Tuesday, May 31, 2022

நெஞ்சுக்கு நிறைவான நீதி

 'நெஞ்சுக்கு நீதி’யில் வரும் கதாநாயகனைப் போலத்தான் எனக்கும் என் பதின்ம வயதில் சாதிய ஏற்றத் தாழ்வுகளைப் பற்றித் தெரியாமல் இருந்தது. ’உண்மையில் இன்றுமா சாதி அடுக்குகளினால் தீண்டாமை, கொலை எல்லாம் நடக்கிறது?’ என்று ஆச்சர்யமாகவே இருந்தது. வாசிப்பும், ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற படங்களும் அதன் உண்மை நிலவரத்தை, சாதிய பாகுபாடுகளை, அழுக்கைப் படம்பிடித்து மனதில் நிறுத்தின.

‘ஆர்டிகிள் 15’ பார்க்கும்போது மன அழுத்தமே ஏற்பட்டது. தமிழில் அந்தச் சாராம்சத்தைக் கொண்டு சேர்த்ததற்கு படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றி. அவ்வளவு கனமான திரைக்கதையை அனாயாசமாகக் கையாண்டிருப்பார் கௌரவ் சோலங்கி. ஹிந்தியில் ஆயுஷ்மன் குரானா அலட்டிக்கொள்ளாமல் செய்த அந்தக் கதாபாத்திரம், இவ்வளவு நடித்தால் போதுமானது என்று இருப்பதாலேயே தமிழில் அந்தக் கதாபாத்திரத்திற்கு உதயநிதி சரியான தேர்வுதான். தேவையான அளவே நடித்திருக்கிறார் அலட்டாமல். அவருக்குப் போலீஸ் உடை கச்சிதமாகப் பொருந்துகிறது. நல்லவேளையாகச் சண்டைக்காட்சிகள் இல்லை.
திரைப்படத்தைத் தூக்கிப் பிடிப்பதே அதன் திரைக்கதையும், வசனங்களும், ஒளிப்பதிவும்தான்.
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உதயநிதியை விடுத்து தான்யா, ஷிவானி, அப்துல், சுரேஷ், இளவரசு என்று அனைத்துக் கதாபாத்திரங்களையும் சரியாகச் செதுக்கி அவர்களது கதாபாத்திரத்திற்கு நியாயம் கற்பித்துள்ளார். ஆனால் வாசிக்கும் பழக்கம் உடையவராகக் காட்டப்படும் கதாநாயகன் உதயநிதிக்கு அதுவும் பெரியார்: ஆகஸ்ட் 15 நூலை வைத்திருப்பவருக்குச் சாதிய ஏற்றத்தாழ்வுகளும், ‘தீட்டு’ என்ற வார்த்தைக்கே பொருள் தெரியாதது போல் காட்டியிருப்பதெல்லாம் பொருந்தவில்லை. வெளிநாட்டில் படித்தவர் என்பதாலேயே வலிந்து திணித்து ஆங்கிலத்தில் பேசும் வசனங்களும் ஒட்டவில்லை.
பொருந்தாத விஷயங்களையும் தமிழரசன் பச்சைமுத்துவின் வசனங்களால் சரி செய்துள்ளார்.
விஜயராகவன் (உதய்): ‘உங்களுக்கெல்லாம் ஒரு ஹீரோ வேணும்ல’
கதாநாயகி: ”ஹீரோ வேண்டாம். ஹீரோ வேணும்னு நினைக்கிற மனநிலை மக்களுக்கு வேண்டாம்”
----
விஜயராகவன் (உதய்): ”எல்லாரும் சமம்ன்னா அப்ப ராஜா யாரு?”
கதாநாயகி: ”அனைவரையும் சமம் என்று நினைப்பவன்தான்.”
--
”சட்டம்தான் எல்லாத்தையும் சரி செய்யும்.”
”சட்டமா? (எள்ளலுடன்) எங்களுக்கும் அதற்கும் இங்க மரியாதை இருக்கா என்ன?”
----
”நாயப் பேர் சொல்லி கூப்பிடுற நீங்க, மனுஷங்கள ஏன் இது அதுன்னு சொல்றீங்க?”
----
”ஏய் வா போ’ என்று சொல்லி கூப்பிடுவாரே தவிர என்றைக்காவது பெயரைச் சொல்லி கூப்பிட்டிருக்காரா?”
--
சத்துணவு சமைக்க அனுமதி மறுக்கப்படுவது, கூண்டில் இருக்கும் பெரியார் அம்பேத்கார், ஒதுங்கியே நிற்கும் இளவரசு, எரிச்சலைத் தூண்டும் சுரேஷ் என்று வசனமில்லாமல் காட்சியால் நம்மைக் கலங்கடிக்கும் இடங்களும் உண்டு. ஆனால் இப்படியான காட்சிகளுக்கு இரண்டு பாடல்களைத் தவிர, பின்னணி இசை சிறப்பாக அமையவில்லை. அ ஆ ஆ அ என்று பின்னணியில் இழுவையாக யாரோ கத்திக் கொண்டே இருப்பதாக உள்ளது. சத்தியாவைத் தேடும் போது அதற்கான பரபரப்பு நம்மைத் தொற்றிக் கொள்ளவில்லை. அவள் கிடைக்கும்போது அந்த மகிழ்ச்சி நம்மை வந்தடையவில்லை. இந்தப் பின்னடைவிற்கு முக்கியக் காரணம் இசைதான். திபு நினன் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்.
படத்தில் எனக்குப் பிடித்த காட்சியென்றால் ‘டாக்டர் அனிதா, பயப்படாதீங்க உங்க கூட நான் இருக்கேன்’ என்று உறுதியான குரலில் சொல்லும் அந்தக் காட்சி ’நீட்’ தேர்வுக்கான வாக்குறுதியாக எனக்கு ஒலித்தது. உங்களுக்கு?
’நெஞ்சுக்கு நீதி’ மனதிற்குக் கொஞ்சம் நிறைவைத் தந்தது.

Saturday, May 21, 2022

நல்லுள்ளம் சூழ் உலகு!

 சம்பளம் வாங்கி வேலையில் இருந்தபோது யாரும் என்னை ஏமாற்றியதில்லை, அதற்கான வாய்ப்புமில்லை. எப்போதும் என்னுடன் இருப்பவர்கள் அனைவருமே நல்லவர்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் தொழில் தொடங்கிய பிறகுதான் ‘டிசைன் டிசைனாக’ ஏமாற்றுபவர்களைக் கண்டு வியக்கிறேன்.

நாங்கள் செய்வதோ பயிற்சி தந்து சான்றிதழ் தருவது அல்லது ஆய்வு செய்து இயந்திரம் வேலை செய்யப் பாதுகாப்பானது என்று சான்றிதழ் தருவது. சான்றிதழ் தரும்போது பணம் தந்துவிட வேண்டுமென்ற ஒப்புதலின் பேரில்தான் பயிற்சிக்கே வருவார்கள். நிறைய வேலைக்கு இந்தச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு அதற்கான வேலைத் திட்டமே (project) கையெழுத்தாகும் அல்லது செயல்படுத்த முடியுமென்பதால் ஓரளவுக்கு எல்லாரும் சரியாகப் பணம் தந்து சான்றிதழ் தருவார்கள்.
ஒரு நிறுவனம் 30 நாட்களுக்கான காசோலையைத் தந்தது. காசோலையைப் பெற்றுக் கொண்டு சான்றிதழைத் தந்துவிட்டோம். 30 நாட்கள் முடியும் முன்புப் பணத்தைச் செலுத்திவிட்டு, காசோலையைத் திரும்ப வாங்கிக் கொண்டனர். எங்களுக்கும் அதில் எந்தச் சந்தேகமோ ஆட்சேபனையோ இல்லாமல் இருந்தது. மறுபடியும் அதே நிறுவனம் வேறொரு ஆய்வுக்கான் (inspection) சான்றிதழ் கேட்டார்கள், முடித்தோம். அதேபோலவே 30 நாட்களுக்கான காசோலையைத் தந்தார்கள் உறுத்தல் இல்லை பெற்றுக் கொண்டோம். சான்றிதழைத் தந்துவிட்டோம். 30 நாட்கள் முடியும் முன் அழைத்துப் போன முறை போலவே பணமாகத் தந்துவிடுகிறோம் காசோலையை வங்கியில் இட வேண்டாம் என்றார்கள். சரி என்று நாங்களும் காத்திருந்தோம். ஆனால் பணம் வரவில்லை. கேட்கும்போதெல்லாம் இன்று நாளை என்றே இழுத்தடித்தார்கள். பெரிய தொகையுமில்லை. 60 நாட்களுக்கு மேலாகிவிட, சரி சின்ன தொகைதானே இதுவுமா அவர்கள் வங்கியில் இருக்காது என்று எண்ணிக் காசோலையை வங்கியில் துணிந்து செலுத்திவிட்டோம். முதல் நாள் வந்துவிட்டதாகக் காட்டிய கணக்கு மறுநாளே சுதாரித்து, இல்லை காசோலை திரும்புகிறது என்று வந்துவிட்டது. அதில் காட்டிய காரணம்தான் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் தந்த காசோலை, வங்கிக் கணக்குச் செயல்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கின் காசோலை. அமீரகத்தைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய குற்றம். நிறுவனத்தை அழைத்து என்ன இப்படி ஏமாற்றி இருக்கிறீர்கள் என்று கேட்க, விழுந்தடித்துக் கொண்டு வரும் வாரத்தில் பணம் செலுத்தி விடுகிறோம் என்று கேட்டுக் கொண்டார்கள். காத்திருக்கிறோம்.
இன்னொரு பெரிய நிறுவனம் என்று தங்களைச் சொல்லிக் கொண்டவர்கள் 2 வருடங்களாகியும் பணம் தரவில்லை. தெரிந்தவர்களின் நிறுவனம்தான் ஏமாற்ற மாட்டார்கள், தாமதமானாலும் தந்துவிடுவார்கள். பெரிய தொகை என்பதால் சுணங்குகிறது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். மேலாளரும், நாங்கள் மற்றவர்கள் மாதிரி இல்லை, காலம் தாழ்த்தினாலும் பணம் வந்துவிடுமென்றே உறுதியளித்தார். சமீபத்தில் நிறுவனத்தை மூடிவிட்டார்கள், பல வழக்கு விசாரணைகள் அந்த நிறுவனத்தின் மேல் இருப்பதாகவும் அவர்கள் திவால்நிலை அறிவித்துவிட்டார்கள் ஆகையால் பணம் வராது என்றும் தெரிந்துவிட்டது. அதன் பிறகு சமீபத்தில்தான் தெரிந்தது, திவாலென்று அறிவித்துவிட்டு, மூடுவதுபோல் காட்டிவிட்டு யாருக்கும் பணம் கொடுக்க முடியவில்லை என்று கைவிரித்தவர்கள், வேறு நிறுவனத்தை வேறு பெயரில் தொடங்கிச் சுகமாகத் தொடர்கிறார்கள் என்று.
இவர்கள் இப்படியென்றால் இன்னொரு நிறுவனம் சான்றிதழ் அவசரம் எங்கள் அலுவலக ஓட்டுநர் காசோலையோடு வருகிறார், உடனே கொடுத்தனுப்பி விடுங்கள். அவர் அங்கு வந்தவுடனே எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிவிடுங்கள் என்று கேட்க, வெள்ளந்தியான நானும் என் கணக்கரிடம் மின்னஞ்சலில் அனுப்பி விடுங்கள் என்று சொல்லிவிட்டேன். வந்தவர் காசோலை தந்தார், வாங்கிவிட்டு மின்னஞ்சல் அனுப்பிவிட்டோம். காசோலையைப் படிமம் எடுக்கும்போது கவனித்தால் அதில் கையெழுத்து இல்லை. அந்த நிறுவனத்தை அழைத்துக் கேட்டால் தவறு நடந்துவிட்டது உடனே அனுப்புகிறோம் என்று இன்னொரு மாதம் இழுத்தடித்துவிட்டு தந்தனர். இன்னொரு நிறுவனம் இப்படித்தான் அவசரமாகச் சான்றிதழ் வேண்டுமென்று காசோலை தந்தார்கள் கையெழுத்தெல்லாம் இருந்தது, ஆனால் Proactive Excel Safety Consultancy என்பதில் lலை விட்டுவிட்டார்கள். படிக்கும்போது மூளை அதனைக் கவனமாகப் பார்க்காதுதானே விட்டுப் போய்விட்டது. ஆனால் அதன் பிறகு பார்த்து கேட்டால் இதோ அதோ என்று அதேபோல் தான் இழுத்தடித்துத் தந்தார்கள்.
இன்னும் சிலர் ஆய்வுச் சான்றில்லாமல் அதற்கான முன் அறிக்கை (first report) மட்டுமே வைத்துத் தனக்கான காரியத்தை முடித்துவிட்டு ‘என்ன ஆய்வு, எப்போ செய்தீர்கள், யார் நீ’ என்பதாக ஏமாற்றுகிறார்கள். எப்படி இப்படியெல்லாம் செய்ய முடிகிறது என்ற அதிர்ச்சியிலேயே பலரை மன்னித்து விட்டுவிட வேண்டியுள்ளது (வேற வழி!?). என்னதான் ஏமாற்றுபவர்கள் ஏமாற்றினாலும் இறைவன் ஏதாவதொரு வகையில் உதவிக் கொண்டுதான் இருக்கிறான். ’நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான்’ என்ற வசனம் நினைவுக்கு வந்திருக்க வேண்டுமே?!


சமத்துவம்

 எனக்குத் தெரிந்த ஒரு சகோதரமத நண்பர் மனமார உண்மையாகவே நோன்பு வைக்கிறார். அதென்ன ’மனமார’ அப்படியென்ற கேள்வி உங்களுக்கு வரலாம். அதாவது நான் பார்த்த மற்ற நண்பர்கள் எல்லாம் சூரியன் எழும் முன்னெல்லாம் துயில் கலைந்து நோன்பு இருக்க மாட்டார்கள். அவர்களுக்குப் பிடித்த நேரத்தில் எழுந்து சாப்பிட்டு, அதன் பிறகு மாலையில் அவர்களுக்குப் பிடிக்கும் நேரத்தில் நோன்பை முறிப்பது பெரும்பாலும் நாம் பார்க்கக் கூடிய நோன்பாக உள்ளது. இவரும் முதல் வருடம் அப்படிதான் இருந்தார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இஸ்லாமியர்களை மிஞ்சம் வகையில் சுஹூர் நேரத்திற்கு முன்பாகவே துயில் கலைந்து சாப்பிடுகிறார். ”சுஹூருக்கு என்ன சாப்பிட்டீங்க?” என்று கேட்டால் எப்போதும் ஒரே பதில்தான் ’மோர் சாதம்’ என்று. அதேபோல இஃப்தாருக்கு “என்ன சாப்பிட்டீங்க?” என்று கேட்டபோது ”பேரிச்சம்பழமும் தண்ணீரும்” என்றார். அதிர்ச்சியாக இருந்தது. ”வேற என்ன சாப்பிட்டீங்க?” என்றேன். ”வேற என்னங்க, இரவு உணவான மூன்று இட்லியும் சட்னியும்” என்றார் மிகவும் எளிமையாக. என் கண்கள் கலங்கியே விட்டது. கலங்கியதற்குக் காரணம் என்னை நானே சுயபரிசோதனை செய்து கொண்டதால். இஃப்தாரென்றாலே ஒவ்வொரு நாளும் விதவிதமாகச் சமைத்து, ஏதோ அது சாப்பிடும் சடங்காகவே மாறிப் போயிருந்த என் அகராதியில் அதுவும் தெரிந்தவர்களெல்லாம் ‘நான் இதைச் சமைத்தேன்’ என்று படம் காட்டும்போதெல்லாம் ‘ஓ இதை மறந்துட்டோமே, இதைச் செய்வோம்’ என்று அடிப்படையான இறை வணக்கதை மறந்து சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இஃப்தாரை இவர் இவ்வளவு எளிமையாகச் சொல்லும்போது அது எனக்கு ஒரு திறப்பாகவே தெரிந்தது. போன வருட நோன்பில் சில வேளைகள் தொழுதார், அதில் தனக்கு ஆத்மதிருப்தி கிடைப்பதாக உணர்வதாகச் சொன்னதெல்லாம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இவர் முதல் வருடம் நோன்பு இருக்கும்போது, புகைப்பிடித்தல் பழக்கத்தால் நோன்பு வைப்பது சிரமம் என்றார். ’நோன்பை காரணமாக வைத்து புகைப்பிடித்தலைக் கைவிட்டாலென்ன’ என்றேன். சிரமம் என்றார், கொஞ்சம் அறிவுரைத் தந்தேன். முயற்சி செய்கிறேன் என்றார். பல வருடக்காலப் பழக்கமான புகைப்பிடித்தலை அறவே கைவிட்டார். நட்பும் நோன்பும் வென்றது.


மத்திய பிரதேசத்தில் கல்லினாலான கட்டிடங்களை வேண்டுமென்றால் நீங்கள் தகர்க்கலாம், ஆனால் தமிழ் நாட்டவர்களின் சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும், நேசத்தையும் உங்களால் அசைக்கவே இயலாது. அவர்களின் நோன்பும் மாண்பும் ஒருவருக்கொருவரான அன்பும் நம்பிக்கையும் திராவிடமென்ற வலுப்பெற்ற விதையில் வளர்ந்த விருட்சம்.

Monday, May 16, 2022

ஜன கன மன - தேசியப் படம்

ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களிலும் ஒரு பெண் வன்புணர்வு செய்யப்படுகிறாள். ஆனால் ஏன் ஒரு சில பெண்களுக்கு ஏற்படும் அநீதியைப் பற்றி மட்டும்தான் ஊடங்கள் பெரிதாகப் பேசுகின்றன? ஊடகங்களால் உந்தப்படும் நாமும் ஒரு மரணமென்றால் ’நம் ஊரா? நம் மாநிலத்திலா? நம் சாதிப் பெண்ணா?’ என்றெல்லாம் தெரிந்த பிறகே அதைப் பற்றிப் பேசுகிறோம், பதறுகிறோம். உண்மைதானே? அதேபோல ஓர் என்கவுண்டர் நடந்தால் ’பாஸ்ட் புட்’ மாதிரி ‘இன்ஸ்டண்ட் டீ’ மாதிரி அது ஒரு ‘திடீர் தீர்ப்பு’ என்றெல்லாம் உணராமல், அவன் சாகடிக்கப்பட வேண்டியவன்தான், தூக்கில் போடப்பட வேண்டியவன்தான் என்று ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கும் விஷயங்களை மட்டும் உள்வாங்கி நாமும் அதற்குச் சாதகமான தீர்ப்போடு ஒத்துப்போக இணங்கிவிடுகிறோம்.

அதிகாரவர்க்கம் ஊடகங்களின் துணையோடு, காவல்துறையைக் கைப்பொம்மையாக்கி எப்படியெல்லாம் மக்களை உணர்வுப்பூர்வமாக ஆக்கிரமிக்கிறார்கள் என்பதைப் பற்றித்தான் பேசுகிறது ‘ஜன கன மன’ திரைப்படம். 

இதனை மலையாளப்படம் என்று மட்டும் சுருக்கிவிட முடியாது, இது ஒரு தேசியப் படம். அனைத்துச் சமூகத்தினரும் பார்க்க வேண்டிய படம். அதனாலேயே இந்தப் படத்திற்கு ‘ஜன கன மன’ என்று பெயர் வைத்திருப்பதாக உணர்கிறேன்.


ஒரு படத்தில் நான் எப்போதும் எதிர்பாப்பது கதையையும் காட்சியமைப்புகளையும் மட்டுமேயல்ல. மாறாக, அந்தப் படத்தினால் ஏற்படும் அதிர்வுகளை, புதுச் சிந்தனைகளை, விரியும் எண்ணங்களை, நமக்கு முன் எழும் சவால்களை இவை எல்லாவற்றையும்தான் 

மிகவும் முக்கியமானதென எண்ணுகிறேன்.. 

வெறும் பொழுதுபோக்காகப் பார்க்கப்படும் ’கேஜிஎப்’களோடு இப்படியான படங்களும் வரவேற்கப்பட வேண்டும். படத்திற்குப் பிறகு ஏற்படும் விவாதமே இம்மாதிரியான படத்திற்கான முழு வெற்றி.

முதல்பாதி படு வேகம், விறுவிறுப்பான காட்சியமைப்பால் அடுத்து என்ன? பேராசிரியர் சபாவாக வரும் மம்தாவைக் கொன்றது யார்? அவளுக்கு ஏற்பட்ட அநியாயம் வேறு யாருக்கும் நிகழக் கூடாது என்று சபாவின் மாணவர்கள் போலவே நாமும் சேர்ந்து அவளுக்காகப் போராடி கொண்டிருப்போம் மனதளவில். அதுவும் சஞ்சன் குமாராக வரும் சூரஜின் நடிப்பும் கம்பீரமும் நம்மையும் போராட்ட மனநிலைக்கே தள்ளிவிடும் தந்திரத்தைச் செய்திருக்கிறார் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி.

அதே வழக்கைத் தலைகீழாக மாற்றுப் பார்வையில் விவாதிக்கிறது இரண்டாம் பாதி. அதுவும் காட்சியமைப்பாக இல்லாமல் வெறும் வசனமாக, நம் மனதைத் தொடும், உலுக்கும் வசனமாக மட்டுமே விரிகிறது காட்சி. நிறையப் பேருக்கு வெறும் வசனம் மட்டுமே பிடிக்காதுதான், ஒளிக்கான வேலையே இல்லாமல் ஒலியால் கலக்கியிருப்பது, அதுவும் பொதுவாகவே நீதிமன்றக் காட்சிகளில் ’விஷுவல் ட்ரீட்’ இருக்காது. ஆனால் இதில் திரை முழுக்க நிறைந்திருப்பது பிரித்விராஜ் என்பதால் 

சகித்துக் கொள்ள முடிகிறது, அவ்வளவு உணர்ச்சிப் பொங்க சிறப்பாக நடித்திருக்கிறார்.

2019இல் ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் குழுவாகப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டதை வைத்துத்தான் இந்தப் படத்தைப் பின்னியிருக்கிறது திரைப்படக்குழு. ஆனால் போகிற போக்கில் உன்னாவ் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சேங்கரைப் பற்றியும், உட்கார இருக்கையும் இல்லாததொரு பள்ளிக்கூடத்திலிருந்து, அதுவும் பொதுவான குழாயிலிருந்து தண்ணீர் எடுக்கக் கூடாதென்று 

விலக்கப்படுகிற கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட ஒரு பெண் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு படித்துப் பட்டம் பெற்று, ஆளாகி, ஆராய்ச்சியாளராக முனைவராகப் பாடுபட்டும் முனைவர் பட்டம் பெற முடியாமல் தற்கொலை செய்வது 

என்பது அவளுடைய தோல்வியா? இல்லை, அவளை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறார்களா? என்ற கேள்வியின் மூலம் ரோஹித் வேமுலாவின் "நிறுவனக் கொலை" பற்றியும் நினைவுப்படுத்துகிறது இந்தத் திரைப்படம். 

அத்தோடு நின்றுவிடாமல் வடக்கில் மாட்டிறைச்சிக்காக நடந்த கொலைகள், அரிசி திருடியதற்காக அடித்தே கொல்லப்பட்ட கேரள சம்பவம், முஸ்லிம் பெண்கள் தலையை மறைப்பதை சிலர் அவர்களில் வெளிப்புற தோற்றத்தை வைத்துப் பேசுவது, மனித உரிமையின் சார்புநிலை, நிறத்தால் ஏற்படும் பாகுபாடுகள், சாதி பிரிவினால் ஏற்படும் அட்டூழியங்கள் என்று எல்லாவித சிறுபான்மை மற்றும் விளிம்புநிலை சமூகத்திற்காகப் பேசியிருக்கிறது இந்தப் படம்.

படத்தில் பிடித்த வசனங்கள்:

”அரசியல்வாதிகள் நினைத்தால் பணத்தையும் செல்லாக்காசாக்க முடியும் ஓட்டையும் செல்லாமலாக்க முடியும், காரணம் இது இந்தியா.”

----------

சஞ்சன் குமார் (சூரஜ் வெஞ்சரமூடு): ”உண்மையே வெல்லும்”

அரவிந்த் சுவாமிநாதன் (பிரித்விராஜ்): சத்தமாகச் சிரித்த பிறகு “காந்தியைக் கொன்றதிலேயே வெவ்வேறு கருத்துகள் கொண்ட நாடு சார் நம் நாடு”

இந்தப் படத்தின் ‘டீசரில்/ டிரெய்லரில்’ பார்த்து வாய்பிளந்த காட்சிகளும் வசனங்களும் படத்தில் இல்லாதது பெரிய ஏமாற்றம்.

தற்போதைய இந்திய அரசியல் சூழ்நிலையில் இந்தக் கூறுகள் ஒவ்வொன்றும் துணிச்சலான செயல்தான்.  அதற்கேற்ற தைரியமான வசனங்கள்தான் ஆனால் வேறுபட்டக் கூறுகளான துணிவும் வசனங்களும் ஒன்றிணையாமல் முழுமை பெறாமல் 

பிணைக்கப்படாமல் துண்டு துண்டாக நிற்பது எடிட்டர் சுதீப் இளமோன் மற்றும் ஸ்ரீஜித் சாரங்கின் தோல்வியா அல்லது இரண்டாம் பாகத்தில் முழுமை பெறுமா என்று தெரியவில்லை ஸ்ரீதிவ்யாவெல்லாம் 1-2 காட்சியில் வந்து செல்கிறார், எதற்கு 

என்ன பின்னணியென்று புரியவில்லை. ஒட்டுமொத்தப் படத்திற்கும் பலமென்றால் அது ஜேக்ஸ் பெஜாயின் பின்னணி இசைதான். முக்கியமாகப் படத்தின் கீதமாக வரும் வங்காள மொழிக் கலப்போடு ஒலிக்கும் பாடல் நம் உணர்வுகளைத் 

தூண்டுவதாகவுள்ளது. இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் குழுவினருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும். இரண்டாம் பாகத்திற்காகக் காத்திருக்கிறோம்.

குறைகளை மீறிப் பிடித்திருக்கும் படம். அவசியம் பார்த்துவிடுங்கள் விவாதிப்போம்.


#moviereview #JanaGanaMana

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி