Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, October 11, 2022

நவராத்திரி


 கீரைவிற்கும்

கண்ணமாவின் தலையில்


கொலு பொம்மைகள்

நவராத்தி நாட்களென்று

பொம்மைகள் விற்பதை

வியாபாரமாக்கியிருந்தாள்

சாமிகளை தலையில்

சுமந்தவளாக சப்தத்துடன்
கூவி விற்றாள்
சிவன் இருக்கிறான் என்றாள்
கண்ணன் ராதை உண்டா
என்றனர்
விநாயகரை நம்பிக்கையோடு
வாங்குவார்கள் என்று எதிர்பார்த்தால்
தும்பிக்கை சரியில்லையாம்
சிரித்த முகத்துடன் சாமிகள்
இவள் சிரிப்பிற்கு
விலைப் போகவில்லை
விற்காத சாமிகளும்
இவள் வேதனையை
நோக்கவில்லை
’சாமி சாமி’ என்று
பொம்மைகளை விற்றாள்
ஆசாமிகள் யாரும் வாங்கவுமில்லை
இத்தனை சாமிகள்
இருந்தும்
அவள் குழந்தையின்
பசியை யாருமே
போக்கவில்லை.
-ஜெஸிலா பானு

Saturday, September 11, 2021

கவிஜ கவிஜ...

 

நாட்கள் நீளவில்லை

தூரம் ஏதுமில்லை

விழியில் வேர்வையில்லை

நினைவுகள் அழியவில்லை

துயர் கசக்கவில்லை

காத்திருப்பும் சுகமானதே.

30.8.2021
இரவு 10.21
ஜெஸிலா


உன்னைப் பார்க்காமல்
சென்றேன் என்று நினைத்துவிட்டாய்
நீ நினைக்க வேண்டுமென்றே
நான் பார்க்காமல் சென்றேன்
பார்க்காமல் சென்றுவிட்டதால்
நான் உன்னை நினைக்கவே இல்லை என்கிறாய்
மறக்கவே இல்லாத போது
நினைக்கவேயில்லை என்பதும் உண்மைதான்
நினைத்து விட்டால் மட்டும்
என்னைப் பார்க்க வருவாயா என்ன!?

30.8.2021
இரவு 00:03
ஜெஸிலா


கடந்த காலத்தின்
ஒரு நொடியை மட்டும்
மாற்ற வாய்ப்பு தந்தார்
கடவுள்
மறக்க இயலா
அந்த நொடியை
மட்டும்
மாற்ற கேட்டேன்
மறக்க இயலா
நொடியெனும்போது
ஏன் மாற்ற வேண்டுமென்று
ஏமாற்றி சென்றார்
கடவுள்!
30.8.2021
இரவு 00:00
ஜெஸிலா



ஏன்
நான் எழுதினால் மட்டும்
யாருக்கானது என்று
என்னோடு இணைத்தே கேட்கிறீர்கள்?
பார்த்த படத்தின்
பாதிப்பாக இருக்கலாம்
கேட்ட கதையின்
கருவாக இருக்கலாம்
வாசித்த கவிதையின்
வலியாக இருக்கலாம்
இப்படி எத்தனையோ
இருக்கலாம் இருக்க
என்னை மட்டும்
ஏன் இருக்கவிடுவதில்லை!?
31.8.2021
இரவு 11:09
ஜெஸிலா

Tuesday, August 31, 2021

யாருக்கோ!


யாருக்காகவாவது
யாரோ
எங்கோ
எதையாவது
எழுதிக் கொண்டே இருக்கின்றனர்
எழுதியவற்றை வாசித்து
பாராட்டுக்கள் குவிகின்றன
தனக்கானது என்று
பலரும் கொண்டாடுகின்றனர்
எனக்கு எழுதியதென்று
இல்லாதவர்கள் நினைக்கின்றனர்
தனக்கு வந்ததாகத் தொடரச் சொல்கின்றனர்
வாசிக்க வேண்டியவர்களுக்கு மட்டும்
அது சென்று சேர்வதேயில்லை
30.8.2021
இரவு 10.00
ஜெஸிலா

Sunday, July 05, 2020

முரண்பாடு


தூய்மையான காற்று

நாம் முகமூடியில்.

வெறுமையான சாலைகள்

நாம் வீட்டுக்குள்.

சுத்தமான கைகள்

தீண்டாமை அமலில்.

செல்வந்தர்களுக்கு

செலவிட வழி இல்லை.

இல்லாதவர்களுக்கு

சம்பாதிக்க வழி இல்லை.

நேசத்திற்குரியவர் நோயில்

நேரில் நலம் அறியவில்லை.

அன்புக்குரியவர் இறப்பு

அருகில் அழவில்லை.

நேரான எண்ணங்கள்

எதிர்பார்ப்பில் எதிர்மறை.

விசித்திர உலகம்

விந்தை மனிதர்கள்.


-ஜெஸிலா

04 ஜூலை 2020

Wednesday, March 08, 2017

பெண்கள் தினம்

பூக்கள் தப்பித்துச் சென்றுவிடுமென்று
வேலி கட்டுவதில்லை
மதில் சுவர்கள் வீட்டிலுள்ளவர்கள்
தாண்டிச் செல்வதை முறியடிக்க எழுப்புவதில்லை
எம் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு
வரையறை வகுப்பது அவர் தம் மீதான
நம்பிக்கையின்மையல்ல
கேள்விப்படும் சமூக சங்கடங்கள்
வீட்டில் நுழையாமல் இருக்கவே கட்டுப்பாடுகள்

என் போன்ற தாய்மார்கள்
பெண் பிள்ளைகளை வளர்க்கும்
பீதியிலிருந்து விடு்படும்
பாதுகாப்பான நாளே
பெண்கள் தினம்

Thursday, May 27, 2010

நினைவுகளில் நீ


நீ இல்லாத வெறுமையை

நூலாக்கி

கோர்த்துக் கொண்டேன்

என்னுள்

தைக்க முடிகிறது

நம் நினைவுகளாலான

வண்ணம் மிகுந்த

கனவுகளை

Tuesday, May 25, 2010

மறைவின் நிஜங்கள்


ஆசையோடு
நீ வாங்கி வந்த
பென்ஸ் கார்
கொளுத்தும் வெயிலில்
காத்திருக்கிறது
நீ வந்தமர்ந்து
குளிர வைப்பாயென.
அதனிடம் நான்
சொல்லவில்லை
நீ விமான விபத்தில் மறைந்து
என் எண்ணங்களை
வியாபித்திருக்கிறாயென
நீ இல்லாமலிருப்பது
தெரிந்தால்
சுட்டெரிக்கும் வெப்பத்தை
சாதகமாக்கிக் கொண்டு
அது பொசுங்கிவிட்டாலும்
ஆச்சர்யப்படுவதற்கில்லை

Monday, August 31, 2009

குறையேதுமில்லை


புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பேன்
புகையாத அடுப்பை புகைவதாக சொல்லி
வீசியெறிவாய் புத்தகத்தோடு சேர்த்து என்னையும்

மடிக்கணினியை உலவிக் கொண்டிருப்பேன்
மவுனத்தில் உன் வெறுப்பை சொல்லி
மடக்கி வைப்பதோடு அடக்கி வைப்பாய் மகிழ்வையும்

அமைதியான படங்களை பார்த்துக் கொண்டிருப்பேன்
அடிதடி இல்லாத அழுமூஞ்சிப்படமென்று
அணைத்தே விடுகிறாய் ஆசைகளையும்

உனக்கு வேண்டியதை மட்டும் உரியவனென்று
உலுக்கி பெறுகின்றாய்
உகந்ததை தரவே செய்கின்றேன்
உள்ளம் ஒன்றாமல்

எனக்குப் பிடித்ததெல்லாம் உனக்கும்
உனக்குப் பிடிப்பதெல்லாம் எனக்கும்
பிடிக்காமல் போனாலும்

சொல்லத்தான் செய்கிறோம்
ஒன்றாய் வாழ்கிறோமென்று

Monday, August 24, 2009

எல்லாம் யாருக்காக?


என் வயதொத்த
பிள்ளைகள்
கனவின் நடுவிலிருக்க
நான் நித்திரை விட்டு
குளிர் நடுக்கத்தில்
முக்காடில் நுழைந்து
மதரஸா விரைந்தேன்
புரியாத அரபி கற்க
அம்மம்மா மெச்சுதலுக்காக.

அழைப்பு விடுத்தவுடன்
கண்ணாமூச்சியில்
கண்கட்டவும் மறந்து
புரியாமல் மனனம் செய்த
பாடங்களை ஒப்பித்தபடி
தொழுதேன்
அன்புடன் அணைத்துக் கொள்ளும்
அப்பாவுக்காக

விதவிதமான ஆடையில்
தோழிகள்
பள்ளி விழாவிற்கு
பவனி வர
வெதும்பிய மனதை
ஹிஜாபில் ஒளித்தேன்
பெருமையுடன் முகர்ந்து முத்தமிடும்
அம்மாவுக்காக

விவரம் தெரியாத வயது ஓய்ந்து
பொருள் புரியாத மொழி
புலப்பட்டதும்
அறிந்து கொண்டேன்
ஓதலும், தொழுகையும், ஹிஜாபும்
நிலையில்லா உறவுக்காக அல்ல
ஒழுக்கத்தை விரும்பும்
இறைவா எல்லாம்
உனக்காகவென்று.

Wednesday, September 05, 2007

ஆசிரியர் தின வாழ்த்து



தமிழ் எழுத்தை
கற்றுத் தந்த நீங்கள்
இன்று எங்கு இருக்கிறீர்கள்?
தினமும் ஒரு திருக்குறளென
இரு வரியை மனனம் செய்து
உரையை விவரித்த நீங்கள்
இன்று எங்கே இருக்கிறீர்கள்?
விதையை விதைத்துவிட்டு
விருட்சத்தின் வளர்ச்சியை
காணாமல்
எங்கு சென்றுவிட்டீர்கள்?

எங்களின்
முதல் சொல்
முதல் வாக்கியம்
முதல் சிந்தனை
முதல் கற்பனை
முதல் உளறல்
முதல் கவிதை
முதல் சந்தேகம்
என்று எல்லாமே
முதலில் பிறந்தது உங்களிடம்தானே?

முயற்சி, தன்னம்பிக்கை
போராட்டம், கடமை,
ஒழுக்கம், திறமை
என்று இல்லாதவற்றையும்
தோண்டி ஊற்றை
எங்களுக்குள் எடுத்த நீங்கள்
எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக
இருந்த நீங்கள்
இன்று எங்கு சென்றுவிட்டீர்கள்?

உங்களுக்காக எழுதுகிறேன்
என்றதும் சின்னபிள்ளையாகவே
மாறிவிட்டேன்.
இந்த எளியவளை
ஏணியாக நின்று உயர்த்திவிட்டு
நீங்கள் மட்டும் அதே இடத்தில்
இருப்பதுதான்
ஆசிரிய தர்மமா?

எங்கிருந்தாலும் என்
ஆசிரியர் தின வாழ்த்தை
பெற்றுக் கொள்ளுங்கள்

உன் நினைவுகளோடு....



மெளனம் பேச்சாகும்
தனிமையில்
தூக்கம் எழுப்பும்
இரவுகளில்
வேட்கை நிரம்பிய
வெறுமையில்
கதகதப்பாய் அரவணைப்பது
உன் நினைவுகள்
மட்டும்தான்

Tuesday, June 19, 2007

சக பயணிகள்


எப்பா இதெல்லாம் கவிதையான்னு கேட்டுடாதீங்க. மேடைக்கு வாசிக்கப்படும் கவிதைகள் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமென்பதற்காக உரைநடையாக எழுதப்பட்டது. பகிர்ந்துக் கொள்ள பதிக்கிறேன். [** கவியரங்கில் பாடிய கவிதைக்காக ஜெஸிலாவுக்கு 10,000 ரூபாய் பணமுடிப்பும், மேத்தா விருதும் வழங்கப்படும் என சென்னை குளத்தூரில் பெண்கள் கல்லூரி நடத்தும் சேது குமணன் அறிவித்தார். 'விருதிற்காக மகிழ்வதாகவும் பணத்தை கவிஞர்கள் பேரவைக்கே அன்பளிப்பாக வழங்குவதாகவும்' மேடையில் ஜெஸிலா அறிவித்தார். - அப்படின்னு ஆசிப் வலைப்பதிவில் படித்திருப்பீர்கள்] இதுதான் அந்த பரிசுப் பெற்ற கவிதை.
------------------------
விரகம் எழுப்பிய இரவுகளில்
மூடிய அறையின்
மெட்டியொலியும்
சக தோழியின் கடைசி மழலையின்
அழும் குரலும்
மறுநாள் வரை மண்டைக்குள் குடைந்து
உள்ளங்கை வியர்வைக்குள்
எண்ணங்களை அசைப் போட்டு
பயணச்சீட்டை கசக்கும்
நம்பிக்கையற்ற முப்பது

தாய்மைப் பெற தவமிருந்து
வரம் கிடைக்காமல் போனதற்கு
காரணம் இவள் இல்லை
என்று சான்று தந்தும்
இவள் இளமையையெல்லாம்
அள்ளித் தின்ற பிறகு
இவளை ஒதுக்கி வைத்து
அவன் புது மாப்பிள்ளையாகிப் போனான்
புது பொண்டாட்டியும்
'மலடி'யென இவளைப் போலவே
பெயரெடுப்பாளென
ஏளனச் சிரிப்பில் வேடிக்கை பார்த்தாலும்
பயண மிகுதியில் விட்டுச் சென்ற
ஒற்றைச் செருப்பாய் தன்னை உணரும்
ஓடாய் தேய்ந்தவள்

ஓடிப் போன கணவன் தந்த
ஒற்றைப் பிள்ளையை வீதியில் விட்டு
தனக்கென வாழ்வதற்காக
புது தாம்பத்தியத்தில் காலூன்றாமல்
பிள்ளை வளர்ப்பில்
அகம் மகிழ்ந்து
அவனுக்காக
தொண்டைக்குழியில் ஈரம் வற்ற
காய்கறிகளைக் கூவி விற்று
பிள்ளையின் எதிர்காலத்திற்காக
தமது நிகழ்காலத்தை மறக்கும்
கண்ணியத் தாய்

சீழ் வடியும் புண்ணில்
ஈபோல மொய்க்கும்
பணியிடத்து நிர்வாகிகள்
வறுமையை
உடுத்தும் ஆடையிலும்
எதிர்பார்க்கும்
சபலப் பார்வைகள்
சல்லடையாய் உடம்பை துளைக்கும்
நகைச்சுவை என்ற பெயரில்
கேட்கவே கூசும் சொற்களையும்
செவிமடுத்து வெளிவந்தால்.
பேருந்திலும்
கூடையிலிருந்து விழும் தக்காளி போல
மேலே விழுந்து உரசும்
பயண மன்மதன்களின்
நசுக்கல்கள்
வேறு வழியில்லாமல்
வலியோடு
இவற்றை
தாங்கிக் கொள்ளும்
பொறுமைசாலி-

கொட்டிக் கொடுத்து
கரை சேர்த்து
வாழும் முன்னே
வண்ணமிழந்து
மூளியாக முடக்கி விட்டு
'கைம்பெண்' என்றெழுதி
பொட்டு வைத்துக் கொண்டு
துருப்பிடித்த பிடிமானமும் தராமல்
அமங்கலியென ஒதுக்கி வைக்கப்படும்
சமூகக் கட்டுக்குள் அடைபட்டவள்-

ஒரே இடத்தில் நின்று
சிறகடித்துச் சுழலும்
மின்விசிறியைப் போல
கருவுற்ற களிப்பையும்
மனதில் அடக்கி
பக்குவமாக இருந்து
மாதங்கள் பல சுமந்து
பெற்றெடுத்தாள்
கண்ணிலும் காட்டாமல்
கள்ளிப் பாலுக்கு
கருகத் தந்த பெண்சிசுவை
கண்ணுக்குள்ளே வைத்து
கன்னங்களைக் கண்ணீரால்
தினம் கழுவி
மனதை கல்லாக்கி
கணவன் வீடு திரும்பும்
கதியற்ற மருமகள்

வீட்டு வேலை செய்வதற்கும்
படுக்கையில் வேசியாய் இருப்பதற்கும்
வரதட்சணையில் வெந்து வதங்குபவளை
பேருந்திலும் தன் முன்
உட்கார அனுமதிக்காமல்
மருமகளின் கால் கடுப்பில் இன்புறும்
முன்னால் மருமகளான
இந்நாள் மாமியார்

பெண்ணியவாதம்
பெண் விடுதலை
இந்த வார்த்தைகளையெல்லாம்
விசித்திரமாகப் பார்த்து
தங்கள் முகத்திரைகளை எடுக்கவும்
பழகிய வட்டத்திலிருந்து வெளிவரவும்
தயங்கும்
பல்முகம் கொண்ட
இதுபோன்ற பெண்கள்தான்
பெரும்பாலும்
பேருந்தில் மட்டுமின்றி
சமூகத்திலும்
என் சக பயணிகள்!

Friday, April 06, 2007

கிறுக்கல்கள்

கவிப் பகைவர்களுக்காக அடக்கி வைத்திருந்தாலும் எனக்குள் இருக்கும் ஆர்வம் அவ்வப்போது துளிர்விடத்தான் செய்கிறது. வெளிவரும் அத்தனையும் குறும்பாக்கள், துளிப்பாக்கள், கவிதைகள் என்று பெயரிட முடியாததால் கிறுக்கலாக...

மர நிழலில் ஒதுங்கினேன்
மர அசைவில்
நேற்று சேகரித்ததிலிருந்து
எனக்கு மட்டும் மழை
***

வானத்தின் ஜன்னலில்
எட்டிப்பார்க்கும் சூரியன்
நட்சத்திரம்
***

செத்தும்
முகத்தில் எச்சில்
சிலை
***

எதிர்பாராமல்
எதிர்கொண்டு முடிந்தது
கூச்சம்
***

ஒட்டக நிழலில்
தொழுகை
பாலைவனம்
***

வெளிநாட்டு வேலை
தள்ளிப்போடப்பட்டது
தாம்பத்யம்
***

நாட்டின் மானம்
பந்தயத்தில் அடமானம்
கிரிக்கெட்
***

நாய்களுடன் போட்டி
எச்சில் இலைக்கு
மனிதன்
***

என்னையே தொடர்ந்தாலும்
நெருங்கி வர முடியாத
நிழல்
***

வீசிவிட்டு
அழுதது குழந்தை

சாமி ஊர்வலத்தில்
திடீர் ஜாதி கலவரம்
பலர் காயம்
சிலர் மரணம்

வீசப்பட்ட
அப்பாவின் ஒற்றைச்செருப்பு
ஒன்றுமறியாமல் வீதியில்.

***

Tuesday, December 19, 2006

வலி

செப்டம்பர் 2006 மாத 'திசைகளில்' வெளிவந்த என் கவிதை:

அடித்தே இன்புறுகிறாய்
நல்ல விஷயமோ
கெட்ட விஷயமோ
வாழ்க்கையின் ஆரம்பமோ
வாழ்க்கையின் முடிவோ
அடிக்காமல் அடங்காதா
விசேஷம்?
இருக்கும் போதுதானென்றால்
இறந்த பிறகுமா?

Sunday, December 17, 2006

நட்பு

தேர்வில் எட்டிப் பார்த்து
எழுதும் போதும்

ஆபாச படத்தை
பார்க்க கூடாத வயதில்
பார்க்கத் துணிந்த போதும்

கல்லூரி மறந்து
ஊர் சுற்றும் போதும்

சுருட்டு, மது, மாது
என்ற போதும்

காதலியுடன்
ஓடிப் போக நினைக்கையிலும்

தடுத்து நிறுத்தி
எடுத்துரைக்காமலிருக்க
முடியவில்லை என்னால்

உளியாகத்தான் எனை
நினைத்திருந்தேன்
உடைப்பேன் நட்பையென்று
அறியாமல்

Sunday, October 15, 2006

சுதந்திர தினம்

வலைப்பூ பக்கம் வந்து நாளாச்சே அதான் எட்டிப்பார்த்துட்டுப் போலாம்ன்னு வந்தேன். எட்டிப்பார்த்துட்டு பதிவுப் போடாம சும்மா போனா எப்பட,ி அதான் ஏற்கெனவே 'திசைகள்' மின்னிதழில் வந்த கவிதையை இடுகிறேன்.


மாதம் முழுவதும்
சிறை பிடித்து
சாகும் நிலையில்
ஆலிவ் இலை தந்து
திறந்து விட்டு
பறக்க செய்து
கைத்தட்டி
இனிப்பு வழங்கி
கொண்டாடினர்
சுதந்திர தினம்

Monday, August 07, 2006

உறவில்லாத உறவு

பிறந்தவுடன்
பெற்ற உறவில்லை
பின்னாளில்
உற்ற உறவும் இல்லை

உன் சந்திப்பே
என் சந்தோஷமானது
மலிவாக மகிழ்ச்சி என்றால்
அதன் மறுபெயர் நீ என்பேன்
என் பிரச்சனைகளுக்கு
யோசனை கிடங்கானாய்
பாதிப்பில் பாசி படிந்தால்
பூசி தேற்றுபவன் நீ தானே
என் அறிவு வறுமையிலும்
ஆதரவாய் நீ நின்றாய்

நீயே என்
இன்பத்தின் ஆரம்பம்
தவிப்பின் துணை
தனிமையின் தீர்வு
துன்பத்தின் தேடல்

என் உளறல்களையும்
காது கொடுத்து கேட்டாய்
பதிலாக கனிவாய் மொழி பேசினாய்
கருணை பார்வை வீசினாய்
தேவைக்கு தோள் கொடுத்தாய்

என் ஐம்புலனையும் ஆட்சி செய்யும்
புதிய பிரதிநிதியே
நீ என்
சாதியோ, மதமோ, மொழியோ, ஊரோ,
காதலோ, உடன்பிறப்போ, இரத்த பந்தமோ
இல்லாதபோது
உணர்வால் உணர்த்திய
உறவில்லாத உறவாக
எங்ஙனம் முளைத்தாய்?

Monday, July 31, 2006

நெஞ்சு பொறுக்குதில்லையே...



போடும் பருக்கைகளை
பகிர்ந்து உண்டு பழகிவிட்டது
பறவை இனம்

நாய் பூனையும் கூட
சேர்ந்து உண்ண
கற்றுக் கொண்டது

மனிதர்களாகிய நாம்தாம்
தவித்தாலும் தாகத்தை
தொலைக்க தவிர்க்கிறோம்
நதிநீரை

Wednesday, July 26, 2006

லேசா லேசா...

பூக்களின்
வேர்வை
பனித்துளிகள்
**

அலை அடித்து
கலைந்த கற்பனை
மணல் வீடு
**

விலைப்போகாத
வேதனைக்குரிய விளைச்சல்
முதிர்க்கன்னி
**

காக்கை பயந்ததோ இல்லையோ
குழந்தையின் வயிறு நிறைந்தது
சோலைக்காட்டு பொம்மை
**

என் பெயர்
கரைந்தது
அவள் நாக்கில்
**

இந்த அனாதையுடன்
விளையாட வந்துவிடு
தாயில்லா பறவையே!
**

குஞ்சு பறவையே
பறந்து போய்விடு
பூனை வரும் நேரம்
**

உயரத்திலிருந்து விழும்
உனக்கு வலிக்கவில்லையோ
அருவி
**

Tuesday, July 18, 2006

ஆதங்கம்!

புது வண்டியில்
முதல் விபத்து
எலுமிச்சை
**

பால் அபிஷேகம்
பட்டினியில் அழுதது
பச்சிளங்குழந்தை
**

உடையாமல் இருக்க
உடைத்தார்கள்
பூசனிக்காய்
**

நீ தூங்கினாலும்
சிணுங்கி எழுப்பியது
கொலுசு
**

மழையில் நனையாத
பூ
முழுநிலா
**

மழையில் நனையாமல் இருக்க
நான் நனைந்தேன்
குடை
**

உபசரித்து விரித்தது
முடிந்த பின்
எச்சில் இலை
**

காலி பணப்பை
வெதும்பும் திருடன்
கடன் அட்டை
**

உச்சரிப்பு சிதைவு
இந்திப் பாடகர்
பிரபலமானது தமிழ்பாட்டு
**

நூறுநாள் ஓட்டம்
தமிழ்படம்
ஆங்கிலத்தில் தலைப்பு
**
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி