Monday, July 13, 2020

ஒரு சொல் சில மெளனங்கள்

"கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா? உன் கண்ணில் நான் கண்டேன். உன் கண்கள், வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்" இப்படியாக வித்தியாசமான கற்பனையைப் பாடலில் கேட்டதும்தான் அதை எழுதியது யாரென்று அறிந்து, இவரைக் கவனிக்கத் தொடங்கினேன். எனக்குப் பிடித்த ஒவ்வொரு பாடலையும் அவரே எழுதியிருப்பார் என்று நம்பிக்கை வரும் அளவுக்கு அத்தனை நல்ல பாடல்களையும் அவர்தான் எழுதினார். 

'என்  பூக்களின் வேரோ இவன்... 
என் பெண்மையை  வென்றான் இவன் ...
அன்பானவன்....'

'வேறென்ன வேண்டும் உலகத்திலே... இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்'

'ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்'

இதைவிட அதி அற்புதமான வரிகளையெல்லாம் எழுதிவிட்டார். அவருடைய தனித்துவமே அவருடைய எளிமையான வார்த்தை தேர்வு. அருமையான சுலபமான
எளிமையான வார்த்தைகளில் சிம்மாசனத்தையே கட்டினார், ஆண்டு தோறும் தேசிய விருதைக் கைப்பற்றினார். 'பட்டாம்பூச்சி விற்பவன்' கவிதைத் தொகுப்பை வாசிக்கும் போது பல இடங்களில் புன்னகை பூக்கச் செய்தார். 'குழந்தைகள் நிறைந்த வீடு' தொகுப்பில் நாம் அன்றாடம் பார்க்கும், படிக்கும், கற்பனை செய்யும் நிகழ்வுகளை... 
 
இறந்த பாட்டியின் மருந்துக் குப்பியில்
மண்ணெண்ணெய் விளக்கு
ஞாபகங்கள் எரிகின்றன.

மனதைத் தொடும் ஹைக்கூவாக காட்சிகளைப் பதிய வைத்தார். 

வாழ்வில் ஒருமுறையாவது இவரை சந்திப்பேன் என்று எண்ணி இருக்கும்போது தனது நிறுத்தத்தில் சொல்லாமலே இறங்கிவிட்டார், மனதில் நீங்காத வார்த்தைகளைப் பாடல்களாக நம் உதடுகளில் விட்டுச் சென்றுவிட்டார் நா. முத்துக்குமார். இன்று அவருக்குப் பிறந்தநாள். அவர் இருந்திருந்தால் 45 வயது மட்டுமே முடிந்திருக்கும்.

No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி