Wednesday, December 23, 2020

அன்புள்ள வாப்பாவுக்கு...

அன்புள்ள வாப்பாவுக்கு,

நாம் முதல்முதலாகச் சந்தித்த போது காற்று வெளியினிலேநூலில் அன்புத் தங்கை ஜெஸிலாவுக்குஎன்றுதான் நீங்கள் எழுதித் தந்தீர்கள். நினைவிருக்கிறதாஅதே நிமிடம் உங்களிடம் நான் தங்கையாநான் மகள்என்றேன் அழுத்தமாக. அல்ஹம்துலில்லாஹ்!! அந்த உறவு இன்றும் அவ்விதமே தொடர்கிறது.

எனக்கு உங்களை ஆசிப்பின் தந்தையாகத்தான் அறிமுகம். நாம் சந்திக்கும் முன்பே ஆசிப்பின் வாயிலாக உங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். உங்களை நான் சந்திக்கும் முன்பே விண் டிவி நிகழ்ச்சியை நான் நன்றாகச் செய்வதாக, ‘அந்தப் பெண் நல்ல முகவெட்டுநிகழ்ச்சியும் நன்றாகச் செய்கிறாள்என்று விண் டிவி நிறுவனத்தில் சொன்ன செய்தியை ஆசிப் மூலம் என்னிடம் கடத்தியிருந்தீர்கள். இப்படி ஆசிப் மூலம் உங்களிடமிருந்து வரும் செய்திகள் உங்களை நேரில் காணும் ஆவலை ஏற்படுத்தியிருந்தது. எந்தவித பந்தாவும்நான் பெரியவன் அனுபவசாலி என்ற அகந்தையும் இல்லாதுஉனக்கு என்ன தெரியும் என்ற தோரணை அறவே இல்லாது எவ்வித அலட்டல்களுமில்லாததால்தான்பல வருடங்கள் பழகியவள்போல் பார்த்தவுடனே வாப்பாஎன்று மனம் கொண்டாடியது.

உங்களுடைய கிரிக்கெட் வர்ணனையைப் பற்றி எல்லாரும் சொல்கிறார்கள். நான் ஒருமுறையும் கேட்டதில்லைஎன்று நான் உங்களிடம் ஒருமுறை சொல்ல. அப்படியாகேட்டதில்லையாஅதற்கென்ன என்று மடைத் திறந்த வெள்ளமாக "பந்தின் மையப் பகுதியில் ஒரு தையல் இருக்கிறது. பந்து வீசப்படும்போது இது தரையில் எவ்வாறு படுகிறதோ அதை அனுசரித்து அதன் எழுச்சிதிசைவேகம் எல்லாம் அமையும். மோசமாக அமைந்து விட்டால் அது 'பவுண்டரி'யாகிப் போகும். அது பந்து வீச்சாளருக்கு நஷ்டம். அது நன்றாக அமைந்து விட்டால் 'விக்கட்போகும் அது மட்டையாளருக்கு இழப்பு. ஆக எல்லா வில்லங்கங்களுக்கும் இந்த தையல்தான் காரணம். இதை நான் இந்த மகளிர் தினத்தில் சொன்னால் அடிக்க வருவீர்கள். ஆகவே வாழ்த்துச் சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறேன்" என்று நான் புரிந்து கொள்வதற்கு முன்பாகவே தையலைமகளிரோடு இணைத்து ஒரு மார்ச் 8- ஆம் தேதி நீங்கள் பேசிய வர்ணனையை அச்சுப்பிசகாமல் அப்படியே பேசிக் காட்டி என்னைப் பிரமிக்கச் செய்தீர்கள். யாருக்கு கிடைக்கும் இப்படியான பாக்கியம்உலகின் மூத்த பிரபல தமிழ் ஒலிபரப்பாளர், கிரிக்கெட் வர்ணனையாளர் எனக்காகஎனக்காக மட்டுமே பேசிக் காட்டியபகிர்ந்த விஷயங்கள் ஆயிரம்.

அமீரகத் தமிழ் மன்ற மேடையில் நீங்கள் அக்பராகவும், நான் பேகம் சாஹிப்பாவாகவும்ஆசிப் சலீமாகவும் ஒப்பனை இல்லாமல்சரித்திர உடைகள் இல்லாமல்வானொலி நாடகம் போல் கையில் பிரதிகளைப் பிடித்துக் கொண்டு நடித்தோம். ஆக்ராவின் கண்ணீர்நாடகத்தில் இறுதிக் காட்சியில் நீங்கள் லாயிலாஹா…” என்று குழறக் குழற ஒலித்து உயிர் பிரியும் சப்தத்தைத் தத்ரூபமாகச் செய்து முடித்து அரங்கம் கைத்தட்டல்களால் நிறையும்போது உண்மையில் அந்தக் காட்சியின் என் பங்கிற்கான விசும்பல் உணர்ச்சிப் பெருக்கால் அழுகையாக முடிந்தது. அது மறக்க முடியாத ஒரு நிகழ்வு.

இறைத்தூதர் முஹம்மத்நூலை ஆரம்பக் காலத்தில் நீங்கள் பகுதிப் பகுதியாக ஒலிக்கோப்பாக அனுப்புவதும்அதனை திரு.ஸதக் அவர்கள் தட்டச்சுச் செய்து தருவதும்இடையில் நானும் ஆசிப்பும் கருத்துச் சொல்வதாக ஆரம்பித்த படலம்பின் நாட்களில் உங்களுடைய வேகத்திற்கு ஈடு செய்ய முடியாத அளவுக்கு மிக வேகமாக 1000 பக்கங்களுக்கு மேல் செய்து முடித்துஒப்படைக்கப்பட்ட பொறுப்பை எப்படி அர்ப்பணிப்போடும்மனமொன்றியும் முடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் அகத் தூண்டுதலையும் எனக்குக் கற்றுத் தந்தீர்கள். உங்களிடமிருந்து பல நல்ல விஷயங்களை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவுஎன்ற குறளுக்கேற்ப நான் தூற்றினாலும் போற்றினாலும் ஒரு மகளின் கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு பொறுமையாகப் பதிலளிக்கும் உங்களின் பண்பு எப்போதுமே என்னைப் வியக்கச் செய்தது. அதே போல் நீங்கள் ஆசிப்பிற்கு தொலைபேசும் போதெல்லாம் மறக்காமல் தவறாமல் “அங்க ஜெஸிலாவும் மக்களும் நல்லா இருக்காங்களா?” என்று அக்கறையோடு கேட்பதும் என்னை நெகிழச் செய்தது.

எந்த விஷயத்தை நீங்கள் கேட்கும்போதும் அதில் அவ்வளவு பக்குவப்பட்ட தேர்ந்தெடுத்த வார்த்தைகளையே நான் கண்டிருக்கிறேன். உதாரணமாகத் தண்ணீர் வேண்டுமென்றாலும், ‘கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?’ என்று மிகத் தன்மையாகவே பேசிக் கண்டிருக்கிறேன். ஆனால் உங்களுக்கு அடக்க முடியாத அளவுக்குக் கோபம் வரும் என்பதையும் நீங்கள் சொல்லியே ஆச்சர்யத்துடன் அறிந்துள்ளேன்.

கடந்த முறை நீங்கள் துபாய் வந்திருந்தபோதுஇனி நான் எங்கு இங்கு மறுபடியும் வரப் போகிறேன் என்ற ரீதியிலேயே பேசிக் கொண்டிருந்தீர்கள்அது எனக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. உங்களுடைய சிறு வயது அனுபவம்வளர்ந்த விதம்திருமணம்மக்கள்பேரக் குழந்தைகள்தோல்விகள்வெற்றிகள்நண்பர்கள்துரோகிகள் என்று அத்துனை விஷயத்தையும் மனம் திறந்து பகிர்ந்தபோது நான் உணர்ந்த விஷயம்என் தந்தையார் என்னிடம் இப்படியாக எதுவுமே பகிர்ந்ததில்லைநானும் அவர்களுக்கு இவ்வளவு நேரம் கொடுத்ததில்லைஇவ்வகையான நெருக்கமோ அதற்கான வாய்ப்போ எங்களுக்கு அமைந்ததில்லை. இறைவன் அவ்வகையான முழுமையான நிறைவேற்றத்தை உங்கள் மூலம் எனக்குத் தந்திருக்கிறான் என்றே நான் உளமாற நினைக்கிறேன்

பொதுவாகப் பெரியவர்கள் என்னை உச்சி முகர்வதை அவர்களின் ஆசீர்வாதமாகவே நான் உணர்வேன். விமான நிலையத்தில் நீண்ட நேரம் நடக்க வேண்டுமென்பதால் அதனைத் தவிர்க்க தள்ளுவண்டியில் நீங்கள் உட்கார்ந்தபோது நான் உங்களுக்குப் பிரியாவிடையளிக்க நீங்களும் அனிச்சையாக என் உச்சி முகர்ந்தது என் கண்களை நிறையச் செய்தது.

நீங்கள் இன்னும் எழுதி முடிக்க வேண்டியமொழிபெயர்க்க வேண்டிய புத்தகங்கள் நிறைய உள்ளது. அதற்கான ஆற்றலையும்ஆரோக்கியத்தையும்ஆயுளையும் இறைவன் உங்களுக்குத் தந்தருள எல்லாம் வல்லோனை இறைஞ்சுகிறேன்.

வாஞ்சையுடன் மகள் ,

ஜெஸிலா


Sunday, December 20, 2020

பிறந்த வீடு ‘பீட்டர்ஸ் காலனி’

 நான் பிறந்து வளர்ந்த இல்லத்தை இடிக்கிறார்கள் என்று அறியும் போது மனது பதைபதைக்கிறது. சென்னைக்குச் சென்றாலே பத்திரிகையாளர் குடியிருப்புக்குச் சென்று இறங்கினாலும், நான் பிறந்து வளர்ந்த குடியிருப்பான 'பீட்டர்ஸ் காலனி'யைக் கடக்கும் போதெல்லாம் 'எங்க வீடு' என்று தவறாமல் அனிச்சையாகச் சொல்லி விடுவேன். என் கணவரும் 'எத்தனை முறைதான் சொல்லுவே' என்று அலுத்துக் கொள்ளும் அளவிற்குப் பூரிப்புடன் சொல்லி மகிழ்வேன். அந்த வீட்டை விட்டு இருபத்தியாறு வருடங்களுக்கு முன்பே வெளியேறி இருந்தாலும்  என் கனவுகளில் வீடு என்றால் இன்னும் எனக்கு பீட்டர்ஸ் காலனி வீடே வருகிறது. 

வீட்டின் பின்புறம் அமர்ந்து கொண்டு வேடிக்கைப் பார்த்தது, ஈசல் பிடித்து அதற்கு ஃபாத்திமா என்று பெயர் வைத்து வளர்த்தது, அஞ்சலி நாய் இறந்தது அறிந்து அதற்குக் குழி வெட்டிப் புதைத்து அழுதது, மதுர அண்ணன் கால்வாய் திறந்து கரப்பான் பிடிப்பதை வேடிக்கைப் பார்ப்பது, வாடகை சைக்கிளில் சுற்றித் திரிந்தது,  மாடியில் நின்று 'வாட்ச்மேன் காப்பாத்துங்க' என்று விளையாட்டாகக் குரலெழுப்பி எல்லோரையும் பயமுறுத்தியது, 'பைக்' ஓட்டச் சொல்லித் தருகிறேனென்று சாந்தி அக்காவைக் கீழே தள்ளியது, 'மொட்ட மாடி லவ் ஜோடி' என்று கலாய்த்து காதலர்களை மாட்டிக் கொடுத்தது -  இப்படி பல நினைவுகளையும் உணர்வுகளையும் உள்ளடக்கிய வளாகம். 

திமுகவின் தற்போதைய தலைவர் அப்போது ஆயிரம் விளக்கு தொகுதிக்காக வாக்கு கேட்க வரும்போது வண்டிக்குப் பின்னால் ஓடியது, ஓவியத்திற்காக தொடர்ச்சியாகப் பரிசுகள் வாங்கியது - ஒருமுறை நடிகர் சிவகுமார் வந்து பரிசளித்தார், ஆச்சி மனோரமாவின் முன்பு மாறுவேடப் போட்டியில் குறத்தியாக மணி விற்றேன். வருடா வருடம் காலனி ஆண்டுவிழாவில் வெள்ளித்திரை என்று ஏதாவது படம் எடுத்து ஓட்டுவார்கள் அங்கு கும்பலில் உட்கார்ந்து படம் பார்த்தது - இப்படி பல சுவாரஸ்யமான நினைவலைகளைக் கொண்டு நிறுத்தியது 'பீட்டர்ஸ் காலனி' இடிக்கப்படுகிறது என்ற செய்தியை வாசிக்கும்போது. 

எங்கள் வீடு 17/3, பக்கத்து வீடு 17/4-ல் தான் அதிக நேரம் இருப்பேன். அது வாசுகி அக்கா வீடு. அவர்கள் வீட்டில் சில காலம் நான் தேவகியாகி இருந்திருக்கிறேன். வாசுகி அக்காவின் அம்மாவையும் அப்பா அவினாசிமணியையும் நானும் அம்மா அப்பாவென்றே அழைப்பேன். அதனால்தான் இயக்குநர் பாண்டிய ராஜன் எனக்கு மாமா முறையாகினார்.

17/2 ஞாநி அங்கிள் வீடு. என் தம்பியும் மனோஷும் டிகிரி தோஸ்த். இருவரையும் ஒரு 'சீரியலில்' நடிக்க வைக்க அரும்பாடுபட்டு தோற்றார்கள் ஞாநி அங்கிள். ஏதேனும் பேச்சுப் போட்டியென்றால் அவரிடம் எழுதிக் கேட்டு போய் நிற்பேன். அவர், உனக்குத் தெரிந்ததை எழுதிவிட்டு வா அதை திருத்தித் தருகிறேன் என்பார். சில பேச்சுப் போட்டிக்கு மேல் வீட்டு மணிமொழியும், மூன்றாம் மாடி வக்கீல் அப்துல்லாஹ் அங்கிளும் உதவியுள்ளனர். 

ஓவியப் போட்டியென்றால் ஓவியர் ஜெகதீஷ் ஐயாவை அணுகி அவரிடம் என் கற்பனைகளைப் பகிர்ந்து கொண்டிருப்பேன். பச்சைக் கலரில் கையெழுத்து வாங்க சில பேராசிரியர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் வீட்டிற்கும் செல்வேன் - அவர்களுடைய பெயர்கள் நினைவில் இல்லை. கவிஞர் மு. மேத்தா அவர்களையும் இப்படித்தான் அடிக்கடி தொந்தரவு செய்வேன்.

17/1 'தினகரன்' முத்துபாண்டியன் அங்கிளின் மகள் ஷீலா அக்காதான் எனக்கு கார்ட்ஸ் விளையாட சொல்லிக் கொடுத்தார்கள். 17/4 வித்யா/ நித்யா வீட்டிற்குச் சென்று மாமியிடம் உறை மோர் வாங்கி வருவேன். 17/18 என் தோழி சத்யாவுடன் இன்றும் தொடர்பில் இருக்கிறேன். 17/12 வெண்ணிலா அக்காவுடனும் முகநூல் மூலம் தொடர்பு கிடைத்தது. இப்படி காலனி உறவுகளே நிறைய. அங்கிருந்த வரை ஜாதி -மத பேதமோ, இன பேதமோ அனுபவித்ததே இல்லை. 

'பீட்டர்ஸ் காலனி ரவுடி' என்று பெயரெடுக்கும் அளவிற்கு எல்லா பிளாக்கிலும் எல்லாரையும் தெரிந்து வைத்திருப்பேன், பழகுவேன்.

நாங்கள் அந்தக் குடியிருப்பிலிருந்து வந்த பிறகு பின் வாசல் பக்கம் இருக்கும் விளையாட்டு திடலே மறைந்து காடாக, புதராக மாறி இருந்ததையே என்னால் சகிக்க முடியவில்லை. தூங்குமூஞ்சி மரத்தில் வளரும் பண்ணி வாகை மலரைக் காண முடியாமல் அவ்வளவு தவித்திருக்கிறேன். இப்போது அந்த இடமே இல்லாமல் போக போகிறது.

நேற்று என் தம்பி கேட்டுக் கொண்டதன் பேரில் அவன் நண்பர் எங்கள் பிளாக்கை, எங்கள் வீட்டைப் படம் எடுத்து அனுப்பி இருந்தார். 

போன முறை சென்னை சென்றிருந்தபோதும் 'சத்தியம் தியேட்டர்' சென்ற போது எங்கள் வீட்டருகே சென்று பக்கத்தில் நின்று கண்சிமிட்டிவிட்டே வந்தோம். இனி அந்த கொடுப்பினையுமில்லை.

கடைசியாக ஒருமுறை அங்கு சென்று உட்கார்ந்துவிட்டு வரவேண்டுமென்ற எண்ணம் எனக்குள் இருந்தாலும், அதற்காக யாரும் காத்திருக்கப் போவதில்லை என்பதே நிதர்சனம். மரங்கள் மடிந்தாலும் இடம் அழிந்தாலும் குழந்தைகளாக கதைப் பேசி கொஞ்சி மகிழ்ந்த எங்கள் சிரிப்பொலியும் அதன் நினைவுகளும் எங்களுள் என்றும் தங்கி இருக்கும்.




Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி