
தூரம் ஏதுமில்லை
விழியில் வேர்வையில்லை
நினைவுகள் அழியவில்லை
துயர் கசக்கவில்லை
காத்திருப்பும் சுகமானதே.
30.8.2021
இரவு 10.21
ஜெஸிலா
உன்னைப் பார்க்காமல்
சென்றேன் என்று நினைத்துவிட்டாய்
நீ நினைக்க வேண்டுமென்றே
நான் பார்க்காமல் சென்றேன்
பார்க்காமல் சென்றுவிட்டதால்
நான் உன்னை நினைக்கவே இல்லை என்கிறாய்
மறக்கவே இல்லாத போது
நினைக்கவேயில்லை என்பதும் உண்மைதான்
நினைத்து விட்டால் மட்டும்
என்னைப் பார்க்க வருவாயா என்ன!?
30.8.2021
இரவு 00:03
ஜெஸிலா
கடந்த காலத்தின்
ஒரு நொடியை மட்டும்
மாற்ற வாய்ப்பு தந்தார்
கடவுள்
மறக்க இயலா
அந்த நொடியை
மட்டும்
மாற்ற கேட்டேன்
மறக்க இயலா
நொடியெனும்போது
ஏன் மாற்ற வேண்டுமென்று
ஏமாற்றி சென்றார்
கடவுள்!
30.8.2021
இரவு 00:00
ஜெஸிலா
ஏன்
நான் எழுதினால் மட்டும்
யாருக்கானது என்று
என்னோடு இணைத்தே கேட்கிறீர்கள்?
பார்த்த படத்தின்
பாதிப்பாக இருக்கலாம்
கேட்ட கதையின்
கருவாக இருக்கலாம்
வாசித்த கவிதையின்
வலியாக இருக்கலாம்
இப்படி எத்தனையோ
இருக்கலாம் இருக்க
என்னை மட்டும்
ஏன் இருக்கவிடுவதில்லை!?
31.8.2021
இரவு 11:09
ஜெஸிலா