Thursday, October 13, 2022

சிறுபான்மையினரின் மொத்த குரல் ‘நட்சத்திரம் நகர்கிறது’


ஒரு பெண் தன் காதலுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறாள், அதுவே அவன் வேண்டாமென்றான பிறகு, அவன் முன்னாள் காதலனாக ஆனவுடன் எப்படி விலகி நிற்கிறாள், அதே சமயம் அவனுடன் இணைந்து வேலையும் செய்கிறாள். தன்னை விரும்புகிறான் என்று தெரிந்தும் அதைச் சட்டை செய்யாமல் நட்பாக மட்டுமே பழக முடிகிறது அவளால். ஆணென்ற பாலின பேதமில்லாமல் தூய்மையான நட்பை மட்டுமே முன்னிறுத்தி சகஜமாக இருக்க முடிகிறது அவளால். தன்னைக் கடினமானவளாகக் காட்டிக்கொள்ளும் அவள், தன்னை ‘அம்பேத்கரைட்’ என்று வலிமையாக முன்னிறுத்துபவள், அதே சமயம் உள்ளே உருகுகிறாள், எளிதாக உடையக்கூடியவளாக மென்மையானவளாகவும் இருக்கிறாள், எதற்காக யாருக்காக என்று அறியாமலே. தான் ‘சில்லு சில்லாக உடைக்கப்பட்ட கண்ணாடி’ என்கிறாள் . அவளுக்கு உளவியல் ரீதியாகச் சிக்கல் இருக்கிறது. சிறு வயதில் அவளுக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளின் தாக்கங்கள் அவளுடைய வாழ்க்கை நெடுகிலும் பயணம் செய்து, எல்லா உறவுகளின் மீதும் சந்தேகம் கொள்ளச் செய்கிறது. இப்படி எல்லாமுமான கலவைதான் ரெனே. அதனை மிகவும் சிறப்பாக உடல்மொழியிலும் கண்களிலுமே பேசியிருந்தார் துஷாரா.


முதல் காட்சியில் காட்டப்படும் சண்டை மேலோட்டமாகப் பார்த்தால் அவள் அவனைத் தூங்கவிடாமல் செய்கிறாள் என்று தோன்றலாம். ஆனால் அந்த ஒரு காட்சி மட்டுமே அவர்களின் பிரிவிற்கான காரணமில்லை. அந்த ஒற்றைக் காட்சியில் இருவரின் உள்ளுணர்வையும் சம அளவில் வெளிப்படுத்தியிருப்பார்கள். அதையே மற்றொரு காட்சியில் - பல சலசலப்பின் வெடிப்பே எங்கள் மனமுறிவு என்றுணர்த்தியிருப்பார் இனியனாக வரும் காளிதாஸ்.
இப்படி வசனங்களின் மூலமாக மட்டுமே பல விதமான மக்களிடையே இருக்கும் காழ்ப்புணர்ச்சிகளைப் பற்றிப் பேச முற்பட்டிருக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித். மேடை நாடகத்தின் கலை அமைப்பு, சுவரோவியங்கள் வண்ணங்கள் என்று மிரட்டியிருக்கிறார் ஜெயரகு. பின்னணி இசையைக் கேட்கும்போது அதுவும் பெரும்பாலான இசைஞானியின் இசையை உட்புகுத்தி விளையாடியது யாரென்று தேடிப் பார்த்தால் டென்மா என்கிறது கூகுள்.
அர்ஜுனாக வரும் கலையரசன் தன் காதலை அவள் அங்கீகரிக்கும் முன்பாகவே தன் வீட்டில் சொல்லும்போது, ”அவங்க என்ன ஆளுங்க?” என்று அம்மாவாக வருபவர் குடும்ப எதிர்ப்பை
அருமையாக
வெளிக்காட்டியிருப்பார். அந்தக் கதாபாத்திரத்தை அவர் அட்டகாசமாகச் செய்திருக்கிறார். அந்தக் காட்சியொன்றே படத்தின் தரத்தைப் பற்றி சொல்ல போதுமானதாகிறது.
’காதல்’ பற்றிய பலவிதமான புரிதல்களை, அதனுடன் ஒரு தொகுப்பாகவே கூட வரும் சாதி மத பேதங்களை, பொருளாதார ஏற்ற தாழ்வுகளை, ஓரின ஈர்ப்பு, நடைமுறை குடும்பக் கட்டமைப்பின் பிரச்சனை என்று எல்லா வகைகளையும் ஒரே படத்தில் கொண்டு வந்து அனைத்து சிறுபான்மையினரின் மொத்த குரலாக ஒலிக்கிறது ‘நட்சத்திரம் நகர்கிறது’. நம்மையும் மாற்று சிந்தனைக்கு நகரச் செய்கிறது.

Wednesday, October 12, 2022

துபாய் வேலை

 நான் வேலை தேடி துபாய்க்கு மூன்று மாத கால விசாவில் வந்திருந்தபோது, அந்தக் காலத்தில் எல்லோருமே ஒரே மாதிரியான பதிலையே எனக்குத் தந்தனர் - ‘திருமணம் முடித்து இங்கு வா அதன் பிறகு வேலைக்கான விசா தருகிறோம்' என்று. பெரிய நிறுவனங்களிலேயே கூட, திருமணம் ஆகாதவர்களுக்கு வேலைக்கான விசா தருவதில் சிக்கல் இருந்தது. விசிட் விசாவே திருமணமாகாதவர்களுக்குக் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. நான் சொல்வது 1997-இல். எத்தனையோ நேர்முகத் தேர்வுகளைச் சந்தித்தேன். அதிலேயே பலவித அனுபவத்தையும் பெற்றிருந்தேன். என் குடும்பத்தைத் தவிர வெளி நபர் என்று என்னை ஆதரித்தது நஸீரா மாமியும் ஹாஜா மாமாவும்தான். ’நல்ல வேலையா கிடைக்கத்தான் தாமதமாகுது, கண்டிப்பா ஏதாவது வேலை கிடைக்கும்’ என்ற உற்சாக வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அவர்களுடைய மகள் Sameema Mansoor எனக்கு உற்ற தோழியானாள். வார இறுதிகள் அவர்களுடனான சுற்றுப்பயணங்களென நாட்கள் நகர்ந்தன.

’வேலைக்கான விசா கிடைக்காவிட்டாலும், நீ வந்ததற்கான செலவையாவது பெற்றுவிட்டுப் போவதற்கான வழி செய்யவேண்டு’மென்று தனக்குத் தெரிந்த ஒரு நிறுவனத்தில் என்னை வேலையில் சேர்த்துவிட்டார்கள் ஹாஜா மாமா. அப்போது அவர்கள் ஈடிஏவில் நல்ல பொறுப்பில் இருந்தார்கள். ஒரு மாத காலம் அங்கு வேலையில் இருந்தேன். அதன்பின் ஜீனத் பேப்பர் நிறுவனத்திலும் ஒரு மாதம் வேலையில் இருந்தேன். அந்த மேலாளரும் ‘நம்ம பையனுவ உன்கிட்ட திறமையக் காட்ட நிக்கிறானுவ, வேலையப் பார்க்க மாட்றானுங்க. உன் நல்லதுக்குதாம்மா சொல்றேன், நீ கல்யாணத்த முடிச்சிட்டு வா, உன் மாப்பிள்ளைக்கும் சேர்த்தே வேலை தரோம்’ என்று வேலை தர இயலாமையை நாசூக்காகச் சொல்லி விட்டார். தற்காலிகப் பணியில் இருக்கும்போது ‘இது நிரந்தரமல்ல’ என்று மனது எனக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருந்தது, நாட்களும் கரைந்து கொண்டே சென்றன.
தொன்னூறு நாட்கள் முடிவதற்கு இரண்டு தினங்களே இருந்த நிலையில். மற்றொரு விசிட் விசா எடுத்து இன்னும் வெவ்வேறு இடங்களில் முயற்சி செய்யலாம்தான். ஆனால் விசா யார் தருவார்கள்? ஹாஜா மாமாவிடம் முறையிட்டேன். அவர்களுக்கும் தெரிந்தே இருந்தது, என் நாட்கள் முடிவு பெறப் போகின்றன என்று. என்னதான் பெரிய பதவியில் இருந்தாலும் தன் சக்திக்குட்பட்டுத்தானே எதனையும் செய்ய இயலும்?
திருமணமாகாதவருக்கு விசிட் விசா என்பது பிரச்சனையான விஷயம், தனி நபராக விசிட் விசா எடுக்க இயலாது, ஏதேனும் பெரிய நிறுவனத்தால் மட்டுமே விசா தர இயலும். அப்படியான சூழலில் இருக்கும் போது ஒரு நேர்முகத்திற்கான அழைப்பு வந்தது. சென்றிருந்தேன். அந்த நிறுவனத்தில் எனக்கான வேலை உறுதியானது. வேலைக்கான விசாவிற்கும் பிரச்சனையில்லை என்றார்கள். காரணம் அது ஷார்ஜா ஆட்சியாளரின் குழுமம் - அல் காசிமியா குரூப். ஆனால் அவர்கள் வேலைக்கான விசா விண்ணப்பித்து வர ஒரு மாத காலத்திற்கு மேல் ஆகும், ஆகையால் மற்றொரு விசிட் விசா எடுத்துவிடு என்று சுலபமாகச் சொல்லிவிட்டார்கள்.
வேலை கிடைத்துவிட்டது என்று சந்தோஷத்தையுமே அனுபவிக்க இயலவில்லை, குழப்பத்தில் இருந்தேன். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. ‘ச்சீ ச்சீ துபாய்ப் பழம் புளிக்கும்’ என்று ஊருக்குச் சென்றுவிடலாம் என்று தீர்மானித்திருந்தேன், வேறு வழியில்லாமல். இன்னும் ஓரிரு நாட்களில் வெளியேற வேண்டுமென்ற நிலையில், திடீரென்று ஹாஜா மாமா அவதரித்தார்கள். ஆம், எனக்கு அப்படித்தான் தோன்றியது. இறைவன் உதவி செய்ய நினைத்துவிட்டால், ஒரு சிறந்த கருவியைத் தேர்ந்தெடுப்பானாம், அப்படித் தோன்றியதுதானே அவதாரங்களெல்லாம்? அப்படியான அவதாரமாக அவர் வந்து ஒரு ’கவர்’ தந்து, உடனே டிக்கெட் எடு என்றார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கவரினுள் பார்த்தால் எனக்கான விசிட் விசா. அதிர்ச்சியும் பேரானந்தமும் இணைந்ததில் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தேன். கண் மூடி நான் கண்ட கனவெல்லாம் கண் முன்னே நடக்கவிருக்கிறது. வாய்ப்பிருக்கிறது, எனக்கு இங்கு ‘ரிஸ்க்’ இருக்கிறது என்று புரிந்தவளாக இறைவனுக்கு நன்றி செலுத்தியவளாகப் பயணத்தைத் திட்டமிட்டேன்.
இப்போது உள்ளது போல் அப்போதெல்லாம் நாட்டிற்கு உள்ளிருந்தே விசாவை மாற்ற இயலாது. ‘கிஷ்’ என்ற நாட்டிற்கோ அல்லது ஓமான் நாட்டிற்கோ சென்று புதிய நுழைமதியில் நாட்டிற்குள் வர வேண்டும். கிஷ்ஷுக்கு செல்வதே விலை குறைவாக இருந்தது. அங்கே சென்று விசா மாற்றி வந்து, அதன்பிறகு சில வாரங்களில் வேலைக்கான விசாவில் மாறினேன். வேலையும் ஓட்டமுமாக நாட்கள் கழிந்தன. இயந்திர வாழ்க்கைக்குப் பழகிப்போனேன். என் கணவரும் துபாய் வர ஹாஜா மாமாதான் காரணம் என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன். இப்படிப் பலரை உயர்த்தி விட்டிருக்கிறார் அவர்.
என் வாழ்க்கையில் இது மிக முக்கியமான அத்தியாயம். அன்று சரியான நேரத்தில் ஹாஜா மாமா விசா பாடுபட்டு வாங்கித் தராமல் இருந்திருந்தால் இன்று நான் துபாயில் இருந்திருக்க முடியாது, துபாயில் நிறுவனம் தொடங்கியிருந்திருக்க முடியாது, அதுவும் பிறருக்கு விசா தரும் டிராவல்ஸ் நிறுவனமே நடத்துவோம் என்று கனவிலும் நினைத்ததில்லை. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்குப் பிறகு மாமாவையும் மாமியையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எல்லாப் புகழும் இறைவனுக்கே. நானும் சமீமாவும் இன்னும் தோழிகளாக இருப்பதால் இந்தச் சந்திப்பு சாத்தியமானது.


Tuesday, October 11, 2022

நவராத்திரி


 கீரைவிற்கும்

கண்ணமாவின் தலையில்


கொலு பொம்மைகள்

நவராத்தி நாட்களென்று

பொம்மைகள் விற்பதை

வியாபாரமாக்கியிருந்தாள்

சாமிகளை தலையில்

சுமந்தவளாக சப்தத்துடன்
கூவி விற்றாள்
சிவன் இருக்கிறான் என்றாள்
கண்ணன் ராதை உண்டா
என்றனர்
விநாயகரை நம்பிக்கையோடு
வாங்குவார்கள் என்று எதிர்பார்த்தால்
தும்பிக்கை சரியில்லையாம்
சிரித்த முகத்துடன் சாமிகள்
இவள் சிரிப்பிற்கு
விலைப் போகவில்லை
விற்காத சாமிகளும்
இவள் வேதனையை
நோக்கவில்லை
’சாமி சாமி’ என்று
பொம்மைகளை விற்றாள்
ஆசாமிகள் யாரும் வாங்கவுமில்லை
இத்தனை சாமிகள்
இருந்தும்
அவள் குழந்தையின்
பசியை யாருமே
போக்கவில்லை.
-ஜெஸிலா பானு

Monday, October 10, 2022

நசீமா ரசாக்கின் ‘மராம்பு’

 


'மராம்பு' தலைப்பைப் பார்த்ததும் அப்படியென்றால் என்னவென்று தேடினேன். வாசிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது. முதல் இரண்டு அத்தியாயங்கள் என்னை உள்ளிழுத்துக் கொண்டன. வெறும் 100 பக்கங்கள் என்பதால் உடனே முடித்துவிட்டேன். அதனாலேயே கீழேயே வைக்க முடியாத அளவுக்கு இருந்ததென்று சொல்ல முடியாது. நூலாசிரியரின் முந்தைய படைப்பான 'என்னைத் தேடி' யை விடப் பல மடங்கு சிறப்பான படைப்பு இது என்று உறுதியாகச் சொல்ல இயலும். பெண்களை மட்டுமே வைத்துப் படைத்திருக்கும் படைப்பு. இதை ஆண்கள் வாசித்தால் அவர்கள் எப்படி இதனை உள்வாங்குவார்கள் எனத் தெரியவில்லை.

மிக எளிமையான எழுத்து நடை. அடுத்தப் பதிப்பைப் பிழை திருத்தி வெளியிட வேண்டும். மிகவும் சாதாரணமான கதைதான். புதிய விஷயமென்றோ, திருப்பங்கள் என்றோ, எதிர்பாராத நகர்வென்றோ எதுவுமேயில்லை. விக்ரமன் இல்லை இல்லை விசுவின் படம் போல் அல்லது சின்னத்திரை நாடகம் மாதிரி பொழுதுபோக்காக 'அழு மூஞ்சி' கதையாக வயலின் சத்தம் காதைப் பிளக்கிறது.
வள்ளி, ஜானு, மித்ரா, பூஜா, ஆஷியா என்ற பெண்களின் துன்பம் நிறைந்த கதை. வெளிநாட்டில் தனியாக வெவ்வேறு காரணங்களுக்காக வேலைக்கு வந்து கஷ்டப்படும் பெண்களின் கதை.
குறுநாவலில் எதையும் விவரிக்க முடியாவிட்டாலும், அதனைச் சுருக்கமாகவும் அதே நேரத்தில் விளங்கும்படியும் கையாண்டுள்ளார் நூலாசிரியர். ஏஜெண்ட்களால் ஏமாற்றப்படுவது பற்றியும் பதிந்திருப்பது சிறப்பு.
கனவு தேசம் அல்ல இவர்களுக்குத் துபாய் கண்ணீர் தேசம் என்பதை ஆழமாக நம் மனதில் பதிய முயன்றிருக்கிறார்.
போகிற போக்கில் வாசிக்கலாம். நல்ல முயற்சி நசீமா ரசாக் Naseema Razak . மனமார்ந்த வாழ்த்துகள்.




Saturday, October 08, 2022

தெரிசை சிவாவின் ருபினி

போன வாரம் நடந்த நிகழ்வாக இருந்தாலும் நேற்று நடந்ததுபோல் இன்னும் பசுமையாக உள்ளது. அஃபீனாவின் Afina Arul பாடல் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருப்பது போல் தெரிசை சிவாவின் Siva Sai ருபினி பற்றி ஒவ்வொருவரும் பேசியதும் ரீங்காரித்துக் கொண்டிருக்கிறது.


சிவாவின் 'சன்னதம்' வாசித்துவிட்டு அதே சாயலில் வரவிருக்கும் ருபினியை ஆவலாக எதிர்நோக்கினேன். வாசிக்கும் முன்பே அதைப் பற்றி பேச வேண்டுமென்று இருந்தேன். காரணம் சிவாவின் எழுத்து மீதான நம்பிக்கை. அவருடைய ‘குட்டிக்கோரா’ பற்றியும் எழுதியிருக்கிறேன். அதில் தென்பட்ட குறைகளையெல்லாம் நிவர்த்தி செய்யும் விதமாக அதே போன்று ‘திமில்’ வந்தது. நூலாசிரியரின் பலமே அவருடைய வட்டார வழக்கும், நகைச்சுவையும்தான். அதையெல்லாம் முற்றும் தொலைத்து வேறொரு பரிமாணம் எடுத்திருக்கிறார். மொழிநடை வாசிக்கக் கூடியதாகவும், ஒவ்வொரு அத்தியாயத்தையும் முன்னோக்கிச் செல்வதாகவும் இருந்தது. ஆனால் அவர் உருவாக்கிய புதிய உலகத்தில் என்னால் சஞ்சரிக்கவே முடியவில்லை. மாறாக அந்த உலகத்தினால் வரும் பலன்கள் என்னவென்று கேள்வியெழுப்பவே முடிந்தது.
‘ஹாரி பாட்டர்’ வாசிக்கும் போது அலாதியான கற்பனையோடு வாசித்தேன். என் கற்பனையைக் கொஞ்சம் திருப்திப்படுத்தும் வகையில் திரையில் வந்ததைக் கண்டு வியந்தேன். ’ஸ்டிரேஞ்சர்ஸ் திங்’, ‘லாக் & கீ’, ‘பிஹைண்ட் ஹெர் ஐஸ்’ இப்படியான வெப் சீரீஸ் பார்க்கும்போது எப்படி இப்படிலாம் யோசிக்கிறாங்க, இப்படியான உலகம் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்ற கற்பனை விரியும். அதில் அப்படியான வேறு உலகம் இருப்பதாக அல்லது அப்படியெல்லாம் உலகத்தில் ஏதோவொரு இடத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ என்ற எண்ணம் ஏற்படும் விதத்தில் நம்ப வைத்திருப்பார்கள். கே. என். சிவராமன் சிவராமனின் ‘கர்ணணின் கவசம்’ வாசிக்கும்போதும், இப்படித்தான் கோவில்களைக் கட்டி இருப்பார்களோ, இன்னும் தெரியாத ரகசியங்களை யாரோ ஆராய்ந்து கொண்டிருக்கிறார்களோ என்று அதைச் சுற்றியே மனதில் எண்ணங்கள் தோன்றும்.
அப்படி நம்பும்படியாக, அல்லது இப்படியான காமமில்லா உலகம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று சிந்திக்கும் அளவிற்கு ‘ருபினி’ உலகம் அமையவில்லை. அமானுஷ்யம், அறிவியல் ஆராய்ச்சி, வசியம், கூடுவிட்டு கூடு மாறுதல், நாடி ஜோசியம், புதிய உலகம் என்று ’ருபினி’ புதினத்தை வாசிக்கும்போது இயல்பாகவே மற்றதோடு ஒப்பிடாவிட்டாலும் இப்படியான உலகத்தின் பயனைச் சரியாக விவரிக்கவில்லையோ, அல்லது பிரமிக்க வைக்கும் அவர் கற்பனையை அவருடைய எழுத்து கடத்தவில்லையோ என்ற ஐயம் எழுகிறது. அதுமட்டுமல்லாது வலிந்து திரிந்து சேர்த்த உருவகங்கள் - உதாரணமாக, புழுதியில் சிக்கிவிட்ட மீன் வலையைப்போல் ஏராளமான மர்ம முடிச்சுகள். குப்பைத்தொட்டியில் கிடந்துருளும் அழுக்குப் பூனையைப் போல்... மனமெங்கும் பற்பல கேள்விகள் உருண்டெழும்பிய வண்ணமிருந்தன. மீன் தொட்டியில் பரிதவிக்கும் மீன் குஞ்சாய் அங்குமிங்கும் படபடத்துக் கொண்டது, இப்படியான வாக்கியங்கள் ஏதோ ஒட்டாது தனித்து நிற்பதாகத் தோன்றியது. சொன்னதே திரும்பத் திரும்பச் சொல்லி வலியுறுத்துவதான அல்லது பிரச்சாரத் தொனியும் எழுத்து நடையில் உள்ளதால் உள்வாங்கவும் கடினமாக இருந்தது.
ருபினியை வாசிக்கும் உங்களால் இதையே வேறுவிதமாகப் பார்க்கவும் முடியும். வாசியுங்கள். வாசித்து உங்கள் கருத்தையும் பகிருங்கள். வாழ்த்துகள் சிவா. இன்னும் நிறையப் புதினங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

PC: Subhan Peer Mohamed 



இளம் இசைக் குயில்

 நல்ல திறமை எங்கிருந்தாலும் பாராட்டுவதே அமீரக எழுத்தாளர்கள் & வாசகர்கள் குழுமம் / கானல் / Kaanal குழுமத்தின் பண்பு. afina_arul அபீனா அருள் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8-ல் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டவர். நம்ம அமீரகத்தைச் சேர்ந்தவர் இறுதிச் சுற்று வரை வந்ததே எங்களுக்கெல்லாம் அவ்வளவு மகிழ்ச்சியும் பெருமையும். அவருக்குப் பாராட்டு விழா நிகழ்வைச் சிறிய அளவில் எங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்து அபுதையில் சிறப்பாக நடத்தினோம். சிறிய கூட்டத்திற்கெல்லாம் வருவார்களா என்று நினைத்தோம். பெரிய மனசுக்காரர்கள் அதெல்லாம் அவர்கள் நினைக்கவே இல்லை. எனக்குத் தெரிந்து வேறு எந்தப் பெரிய அமைப்புகளும் அவரை இன்னும் கெளரவிக்கவில்லை. நாங்கள்தான் தொடக்கமென்று நினைக்கிறேன். எங்களிடமிருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்றும் நினைக்கிறேன்.



FJ Tours & Travels நிறுவனம் தொடங்கி இதுநாள் வரை யாருக்கும் நினைவுப் பரிசுத் தர வேண்டுமென்ற எண்ணம் என் கணவர் Riyas Ahamed ரியாஸுக்கு தோன்றியதே இல்லை. இந்தக் குழந்தையின் பாட்டை அவருக்குக் காட்டி, இவருடைய பாராட்டு விழாவிற்குதான் செல்லவிருக்கிறோம் என்றுதும் ’அவருக்கு நினைவுப் பரிசு வழங்குவோமா?’ என்றார் முதல் முறையாக.
அபீனாவின் குரலில் அவ்வளவு வசீகரம், என் மகளிடம் அவள் பாடும் காணொலியைக் காட்டியபோது அவர்தான் பாடுகிறாரா இல்லை ’லிப்சிங்’கா என்றார். அவ்வளவு முதிர்ச்சியான, உச்சரிப்பு சுத்தமான இனிமையான குரல். அவர் முகமும் உடல்மொழியும் அத்தனை கதைகளைப் பேசின. நான் ஓர் அதிசயக் குழந்தையைப் பார்ப்பதுபோல்தான் மிகவும் மரியாதையாகவும் கனிவுடனும் பார்த்தேன், ரசித்தேன், பாராட்டினேன். அந்தக் குழந்தைக்கு அவருடைய பெற்றோர்கள் Jency Satheesh எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்து அவருக்கு ஊக்கம் தருவது அவருடைய திறமைக்கு வலிமை சேர்க்கிறது. இன்னும் அவள் பல சிகரங்களைத் தொட வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன்.

Sunday, October 02, 2022

தன்னம்பிக்கை மங்கை

 தங்கமங்கை 23 ஆம் ஆண்டு சிறப்பிதழில் 'மங்கையரின் மறுமலர்ச்சியே மண்ணுலகின் வளர்ச்சி!' என்று ஏழு பெண்களைக் குறித்து ஒவ்வொரு தலைப்பின் கீழ் அடையாளப்படுத்தியுள்ளனர். 'தன்னம்பிக்கை மங்கை'யாக நானும் மிளிர்கிறேன்.  

ரம்யா ரவிக்குமார் டார்லிங்குக்கு நன்றி. என்னமா எழுதுறாங்க!!

என்னைப் பற்றியான்னு நானே ஷாக்காகிட்டேன். நன்றிம்மா.





Tuesday, May 31, 2022

நெஞ்சுக்கு நிறைவான நீதி

 'நெஞ்சுக்கு நீதி’யில் வரும் கதாநாயகனைப் போலத்தான் எனக்கும் என் பதின்ம வயதில் சாதிய ஏற்றத் தாழ்வுகளைப் பற்றித் தெரியாமல் இருந்தது. ’உண்மையில் இன்றுமா சாதி அடுக்குகளினால் தீண்டாமை, கொலை எல்லாம் நடக்கிறது?’ என்று ஆச்சர்யமாகவே இருந்தது. வாசிப்பும், ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற படங்களும் அதன் உண்மை நிலவரத்தை, சாதிய பாகுபாடுகளை, அழுக்கைப் படம்பிடித்து மனதில் நிறுத்தின.

‘ஆர்டிகிள் 15’ பார்க்கும்போது மன அழுத்தமே ஏற்பட்டது. தமிழில் அந்தச் சாராம்சத்தைக் கொண்டு சேர்த்ததற்கு படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றி. அவ்வளவு கனமான திரைக்கதையை அனாயாசமாகக் கையாண்டிருப்பார் கௌரவ் சோலங்கி. ஹிந்தியில் ஆயுஷ்மன் குரானா அலட்டிக்கொள்ளாமல் செய்த அந்தக் கதாபாத்திரம், இவ்வளவு நடித்தால் போதுமானது என்று இருப்பதாலேயே தமிழில் அந்தக் கதாபாத்திரத்திற்கு உதயநிதி சரியான தேர்வுதான். தேவையான அளவே நடித்திருக்கிறார் அலட்டாமல். அவருக்குப் போலீஸ் உடை கச்சிதமாகப் பொருந்துகிறது. நல்லவேளையாகச் சண்டைக்காட்சிகள் இல்லை.
திரைப்படத்தைத் தூக்கிப் பிடிப்பதே அதன் திரைக்கதையும், வசனங்களும், ஒளிப்பதிவும்தான்.
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உதயநிதியை விடுத்து தான்யா, ஷிவானி, அப்துல், சுரேஷ், இளவரசு என்று அனைத்துக் கதாபாத்திரங்களையும் சரியாகச் செதுக்கி அவர்களது கதாபாத்திரத்திற்கு நியாயம் கற்பித்துள்ளார். ஆனால் வாசிக்கும் பழக்கம் உடையவராகக் காட்டப்படும் கதாநாயகன் உதயநிதிக்கு அதுவும் பெரியார்: ஆகஸ்ட் 15 நூலை வைத்திருப்பவருக்குச் சாதிய ஏற்றத்தாழ்வுகளும், ‘தீட்டு’ என்ற வார்த்தைக்கே பொருள் தெரியாதது போல் காட்டியிருப்பதெல்லாம் பொருந்தவில்லை. வெளிநாட்டில் படித்தவர் என்பதாலேயே வலிந்து திணித்து ஆங்கிலத்தில் பேசும் வசனங்களும் ஒட்டவில்லை.
பொருந்தாத விஷயங்களையும் தமிழரசன் பச்சைமுத்துவின் வசனங்களால் சரி செய்துள்ளார்.
விஜயராகவன் (உதய்): ‘உங்களுக்கெல்லாம் ஒரு ஹீரோ வேணும்ல’
கதாநாயகி: ”ஹீரோ வேண்டாம். ஹீரோ வேணும்னு நினைக்கிற மனநிலை மக்களுக்கு வேண்டாம்”
----
விஜயராகவன் (உதய்): ”எல்லாரும் சமம்ன்னா அப்ப ராஜா யாரு?”
கதாநாயகி: ”அனைவரையும் சமம் என்று நினைப்பவன்தான்.”
--
”சட்டம்தான் எல்லாத்தையும் சரி செய்யும்.”
”சட்டமா? (எள்ளலுடன்) எங்களுக்கும் அதற்கும் இங்க மரியாதை இருக்கா என்ன?”
----
”நாயப் பேர் சொல்லி கூப்பிடுற நீங்க, மனுஷங்கள ஏன் இது அதுன்னு சொல்றீங்க?”
----
”ஏய் வா போ’ என்று சொல்லி கூப்பிடுவாரே தவிர என்றைக்காவது பெயரைச் சொல்லி கூப்பிட்டிருக்காரா?”
--
சத்துணவு சமைக்க அனுமதி மறுக்கப்படுவது, கூண்டில் இருக்கும் பெரியார் அம்பேத்கார், ஒதுங்கியே நிற்கும் இளவரசு, எரிச்சலைத் தூண்டும் சுரேஷ் என்று வசனமில்லாமல் காட்சியால் நம்மைக் கலங்கடிக்கும் இடங்களும் உண்டு. ஆனால் இப்படியான காட்சிகளுக்கு இரண்டு பாடல்களைத் தவிர, பின்னணி இசை சிறப்பாக அமையவில்லை. அ ஆ ஆ அ என்று பின்னணியில் இழுவையாக யாரோ கத்திக் கொண்டே இருப்பதாக உள்ளது. சத்தியாவைத் தேடும் போது அதற்கான பரபரப்பு நம்மைத் தொற்றிக் கொள்ளவில்லை. அவள் கிடைக்கும்போது அந்த மகிழ்ச்சி நம்மை வந்தடையவில்லை. இந்தப் பின்னடைவிற்கு முக்கியக் காரணம் இசைதான். திபு நினன் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்.
படத்தில் எனக்குப் பிடித்த காட்சியென்றால் ‘டாக்டர் அனிதா, பயப்படாதீங்க உங்க கூட நான் இருக்கேன்’ என்று உறுதியான குரலில் சொல்லும் அந்தக் காட்சி ’நீட்’ தேர்வுக்கான வாக்குறுதியாக எனக்கு ஒலித்தது. உங்களுக்கு?
’நெஞ்சுக்கு நீதி’ மனதிற்குக் கொஞ்சம் நிறைவைத் தந்தது.

Saturday, May 21, 2022

நல்லுள்ளம் சூழ் உலகு!

 சம்பளம் வாங்கி வேலையில் இருந்தபோது யாரும் என்னை ஏமாற்றியதில்லை, அதற்கான வாய்ப்புமில்லை. எப்போதும் என்னுடன் இருப்பவர்கள் அனைவருமே நல்லவர்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் தொழில் தொடங்கிய பிறகுதான் ‘டிசைன் டிசைனாக’ ஏமாற்றுபவர்களைக் கண்டு வியக்கிறேன்.

நாங்கள் செய்வதோ பயிற்சி தந்து சான்றிதழ் தருவது அல்லது ஆய்வு செய்து இயந்திரம் வேலை செய்யப் பாதுகாப்பானது என்று சான்றிதழ் தருவது. சான்றிதழ் தரும்போது பணம் தந்துவிட வேண்டுமென்ற ஒப்புதலின் பேரில்தான் பயிற்சிக்கே வருவார்கள். நிறைய வேலைக்கு இந்தச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு அதற்கான வேலைத் திட்டமே (project) கையெழுத்தாகும் அல்லது செயல்படுத்த முடியுமென்பதால் ஓரளவுக்கு எல்லாரும் சரியாகப் பணம் தந்து சான்றிதழ் தருவார்கள்.
ஒரு நிறுவனம் 30 நாட்களுக்கான காசோலையைத் தந்தது. காசோலையைப் பெற்றுக் கொண்டு சான்றிதழைத் தந்துவிட்டோம். 30 நாட்கள் முடியும் முன்புப் பணத்தைச் செலுத்திவிட்டு, காசோலையைத் திரும்ப வாங்கிக் கொண்டனர். எங்களுக்கும் அதில் எந்தச் சந்தேகமோ ஆட்சேபனையோ இல்லாமல் இருந்தது. மறுபடியும் அதே நிறுவனம் வேறொரு ஆய்வுக்கான் (inspection) சான்றிதழ் கேட்டார்கள், முடித்தோம். அதேபோலவே 30 நாட்களுக்கான காசோலையைத் தந்தார்கள் உறுத்தல் இல்லை பெற்றுக் கொண்டோம். சான்றிதழைத் தந்துவிட்டோம். 30 நாட்கள் முடியும் முன் அழைத்துப் போன முறை போலவே பணமாகத் தந்துவிடுகிறோம் காசோலையை வங்கியில் இட வேண்டாம் என்றார்கள். சரி என்று நாங்களும் காத்திருந்தோம். ஆனால் பணம் வரவில்லை. கேட்கும்போதெல்லாம் இன்று நாளை என்றே இழுத்தடித்தார்கள். பெரிய தொகையுமில்லை. 60 நாட்களுக்கு மேலாகிவிட, சரி சின்ன தொகைதானே இதுவுமா அவர்கள் வங்கியில் இருக்காது என்று எண்ணிக் காசோலையை வங்கியில் துணிந்து செலுத்திவிட்டோம். முதல் நாள் வந்துவிட்டதாகக் காட்டிய கணக்கு மறுநாளே சுதாரித்து, இல்லை காசோலை திரும்புகிறது என்று வந்துவிட்டது. அதில் காட்டிய காரணம்தான் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் தந்த காசோலை, வங்கிக் கணக்குச் செயல்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கின் காசோலை. அமீரகத்தைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய குற்றம். நிறுவனத்தை அழைத்து என்ன இப்படி ஏமாற்றி இருக்கிறீர்கள் என்று கேட்க, விழுந்தடித்துக் கொண்டு வரும் வாரத்தில் பணம் செலுத்தி விடுகிறோம் என்று கேட்டுக் கொண்டார்கள். காத்திருக்கிறோம்.
இன்னொரு பெரிய நிறுவனம் என்று தங்களைச் சொல்லிக் கொண்டவர்கள் 2 வருடங்களாகியும் பணம் தரவில்லை. தெரிந்தவர்களின் நிறுவனம்தான் ஏமாற்ற மாட்டார்கள், தாமதமானாலும் தந்துவிடுவார்கள். பெரிய தொகை என்பதால் சுணங்குகிறது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். மேலாளரும், நாங்கள் மற்றவர்கள் மாதிரி இல்லை, காலம் தாழ்த்தினாலும் பணம் வந்துவிடுமென்றே உறுதியளித்தார். சமீபத்தில் நிறுவனத்தை மூடிவிட்டார்கள், பல வழக்கு விசாரணைகள் அந்த நிறுவனத்தின் மேல் இருப்பதாகவும் அவர்கள் திவால்நிலை அறிவித்துவிட்டார்கள் ஆகையால் பணம் வராது என்றும் தெரிந்துவிட்டது. அதன் பிறகு சமீபத்தில்தான் தெரிந்தது, திவாலென்று அறிவித்துவிட்டு, மூடுவதுபோல் காட்டிவிட்டு யாருக்கும் பணம் கொடுக்க முடியவில்லை என்று கைவிரித்தவர்கள், வேறு நிறுவனத்தை வேறு பெயரில் தொடங்கிச் சுகமாகத் தொடர்கிறார்கள் என்று.
இவர்கள் இப்படியென்றால் இன்னொரு நிறுவனம் சான்றிதழ் அவசரம் எங்கள் அலுவலக ஓட்டுநர் காசோலையோடு வருகிறார், உடனே கொடுத்தனுப்பி விடுங்கள். அவர் அங்கு வந்தவுடனே எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிவிடுங்கள் என்று கேட்க, வெள்ளந்தியான நானும் என் கணக்கரிடம் மின்னஞ்சலில் அனுப்பி விடுங்கள் என்று சொல்லிவிட்டேன். வந்தவர் காசோலை தந்தார், வாங்கிவிட்டு மின்னஞ்சல் அனுப்பிவிட்டோம். காசோலையைப் படிமம் எடுக்கும்போது கவனித்தால் அதில் கையெழுத்து இல்லை. அந்த நிறுவனத்தை அழைத்துக் கேட்டால் தவறு நடந்துவிட்டது உடனே அனுப்புகிறோம் என்று இன்னொரு மாதம் இழுத்தடித்துவிட்டு தந்தனர். இன்னொரு நிறுவனம் இப்படித்தான் அவசரமாகச் சான்றிதழ் வேண்டுமென்று காசோலை தந்தார்கள் கையெழுத்தெல்லாம் இருந்தது, ஆனால் Proactive Excel Safety Consultancy என்பதில் lலை விட்டுவிட்டார்கள். படிக்கும்போது மூளை அதனைக் கவனமாகப் பார்க்காதுதானே விட்டுப் போய்விட்டது. ஆனால் அதன் பிறகு பார்த்து கேட்டால் இதோ அதோ என்று அதேபோல் தான் இழுத்தடித்துத் தந்தார்கள்.
இன்னும் சிலர் ஆய்வுச் சான்றில்லாமல் அதற்கான முன் அறிக்கை (first report) மட்டுமே வைத்துத் தனக்கான காரியத்தை முடித்துவிட்டு ‘என்ன ஆய்வு, எப்போ செய்தீர்கள், யார் நீ’ என்பதாக ஏமாற்றுகிறார்கள். எப்படி இப்படியெல்லாம் செய்ய முடிகிறது என்ற அதிர்ச்சியிலேயே பலரை மன்னித்து விட்டுவிட வேண்டியுள்ளது (வேற வழி!?). என்னதான் ஏமாற்றுபவர்கள் ஏமாற்றினாலும் இறைவன் ஏதாவதொரு வகையில் உதவிக் கொண்டுதான் இருக்கிறான். ’நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான்’ என்ற வசனம் நினைவுக்கு வந்திருக்க வேண்டுமே?!


சமத்துவம்

 எனக்குத் தெரிந்த ஒரு சகோதரமத நண்பர் மனமார உண்மையாகவே நோன்பு வைக்கிறார். அதென்ன ’மனமார’ அப்படியென்ற கேள்வி உங்களுக்கு வரலாம். அதாவது நான் பார்த்த மற்ற நண்பர்கள் எல்லாம் சூரியன் எழும் முன்னெல்லாம் துயில் கலைந்து நோன்பு இருக்க மாட்டார்கள். அவர்களுக்குப் பிடித்த நேரத்தில் எழுந்து சாப்பிட்டு, அதன் பிறகு மாலையில் அவர்களுக்குப் பிடிக்கும் நேரத்தில் நோன்பை முறிப்பது பெரும்பாலும் நாம் பார்க்கக் கூடிய நோன்பாக உள்ளது. இவரும் முதல் வருடம் அப்படிதான் இருந்தார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இஸ்லாமியர்களை மிஞ்சம் வகையில் சுஹூர் நேரத்திற்கு முன்பாகவே துயில் கலைந்து சாப்பிடுகிறார். ”சுஹூருக்கு என்ன சாப்பிட்டீங்க?” என்று கேட்டால் எப்போதும் ஒரே பதில்தான் ’மோர் சாதம்’ என்று. அதேபோல இஃப்தாருக்கு “என்ன சாப்பிட்டீங்க?” என்று கேட்டபோது ”பேரிச்சம்பழமும் தண்ணீரும்” என்றார். அதிர்ச்சியாக இருந்தது. ”வேற என்ன சாப்பிட்டீங்க?” என்றேன். ”வேற என்னங்க, இரவு உணவான மூன்று இட்லியும் சட்னியும்” என்றார் மிகவும் எளிமையாக. என் கண்கள் கலங்கியே விட்டது. கலங்கியதற்குக் காரணம் என்னை நானே சுயபரிசோதனை செய்து கொண்டதால். இஃப்தாரென்றாலே ஒவ்வொரு நாளும் விதவிதமாகச் சமைத்து, ஏதோ அது சாப்பிடும் சடங்காகவே மாறிப் போயிருந்த என் அகராதியில் அதுவும் தெரிந்தவர்களெல்லாம் ‘நான் இதைச் சமைத்தேன்’ என்று படம் காட்டும்போதெல்லாம் ‘ஓ இதை மறந்துட்டோமே, இதைச் செய்வோம்’ என்று அடிப்படையான இறை வணக்கதை மறந்து சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இஃப்தாரை இவர் இவ்வளவு எளிமையாகச் சொல்லும்போது அது எனக்கு ஒரு திறப்பாகவே தெரிந்தது. போன வருட நோன்பில் சில வேளைகள் தொழுதார், அதில் தனக்கு ஆத்மதிருப்தி கிடைப்பதாக உணர்வதாகச் சொன்னதெல்லாம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இவர் முதல் வருடம் நோன்பு இருக்கும்போது, புகைப்பிடித்தல் பழக்கத்தால் நோன்பு வைப்பது சிரமம் என்றார். ’நோன்பை காரணமாக வைத்து புகைப்பிடித்தலைக் கைவிட்டாலென்ன’ என்றேன். சிரமம் என்றார், கொஞ்சம் அறிவுரைத் தந்தேன். முயற்சி செய்கிறேன் என்றார். பல வருடக்காலப் பழக்கமான புகைப்பிடித்தலை அறவே கைவிட்டார். நட்பும் நோன்பும் வென்றது.


மத்திய பிரதேசத்தில் கல்லினாலான கட்டிடங்களை வேண்டுமென்றால் நீங்கள் தகர்க்கலாம், ஆனால் தமிழ் நாட்டவர்களின் சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும், நேசத்தையும் உங்களால் அசைக்கவே இயலாது. அவர்களின் நோன்பும் மாண்பும் ஒருவருக்கொருவரான அன்பும் நம்பிக்கையும் திராவிடமென்ற வலுப்பெற்ற விதையில் வளர்ந்த விருட்சம்.

Monday, May 16, 2022

ஜன கன மன - தேசியப் படம்

ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களிலும் ஒரு பெண் வன்புணர்வு செய்யப்படுகிறாள். ஆனால் ஏன் ஒரு சில பெண்களுக்கு ஏற்படும் அநீதியைப் பற்றி மட்டும்தான் ஊடங்கள் பெரிதாகப் பேசுகின்றன? ஊடகங்களால் உந்தப்படும் நாமும் ஒரு மரணமென்றால் ’நம் ஊரா? நம் மாநிலத்திலா? நம் சாதிப் பெண்ணா?’ என்றெல்லாம் தெரிந்த பிறகே அதைப் பற்றிப் பேசுகிறோம், பதறுகிறோம். உண்மைதானே? அதேபோல ஓர் என்கவுண்டர் நடந்தால் ’பாஸ்ட் புட்’ மாதிரி ‘இன்ஸ்டண்ட் டீ’ மாதிரி அது ஒரு ‘திடீர் தீர்ப்பு’ என்றெல்லாம் உணராமல், அவன் சாகடிக்கப்பட வேண்டியவன்தான், தூக்கில் போடப்பட வேண்டியவன்தான் என்று ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கும் விஷயங்களை மட்டும் உள்வாங்கி நாமும் அதற்குச் சாதகமான தீர்ப்போடு ஒத்துப்போக இணங்கிவிடுகிறோம்.

அதிகாரவர்க்கம் ஊடகங்களின் துணையோடு, காவல்துறையைக் கைப்பொம்மையாக்கி எப்படியெல்லாம் மக்களை உணர்வுப்பூர்வமாக ஆக்கிரமிக்கிறார்கள் என்பதைப் பற்றித்தான் பேசுகிறது ‘ஜன கன மன’ திரைப்படம். 

இதனை மலையாளப்படம் என்று மட்டும் சுருக்கிவிட முடியாது, இது ஒரு தேசியப் படம். அனைத்துச் சமூகத்தினரும் பார்க்க வேண்டிய படம். அதனாலேயே இந்தப் படத்திற்கு ‘ஜன கன மன’ என்று பெயர் வைத்திருப்பதாக உணர்கிறேன்.


ஒரு படத்தில் நான் எப்போதும் எதிர்பாப்பது கதையையும் காட்சியமைப்புகளையும் மட்டுமேயல்ல. மாறாக, அந்தப் படத்தினால் ஏற்படும் அதிர்வுகளை, புதுச் சிந்தனைகளை, விரியும் எண்ணங்களை, நமக்கு முன் எழும் சவால்களை இவை எல்லாவற்றையும்தான் 

மிகவும் முக்கியமானதென எண்ணுகிறேன்.. 

வெறும் பொழுதுபோக்காகப் பார்க்கப்படும் ’கேஜிஎப்’களோடு இப்படியான படங்களும் வரவேற்கப்பட வேண்டும். படத்திற்குப் பிறகு ஏற்படும் விவாதமே இம்மாதிரியான படத்திற்கான முழு வெற்றி.

முதல்பாதி படு வேகம், விறுவிறுப்பான காட்சியமைப்பால் அடுத்து என்ன? பேராசிரியர் சபாவாக வரும் மம்தாவைக் கொன்றது யார்? அவளுக்கு ஏற்பட்ட அநியாயம் வேறு யாருக்கும் நிகழக் கூடாது என்று சபாவின் மாணவர்கள் போலவே நாமும் சேர்ந்து அவளுக்காகப் போராடி கொண்டிருப்போம் மனதளவில். அதுவும் சஞ்சன் குமாராக வரும் சூரஜின் நடிப்பும் கம்பீரமும் நம்மையும் போராட்ட மனநிலைக்கே தள்ளிவிடும் தந்திரத்தைச் செய்திருக்கிறார் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி.

அதே வழக்கைத் தலைகீழாக மாற்றுப் பார்வையில் விவாதிக்கிறது இரண்டாம் பாதி. அதுவும் காட்சியமைப்பாக இல்லாமல் வெறும் வசனமாக, நம் மனதைத் தொடும், உலுக்கும் வசனமாக மட்டுமே விரிகிறது காட்சி. நிறையப் பேருக்கு வெறும் வசனம் மட்டுமே பிடிக்காதுதான், ஒளிக்கான வேலையே இல்லாமல் ஒலியால் கலக்கியிருப்பது, அதுவும் பொதுவாகவே நீதிமன்றக் காட்சிகளில் ’விஷுவல் ட்ரீட்’ இருக்காது. ஆனால் இதில் திரை முழுக்க நிறைந்திருப்பது பிரித்விராஜ் என்பதால் 

சகித்துக் கொள்ள முடிகிறது, அவ்வளவு உணர்ச்சிப் பொங்க சிறப்பாக நடித்திருக்கிறார்.

2019இல் ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் குழுவாகப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டதை வைத்துத்தான் இந்தப் படத்தைப் பின்னியிருக்கிறது திரைப்படக்குழு. ஆனால் போகிற போக்கில் உன்னாவ் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சேங்கரைப் பற்றியும், உட்கார இருக்கையும் இல்லாததொரு பள்ளிக்கூடத்திலிருந்து, அதுவும் பொதுவான குழாயிலிருந்து தண்ணீர் எடுக்கக் கூடாதென்று 

விலக்கப்படுகிற கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட ஒரு பெண் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு படித்துப் பட்டம் பெற்று, ஆளாகி, ஆராய்ச்சியாளராக முனைவராகப் பாடுபட்டும் முனைவர் பட்டம் பெற முடியாமல் தற்கொலை செய்வது 

என்பது அவளுடைய தோல்வியா? இல்லை, அவளை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறார்களா? என்ற கேள்வியின் மூலம் ரோஹித் வேமுலாவின் "நிறுவனக் கொலை" பற்றியும் நினைவுப்படுத்துகிறது இந்தத் திரைப்படம். 

அத்தோடு நின்றுவிடாமல் வடக்கில் மாட்டிறைச்சிக்காக நடந்த கொலைகள், அரிசி திருடியதற்காக அடித்தே கொல்லப்பட்ட கேரள சம்பவம், முஸ்லிம் பெண்கள் தலையை மறைப்பதை சிலர் அவர்களில் வெளிப்புற தோற்றத்தை வைத்துப் பேசுவது, மனித உரிமையின் சார்புநிலை, நிறத்தால் ஏற்படும் பாகுபாடுகள், சாதி பிரிவினால் ஏற்படும் அட்டூழியங்கள் என்று எல்லாவித சிறுபான்மை மற்றும் விளிம்புநிலை சமூகத்திற்காகப் பேசியிருக்கிறது இந்தப் படம்.

படத்தில் பிடித்த வசனங்கள்:

”அரசியல்வாதிகள் நினைத்தால் பணத்தையும் செல்லாக்காசாக்க முடியும் ஓட்டையும் செல்லாமலாக்க முடியும், காரணம் இது இந்தியா.”

----------

சஞ்சன் குமார் (சூரஜ் வெஞ்சரமூடு): ”உண்மையே வெல்லும்”

அரவிந்த் சுவாமிநாதன் (பிரித்விராஜ்): சத்தமாகச் சிரித்த பிறகு “காந்தியைக் கொன்றதிலேயே வெவ்வேறு கருத்துகள் கொண்ட நாடு சார் நம் நாடு”

இந்தப் படத்தின் ‘டீசரில்/ டிரெய்லரில்’ பார்த்து வாய்பிளந்த காட்சிகளும் வசனங்களும் படத்தில் இல்லாதது பெரிய ஏமாற்றம்.

தற்போதைய இந்திய அரசியல் சூழ்நிலையில் இந்தக் கூறுகள் ஒவ்வொன்றும் துணிச்சலான செயல்தான்.  அதற்கேற்ற தைரியமான வசனங்கள்தான் ஆனால் வேறுபட்டக் கூறுகளான துணிவும் வசனங்களும் ஒன்றிணையாமல் முழுமை பெறாமல் 

பிணைக்கப்படாமல் துண்டு துண்டாக நிற்பது எடிட்டர் சுதீப் இளமோன் மற்றும் ஸ்ரீஜித் சாரங்கின் தோல்வியா அல்லது இரண்டாம் பாகத்தில் முழுமை பெறுமா என்று தெரியவில்லை ஸ்ரீதிவ்யாவெல்லாம் 1-2 காட்சியில் வந்து செல்கிறார், எதற்கு 

என்ன பின்னணியென்று புரியவில்லை. ஒட்டுமொத்தப் படத்திற்கும் பலமென்றால் அது ஜேக்ஸ் பெஜாயின் பின்னணி இசைதான். முக்கியமாகப் படத்தின் கீதமாக வரும் வங்காள மொழிக் கலப்போடு ஒலிக்கும் பாடல் நம் உணர்வுகளைத் 

தூண்டுவதாகவுள்ளது. இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் குழுவினருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும். இரண்டாம் பாகத்திற்காகக் காத்திருக்கிறோம்.

குறைகளை மீறிப் பிடித்திருக்கும் படம். அவசியம் பார்த்துவிடுங்கள் விவாதிப்போம்.


#moviereview #JanaGanaMana

Friday, February 25, 2022

Jesus with Turban

 குளிர்காலத்தில் அதிகாலையில் விடியலைக் காண 'அல் குத்ரா' ஏரிக்குச் சென்றுவிடுவேன். அங்கு செல்லும்போதெல்லாம் நேரமிருந்தால் ‘லவ் லேக்’ என்ற அதன் அருகில் உள்ள மற்றொரு ஏரிக்குச் செல்வதை வழமையாகக் கொண்டிருந்தேன். அன்றும் அப்படித்தான் அக்கா மற்றும் குழந்தைகளுடன் சூரிய உதயத்தை ரசித்துவிட்டு அங்கிருந்து ‘லவ் லேக்’ சென்று மீன்கள் நிறைந்த இடத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது தவறி ஏரியில் விழுந்துவிட்டேன்.

அங்கு நின்றிருந்த என் குழந்தைகளும் என் அக்காவும் பதறிவிட்டனர். என்ன செய்வதென்று யோசிக்கும் கணப் பொழுதில், நீச்சல் தெரியாத எனக்கு யாரோ உள்ளிருந்து வெளியில் வர உதவியது போல் இலகுவாகச் செல்பேசியுடன் மேலே வந்து முதலில் செல்பேசியை வைத்துவிட்டு ஏதோ உத்வேகத்தில் நானும் மேலே ஏறி வந்துவிட்டேன். ஆழமில்லை என்றாலும் அது பாறைகள் நிறைந்த பகுதி. அதுவும் குளிர்காலமென்பதால் நடுங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வேலை பார்ப்பவர் பதறியடித்து ஓடி வந்து தலையில் ஏதும் அடி இல்லையே என்று மீண்டும் மீண்டும் கேட்டார். வேறு எங்கும் அடிபடவில்லை என்பதைக் கேட்டு உறுதி செய்த பிறகு, அவர் சென்று தன் வாகனத்தை எடுத்து வந்தார். அதில் ’ஹீட்டரை’ இயக்கி, அணிந்திருந்த ஆடை காய்வதற்கு உதவினார், சூடாகத் தேநீரும் கொண்டு தந்தார். “இல்லை நான் காபி, டீ குடிப்பதில்லை” என்றேன். ”அதெல்லாமில்ல சூடாக ஏதாவது அருந்தினால்தான் நல்லது” என்றார் பல வருடம் பழகியவர்போல். பேசிய பிறகு நம்மூருதான் என்று அறிந்து மகிழ்ந்தோம். எதிர்பார்ப்பின்றி உதவும் மனம் சிலருக்குத்தான் என்று மகிழ்ந்து விடை பெற்றோம்.
செல்பேசி வண்ணமயமான திரையைக் காட்டியது. அது சாம்சங் 8+ அதனை அணைத்துவிட்டு வெயிலில் சிறிது நேரம் வைத்துவிட்டு, ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இயக்கினேன் சரியாக வேலை செய்தது. இந்த நிகழ்வு நடந்து மூன்று ஆண்டுகளாகிவிட்டது. சமீபத்தில் அதே இடத்திற்கு மீண்டும் சென்றோம்.


என் அக்காவின் மகன் வந்திருந்தான். அவனிடம் நான் அங்கு அந்த ஏரியில் விழுந்த கதையைப் பற்றியும் உதவியவர் பற்றியும் விவரித்துக் கொண்டிருந்தேன். அதே மீன் நிறைந்த பகுதிக்குச் சென்றோம் படமெடுத்தோம். பேசிக் கொண்டிருந்தபோதே ஏதோ தட்டியது போல நான் விழுந்த அதே பகுதியில் இந்த முறை என் கைப்பேசி தவறி வீசியது போல் ஏரியில் விழுந்துவிட்டது. இந்த முறை சாம்சங் 20+, என் கணவரோ வசை பாட ஆரம்பித்திருந்தார். என் அலுவல் வேலை எல்லாமே அந்த ஒற்றைச் செல்பேசியில்தான் இயங்கிக் கொண்டிருப்பதால் என்ன செய்வதென்றறியாமல் நின்றிருந்தேன். வந்த அழுகையை அடக்கிக் கொண்டு அங்கு வேலை செய்பவரிடம் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் யாருக்கோ தன் செல்பேசியில் தொடர்பு கொண்டு வரச் சொல்லிக் கொண்டிருந்தார். என் கணவர் ஏசிக் கொண்டிருந்த நேரம், என் மகள் மெதுவாக மீன்கள் அருகே சென்று மீன்களிடம் உதவி கேட்டிருக்கிறாள். திடீரென்று அந்த ஏரியில் எல்லா மீன்களும் அடித்துக் கொண்டு அலையோடு ஓசையை எழுப்பியது. என் மகள் ‘மொவானா (Moana)’ இல்லைதான் ஆனாலும் அது நிகழ்ந்தது. அதற்காக மீன்கள் என் செல்பேசியைக் கையில் எடுத்துத் தருமென்றெல்லாம் நீங்கள் வீண் கற்பனை செய்யாதீர்கள்.
என் செல்பேசி இன்னும் ஏரித் தண்ணீர் மூழ்கிவிட்டிருந்தது. அரை மணி நேரத்திற்கு மேலேயே கடந்துவிட்டிருந்தது. இவ்வளவு நேரம் தண்ணீரில் கிடக்கும் செல்பேசி செத்துவிட்டது என்று உறுதி செய்ய என் எண்ணை அழைத்தும் பார்த்தோம் ‘not reachable' என்றே வந்தது. அப்போதுதான் அந்த ஆபத்பாந்தவர் வந்தார். ஒல்லியான உயரமான உருவம். சீக்கிய மரபுக்கான முண்டாசை அணிந்திருந்தார். அவரைப் பார்க்க ஏசுநாதர் தலைப்பாகை அணிந்திருந்ததுபோல் தோன்றியது. அவ்வளவு சாந்தமான முகம். என்னைப் பார்த்தவுடன் புன்முறுவல் தந்தார். எந்த இடத்தில் விழுந்தது என்று கேட்டார். நான் கை நீட்டிக் காட்டினேன். புன்னகை மாறாமல் அப்படியே அந்தக் குளிர்ந்த ஏரியில் இறங்கினார். மீன்கள் பயந்தெல்லாம் ஒதுங்கவில்லை. அவரைச் சூழ்ந்தன. நான் ”இங்கே, அங்கே” என்று விசனத்துடன் சொன்னதைப் புன்முறுவலுடன் கடந்து மிதந்து கொண்டே தேடினார். அவர் பெரிய தாடி நனைந்துவிட்டது ஆனால் அவருடைய முண்டாசு நனையவில்லை. நனையாதவாறே மிதந்தார். கூர்மையாக என்னைப் பார்த்து ”இந்த இடம்தானா?” என்று மெல்லிய குரலில் கேட்டார். ”இன்னும் கொஞ்சம் தள்ளி” என்றேன். ஆனால் அவர் நீரில் தியானம் செய்பவர்போல் அங்கேயேதான் நின்றார். என்ன செய்தாரோ தெரியவில்லை பத்து நிமிடம்தான் இருக்கும் சட்டென்று மாயவித்தைப் போல் என் செல்பேசியை எடுத்துத் தந்தார். செல்பேசிக்கு உறை அணியும் பழக்கமில்லை - வெறும் skin wrap மட்டுமே செய்திருந்தேன். ஆனாலும் என் கைப்பேசி அணையாமல் ஒன்றுமே ஆகாமல் அப்படியே உயிரோடு, நனைந்த சுவடே இல்லாமல் இயங்கியது. கண்கள் நிறைந்து அவரை நன்றியோடு பார்த்தேன். அவர் எதையுமே எதிர்பாராதவராகத் தன் வாகனத்தில் ஏறச் சென்றவரிடம் வலுக்கட்டாயமாகச் சிறிது பணத்தை அவர் மறுத்தும் என் கணவர் திணித்தார்.
இந்த அதிசய நிகழ்வை பிரமிப்போடு, என் ஆச்சர்யங்கள் மாறாமல் சிலாகித்து நண்பரிடம் சொல்லி கொண்டிருந்தேன். அவரோ சிரித்துக் கொண்டே வடிவேலு ஸ்டைலில் “சாம்சங் ‘ஐபி68’ அதான் மொபைலுக்கு ஒன்னுமாகல. இதுல ஒரு மாயாஜாலமும் அதிசயமுமில்ல. ‘Jesus with Turban’ஆ ஹைய்யோ ஹைய்யோ”ன் என்று லெஃப்ட் ஹாண்டில் டீல் செய்து அநாயசமாக என் நம்பிக்கையைச் சுக்குநூறாக்கினார்.
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி