Wednesday, September 09, 2015

அறிவின் ஆரம்ப எழுத்து - அலிஃப்

நான்கு தலைமுறை பெண்களின் இன்னல்களை ஃபாத்திமாவாக வரும் லேனாவின் மூச்சு திணறலோடு ஆரம்பிக்கிறது 'அலீஃப்' திரைப்படம். நம் வாழ்வில் முதலில் மிகவும் மதிக்கப்படவேண்டிய ஒருவர் யாரென்று நபிகள் நாயகத்திடம் கேட்கப்பட்ட போது "உன் தாய்" என்றார்கள். ஒரு முறையல்ல மூன்று முறை கேட்கப்பட்ட போதும் முதல் மூன்று ஸ்தானங்களும் தாய்க்கே என்றார்கள், நான்காவதாகத் தந்தை என்றார்கள். அப்படியான தாய்மார்களை இஸ்லாத்தின் பெயரில் வதைப்பதைச் சித்தரிக்கும் படம். கண்டிப்பாக இது மூச்சுத் திணறல்தான். நியாயமான கேள்விகளைப் பெண்கள் எழுப்பும் போது திணறல் ஏற்பட்டு, அவளை நசுக்கி வாழ்வின் எல்லைக்கு ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்த்தாலும், இன்னல்களைத் தாண்டி வாழ தலைப்படுகிறாள் இப்படத்தில் ஃபாத்திமா. இப்படம் பெண்களுக்காகப் பேசப்பட்டிருந்தாலும் இங்கு ஆண்களையோ மதத்தையோ குற்றம்பிடிக்கவில்லை மாறாக மதத்தின் பெயரில் பிழைப்பு நடத்தும் கூட்டத்தை நேரடியாகச் சாடியுள்ளது. ஃபாத்திமா ஒரு கட்டத்தில் 'இன்று என் கணவர் என்னைக் காரணங்கள் காட்டி விவாகரத்துச் செய்கிறான் என்றால் அதற்கு முழுப் பொறுப்பு நீதான்' என்று மதபோதகரைக் கை காட்டுவது - இப்படியாகப் பெண்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறது.

ஒரு விபச்சாரி, நாவறட்சியுடன் இருந்த நாய்க்குத் தண்ணீர் கொடுத்து அந்த நாயின் தாகத்தைத் தணித்ததற்காக அவளது பாவக் கறைகளை மன்னித்து இறைவன் சுவன வாழ்வைப் பரிசாகத் தந்தது பற்றி ஃபாத்திமா மதபோதகரிடம் கேள்வி எழுப்பும் போது "அது தவறு... பெண்களோட சப்தம் சபையில் எழுந்தால் அது மறுமை நாளின் வரவென்று" தவறாகப் போதிக்கிறார். மார்க்கம் சொல்வதெல்லாம் பிற உயிர்களுக்குக் காருண்யம் காட்டினால் கருணையாளன் நமக்கு அதைவிடச் சிறந்த கருணையைக் காட்டுகிறான் என்பதுதானே? ”பூமியில் உள்ளோருக்கு நீங்கள் இரக்கம் காட்டுங்கள், வானில் ’அர்ஷில்’ உள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்” என்று போதிக்கும் மார்க்கத்தின் உண்மைகளை மறைத்து அவர் அவர்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டும் மதகுருக்கள் முழங்குவதை நிரல்படுத்தியுள்ளது 'அலிஃப்'.

பிரமாதமான இயக்கமென்று சொல்வதை விடத் திரைகதையால், வீரியமான வசனங்களால் கேள்விகளைக் கொண்டு நிரப்பிக் கண்ணாடியை நம் முன் நிறுத்தி, சமீபகாலமாகத் தூய்மைவாதம் என்ற பெயரில் திரிந்து கொண்டு இருக்கும் சூழல்களையும், நமக்கே தெரியாமல் விதைக்கப்பட்ட விஷத்தினால் வார்த்தெடுக்கப்படும் சமுதாயக் கட்டமைப்பையும் கண் முன்னே விவரிக்கிறார் இயக்குனர் என்.கே. முகமது கோயா. எவ்வளவு பாகுபட்டுக் கிடந்தாலும் பெண்கள், அவர்களின் ஆடைகள், ஒழுக்கங்கள் என்று வந்துவிட்டால் அனைவரும் கைகோர்த்துக் கொண்டு சாடுகின்றனர் என்பதையும் போகிற போக்கில் சொல்லிவிடுகிறார். திருமணத்தில் அழைக்கப்படாத விருந்தாளியாக வரும் சிறுவன் அலியை அடித்து விரட்டுபவர்கள், திருமணம் முடிந்து குப்பையில் சாப்பாட்டைக் கொட்டுவது, பெரியவர்கள் பிரச்சனையில் குழந்தைகளின் படிப்பு பாதிப்பு அடைவது, சடலத்தை அடக்கம் செய்யவும் வேண்டுமென்றே காத்திருக்க வைத்திருத்தலை எதிர்த்து வீட்டின் பின்புறத்தில் புதைக்க, தன் அயலார் சந்திரனாக வரும் கலாபவன் மணியை அழைக்க, 'மோண்டா கழுவாத இவனா அடக்கம் செய்யப் போறான்?' என்று கேட்பவர் வாயை மூடும் வகையில் 'அவன் மனசு சுத்தமானது அது போதும்' என்று பதிலுரைப்பது என்று மனிதத்திற்காகத்தான் மதமே தவிர, மதத்தைத் தாங்கிப் பிடித்து மனிதத்தைச் சாகடிக்கிறார்கள் என்பதை அழகாகச் சின்னச் சின்னக் காட்சிகளில் நெஞ்சை நிறைக்கிறார்.

தொலைக்காட்சியைத் தன் தோழியோடு இருக்கையில் அமர்ந்து பார்க்கும் குற்றமற்ற சிறுவனை அதட்டி கீழே உட்காரச் சொல்லும் போது கேள்வி கேட்காமல் கீழே நகர்பவனோடு அவன் தோழியும் கீழே உட்கார்ந்து உதிக்கும் புன்னகை, ஃபாத்திமா வேலை கேட்டு உதிர்க்கும் கண்ணீருக்கு, உடன் வேலை தர முயற்சிப்பவருக்கு நன்றியில் உயரும் கை என்று தத்தளிக்கும் குடும்பத்தை மதத்தின் பெயரில் எவ்வளவு அலைக்கழிக்கலாமோ அவ்வாறெல்லாம் சீண்டிப்பார்த்துப் படம் முழுக்க வேதனை நிரம்பிய காட்சிகளாக இருந்தாலும் அதன்னூடே நம்பிக்கை ஒளிக்கீற்றை விட்டுச் செல்லும் இயக்குனர், கம்யூனிசத்தின் அப்பட்டமான ஆதரவை வெளிப்படையாக அதிகப்படியாகச் சொல்வதாகத் தென்பட்டது. கம்யூனிசமிருக்கும் வீட்டில்தான் பெண் போராளிகள் உதிப்பார்களா என்ன?

"பெண் என்பவள் ஒரு பொருள் மட்டும்தானே? யாரும் வாங்கி உபயோகிக்கலாம், அவளுக்கென்று மனசு, ஆசைகள், உணர்வுகள் என்று எதுவுமே இருக்கக்கூடாது அப்படித்தானே? இந்தச் சமுதாயமும் முசலியார்களும் நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள், 'பெண்களுக்கென்று நபிகளார் பல உரிமைகளும் சலுகைகளும் மொழிந்ததுண்டு. மஸ்ஜித்திற்குச் செல்லலாம், தந்தையின் சொத்தில் உரிமை பெறலாம், பொது மேடையில் பேசலாம், யுத்தத்திலும் பங்கெடுக்கலாம்...' ஆண் ஒரு பெண்ணுக்கு விவாகரத்தை (தலாக்) மூன்று முறை சொல்ல வேண்டும் ஆனால் பெண் ஒர் ஆணுக்கு விவாகரத்தை ஒரே முறை சொன்னால் போதுமென்றும் உண்டு" என்று தைரியமாகப் பேச அவள் போராளியாகவோ, கம்யூனிட்டாகவோ இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, மார்கத்தைச் சரியான புரிதல்களுடன் எதிர்கொள்பவளாக இருந்தால் போதும்.

ஃபாத்திமா மூலம் ஒவ்வொரு பெண்களும் வேண்டி நிற்பதெல்லாம் இலகுவான சுவாசம், நிறைவாய் உணவு, உடுத்திக் கொள்ள உடை, மரியாதையான ஒரு வாழ்வு அவ்வளவுதான். அதன் பிறகுதான் மார்க்கம் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்க முடியுமென்று நேரடியாகச் சொல்லியுள்ளார் இயக்குனர் முகமது கோயா. இதை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது.

எல்லாக் கதாமாந்தர்களும் அலட்டிக்கொள்ளாமல் கதையைச் சரியாகப் புரிந்து கொண்டு தம் பங்கை செவ்வனே செய்துள்ளனர் குறிப்பாக ஆட்டாவாக வரும் ஃபாத்திமாவின் தாய் ஜீனத் இயல்பான நடிப்பில் மிளர்கிறார். ஜாய் மாத்தியூ ஹாஜியாராகக் கலக்கியுள்ளார். இரண்டே பாடல்கள் என்றாலும் அதன் வரிகளில் பொதிந்த அர்த்தங்களைத் தன் இசையில் நம்மிடம் கொண்டு சேர்க்கிறார் ரமேஷ் நாராயண்.

இப்படத்தில் பிரச்சாரமுமில்லை எந்தத் தீர்வும் தரவில்லை, நமக்கு நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளவும் சிந்திக்கத் தூண்டவுமே இப்படம்.

இறுதி காட்சியில் கருப்பு அங்கி அணிந்த கூட்டத்தை அடக்குமுறையில் சிக்கி தவிக்கும் பெண்களின் இன்னல்களாக சித்தரித்து அவர்களை விடுப்பட்டவளாக வீர நடையும் நேர் கொண்ட பார்வையும் வீசி செல்கிறார் ஃபாத்திமா.

எனது போன பதிவான 'தி ஸ்டோனிங் ஆப் சொரயா'வில் கேள்வி கேட்டவளை கற்களால் எதிர்கொண்டு சாகடித்தார்கள். இந்தப் படத்தில் வீசப்பட்ட கற்களால் கோட்டை கட்டுகிறாள் ஃபாத்திமா. அலிஃப் பேசப்பட வேண்டிய படம்.

Tuesday, September 01, 2015

கற்கால மனிதர்கள்

இவ்வுலகில் கொத்துக்கொத்தான கொலைகளுக்குப் பிரதான காரணம் மதங்கள், பிரிவுகள், சாதிகள் என்று சொல்வதை விட ஒரே வார்த்தையில் 'இறைவன்' என்ற நம்பிக்கை எனலாம். நாம் பார்த்திராத, அறியாத, உணரும் அந்த இறைவனுக்காக மதவெறிகளும் பிரிவினைவாதங்களும் கொலைகளும் தண்டனைகளும் பல்வேறு இடங்களில் தலைவெறித்தாடுகிறது. அதுவும் இதற்கு முதல் பலியாள் பெண்தான். இதில் மட்டும் பாரபட்சமில்லாமல் எல்லா மதங்களும் பெண்களின் அடுக்குமுறைகளை வரைந்த பிறகுதான் அதன் மீது ஒரு மதத்தின் நாமத்தைத் தீட்டுவார்கள் போல.

உண்மை சம்பவம், மிகவும் வலி மிகுந்த சம்பவம். அதைப் படமாக விவரித்ததில் எந்தத் தவறும் நிகழாதவாறு சரியான சூழலில், ஒலி- ஒளிகளைக் கச்சிதமாகப் பிடித்து, தேவையான ஒப்பனைகளோடு, பொருத்தமான நடிகர்களோடு ஒரு நிகழ்வை நாம் அருகிலிருந்து சாட்சியாகப் பார்க்க மட்டும் செய்திருக்கிறார் இயக்குனர் சைரஸ் நவ்ராஷ்தே. நான் சொல்வது 'ஸ்டோனிங் ஆஃப் சொரயா எம்' படத்தைப் பற்றி. அத்தோடு அவர் கடமை நிறைவடைந்து விட்டிருக்கிறது. படத்தின் தலைப்பே முழுக் கதையையும் சொல்லிவிடுகிறது. கல்லெறி தண்டனைகள் இன்னும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்று படம் முடிவில் ஓடவிடும் வரிகள், நம்மைப் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறது.

அந்த நிகழ்வு நடந்தது 1986 ஆம் ஆண்டில், ஈரானில். தன் பயணத்தின் போது அறிந்து கொண்ட உண்மையைப் பிரெஞ்ச் பத்திரிகையாளர் ஃபிரைஜோன் சஹெப்யாம் (Freidoune Sahebjam) புத்தகமாக 1990-ல் வெளியிட்டு சர்வதேச அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியதின் விளைவு, திரைப்படமாக அப்புத்தகம் 2008 'தி ஸ்டோனிங் ஆஃப் சொரயா எம்.' என்று அதே பெயரில் சைரஸ் நவ்ராஷ்தே (Cyrus Nowrasteh) மற்றும் அவரது துணைவியார் பெட்ஸி கிஃப்ஃபனின் வலிமையான திரைக்கதையுடன் வெளியானது.

ஒரு தனி நபரை ஒழுங்கீனமென்று அடையாளப்படுத்தி அவள் பிறந்து வளர்ந்த மண்ணில், அவளுக்குத் தெரிந்த முகங்கள், பழகிய உறவுகள் சூழ, குழியில் தள்ளி இடுப்புவரை புதைக்கப்பட்டு, கைகளைப் பின்னால் கட்டி, தன் தந்தையும் தன்னிடம் அது குறித்து ஒரு வார்த்தையும் கேட்காமல், அவள் கணவரின் குற்றச்சாட்டை மட்டும் முன்னிறுத்தி 'இவள் ஒழுக்கம் கெட்டவள். இவள் என் மகளே இல்லை' என்று கல்லெறி தண்டனையில் முதல் நபராகக் கல்லெறிய தயாராகும் போதே அப்பெண் மனம் நொறுங்கிச் செத்துவிடுகிறாள். அந்தக் காட்சியிலெல்லாம் கண்களிலேயே பேசி தன் வலியை வெளிப்படுத்துகிறார் சொரயாவாக வரும் மோஸன் மார்னோ (Mozhan Marnò). தன் தந்தை எறியும் கல் அவள் மீது படாதபோது 'அவள் கலங்கமற்றவள் என்று உனக்கு இறைவன் காட்டும் அறிகுறி'யென்று அவையிலிருக்கும் ஒரு பெண் கூக்குரலிடுகிறாள். 'இறைவன்' என்று ஒருவன் இருந்திருந்தால் அவள் குற்றமற்றவளோ இல்லையோ தன் படைப்பை இப்படி அவமானப்படுத்திக் கொடூரமான முறையில் கொலை செய்வதை தடுத்திருப்பான் இல்லையா? அந்த நிமிடத்திலும் இவர்கள் "காத்தருள்வான், உன்னை சொர்க்கத்தில் அவன் வரவேற்பான்" என்று சொல்லும் சொற்கள் இறைநம்பிக்கையைக் கேள்விக்குறியாக்குகிறது.

ஈரானில் ஒரு கிராமத்தில் அரசாங்க அதிகாரத்தில் இருக்கும் அலிக்கு பதினான்கு வயது சிறுமியை திருமணம் செய்யும் ஆசையில், தன் மனைவி சொரயாவையும் நான்கு குழந்தைகளையும் விட்டுவிலக நினைக்கிறான். விவாகரத்து தர மறுக்கும் மனைவி மீது களங்கத்தை ஏற்படுத்துகிறான், அதற்கு அந்த ஊர் முல்லாவும் துணை செல்கிறார். அவள் மீது சுமத்தப்படும் குற்றம் என்ன தெரியுமா? 'கணவனிடம் மட்டுமே சொல்லக்கூடிய உடல் உபாதையைப் பற்றி அவள் வேறொரு ஆணிடம் சொல்லிவிட்டாள்' என்பது. அது மாதவிடாய் பற்றியதாக இருக்கலாம். அதற்காகக் கல்லெறி தண்டனையா? அதற்கும் அந்தப் பெண் 'அப்படி நான் சொல்வேயில்லை' என்று வாதிடுகிறாள். 'அதற்கு சாட்சியங்கள் இருக்கிறதா?' என்று ஊரின் மேயர் கேட்க, 'குற்றம் சுமத்தியவர்கள் குற்றத்தை நிரூபிக்கட்டும்' என்கிறாள். அதற்குப் பதிலாக வருவது "ஒர் பெண் களங்கமானவள் என்று கணவன் கை நீட்டிவிட்டால், அதை இல்லை என்று அந்தப் பெண்தான் நிரூபிக்க வேண்டும். அதே போல் ஓர் ஆண் தவறானவன் என்று ஒரு பெண் கை நீட்டினாலும் அந்தப் பெண்தான் அதற்கான சாட்சியங்களைத் தர வேண்டும்". இது எந்த ஊர் நியாயமென்று தெரியவில்லை. அவள் விபச்சாரமே செய்திருந்தாலும் அந்தப் பெண் மட்டுமா அங்குத் தண்டனைக்குரியவள்?

'ஆண் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் அவன் தேவையை நிறைவேற்றுபவள் தான் நல்ல மனைவி' என்ற வசனங்களும் வருகிறது. அதே போல அந்த முல்லா சொரயாவிடம் வந்து 'உன் கணவனுக்கு விவாகரத்து கொடுத்துவிடு... அதன் பிறகு என்னுடன் பேசிப் பழகு, நமக்குள் ஒரு தற்காலிக திருமண ஒப்பந்தம் அதாவது சிகேஹ் செய்து கொள்ளலாம். இது இஸ்லாமில் அனுமதிக்கப்பட்டது' என்பார். ஆண்களுக்குச் சாதகமான எல்லா விஷயங்களையும் ஓட்டைகளையும் தேடிப்பிடித்து நிறைவேற்றிக் கொள்ளும் ஈரானியர்களின் வாழ்க்கை முறையைக் காணும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது. இப்படியாக சொரயா மீது களங்கத்தை பகிரங்கப்படுத்த முதலில் அவளைப் பற்றிய வதந்திகளைப் பரப்புரை செய்கிறார்கள். அதன் பிறகு அவர்களுக்கான காரியங்கள் நடந்தேறிவிடுகிறது.

இந்தப் படத்தில் இந்த நிகழ்வைக் கேட்டு அதனை நமக்குக் கடத்தும் அந்தப் பத்திரிகையாளரைத் தவிர மற்ற எல்லா ஆண்களும் மிக மோசமான சுயநலவாதிகளாகக் காட்டப்படுகிறார்கள். இவ்வுலகம் ஆண்களுக்கானது என்று தந்தையால் சொல்லி வளர்க்கப்படும் சொரயாவின் மகன்களும் தன்னைப் பெற்று வளர்த்த தாய் என்று கருதாமல், தனக்குரிய ஆண் செருக்கில், தாய் மீது கல்லெறிகிறார்கள். 'தாயின் காலடியில் சொர்க்கம்' என்று போதிக்கும் மார்க்கத்தில் இப்படியான தண்டனைகளை இவர்கள் எப்படி கண்டறிந்தார்கள்!?

ஆதி காலத்திலிருந்தே பல நாடுகளில் இருந்து வந்தது பெண்ணுக்கு எதிரான கல்லெறி தண்டனை. விபச்சாரியை கல்லெறிந்து கொல்லத் துணியும் மக்களை நோக்கி இயேசு பிரான் உங்களில் பாவம் செய்யாதொருவர் முதல் கல்லை வீசட்டுமென்று வரும் பைபிள் வாசகத்திலிருந்து நாம் தெளிவாக இது பழங்காலத்தில் ஆணாதிக்கவாதிகள் ஏற்படுத்திய கொடூரச் சட்டமென்று அறியலாம். அதை இன்னும் பிடித்துத் தொங்கும் நாடுகளைப் பற்றியும் பெண்கள் மீதான வன்முறை குறித்தும் சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டு, அந்தச் சமயத்தில் ஈரானில் கல்லெறி தண்டனை பட்டியலில் இருந்தவரின் தண்டனை மறுபரிசீலனை செய்யப்பட்டதாம். இப்படத்தை ஈரான் அரசாங்கமும் பிறநாடுகளிலும் தடைசெய்திருந்தாலும் உலக மனித உரிமைகளின் கண்டனங்களுக்குச் செவிசாய்த்ததே இப்படத்திற்கான வெற்றி எனலாம்.

சொரயாவின் மீது அபாண்ட பலி சுமத்தி கணவரின் கயமையால் கல்லெறி தண்டனைக்குத் தள்ளப்படும் சொரயாவை காட்டும் அதே கிராமத்தில்தான் அவளுக்காகக் குரலை உயர்த்தி, மேயரிடம் வாதிடும், ஒரு கட்டத்தில் மேயரின் கன்னத்தில் பளீர் அறைவிடும், தான் உயிரிழந்தாலும் பரவாயில்லையென்று சொரயாவிற்கு நடந்த கொடுமைகளை தைரியமாக பிரெஞ்ச் பத்திரிகையாளரை அழைத்துத் தம் குரலை பதியச் சொல்லி அதனை உலகுக்குக் கடத்திய ஸஹ்ராவும் வாழ்கிறாள். ஸஹ்ராவாக உருமாறியது ஷொஹ்ரெஹ் அக்தாஷ்லூ (Shohreh Aghdashloo) என்பவர். தனக்குத் தந்துள்ள கனமான பாத்திரப் படைப்பை உணர்ந்து மிக நேர்த்தியாக நடித்துள்ளார்.

தண்டனையை தெரிவித்த பிறகு அவள் சொரயாவிற்கு தலைவாரிவிடும் போது இருவரும் பாடுவார்கள். அவர்கள் பாடும் வார்த்தைகளின் பொருள் புரியாமலே அந்தக் காட்சியில் நம் கண்களை நிரம்பச் செய்துவிடுகிறார்கள். இறுதியாக விடைபெறும் தாய், என்ன நிகழவிருக்கிறது என்று புரிந்துக் கொள்ள முடியாத மகள்களை முத்தமிட்டு கட்டியணைக்கும் காட்சி நம்மை உலுக்கியெடுத்துவிடுகிறது. கல்லெறிவதற்காக சின்னப் பொடியன்களும் கற்களைத் தேடி அலைவதும், சரமாரியாகக் கல் மழை பொழிந்து இரத்த வெள்ளத்திலிருக்கும் சொரயாவின் அருகில் அலி சென்று அவள் கண்கள் அசைவதை பார்த்து 'இந்த விபச்சாரி இன்னும் உயிருடன் இருக்கிறாள்' என்று ஓலமிடுவதும் மனதில் அழியா ரனங்களை ஏற்படுத்துகிறது.

அதிகாரத்தை பயன்படுத்தி மதமெனும் போர்வையில் எளிதாக அடுக்குமுறைகளை நிகழ்த்த முடியும் என்பதற்கு 'The Stoning of Soraya M' ஒரு உதாரணம். இன்னும் பல நாடுகளில் பெண்களுக்கெதிரான கொடூரங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த வலிகளுக்கு எங்கே எப்போது விடை கிடைக்கும்??

மனதிடமுடையவர்கள் படத்தை இங்குப் பார்க்கலாம்: https://www.youtube.com/watch?v=HEKDnGn9Bw0
திரைப்படத்தின் டிரெய்லரை மட்டும் பார்க்க விரும்பினால்: http://www.thestoning.com/flash.php

Thursday, August 20, 2015

மெஹர்

இஸ்லாமியக் கதைக்களமென்றாலும், இஸ்லாமியக் கதாபாத்திரங்களை வைத்தாலும் (தீவிரவாதி/ வில்லன் என்பதைத் தவிர்த்து) ஏதாவது சர்ச்சைகள் அல்லது ஆட்சேபனைகள் எழுந்துவிடுமென்று பயந்தே தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் சூழலை எனக்குத் தெரிந்து இதுவரை மிக இயல்பாக யாருமே பதிவு செய்ததில்லை. அதை முறியடித்தது விஜய் தொலைக்காட்சி திரைச்சித்திரம் 'மெஹர்'.

எழுத்தாளர் பிரபஞ்சனின் சிறுகதையை இயக்குனர் தாமிரா இயக்கி திரைக்கதை வசனத்துடன் 'மெஹராக' சல்மா நடிப்பில் வருகிறது என்றதும் பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் துபாய் ஒளிபரப்பில் சல்மா சொன்ன நேரத்தில் வராததால் ஏமாற்றத்துடன் இருந்த எனக்கு நண்பர் முரளி அதற்கான சுட்டியை அனுப்பியிருந்தார். ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் பணியை மிகச் சிறப்பாக இயல்பாகச் செய்திருப்பதன் பின்னணி இயக்குனர் தாமிரா. படம் முழுக்கத் தெளிக்கப்பட்ட வசனங்களும், கலைகளும், ஒப்பனைகளும் அசல் இஸ்லாமிய குடும்பத்தின் பிரதிபலிப்பாக இருக்கவே, இது எப்படி சாத்தியம்? தாமிரா என்பவரால் எப்படிச் சிறிய தவறும் நிகழாது முழுநீளப்படத்தை இஸ்லாமை உள்வாங்கி செய்திருக்க முடியும் என்ற கேள்விக்கான விடை இன்று அவரைப் பற்றிப் படிக்கும் போது கிடைத்தது. தாமிரா ஒர் இஸ்லாமியர் என்று அறிந்ததும், அந்த இயல்பான விஷயத்தில் எந்த ஆச்சர்யமுமில்லை என்று விளங்கிக் கொள்ள முடிந்தது. வசனங்கள் எல்லாமே இயக்குனரால் பார்க்கப்பட்ட கேட்கப்பட்ட அல்லது கேட்க விரும்பியவைகளின் பிரதிபலிப்பாகவே வந்ததால் அதன் உஷ்ணத்தை உணர முடிகிறது. பணத்தைக் குறித்துச் சொல்லும் போது 'துரு பிடிக்காதுனு பணம் சேர்க்கிறான், பணம் சேர்ந்ததும் அவன் மனசு துரு பிடிச்சுப்போகுது', 'பணம் சிலருக்கு அவசியம் சிலருக்கு அலட்சியம்', 'பணம் இருக்கிறவங்க மனசு இரும்புப் பூட்டால பூட்டியிருக்கு' போன்ற வசனங்கள் நம்மை யோசிக்க வைக்கிறது.

அதே போல இயக்குனரின் பாத்திரத் தேர்வு மிக அற்புதம். கவிஞர் சல்மாவிற்குப் பதிலாக வேறு நடிகையை நடிக்க வைத்திருந்தால் கண்டிப்பாக 'மெஹர்' பேசப்பட்டிருக்காது. தாயாக சரண்யா போன்ற சிறந்த நடிகை நடித்திருந்தாலும் கூடத் தமிழ் முஸ்லிம்களின் வட்டார வழக்கை மிகச் சரியான உச்சரிப்பில், இயல்பாகப் பேசுவதற்கு ஒரு தேர்ந்த நடிகை தேவையில்லையே, மாறாக அந்த இடத்தில் மகள் யாஸ்மீனின் சூழலில் வளர்ந்த சல்மா போன்றவரே சரியென்று அறிந்து, நடிக்க வைத்திருக்கிறார். அவர் கணிப்பை சல்மாவும் உறுதி செய்யும் வகையில் ஒரு கவலை ரேகையோடு தாயின் சாயலில் மிக அமைதியாக பாத்திரப்படைப்பை உள்வாங்கி நிகழ்த்தியுள்ளார். ’ஒது’ செய்யும் முறை, தலையில் சீலை நழுவ விடாமல் தலையை வைத்துக் கொள்ளும் முறை, அதனை ஒதுக்கிவிடும் முறை என்று அமர்க்களப்படுத்தியவர், தொழுகையின்போது தலைமுடி தெரியாமல் முந்தானையைச் சுற்றிக்கட்டாமல் விட்டுவிட்டார். சல்மாவின் மகனாக வரும் ரஷீத் எல்லா கதாபாத்திரங்களையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் மிக அற்புதமாக உலா வந்திருக்கிறார். நடித்திருக்கிறார் என்று சொல்வது இங்கு பொருந்தாமல் போய்விடும். அவ்வளவு கனகச்சிதமாக பொருந்தியுள்ளார். கணுக்கால் தெரிய கட்டிய கைலி, தவறு செய்துவிட்டதால் தாயை எதிர்கொள்ள முடியாத திண்டாட்டத்தை வெளிப்படுத்தும் உடல்மொழி, 'அடுத்தவர் பொருளை அபகரிப்பவன் மறுமையில் கைகளை இழப்பான். என் அக்காவின் வாழ்வுக்காக என் கைகளை இழந்தாலும் பரவாயில்லை' என்று கண்களில் காட்டிய உறுதி, அவருடைய தவிப்பு, கலக்கம் என்று ஒவ்வொரு விஷயத்திலும் யதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். இப்படி ஒவ்வொரு பாத்திரப்படைப்பையும் செதுக்கியுள்ளார் இயக்குனர் தாமிரா.

கதை சொல்லி கதையை முடிவில் ஆரம்பித்து, பின்னோக்கி சென்று கதையை விவரித்து அதில் ஆங்காங்கே இந்து- முஸ்லிம் ஒற்றுமையாக தாய்- பிள்ளைகளாக வாழ்ந்த காலத்தை நினைவுப்படுத்தி, 'இல்லாதவன் புலம்பல் எல்லாமே ஒருவிதத்துல கம்பூனிசம்தான்' என்று எள்ளலாக முதலாளி- தொழிலாளி தர்மத்தைத் தொட்டு, அமைதியான மார்க்கத்தை அச்சுறுத்தல் மார்க்கமாகப் பார்ப்பவர்களுக்கு நல்ல விஷயங்களும் இருக்கத்தான் செய்கிறது ஆனால் சரியான முறையில் பின்பற்றுபவர்கள் இல்லாதவரை இப்படியான நெறிகள் வெறும் மதக்கோட்பாடுகளாக ஏடுகளில் மட்டுமே இருக்கும் என்பதை மிக நாசூக்காகத் தெளிவுப்படுத்தியிருப்பது மிகச் சிறப்பு. இச்சித்திரம் மார்க்கத்தை பின்பற்றாமல் ஊர் தப்பாகப் பேசுமென்று ரொக்கமும் நகையும் கேட்பவர்களைப் பார்த்து நகைக்கும்.

பெண்ணாகப் பிறந்தவளுக்கு பலநூறு கனவுகளும் ஆசைகளும் இருக்கும், ஆனால் யாஸ்மீன் போன்ற பெண்களுக்கு கனவானது, அவர்கள் சுதந்திரம் என்று விரும்புவது "பட்டபகலுல தெருவுல இறங்கி நடக்கணும், இந்த சந்தத்தாண்டி இருக்கிற உலகத்த நான் பார்க்கணும், மனசு குளிரப் பாட்டுக் கேட்கணும், சத்தமா பாடிப் பார்க்கணும்" என்பது மட்டுமே. ஆனால் அப்படியான ஆசைகள் நிறைவேற அவர்கள் வழியாக நினைப்பது திருமணம் மட்டும்தான். பூப்படைந்த பெண்களை வீட்டிலேயே வைத்து, திருமணம் நடக்கும் வரை நாலு சுவற்றைத் தவிர வேறு எதையுமே பார்க்க அனுமதிக்காமல், யாருடனும் பேச வழி வகுக்காமல், உலக அறிவும் வாசமும் தெரியாமல் முடங்கிப் போக வைக்கும் அவலம் இன்னும் நடந்தேறிக் கொண்டேயுள்ளது. அவர்களை திருமணத்திற்குத் தகுதிப் பெற செய்வது கைத்திருத்தமான சமையலும், அழகும், பிரதானமாகப் பணமும்தான். இதற்குக் காரணம் மதமில்லை, இஸ்லாமிய மார்க்கமில்லை எல்லாம் ஆணாதிக்கச் சிந்தனையின் விளைவு என்பதில் ஐயமில்லை.

இறுதிக்காட்சியில் 'இஸ்லாத்தைப் பின்பற்றி ஈமானோடு வாழ அடுத்த தலைமுறை தயாராக இருக்கு' என்பது பெண் விடுதலைக்காகவும் - பெண்களுக்குத் திருமணம் மட்டுமே விடிவு என்றில்லாமல் - அவளுக்குத் தேவையான கல்வி, உலக அறிவு, விசால சிந்தனை எல்லாமும் கிடைக்கப் பெறவும் இந்தத் தலைமுறையினரே உதவிடவும் வழிவகை செய்யத் தலைப்படுமா?

Tuesday, February 17, 2015

நான் ஒரு இனப் பாகுபாடாளர் அல்ல...

அலுவலக வாசலில் உள்நுழையுமிடத்தில் ஏதோ கொட்டிக்கிடந்தது, அது வெள்ளை பளிங்குத் தரையில் பளிச்சென்று தெரிந்தது. நான் வரவேற்பாளினியிடம் "என்னது இது?" என்றேன். அவள் அலட்சியமாக "யாரோ கொஞ்சம் காபிக் கொட்டிட்டாங்க" என்றாள். "துடைத்துவிடலாம், இல்லாவிட்டால் அதை மிதித்து மற்ற இடமும் அழுக்காகிவிடும்" என்றேன். அவள் வேலையைப் பார்த்தப்படியே "இன்னும் ஒரு மணி நேரத்தில் பணியாளர் வந்துவிடுவார், அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்" என்றாள். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே எங்களை கடந்த எங்கள் பொது மேலாளர் ஒரு திசுத்தாளை தண்ணீரில் நனைத்து எடுத்து வந்து அந்த இடத்தை துடைக்கலானார். இதைப் பார்த்த உடனே வரவேற்பாளினி விறுட்டென எழுந்துச் சென்று "கொடுங்க நான் துடைக்கிறேன்" என்று கேட்க, காத்திருந்ததுப் போல் கொடுத்துவிட்டு சென்றார் மேலாளர்.

அவர் செய்வார் இவர் செய்வார் என காத்திராமல் நாமே உடனே செய்ய வேண்டும் என்பது நன்றாக உரைத்தது.

பெரும்பாலான ஆசியர்கள் வேலைகளில் பாகுபாடுப் பார்க்கிறோம். வெகு சிலரே எதையுமே தரக்குறைவான வேலையாகப் பார்க்காமல் செய்ய முன் வருகிறார்கள்.

(வரவேற்பாளினி ஃபிலிப்பினோ, மேலாளர் லெபனியர், நான் இந்தியர் என்பதை சொல்லத்தான் வேண்டுமா..?).
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி