Wednesday, November 21, 2012

அறம் செய விரும்பு - ‘The Blind Side'


பெரும்பாலான படங்களில் நடிகர்கள் நடிப்பார்கள் ஆனால் ஒரு சில படங்களில் மட்டும் தான் அந்த கதாபாத்திரத்திற்கு நடுவே நாம் உட்கார்ந்து கொண்டு அவர்கள் வாழ்வு முறைகளைக் கவனிப்பது போன்ற உணர்வு ஏற்படும். அப்படியான உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது ‘தி பிளைண்ட் சைட்’.
2009 வெளிவந்த ஒரு அமெரிக்க கால்பந்து விளையாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் மைக்கெல் ஓஹெர் என்பவரின் வாழ்வியல் தான் ’தி பிளைண்ட் சைட்’. உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு கிடைத்த பல விருதுகளில் 2010 சிறந்த நடிகைக்கான (Academy Award for Best Actress) ஆஸ்கர் விருது சான்ரா புல்லக்குக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை, தேர்ந்த, மிக இயல்பான, கொடுத்த கதாபாத்திரமாக மாறியதற்கான பரிசு. படத்தின் இயக்குனர் ஜான் லீ ஹன்குக் 2006-ல் வெளிவந்த புத்தகத்தைப் படிக்கும் போதே இந்தக் கதாபார்த்திரத்தில் இவர்கள் பொருந்துவார்கள் என்று நினைத்து சாதித்த படமா என்று தெரியவில்லை. ஒரு சம்பவத்தைப் படிக்கும் போதும் கேட்கும் போதும் அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து உலா வரச் செய்திருப்பதின் வெற்றியே இந்தப் படம். ஒரு சில படங்களில் கதையின் கரு சிறியதாக இருக்கும் அதனை நீட்டி முழக்க பல காட்சியமைப்புகளும் அதுவும் தமிழ்ப்படமென்றால் கேட்கவே வேண்டாம் 5-6 பாடல் காட்சிகள், 4-5 சண்டைக்காட்சிகள், சிரிப்பு காட்சிகள் என்ற இடைச்செருகலாக துண்டு துண்டாகக் கிடக்கும். ஆனால் உண்மையில் நிகழ்ந்த சம்பவங்களில் அந்தந்த கதாபாத்திரத்தை ஒரே காட்சியில் புரிய வைக்கவும், நம் மனதில் ஆழமாகப் பதிய வைக்கவும் மிகவும் தேர்ந்தெடுத்த காட்சிகளை அமைத்திருப்பது இந்தப் படத்திற்கு வலுவாக அமைந்திருக்கிறது.


நாம் அன்றாட வாழ்க்கையில் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்கிறோம். நம்மைப் போல் அல்லாதவர்களை அந்நியமாகக் கருதுவோம் - அது உருவத்தில், இனத்தில், மொழியில், நிறத்தில் எப்படியான வேற்றுமையாகவும் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக அப்படிப்பட்ட ஒருவரை நாம் கடந்தே சென்றிருப்போம். முகம் சுழித்திருப்போம், அருவருப்பு அடைந்திருப்போம். அப்படியில்லாமல் ஒவ்வொருவருக்குள்ளும் நற்குணங்களும், நல்ல திறமையும் ஒளிந்துகிடக்கிறது அதனை நாம் அறிவுக் கண்களால் பார்க்காமல் புறக் கண்களில் பார்த்து அதனைத் தவிர்த்து கடந்து செல்கிறோமென்று என்றாவது உணர்ந்ததுண்டா?


அப்படி ஒவ்வொருவரும் உணரத் தொடங்கினால் வேற்றுமையில் ஒற்றுமை மட்டுமல்ல இல்லாதவர்கள் இல்லாத உலகத்தை நாம் அமைத்திட முடியும். Don't judge a book by its cover என்று ஒரு ஆங்கிலச் சொற்றொடர் உண்டு அகத்தின் அழகு முகத்தில் சமயங்களில் தெரியாது நாம் தான் தேடியெடுக்க வேண்டுமென்று மனிதம் பேசும் படம் இது. இப்படித்தான் இந்தப் படத்தின் நாயகி லெய் ஆன் தொஹியும் (சான்ரா புல்லக்) இயல்பிலேயே அவருக்குள் இருக்கும் அவரது இரக்க குணம் மைக்கெல் ஒஹெர்ரை கடந்து செல்லும் போது அன்றைய தினத்தில் அவருக்கு உதவலாமென்று வீட்டிக்குள் அழைத்துச் சென்று, பின்பு தமது சொந்தப் புதல்வனாகவே தத்தெடுத்துக் கொள்ளும் அற்புதங்கள் நிகழ்கிறது. இதையெல்லாம் ஒரு நல்ல கிருத்தவரால்தான் முடியுமென்று மதத்தை சில இடங்களில் தூக்கிப்பிடித்தாலும் அது கதையை எந்த வகையிலும் சிதைக்கவில்லை.


கருப்பினத்தைச் சேர்ந்த மைக்கெல் ஓஹெர் ஆஜானுபாகுவான உடல் அமைப்பு கொண்டவர். ’கிங்காங் பக்கத்தில் ஆன் டாரோ இருப்பது போல் மைக்கெல் ஓஹெர் அருகே நீ’ என்று லெய் ஆன்னின் தோழிகள் கிண்டல் செய்யும் அளவிற்கு இருவருக்குள் அவ்வளவு உருவ வேற்றுமைகள் இருந்தாலும் தம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக்கிக் கொள்வதில் அவளுக்கு மட்டுமல்ல அவருடைய கணவர் சியான் மற்றும் குழந்தைகள் கோலின்ஸ், எஸ்ஜே ஆகியோருக்கும் விருப்பம் என்பதை காட்சியமைப்புகளிலேயே பிரமாதமாக காட்டியுள்ளார் இயக்குனர் ஜான் லீ.


”மைக்கெல் ஓஹெரை வீட்டில் ஒருவராக ஆக்கிக் கொள்வதால் பதின்ம வயதிலிருக்கும் உன் மகளுக்கு பாதுகாப்பில்லை” என்று மைக்கெல் இனத்தின் மீது நம்பிக்கையில்லாத வெள்ளைக்காரிகளைக் காரி உமிழ்கிறார் லெய் ஆன். தன் மனைவியின் சொற்களுக்கு மரியாதை தரும் சியான், மற்றவர்களுக்கு உதவுவதில் தான் மட்டற்ற மகிழ்ச்சி என்ற தன் மனைவியின் சுபாவத்தை புரிந்து கொண்டு ஒத்துழைக்கும் நல்ல கணவர். யாரென்ன கேலி பேசினாலும் இவர் என் சகோதரர் என்று பள்ளி நூலகத்தில் மைக்கெல் அருகே வந்து அமரும் கோலின்ஸின் முகபாவங்களே போதும் அவருக்கு அங்கு வசனமே தேவையற்றது. பத்து வயதில் தென்படும் எஸ்ஜேதான் மைக்கெலின் உற்ற தோழன் அமெரிக்க கால்பந்தில் மைக்கெலுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதே இந்தச் சிறுவன் தான். இப்படியான கதாபாத்திரங்களுடன் அழகாகக் கதை நகர்கிறது. இரவில் தாய் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் ’ஃபெர்டினந்த் அண்ட் தி புல்’ (Ferdinand & the Bull) கதை கூட இந்தப் படத்தில் முக்கிய அம்சம் பெறுகிறது. நம்மூர் சீரியல் போல் பல மாதங்களுக்கு பிறகு பார்த்தாலும் புரியுமே அப்படியில்லாமல் ஒவ்வொரு காட்சிக்கும் முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள்.


கதைச்சுருக்கம் படிப்பதைவிட இந்தப் படத்தை தேடிப்பிடித்து பார்த்துவிடுங்கள் இரசிப்புத் தன்மையுடையவர்களுக்கு கட்டாயம் பிடிக்கும், எனக்குப் பிடித்தது போல.

4 comments:

manjoorraja said...

ஜெசிலா, அருமையாக விமர்சித்திருக்கிறீர்கள். விரைவில் பார்க்கிறேன். நன்றி. பாராட்டுகள்.

பின்குறிப்பு: இந்த பதிவை பண்புடனில் படித்தேன். சென்ஷிக்கு நன்றி.

Anonymous said...

Ungal vimarsanam antha padam pakka thoonduthu,, thxxx.

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யமான விமர்சனம்... பார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகிறது...

நன்றி...

Jazeela said...

மிக்க நன்றி மஞ்சூராரே. கண்டிப்பாக பாருங்கள்.

#சென்ஷி. டபுள் நன்றி :-)

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி