Tuesday, January 31, 2023

டார்லிங்ஸ் - பல பெண்களின் கதை

 அன்பு செலுத்தும் ஒருவரை எப்படித் தகாத வார்த்தையில் பேச முடியும், அடித்துத் துன்புறத்த முடியும்? காயப்படுத்துபவர்களுக்குத் தெரிவதுமில்லை வெளிக் காயத்தை விட உள்காயமாக மன கசப்பும் வெறுப்பும் அதிகரிக்கும் என்று. செய்வதெல்லாம் செய்துவிட்டு மறுநாள் கொஞ்சி கெஞ்சி சமாதனப்படுத்த நினைக்கும் ஆணுடன் எப்படிதான் சகித்துக் கொண்டு ஒரு பெண் வாழ முடிகிறது? அவள் அந்த வாழ்விலிருந்து வெளியில் வர நினைத்துவிட்டால் ஏற்படும் விளைவுகளை இருண்ட நகைச்சுவையாக (டார்க் காமெடி) சொல்லப்பட்டு நம்மைச் சிரிக்க வைக்கிறதுடார்லிங்ஸ்திரைப்படம்.


தொடக்கக் காட்சிகளில் ஆலியாபட்டாக வரும் பத்ருநிசா மீது நமக்கு அவ்வளவு கோபம் வருகிறது. தினமும் குடித்துவிட்டுக் காரணமில்லாமல் அல்லது ஏதோவொரு காரணத்தைச் சொல்லி அடிக்கும் கணவருக்கு மறுநாள் சமைத்து போட்டு அலுவலகத்திற்கு வழி அனுப்பும் ஒரு கதாபாத்திரம்.

மகள் தங்கியிருக்கும் அதே குடியிருப்பில் இருக்கும் பத்ருநிசாவின் தாயார் ஷம்சுநிசா (ஷெஃபாலி ஷெரிஃப்) மகள்படும் கொடுமைகளைத் தாங்க இயலாமல், கொடுமையான திருமண வாழ்விலிருந்து துன்புறுத்தும் கணவரை விட்டு வந்துவிடும்படி மகளிடம் கேட்கிறார். ஆனால் பத்ரு தன் கணவனின் 'காதலில்' அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாகவும், கணவரை அவளால் சரி செய்ய முடியும் என்று தான் நம்புவதாகவும் சொல்லிக் கொண்டு தினமும் அடிவாங்குகிறாள்.


நிறையப் பெண்கள் கொடுமையான திருமண வாழ்வில் சிக்கிக் கொள்வதற்குக் காரணம் குழந்தைகள். அந்தக் குழந்தைக்காகச் சகித்துக் கொண்டு இருந்துவிடலாமென்று பிடிக்காத திருமண வாழ்விலும் தொடர்கிறாள். இன்னும் சில பெண்கள், கணவன் தன்னை குழந்தை இல்லாததால் துன்புறுத்துகிறான், பொறுப்பாக நடந்து கொள்வதில்லை. குழந்தையென்று வந்துவிட்டால் சரியாகிவிடுவான் என்று நம்புகிறார்கள். ஆனால் பத்ரு போன்றவர்கள் பிரிந்துவிட்டாலும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பிற்காவது குழந்தை வேண்டும் அதுவும் அந்தக் கொடுமைகார கணவரின் குழந்தை வேண்டுமென்று வேண்டி ஒட்டிக் கொண்டிருப்பதில் கண் மூடித்தனமான அவளது காதலே காரணமாகிவிடுகிறது. இதில் பெரிய ஆறுதலே பாதிக்கப்பட்ட பெண் வெளிப்படையாகத் தன் தாயாரிடம் எல்லாமும் பேச முடிகிறது. சமூகத்தில் அப்படியான சூழலும் பெரும்பாலான இடத்தில் இல்லை என்பதும் அவலம்.

பிரதான பாத்திரமென்று பார்த்தால் 4-5 பேர்தான். சின்னப் பட்ஜெட்டில் அவ்வளவு சிறப்பான கதையை நகைச்சுவையாகச் சொல்ல முடிந்திருக்கிறது பெண் இயக்குநர் ஜஸ்மீட் கே. ரீனால். இந்த இளம் இயக்குநருக்கு இது முதல் படம் என்று நம்ப முடியாத அளவுக்கு மிகவும் கனமான கதைக்கருவை நேர்த்தியாகக் கையாண்டுள்ளார். ஆனால் அது நகைச்சுவையாக நம்மை வந்து அடையவில்லை. உறவுகளில் சிக்கியிருக்கும் பெண்களின் பலவீனத்தை எளிமையாகச் சொல்ல முயற்சி செய்திருப்பதாகத் தெரிகிறது. ஆண்களைத் திருத்துவதற்காகத் திருமணக் கட்டமைப்பு இல்லையே, கெட்டவன் தரங்கெட்டவனாகவே இருந்துவிட்டு போகட்டுமே, அவள் நல்லவளாக ஒதுங்கி வாழ்துவிடலாமே என்பதையும் இப்படத்தின் மூலம் சொல்லியிருப்பதாக நான் உணர்கிறேன்.

ஆலியாபட்டைவிட ஹெஃபாலி மிகச் சிறப்பாக நடித்துள்ளார். கொடூர கணவன் ஹம்ஸாவாக வரும் விஜய் வர்மா மீது ஏற்படும் கோபத்திலிருந்தே வெளிபடுகிறது அவருடைய அபார நடிப்பு. ஸுல்ஃபீயாக வரும் ரோஷன் மாத்யூவின் பாத்திர படைப்பும் சிறப்பு. மலையாளத்தில் பார்த்த ரோஷன் இங்கு நன்றாகவே பொருந்தி நடித்திருக்கிறார்.

இறுதி முடிவு நமக்குத் தெரிந்ததாக இருந்தாலும் பெரிய ஆசுவாசத்தை அளிக்கிறது. பலடார்லிங்ஸின்கதை இது ஆனால் எல்லா முடிவுகளும் இப்படி அமைவதில்லை.

Monday, January 30, 2023

ஃபர்ஹா - உண்மைச் சம்பவம்


 ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’, ’தி டைரி ஆப் ஆன் ஃபிராங்க்’ இந்தப் படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பார்க்கும் போது ஹி__ட்-ல*ர் மீதும் நா-ஸி மீதும் நமக்கு அவ்வளவு வெறுப்புணர்வு எழும். மூன்றில் ஒருவராவது இப்படத்தைப் பார்த்திருக்கக் கூடும். ஆனால் ‘ஃபர்ஹா’ என்ற படத்தைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?  


‘ஃபர்ஹா’ ஒரு ஜோர்டானியத் திரைப்படம். உலகச் சரித்திரத்தில் நடந்த மாபெரும் நில அபகரிப்பான இஸ்ரேலின் உருவாக்கமும், அதன் பின்னர் 1948-இல் நக்பாவின் போது பாலஸ்தீனத்தின் இனப் பேரழிவைச் சித்தரிக்கும் படம். டெரின் ஜே சலாம் என்ற பெண் இயக்குநர் இயக்கிய படம். நிறையத் திரைப்பட விருதுகளைப் பெற்ற படம்.


பல நூறு பாலஸ்தீன கிராமங்களும், சில நகரங்களும் அதிரடியாக ஆக்கிரமிக்கப்பட்டு பல லட்சம் பேர்களை அகதிகளாக்கி, தம் சொந்த ஊரிலிருந்து வெளியேற மறுத்த பல்லாயிரக் கணக்கானவர்களைக் கொன்று குவித்த இஸ்ரேலிய அரசின் கோர முகத்தைக் காண்பிக்கும் படம் ‘ஃபர்ஹா’. கதையென்று மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுமில்லை, ஏனென்றால் இது உண்மையை மட்டும் உள்நிறுத்திய கனமான திரைப்படம். 


நகரத்திற்குச் சென்று படிக்க வேண்டுமென்ற கனவைக் கொண்டவள் ஃபர்ஹா.  அவளுடைய தந்தை அக்கிராமத்தின் மேயராக இருக்கிறார். அவர்கள் வாழும் பகுதியில் இஸ்ரேலியர்களின் ஆக்கிரமிப்புத் தொடங்குகிறது. கிராமவாசிகள் சிதறி ஓடுகிறார்கள். நகரத்திற்குச் தப்பிச் செல்ல ஏற்பாடு செய்கிறார் அவள் தந்தை. அவள் போக மறுக்கிறாள், தந்தையைப் பிரிய முடியாது என்கிறாள். அடம்பிடிக்கும் ஃபர்ஹாவை உணவு பொருட்களை வைக்கும் சிறிய அறையில் வைத்து பூட்டிவிட்டு கிளம்பிவிடுகிறார் தந்தை. பூட்டிய வீட்டின் ஓட்டையில் ஒளிந்து கொண்டு, வெளியில் அவள் பார்க்கும் பயங்கரத்தை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் டெரின்.


மகிழ்ச்சி, பயம், கவலை, தவிப்பு, அழுகை என்று எல்லா உணர்வுகளையும் தன் உடல்மொழியில் காட்டி சிறப்பாக நடித்துள்ளார் 'ஃபர்ஹா'வாக வரும்  கரிம் தாஹிர்.


நெட்பிளிக்ஸில் இந்தப்படம் வெளிவந்த பிறகுதான் இஸ்ரேலிய கலாச்சார அமைச்சரும் நிதியமைச்சரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நெட்பிளிக்ஸை பலநூறு வாடிக்கையாளர்கள் unsubscribe செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இயக்குநருக்கு அச்சுறுத்தலும் சென்று சேர்ந்துள்ளது. இந்த வருட ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


இந்தப் படம் ஆஸ்காரில் வெற்றி பெறுகிறதோ இல்லையோ உண்மையை உரக்கச் சொல்லியதற்காக ஏற்கெனவே வாகை சூடிக் கொண்டது.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி