Thursday, October 13, 2022

சிறுபான்மையினரின் மொத்த குரல் ‘நட்சத்திரம் நகர்கிறது’


ஒரு பெண் தன் காதலுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறாள், அதுவே அவன் வேண்டாமென்றான பிறகு, அவன் முன்னாள் காதலனாக ஆனவுடன் எப்படி விலகி நிற்கிறாள், அதே சமயம் அவனுடன் இணைந்து வேலையும் செய்கிறாள். தன்னை விரும்புகிறான் என்று தெரிந்தும் அதைச் சட்டை செய்யாமல் நட்பாக மட்டுமே பழக முடிகிறது அவளால். ஆணென்ற பாலின பேதமில்லாமல் தூய்மையான நட்பை மட்டுமே முன்னிறுத்தி சகஜமாக இருக்க முடிகிறது அவளால். தன்னைக் கடினமானவளாகக் காட்டிக்கொள்ளும் அவள், தன்னை ‘அம்பேத்கரைட்’ என்று வலிமையாக முன்னிறுத்துபவள், அதே சமயம் உள்ளே உருகுகிறாள், எளிதாக உடையக்கூடியவளாக மென்மையானவளாகவும் இருக்கிறாள், எதற்காக யாருக்காக என்று அறியாமலே. தான் ‘சில்லு சில்லாக உடைக்கப்பட்ட கண்ணாடி’ என்கிறாள் . அவளுக்கு உளவியல் ரீதியாகச் சிக்கல் இருக்கிறது. சிறு வயதில் அவளுக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளின் தாக்கங்கள் அவளுடைய வாழ்க்கை நெடுகிலும் பயணம் செய்து, எல்லா உறவுகளின் மீதும் சந்தேகம் கொள்ளச் செய்கிறது. இப்படி எல்லாமுமான கலவைதான் ரெனே. அதனை மிகவும் சிறப்பாக உடல்மொழியிலும் கண்களிலுமே பேசியிருந்தார் துஷாரா.


முதல் காட்சியில் காட்டப்படும் சண்டை மேலோட்டமாகப் பார்த்தால் அவள் அவனைத் தூங்கவிடாமல் செய்கிறாள் என்று தோன்றலாம். ஆனால் அந்த ஒரு காட்சி மட்டுமே அவர்களின் பிரிவிற்கான காரணமில்லை. அந்த ஒற்றைக் காட்சியில் இருவரின் உள்ளுணர்வையும் சம அளவில் வெளிப்படுத்தியிருப்பார்கள். அதையே மற்றொரு காட்சியில் - பல சலசலப்பின் வெடிப்பே எங்கள் மனமுறிவு என்றுணர்த்தியிருப்பார் இனியனாக வரும் காளிதாஸ்.
இப்படி வசனங்களின் மூலமாக மட்டுமே பல விதமான மக்களிடையே இருக்கும் காழ்ப்புணர்ச்சிகளைப் பற்றிப் பேச முற்பட்டிருக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித். மேடை நாடகத்தின் கலை அமைப்பு, சுவரோவியங்கள் வண்ணங்கள் என்று மிரட்டியிருக்கிறார் ஜெயரகு. பின்னணி இசையைக் கேட்கும்போது அதுவும் பெரும்பாலான இசைஞானியின் இசையை உட்புகுத்தி விளையாடியது யாரென்று தேடிப் பார்த்தால் டென்மா என்கிறது கூகுள்.
அர்ஜுனாக வரும் கலையரசன் தன் காதலை அவள் அங்கீகரிக்கும் முன்பாகவே தன் வீட்டில் சொல்லும்போது, ”அவங்க என்ன ஆளுங்க?” என்று அம்மாவாக வருபவர் குடும்ப எதிர்ப்பை
அருமையாக
வெளிக்காட்டியிருப்பார். அந்தக் கதாபாத்திரத்தை அவர் அட்டகாசமாகச் செய்திருக்கிறார். அந்தக் காட்சியொன்றே படத்தின் தரத்தைப் பற்றி சொல்ல போதுமானதாகிறது.
’காதல்’ பற்றிய பலவிதமான புரிதல்களை, அதனுடன் ஒரு தொகுப்பாகவே கூட வரும் சாதி மத பேதங்களை, பொருளாதார ஏற்ற தாழ்வுகளை, ஓரின ஈர்ப்பு, நடைமுறை குடும்பக் கட்டமைப்பின் பிரச்சனை என்று எல்லா வகைகளையும் ஒரே படத்தில் கொண்டு வந்து அனைத்து சிறுபான்மையினரின் மொத்த குரலாக ஒலிக்கிறது ‘நட்சத்திரம் நகர்கிறது’. நம்மையும் மாற்று சிந்தனைக்கு நகரச் செய்கிறது.

No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி