Thursday, March 30, 2023

பாலைவன பரமபதம்

 சமீபத்தில் நான் அபுதாபி சென்றிருந்தேன். அங்கு ஒரு பெண்மணி தன்னை அறிமுகம் செய்து கொண்டதோடு அவருடைய வணிக அட்டையைத் தந்தார். அதில் அவர் தையற்கல்வி கூடம் வைத்திருப்பதாக இருந்தது. உடனே இவர்தான் ‘பாலைவன பரமபதத்தில்’ வரும் திவ்யாவோ என்று யோசித்தேன். இது என் பிழையல்ல, கதாசிரியர் சிவசங்கரி வசந்த் எழுதிய புதினமான ‘பாலைவன பரமபதத்தில்’ பெரும்பாலான கதாபாத்திரங்கள் உண்மையானவை. அதனால் ஒருவரை அந்தக் கதாபாத்திரத்தையொத்த வணிகத்தைப் பார்க்கும்போது இவர்தான் அவர் என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. நானெல்லாம் முகத்திற்கு நேராகப் பேசுவதால் பல பிரச்சனைகளைச் சந்தித்திருக்கிறேன். என் இயல்பை எதற்காகவும் யாருக்காகவும் மாற்ற இயலாததால் என்னை நன்றாகத் தெரிந்தவர்கள் மட்டுமே என்னுடன் பயணிக்க முடிகிறது. என்னைவிடச் சிவசங்கரி வசந்த் ஒருபடி மேல் – தான் ஒருவரைப் பற்றி நினைப்பதையெல்லாம் அப்படியே கதையில் கொண்டு வந்திருக்கிறார். இதை வாசிக்கிறவர்கள் தன்னைப் பற்றிதான் எழுதியுள்ளார் என்று அறிந்து தங்களைத் திருத்திக் கொள்வார்களா என்ன?



’பாலைவன பரமபதம்’ இந்தத் தலைப்புக்கு ஏற்றாற்போல்தான் என் வாசிப்பும் இந்த நூல் பற்றிய என் அபிப்ராயமும் இருந்தது. முதலில் வாசிக்கத் தொடங்கும்போது எதையெடுத்தாலும், யாரைப் பற்றிச் சொன்னாலும் புகாராகவோ அங்கலாய்ப்பாகவோ இருந்ததாக உணர்ந்தேன். ’Gossip’ புதினமா என்றும் முதலில் தோன்றியது. அதன் பிறகு மெல்ல மெல்ல கொரோனா பற்றிய விஷயங்கள் உள் வந்த போதே சுவாரஸ்யம் கூடியது. சுவாரஸ்யமென்றால் நூலை கீழேயே வைக்க முடியாத ஆரவமென்றெல்லாமில்லை நிகழ்வுகளின் அடுக்குகளாகச் சம்பவங்களின் கோவையாகச் சிறப்பாக அமைந்துள்ளது இந்தப் புதினம். இந்த நூல் அபுதாபியின் கொரோனா காலத்தை அப்படியே ஆவணப்படுத்தியுள்ளது. அதனால் இது ஒரு முக்கியமான படைப்பு எனலாம். இதில் பெரும்பாலானவர்கள் பெயர் மாற்றப்பட்ட உண்மையான கதாபாத்திரங்கள். இதில் நண்பர்கள் கெளசர் மற்றும் பிர்தெளஸ் பாஷா இருவரின் சுயநலமில்லாத தன்னார்வ தொண்டுகளைப் பற்றிப் பறைசாற்றியிருப்பது மகிழ்ச்சியளித்தது. அவர்களின் பெயர் மாற்றாமல் அப்படியே தந்திருப்பது இன்னும் சிறப்பு. இந்த ஒமான் பெண்மணி விஷயத்தைப் பற்றி நான் தான் முதலில் பிர்தெளஸ் பாஷாவிடம் சொன்னேன், எண் தந்தேன். அத்தோடு என் வேலை முடிந்தது. மிகவும் கஷ்டப்பட்டுக் காய்கள் நகர்த்திச் சாதித்ததெல்லாம் அவர்தான். எவ்வளவு சிரத்தையாக அதனைக் கையாண்டார் என்று முழுவதும் அறிந்து இருந்ததால் அதனைக் கதையாக வாசிக்கும்போது அவ்வளவு சுவையாக இருந்தது.
சிவசங்கரி வசந்த்தின் முதல் நூல் என்று சொல்ல முடியாத வகையில் மிகவும் சரளமாகத் தோய்வில்லாமல் சம்பவங்களைக் கொண்டு சென்றிருக்கிறார். முதல் நூலே ஒரு புதினம் என்பதனால் அதில் அவருடைய தன்னம்பிக்கை தெரிந்தாலும், அதனை எங்கள் குழுமத்தில் சொல்ல தயங்கியது முரணாகத் தோன்றியது. அதைப் பற்றியும் அவரிடமே கேட்டுப் பஞ்சாயத்தை முடித்துக் கொண்டேன் என்பது வேறு விஷயம். இவர் இவ்வளவு நன்றாகத் தன் முதல் நூலை கொண்டு வந்திருப்பதற்குக் காரணம் ’புக்பெட்டில்’ அவர் எடுத்துக் கொண்ட எழுத்துப் பயிற்சி எனலாம். எனக்குத் தெரிந்தவர்கள், அவர்கள் எப்படி எழுதி கொண்டிருந்தவர்கள் என்பதை அறிவேன் என்பதால், அவர்களின் எழுத்தில் திடீரென்று தெரிந்த முதிர்ச்சியும், மாற்றமும், ஒருவித ஈர்ப்பும், இதெல்லாம் அவர்களுக்குக் கிடைத்த பயிற்சியினால் மட்டுமல்ல, அதனைச் சிவசங்கரி போன்றவர்களின் சுய முயற்சியினாலும், அதனை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதாலும் ஏற்பட்ட விளைவென்றால் மிகையில்லை.
இன்னும் பல நல்ல படைப்புகளோடு வர
வாழ்த்துகள்
Sivasankari Vasanth.

Wednesday, March 29, 2023

பத்திரிகையில்...

எல்லா புகழும் இறைவனுக்கே

 https://www.facebook.com/photo/?fbid=10158746805342364&set=a.412780932363&__cft__[0]=AZX9jKKg5KqwNP9aNGuEZGYtprm8drx0epy2n_78N3EsrOCSRYuO4p91Vtaasbmd9SYJECzW3Ih-Bmec6bmpZwcLiF4h5sX9ZHiP2r5lqmFu8uOU36TgjeP0ZWEAcn2BYwbm6jcLrEvboYMy2M9Bkk-DN3eqCLvc52QpNg7nGf_Kvy_PcuqEGXGmAELrzOttbT8&__tn__=EH-R


ஜெஸிலா இணை இயக்குநராக

 அமீரகக் குறும்படப் போட்டியில் ‘பேரு வெக்கல’ நகைச்சுவைப்படத்திற்காக இணை இயக்குநராகப் புதுப் பரிணாமம் எடுத்து அதில் வெற்றியும் கண்டதில் பேரானந்தம். கதைக்கரு வித்தியாசமானதென்று எதுவுமில்லை, ஆனால் நகைச்சுவையில் அடித்துவிடலாமென்ற நம்பிக்கை இருந்தது. அதற்கேற்ற நடிகர்களையும் இயக்குநர் கெளசர் Kausar Baig சிறப்பாகவே தேர்ந்தெடுத்திருந்தார்.

படப்பிடிப்பின் போது இன்னும் கொஞ்சம் நல்ல செய்யலாம், ’ஒன் மோர் ப்ளீஸ்’ என்று நான் கேட்டபோதெல்லாம் ‘இணை இயக்குநர்’தானே என்ற அலட்சியமில்லாமல் இயக்குநரும் சரி, நடிகர்களும் சரி எனக்குத் திருப்தியாகும் வரை சளைக்காமல் மீண்டும் மீண்டும் நடித்தார்கள். திரையிடப்பட்ட பதினைந்து படங்களில் எங்கள் குறும்படத்தில்தான் நடனக் காட்சி வைத்திருந்தோம். கதாநாயகனான பாலாஜி Balaji Baskaran என் முன்னிலையில் ஆடமாட்டேன் என்று அடம்பிடிக்க, ‘திரையில் அத்தனை பேர் பார்க்கப் போகிறார்களே’ என்ற போது, ’அது பரவாயில்லை நான் அப்போ கண்ண மூடிப்பேன்’ என்றவுடன் சிரித்துவிட்டு நகர்ந்துவிட்டேன். மனிதர் உடல்மொழியால் கலக்கியிருந்தார். மதுரை வட்டார வழக்கு வராமலிருக்கக் கொஞ்சம் சிரமப்பட்டார். சிறந்த நடிகருக்கான விருதும் அவருக்குக் கிடைத்தது.
டப்பிங்கின்போது நான் கொஞ்சம் எல்லோரையும் படுத்திதான் எடுத்தேன், இருந்தாலும் குழுவினர் அனைவருமே ஒத்துழைத்தார்கள். பூர்ணியின் Poorni Balaj குரலை ‘இன்னும் கீச், இன்னும் கீச்’ என்று மீண்டும் மீண்டும் பேச வைத்து எடுத்து, அதனை முகம் சுழிக்காமல் இசையமைப்பாளர் Giftlin Shaju கிஃப்ட்லின், மைக்ரோ நொடியும் வித்தியாசமில்லாமல் சரியாகப் பொருத்தி தந்ததெல்லாம் சுவையான அனுபவமாக இருந்தது. பூர்ணிக்கு நடுவரின் சிறப்புப் பரிசும், கிஃப்டினுக்கு இந்தப் படத்திற்கு இல்லையென்றாலும் ‘நடுவில்’ என்ற எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு குறும்படத்திற்குச் சிறந்த பின்னணி இசைக்கான விருதும் கிடைத்தது.
குறும்படம் முழுமையாகச் சிறப்பாக அமைய முழுக் காரணமென்று நான் குறிப்பிட வேண்டியது Mohamed Rasi Deen ரஸிதீனைதான். அபாரமான ஆற்றலும் ஆர்வமும் உடையவர். நாம் சொல்வதற்கு முன்பாகவே அவர் புரிந்து கொள்ளும் அலைவரிசையையுடையவர். ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என்று எல்லாத் துறையையுமே ஒற்றை ஆளாகச் சிறப்பாகக் கையாண்டு, உரிய நேரத்திற்கு முடித்துத் தந்தார்.


Noah Nitin Chander Samson வின் அறிவுறுத்தலின் பேரில்தான் அந்த நடனத்திற்கு அந்தப் பாடல் சேர்க்கப்பட்டு 'தூள்' நடனமானது. நோவா நோகாமல் இயல்பாக நடித்து முடித்தார். Lakshmi Priya வும் தனக்கு தந்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக தத்ரூபமாக நடித்தார். அவர் வீடு பாபாவின் இருப்பிடமாக சரியாக பொருந்தியது. கலைஞன் நாஷ் கம்மல், பொட்டு, தலைமுடி என்று சின்னச் சின்ன தகவல்களையும் கண்கொத்திப் பாம்பாக இருந்து சரி செய்து சிறப்பு சேர்த்தார்.
குறும்படம் தர வேண்டிய நேரத்தில் கெளசர் ஊருக்கச் செல்ல வேண்டியிருந்ததால், என்னை அவர் இணை இயக்குநராக இருக்க இயலுமா என்று கேட்டார். ‘கரும்பு தின்னக் கூலியா?’ என்று உடனே ஒப்புக் கொண்டு களத்தில் இறங்கினோம். ஒரே நாளில் படப்பிடிப்பு முடிந்தது. டப்பிங்குக்கு ஒருநாள். இரண்டே நாளில் பன்னிரெண்டு நிமிட குறும்படம். போட்டியில் சிறந்த இயக்குநருக்கு இரண்டாம் பரிசும் கிடைத்தது. குறும்படத் திரையிடலுக்குச் சென்ற என்னால், விருது விழாவிற்குச் செல்ல முடியாதது சோகமென்றாலும், குறும்படத்திற்கு மூன்று விருது கிடைத்ததை நிறைவாகவே உணர்ந்தேன்.
இன்னொரு முக்கியமான ஒரு விஷயம், இந்தப் படத்தில் என் பூனை மினி மிகவும் சிறப்பாக நடித்துள்ளது. ❤
இப்படியான வாய்ப்பை அமீரக மக்களுக்கு வழங்கும் Rama Malar ரமா & ஆனந்த் இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
https://youtu.be/5SYzZEzLrV8 குறும்படத்திற்கான சுட்டியை க்ளிக்கவும். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்.


ஒரு காதல் கதை

 சினிமா பார்த்து அழுத அனுபவம் உங்களுக்கிருக்கலாம், கதை வாசித்து அழுத அனுபவம் உண்டா? எனக்கு என்னவாகிவிட்டதென்று தெரியவில்லை, முதல் முறை வாசிக்கும் போது கலங்கினால் பரவாயில்லை. இரண்டாம் முறையும் அப்படியே நிகழ்ந்தது. எழுத்தாளர் Mitheen மீரான் மைதீன் அவர்களின் எழுத்துக்கு அப்படியான சக்தியுள்ளது என்றால் மிகையில்லை. பயமுறுத்த வேண்டுமென்ற ஆற்றல் கொண்டு எழுதுவாரோ என்னவோ 'கயிறுகள் உருவங்களாயின' கதையை வாசிக்கும் போது காரணமில்லாமல் பயம் தொற்றிக் கொண்டது. அவ்வாறே இந்தக் கதையில் அழுவதற்கு ஒன்றுமில்லாமல் அழ வைத்துவிட்டது. இந்தக் கதையை வாசிக்கும் போது எல்லாருக்கும் அப்படியான உணர்வு கண்டிப்பாக ஏற்படாது. ஆனால் இஸ்லாமிய பின்புலத்தைச் சேர்ந்த பெண்மணிக்குக் கண்ணீர் துளிர்ப்பதில் ஆச்சர்யமில்லை. நான் சொல்வது 'ஒரு காதல் கதை' நெடுங்கதையைப் பற்றி.

வஸீலா அவள் வாப்பாவை மருத்துவமனைக்குச் சென்று பார்த்து அவருடைய கையை மெல்லப் பிடித்தபோது என் கண்களில் கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்தது. 'எனக்குத் தனிமை வாய்த்திருந்தால் நான் விபரீதமான முடிவை எடுத்திருக்கக்கூடும்'. 'நடு இரவில் முழிப்பு வந்து சட்டென மொத்தமாய் நடுங்கி, பூஜையறை இருக்கிற வீட்டில் நாம் எப்படி வந்தோமென்று நிலைகொள்ளும்' இடமெல்லாம் என்னால் அந்த உளவியலை புரிந்து கொள்ள முடிந்தது. 'அந்த ஊரே கூடி ஏதோ ஒரு வெற்றியைப் போல எங்கள் திருமணத்தைக் கொண்டாடியது' - இந்த ஒற்றை வரியில் அரசியல் வெளுத்தது.
இருபது வருடங்களாக இரயில் பயணமே செய்யாத என்னைக் கேகே எக்ஸ்பிரஸில் ஏற்றிவிட்டு பயணியாக்கி அவர்கள் பேசுவதை அருகில் உட்கார்ந்து கவனிக்கச் செய்துவிட்டது இந்தக் கதை. எளிமையான
அருமையான
இயல்பான எழுத்து. உரையாடல்களின் மூலம் பல உள்ளடுக்குகளைச் சாமர்த்தியமாக நெருடல் வந்துவிடாதவாறு சேர்த்துள்ளார் கதாசிரியர்.
ஒன்று மட்டும் சத்தியம், கலப்புத் திருமணத்தில் மிகவும் பாதிக்கப்படுவது பெண்தான், 'மதம்' அல்ல. கதையை வாசித்து முடிக்கும்போது நல்லவேளை இப்படியான தவறை நான் செய்ய என்றுமே துணிந்ததில்லை என்ற நிம்மதி பெருமூச்சுவிட முடிந்தது.
'புலம்' பதிபகத்தின் வெளியிடூ. 56 பக்கங்கள் கொண்ட சிறிய நூல். விலை 80 மட்டுமே. கேலக்ஸி நூல் விற்பனையாளர்களிடம் வாங்கலாம்.


Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி