Friday, February 01, 2008

நாடகமே உலகம்

செய்வதையும்செய்து விட்டு இப்படி எழுத என்ன அருகதை இருக்கிறது என்பவர்களுக்கு முதலிலேயே ஒரு விசயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். இதைச் சொல்லும் தார்மீக உரிமை கூட எனக்குக் கிடையாது என்பதை உணர்ந்த பிறகே இதனை எழுதுகிறேன். ஆனால், நடந்த உண்மைகளுக்கு சாட்சியாக இருக்க நேர்ந்ததால் அதனை வெளிப்படுத்தவே இதனை இங்கே பதிவாக்குகிறேன்.

அரட்டை அரங்கத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். எனக்கும் அப்படித்தான். தொலைக்காட்சியில் அவரவர் பிரச்சனையைப் பேசுவதும் அதற்கு உதவி பெறுவதுமாக இருக்கும் அரட்டை அரங்கத்தைக் கண்ணீர் மல்கப் பார்த்திருக்கிறேன். பேச்சுத்திறனை வியந்திருக்கிறேன். 'வாய் பார்க்காதே' என்று அதட்டும் அம்மாவும் கூட என்னைப் பார்க்க அனுமதித்ததாலோ என்னவோ அந்த நிகழ்ச்சி பிடித்திருந்தது. ஆனால் சிலர் அதை வெறும் நடிப்பு என்று கிண்டல் செய்தபோது கொஞ்சம் யோசித்தாலும் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனுஷ்ய புத்திரனின் 'அரட்டையும் அரட்டலும்' கட்டுரையை வாசித்த போது அந்த நிகழ்ச்சியை பார்க்கும் கண்ணோட்டமே மாறிவிட்டிருந்தது. அதுவும் அவர் அந்தக் கட்டுரையில் எப்படி எல்லோரும் ஒரே மாதிரியான குரலில், பேசும்முறையில், முகபாவத்தில், உடல் அசைவில் பேச முடிகிறது. பல ஒத்திகை பார்த்து பிரச்சனையை கண்ணீருடன் எப்படி சொல்கிறார்கள் என்று எழுப்பிய கேள்வி சிந்திக்கத் தூண்டியது. அதன் பிறகு அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அதுவே ஒலித்துக் கொண்டும் இருந்தது.

துபாயில் அரட்டை அரங்கம் என்று அறிவிப்பைப் பார்த்தேன். ஆனால் கலந்துக் கொள்ள ஆவல் பெரிதாக வரவில்லை. பல நகைச்சுவைப் பட்டிமன்றங்களில் பேச்சுக்காக நகைச்சுவைக்காக எத்தனையோ தலைப்பை எடுத்துப் பேசியிருக்கிறேன். அது வெறும் பேச்சாகத்தான் இருக்குமே தவிர என் மனதின் கருத்தாக வாதமாக அமையாது. என் நோக்கமெல்லாம் பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதாகவும் என்னுடைய பொழுதுபோக்காகவும் மட்டுமே அமையும். அதனாலேயே இந்த 'சீரியஸ்' மற்றும் உருக்கமான அரட்டை விளையாட்டுக்குப் போகவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களே உங்களைப் போன்றவர்கள் நிகழ்ச்சிக்குத் தேவை என்று வீட்டில் சொல்லிவிட கலந்து கொள்ள நேர்ந்தது.

எந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டாலும் அதில் அக்கறை செலுத்தாத வீட்டினருக்கும் கூட இம்முறை நான் ஒவ்வொரு சுற்றில் தகுதி பெறும்போதும் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அவர்கள் 'இந்தச் சுற்றில் தேர்வாகிவிட்டாயா?' என்று கேட்கும் போதெல்லாம் ஏதோ புது பொறுப்பு வந்துவிட்டதாக பயம் மேலோங்கியது. கொடுக்கப்பட்ட தலைப்போ 'அமீரக வாழ்வில் யாருடைய பிரிவு அதிக வேதனை தருகிறது
1. குடும்பம்
2. காதலி
3. நண்பர்கள்
4. தாய்மண்
5. என்னத்த பிரிவு? இங்கு நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்'.

தலைப்பு வந்தவுடன் என்னை நன்றாகத் தெரிந்தவர்கள் அத்தனை பேரும் நான் 'நிம்மதியாக இருக்கிறோம்' என்று தான் பேசுவேன் என்று சரியாகச் சொல்லிவிட்டார்கள். நானும் எல்லாச் சுற்றிலும் நிம்மதியைப் பற்றிப் பேசியே தகுதியும் பெற்றேன். இறுதிச் சுற்றின் முடிவுக்கு எதிர்பார்த்திருந்த போது அழைப்பு வந்தது 'தேர்வாகிவிட்டீர்கள் ஆனால் எங்களுக்காக நீங்கள் வேறு தலைப்பில் பேச வேண்டும். உங்கள் பேச்சுத்திறனை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறோம்' என்று. எனக்குப் பேசக் கொடுத்த தலைப்பு 'தாய்மண் பற்றிய பிரிவு'. விரும்பிப் பேசுவது வேறு, அலங்காரப் பேச்சு வேறு - இதற்கு உடன்பட வேண்டாமென்று தோன்றினாலும் வீட்டில் உள்ளவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக ஒப்புக் கொண்டேன். யதார்த்தமில்லாது சோகம் கொட்டி நடிப்பது எனக்கு கடினமாகப்பட்டது.

ஆனால் 'முடியும்' என்று என் எண்ணத்தையே அதற்கேற்ப மாற்றிக் கொண்டு நாடகத்திற்கு தயாரானேன் அவர்களும் ஒரு சில விவரங்களையும் தந்து 'தயார்படுத்தினார்கள்'. என்னுடன் பேசியவர்களில் ஒரு பெண் அவர்களுக்கு 'brain tumor' இருந்த போது தன் குடும்பத்தினர் எப்படி ஒத்துழைத்தார்கள் என்று பேசி இதைவிட இந்த இடத்தில் இன்னும் உருக்கமாக்குவது எப்படி என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் ஒரு குழந்தையின் மரணத்தை பற்றி ஒத்திகையில் பேசி முடித்தவுடன் தேர்வுக்குழுவினரோ 'அந்த இடத்தில் இன்னும் உருக்கமாக இது போல் பேசுங்கள்' என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்படியாக ஒவ்வொருவருக்கும் எப்படி பேசுவதென்பது பற்றி குறிப்புகள் வழங்கப்பட்டபோதுதான். அரட்டை அரங்கம் என்பது 'நாடக அரங்கம்'தான் என்று தெள்ளத்தெளிவானது. இதனால்தான் எல்லோர் குரலும் ஒரே விதமாக ஒலிப்பதும் புரிந்தது.

நிகழ்ச்சி அரங்கேறியது சில வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு வேலை தினமாதலால் பார்க்கவுமில்லை அது குறித்து வீட்டாருக்கு நினைவுப்படுத்தவும் மறந்திருந்தேன். ஆனால், நான் பேசி முடிந்ததும் முகத்திற்கு வட்டம் போட்டு 'அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்' என்ற பாடலையும் ஒலிக்கச் செய்தார்களாம். ஒளிபரப்பிய நொடியிலிருந்து ஊரிலிருந்து சுற்றமும் நட்பும் அழைத்துப் பாராட்டு மழை பொழிந்தார்கள். என் வாப்பா என்னிடம் சரியாக பேசக் கூட முடியவில்லை காரணம் என் பேச்சைக் கண்டு கண் கலங்கி தொண்டையும் அடைத்துவிட்டிருந்தது. என் நடிப்புக்கு இவ்வளவு சக்தியா என்று நினைத்துக் கொண்டேன். எனது மாமியார் அழைத்து 'நீங்க பேசுனது சந்தோஷமா இருந்துச்சு ஆனா நீங்க பேசின விசயம் வேதனையா இருந்துச்சு. அங்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னா இங்கு வந்திடுங்க' என்று அப்பாவித்தனமாகச் சொன்னது மனதைச் சங்கடப்படுத்தியது. இதையெல்லாம் விட என் மாமா மகனுக்கு நிச்சயித்த பெண் இவனுக்கு துபாய்க்கு தொலைபேசி 'துபாய் மாப்பிள்ளைன்னு சொன்னதும் கல்யாணமாகி நானும் அங்க வரலாம்னு நினைச்சிருந்தேன். உங்க மச்சி பேசுனதப் பார்த்து அந்த ஆசையே போயிடுச்சு. உங்களுக்கெல்லாம் நம்ம நாட்ட பிரிஞ்ச ஏக்கம் இவ்வளவு இருக்குன்னா அங்க இருக்க வேணாம் வந்திடுங்க' என்று சொன்னார்களாம். அதை அவன் என்னிடம் சொல்லும் போது இந்த வருடத்தின் மிகப் பெரிய நகைச்சுவை என்றுதான் சிரிக்க முடிந்தது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுவதை அப்படியே நம்பி விடும் அளவுக்கு இதைக் கேட்கிறவர்கள் முட்டாள்களா, அல்லது அவர்களை முட்டாளாக்க முடிவு செய்து இப்படி வேஷம் போட்ட நாங்கள் முட்டாள்களா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இதைப் போல் எத்தனை பேர் நான் இப்படிப் பேசியதை உண்மையென்று கண்மூடித்தனமாக நம்பி 'உச்சு' கொட்டியிருப்பார்கள், கண்ணீர் வடித்திருப்பார்கள். அதற்கு நானும் காரணமானதை நினைத்து என்னை நானே நொந்துக் கொண்டேன். இந்த மாதம் நடந்த ஜெயா 'மக்கள் அரங்கத்தில்' அதனாலேயே கலந்துக் கொள்ளவில்லை.

அரட்டை அரங்கத்தில் என்னுடன் ஒருவர் 'இலங்கைத் தமிழர்' என்ற முகவுரையோடு ஆரம்பித்துப் பேசினார். ஆனால் அவர் பேச்சு எனக்கு இலங்கைத் தமிழாகத் தெரியவில்லை அதுவும் அவரை முதல் சுற்றில் சாதாரண தமிழில் பேசி பார்த்த நினைவும் இருந்ததால் அவரிடம் நான் கேட்டுக் கொண்டது ஒன்றே ஒன்றுதான் 'நீங்கள் இலங்கைத் தமிழராகப் பேசுங்கள் பிரச்சனையில்லை ஆனால் நீங்கள் பேசுவது மொத்த இலங்கைத் தமிழரின் பிரதிபலிப்பாகட்டும் என்றேன். "மற்றவர்களுக்கெல்லாம் தற்காலிக பிரிவுதான் ஆனால் தாய் மண்ணை மீண்டும் எப்போது பார்ப்போம் என்று தெரியாமல் தவிப்பவர்களின் குரலாக உங்களுடையது ஒலிக்கட்டும்" என்றேன். அவரோ 'நிம்மதி' என்ற தலைப்பிற்குப் பேசினார். இலங்கைத் தமிழராக பேசிய அதே நபர் மக்கள் அரங்கில் சாதாரண தமிழில் பேசி என் சந்தேகத்தை தீர்த்து விட்டார். நாடகத்தில் இது கேடுகெட்ட நாடகம் என்று நினைத்துக் கொண்டேன்.

இந்த அரட்டை அரங்கத்தில் / மக்கள் அரங்கில் எத்தனையோ பேர் பேசுகிறார்கள் ஆனால் ஒருவரும் நடப்பது நாடகம்தான் என்று மற்ற அப்பாவிகளுக்குச் சொல்லாமல் இருப்பது ஏன்? நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களே உண்மையை வெளியில் சொன்னால் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து அதில் ஏற்படும் பச்சாதாபம் குறையும்தானே? ஒத்திகை பார்த்து அழுதழுது சோகத்தை உள்ளிழுத்துப் பேசுகிறார்கள் சரி, ஆனால் ஒத்திகையில் கேட்டுவிட்ட அதே செய்தியை மீண்டும் நிகழ்ச்சியில் கேட்கும் போது எப்படித்தான் மடை திறந்த வெள்ளமாக டி.ஆருக்கும் சரி விசுவுக்கும் சரி தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறதோ தெரியவில்லை. சத்தியமா 'கிளிசரின்' போடாமல் இவ்வளவு கண்ணீர் வடிப்பதை முதல் முறையா பார்க்கிறேன்.

இந்த நிகழ்ச்சி மக்கள் அரங்கமாக, அரட்டை அரங்கமாக இன்னும் 'சன்', 'ஜெயா'வில் பல வருடங்களாக பல ஊர்களில் நடந்தவையாக ஒளிபரப்பிக் கொண்டிருப்பதற்கு காரணம் நம் மக்கள் இன்னும் முட்டாள்களாக இருப்பதுதான். மக்கள் விழித்துக் கொள்ள என் ஒரு பதிவு மட்டும் போதுமா என்ன?

62 comments:

குசும்பன் said...

வாங்க வாங்க ஊரில் தான் இருக்கீங்களா?:)

அப்புறம் நீங்க சொல்லிதான் இதுபோல் ஒத்திகை எல்லாம் நடக்கும் என்று தெரிகிறது!

யப்பா இதை யாராவது T.R க்கு அனுப்புங்க! ஏ டன் டனக்கா டனக்குனக்கான்னு வந்துடுவார்

பாச மலர் / Paasa Malar said...

மிக நேர்மையாக பங்கு பெற்ற பின்னும் நீங்களே விமர்சித்திருப்பது பாராட்டுக்குரியது.

இந்நிகழ்ச்சிக்கு ஒத்திகை இருக்குமென்று முன்னரே யூகித்திருந்தாலும்..இந்த அளவு நாடக ஒத்திகை ஏற்பாடு நான் சற்றும் சிந்தித்துப் பார்க்காத ஒன்று..

ஏமாற்றங்களில் இது ஒரு வகை.இதை நிச்சயமாய் நான் எதிர்பார்க்கவில்லை.

கண்ணீர் வருவது ஒன்றும் பெரிதல்ல ஜெஸிலா..பொய்யென்று தெரிந்தும் உணர்ச்சி மேலீட்டால் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பார்த்தே அழுபவர்கள்தானே நம்மில் பலர்..

Unknown said...

ஆஹா அப்படியா கதை!
நாங்கல்லாம் இன்னும் வெள்ளாந்தியா 'உச்' கொட்டிக்கொண்டு.
கண்ணத் தொறந்தீங்க தாய்க்குலமே.

ramachandranusha(உஷா) said...

ஜெஸி போட்டீங்களே ஒரு போடு ;-) பொதுவா வெளி நாட்டுல வசிக்கும்பொழுது, உறவுகள், தாய்மண் இவைகளை விட்டு
பிரிந்த ஏக்கம், பெற்ற தாய்தந்தையர்களை அனாதையாய் தவிக்கவிட்ட தவிப்பு கண்ணீர்மல்க சொல்லும்பொழுது சிரிப்பாய்
வரும். யதார்த்தத்தில் யாரும் சொல்ல கேட்டதில்லை. மேலும் இவுங்களை ஊர் பார்க்க போக விடாம யார் தடுத்தாங்க???
லேபர்ஸ், வீட்டு வேலை செய்யும் பெண்கள் போன்று மிக குறைந்த சம்பளமும், டிக்கெட், விசா செலவு போன்று எந்த சலுகையும்
இல்லாமல், வருட கணக்காய் உறவையும், ஊரையும் பிரிந்து தனிமையில் வாழும் மக்கள் மட்டுமே அமீரக வாழ்க்கையில்
கஷ்டப்படுபவர்கள்.

Anonymous said...

உண்மையை உரக்கக் கூறியதற்கு நன்றி. தொலைக்காட்சிகளில் இடம்பெறும் எல்லா நிகழ்ச்சிகளும் இது போன்ற நாடகங்கள் தான். சீரியல் போல, மக்களின் உணார்ச்சியை வைத்தே காசு பார்ப்பது இவர்களில் வேலை.

குலவுசனப்பிரியன் said...

//இதைச் சொல்லும் தார்மீக உரிமை கூட எனக்குக் கிடையாது//
உங்கள் நேர்மையைப் பாராட்டுகிறேன். பலரும் தவறுகளிலிருந்துதான் பாடம் கற்றுக் கொள்கிறோம்.
//
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுவதை அப்படியே நம்பி விடும் அளவுக்கு இதைக் கேட்கிறவர்கள் முட்டாள்களா, அல்லது அவர்களை முட்டாளாக்க முடிவு செய்து இப்படி வேஷம் போட்ட நாங்கள் முட்டாள்களா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
//
தொடரிலும் திரைகளிலும் வரும் கற்பனைப் பாத்திரங்களை ஆதாரமாக வைத்து விவாதம் செய்வதையும் காட்டுகிறார்கள். அதையெல்லாம் பார்க்கும் நமக்குத்தான் வேறு போக்கிடம் தெரியவில்லை.
வீட்டில் இந்த தொலைக் காட்சிகளுக்கு இணைப்பு வைத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் என் மனைவி இணைய தளங்களின் மூலம் ஒரு நிகழ்ச்சி விடாமல் பார்க்கிறாள். உங்கள் அனுபவத்தை சொன்னால் மோகம் தெளியக்கூடும்.

பகிர்தலுக்கு நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

நல்ல பதிவு. முன்பே அறிவித்திருந்தால் டி.வி பார்த்திருப்போமே.
:)

கோபிநாத் said...

ஆஹா...இம்புட்டு விஷயம் நடந்திருக்கா!!

\\இந்த நிகழ்ச்சி மக்கள் அரங்கமாக, அரட்டை அரங்கமாக இன்னும் 'சன்', 'ஜெயா'வில் பல வருடங்களாக பல ஊர்களில் நடந்தவையாக ஒளிபரப்பிக் கொண்டிருப்பதற்கு காரணம் நம் மக்கள் இன்னும் முட்டாள்களாக இருப்பதுதான்.\\

யாருக்கு தெரியும் அவுங்களும் ரசிக்கிற மாதிரி நடிக்கிறாங்க போல..;)

Thekkikattan|தெகா said...

அட ஜெஸிலா,

அது நீங்கதானா அது? அய்யோ நானும் அதனைப் பார்த்தேனே... ஆனா நீங்கதான் அதுன்னு எனக்குத் தெரியாது. புல்லரிக்க வைச்சிட்டீங்க, நெஜமாலுக்குமே... கண்ணீர் தண்ணியே வரவழைச்சிட்டீங்க அவ்வளவு அழகான நடிப்பு போங்க... :))).

கடந்த வாரம்தான் இது போன்ற நிகழ்ச்சி தயாரிப்பில் பின் மேடையில் என்ன நடக்கிறது என்பதனைப் பொருட்டு பேசிக்கொண்டோம்.

இங்கு இப்பொழுது முகத்திரையை டர்ரென்று கிழித்து வைத்து விட்டீர்களே :-)))

தேவையான பதிவு! உண்மை பகிர்தலுக்கு ரொம்ப நன்றி, ஜெஸிலா!!

உங்கள் "நாடக நிகழ்ச்சி" இன்னமும் கிடைக்கிறது, www.tamiltube.com

Jazeela said...

வாங்க குசும்பரே. ஊரிலதான் இருக்கேன். என்ன செய்றது மாத கடைசி, மாத ஆரம்ப வேலை அதிகமா இருக்கும். அதான் வலைப்பக்கமே வரலை. டி.ஆருக்கு சொல்லியனுப்பிச்சா டன் டனக்கான்னு வரமாட்டார் டன் டன்னா வந்து கண்ணீர் வடிப்பார். :-)

நன்றி பாசமலர். நீங்க சொன்னா மாதிரி திரைப்படங்களை பார்த்து அழுகிற மென்மையான மனசுல நமக்கெல்லாம், அதத்தான் இவங்க பயன்படுத்திக்கிறாங்க.

சிலருக்காவது அறிவு கண் திறந்ததே. ரொம்ப சந்தோஷம். நன்றி சுல்தான் பாய்.

சரியா சொன்னீங்க உஷா. 100% உண்மை. ஆனா யாரு ஒத்துக்கிறா? உருக்கமா கவிதை எழுதி மடல் மூலமா பரப்பிக்கிட்டுல இருக்காங்க:-)

ஆமா அனானி, நம்மவர்கள் ஏமார்ந்த கோழின்னு அல்லாத்துக்கும் தெரிஞ்சிப் போச்சு. :-)

'குலவுசனப்பிரியன்' பெயரே ரொம்ப புதுசா இருக்கே. இணையத்தில் பார்க்கிற அளவுக்கு அப்படி என்னங்க இருக்கு? நல்ல புத்தகமா வாங்கி தாங்க கவனம் திசை திரும்பும்.

சிறில், அதெல்லாம் பார்த்து கண்ணீர் வடிச்சிட்டீங்கன்னா என் பாவக் கணக்கு கூடிடும் பாருங்க அதுக்குத்தான் சொல்லல :-). ரொம்ப ஆசப்பட்டீங்கன்னா கு.பிரியன் சொன்னா மாதிரி இணையத்தில் இன்னும் கிடைக்கும் தேடிபிடித்து பாருங்க. நன்றி.

Jazeela said...

//யாருக்கு தெரியும் அவுங்களும் ரசிக்கிற மாதிரி நடிக்கிறாங்க போல..;)// அப்படித்தான் போல கோபி. ஆனா 'ஐயா' 'கொய்யா'ன்னு போட்டு சிலர் வரிந்துக்கட்டிக்கிட்டு பேசுவாங்களே நினைக்கவே தமாஷா இருக்கு.

தெகா, இப்ப புரிஞ்சுதா என் ஒப்புதல் வாக்குமூலம் எதுக்குன்னு. :-). நீல சாயம் வெளுக்க வேண்டும் டும் டும் டும் :-)

Anonymous said...

Why you did not inform us about the programme in TV? I missed the opportunity to see you.

Nilofer Anbarasu said...

சில சமயம் பேசியவர்களை பார்த்து விசு, "மக்கள் அரங்கம் உங்களை வணங்குகிறது" என்று சொல்லுவர். கேட்பதற்கே மிக பெருமையாக இருக்கும். விசு அவர்களை தயவு செய்து இந்த வார்த்தைகளை இனி உச்சரிக்க வேண்டாம், மீறி உச்சரித்தால், நிகழ்ச்சி முடியும் போது என்று உங்கள் பெயரை போட்டுவிடுங்கள்.

இது விசுவிற்கு மட்டும்மல்ல,Sun TV T.R n Raj TV Rajaவுக்கும் பொருந்தும்.

தமிழ் முகம் said...

பதிவிற்கு நன்றி. இத்தனை வருடங்கள் மெய்மறந்து ரசித்ததை நினைத்தால் சிரிப்பாகத்தான் வருகிறது. ஒளிவு மறைவின்றி பகிர்ந்துக் கொண்டமைக்கு பாராட்டுகள். இந்த நிகழ்ச்சியில் முன்னால் ஒரு முறை பங்கு பெற்ற என் நண்பன் கூட இத்தகைய ஒத்திகை பற்றி எதுவும் சொல்லவில்லை. உங்களின் தைரியம் ஆச்சரியப்பட வைக்கிறது.

cheena (சீனா) said...

பல நாள் சந்தேகம் இன்று தீர்ந்தது - இச் சந்தேகம் தீர இவ்வளவு நாட்களா ? ஏமாந்து விட்டோமே

KARTHIK said...

வணக்கம்

நல்ல பதிவு எங்க வீட்டுல சொன்ன நம்ப மாட்டாங்க
என்ன செய்யுறது media-வை தான் நம்புறாங்க.

இந்த பதிவு எனக்கு mail லில் கிடைக்கவில்லை
நன்றி

நிஜமா நல்லவன் said...

இது போன்ற அலட்டலான அனுதாப ஒத்திகை நிகழ்ச்சிகள் பற்றி தெள்ள தெளிவான பதிவு இட்டமைக்கு மிக்க நன்றி. உங்கள் நேர்மை பாராட்டுக்குரியது.

Anonymous said...

Hi,,,
am also one among those cried for the arattai arangam....
unbeleivable....
thanks for ur info...
kavitha

Anonymous said...

வணக்கம் ஜெஸிலா,
98-ம் வருடம் ஒரு சில முறைதான் விசுவின் அரட்டை அரங்கம் பார்த்தேன் என் மனதுக்கு இவை எல்லாம் நடிப்பாக பட்டதால் மேற்கொண்டு பார்க்க விரும்ப வில்லை தங்களின் "நாடகமே உலகம்" படித்த பின் என் முடிவு சரிதான் என சந்தோஷபடுறேன். தங்கள் மடலை என் நண்பர்களுக்கும் இ-மெயில் மூலம் அனுப்பி உள்ளேன்(அவர்கள் அனைவரும் விசுவின் விசிரிகள், இனியாவது திருந்துவாங்கன்னு நம்புறேன்)
நீங்கள் பேசியதை பார்க்கவிரும்பி கடந்த ஒரு வாரமா நெட்ல தேடி பார்த்தேன் இன்று பார்த்தேன் ரொம்ப அருமை தங்கள் நடிப்பு அதேவேளை தங்கள் நேர்மைக்கு என் நன்றிகள்.

இந்த பிளாக்குக்கு நான் புதியவன் விதிமுறைகள் அவ்வளவாக தெரியவில்லை நீங்கள் பேசியதின் லிங்க் முகவரியை இங்கே நான் கொடுக்க அனுமதி உண்டா?
தெரியபடுத்தவும்

Nilofer Anbarasu said...

Opps....I missed few words in my previous comment, I am publishing the same here compltely.
-------
சில சமயம் பேசியவர்களை பார்த்து விசு, "மக்கள் அரங்கம் உங்களை வணங்குகிறது" என்று சொல்லுவர். கேட்பதற்கே மிக பெருமையாக இருக்கும். விசு அவர்களை தயவு செய்து இந்த வார்த்தைகளை இனி உச்சரிக்க வேண்டாம், மீறி உச்சரித்தால், நிகழ்ச்சி முடியும் போது Story, Screenplay, Direction என்று உங்கள் பெயரை போட்டுவிடுங்கள்.

இது விசுவிற்கு மட்டும்மல்ல,Sun TV T.R n Raj TV Rajaவுக்கும் பொருந்தும்.

shabi said...

ungalidam kappa lukku pona macchan putthahma engu kidaikkum enru kettirundhen adhan muhavari kodukka mudiyuma

தென்றல் said...

மிக நேர்மையாக விமர்சித்திருக்கிறீர்கள், ஜெஸிலா!
பாராட்டுகள்!!

பாசமலர் குறிப்பிட்டமாதிரி...
இந்நிகழ்ச்சிக்கு ஒத்திகை இருக்குமென்று தெரிந்தாலும் ... 'இந்த அளவுக்கா?'..

TR வந்தபிறகு அரட்டை அரங்கம் பார்க்கும் ஆசையே போயிடுச்சி...
விசுவும் அப்படிதான... என்ன கொடுமையோ.. போங்க...!!

ரசிகன் said...

நிஜத்தை வெளிப்படையாக சொல்ல... அதுவும் தனக்கு பெருமை தந்த ஒரு விடயத்தின் முகத்திரையை கிழிக்க,அசாத்திய தைரியம் வேண்டும்.
புகழ் என்ற மாயை வட்டத்திற்க்குள் சிக்காமல் வெளி வந்து விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.இந்த சுதந்திர உணர்வுதான் ஒரு எழுத்தாளரின் அடிப்படைத் தேவை. வாழ்த்துக்கள் ஜெசிலா அக்கா...:)

நான் கடவுள் said...

ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன். மிகத் துனிச்சலான பதிவு, இனி நன்பர்கள்கூட ஒரு முறைக்குப் பலமுறையாக யோசித்தே பேசுவார்கள். முகத்திரையை கிழிப்பது என்பது இதுதானா ஜெசிலா? தொடரட்டும் தங்களின் அறுவை சிகிச்சை. i mean operation.

கீழை ராஸா said...

அருமையான பதிவு, அரங்க நாயகர்கள் இருவரும் சிறந்த நடிகர்கள்
அவர்களுக்கு நிச்சயமாக கிளிசரின் தேவையில்லை,அதே சமயம் அவர்கள் இருவரும் புகழ் பெற்ற டைரக்டர் கூட அதனால் தான் அடுத்தவர்களையும் கிளிசரின் இல்லாமல் அழவைக்க இயலுகிறது..,
பாதியில் வெளி வந்து இந்த பதிப்பை நீங்க வெளியிட்டிருந்தா, நீங்க பொறாமையில் பேசுறதா..நினைக்க வாய்ப்பு உண்டு, ஆனால் நீங்களோ உள் சென்று உண்மை தெரிந்து வந்து
அவர்கள் முகத்திரை கிழித்துள்ளீகள்..
மற்றவர்களின் வற்புறுத்தலுக்கு கலந்து கொண்டு பிடிக்காத தலைப்பில் பேசும் போது உங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று என்னால் யூகிக்க இயலுகிறது...இந்த நடிப்புத்துறையில் தொடராமல் மக்கள் அரங்கத்தில் வெளிநடப்பு செய்தது பாராட்டுதலுக்குரியது...

Anonymous said...

unnaiyil , kalakkittinga jazila machi
nijathtai veliyil thandathirku.nandri.
ella edangalilum perumaikkahaum suyanalathukkahaum valbavarhal erukkathtan seihirarhal
like srilankan who spoke.e tanal
sila elaihal udavi peruvadu mattum aruthal .zakkir ksa.

Anonymous said...

unmayil, kalakkitinga jazila machi.
nijathai veliyil thanthatirku.nandrihal.
nam emara innum ennena vedikkaihal
ullado?

ella edangalilum perumaikkahaum suyanalathukkahaum valbavarhal irukkathtan seihirarhal like the srilankan speaker.

idanal sila elaihal udavi peruvadu mattum aruthal .
zakkir.jeddah.

காட்டாறு said...

உங்கள் தைரியத்திற்கு பாராட்டுகள்! எந்த தலைப்பு கொடுத்தாலும் பிச்சு உதறிருவீங்கன்னு தெரிந்து தான் கொடுத்திருப்பார்கள். நீங்கள் பகடைக் காயாகிவிட்டீர்களே. :(

சுற்றம் சூழல் மனதில் ஓடிய எண்ண அலைகள்! ம்ம்ம்.... கஷ்டம் தான் போங்க. நம்ம மக்கள் நாடகமின்னு தெரிஞ்சாலும் உட்கார்ந்து பார்ப்பாங்க. திருந்த மாட்டாங்கன்னு தொலைகாட்சி விரும்பி பார்க்கும் மக்களுக்கு நல்லா தெரியும். ஆனாலும் அடிக்ஷன். ம்ம்ம்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ தெரிந்திருந்தால் நானும் பார்த்திருப்பேனே... சார் சார் என்றூ அழைப்பதும் கத்துவதும் உதடு கடித்து அழுவதும் என்றும் .. ஒரேடியாக போரடித்து விட்டது என்று பார்க்காமல் விட்டு பலவருடம் ஆகிவிட்டது..

koothanalluran said...

முழுக்க முழுக்க ஞாயிற்றுக் கிழமைகளில் அரட்டை அரங்கம். மக்கள் அரங்கம்,அகடவிகடம், எல்லாவற்றையும் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த போது இதைப்பற்றி எழுத வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன் அழகாக ஆழமாக எழுதி விட்டீர்கள் பாராட்டுக்கள்.

பெரிய பேருந்து நிலையங்களில் பேருந்தில் அமர்ந்திருக்கும் போது, சீருடையணிந்த சில மாணவிகள் தொடையிலே அட்டையை வைத்து விட்டு போவார்கள் அதில் எனக்கு பேசவராது,காது கேட்காது அம்மா விதவை ஊனமுற்றவர் உதவி செய்யுங்கள் என எழுதியிருக்கும் அது போலாகிவிட்டது விசுவின் அரட்டை அரங்கம். உதவி வேண்டுவோர் உணர்ச்சி வசப்பட்டு அழுவார் விசுவும் கையில் ஒரு துண்டோடு கூடவே அழுவார் பார்வையாளர்களிடமிருந்து பணம் கொட்டோகொட்டென கொட்டும்.

ஆசிப் பாணியில் 'நல்லா இருங்கடே'

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.. முதல் தடவை உங்க வலைப்பதிவுக்கு வந்திருக்கிறேன்..:)

உங்க பதிவை பார்த்து அப்படியே அரண்டுட்டேன்.. இந்த 'reality shows' 'talk shows' எல்லாம் சும்மா டிராமா தான்னு ஊகிச்சது தான். இருந்தாலும் இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. நானும் அரட்டை அரங்கம் எல்லாம் பார்த்து ரொம்ப வருசமாச்சு.
ஆனா, இதே மாதிரி சில வருடங்களுக்கு முன்னால், வெளி நாட்டிலே இருக்கும் தமிழர்கள் இப்படி உணர்ச்சிகரமா பேசினப்போ எங்க கம்மா, ம்மா, சாச்சி எல்லாம் சஉதியில் இருக்கும் மாமா மார்களை பற்றி ரொம்ப வருந்தியது நினைவுக்கு வருது,.. அடப்பாவிங்கள.. அப்பவே நம்மள கேனைங்களாகிருக்காங்க.

btw, வலை உலகத்துல, வாப்பா, மச்சி னு போட்டிருக்குற பதிவை பார்த்ததும் ரொம்ப சந்தோசமா இருக்குது... :) :)

Jazeela said...

நன்றி தமிழ் முகம்.

சீனா, சந்தேகம் தீர நான் காரணமானதற்கு சந்தோஷம். :-)

கார்த்திக் நான் எழுதியதை காட்டுங்க நம்புவாங்க.

மங்கை said...

நான் அன்னைக்கே பின்னூடம் போட்டேனே..எப்படியோ காத்துல போயிறுச்சு போல....சரி

நானும் ஒரு தடவை என் டீ டிவி டாக் ஷோக்கு போன்னேன்..The Big Fight நிகழ்ச்சிக்கு...விஜய் மால்யா வரார்னு, அவருக்காக போனேன்.... அப்பவும் ஒத்திகை நடந்துச்சு...ஆனா இந்த அளவுக்கு இல்லை...யாரை கேள்வி கேட்க விடனும்னு முதலிலேயெ முடிவு பண்ணிக்குறாங்க.. பேசுவதைக் கேட்டு அது சம்பந்தமா கேள்வி கேக்க விடறதில்லை.. அப்படி கேட்ட கேள்விகளையும் எடிட்டிங்ள கட் பண்ணிட்டாங்க...
நல்ல தமாஷ்தான்

நேர்மைக்கு மறு பெயர் தான் ஜெஸிலாவோ..வாழ்த்துக்கள் தோழி..

கதிர் said...

இந்த நிகழ்ச்சி ஓடும்போது டீவி சத்தமே கேக்காத ஒரு இடத்துக்கு ஓடிடலாமான்னு தோணும். நல்லவேளை நீங்களாச்சும் வெளில சொன்னிங்களே!

அமிர்தா said...

சமகாலத்திற்கு தேவையான அருமையான பதிவு.

அரட்டை அரங்கங்கள் உணர்ச்சித் தளத்தில் வேலை செய்வதை பலமுறை கவனித்திருக்கிறேன். நான் தொடர்ச்சியாக பார்ப்பதில்லை.

ஊடகங்கள் மக்களின் அறிவுத்தளத்தில் முன்னேற்றம் காண செய்யாவிடிலும் பரவாயில்லை. பின்னுக்கு இழுக்கும் வேலையை சரியாகவே செய்கிறது.

பாவம் மக்கள்!

அரட்டை அரங்கங்கள் பற்றிய சரியான புரிதலை உங்கள் பதிவு பலருக்கும் ஒரு தெளிவைத் தரும்.

உங்கள் பதிவை என் பதிவிலும் போட்டிருக்கிறேன்.

நன்றிகளுடன்.

Anonymous said...

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டமைக்கு வாழ்த்துக்கள். அடடா முன்னாடியே தெரிஞ்சிருந்தா நிகழ்ச்சியப் பார்த்திருப்பேனே...இதெல்லாம் சொல்லமாட்டீங்களா...

இந்த பதிவை தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி.

http://www.desipundit.com/2008/02/26/arattaiarangam/

வித்தியகங்கைக்கலாப்பிரியா said...

TSமிக அருமையான , உண்மையான தகவல்களைப் பற்றி துணிந்து எழுதியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.
உங்களது அரட்டை அரங்கம் பற்றிய பதிவை எனது பதிவிலும் இணைத்துள்ளேன்.நன்றி.
வித்தியகங்கைக்கலாப்பிரியா

King... said...

மயவாயi இப்படியா நடக்கிறது...

கொடுமை கொடுமை...

பதிவுக்கு நன்றி

மகளிர் தின வாழ்த்துக்கள்...

தமிழன்-கறுப்பி... said...

மகளிர் தின வாழ்த்துக்கள்...
மகளிர் தின வாழ்த்துக்கள்...
மகளிர் தின வாழ்த்துக்கள்...

அபி அப்பா said...

ஜஸீலா! இது சம்மந்தமா என் கடுப்புகளை இங்கே கொட்டி தீர்த்துகிட்டேன் பாருங்க! (அப்பா நான் தான் 40தா:-))

Anonymous said...

machi , mahazhir dina valthukkal .no any new postings?
zakkir.jed

Shahul.Hameed, Abu Dhabi said...

what would you expect when such program is conducted by Film Artists? Whatever program that you see in most of our channels are orchestrated or fabricated. Programs such as movies, serials, comedy shows are already known. But one should remember that even reality shows and pattimandrams are also orchestrated. How about the news - yes. they are also fabricated depending upon which political party they are affiliated to. No wonder, even sports is not an exception, becoz we have seen match fixing. Just remember, TV is mainly for entertainment and a little portion is for information. Dont be fooled again and again.

Benu said...

Hi dear jezi,
mathavangalavadhu nee pannadhu nadippunu theriyama azhuthaanga. aana naan nadipunu therinjum neril paarthappa kooda azhala but tv-la paarkumpodhu ennai ariyamal kalangivittaen. yeannu theriyala. mayb unga mugathai close upla kaamicha bayathinal irukkumo??????????

காரூரன் said...

நல்ல கருத்துப் பகிர்வு, சந்தைப்படுத்தல் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை தான் இப்படியான தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் எடுத்து இயம்புகின்றன. உங்களை நானும் தொலைக்காட்சியில் பார்த்தது போல் ஒரு ஞாபகம். இன் நிகழ்ச்சியின் உருக்கமான கட்டங்களினால் நானும் ஏதாவது பங்களிப்பு செய்யவேண்டும் என்று எண்ணியதுண்டு. எங்கள் கண்களை திறந்தமைக்கு நன்றிகள்.

Anonymous said...

Asalamu alaikum,
The way u started ur topic is good.Mostly we think like that. I never watch arattai arangam (not interested) but after i saw your words i started watching to see the actors & actress. Inshallah after watching that i write more.

mayflower said...

dear jazela,
watever u told is correct only. But wat I wonder is even though the people are acting in such shows, whatever the incidents they are narrating is true right? So I think it serves a purpose to instill new thoughts among the viewers. There is always something good behind all bad deeds and things. Because of these shows only our people are forgetting cinema for sometime and watching something different. They arouse atleast little bit of social thinking among viewers. So lets tolerate such acts and keep on watching them. Maybe in future things will change

Shahul Hameed Adanoorar said...

சலாம் சகோதரி,
விசுவின் காலந்த்தொட்டே எமக்கு "அரட்டை அரங்கம்" மீது ஒரு வித சந்தேகமும், ஒன்றிப்போக முடியாமலும், இருந்தது. நான் தொடர்ந்து பார்ப்பதில்லை என்றாலும், பார்க்கும் பொழுது நம்ப மறுக்கும் மனம். ஒரு வித நாடகத்தன்மை நிரம்பியிருந்தது. யாரும் இயல்பாக பேசுவதில்லை. தாங்கள் உண்மை விளம்பியப் பின் தான் தெளிவாகிற்று. மேலும், தாங்கள் கலந்துக் கொண்டிருந்தாலும், உண்மையை, உணர்வுப்பூர்வமாக, உரைத்தமைக்கு நன்றி.

Shajahan.S. said...

தைரியமான உங்கள் விமர்சனத்துக்கு வாழ்த்துக்கள். என்னதான் சொன்னாலும் மக்களே நடிக்கும் மாதம் ஒரு கதை சீரியலுக்கு மவுசு குறையுமா என்ன? அதுவும் அனுபவம் வாய்ந்த இயக்குநருக்கு புதுமுகங்களை வார்த்து எடுப்பது மிக எளிது. இனியாவது இது போன்ற மெகா சீரியல்களை மக்கள் தவிர்ப்பார்களா?

வடுவூர் குமார் said...

இவ்வளவு பேர் சொன்ன பிறகு நான் சொல்ல என்ன இருக்கு??
தென்றல் கொடுத்த சுட்டி மூலம் தான் இங்கு வந்தேன்.
சுல்தான் ஐயா சொன்ன மாதிரி தான் இருந்திருக்கேன்.
இனிமே முழுச்சிக்கவேண்டியது தான்.

manjoorraja said...

குவைத்தில் விசுவின் அரட்டை அரங்கம் நடக்கும் போது தான் இந்த ஒத்திகையை நேரடியாக பார்த்தேன்.

என் மகளும் கலந்துக்கொண்டு பேசினாள். இது நடந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. அந்த சமயத்தில் என் மகளை நன்றாக இன்னும் கொஞ்சம் உணர்ச்சியுடன் பேச சொன்னார்களே தவிர இவ்வளவு உருக்கமாகவும் அழவைக்க வேண்டும் என்ற முடிவுடனும் பேச சொல்லவில்லை.
ஆனால் அதே நேரத்தில் வேறு ஒரு பெண்மணி மிகவும் உருக்கமாக கண்ணீர் வரவழைக்கும்படி பேசினார்.
நிகழ்ச்சி நடத்துபவர்களும் இதை தான் எதிர்ப்பார்க்கிறார்கள். என் மகள் சிறுமியாக இருந்ததால் ஒரு சிறுமியும் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எதுவும் சொல்லாமல் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

ஆனால் போட்டி என வந்தப் பிறகு மிகையான நடிப்புடன் கூடிய பேச்சு தான் அரட்டை அரங்கங்களில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

ஆனால் விசு, டிஆர் போன்றவர்களின் நடிப்பு எல்லோரின் நடிப்பையும் சாப்பிட்டுவிடும்.

டீஆர் எப்படி என்று தெரியவில்லை. நான் பார்த்தவரையில் விசு மிகவும் அகம்பாவத்துடன் நடந்துக்கொண்டார்.

கபீரன்பன் said...

திரு சுஜாதா அக்கால சிறுகதைகளில் அடிக்கடி பயன்படுத்திய ஒரு வாசகம் “அவன் பத்திரிக்கையை நம்பும் முட்டாள்” அல்லது “அச்சில் வந்ததை நம்பும் முட்டாள்”. அதைத்தான் நினைவு படுத்தியது உங்கள் கட்டுரை. இன்று தொலைக்காட்சி.
சிறுவர்கள் தங்கள் வயதுக்கு மீறிய விஷயங்களை மேஜையை கைகளால் உணர்ச்சி் ஓங்க குட்டி கொண்டு பேசும் பொழுதே இது நாடகம் என்று புரிந்து கொண்டு அரட்டை அரங்கம் பார்ப்பதை விட்டுவிட்டேன். Anything is fair in war and love என்பதோடு business என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். :((

கல்வெட்டு said...

ஜெசிலா,

// ஆனால், நடந்த உண்மைகளுக்கு சாட்சியாக இருக்க நேர்ந்ததால் அதனை வெளிப்படுத்தவே இதனை இங்கே பதிவாக்குகிறேன்.//

நீங்கள் உண்மைக்கு சாட்சியாய் (விட்னஸ்) இல்லை. உண்மை திரிக்கப்படுவதற்கு துணையாய் இருந்திருக்கின்றீர்.

சேர்ந்தே தவறு செய்துவிட்டீர்கள். இபோது அப்ரூவர் ஆகி உள்ளீர்கள். அவ்வளவே. :-((((

சுயநலம்/பணம்/விளம்பரம்/etc., என்று வந்துவிட்டால் பெரும்பான்மை மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதற்கு சாட்சியாய் உள்ளீர்கள்.

ஆனால், நிச்சயம் அதை பதிவு செய்தமையை பாராட்ட வேண்டும். தனது தவற்றை ஒத்துக்கொள்வது என்பது துணிச்சலான விசயம். பாராட்டுகிறேன்.

***

உங்களை நாடகமாடச் சொன்னபோது ஏன் விலகவில்லை?

உண்மை முக்கியமா? விளம்பரம் முக்கியமா? என்று வரும்போது எதை தேர்ந்தெடுப்பது என்பது உங்கள் உரிமை அல்லவா? குடும்பத்தினர் சொன்னார்கள், சூழ்நிலை என்று சொல்லி நாடகத்தில் பங்கு கொண்டு உள்ளீர்கள். :-((

....

மனிதம் உள்ளவன் மட்டுமே மனிதனாக இருக்கிறான்.
ஆண்/பெண்/மதம்/கல்வி/பொது அறிவு/...என்ற வேறுபாடுகள் அல்லது தகுதிகள் யாவும் மனிதனின் மனிதத்தன்மையை வளர்ப்பதாகவோ வேறுபடுத்துவதாகவோ தெரியவில்லை.

காசுக்கு ஓட்டுப்போடும் மக்களுக்காவது வயிறு ஒரு காரணமாக உள்ளது. :-(((((

Anonymous said...

Munbu paarthu kondu irunthen, ippothu paarpathillai, avvalavu virupamillai, ungal pathivu paditha pinnartaan unmai ennavenru terintathu, ungal thunichaluuku paaratukkal , hats off jazeela :-)

Anonymous said...

Jazeela,

Appreciate your courage!!!

God Bless:-)

Jaffar said...

சலாம் சகோதரி... உங்களுடைய இந்த வலைப்பதிவும் அந்த அரட்டையர் அரங்க ஒளிவளைப்பதிவும் ... பல விஷயங்களை புரிய வைத்திரிக்கிறது... உங்களுடைய பேச்சில் வலைப்பதிவில் எழுதிய உணர்வு இல்லை என்பதில் இருந்தே இது செயற்கை என்பது தெள்ளத்தெளிவு!!!... தெளிவுபடுத்தியதற்கும் குழப்பியதற்கும் நன்றி சகோதரி...

இதோ நீங்கள் பேசிய ஒளிவளைப்பதிவு உங்களுடைய இந்த வலைப்பதிவும் அந்த அரட்டையர் அரங்க ஒளிவளைப்பதிவு

http://www.megavideo.com/?v=GVD44AJ9

Anonymous said...

ஆமா இவங்களுக்கு அந்நிய நாட்டுல போய் அடிமையா இருக்கிறதுதான் ரொம்ப பிடிச்சிருக்காம். அநியாயம்.

Anonymous said...

என் கருத்தை எடிட் செய்யாமல் அப்படியே வெளியிட்டதற்கு பாராட்டுக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நடத்துற நாடகம் எல்லாம் சரிதான்
அப்பப்ப அவுங்க உதவி செய்ராங்க, இவுங்க உதவி செய்ராங்கந்னு
காமிக்கறாங்களே
அதாவது உண்மையா?
சம்பந்தபட்டவுங்களுக்கு போய் சேருமா?
கடவுளே
உலகம் ஒரு நாடகமேடை என்று இதைவைத்துதான் சொன்னார்களோ(!)
உங்களின் நேர்மைக்கு நன்றி.

பட்டிக்காட்டான் said...

நன்றி ஜெஸிலா! உங்கள் தகவலை எனது பதிவிலும் தந்திருக்கிறேன்.

butterfly Surya said...

GOOD.

Surya
Chennai

Rithu`s Dad said...

எல்லாம் டி ஆர் பி ரேட்டிங் என்றாயிற்று..

உண்மை எவரிடமும் இல்லை என்றாயிற்று..பேசுபவரிடமும் & நடத்துபவரிடமும்..

இதற்க்கு முன் ஒரு முறை (2001ல்??) விசுவின் அரட்டை அரங்கம் துபாயில் நடந்தது.. அப்பொ இந்தளவு ஒத்திகை இல்லை என்றே நினைக்கிறேன்..

அனைவருக்கும் அன்பு  said...

உண்மை உணர்ந்த பின் அதை ஊருக்கு உரைத்த உங்கள் எழுத்துக்கு வாழ்த்துக்கள் தவறு எங்கிருந்தாலும் அதன் போக்கில் பொய் சரி செய்ய துணிந்து இருக்கும் உங்கள் தைரியத்திற்கு வணக்கம் தொடருங்கள் தோழி நல்ல விழிப்புணர்வு பதிவு

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி