ஒரு பெண் தன் காதலுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறாள், அதுவே அவன் வேண்டாமென்றான பிறகு, அவன் முன்னாள் காதலனாக ஆனவுடன் எப்படி விலகி நிற்கிறாள், அதே சமயம் அவனுடன் இணைந்து வேலையும் செய்கிறாள். தன்னை விரும்புகிறான் என்று தெரிந்தும் அதைச் சட்டை செய்யாமல் நட்பாக மட்டுமே பழக முடிகிறது அவளால். ஆணென்ற பாலின பேதமில்லாமல் தூய்மையான நட்பை மட்டுமே முன்னிறுத்தி சகஜமாக இருக்க முடிகிறது அவளால். தன்னைக் கடினமானவளாகக் காட்டிக்கொள்ளும் அவள், தன்னை ‘அம்பேத்கரைட்’ என்று வலிமையாக முன்னிறுத்துபவள், அதே சமயம் உள்ளே உருகுகிறாள், எளிதாக உடையக்கூடியவளாக மென்மையானவளாகவும் இருக்கிறாள், எதற்காக யாருக்காக என்று அறியாமலே. தான் ‘சில்லு சில்லாக உடைக்கப்பட்ட கண்ணாடி’ என்கிறாள் . அவளுக்கு உளவியல் ரீதியாகச் சிக்கல் இருக்கிறது. சிறு வயதில் அவளுக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளின் தாக்கங்கள் அவளுடைய வாழ்க்கை நெடுகிலும் பயணம் செய்து, எல்லா உறவுகளின் மீதும் சந்தேகம் கொள்ளச் செய்கிறது. இப்படி எல்லாமுமான கலவைதான் ரெனே. அதனை மிகவும் சிறப்பாக உடல்மொழியிலும் கண்களிலுமே பேசியிருந்தார் துஷாரா.
Thursday, October 13, 2022
சிறுபான்மையினரின் மொத்த குரல் ‘நட்சத்திரம் நகர்கிறது’
Wednesday, October 12, 2022
துபாய் வேலை
நான் வேலை தேடி துபாய்க்கு மூன்று மாத கால விசாவில் வந்திருந்தபோது, அந்தக் காலத்தில் எல்லோருமே ஒரே மாதிரியான பதிலையே எனக்குத் தந்தனர் - ‘திருமணம் முடித்து இங்கு வா அதன் பிறகு வேலைக்கான விசா தருகிறோம்' என்று. பெரிய நிறுவனங்களிலேயே கூட, திருமணம் ஆகாதவர்களுக்கு வேலைக்கான விசா தருவதில் சிக்கல் இருந்தது. விசிட் விசாவே திருமணமாகாதவர்களுக்குக் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. நான் சொல்வது 1997-இல். எத்தனையோ நேர்முகத் தேர்வுகளைச் சந்தித்தேன். அதிலேயே பலவித அனுபவத்தையும் பெற்றிருந்தேன். என் குடும்பத்தைத் தவிர வெளி நபர் என்று என்னை ஆதரித்தது நஸீரா மாமியும் ஹாஜா மாமாவும்தான். ’நல்ல வேலையா கிடைக்கத்தான் தாமதமாகுது, கண்டிப்பா ஏதாவது வேலை கிடைக்கும்’ என்ற உற்சாக வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அவர்களுடைய மகள் Sameema Mansoor எனக்கு உற்ற தோழியானாள். வார இறுதிகள் அவர்களுடனான சுற்றுப்பயணங்களென நாட்கள் நகர்ந்தன.
Tuesday, October 11, 2022
நவராத்திரி
கீரைவிற்கும்
கண்ணமாவின் தலையில்
கொலு பொம்மைகள்
நவராத்தி நாட்களென்று
பொம்மைகள் விற்பதை
வியாபாரமாக்கியிருந்தாள்
சாமிகளை தலையில்
Monday, October 10, 2022
நசீமா ரசாக்கின் ‘மராம்பு’
'மராம்பு' தலைப்பைப் பார்த்ததும் அப்படியென்றால் என்னவென்று தேடினேன். வாசிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது. முதல் இரண்டு அத்தியாயங்கள் என்னை உள்ளிழுத்துக் கொண்டன. வெறும் 100 பக்கங்கள் என்பதால் உடனே முடித்துவிட்டேன். அதனாலேயே கீழேயே வைக்க முடியாத அளவுக்கு இருந்ததென்று சொல்ல முடியாது. நூலாசிரியரின் முந்தைய படைப்பான 'என்னைத் தேடி' யை விடப் பல மடங்கு சிறப்பான படைப்பு இது என்று உறுதியாகச் சொல்ல இயலும். பெண்களை மட்டுமே வைத்துப் படைத்திருக்கும் படைப்பு. இதை ஆண்கள் வாசித்தால் அவர்கள் எப்படி இதனை உள்வாங்குவார்கள் எனத் தெரியவில்லை.
Saturday, October 08, 2022
தெரிசை சிவாவின் ருபினி
இளம் இசைக் குயில்
நல்ல திறமை எங்கிருந்தாலும் பாராட்டுவதே அமீரக எழுத்தாளர்கள் & வாசகர்கள் குழுமம் / கானல் / Kaanal குழுமத்தின் பண்பு. afina_arul அபீனா அருள் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8-ல் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டவர். நம்ம அமீரகத்தைச் சேர்ந்தவர் இறுதிச் சுற்று வரை வந்ததே எங்களுக்கெல்லாம் அவ்வளவு மகிழ்ச்சியும் பெருமையும். அவருக்குப் பாராட்டு விழா நிகழ்வைச் சிறிய அளவில் எங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்து அபுதையில் சிறப்பாக நடத்தினோம். சிறிய கூட்டத்திற்கெல்லாம் வருவார்களா என்று நினைத்தோம். பெரிய மனசுக்காரர்கள் அதெல்லாம் அவர்கள் நினைக்கவே இல்லை. எனக்குத் தெரிந்து வேறு எந்தப் பெரிய அமைப்புகளும் அவரை இன்னும் கெளரவிக்கவில்லை. நாங்கள்தான் தொடக்கமென்று நினைக்கிறேன். எங்களிடமிருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்றும் நினைக்கிறேன்.
Sunday, October 02, 2022
தன்னம்பிக்கை மங்கை
தங்கமங்கை 23 ஆம் ஆண்டு சிறப்பிதழில் 'மங்கையரின் மறுமலர்ச்சியே மண்ணுலகின் வளர்ச்சி!' என்று ஏழு பெண்களைக் குறித்து ஒவ்வொரு தலைப்பின் கீழ் அடையாளப்படுத்தியுள்ளனர். 'தன்னம்பிக்கை மங்கை'யாக நானும் மிளிர்கிறேன்.
ரம்யா ரவிக்குமார் டார்லிங்குக்கு நன்றி. என்னமா எழுதுறாங்க!!
என்னைப் பற்றியான்னு நானே ஷாக்காகிட்டேன். நன்றிம்மா.
Tuesday, May 31, 2022
நெஞ்சுக்கு நிறைவான நீதி
'நெஞ்சுக்கு நீதி’யில் வரும் கதாநாயகனைப் போலத்தான் எனக்கும் என் பதின்ம வயதில் சாதிய ஏற்றத் தாழ்வுகளைப் பற்றித் தெரியாமல் இருந்தது. ’உண்மையில் இன்றுமா சாதி அடுக்குகளினால் தீண்டாமை, கொலை எல்லாம் நடக்கிறது?’ என்று ஆச்சர்யமாகவே இருந்தது. வாசிப்பும், ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற படங்களும் அதன் உண்மை நிலவரத்தை, சாதிய பாகுபாடுகளை, அழுக்கைப் படம்பிடித்து மனதில் நிறுத்தின.
Saturday, May 21, 2022
நல்லுள்ளம் சூழ் உலகு!
சம்பளம் வாங்கி வேலையில் இருந்தபோது யாரும் என்னை ஏமாற்றியதில்லை, அதற்கான வாய்ப்புமில்லை. எப்போதும் என்னுடன் இருப்பவர்கள் அனைவருமே நல்லவர்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் தொழில் தொடங்கிய பிறகுதான் ‘டிசைன் டிசைனாக’ ஏமாற்றுபவர்களைக் கண்டு வியக்கிறேன்.
சமத்துவம்
எனக்குத் தெரிந்த ஒரு சகோதரமத நண்பர் மனமார உண்மையாகவே நோன்பு வைக்கிறார். அதென்ன ’மனமார’ அப்படியென்ற கேள்வி உங்களுக்கு வரலாம். அதாவது நான் பார்த்த மற்ற நண்பர்கள் எல்லாம் சூரியன் எழும் முன்னெல்லாம் துயில் கலைந்து நோன்பு இருக்க மாட்டார்கள். அவர்களுக்குப் பிடித்த நேரத்தில் எழுந்து சாப்பிட்டு, அதன் பிறகு மாலையில் அவர்களுக்குப் பிடிக்கும் நேரத்தில் நோன்பை முறிப்பது பெரும்பாலும் நாம் பார்க்கக் கூடிய நோன்பாக உள்ளது. இவரும் முதல் வருடம் அப்படிதான் இருந்தார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இஸ்லாமியர்களை மிஞ்சம் வகையில் சுஹூர் நேரத்திற்கு முன்பாகவே துயில் கலைந்து சாப்பிடுகிறார். ”சுஹூருக்கு என்ன சாப்பிட்டீங்க?” என்று கேட்டால் எப்போதும் ஒரே பதில்தான் ’மோர் சாதம்’ என்று. அதேபோல இஃப்தாருக்கு “என்ன சாப்பிட்டீங்க?” என்று கேட்டபோது ”பேரிச்சம்பழமும் தண்ணீரும்” என்றார். அதிர்ச்சியாக இருந்தது. ”வேற என்ன சாப்பிட்டீங்க?” என்றேன். ”வேற என்னங்க, இரவு உணவான மூன்று இட்லியும் சட்னியும்” என்றார் மிகவும் எளிமையாக. என் கண்கள் கலங்கியே விட்டது. கலங்கியதற்குக் காரணம் என்னை நானே சுயபரிசோதனை செய்து கொண்டதால். இஃப்தாரென்றாலே ஒவ்வொரு நாளும் விதவிதமாகச் சமைத்து, ஏதோ அது சாப்பிடும் சடங்காகவே மாறிப் போயிருந்த என் அகராதியில் அதுவும் தெரிந்தவர்களெல்லாம் ‘நான் இதைச் சமைத்தேன்’ என்று படம் காட்டும்போதெல்லாம் ‘ஓ இதை மறந்துட்டோமே, இதைச் செய்வோம்’ என்று அடிப்படையான இறை வணக்கதை மறந்து சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இஃப்தாரை இவர் இவ்வளவு எளிமையாகச் சொல்லும்போது அது எனக்கு ஒரு திறப்பாகவே தெரிந்தது. போன வருட நோன்பில் சில வேளைகள் தொழுதார், அதில் தனக்கு ஆத்மதிருப்தி கிடைப்பதாக உணர்வதாகச் சொன்னதெல்லாம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
Monday, May 16, 2022
ஜன கன மன - தேசியப் படம்
ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களிலும் ஒரு பெண் வன்புணர்வு செய்யப்படுகிறாள். ஆனால் ஏன் ஒரு சில பெண்களுக்கு ஏற்படும் அநீதியைப் பற்றி மட்டும்தான் ஊடங்கள் பெரிதாகப் பேசுகின்றன? ஊடகங்களால் உந்தப்படும் நாமும் ஒரு மரணமென்றால் ’நம் ஊரா? நம் மாநிலத்திலா? நம் சாதிப் பெண்ணா?’ என்றெல்லாம் தெரிந்த பிறகே அதைப் பற்றிப் பேசுகிறோம், பதறுகிறோம். உண்மைதானே? அதேபோல ஓர் என்கவுண்டர் நடந்தால் ’பாஸ்ட் புட்’ மாதிரி ‘இன்ஸ்டண்ட் டீ’ மாதிரி அது ஒரு ‘திடீர் தீர்ப்பு’ என்றெல்லாம் உணராமல், அவன் சாகடிக்கப்பட வேண்டியவன்தான், தூக்கில் போடப்பட வேண்டியவன்தான் என்று ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கும் விஷயங்களை மட்டும் உள்வாங்கி நாமும் அதற்குச் சாதகமான தீர்ப்போடு ஒத்துப்போக இணங்கிவிடுகிறோம்.
அதிகாரவர்க்கம் ஊடகங்களின் துணையோடு, காவல்துறையைக் கைப்பொம்மையாக்கி எப்படியெல்லாம் மக்களை உணர்வுப்பூர்வமாக ஆக்கிரமிக்கிறார்கள் என்பதைப் பற்றித்தான் பேசுகிறது ‘ஜன கன மன’ திரைப்படம்.
இதனை மலையாளப்படம் என்று மட்டும் சுருக்கிவிட முடியாது, இது ஒரு தேசியப் படம். அனைத்துச் சமூகத்தினரும் பார்க்க வேண்டிய படம். அதனாலேயே இந்தப் படத்திற்கு ‘ஜன கன மன’ என்று பெயர் வைத்திருப்பதாக உணர்கிறேன்.
மிகவும் முக்கியமானதென எண்ணுகிறேன்..
வெறும் பொழுதுபோக்காகப் பார்க்கப்படும் ’கேஜிஎப்’களோடு இப்படியான படங்களும் வரவேற்கப்பட வேண்டும். படத்திற்குப் பிறகு ஏற்படும் விவாதமே இம்மாதிரியான படத்திற்கான முழு வெற்றி.
முதல்பாதி படு வேகம், விறுவிறுப்பான காட்சியமைப்பால் அடுத்து என்ன? பேராசிரியர் சபாவாக வரும் மம்தாவைக் கொன்றது யார்? அவளுக்கு ஏற்பட்ட அநியாயம் வேறு யாருக்கும் நிகழக் கூடாது என்று சபாவின் மாணவர்கள் போலவே நாமும் சேர்ந்து அவளுக்காகப் போராடி கொண்டிருப்போம் மனதளவில். அதுவும் சஞ்சன் குமாராக வரும் சூரஜின் நடிப்பும் கம்பீரமும் நம்மையும் போராட்ட மனநிலைக்கே தள்ளிவிடும் தந்திரத்தைச் செய்திருக்கிறார் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி.
அதே வழக்கைத் தலைகீழாக மாற்றுப் பார்வையில் விவாதிக்கிறது இரண்டாம் பாதி. அதுவும் காட்சியமைப்பாக இல்லாமல் வெறும் வசனமாக, நம் மனதைத் தொடும், உலுக்கும் வசனமாக மட்டுமே விரிகிறது காட்சி. நிறையப் பேருக்கு வெறும் வசனம் மட்டுமே பிடிக்காதுதான், ஒளிக்கான வேலையே இல்லாமல் ஒலியால் கலக்கியிருப்பது, அதுவும் பொதுவாகவே நீதிமன்றக் காட்சிகளில் ’விஷுவல் ட்ரீட்’ இருக்காது. ஆனால் இதில் திரை முழுக்க நிறைந்திருப்பது பிரித்விராஜ் என்பதால்
சகித்துக் கொள்ள முடிகிறது, அவ்வளவு உணர்ச்சிப் பொங்க சிறப்பாக நடித்திருக்கிறார்.
2019இல் ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் குழுவாகப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டதை வைத்துத்தான் இந்தப் படத்தைப் பின்னியிருக்கிறது திரைப்படக்குழு. ஆனால் போகிற போக்கில் உன்னாவ் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சேங்கரைப் பற்றியும், உட்கார இருக்கையும் இல்லாததொரு பள்ளிக்கூடத்திலிருந்து, அதுவும் பொதுவான குழாயிலிருந்து தண்ணீர் எடுக்கக் கூடாதென்று
விலக்கப்படுகிற கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட ஒரு பெண் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு படித்துப் பட்டம் பெற்று, ஆளாகி, ஆராய்ச்சியாளராக முனைவராகப் பாடுபட்டும் முனைவர் பட்டம் பெற முடியாமல் தற்கொலை செய்வது
என்பது அவளுடைய தோல்வியா? இல்லை, அவளை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறார்களா? என்ற கேள்வியின் மூலம் ரோஹித் வேமுலாவின் "நிறுவனக் கொலை" பற்றியும் நினைவுப்படுத்துகிறது இந்தத் திரைப்படம்.
அத்தோடு நின்றுவிடாமல் வடக்கில் மாட்டிறைச்சிக்காக நடந்த கொலைகள், அரிசி திருடியதற்காக அடித்தே கொல்லப்பட்ட கேரள சம்பவம், முஸ்லிம் பெண்கள் தலையை மறைப்பதை சிலர் அவர்களில் வெளிப்புற தோற்றத்தை வைத்துப் பேசுவது, மனித உரிமையின் சார்புநிலை, நிறத்தால் ஏற்படும் பாகுபாடுகள், சாதி பிரிவினால் ஏற்படும் அட்டூழியங்கள் என்று எல்லாவித சிறுபான்மை மற்றும் விளிம்புநிலை சமூகத்திற்காகப் பேசியிருக்கிறது இந்தப் படம்.
படத்தில் பிடித்த வசனங்கள்:
”அரசியல்வாதிகள் நினைத்தால் பணத்தையும் செல்லாக்காசாக்க முடியும் ஓட்டையும் செல்லாமலாக்க முடியும், காரணம் இது இந்தியா.”
----------
சஞ்சன் குமார் (சூரஜ் வெஞ்சரமூடு): ”உண்மையே வெல்லும்”
அரவிந்த் சுவாமிநாதன் (பிரித்விராஜ்): சத்தமாகச் சிரித்த பிறகு “காந்தியைக் கொன்றதிலேயே வெவ்வேறு கருத்துகள் கொண்ட நாடு சார் நம் நாடு”
இந்தப் படத்தின் ‘டீசரில்/ டிரெய்லரில்’ பார்த்து வாய்பிளந்த காட்சிகளும் வசனங்களும் படத்தில் இல்லாதது பெரிய ஏமாற்றம்.
தற்போதைய இந்திய அரசியல் சூழ்நிலையில் இந்தக் கூறுகள் ஒவ்வொன்றும் துணிச்சலான செயல்தான். அதற்கேற்ற தைரியமான வசனங்கள்தான் ஆனால் வேறுபட்டக் கூறுகளான துணிவும் வசனங்களும் ஒன்றிணையாமல் முழுமை பெறாமல்
பிணைக்கப்படாமல் துண்டு துண்டாக நிற்பது எடிட்டர் சுதீப் இளமோன் மற்றும் ஸ்ரீஜித் சாரங்கின் தோல்வியா அல்லது இரண்டாம் பாகத்தில் முழுமை பெறுமா என்று தெரியவில்லை ஸ்ரீதிவ்யாவெல்லாம் 1-2 காட்சியில் வந்து செல்கிறார், எதற்கு
என்ன பின்னணியென்று புரியவில்லை. ஒட்டுமொத்தப் படத்திற்கும் பலமென்றால் அது ஜேக்ஸ் பெஜாயின் பின்னணி இசைதான். முக்கியமாகப் படத்தின் கீதமாக வரும் வங்காள மொழிக் கலப்போடு ஒலிக்கும் பாடல் நம் உணர்வுகளைத்
தூண்டுவதாகவுள்ளது. இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் குழுவினருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும். இரண்டாம் பாகத்திற்காகக் காத்திருக்கிறோம்.
குறைகளை மீறிப் பிடித்திருக்கும் படம். அவசியம் பார்த்துவிடுங்கள் விவாதிப்போம்.
#moviereview #JanaGanaMana
Friday, February 25, 2022
Jesus with Turban
குளிர்காலத்தில் அதிகாலையில் விடியலைக் காண 'அல் குத்ரா' ஏரிக்குச் சென்றுவிடுவேன். அங்கு செல்லும்போதெல்லாம் நேரமிருந்தால் ‘லவ் லேக்’ என்ற அதன் அருகில் உள்ள மற்றொரு ஏரிக்குச் செல்வதை வழமையாகக் கொண்டிருந்தேன். அன்றும் அப்படித்தான் அக்கா மற்றும் குழந்தைகளுடன் சூரிய உதயத்தை ரசித்துவிட்டு அங்கிருந்து ‘லவ் லேக்’ சென்று மீன்கள் நிறைந்த இடத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது தவறி ஏரியில் விழுந்துவிட்டேன்.