Wednesday, December 23, 2020

அன்புள்ள வாப்பாவுக்கு...

அன்புள்ள வாப்பாவுக்கு,

நாம் முதல்முதலாகச் சந்தித்த போது காற்று வெளியினிலேநூலில் அன்புத் தங்கை ஜெஸிலாவுக்குஎன்றுதான் நீங்கள் எழுதித் தந்தீர்கள். நினைவிருக்கிறதாஅதே நிமிடம் உங்களிடம் நான் தங்கையாநான் மகள்என்றேன் அழுத்தமாக. அல்ஹம்துலில்லாஹ்!! அந்த உறவு இன்றும் அவ்விதமே தொடர்கிறது.

எனக்கு உங்களை ஆசிப்பின் தந்தையாகத்தான் அறிமுகம். நாம் சந்திக்கும் முன்பே ஆசிப்பின் வாயிலாக உங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். உங்களை நான் சந்திக்கும் முன்பே விண் டிவி நிகழ்ச்சியை நான் நன்றாகச் செய்வதாக, ‘அந்தப் பெண் நல்ல முகவெட்டுநிகழ்ச்சியும் நன்றாகச் செய்கிறாள்என்று விண் டிவி நிறுவனத்தில் சொன்ன செய்தியை ஆசிப் மூலம் என்னிடம் கடத்தியிருந்தீர்கள். இப்படி ஆசிப் மூலம் உங்களிடமிருந்து வரும் செய்திகள் உங்களை நேரில் காணும் ஆவலை ஏற்படுத்தியிருந்தது. எந்தவித பந்தாவும்நான் பெரியவன் அனுபவசாலி என்ற அகந்தையும் இல்லாதுஉனக்கு என்ன தெரியும் என்ற தோரணை அறவே இல்லாது எவ்வித அலட்டல்களுமில்லாததால்தான்பல வருடங்கள் பழகியவள்போல் பார்த்தவுடனே வாப்பாஎன்று மனம் கொண்டாடியது.

உங்களுடைய கிரிக்கெட் வர்ணனையைப் பற்றி எல்லாரும் சொல்கிறார்கள். நான் ஒருமுறையும் கேட்டதில்லைஎன்று நான் உங்களிடம் ஒருமுறை சொல்ல. அப்படியாகேட்டதில்லையாஅதற்கென்ன என்று மடைத் திறந்த வெள்ளமாக "பந்தின் மையப் பகுதியில் ஒரு தையல் இருக்கிறது. பந்து வீசப்படும்போது இது தரையில் எவ்வாறு படுகிறதோ அதை அனுசரித்து அதன் எழுச்சிதிசைவேகம் எல்லாம் அமையும். மோசமாக அமைந்து விட்டால் அது 'பவுண்டரி'யாகிப் போகும். அது பந்து வீச்சாளருக்கு நஷ்டம். அது நன்றாக அமைந்து விட்டால் 'விக்கட்போகும் அது மட்டையாளருக்கு இழப்பு. ஆக எல்லா வில்லங்கங்களுக்கும் இந்த தையல்தான் காரணம். இதை நான் இந்த மகளிர் தினத்தில் சொன்னால் அடிக்க வருவீர்கள். ஆகவே வாழ்த்துச் சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறேன்" என்று நான் புரிந்து கொள்வதற்கு முன்பாகவே தையலைமகளிரோடு இணைத்து ஒரு மார்ச் 8- ஆம் தேதி நீங்கள் பேசிய வர்ணனையை அச்சுப்பிசகாமல் அப்படியே பேசிக் காட்டி என்னைப் பிரமிக்கச் செய்தீர்கள். யாருக்கு கிடைக்கும் இப்படியான பாக்கியம்உலகின் மூத்த பிரபல தமிழ் ஒலிபரப்பாளர், கிரிக்கெட் வர்ணனையாளர் எனக்காகஎனக்காக மட்டுமே பேசிக் காட்டியபகிர்ந்த விஷயங்கள் ஆயிரம்.

அமீரகத் தமிழ் மன்ற மேடையில் நீங்கள் அக்பராகவும், நான் பேகம் சாஹிப்பாவாகவும்ஆசிப் சலீமாகவும் ஒப்பனை இல்லாமல்சரித்திர உடைகள் இல்லாமல்வானொலி நாடகம் போல் கையில் பிரதிகளைப் பிடித்துக் கொண்டு நடித்தோம். ஆக்ராவின் கண்ணீர்நாடகத்தில் இறுதிக் காட்சியில் நீங்கள் லாயிலாஹா…” என்று குழறக் குழற ஒலித்து உயிர் பிரியும் சப்தத்தைத் தத்ரூபமாகச் செய்து முடித்து அரங்கம் கைத்தட்டல்களால் நிறையும்போது உண்மையில் அந்தக் காட்சியின் என் பங்கிற்கான விசும்பல் உணர்ச்சிப் பெருக்கால் அழுகையாக முடிந்தது. அது மறக்க முடியாத ஒரு நிகழ்வு.

இறைத்தூதர் முஹம்மத்நூலை ஆரம்பக் காலத்தில் நீங்கள் பகுதிப் பகுதியாக ஒலிக்கோப்பாக அனுப்புவதும்அதனை திரு.ஸதக் அவர்கள் தட்டச்சுச் செய்து தருவதும்இடையில் நானும் ஆசிப்பும் கருத்துச் சொல்வதாக ஆரம்பித்த படலம்பின் நாட்களில் உங்களுடைய வேகத்திற்கு ஈடு செய்ய முடியாத அளவுக்கு மிக வேகமாக 1000 பக்கங்களுக்கு மேல் செய்து முடித்துஒப்படைக்கப்பட்ட பொறுப்பை எப்படி அர்ப்பணிப்போடும்மனமொன்றியும் முடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் அகத் தூண்டுதலையும் எனக்குக் கற்றுத் தந்தீர்கள். உங்களிடமிருந்து பல நல்ல விஷயங்களை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவுஎன்ற குறளுக்கேற்ப நான் தூற்றினாலும் போற்றினாலும் ஒரு மகளின் கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு பொறுமையாகப் பதிலளிக்கும் உங்களின் பண்பு எப்போதுமே என்னைப் வியக்கச் செய்தது. அதே போல் நீங்கள் ஆசிப்பிற்கு தொலைபேசும் போதெல்லாம் மறக்காமல் தவறாமல் “அங்க ஜெஸிலாவும் மக்களும் நல்லா இருக்காங்களா?” என்று அக்கறையோடு கேட்பதும் என்னை நெகிழச் செய்தது.

எந்த விஷயத்தை நீங்கள் கேட்கும்போதும் அதில் அவ்வளவு பக்குவப்பட்ட தேர்ந்தெடுத்த வார்த்தைகளையே நான் கண்டிருக்கிறேன். உதாரணமாகத் தண்ணீர் வேண்டுமென்றாலும், ‘கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?’ என்று மிகத் தன்மையாகவே பேசிக் கண்டிருக்கிறேன். ஆனால் உங்களுக்கு அடக்க முடியாத அளவுக்குக் கோபம் வரும் என்பதையும் நீங்கள் சொல்லியே ஆச்சர்யத்துடன் அறிந்துள்ளேன்.

கடந்த முறை நீங்கள் துபாய் வந்திருந்தபோதுஇனி நான் எங்கு இங்கு மறுபடியும் வரப் போகிறேன் என்ற ரீதியிலேயே பேசிக் கொண்டிருந்தீர்கள்அது எனக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. உங்களுடைய சிறு வயது அனுபவம்வளர்ந்த விதம்திருமணம்மக்கள்பேரக் குழந்தைகள்தோல்விகள்வெற்றிகள்நண்பர்கள்துரோகிகள் என்று அத்துனை விஷயத்தையும் மனம் திறந்து பகிர்ந்தபோது நான் உணர்ந்த விஷயம்என் தந்தையார் என்னிடம் இப்படியாக எதுவுமே பகிர்ந்ததில்லைநானும் அவர்களுக்கு இவ்வளவு நேரம் கொடுத்ததில்லைஇவ்வகையான நெருக்கமோ அதற்கான வாய்ப்போ எங்களுக்கு அமைந்ததில்லை. இறைவன் அவ்வகையான முழுமையான நிறைவேற்றத்தை உங்கள் மூலம் எனக்குத் தந்திருக்கிறான் என்றே நான் உளமாற நினைக்கிறேன்

பொதுவாகப் பெரியவர்கள் என்னை உச்சி முகர்வதை அவர்களின் ஆசீர்வாதமாகவே நான் உணர்வேன். விமான நிலையத்தில் நீண்ட நேரம் நடக்க வேண்டுமென்பதால் அதனைத் தவிர்க்க தள்ளுவண்டியில் நீங்கள் உட்கார்ந்தபோது நான் உங்களுக்குப் பிரியாவிடையளிக்க நீங்களும் அனிச்சையாக என் உச்சி முகர்ந்தது என் கண்களை நிறையச் செய்தது.

நீங்கள் இன்னும் எழுதி முடிக்க வேண்டியமொழிபெயர்க்க வேண்டிய புத்தகங்கள் நிறைய உள்ளது. அதற்கான ஆற்றலையும்ஆரோக்கியத்தையும்ஆயுளையும் இறைவன் உங்களுக்குத் தந்தருள எல்லாம் வல்லோனை இறைஞ்சுகிறேன்.

வாஞ்சையுடன் மகள் ,

ஜெஸிலா


Sunday, December 20, 2020

பிறந்த வீடு ‘பீட்டர்ஸ் காலனி’

 நான் பிறந்து வளர்ந்த இல்லத்தை இடிக்கிறார்கள் என்று அறியும் போது மனது பதைபதைக்கிறது. சென்னைக்குச் சென்றாலே பத்திரிகையாளர் குடியிருப்புக்குச் சென்று இறங்கினாலும், நான் பிறந்து வளர்ந்த குடியிருப்பான 'பீட்டர்ஸ் காலனி'யைக் கடக்கும் போதெல்லாம் 'எங்க வீடு' என்று தவறாமல் அனிச்சையாகச் சொல்லி விடுவேன். என் கணவரும் 'எத்தனை முறைதான் சொல்லுவே' என்று அலுத்துக் கொள்ளும் அளவிற்குப் பூரிப்புடன் சொல்லி மகிழ்வேன். அந்த வீட்டை விட்டு இருபத்தியாறு வருடங்களுக்கு முன்பே வெளியேறி இருந்தாலும்  என் கனவுகளில் வீடு என்றால் இன்னும் எனக்கு பீட்டர்ஸ் காலனி வீடே வருகிறது. 

வீட்டின் பின்புறம் அமர்ந்து கொண்டு வேடிக்கைப் பார்த்தது, ஈசல் பிடித்து அதற்கு ஃபாத்திமா என்று பெயர் வைத்து வளர்த்தது, அஞ்சலி நாய் இறந்தது அறிந்து அதற்குக் குழி வெட்டிப் புதைத்து அழுதது, மதுர அண்ணன் கால்வாய் திறந்து கரப்பான் பிடிப்பதை வேடிக்கைப் பார்ப்பது, வாடகை சைக்கிளில் சுற்றித் திரிந்தது,  மாடியில் நின்று 'வாட்ச்மேன் காப்பாத்துங்க' என்று விளையாட்டாகக் குரலெழுப்பி எல்லோரையும் பயமுறுத்தியது, 'பைக்' ஓட்டச் சொல்லித் தருகிறேனென்று சாந்தி அக்காவைக் கீழே தள்ளியது, 'மொட்ட மாடி லவ் ஜோடி' என்று கலாய்த்து காதலர்களை மாட்டிக் கொடுத்தது -  இப்படி பல நினைவுகளையும் உணர்வுகளையும் உள்ளடக்கிய வளாகம். 

திமுகவின் தற்போதைய தலைவர் அப்போது ஆயிரம் விளக்கு தொகுதிக்காக வாக்கு கேட்க வரும்போது வண்டிக்குப் பின்னால் ஓடியது, ஓவியத்திற்காக தொடர்ச்சியாகப் பரிசுகள் வாங்கியது - ஒருமுறை நடிகர் சிவகுமார் வந்து பரிசளித்தார், ஆச்சி மனோரமாவின் முன்பு மாறுவேடப் போட்டியில் குறத்தியாக மணி விற்றேன். வருடா வருடம் காலனி ஆண்டுவிழாவில் வெள்ளித்திரை என்று ஏதாவது படம் எடுத்து ஓட்டுவார்கள் அங்கு கும்பலில் உட்கார்ந்து படம் பார்த்தது - இப்படி பல சுவாரஸ்யமான நினைவலைகளைக் கொண்டு நிறுத்தியது 'பீட்டர்ஸ் காலனி' இடிக்கப்படுகிறது என்ற செய்தியை வாசிக்கும்போது. 

எங்கள் வீடு 17/3, பக்கத்து வீடு 17/4-ல் தான் அதிக நேரம் இருப்பேன். அது வாசுகி அக்கா வீடு. அவர்கள் வீட்டில் சில காலம் நான் தேவகியாகி இருந்திருக்கிறேன். வாசுகி அக்காவின் அம்மாவையும் அப்பா அவினாசிமணியையும் நானும் அம்மா அப்பாவென்றே அழைப்பேன். அதனால்தான் இயக்குநர் பாண்டிய ராஜன் எனக்கு மாமா முறையாகினார்.

17/2 ஞாநி அங்கிள் வீடு. என் தம்பியும் மனோஷும் டிகிரி தோஸ்த். இருவரையும் ஒரு 'சீரியலில்' நடிக்க வைக்க அரும்பாடுபட்டு தோற்றார்கள் ஞாநி அங்கிள். ஏதேனும் பேச்சுப் போட்டியென்றால் அவரிடம் எழுதிக் கேட்டு போய் நிற்பேன். அவர், உனக்குத் தெரிந்ததை எழுதிவிட்டு வா அதை திருத்தித் தருகிறேன் என்பார். சில பேச்சுப் போட்டிக்கு மேல் வீட்டு மணிமொழியும், மூன்றாம் மாடி வக்கீல் அப்துல்லாஹ் அங்கிளும் உதவியுள்ளனர். 

ஓவியப் போட்டியென்றால் ஓவியர் ஜெகதீஷ் ஐயாவை அணுகி அவரிடம் என் கற்பனைகளைப் பகிர்ந்து கொண்டிருப்பேன். பச்சைக் கலரில் கையெழுத்து வாங்க சில பேராசிரியர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் வீட்டிற்கும் செல்வேன் - அவர்களுடைய பெயர்கள் நினைவில் இல்லை. கவிஞர் மு. மேத்தா அவர்களையும் இப்படித்தான் அடிக்கடி தொந்தரவு செய்வேன்.

17/1 'தினகரன்' முத்துபாண்டியன் அங்கிளின் மகள் ஷீலா அக்காதான் எனக்கு கார்ட்ஸ் விளையாட சொல்லிக் கொடுத்தார்கள். 17/4 வித்யா/ நித்யா வீட்டிற்குச் சென்று மாமியிடம் உறை மோர் வாங்கி வருவேன். 17/18 என் தோழி சத்யாவுடன் இன்றும் தொடர்பில் இருக்கிறேன். 17/12 வெண்ணிலா அக்காவுடனும் முகநூல் மூலம் தொடர்பு கிடைத்தது. இப்படி காலனி உறவுகளே நிறைய. அங்கிருந்த வரை ஜாதி -மத பேதமோ, இன பேதமோ அனுபவித்ததே இல்லை. 

'பீட்டர்ஸ் காலனி ரவுடி' என்று பெயரெடுக்கும் அளவிற்கு எல்லா பிளாக்கிலும் எல்லாரையும் தெரிந்து வைத்திருப்பேன், பழகுவேன்.

நாங்கள் அந்தக் குடியிருப்பிலிருந்து வந்த பிறகு பின் வாசல் பக்கம் இருக்கும் விளையாட்டு திடலே மறைந்து காடாக, புதராக மாறி இருந்ததையே என்னால் சகிக்க முடியவில்லை. தூங்குமூஞ்சி மரத்தில் வளரும் பண்ணி வாகை மலரைக் காண முடியாமல் அவ்வளவு தவித்திருக்கிறேன். இப்போது அந்த இடமே இல்லாமல் போக போகிறது.

நேற்று என் தம்பி கேட்டுக் கொண்டதன் பேரில் அவன் நண்பர் எங்கள் பிளாக்கை, எங்கள் வீட்டைப் படம் எடுத்து அனுப்பி இருந்தார். 

போன முறை சென்னை சென்றிருந்தபோதும் 'சத்தியம் தியேட்டர்' சென்ற போது எங்கள் வீட்டருகே சென்று பக்கத்தில் நின்று கண்சிமிட்டிவிட்டே வந்தோம். இனி அந்த கொடுப்பினையுமில்லை.

கடைசியாக ஒருமுறை அங்கு சென்று உட்கார்ந்துவிட்டு வரவேண்டுமென்ற எண்ணம் எனக்குள் இருந்தாலும், அதற்காக யாரும் காத்திருக்கப் போவதில்லை என்பதே நிதர்சனம். மரங்கள் மடிந்தாலும் இடம் அழிந்தாலும் குழந்தைகளாக கதைப் பேசி கொஞ்சி மகிழ்ந்த எங்கள் சிரிப்பொலியும் அதன் நினைவுகளும் எங்களுள் என்றும் தங்கி இருக்கும்.




Thursday, August 20, 2020

பெயரைச் சொல்லவா? அது நியாயமாகுமா?

நான் கதிரவன் நாளிதழில் வேலை பார்க்கும் போது, அது என் முதல் வேலையிடம்.  அங்கு 'சார்வாள்' கலாச்சாரம் அதிகமாக இருந்தது. எனக்கும் அப்படியே பழகி இருந்தது. பார்ப்பவர்களையெல்லாம் 'சார்'தான். 

அதன் பிறகு நான் எம்.எஸ். சாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் வேலைக்கு வந்து சேர்ந்தபோது அங்கு யாரையாவது 'சார்' என்று அழைத்தால் கோபப்பட்டார்கள், அறிவுரை தந்தார்கள், தெறித்து ஓடினார்கள். பெயரை வைத்து மட்டுமே அழைக்க வேண்டுமென்று கெஞ்சினார்கள், உத்தரவிட்டார்கள், அதட்டவும் செய்தார்கள். என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. "பெரியவர்களைப் பெயர் சொல்லி எப்படி அழைப்பது?" என்ற கேள்வி எனக்குள் இருந்தது. தூரத்திலிருந்து அழைப்பதையே தவிர்த்து, அருகில் சென்று பேச வேண்டியதாக இருந்தது.

மேலாளர் அழைத்து 'சார் (SIR) என்றால் 'South Indian Rascal'என்ற பொருளுண்டு தெரியுமா?" என்றார். அதிர்ந்தேன். மற்றொரு நண்பர் அழைத்து "'சார்' என்று அழைப்பதின் மூலம் உன்னையே நீ தாழ்த்திக் கொள்கிறாய் என்பதை அறிவாயா?'" என்றார். 

எனக்கு வித்தியாசமாகப்பட்டது. இன்னொருவர் தன்னைப் பெயர் சொல்லி அழைக்கச் சங்கடமாக இருந்தால் 'திரு'வுடன் அவரது இரண்டாவது பெயரை இணைத்து அழைக்கச் சொல்லி கேட்டார்.

எங்களது பக்கத்து வீடு, நான் சின்ன வயதிலிருந்தே அவர் பார்க்க வளர்ந்தவள், அவரும் அதே அலுவலகம். அவரை 'ஆன்ட்டி' என்றேன், அவ்வளவுதான் இடி விழுந்தது போல் உணர்ந்தவர், என் கையைப் பிடித்துத் 'தரதர'வென்று இழுத்துக் கொண்டு போய் "'ஆன்ட்டி', 'அங்கிள்' என்று அலுவலகத்தில் அழைத்து எங்களை அசிங்கப்படுத்தாதே. இந்த இடத்தில் நீயும் நானும் சக ஊழியர்கள் அவ்வளவுதான்" என்று மிகவும் கண்டிப்பாக,  அழுத்தமாக, மிரட்டலாகச் சொன்னார்கள்.

நிறுவனரையே 'பேராசியர்' என்றும் அவரது மனைவியை 'மிஸஸ் மீனா' என்றுமே எல்லோரும் அழைத்தனர். எனக்கும் அதுவே பழகியிருந்தது. சுலபமாகவும் இருந்தது. அப்படிப் பழகியதால் வயது வித்தியாசம் தெரியாமல் எல்லோருமே நண்பர்களாக,  சகஜமாகப் பழக முடிந்தது.

துபாய் வந்த பிறகும் இதுவே தொடர்ந்தது. முதல் முதலில் ஒரு மாதம் மட்டும் பணி புரிந்த 'ஸீனத் ரீ சைக்கிள்' நிறுவனத்தில் 'காக்கா' கலாச்சாரம் மலிந்திருந்தது. கீழக்கரை நிறுவனம். அதனால் எல்லோரும் எல்லோருக்கும் 'காக்கா'தான். எனக்கு அந்த இடமே வித்தியாசமான சூழலாக இருந்தது. நல்லவேளையாக அங்கு எனக்கு நிரந்தரப் பணி கிடைக்கவில்லை. காரணம் எனக்கு அப்போது திருமணமாகவில்லை என்பதே. 

"எங்க பயலுங்க உங்க கிட்ட திறமையக் காட்ட நினைப்பாங்களே தவிர, வேலைய எவனும் பார்க்க மாட்டார்கள்" என்று வெளிப்படையாக முகத்தில் அறைந்தாற்போல் சொன்னதும் நல்லதாகப் போனதால், நான் வெளியேறி வேறு நல்ல இடத்தில் வேறு நல்ல வேலையும் கிடைத்தது.

சேர்ந்தது பன்னாட்டு நிறுவனம் என்பதால் அங்கும் பெயர் சொல்லி அழைக்கும் முறையே தொடர்ந்தது, என்னைவிட முப்பது வயது மூத்தவரையும் பெயர் சொல்லியே அழைத்தேன், அவரும் இந்தியர்தான், ஆனால் அவரும் அதைத்தான் விரும்பினார். அது எனக்குப் பிடித்தும் இருந்தது. அதன் பிறகு நான் வேலை செய்த எல்லா நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனமென்பதால் 'சார்' என்ற சொல்லே அந்நியமானது. பெயர் சொல்லி அழைப்பதே எனக்குப் பிடித்திருந்தது. நெருக்கமில்லதவர்களை அல்லது தெரிந்தவர்களாக, அல்லது நண்பர்களாக இருப்பவர்களைப் பெயருக்காக அல்லது மரியாதை என்று நினைத்துக் கொண்டு அண்ணன், சேட்டா, அங்கிள், ஆட்டுக்குட்டி என்று அழைப்பதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை. பெரும்பாலும் அப்படி அழைப்பதைத் தவிர்ப்பேன்.

நண்பர்களின் தாய்- தந்தையர்களை மட்டும் தயக்கமில்லாமல் என்னால் 'அப்பா அம்மா' என்று அழைக்க முடிகிறது. ஆங்கிலப் படத்தில் மற்றும் சிரீஸில் நண்பர்களின் அம்மாவை 'மிஸஸ் ......' என்றே அழைப்பதைக் காண முடிகிறது. அவர்களின் கலாச்சாரத்தில் எல்லோரும் எல்லோரையும் முதல் பெயரை வைத்தோ நெருக்கமில்லாதவர்களைத் தலைப்போடு அதாவது திரு/ திருமிகு சேர்த்தே அழைக்கின்றனர். இதனைச் சிறப்பான முறையாகவே நான் பார்க்கிறேன். என்னை மற்றவர்கள் அக்கா, சகோதரி, ஆன்ட்டி, பாட்டி என்று எப்படி அழைத்தாலும் நான் கவலைப்படுவதில்லை. என்னைப் பெயர் சொல்லி அழைப்பதே எனக்கு விருப்பம்.  ஆனால் நெருக்கமில்லாதவர்கள் யாரேனும் ஜெஸிலா என்ற பெயரைச் சுருக்கி ஜெஸி என்று அழைத்தால் மட்டும் எரிச்சலாகும் 'யார் அவருக்கு இதற்கு அனுமதி தந்தது?' என்று நினைத்துக் கொள்வேன். ( ஆனாலும் அவரிடம் சொல்ல மாட்டேன். நண்பர்களிடம் மட்டும் புலம்புவேன்)

சிலர் பெயர் சொல்லி அழைத்தால் திமிர் பிடித்தவளாகப் பார்க்கிறார்கள், நான் அழைப்பது அவர் பெயரை என்று அறியாமலே. பெயர் என்பது அழைப்பதற்குத்தானே?

Tuesday, August 18, 2020

குஞ்சன் சக்சேனா - உயரப் பறக்கத் துடிப்பவள்

 என் தோழி ஒருத்தி சின்ன வயதிலிருந்தே 'மாடலிங்' செய்ய வேண்டுமென்று கனவு கண்டு அதற்கேற்ப தன் உடலைத் தயார் செய்து கொண்டு, வேலைக்குச் செல்ல ஆயுத்தமாகும்போது அவள் சந்தித்த பல துன்பமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாள். அதில் அதி முக்கியமானது அவள் நாட்டில் விளம்பர நிறுவனங்கள் 'மாடலிங்' செய்பவர்களை விபச்சாரிகளாகப் பார்ப்பதையும், சாடையாகவும் வெளிப்படையாகவும் 'நீ மாடலிங் செய்பவள்தானே?' என்று அதனைத் தரைகுறைவாகப் பேசுவதையும், உடனுக்குடன் உடை மாற்ற வேண்டிய இடங்களில் 'உங்களுக்கெல்லாம் மறைவான இடம் எதற்கு? அப்படியே நின்று மாற்றிவிட்டுக் கிளம்பு' என்று அசிங்கமாக நடத்தியதையும் சொல்லி வேதனைப்பட்டிருக்கிறாள்.

போதுமென்ற அளவிற்குச் சகித்துக் கொண்டு, அவள் நாட்டிலிருந்து துபாய்க்கு வந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கிய போது 'மொத்தமாக விலை போய் விட்டாயா' என்று கேலி பேசிச் சிரித்தவர்கள் நம் நாட்டவர்கள் அல்ல, அவள் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஐரோப்பியர்கள். பெண் அடக்குமுறை, கீழ்மை, பேதம் எல்லா நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது.
நேற்று 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் பார்க்கும்போது ஏனோ எனக்கு என் தோழியைப் பற்றிய இந்த விஷயம் நினைவுக்கு வந்தது. அதே மாதிரியான நிலை நம் நாட்டுப் பெண் விமானிக்கு வேறு விதமாக நிகழ்ந்துள்ளது. இந்தப் படம் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். இன்றைய தேதியில் 1625 பெண் போர் விமானிகள் இருந்தாலும், கார்கிலில் 1999 ஆம் ஆண்டு ஒரே ஒரு பெண் விமானியாக இருந்தவர் கடந்து வந்த கசப்பான சம்பவங்களையும், நம் நாட்டு ஆடவர்களின் உள்ளுணர்வையும், அடக்குமுறையின் பிரதிபலிப்பையும் மிக அழகாகப் பதிவு செய்துள்ளது இந்தப் படம்.
'நான் பைலெட் ஆனால் என்னைப் பைலட் என்றுதான் பார்ப்பார்களே தவிரப் பெண்ணென்று பிரித்துப் பார்க்க மாட்டார்கள் என்று நம்பினேன். இங்கு மல்யுத்தம் செய்துதான் என் திறனை வெளிப்படுத்த வேண்டுமா? நான் விமானத்தை ஓட்ட வந்துள்ளேன், விமானத்தைக் கையில் தூக்க அல்ல. உங்களுக்கெல்லாம் பயம், நான் உயர் அதிகாரியாகிவிட்டால் எல்லோரும் எனக்குச் சல்யூட் செய்ய வேண்டுமென்ற பயம், அதுதானே? அதனால் உங்கள் மரியாதை சத்தியமாகக் குறைந்துவிடாது. உங்கள் குறுகிய எண்ணம், உங்கள் பயம், உங்கள் கூத்து கும்மாளம், ஆணென்ற உங்கள் பொய்யான பெருமை இவை மட்டுமே உங்கள் அதிகாரம்' என்ற வசனம் மட்டுமே எனக்குப் போதுமானதாக இருந்தது இந்தப் படம் எனக்குப் பிடித்துப் போக.

விமானியாகவும், அதிகாரியாகவும், காரியதர்சியாகவும் எந்த வேலையைச் செய்தாலும் பெண்ணை இந்தச் சமுதாயம் பார்க்கும், பார்வை கேட்கும் கேள்விகள், நடத்தும் விதம்... சொல்லி மாளாது.
இவைகளையெல்லாம் புறங்கையால் தள்ளிவிட்டு நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும், யாருக்கும் அஞ்சாத மனதோடும் இருப்பவர்களுக்கு மட்டுமே இங்கு வெற்றி நிற்சயம்.
அவசியம் இந்தப் படத்தைப் பாருங்கள். மகளை நேசிப்பவர்களுக்கு, பெண்ணை மதிப்பவர்களுக்குப் பிடிக்கும்.

Tuesday, July 28, 2020

பூவைக் கவிழ்த்திய பூனையின் கால் தடம்



குழந்தைகளுக்குப் பூனை வளர்க்க வேண்டுமென்று அவ்வளவு ஆசை. ஆனால் அது பெரிய பொறுப்பு என்று தட்டிக் கழித்தோம். அப்படியான அர்ப்பணிப்பு நம்மால் முடியாது என்று சொல்லியும் கேட்காததால், "நிரந்தரமாகத் தத்தெடுக்க வேண்டாம். 'வீட்டிலிருந்து கல்வி' என்ற நிலை முடியும் வரை 3-5 மாதங்கள் மட்டுமே கேட்டு வளர்க்கலாம் (fostering rather than adopting)" என்று மகள் வற்புறத்தவே ஒப்புக் கொண்டோம்.

அதன்படி போன மாதம் 'அக்கிட்டோ' என்ற பூனையை வளர்க்க எடுத்தோம் Red Paw Foundation-ல் இருந்து. கணவரும் நானும் அவனைப் 'பம்சி' என்று அழைத்தோம். மகனும் மகளும் 'யுக்கி' என்று அழைத்தனர்.

'நான்கு மாதமாக அடைபட்டுக் கிடந்தான்' என்றார்கள் பூனையைக் கொடுத்தவர்கள். வந்தவுடன் எங்கள் நான்கு பேருடனும் நன்றாக ஒட்டிக் கொண்டான். வருடு என்பான், கட்டித் தழுவச் செய்வான், 'மியோவ்' என்பதை விதவிதமாகச் சொல்லி தன் வசப்படுத்துவான், அவன் மொழி எங்களுக்கும் எங்கள் மொழி அவனுக்குமாக ஒரு புரிதலோடு இருந்தோம்.

முன்பெல்லாம் நான் அலுவலகத்தில் இருந்து வந்தால், அழைப்பு மணி அடித்ததும் குழந்தைகள் ஓடி வருவார்கள், என் கால்களைக் கட்டிக் கொள்வார்கள். அந்த மகிழ்ச்சியான தருணத்தை எதுவுமே ஈடு செய்ய இயலாது. இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். அப்படி ஓடி வருவதெல்லாமில்லை. நாம் போய் நின்றால் 'சலாம்' அல்லது 'ஹாய்' அவ்வளவுதான். அந்த மகிழ்வான தருணத்தை மீண்டும் எனக்கு பம்சி தந்தான்.

நான் அலுவலகத்தில் இருந்து வந்து அழைப்பு மணி அடித்ததும், அடித்துப் புரண்டு ஓடி வருவான். குழந்தைகள் என் கால்களைக் கட்டிக் கொள்ளும் அதே உணர்வை மீண்டும் தந்தான். ஆனால் எங்களுடன் விளையாட மாட்டான்.

மற்ற பூனைகளைப் போல் விளையாடவில்லையே, என்று கேட்டபோதுதான் சொன்னார்கள் அவனுக்கு இருக்கும் வியாதியைப் பற்றி. அவன் மற்ற பூனைகளுடன் சேர்த்து வைக்க முடியாத நோய் தொற்று உள்ளது என்றர்கள். அதன் பிறகு அவன் மீது அன்பு கூடியதே தவிர குறையவில்லை. அவனை நேசிக்கும் யாரோ ஒருவரும் அவனுக்கான உணவெல்லாம் அமேஸான் வழியாக அனுப்பினார்கள். நன்றாகத்தான் சென்றது. ஒரு வாரமாக அவனுக்கு வயிற்றுப் போக்கு. சரி வெவ்வேறு உணவு வேண்டாம் ஒரே உணவாகக் கொடுங்கள் என்றார்கள்.

என் கணவரும் குழந்தைகளும் பேசுவது அவனுக்கு நன்றாகப் புரிந்தது. உட்காரு, அங்கே போகாதே என்றெல்லாம் மிரட்டுவார்கள் கேட்டுக் கொள்வான். தவறு செய்தால் தலை குனிவான். அவன் செய்யும் ஒரே தவறு வயிற்றுப் போக்கால் சமயங்களில அவன் மலம் கழிக்கும் இடத்திற்கு வெளியே தவறுதலாக வயிற்றுப் போக்கின் காரணமாக நேர்ந்துவிட்டால் சங்கடப்படுவான்.

முன் தினம் வயிற்றுப் போக்கு கூடவே வாந்தியும். ஒரு வாரம் நடப்பதையெல்லாம் அந்த நிலையத்திற்குத் தெரிவித்துக் கொண்டேதான் இருந்தேன். சரியாகும். 'Wet' உணவு வேண்டாம், வெறும் 'dry' உணவுபோதும் என்றெல்லாம் வழிநடத்தினார்கள். நேற்று அலுவலகத்திலிருந்து வந்ததும் நான் அசந்து தூங்கிவிட்டேன் (25 ஜூலை). நான் தூங்கும் போது என் அருகில் நின்று என்னையே ரொம்ப நேரம் பார்த்ததாக நான் எழுந்தவுடன் சொன்னார்கள். அமைதியாக இருந்தான். அவனுக்குப் பிடித்த உணவை ஒரே ஒரு கரண்டி மட்டும் தந்தேன், அவனுக்கு உடல்நிலை சரியில்லாததால். அவன் எப்போதும் சாப்பிட்டு முடித்துவிட்டால் அதுவும் ஒரே ஒரு கரண்டியென்றால் மீண்டும் வந்து மியாவ் என்பான். ஆனால் நேற்று அப்படியெல்லாம் கேட்கவில்லை. நான் போகுமிடமெல்லாம் பின்னால் வந்து உட்கார்ந்து கொண்டான் சமர்த்தாக. இரவு அவன் இடத்தில் படுக்காமல் நாங்கள் படுக்கும் கட்டிலுக்குக் கீழே படுத்திருந்தான்.

குழந்தைகள் அவனுக்கு உணவைக் காட்டி வெளி இழுத்து வந்து 'உன் இடத்திற்குப் போ' என்றதும், மறுப்பில்லாமல் போய் படுத்துக் கொண்டான்.

காலையில் முதலில் அவனை உயிரற்ற உடலாகக் கணவர்தான் பார்த்து என்னை அழைத்தார். நானும் குழந்தைகளும் கதறி அழுதோம். நிறுவனத்திற்கு அழைத்துத் தெரிவித்தோம். என் லவ் பேர்ட்ஸ்களைப் பார்த்தால் அதிலும் ஒன்று இறந்து இருந்தது. இதுவரை நான் வளர்த்த பறவைகளுக்காகவும், மீன்களுக்காகவும் இவ்வளவு அழுததில்லை. இவனுக்கு நோய், இறந்துவிடுவான் என்று தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் போய்ச் சேர்வானென்று நினைத்திருக்கவில்லை.

கால்நடை மருத்துவமனையில் நல்லடக்கம் செய்ய அழைத்து வரச் சொன்னார்கள். கணவர் சென்று பம்சியைக் கொடுத்து வந்தார். இனி என் அழைப்பு மணி கேட்டு ஓடி வர அவன் இல்லாத வெறுமையைச் சூழ்ந்துள்ளது எங்கள் இல்லம். #பூனை

Monday, July 13, 2020

ஒரு சொல் சில மெளனங்கள்

"கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா? உன் கண்ணில் நான் கண்டேன். உன் கண்கள், வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்" இப்படியாக வித்தியாசமான கற்பனையைப் பாடலில் கேட்டதும்தான் அதை எழுதியது யாரென்று அறிந்து, இவரைக் கவனிக்கத் தொடங்கினேன். எனக்குப் பிடித்த ஒவ்வொரு பாடலையும் அவரே எழுதியிருப்பார் என்று நம்பிக்கை வரும் அளவுக்கு அத்தனை நல்ல பாடல்களையும் அவர்தான் எழுதினார். 

'என்  பூக்களின் வேரோ இவன்... 
என் பெண்மையை  வென்றான் இவன் ...
அன்பானவன்....'

'வேறென்ன வேண்டும் உலகத்திலே... இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்'

'ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்'

இதைவிட அதி அற்புதமான வரிகளையெல்லாம் எழுதிவிட்டார். அவருடைய தனித்துவமே அவருடைய எளிமையான வார்த்தை தேர்வு. அருமையான சுலபமான
எளிமையான வார்த்தைகளில் சிம்மாசனத்தையே கட்டினார், ஆண்டு தோறும் தேசிய விருதைக் கைப்பற்றினார். 'பட்டாம்பூச்சி விற்பவன்' கவிதைத் தொகுப்பை வாசிக்கும் போது பல இடங்களில் புன்னகை பூக்கச் செய்தார். 'குழந்தைகள் நிறைந்த வீடு' தொகுப்பில் நாம் அன்றாடம் பார்க்கும், படிக்கும், கற்பனை செய்யும் நிகழ்வுகளை... 
 
இறந்த பாட்டியின் மருந்துக் குப்பியில்
மண்ணெண்ணெய் விளக்கு
ஞாபகங்கள் எரிகின்றன.

மனதைத் தொடும் ஹைக்கூவாக காட்சிகளைப் பதிய வைத்தார். 

வாழ்வில் ஒருமுறையாவது இவரை சந்திப்பேன் என்று எண்ணி இருக்கும்போது தனது நிறுத்தத்தில் சொல்லாமலே இறங்கிவிட்டார், மனதில் நீங்காத வார்த்தைகளைப் பாடல்களாக நம் உதடுகளில் விட்டுச் சென்றுவிட்டார் நா. முத்துக்குமார். இன்று அவருக்குப் பிறந்தநாள். அவர் இருந்திருந்தால் 45 வயது மட்டுமே முடிந்திருக்கும்.

Sunday, July 05, 2020

முரண்பாடு


தூய்மையான காற்று

நாம் முகமூடியில்.

வெறுமையான சாலைகள்

நாம் வீட்டுக்குள்.

சுத்தமான கைகள்

தீண்டாமை அமலில்.

செல்வந்தர்களுக்கு

செலவிட வழி இல்லை.

இல்லாதவர்களுக்கு

சம்பாதிக்க வழி இல்லை.

நேசத்திற்குரியவர் நோயில்

நேரில் நலம் அறியவில்லை.

அன்புக்குரியவர் இறப்பு

அருகில் அழவில்லை.

நேரான எண்ணங்கள்

எதிர்பார்ப்பில் எதிர்மறை.

விசித்திர உலகம்

விந்தை மனிதர்கள்.


-ஜெஸிலா

04 ஜூலை 2020

Thursday, June 25, 2020

சொர்க்கமே என்றாலும்

புத்தம் புதுச் சூழலில் இதமான தட்பவெப்பத்தில் எழிலுடன் கூடிய இடத்தில் ரம்யமான மணம் தன்னைத் தொட்டுச் செல்ல, சலீம் எழுந்தான். உடலில் எந்த வலியும் இல்லாததை உணர்ந்தான். கை, கால்களை உதறினான், தன் இளமை திரும்பி விட்டதாக அவனுக்கே தோன்றியது. அவன் வழக்கமாக அணிந்திருக்கும் கண்ணாடி இல்லை. ஆனாலும் கண் பார்வை மிகச் சிறப்பாகத் தெரிந்தது.

 

தன் பிறந்த மேனியில் வெள்ளைத் துணி சுற்றி இருப்பதைப் பார்த்தான். அவன் அருகில் எல்லா வண்ணங்களும் கொட்டிய குடுவையில் முக்கி எடுத்ததுபோன்ற சிறகுகளையும் அகல் போன்ற அலகையும் கொண்ட ஓர்அழகிய பறவை அவனுக்காகக் காத்திருந்து. அதனுடன் புதுத் துணியைக் கண்டான், கையில் எடுத்தான். எங்கேயோ அதைப் பார்த்த நினைவு, அதனைத் தொட்டபோது உடனே உடுத்திக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் அவனுக்குள் எழுந்தது. வான் வண்ணத்தில் மேகத்தையொத்த வடிவமைப்பிலிருந்த உடையை உடுத்திக்கொண்டான். அந்த உடை அவனுக்காகவே அளவெடுத்துத் தைத்தது போல் இருந்தது.

 

கால்களுக்குக் கீழ் இது மண் தானா என்ற சந்தேகத்தில் கையில் எடுத்துப் பார்த்தான். வாயில் அள்ளிப்போட்டுக் கொள்ள வேண்டும்போல, சிலிர்ப்பை உண்டாக்கும் அளவிற்கு அந்த மணல் வித்தியாசமான நிறத்தில் இருந்தது. அவன் இதுவரை கண்டிருந்த தேரிகாட்டு மணல் போலவோ பாலைவன மணல் போலவோ இன்றி புதுவித மணலாக இதமான குளிராகக் கால் புதையாமல் அதே சமயம் பறக்காமல் தன் உயிர் இப்போது வேறு வித ஆற்றலாக மாறியிருந்ததை உணர்ந்தான். நடக்கவும் இல்லாது பறக்கவும் இல்லாது நகர்வது சலீமுக்கு இன்பமாக இருந்தது. ‘இந்த மணலில் எப்படி இந்தப் பூ பூத்தது?’ என்ற யோசனையில் அருகில் சென்றால் வான் நட்சத்திரம் பூவாக மலர்ந்திருந்தது அதனை மினுமினுத்தது என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். இவனுக்கு ஒரே குழப்பம், ‘விண்மீன்கள் வாயுக்களினாலானவை, அது தரும் ஒளி, வெப்பம் மிகுந்தவை ஆனால் இந்த வகை வகையான கண்களுக்குச் சுகமான வண்ணங்களில் தென்படும் நட்சத்திரம் பரவசத்தை அளிக்கிறதே எப்படி?’ என்று ஆராய்ச்சியில் அங்கேயே நின்று உற்று நோக்கினான்.  அருகில் குளிர்ந்த நீரோடை இருந்தது. அதனைக் கண்டதும் அவன் எண்ணம் அங்கே குவிந்தது., நீரில் இறங்கி ஒரு குளியல் போடலாமா என்றும் அவனுக்குத் தோன்றியது. எதைப் பார்ப்பது, எதைத் தவிர்ப்பது என்று வியக்கும் அளவிற்கு ஒவ்வொரு நுணுக்கங்களும் புதுமையாக இருந்தன.. வானம் மட்டும் எப்போதும்போல் ஓவியமாக இருந்தது.

 

யாருமில்லாத புத்தம் புது இடம்தான். சமநிலையில் ஒரே பரப்பில், சீரான அமைப்பில் எழில் கொஞ்ச, பார்த்திராத பறவைகளின் ஒலி சூழந்திருக்கும் அந்த ஆத்மார்த்த அமைதி அவனுக்குள் பயத்தை எழுப்பவில்லை மாறாக மனம் சாந்தமாக மிகவும் பாதுகாப்பாகவே உணர்ந்தான். கால் போன போக்கில் அடுத்து என்னவென்று அறியாமலே நகர்ந்தான். கொஞ்சம் தொலைவிலேயே தனக்குப் பழக்கமான ஒரு முகம் அவனை நோக்கி புன்னகைத்தபடி வந்தது. அடுப்படியில் கரிப்பிடித்த துணியை ஒத்த உருவத்தில் இருப்பான் சாகுல். இப்போது ஆஜானுபாகு உருவத்தில் அகன்ற மார்பு, வலிமையான புஜங்களுடன் “சலீம்என்று உறுமிக் கொண்டுவந்தார். வயிற்றுப்புற்றுநோயில் அவதிப்பட்ட சுவட்டையே காணோமே.

 

அவரைக் கண்ட ஆச்சர்யத்தில் ஓடிச் சென்று, அதுதான் இளமை திரும்பிவிட்டதே அதனால் பறந்து நகர்ந்துஅவரைக் கட்டிக் கொண்டு "சாகுல், எப்படி இருக்கீங்க? உங்களை இங்க பார்ப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல" என்றான்.

 

அதற்கு அவர் கம்பீரமான குரலில் "வா சலீம். எனக்கும் நீ வருவதா எந்தத் தகவலுமே இல்ல. ஏதோ மனசு இந்தப் பக்கம் வரணும்னு தள்ளுச்சு வந்தேன். நீ எப்போ இறந்த? நீ இறக்கப் போறதாகவோ, இங்க வரப் போவதாகவோ ஒரு துப்புமில்லயே!!" என்று ஆச்சர்யத்துடனும் சலீமை சந்தித்த மகிழ்ச்சியும் பொங்க, முகம் மலர்ந்து கேட்டார் சாகுல்.

 

சாகுலைப் பார்த்த மகிழ்ச்சி பொங்க மடை திறந்த வெள்ளமென சலீம் பேச நினைத்தாலும் ஏதோவொரு குழப்பத்திலேயே வார்த்தைகள் வெளிவந்தன. "நானே எதிர்பார்க்கல சாகுல் அசந்து தூங்கிட்டேன், நீண்டதூக்கம்போல அங்கிருந்து இங்க வந்துட்டேன். ஏதோ நான் ஒரு செடி மாதிரியும் என்னை வேரோடு பிடுங்கி போட்டா ஒரு வலி வருமே அப்படியொரு உயிர்போற வலி. அப்புறம் நான் என்னை இங்க பார்த்த போதுதான் புரியுது" என்று நிச்சயமற்ற தன்மையோடு சொன்னான் சலீம்.

 

சலிப்பான நமட்டு சிரிப்போடு விளக்கினார் சாகுல் "உயிர் போற வலின்னு சரியாதான் சொல்ற. ஆமா, உன் உயிர் போயிடுச்சு. இப்ப நீ மறுமைக்குள்ள நுழஞ்சுட்ட. ஆனா நீ அதிர்ஷ்டக்காரன்பா எவனையும் அந்த உலகத்துல நீ சுத்தல்ல விட்டுருக்க மாட்டேன்னு நெனைக்கிறேன், அதான் சட்டுன்னு என்னை பார்த்துட்ட. இங்க வந்த பிறகு ஒருத்தரை சந்திக்கிறதுக்கு அவ்வளவு நாளாகும்.

 

அதுவுமில்லாம புதுத் துணி வேற உடனே கிடச்சிட்டுது போல, இது நீ அங்க உடுக்கத் துணி கொடுத்து உதவின யாரோ உனக்காகக் கையேந்தி வேண்டியதாலதான் அது அமஞ்சிருக்கு, சரி வா உனக்குப் போகப் போகப் புரியும்” என்றபடி பேசி கொண்டே நகர்ந்தார்கள்.

 

“அட! நம்ம மாத்யூ வீடா அது?” என்று ஒரு பெரிய வீட்டைச் சுட்டிக் காட்டி வாய் பிளக்கக் கேட்டான் சலீம். “நீ வரேன்னு தெரிஞ்சி இங்க குடி பெயர்ந்திருப்பான்” என்று சாகுல், சலீம் முகம் பார்த்தபோது, சலீம் அவநம்பிக்கையில் சந்தேகப் பார்வை தந்தான்.

 

அதனைப் புரிந்து கொண்ட சாகுல் உடன் மறுத்து, ”நெசமாத்தான் சொல்றேன், நமக்கு வேண்டிய இடத்துல நம்ம வீட்டை நகர்த்திக்கலாம். அவனுக்கு வந்த வாழ்வ பார்த்தியா… ஒன்னுமில்லாத பையன்” என்று சொல்லி கொண்டிருக்கும் போது மாத்யூ, “சலீம், எப்படி இருக்க?” என்று எல்லாப் பற்களும் தெரிய புன்னகைத்தபடி வந்தார்.

 

எப்போதும் ஒரு சோகத்தில் மூழ்கியது போன்றே முகத்தை வைத்திருக்கும் மாத்யூ மிக பொலிவான, சாந்தமான முகத்துடன் தெளிவாகப் பேசியதை பார்த்தவுடன், “மாத்யூ, உன்ன இந்த நல்ல நெலமையில பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்குப்பா. நான் அப்பவே சொன்னேன்ல உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்னு” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் சலீம்.

 

“எப்பவுமே சொல்வேனே சலீம், சமமான வாழ்வுன்னு அத நான் இங்கதான் பார்க்கிறேன். எந்தவித பாகுபாடுமில்ல, உயர்வு தாழ்வு இல்ல, நினைத்ததை வாழ முடியுது. சக மனிதன் சந்தோஷமா இருக்கான், சுற்றுப்புறம் நல்லா இருக்கு, யாரும் யாருக்கும் கெடுதல் நினைக்க முடியாது. களவு இல்ல, வன்மம் இல்ல, பிரிவு இல்ல, பொறுப்பு இல்ல. விடுதலை உணர்வை முழுமையா சுவாசிக்கிறேன். தானதர்மம் செய்யணும்னு ஆசப்பட்டேன், ஆனா  அப்ப பணமில்ல. மனசார உதவணும்னு ஆசப்பட்டதுக்கே இப்படியான வாழ்க்க அமைந்திருக்கு. அப்ப மனசார கொடுத்து உதவுனவங்களுக்கு? இங்க எல்லாமே இப்படித்தான். எங்க வீட்டு பக்கத்துல பார்த்தியா ஓடை, அதுல நான் நெனைக்கிற பானம் கிடச்சிடும். நம்மூர்ல தான் தண்ணீர்ப் பஞ்சம். ஆனா இங்க ஆசை தீர குடிச்சுக்கலாம். ம்ஹும் ஆசை அந்த வார்த்தையே மறந்துடுச்சு சலீம்” என்று ஞானி மாதிரி பேசியவனை உடைக்கும் வகையில் சாகுல் “ஆமாமா ஆசை இல்லாததாலதான் மாத்யூ, அப்பப்ப கனவுபிரவேசம் பண்ணி உலக ஒட்டுதலிலேயே இருக்கான், அதுவும் அழியா வீட்டுக்குள் வந்துட்டு இன்னும் விழிக்காம இருக்கான்” என்றார் கிண்டல் தொனியில்.

 

மாத்யூ பேச்சை மாற்றும் விதமாக “என் கதைய விடு சலீம், நம்ம மொன வீடு சேகர சந்திச்சியா?” என்றார்.

 

அதற்கும் சாகுல் “சேகர் எப்படித்தான் இங்க வந்தான்னு தெரியல. ‘தான் தவறுதலா இங்க வந்துட்டேனோன்னு’ அவனுக்கே சந்தேகம் வர அளவுக்கு நல்லாயிருக்கான்” என்று எதையோ எதிர்பார்த்தவராகப் பொறாமையின் வெளிப்பாடில் கறுவலுடன் பேசுவதாக இருந்தது சாகுலின் பேச்சு.

 

‘இங்க வந்தும் சாகுலின் குணம் மாறலையே. அப்ப குணத்திற்கேற்ற சலுகையும் வசதி வாய்ப்புமா!? இங்க பொறாமை கிடையாதுன்னு மாத்யூ சொன்னாரே, அப்ப இது பொறாமையில் சேராதா?’ என்று சலீம் யோசித்தான்.

 

மூவரும் தெரிந்த நபர்களை பற்றியெல்லாம் பேசி கொண்டே நடந்தனர். ஆனால் உறவுகள் பற்றியோ சேகருக்கு முன்பே காலமாகிவிட்ட அவர் மனைவியை பற்றியோ அவர் பேசவில்லை. சலீமால் கட்டுப்படுத்த முடியாமல், “சேகர், உன் மனைவி செளமியாவ இங்க சந்திக்கலையா!?”  என்று கேட்டான்.

 

எந்த செளமியா என்ற முகபாவனையுடன் சேகர் “சலீம், ஆற்றலாக மாறிய நமக்கு தெரிந்தவர்களைக் கண்டால் மகிழ்ச்சி, ஆனால் மனைவி, மக்கள், என்னைச் சார்ந்து அவள், ஒருவனுக்கு ஒருத்தி என்ற எந்தவித உறவு பந்தங்களும் இங்கு இல்ல. இதனை ஒருவித சுதந்திரமா நான் பார்க்குறேன். நான் யாரையும் தேடி போறதுமில்ல, என்னை தேடியும் யாரும் வருவதில்ல. வழிப்போக்கரா சந்திப்பவருடன் மகிழ்ந்து பேசி நகர்கிறோம்” என்று விளக்கம் அளித்தார்.

 

சிறிது தூரத்திலேயே சலீம் என்ற பெயர்ப் பலகை தொங்கிக் கொண்டிருந்த கடை மாதிரியான அமைப்புத் தென்பட்டது. ”இது என்ன கடை மாத்யூ? என் பெயரில்!!?” என்று கண்கள் விரிய சலீம் கேட்டான். "ஓஹ்! கடைத் தெருவா? உன் பெயரிலா? சரி போய்ப் பாரு, எங்க கண்களுக்குத் தெரியாத இடத்திற்குள்ள நாங்க வரவே முடியாது. அதுக்குள்ள நீ மட்டுந்தான் போக முடியும் சலீம். நாம இறந்த புதுசுல நமக்குப் பிரியமானவங்க செய்யும் ஒவ்வொரு பிரார்த்தனையும், மனசார நமக்குச் சொல்லும் வாழ்த்தும், நல்ல வார்த்தைகளும் நமக்குப் பிடிச்ச தின் பொருளா மாறி இப்படிக் கடையா விரிஞ்சிருக்கும். எதுவுமே கெட்டுப் போகக் கூடியதில்ல. எப்ப வேணும்னாலும் நீ போய் எடுத்துச் சாப்பிடலாம். பணமெல்லாமில்ல. இங்கதான் பணமென்ற ஒரு விஷயமே இல்லையே, நாம அங்க சம்பாதிச்ச குணம்தான் இங்க எல்லாமே” என்று தன் சரக்கில்லாத கடையை நினைத்துப் பேசினார் சாகுல்.

 

மாத்யூ உடனே அங்குள்ள யதார்த்ததைப் பற்றி சலீம் தெரிந்து கொள்ள வேண்டுமென்று, “சலீம், நம்ம மக்கள், நாம் செத்த உடனே நம்மை நெனச்சு உருகி நமக்காகப் பிரார்த்திப்பாங்க, நம்ம பெயரில தானம் செய்வாங்க. ஆனா நாட்கள் போகப் போக பசங்க மறந்திடுவாங்க. அவங்க உண்டு அவங்க பொறுப்புகள் உண்டுன்னு இருப்பாங்க. அவங்கள நாம் குற்றம் சொல்ல முடியாது” சமாதானப்படுத்த முயன்றார்.

 

“நாம மட்டும் என்னவாம் நம்ம அம்மா அப்பாவுக்குச் சமீபத்துல எப்பவாவது தனியா பிரார்த்தனைச் செய்திருப்போமா? இல்ல அவங்க பேருல தர்மந்தாஞ் செஞ்சிருப்போமா?" என்ற சாகுலின் கேள்விக்குச் சலீம் பதில் சொல்லும் முன்பாகச் சாகுல் மீண்டும் தொடர்ந்தார்.

 

"நாம பேரன் பேத்தி கண்ட பிறகு நம்ம தாத்தா பாட்டியெல்லாம் நமக்கெங்க நெனவிருக்கு சொல்லு? நான் சாகக் கெடந்தப்ப பேரன் ஷாகிர் வந்து, ‘உங்க பேரு என்னான்னு கேட்டான். சொன்னேன். உங்க வாப்பா பேரு என்னன்னு கேட்டான் ரபீக்ன்னு சொன்னேன். அவங்க வாப்பா பேரு என்னான்னு கேட்டான். ஜாஹிருன்னேன். அவங்க வாப்பா பேரு தெரியுமான்னான்.. தெரியுல தம்பின்னு சொன்னேன். பழைய வீட்டு பத்திரத்த விரிச்சி காட்டினான். சுப்ரமணியின் மகன் ஜாஹிருன்னு இருந்துச்சு. சரி அதுக்கு இப்ப என்னடான்னு கேட்டேன். ‘இப்ப நான் காதலிக்கிற பொண்ணோட அப்பா பேரும் சுப்ரமணிதான், வாப்பாக் கிட்ட சொல்லி சம்மதிக்க வையுங்க’ன்னு கேட்டான். அப்ப தான் நான் இங்க வந்து சேர்ந்தேன். அப்புறம் நான் அங்க எட்டிக் கூடப் போய்ப் பார்க்கல.

 

இங்க வந்த பிறகுதான் தெரிஞ்சுது இசாக்குன்னாலும் எசக்கின்னாலும் ஐசக்குன்னாலும் ஒன்னுதான்னு. நான், போதும் போதும்னு வாழ்ந்தாச்சு இன்னும் அந்த உலகத்துலயே சுத்திக்கிட்டு இருக்கப் பிடிக்கல” என்று சலீமுடன் பேசிப் பல காலமாகிவிட்டதால் வசமாக மாட்டிக் கொண்டவனிடம் மூச்சுவிடாமல் பேசிவிட்டு இடைவெளி தராமல் தொடர்ந்தார் சாகுல்.

 

“எதையோ சொல்லப் போய் எங்கயோ போய்டேன்… ம்ம் ஆமா காலப் போக்கில் நம்ம பிள்ளைங்க நம்மல மறந்திடுவாங்க. அவங்களுக்கும் பல பொறுப்புகள்னு, உலக இன்பங்கள்னு கரஞ்சிடுவாங்க. நம்ம மாதிரிதானே நம்ம புள்ளைகளும் இருப்பாங்க?” என்று இடை இடையில் சிரித்துக் கொண்டார்.

 

அப்போது அங்கு வந்து சேர்ந்த இணையப் போராளி வேந்தன், “என்ன மாத்யூ, நட்பூக்களெல்லாம் சேர்ந்திருக்கீக போல. இப்பதான் “சிலர் வாழ்க்கை முழுக்கச் சொர்க்கத்துக்குப் போகணும்னு விரும்புவாங்க, ஆனால் சாவுன்னா பயப்படுவாங்க. எவ்வளவு முரண்!” அப்படின்னு ஒரு பதிவு போட்டுட்டு வரேன், என்று கடமையுணர்ச்சியோடு இளித்தார். நல்ல உயரம், உயரத்திற்கேற்ற பருமம், கருகருவென அலையலையான சுருள் முடியுடன் கலையான முகமுடையவரை சலீமுக்கு யாரென்று தெரியவில்லை. மாத்யூ அவரை மதுரை வேந்தன் என்று அறிமுகப்படுத்தியதுதான் தாமதம். “அட, நீங்கதான் வேந்தனா? நான் உங்கள் ஃபாலோவர், நீங்க எந்த பதிவு போட்டாலும் லைக் போடுவேன்” என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு, வேந்தன் புகைப்படத்தில் வழுக்கையாக இருந்ததை நினைவுப்படுத்தியும் பேசினான்.

 

“அட ஆமங்க, இங்க வந்ததும்தான் இயற்கையாக நான் தொலைச்சிருந்த எல்லாம் திரும்ப கெடச்சுது. முடி மட்டுமில்ல, இளமை, உடல் வலிமை, சந்தோஷம் எல்லாந்தான்” என்று மகிழ்ச்சியில் இருந்த வேந்தன் தன் அறிவுஜீவித்தனத்தைத் தத்துவங்களாக பொழிந்தார் “செத்த பிறகு என்னாகும்னு என்னைக்காவது  யோசிச்சிருக்கீகளா சலீம்? சில பேரு இங்க வந்த பிறகும் உலக ஒட்டுதலிலிருந்து வெளிய வர முடியாம சிக்கித் தவிக்கிறாங்க – அது ஏன்னா, இந்த உலகத்துல அவய்ங்களுக்கான எந்த வரவேற்புமில்ல. எப்படி இருக்குங்கிறேன்? பக்கத்து வீட்டுக்காரஞ்  சாப்பிடலானலும் எனக்கென்னானு கவலையில்லாம இருந்தவய்ங்களுக்கு இங்க என்ன வரவேற்பு இருக்கும்ங்றேன்? தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்னு சொன்ன பாரதியாரு பேச்சையும் கேக்கல பக்கத்து வீட்டுக்கும் சேர்த்துச் சமைக்கிற அன்பு இங்கு வாழும்னு சொன்ன நா முத்துக்குமார் பேச்சையும் கேட்கல” என்று வழக்கமான மற்றவர்கள் மீதான தன் அக்கறையை பறைசாற்றினார்.

 

இந்த முறை சாகுல் குறுக்கிட்டு “சரி அதவிடு, இப்ப நீ கடைக்கு உள்ள போறியா இல்ல..." என்று அவர் இழுக்கும் முன்பாகவே சலீம். "இல்ல சாகுல் எனக்குப் பசி இல்ல. மகிழ்ச்சியில மனசு நெறஞ்சி இருக்கேன். எனக்காக மலையளவு பிரார்த்தனைகளான்னு மலச்சுப் போய் இருக்கேன்" என்று வராத கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருந்தான்.

 

வேந்தன் சலீமின் வயிற்றைத் தட்டியவராக, "பசியா? நமக்கு உயிரே இல்ல அப்புறம் எங்கிட்டிருந்துய்யா பசிக்கும்? ஆனா நம்ம சாப்பிடுறதெல்லாம் எங்கிட்டுத்தான் மாயமா மறையுமோன்னு தெரியலப்பா. வெளியிலயே இறங்காதுய்யா சலீமு” என்று சொன்னபோது,

 

சலீமுக்கு ஒன்றுமே புரியவில்லை என்று இன்னும் விரிவாக விளக்கினார் சாகுல். “உன் ஆற்றலை இன்னுமா நீ புரிஞ்சிக்கல? ஒலியா சுற்றி திரியலாம் சலீம்” என்றார்.

 

அவரைத் தொடர்ந்து வேந்தன், “நமக்கு விடுதலை கெடச்சிருச்சுப்பா.  நீ எத தேர்ந்தெடுக்குறீயோ அதுவாத்தான் இருப்ப,  யாதுமாய் வாழலாம். ஆனா அதுக்கான  பக்குவமும் தகுதியும் மொத உனக்கு இருக்கணும்” என்று பக்குவத்தை சலீமின் உடல்மொழியில் தேடினார்.

 

கடுமையான முகத்துடன் கூர்ந்து கவனித்த சலீமை லேசாக்கும் விதமாக மாத்யூ “அடுத்தக் கிரகத்தைப் பார்க்கணும்னு இப்பவே கிளம்பிடாத, இங்க பார்க்க வேண்டியதே நிறைய இருக்கு” என்று நட்புணர்வுடன் பேசினார்.

 

எல்லோரையும் சிரிக்க வைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் சாகுல் சொன்னார் “நீ உலகத்துக்குத் திரும்பப் போகலாம்ன்னு நினைக்கலாம், போனாலும் அவங்களுக்கு உன்ன பார்க்க முடியாது. பார்த்தாங்கன்னா சலீம்ன்னா கூப்பிடுவாங்க? இல்லவே இல்ல.” என்று சிரித்தார்.

 

அவர் எதற்காகச் சிரிக்கிறார், வேறு நம்மை எப்படிக் கூப்பிடுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு பார்த்த சலீமிடம் “உன்ன பேய்யுன்னு ஓட ஓட விரட்டுவாங்க, நீ வராதபடி என்னலாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்வாங்க." ஏதோ அனுபவ வலியோடு பிடி கொடுக்காமல் பொடி வைத்தே கண்ணடித்தபடி பேசினார் சாகுல்.

 

கண்களுக்குக் குளிர்ச்சியாகவே எல்லாக் காட்சிகளும் விரிவதாக உள்வாங்கிய சலீம் ‘இதெல்லாம் இவர்களுக்கும் தெரியுதா? இல்ல தனக்கு மட்டுந்தானா?’ என்ற யோசனையில் இருந்த போது ஒரு மரத்தில் வித்தியாசமான கனியைக் கவனித்தான். "என்ன மரம் இது?" என்று கைகளுக்கு எட்டும் கனியை தடவி ’சுவைக்கலாமா கூடாதா’ என்று எண்ணிக் கொண்டே, முதல் மனிதர் ஆதாம் கதையாக ஆகிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு கேட்டான்.

 

"மரமா?" என்று தங்களுக்கு காட்சி தராத மரத்தைப் பற்றி கேட்கிறார் என்று உணர்ந்து மூன்று பேரும் சிரித்தார்கள். ஏதோ விளங்கி கொண்டவனாகச் சலீம், "சரி விடுங்க, உங்க வீடு ரொம்பத் தொலவா? யார் கூடத் தங்கியிருக்கீங்க?" என்று பேச்சை திசை திருப்பினான்.

 

வெண்கல குண்டாவில் சில்லரையைக் கொட்டிய சிரிப்போடு சாகுல், "சரியாப் போச்சு வீடா? வந்தவுடனே வீட்ட பத்தி கேட்குற... நான் வந்து எவ்வளவு காலத்திற்குப் பிறகு எனக்குத் தங்குறதுக்கு இடம் கெடச்சது தெரியுமா?” என்று அலுத்து கொண்டார்.

 

“என் வீட்டைத்தான் நீ பார்த்தியே, அப்படியான வீடு உனக்கும் விரைவில் அமையும்” என்றார் மாத்யூ.

 

வேந்தன் வீட்டைப் பற்றி கேட்டால் தன் முதல்நாளை நினைவுக் கூர்ந்தவராக “நான் வந்தப்ப முதல் முதலா நான் பார்த்தது, என் சீனியர் வீராவையும் பாலாவையும்தான். அவய்ங்க ரெண்டு பெரும் ரொம்ப நெருக்கமான சிநேகிதய்ங்க.எல்லாரையும் கிண்டலடிப்பாய்ங்க, புள்ளைகள கூட்டிவச்சு கத சொல்லுவாய்ங்க, பாடம் கத்துக் கொடுப்பாய்ங்க. மாமிகளுக்கு வரிசைல நிண்டு ரேஷன் வாங்கித் தருவாய்ங்க, வயசானாலும் அவங்களால முடிஞ்ச எல்லா உதவியும் எல்லாருக்கும் செஞ்சாய்ங்க, அவய்ங்க ரெண்டு பேரும் சொல்லி வச்ச மாதிரி ஒருத்தன் பின்னாடி ஒருத்தனா இங்க வந்து சேர்ந்து இங்கயும் திண்ணையில உட்கார்ந்துகிட்டு அடிக்கிற லூட்டி இருக்கே, அடேங்கப்பா.  அதுமட்டுமில்ல அன்னைக்கு பொசுக்குனு ரெண்டு பேரும் அன்பை வெளிப்படுத்துறோம்னு வாயோட வாய் வச்சு முத்தம் கொடுத்துக்கிட்டாய்ங்க, அதைப் பாத்ததும் எனக்கு என்னவோ மாதிரி ஆகிப் போச்சு… அப்படி எனக்கானது அந்த முதல் நாள் மட்டுந்தான். அப்புறம் நான் ஒரு முழுமையான ஆற்றலாக மாறுன பின்னாடி எந்தவித வேறுபாடும் இல்லப்பா” என்று வியந்து கூறியபடி, “உனக்கு இந்த மாதிரி எதும் அனுபவம் இருக்கா மாத்யூ” என்று கேட்டார்.

 

“அந்த உலகத்துலதான் எல்.ஜி.பி.டி.ன்னு பிரித்து பார்த்துக்கிட்டு இருந்தோம், நான் ஏற்கெனவே சலீம்கிட்ட அதான் சொல்லிட்டு இருந்தேன். இந்த உலகத்துல பாலினப் பிரிவுமில்ல, அதனால வர ஏற்றத் தாழ்வுமில்லன்னு. எனக்கு எந்த வித்தியாசமும் தெரியல. இதெற்கெல்லாமா வெறுப்பை வெளிப்படுத்தியிருக்கோம்னு நெனச்சா எனக்கே அசிங்கமா இருக்கு” தன் உண்மையான உள்ளார்ந்த  குமுறலை வெளிப்படுத்தினார்.

 

“தப்புன்னு நெனச்சதெல்லாம் இங்க தப்பே இல்ல. இம்மையில யாருதான் தப்பு சரியெல்லாம் விதியாக்குனாங்களோ!? வாழ்க்கையை சரியாக வாழாமல் விட்டுவிட்டோமோ?” என்று மாத்யூவின் வேதனையில் இணைந்து கொண்டார் சாகுல்.

 

கையையே கைப்பேசி போல் பாவித்த வேந்தன், தான் பார்த்து வியந்த விஷயங்களை மறுமை இணையத்தில் மட்டுமல்ல, சலீமுக்கும் புரிய வைக்கும் முயற்சியில் தன் பங்குக்கு, “இங்க எனக்குப் பிடிச்ச விஷயமே, நம்ம ஊருல நாம் ஆன்னு பாத்த பிம்பங்கள், எல்லாம் இங்க அவன்பாட்டுக்கு சாதாரணமாத்தான் திரிவான், நம்ம வயித்துல அடிச்ச அரசியல்வாதிப்பயகளெல்லாம் நமக்காகச் செக்கிழுப்பான், விவசாயம் பார்ப்பான், வண்டி ஓட்டுவான், நம்ம சொல்ற எல்லா ஏவல் வேலையையும் செய்வான். ஏமாத்தி பொழச்ச அம்புட்டுப் பயகளும், பெட்டி பாம்பா அடங்கி, தொடர்ச்சியா இடத்தத் தூய்மைப்படுத்திக்கிடே திரிவான், செடிக்குத் தண்ணீர் பாய்ச்சுவான், இயற்கையைப் பராமரிப்பான், ஏதாவது ஒரு வேலையைச் செஞ்சிக்கிட்டு சுத்திக்கிட்டே கெடப்பான். அவய்ங்கள பாக்கும் போது இதெல்லாம் தேவையாடா உனக்குன்னு சிரிப்பு சிரிப்பா வரும். ஆனா பார்த்துக்க, இங்க சாக்கடையில்ல, இல்லாட்டி அதை இந்த அயோக்கியப்பயகதான் தூய்மைப்படுத்தி இருப்பாய்ங்க, பார்க்க கண் கொள்ளா காட்சியா இருந்திருக்கும். அப்புறம் நீ வீட பத்தி கேட்டேல்ல, அதுக்கு நீ தகுதியாகிட்டா உன் பெயருக்கான அழியாத வீடு உனக்கே தெரியும். சிலருக்கு வந்ததும் கெடச்சிரும் அப்படியே செட்டிலாகிடுவாங்க. உள்ள போனதும் அவங்க மனசப் பொறுத்த எல்லாம் செமயா இருக்கும்” என்று வியக்கும் விதமாக சொல்லி வைத்தார்.

 

“போன வாரம் மன்னடி ஆலிம்ஸா தர்மர் சர்புதீன் மவுத்தாகி இங்க வந்ததும் அவருக்கான வீடு வாசல் கனி வகைகள் அது இதுன்னு தடபுடலா இருந்ததுன்னு பேசிக்கிட்டாங்க. யாரு பேசிக்கிட்டாங்கன்னு என்கிட்ட கேட்க கூடாது. அப்புறம் அந்தத் தடபுடலையெல்லாம் நான் எதையும் என் கண்ணாலப் பார்க்கல. ம்ஹூம் இதெல்லாம் இப்படிதான் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா என் சொத்த பூராம் தர்மத்துக்கே கொடுத்திட்டு, உலக மக்களுக்காகவே உழச்சிட்டு வந்திருப்பேன்" என்று பெருமூச்சு விட்டார் சாகுல்.

 

’தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கும், ஊரை அடித்து உலையில் போட்டவர்களுக்கும் இவ்வளவுதான் தண்டனையா?’ என்ற யோசனையில் தலையசைத்துக் கேட்டுக் கொண்டிருந்த சலீம் 'இதற்கு மேல் இவர்களை தம் கேள்வியால் தொந்தரவு செய்ய கூடாது' என்று முடிவெடுத்தான். அந்தக் கணமே அந்த மூவரும் அங்கிருக்கவில்லை. சுற்றித் தேடினான், யாரையும் காணவில்லை. நினைத்த மாத்திரத்தில் நினைத்த விஷயங்கள் நடக்கிறதே என்ற மயக்கத்தில் இருக்கும் போது அவன் பூமியில் பார்த்திராத அதி அற்புதமான இயற்கை அழகுகள் கண் முன் விரிந்து கிடந்தது. 'எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு யுகமாகும், இங்கேதானே நிரந்தரமாக இருக்கப் போகிறோம் எவ்வளவு காலமென்றால்தான் என்ன' என்ற நினைப்பிலேயே இருந்தவனின் நெஞ்சை யாரோ அமுக்குவது போல் இருந்தது. உடல் வலிமை இழந்து பலகீனமாக படுக்கையில் கிடத்தி இருப்பதும். சுற்றி மனைவி மக்கள் அழுவதும் தெரிந்து, மூச்சை இழுத்துவிட்டான்.

 

“தேங்க் காட், ஹி இஸ் பேக் வித் அஸ்” என்று மருத்துவர் மகிழ்ச்சியாக கூறினார்.

 

சலீமின் மகிழ்ச்சிதான் முற்றும் வடிந்துவிட்டது.


Monday, June 22, 2020

வாப்பாவின் எழுத்து

வாப்பாவிற்குக் கொடுக்க வேண்டிய தந்தையர் தின வாழ்த்து மடல் கையெழுத்திட்டு கொடுக்கப்படாமலேயே போனதை இன்று நினைவுப்படுத்தி வருத்தப்பட்டாள் அக்கா. வாப்பா இருக்கும் காலத்தில் துபாய்க்கு வந்திருக்கும்போது அதைச் செய்திருக்கலாம் இதைச் செய்திருக்கலாம் என்று இன்று தோன்றி பயனில்லைதான். அவர் இங்கு வந்திருந்தபோது நண்பர் திருச்சி சையது என் வாப்பாவை சந்தித்து அவருடைய அனுபவங்களைக் குறிப்புகளாக எழுதி தர இயலுமா என்று கேட்டார். வாப்பா பத்திரிகையில் இருந்த காலத்திலேயே வேலை சம்பந்தமான எந்த ஒரு ரகசியத்தையும் யாருடனும், ஏன் ம்மாவுடனும் கூடச் சொல்ல மாட்டார் ரகசியம் காப்பார். தன் முதலாளியின் மகன் வேறு சாதி பெண்ணை மனம் முடித்த விஷயம் வேறு ஒருவர் மூலம் ம்மாவுக்குத் தெரிய வர அதைப் பற்றிக் கேட்ட போது வாப்பா சொன்னதெல்லாம் “தெரிஞ்சி நீ என்ன செய்யப் போற”என்பதே. அவ்வளவு முதலாளி மற்றும் தொழில் விசுவாசி எனலாம்.

திருச்சி சையது குறிப்புகள் கேட்டதை நானும் வலியுறுத்தவே எனக்கு ஒரு சம்பவத்தை நினைவுக்கூர்ந்து கூறினார்கள்:-

காமராஜரும் நேருவும் கலந்து கொண்ட விழாவில் படம் எடுத்துக் கொண்டிருந்த போது மேடைக்குக் கீழே இறங்கி வந்து பின்னால் நின்று பேசி கொண்டிருந்ததைக் கவனித்து வாப்பா அங்குச் சென்றபோது காமராஜர் நேருவுக்குச் சிகரெட் பற்ற வைக்க அதனை அழகிய காட்சியாகப் பார்த்தவர், படம் எடுத்துவிட்டார். இதனைக் கவனித்த காமராஜர் வாப்பாவிடம் “ஹமீது பாய் அந்தப் படம் வெளியில் வராம பார்த்துகோங்க” என்று தயவாகச் சொல்லவே, வாப்பா அதனை நெகடிவாகக் கூட மாற்றவில்லை. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை அவருடைய மகளாக நான் பகிர்கிறேன் என்றால் இப்படியான அரசியல்வாதிகள் இன்றில்லை என்பதைச் சொல்ல இந்தச் சம்பவம் தேவைப்படுவதால் மட்டுமே.

எம்.ஜி.ஆருடனான வேறு நிகழ்வை வாப்பா கைப்பட எழுதியதை இங்கு பகிர்ந்துள்ளேன்.





Sunday, June 07, 2020

தெரிந்த எழுத்தாளரின் தெரியாத எழுத்து

தெரிந்த எழுத்தாளர்களுடைய எழுத்தை வாசிக்கும் போது எழுத்தில் அந்த எழுத்தாளர் தெரிவது இயல்புதான். ஆனால் அதற்கான எந்தச் சுவடையும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் தெரிசை சிவா. குட்டிகோராவின் மணம் எனக்கு சிவாவை தெரிந்த பிறகே தெரிய வந்தது. இது சிவாவுடைய முதல் நூல், இருப்பினும் தேர்ந்த எழுத்தாளரின் எழுத்தோட்டம், நாஞ்சிலுக்கே உண்டான எள்ளல், ஒவ்வொரு கதையிலும் ஒளித்து வைத்திருக்கும் சுவாரஸ்யம் அந்த நூலை வாசித்து முடிக்க வைக்கிறது சொற்ப தினங்களில். ஆம், தினங்களில்தான். இப்போதெல்லாம் என்னால் சொற்ப நிமிடங்களிலோ, நாழிகைகளிலோ சிறிய நூலாக இருந்தாலும் முடிக்க இயலவில்லை. அதுவும் குட்டிகோரா எடுத்தால் படித்தே ஆக வேண்டுமென்று, முனையில் உட்கார்ந்து கொண்டு, அடுத்து என்னவென்ற ஆவலில் நகம் கடிக்க வைக்கும் நூல் இல்லை.
பக்கீர் பாய், அண்டி, இராமசாமி வாத்தியார், வள்ளியம்மை என்று நான்கு கதையின் முக்கியக் கதாபாத்திரத்திற்கும் ஒற்றுமை இருப்பதாக உணர்கிறேன். அதனால் முதல் நான்கு கதைகளுமே ஒரே மாதிரியான வடிவமாக எனக்குத் தெரிந்தது. முதல் பகுதி அந்த முக்கியக் கதாபாத்திரத்தின் விவரணையோடு நம் குவியத்தை அவர்கள் மீது செலுத்தி கடைசியில் அவர்கள் மன அளவு பாதிப்பை நம்மிடமும் கடத்துகிறார் நூலாசிரியர். என்னதான் வெள்ளை காகிதத்தில் ஒரு கருப்பு புள்ளி வைத்து அதனை என்னவென்று யாரிடமாவது காட்டி கேட்டால் வெள்ளை காகிதம் என்று சொல்லாமல் கருப்பு புள்ளி என்று சொல்லும் மனங்கள் தான் அதிகம் என்பதைத் தமது கதைகளில் நிறுவியுள்ளார்.

ஒரே மாதிரி கதைகள் அமைவதிலிருந்து வெளிவர அல்ல அந்த வடிவத்தை உடைக்கும் உபாயமாக அடுத்ததை ஜமீன் கதையாக்குகிறார் ஆனால் முடிவு நமக்கு முன்னதாகவே உய்த்துணர முடிகிறது.

நூலாசிரியர் சிவாவின் பலமே அவருடைய விவரணைகள்தான் என்று தோன்றுகிறது. சூழலை நம் கண்முன்னே கொண்டு வந்து, அதில் வரும் கதாபாத்திரங்களின் அமைப்பை நம்முடைய கற்பனைக்கு விட்டு வைக்காமல் அவர்களையும் விவரித்து நம் முன் நிறுத்தி பிறகு கதைச் சொல்ல ஆரம்பிக்கிறார். அதில் மிளிர்ந்தது 'வெத்தலப்பட்டி' கதை.

வேட்டியை மட்டும் கட்டும் என் மாமாவை நினைவுப்படுத்தியது 'பேண்ட்' கதை.

ஒவ்வொரு கதையும் வெவ்வேறு வகைமையாக்க வேண்டுமென்றே பேய்களையும் யட்சினியையும் சேர்த்துகொண்டு மூன்று கதைகளில் நம்மைப் பயமுறுத்துகிறார்.

குட்டிகோரா, நருவல் ஆகிய கதைகளில் எழுத்துக்களின் நறுமணத்தை நமக்கு விட்டுச் செல்கிறார்.

'முடியன்' என்ற கதையில் நையாண்டியில் முத்திரைப் பதிக்கிறார். ஜெமோவின் 'மாடன் மோட்சம்' கதையை நினைவூட்டுகிறார். அதைப் போலவே 'அண்டி' என்ற கதையும் நாஞ்சில் நாடனின் 'இடலாக்குடி ராசா'வை நினைவுப்படுத்துகிறார். சிவாவும் நாஞ்சில் எழுத்தாளர் என்பதால் அதே கதாப்பாத்திரத்தை ஒரே இடத்தில் நின்று பார்த்து எழுதலாம், ஆனால் ஒரே கதையைக் கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கும் தாக்கமே இரண்டு கதைகளிலும் வெளிப்பட்டது. அபிமான எழுத்தாளர்களின் எழுத்து சாயல் இருக்கலாம் கருத்து சாயலுமா என்ற கேள்வி எழாமல் இல்லை.

சிவாவின் எழுத்தில் ஆங்காங்கே நகைச்சுவையோடு கலந்த ஒருவரி அழகியல்கள் அழகு. நான் இரசித்ததில் சில:
'கிளாசுக்களோடு அந்த நினைவுகளையும் கழுவ ஆரம்பித்தார்'
'சாமியாப் பொறந்தா வைணவச் சாமியா... அதுவும் திருப்பதி வெங்கடாச்சலபதியா பொறக்கணும்'

இயல்பான நடையில் சொல்லப்பட்ட வெவ்வேறு வகைமையான கதைகளென்றாலும் ஒரே மாதிரியாகக் கட்டமைத்து கொண்டுவந்து நேர்மறையாக நிறைவாகிறது எல்லாக் கதைகளும். சிறுகதையென்றால் இப்படித்தான் கட்டமைக்க வேண்டுமென்று எழுத்துப் பட்டறையில் ஏதும் நூலாசிரியர் கற்றறிந்திருக்கலாமாக இருக்கும்.

நூற்றி ஐம்பது பக்கத்தில் பதிமூன்று கதைகள் இலகுவான வாசிப்புக்குத் துணையாகிறது ஆனால் எழுத்துப்பிழைகளை அடுத்தப் பதிப்பில் திருத்திவிட்டால் நன்றாக இருக்கும் அத்தோடு நூலின் உள்ளடக்கமும் எனக்கு அவசியமாகப்படுகிறது. ஜீரோ டிகிரி பதிப்பகத்தில் வெளிவந்த 'குட்டிகோரா' உண்மையானவர்களை நமக்கு அறிமுகப்படுத்திச் சில இடங்களில் நமக்குப் புன்முறுவலை அள்ளித் தருகிறது. நீங்களும் வாசித்தால் நான் சொல்வது சரியென்று ஒத்துக்கொள்வீர்களாக இருக்கும். தெரிசை சிவாவுக்கு வாழ்த்துகள்

Saturday, June 06, 2020

தெரியாம சாப்பிடலாமாம்...

சின்ன வயதில் அதாவது நான் ஆறாவது படிக்கும் வரை நோன்பு வைத்ததில்லை. நோன்பு வைக்க வேண்டுமென்ற ஆசையிருக்கும், காரணம் இஃப்தார் நேரம் அதாவது நோன்பு துறக்கும் நேரம். நோன்பு துறப்பதற்காக வகை வகையான பண்டங்கள் இருக்கும். எல்லாம் உணவகத்திலிருந்து வாங்கிய பண்டங்கள். பெரும்பாலும் நான் தான் கடைக்குச் சென்று வாங்கி வருவேன். போண்டா, சூடான ஜிலேபி, ஊத்தாப்பம் - சாதாரண ஊத்தாப்பமில்லை வடிவேலு ஒரு படத்தில் சொல்வாரே சின்ன ரவுண்டவுமில்லாம பெரிய ரவுண்டாவுமில்லாம வெங்காயத்தைத் தூவி விட்டு, நெய்யை சில கரண்டி விளாவி, முறுகலா.. அந்த வகை ஊத்தாப்பம், இப்படி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான தின் பண்டங்களுக்காகவே “ப்ளீஸ் ம்மா நாளைக்கு நானும் நோன்பு வைக்கிறேன்” என்று அடம்பிடிப்பேன். வீட்டில் உம்மாவைத் தவிர வேறு யாரும் நோன்பு வைப்பதில்லை. என் வாப்பா ரொம்ப ‘ஸ்ட்ரிக்ட் ஆபிஸர்’ யாரையும் நோன்பு வைக்க அனுமதிக்க மாட்டார். நான் நோன்பு வைக்க வேண்டுமென்று அடம்பிடித்தாலும் “வேண்டாம் உன்னால் முடியாது, அடுத்த வருடம் பார்த்துக்கலாம்” என்றே பதில் வரும். மறுவருடம் பள்ளியில் என் சகதோழிகள் எல்லாம் நோன்பு நோற்றார்கள். “நீ நோன்பு வைக்கலையா?” என்று கேட்டார்கள். வெட்கமாக இருந்தது. பள்ளிக்குக் கொண்டு போன உணவை சாப்பிடாமல் அப்படியே வீட்டுக்கு எடுத்து வந்துவிடுவேன்.
இதைக் கவனித்த உம்மா “சரி முக்கியமான நோன்பு மட்டும் முதலில் வை. அப்புறம் உன்னால் தாக்குப்பிடிக்க முடிந்தால் மட்டுமே மற்ற நோன்பு” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள். நானும் மறுநாள் நோன்பு வைத்தேன். ஏற்கெனவே சொன்னதுபோல் வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்க நான் தான் கடைக்குச் சென்று வருவேன். அப்படிப் போகும்போதெல்லாம் ’கமிஷன்’ எடுப்பேன் - அதிகமில்லை நான்கு அணா அல்லது எட்டு அணா தான். இப்படிக் கிடைக்கும் கமிஷனில் முறையாகத் தேங்காய் பிஸ்கெட் வாங்கித் தின்றுவிடுவேன். அதுவும் வாங்கி வந்து வீட்டில் சாப்பிட மாட்டேன். வீட்டில் வந்து சாப்பிட்டால் உடன்பிறப்புகள் பங்கு கேட்பார்களே, அதனால் வரும் வழியிலேயே சாப்பிட்டுவிட்டு, கடைசிக் கடியை வீட்டில் வந்து அக்காவிடம் காட்டி “பாத்தியா தேங்காய் பிஸ்கெட்” என்று வெறுப்பேற்றிய பிறகே கடைசிக் கடியை முடிப்பேன். அன்றும் அப்படித்தான் கடைக்குச் சென்று மீதம் கிடைத்த சில்லறையில் தேங்காய் பிஸ்கெட் வாங்கித் தின்று கொண்டே வீடு வந்தேன். கடைசிக் கடியை அக்காவிடம் காட்டியபோது “நீ நோன்புல்ல?” என்றாள். ’அடடா நோன்பாச்சே’ என்று அவசரமாக வாய்க் கொப்பளித்து, வாந்தி எடுக்க முற்பட்டேன். என் வாப்பா பார்த்துவிட்டார்கள் “தெரியாம சாப்பிட்டா தப்பில்ல ஆனால் தெரிந்தே வாந்தி எடுத்தா தவறு” என்றார்கள். “ஓ அப்ப தெரியாம சாப்பிடலாம் போல” என்று அடிக்கடி தெரியாமல் சாப்பிட்டேன். “நீ சரிப்பட்டு வரமாட்ட” என்று என்னை அந்த வருடமும் நோன்பு வைக்க விடவில்லை. "இனி அப்படியான தவறுகள் நடக்காது நான் சரியான முறையில் நோன்பு வைக்கிறேன்" என்று உறுதி தந்தபின், அந்த உறுதியை நான் காப்பாற்றுவேன் என்று நம்பிக்கை வந்த பின் நோன்பு வைக்க எனக்கு அனுமதி வழங்கப்பட்டது, ஊத்தாப்பமும் கிடைக்க ஆரம்பித்தது.

Monday, May 11, 2020

நடிகர் கமலஹாசன் பிறந்தநாள்

தாமதமாகச் சென்றதால் ஏதாவது உங்களுக்குக் கிடைக்க வேண்டியது எதுவும் கிடைக்காமல் போயிருக்கிறதா?
எனக்கு அப்படி நிகழ்ந்துள்ளது.

அப்போது நான் எட்டாம் வகுப்பில் இருந்தேன். நடிகர் கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி நடந்தது. எங்கள் பள்ளியிலிருந்தும் கலந்து கொண்டோம். நான் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டேன், என்னைப் போலவே தோழி சாய்ராவும் அதே போட்டியில் எங்கள் பள்ளியிலிருந்து, என் வகுப்பிலிருந்தே கலந்து கொண்டாள். போட்டியின் தலைப்பு 'கண் தானம்'. வரைந்து முடித்த பிறகு மற்றவர்களெல்லாம் என்ன வரைந்திருக்கிறார்கள் என்று பார்வையிட்டேன்.

நிறைய அழகான ஓவியங்கள் இருந்தன. 'சொக்கா எனக்கில்ல' என்று நினைத்தபடியே வந்துவிட்டேன்.

சில தினங்களுக்குப் பிறகு நான் பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றபோது என் வீட்டுக்கு கமலஹாசன் நற்பணி மன்றத்திலிருந்து வந்து ஒரு 'போஸ்ட் கார்ட்' தந்து, நான் ஓவியப் போட்டியில் முதல் பரிசு வென்றதாகச் சொல்லி, பல பள்ளிகள் கலந்து கொண்ட அந்தப் போட்டியில் எனக்கு முதல் பரிசு என்று சொல்லியதோடு, என் தந்தையிடம் ஏன் நான் வரைந்த ஓவியத்தை திரு. கமலஹாசன் தேர்ந்தெடுத்தார் என்பது வரை சொல்லிச் சென்றுள்ளனர். அந்தப் 'போஸ்ட் கார்டில்" "நீங்கள் போட்டியில் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி. நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் வரும், வந்து சேருங்கள்" என்பதாக இருந்தது.

மறுநாள் பள்ளியில் அதைக் காட்டி காலையில் கூடும் சபையில் கைத்தட்டுக் கிடைக்கப் போகிறது என்று மிகுந்த உற்சாகத்துடன் சென்றேன். வழக்கம்போல் தாமதமாகச் சென்று விட்டதால் தனியாக நிற்க வைத்துவிட்டார்கள். அந்த அட்டையைக் காட்டி இது பற்றிச் சொல்ல வேண்டுமென்று என்னை வழிமறித்த ஆசிரியரிடம் காட்டினேன். 'அதெல்லாம் வேண்டாம் இங்கேயே நில்லு' என்று தள்ளினார். சபையில் யாருக்கோ கைத்தட்டல் கிடைப்பது தெரிந்து உற்றுநோக்கிக் கேட்டால் சாய்ராவும் அதே அட்டையைக் காட்டி கைத்தட்டல் வாங்கிக் கொண்டிருந்தாள். வெற்றி பெற்றதை அங்கீகரிக்க எனக்குக் கிடைக்க வேண்டிய கைத்தட்டு, ஆனால் அவளுக்குத் தபால் மூலம் வெறும் பங்குபெற்றதற்கான பாராட்டு அட்டைக்காகக் கைத்தட்டு. 'சொக்கா எனக்கில்ல' என்று நினைத்தபடியே விட்டுவிட்டேன்.

அதன் பிறகு இது பற்றி நான் யாரிடமும் சொல்லாமல் அட்டையைப் பையில் வைத்துக் கொண்டேன். முறையான அழைப்பிதழ் வரும்போது இவர்களுக்கு உண்மை புரியட்டும் என்று நினைத்தேன். நாள் நெருங்கியது, அழைப்பிதழ் வரவில்லை. அந்த நிகழ்வும் நடக்கவில்லை. காரணம் நடிகர் கமலஹாசனின் தந்தை இறந்துவிட்டதால் அவருடைய பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு ரத்தானது. கமல் தந்தை இறந்ததற்கு அவரைவிட நான் மிகுந்த சோகத்தில் இருந்தேன்.

சில வாரங்கள் கழித்துத் தலைமையாசிரியர் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. 'ஏன் எனக்கு அழைப்பு? நான் எந்தத் தவறும் செய்யவில்லையே' என்று நினைத்தபடி தலைமையாசிரியரைச் சென்று சந்தித்தேன். அவர் பெயர் ஃபாத்திமா. அந்தத் தலைமையாசிரியருடன் ஒருவர் இருந்தார். என்னைப் பார்த்து புன்னகைத்தார், வாழ்த்தினார். ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றதைச் சொல்லி, மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வைப் பற்றிச் சொல்லி அதற்கான அழைப்பிதழ் தந்து, என்னுடன் மற்றுமொருவரும் நிகழ்வில் கலந்து கொள்ளலாம் என்றார் கமலஹாசன் நற்பணி மன்றத்தைச் சேர்ந்தவர். என் தலைமையாசிரியரின் முகத்தில் எந்த மகிழ்ச்சியும் இல்லை. இத்தனை பள்ளிகளுக்கு நடுவே தன் பள்ளியிலிருந்து ஒருவர் வெற்றி பெற்றதில் அவருக்கு மகிழ்ச்சியில்லை. அந்த அலுவலகத்தில் சாய்ராவின் மாமாவும் உட்கார்ந்திருந்தார், அவர் பள்ளி தொடர்பான பணியிலிருந்தார்.

நற்பணி மன்றத்தினர் சென்ற பிறகு தலைமையாசிரியையிடம் சாய்ராவின் மாமா "இந்தப் போட்டியில்தானே சாய்ரா வெற்றிப் பெற்றதாகச் சொன்னாள், எப்படி இப்போது இவள் பெயர் அழைப்பிதழில்?" என்பதாக உருதுவில் கேட்டார். எனக்கு மொழி விளங்காது என்று நினைத்து என் முன்னிலையில் தலைமையாசிரியரும் "ஆமாம், இவள் தந்தை பத்திரிகையில் இருப்பதால் ஏதாவது சொல்லி பரிசு வாங்கி இருப்பார்" என்பதாக விஷத்தைக் கக்கினார். எனக்கு அது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

இந்த ஃபாத்திமா என்பவர் தலைமையாசிரியர் ஆகும் வரை பள்ளி நிர்வாகத்தில் எனக்கு எந்தச் சிக்கலும், பாகுபாடும் தெரியவில்லை. ஆனால் இவர் வந்த பிறகு, அதுவும் இவர் தலைமைப் பொறுப்புக்கு முன்பே துணைத் தலைமையில் இருந்தபோதே என்னைத் 'தமிழ்' என்று ஒதுக்குவார். எந்தப் போட்டியில் பெயர் கொடுத்தாலும் எனக்கு வாய்ப்பு தர மறுப்பார். என் ஆசிரியை எனக்காகப் பேசி வற்புறுத்தினால் மட்டுமே போனால் போகிறது என்ற விதத்தில் வாய்ப்பளிக்கப்படும். அது உருதுப் பள்ளி என்பதால், தமிழ் பேசும் என்னைப் போன்றவர்களை வேறு விதமாகவே பார்ப்பார்.

அதன் பிறகு விழாவுக்கு ஆசிரியை யாரும் உடன் வர விருப்பம் தெரிவிக்காததால் அதே தலைமையாசிரியருக்குப் பயந்து கொண்டுதான், நான் என் தாயாருடன் நிகழ்ச்சிக்குச் சென்றேன். நிகழ்வில் எனக்குப் பரிசளிக்கப்பட்ட இந்தப் புகைப்படம் செய்தியுடன் எல்லாத் தமிழ்ப் பத்திரிகைகளிலும் வந்தது. சில ஆசிரியைகளுக்கு மட்டும் காட்டினேன்,

மற்றவர்களுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாததால். பத்மாவதி தமிழ் ஆசிரியர் மற்றும் மீஹால் ஆங்கில ஆசிரியர் இருவரும் என்னைப் பாராட்டி மகிழ்ந்தனர் 'நம் பள்ளிக்கூடம் மேல்நிலைப் பள்ளி என்றும் தெரியவில்லை, பத்திரிகையில் உயர்நிலைப் பள்ளி என்று செய்தியில் இருக்கிறது' என்று மட்டும் குறிப்பிட்டார்.

நான் சென்னையில் இருந்த வரை இந்த சம்பவத்தைத் தவிர வேறு எந்தப் பாகுபாடுமில்லாமல் மிகவும் பாதுகாப்பாகவே வளர்ந்துவிட்டேன். இந்தப் பாகுபாட்டையும் என்னுடன் படித்த மற்ற தமிழ் பிள்ளைகள் உணர்ந்தே இருக்க மாட்டார்கள். காரணம் வெளி பள்ளிகளுடனான போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று வரும்போது மட்டுமே இந்தப் பிரச்சனை எழும்.

ஆனால் அமீரகம் வந்த பிறகுதான் சாதி, மத, மொழியால் நாம் பிளவுபட்டிருப்பதே எனக்கு புலப்பட்டது. சமீபத்தில் பஞ்சகனி எனும் சுற்றுலா தளத்திற்கு சென்றிந்த போது மத அடையாளங்களால் பல இடங்களில் வித்தியாசமான பார்வைக்கு ஆளாக்கப்பட்டோம். கோவில் போன்ற சுற்றலா தளத்திற்கு சென்றிந்தபோது அவர்களின் பார்வையால் ஒரு அச்ச உணர்வே ஏற்பட்டு வேண்டாம் திரும்பி சென்று விடலாம் என்று பயந்து திரும்பிய இடங்களும் உண்டு. இப்படியான நிலை தமிழ்நாட்டில் வராமல் இருக்க வேண்டும்.

இப்போது வன்மத்தை முகநூலில் கொட்டும் நபர்களைக் காணும்போது மிகுந்த ஆச்சர்யமாக உள்ளது, 'இவர்கள் வளரும்போது இப்படியான பாகுபாடு எண்ணத்துடனே வளர்வார்களா? அல்லது அப்படி சொல்லித்தான் வளர்க்கப்படுவார்களா?' என்று விளங்கவில்லை. ஆனால் நான் 'பீட்டர்ஸ் காலனி'யில் மாற்றுமதச் சகோதரர்கள் என்று எந்த வேறுபாடுமில்லாமல், (இப்பவும் 'மாற்றுமத' என்று எழுதும்போதும் எனக்கு வித்தியாசமாகதான் தெரிகிறது.) அப்படியான எந்தவித பிளவுமில்லாமல் வேறுபாடுமில்லாமல் மிக நெருக்கமாகவே அண்டை அயலாரோடு பழகினோம்.

எப்போது சாதி மதப் பிரிவினை ஏற்பட்டது? ஏற்கெனவே இருந்ததா அல்லது நான் தான் அது குறித்துத் தெரியாமலேயே வளர்ந்திருக்கிறேனோ? அல்லது நகரத்தில் இல்லை. கிராமங்களில் தான் பிரிவினை அதிகமாக இருந்து அதன்பின் பரவியதா?

இப்போது எதற்காக இந்த மலரும் நினைவுகள் என்று நீங்கள் நினைக்கலாம், கொரோனா நேரத்தில் பழைய புகைப்படங்களை எடுத்துக் குழந்தைகளுடன் அதன் பின்னணி பற்றிச் சொல்லும்போது எழுந்த கேள்விகளின் தொகுப்பே இந்த நினைவலை.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி