Tuesday, June 05, 2007

வேற்று திசை - சிறுகதை

நான் முன்பு எழுதி 'திசைகளில்' வெளிவந்த சிறுகதையை இங்கே இடுகிறேன். அப்போ படிக்காம தப்பிச்சிருந்தாலும் இப்போ மாட்டிக்கிட்டீங்க.

இரண்டு ஆட்கள் கூட சேர்ந்து நடந்து போக முடியாத அந்த ஒடுக்கமான சந்தில் இரண்டு இருசக்கர மிதி வண்டி சாய்த்து நிறுத்தப்பட்டிருந்தன. அதன் சக்கரங்களை நிறைய ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அடி பம்ப்பில் காற்றுக்கு பதில் அன்று அதிசயமாக ஒழுங்காக தண்ணீர் வந்து கொண்டிருந்தது, ஆகையால் அடி அடியென்று ஆளுக்காள் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டிருந்தனர், வாயிருந்தாலும் அழுதுவிடும். ஒருவேளை அதன் கண்ணீர் கலந்து வருவதால் கலங்கலாக தண்ணீர் வருகிறதோ என்று உற்றுப் பார்த்து, கலங்கலாக வந்தாலும் பரவாயில்லை புழங்க உதவும் என்று கடைசி சொட்டுவரை விடுவதாக இல்லை என்ற படி அடித்துக் கொண்டிருந்தனர் அங்கு வசிக்கும் குடித்தனக்காரர்கள். ராமசாமி தெருவில் குறுகிய அந்த முடுக்கு சந்தில் இரு பக்கமும் வீடுகள். ஒரே வாயிலுக்குள் நான்கு மாடி-வீடுகள் அதில் ஏழு குடித்தனங்கள் அதில் வீட்டுச் சொந்தக்காரர் ராஜன் வீடும் அடக்கம். வீட்டின் பெயர்-பலகை 'செம்பருத்தி' என்று காட்டியது.

ராஜனுக்கு அரசாங்க வேலை. அழகான அளவான குடும்பம். மனைவி அன்பான இல்லத்தரசி. மகன் திருலோகச்சந்தர் இந்திய நாட்டின் எல்லையில், ராணுவத்தில் பணி. அவன் விரும்பி எடுத்த வேலை என்பதால் யாரும் மறுக்கவில்லை. மகள் மீனலோச்சனி மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றிருந்தவள் விடுமுறைக்கு வந்திருக்கிறாள். அந்த 'செம்பருத்தி'யே அவள் வருகைக்காக காத்திருந்தது. அவள் வந்ததுமே அவளைப் பார்க்க எல்லோரும் வீட்டிற்கு வரிசையாக வந்து போய் இருந்தார்கள். படிப்பிற்காகச் சென்றிருந்தாலும் ஓய்வு நேரங்களிலும் மற்ற சமயங்களிலும் கிடைத்த வேலையைச் செய்து, வரும் சொற்பப் பணத்தில் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது மட்டுமல்லாமல் யாரையும் மறந்துவிடாமல் எல்லோருக்கும் சின்ன பரிசுப் பொருட்கள் வாங்கி வந்து அன்பால் இணைத்து அவளைப் பார்க்க வரும் ஒவ்வொருவருக்கும் கொடுத்து மகிழ்ந்தாள். அவள் பெற்றோருக்கு பெருமையாகவே இருந்தது.

ஒருமாதமே விடுமுறையில் வந்திருக்கும் மீனாவுக்கு தன் சிநேகிதிகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. எல்லோரையும் ஒரே சமயத்தில் பார்க்க யாருடைய திருமணமும் ஏற்பாடாகவில்லை. ஆகவே அவள் சிநேகிதியும் சித்தி மகளுமான சுஜாவுக்கு தொலைபேசியில் அழைத்து மணிக்கணக்கில் பேசி சுஜா வீட்டில் எல்லா தோழிகளையும் கூட்டி சந்திக்க ஏற்பாடு செய்யச் சொல்லி அங்கு செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

"அம்மா குங்குமம் எங்க இருக்கு" மேலே இருந்து படிக்கட்டின் கைப்பிடியை பிடித்து தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு உரக்கக் கத்திக் கேட்டாள், கீழே சமையலறையில் இருக்கும் அம்மாவின் காதில் விழுமாறு.

"இரண்டாவது தட்டுல சாமி படத்துக் கிட்ட, அந்த குத்து விளக்குக்கு பின்னாடி இருக்கு பாரு" அம்மாவும் மீனா காதில் சென்றடையும் வகையில் பதிலளித்தார்.

"அப்பா வாடகை சீருந்துக்கு சொல்லிட்டீங்களா?" மீண்டும் உரக்க..

"ம்ம் சொல்லிட்டேம்மா இன்னும் 5-10 நிமிஷத்துல வந்துடும், நீ கிளம்பிட்டாயா இல்லையா?"

"கிளம்பிக்கிட்டே இருக்கம்பா.."

அமெரிக்கா வரை அனுப்பி வைத்தவர்களுக்கு நீலாங்கரையில் இருக்கும் சுஜா வீட்டிற்கு அனுப்ப தயக்கம். தெரிந்த வாடகை சீருந்து

நிலையத்திலிருந்து வண்டி எடுத்திருந்தார்கள். "தெரிந்த நல்ல ஓட்டுனரா அனுப்பி வைப்பா" என்ற வேண்டுகோளோடு வண்டி ஏற்பாடு.

வண்டி வந்து நின்றது, அமெரிக்காவிலிருந்து வந்த பெண் என்று ஏற்கெனவே சொல்லி அனுப்பப்பட்டிருந்தது.

"போய்ட்டு வரேம்மா, வரேன்பா" என்று சொல்லியபடி, படி இறங்கும் போது புடவை மடிப்புகள் கீழே பிறளாமலிருக்க மேலே தூக்கவும், உயரமான காலணி எட்டிப்பார்த்தது.

"போய் சேர்ந்ததும் கூப்பிடு" என்று கிசுகிசுத்தாள் அம்மா.

"சரிம்மா" என்று தாயின் அன்பைப் புரிந்தவளாக சீருந்தின் பின்கதவைத் திறந்து உட்கார்ந்தாள்.

ஓட்டுனர் தமிழரசனுக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. அமெரிக்காவில் இருந்து வந்த பெண் என்று சொன்னதால் அவன் கால்சட்டை, கையில்லாத மேல் சட்டையில் அவளை எதிர்பார்த்ததால் அந்த வியப்பு. தளையத் தளைய சேலை கட்டி, அவள் நீளக் கூந்தலில் வீட்டில் கட்டின அடர்த்தியான மல்லிகையை முன் பக்கம் தெரியும் வகையில் வைத்து, ஒட்டு பொட்டுக்கூட வைக்காமல் குங்குமத்தில் தண்ணீர் விட்டு குழைத்து அதிலிருந்து வரைந்த பொட்டுக்கு கீழ் விபூதியும். தன் தாய்மொழி தமிழ் என்று சொல்லிக் கொள்ளக்கூட வெட்கப்பட்டு, ஆங்கிலத்தில் கொஞ்சம் தமிழும் கலந்து பேசும் சென்னை கல்லூரி பெண்கள் மத்தியில் இவள் அமெரிக்காவில் படித்தும் 'அம்மா, அப்பா' என்று அழகு தமிழில் அழைத்தது அவன் காதில் விழுந்தால் அவனுக்கு வியப்பாகத்தானே இருக்கும்?!

தமிழரசன், வாலிப வயதிலும் பொறுப்புணர்ச்சி மிக்கவன். கற்றது கையளவென்பதால் உலகளவை ஆராய்பவன். அமைதியானவன் ஆனால் ஒத்த ஆர்வமுடையவர்கள், நல்ல இரசனையுடையவர்கள் கிடைத்துவிட்டால் "விடுடா சாமி" என்றாலும் அன்புத் தொல்லையாக மொய்ப்பவன். தமிழ் விரும்பி. லட்சணமான முகவாகுடையவன். காதல் என்றால் காததூரம் ஓடுபவன்.

சீருந்தில் ஏறி, கையசைத்து விட்டு, வண்டி நகரும் போது மீனா மெல்லிய குரலில் தன்மையாக கேட்டாள் "எங்க போகணும்னு உங்களுக்கு தெரியும்ல?"

வியப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவனாக அவள் குரல் காதில் தேனாக பாய்ந்ததால் திடுக்கிட்டு "தெரியும். நீலாங்கரை தானே?" என்றான். தேனாக அவனுக்குப் பாய்ந்ததின் காரணம் அவள் குரல் வளமில்லை மாறாக அவள் தமிழ் பேசியது. இவனை ஓட்டுனராக அனுப்பியது இவன் நல்ல ஆங்கிலமும் பேசுவான் என்ற காரணத்திற்காகவும்தான்.

இரண்டரை வருடங்களுக்குப் பிறகு வந்திருக்கும் மீனாவுக்கு சென்னை புதியதாகத் தோன்றியது. வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்.

"குளிர்மி வேண்டாமே, நான் இயற்கை காத்து வாங்கிக்கிறேன்" என்றபடி கண்ணாடியை இறக்கிக் கொண்டாள்.

மீண்டும் அதிசயப் பொருளாகவே மீனா தமிழரசுக்குத் தோன்றினாள். "வண்டில ஏசி வேலை செய்யலையா?" என்று அலுத்துக் கொள்ளும் உள்ளூர் ஆட்களின் குரல் அவனுக்கு எங்கோ ஒலித்து மறைந்தது.

நீலாங்கரை போய் சேரக் குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது ஆகும், அதுவரை வாயை அடக்க முடியாதவனாக மெல்ல பேச்சைத் தொடங்கினான் அரசு.

முன்னால் பார்த்தவாறே வண்டியை கவனமாக ஓட்டியபடி "நீங்க சென்னைக்கு வந்து எவ்வளவு நாளாகுதுங்க?" என்று தொடங்கினான்.

"ம்ம்.. என்ன கேட்டீங்க..?" கண்ணாடி தாழ்த்தி இருந்ததால் காற்றின் இரைச்சலில் சரியாகக் கேட்கவில்லை அதுமட்டுமில்லாமல் அவன் கேள்வியைச் சிறிதும் எதிர்பார்த்திராதவளுக்கு காதில் சரியாக விழவில்லை.

"நீங்க அமெரிக்காவில் இருந்து வந்திருப்பதா சொன்னாங்க, எத்தனை வருஷம் கழிச்சி சென்னைக்கு வரீங்க" என்று தெளிவாக கேட்டான்.

முன்னால் அவன் பார்த்து ஓட்டிக் கொண்டிருந்தாலும், அவனைப் பார்த்தபடி பதில் அளித்தாள் "இரண்டரை வருஷமாச்சு. ஆனா பல வருஷமான மாதிரி பல மாற்றங்கள் தெரியுது.." என்று சொல்லிவிட்டு புதிய இடத்தைப் பார்ப்பதுப் போல் கண்கொட்டாமல் வெளியே பார்த்து வந்தாள்.

"ம்ம்.. நிறைய மாற்றங்கள் இருக்கு, புதுப்புது மேம்பாலங்கள், சாலை விரிவுபடுத்தப்பட்டிருக்கு, இரு வழிப்போக்குவரத்து ஒருவழிப் பாதையாகி இருக்கு, மழை நீர் சேகரிப்பால் தண்ணீர் கட்டி நிற்கும் பிரச்சனையில்ல. ஆனா மாறாதது குடிநீர் பிரச்சனைதாங்க" தனக்கு நினைவில் இருந்ததை பட்டியலிட்டான்.

சில நிமிட அமைதிக்கு பிறகு "ஆமா, அமெரிக்கால தமிழ் பேசும் வாய்ப்பு கம்மி இல்ல?..." என்று இழுத்து அவள் பதிலுக்குக் காத்திருந்தான்.

சென்னையை இரசித்துக் கொண்டு வந்தவளுக்கு 'தமிழ்' என்று கேட்டவுடன் கேள்வியை உள்வாங்கிக்கொண்டு "யார் சொன்னா? அங்கு நிறைய தமிழர்கள் இருக்காங்க. எங்களுக்கு தமிழ்ச்சங்கமே இருக்கு. உலகெங்கும் மணப்பது தமிழ் மொழி" என்று பெருமிதத்துடன் சொன்னாள்.

மிகழ்ச்சியாக "அடேங்கப்பா, மொழிப் பற்று அதிகம் போல உங்களுக்கு. நீங்க தெரிந்துக் கொள்ள ஒரு விஷயம் சொல்றேன், நான் தமிழில் முதுகலை பட்டதாரி" என்றான் அவனும் பெருமிதத்தோடு.

வியப்பாக அவனைப் பார்த்தாள் மீனா.

போக்குவரத்து விளக்கு சிகப்பு என்று காட்டியவுடன் வண்டியை மெதுவாக நிறுத்தத்திலாக்கினான். வியப்பாக அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் மீனாவின் பக்கம் தலை திருப்பி "என்னங்க நம்ப முடியவில்லையா? இப்போ நான் பி.எச்டி. பண்றேன் அதுவும் தமிழாராய்ச்சி பற்றிதான். நிறைய வாசிக்கிறேன், நிறைய எழுதித் தள்ளுறேன், செய்தி சேகரிப்பு கூடவே நடக்குது.." என்றான் சாதாரணமாக.

நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் மீனா கேட்டாள் "அப்ப ஏன் வண்டி ஓட்டுனரா இருக்கீங்க"

சிரித்துக் கொண்டே கண்களை சாலை விளக்கு பக்கம் திருப்பிக் கொண்டவன் கேட்டான் "ஏங்க வண்டி ஓட்டுனரா வேலை பார்ப்பது கேவலமா..?" அவள் பதிலுக்குக் காத்திராமல் தொடர்ந்தான். "என் அப்பாவுக்கு அரசாங்க பணி, அம்மா பள்ளிக்கூட ஆசிரியை, என் அண்ணன் கப்பல் துறையில், அக்கா படிப்பு முடிஞ்சதும் கட்டிக் கொடுத்துட்டோம், அவள் கணவரும் அரசாங்க பள்ளியில் தலைமை ஆசிரியர். பின்ன நான் ஏன் வண்டி ஓட்டுறேன்னா, எனக்கு வாசிக்க எழுத நிறைய நேரம் தேவை. ஓய்வு நேரங்களில் என் சவுகரியத்திற்கு பணம் ஈட்ட நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட தற்காலிகப் பணி இது" என்றான் விளக்கமாக.

"ம்ம், உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள்" என்று சுருங்க முடித்துக் கொண்டாள்.

"நீங்க எழுதுவீங்களா? கதை, கவிதை இந்த மாதிரி.." என்று ஏதாவது பேசிக் கொண்டிருக்க புதிய தலைப்பைத் தொடங்கினான் வண்டியையும் நகற்றியபடி.

"ம்ம்.. எழுதுவேன்" என்றாள் ஒரே வார்த்தையில்.

"கதையா, கட்டுரையா, கவிதையா? எதை எழுதுவீங்க? எதில் ஆர்வம் அதிகம்?" அவன் விடுகிற மாதிரி தெரியவில்லை. எழுதுவேன் என்று சொன்னதும் ஊக்கத்தில் கேள்வியை அடுக்கினான்.

"தோன்றுவதை எழுதுவேன். என் கவிதைகள் சில வார ஏடுகளில், சில மின்னிதழ்களில் வெளிவந்துருக்கு" என்றாள் வெளியில் பார்த்தபடி.

அவளை பேட்டிக் காண்வது போல் தொடர்ந்தான் "எந்த மாதிரியான இதழ்களை படிப்பீர்கள்? வெறும் ஜனரஞ்சகமான இதழ்களா? அல்லது சுபமங்களா, கணையாழி, காலச்சுவடுன்னு கவிதாசரணெல்லாம் படிப்பீர்களா?"

சிற்றிதழ்கள் குறித்தும் அதன் தீவிர இலக்கிய நோக்கங்கள் பற்றியும் கேள்வி மட்டுமே பட்டிருந்தவளுக்கு பதில் சொல்லப் பிடிக்கவில்லை அமைதியாக இருந்தாள்.

அவள் அமைதியை கலைக்க மறுபடியும் "என் தாய்மாமா நீதிபதியா இருக்காரு, அவர்கிட்ட நிறைய புத்தகங்கள் இருக்கும், ஒண்ணையும் விடாம படிப்பேன். கன்னிமரரா நூலகம் தெரியுமா? அதில் நான் ஆயுள்கால உறுப்பினர். அது லேசுப்பட்ட விசயமில்லீங்க அதற்கு எத்தனை பேர் சிபாரிசு செஞ்சி கையெழுத்துப் போட்டாங்க தெரியுமா? அப்புறம்தான் ஆயுள்கால உறுப்பினரா சேர்த்துக்கிட்டாங்க." என்று சொந்தக் கதைகளை அவிழ்த்துவிட்டான். வேகமாக ஓட்டினாலும் நிதானத்தைப் பிடித்திருந்தான்.

அவளைப் பேச வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில், "கவிதை எழுதுற நீங்க கவிதைப் புத்தகங்களை வாசிப்பீங்களா?" என்றான் ஒரு கணம் முகம் திருப்பி அவளைப் பார்த்து.

"ம்ம்.. வாசிப்பேன்" என்று உற்சாகமாகப் பதில் வந்தது.

இடதுபக்க சன்னலருகே அமர்ந்திருந்த மீனா இடது பக்கமே பார்த்து வந்துக் கொண்டிருந்தவள் குளிர்ந்த காற்று மேலே தழுவியதும் வலது பக்கம் காற்றின் திசையை நோக்கிப் பார்த்தால், கடற்கரையை கடந்து கொண்டிருந்தது. சீருந்து இந்த அமைதியான கடலா சுனாமியை எழுப்பியது என்று திகைப்பாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வார்த்தையால் அவள் மவுனம் கலைத்தான் அரசு, "யாருடைய கவிதைகள் ரொம்ப பிடிக்கும்?.."

கடற்கரையை இரசித்தபடியே "யார் கவிதையானாலும் அழகானதாக இருந்தால் பிடிக்கும்" என்று வார்த்தைக்கும் வலிக்காத வண்ணம் கூறினாள்.

"சல்மாவின் ஒரு மாலையும் இன்னொரு மாலையும் வாசிச்சிருக்கீங்களா?" கருத்துப்பறிமாற்றத்தை தொடங்கினான்.

"வாசித்திருக்கிறேன்" கடற்கரையை கடந்து விட்டிருந்ததால் மறுபடியும் இடது பக்கம் திரும்பிக் கொண்டாள்.

"தேவையில்லாத விரசமான வார்த்தைப் பிரயோகம், ஒரு பெண் அப்படி எழுதி இருப்பது அநாகரிகமா இருக்குன்னு நான் நினைக்கிறேன். நீங்க?" என்றான் அவன் கருத்தோடு அவள் ஒத்துப் போவாள் என்ற நம்பிக்கையில்.

"இல்ல. ஏன் பெண் எழுதினால் மட்டும் விரசம் என்று வித்தியாசப்படுகிறது.? அப்போ ஆண் எழுதினால் இரசிப்பீர்கள் அப்படித்தானே? அது தவறு என்று நான் சொல்ல வரவில்லை, ஏன் ஆண்- பெண் பேதம் எழுத்தில் பார்க்கிறீர்கள் என்றுதான் சொல்ல வந்தேன்" என்று அழுத்தமாக தன் கருத்தைச் சொன்னாள்.

சிறிதும் அந்த பதிலை எதிர்பாராதவன் கண்கள் விரிந்தன. ஒரு நொடி அவளைத் திரும்பிப் பார்த்தான்.

அவள் எந்தக் கலவரமும் இல்லாமல் யதார்த்தமாக சாதாரணமாக மறுபடியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வேகமாக தடைப்பானை அழுத்தியதில் மீனா முன் பக்கம் வந்து மீண்டும் பின் பக்கம் தள்ளப்பட்டாள். வலது கையை இறுக்கமாக முன் இருக்கையை பற்றியிருந்தாள். என்னவென்பது போல் முன் பக்கம் தலையை தூக்கிப் பார்த்தாள்.

"மன்னிக்கணுங்க. ஒரு பூனை ஓடியது அதுதான்..." என்று சிறிதும் எதிர்பாராது குறுக்கே வந்த பூனைக்காக பதட்டமடைந்து வண்டியை அழுத்தி நிறுத்திய காரணத்தை தயக்கத்துடன் மீனாவிடம் கூறினான்.

இந்தத் திடீர் நிறுத்தம் காரணமாகப் பின்னால் வந்து கொண்டிருந்த மூன்று சக்கர வண்டி சீருந்தில் முட்டி விட்டது. கீழே இறங்கிய அரசு பின் பக்கம் போய் பார்த்தான். லேசான கீறல்,
"ஏன்யா இடைவெளிவிட்டு ஓட்டவேண்டியதுதானே" கையை நீட்டிக் கோபமாக கேட்டான். நியாயமாக அவன் தான் அரசைத் திட்டியிருக்க வேண்டும். வேகமாகச் சென்றவன் எதிர்பாராமல் தனது சீருந்தை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நிறுத்தியது தமிழரசின் தவறுதான், இருப்பினும் முந்திக் கொண்டு அவனைத் திட்டிவிட்டு, மறுபடியும் வண்டிக்குள் ஏறி அமர்ந்தான். மூன்று சக்கர வண்டியின் முன் விளக்கில் பெரிய கீறல், இருந்தும் "வல்லவன் வகுத்ததே வாய்க்கால்" என்பதால் மூன்று சக்கர வாகன ஓட்டுனர் ஒன்றும் சொல்லாமல் முணுமுணுத்தபடியே வண்டியை இறங்கி பின்னால் தள்ளினான். ஆனால் வண்டியில் சவாரி ஒன்றுமில்லை.

வண்டியில் ஏறிய தமிழரசிடம் "ஒண்ணும் ஆகலையே" என்றாள் அக்கறையோடு.

அக்கறையின் ஆனந்தத்தில் மெல்லிய சிரிப்புடன் "ஒண்ணும் ஆகல" என்றான்.

கொஞ்ச நேரம் அமைதியாகவே வண்டியை ஓட்டி வந்தவனுக்கு மறுபடியும் மீனாவிடம் ஏதாவது கேட்டுப் பேசிக் கொண்டு தொடர வேண்டும் போலிருந்தது.

"தி.ஜா. எழுத்துக்களெல்லாம் படிச்சிருக்கீங்களா?" என்று தொடர்ந்தான்.

"நீலங்கரைக்கு போக இன்னும் எவ்வளவு நேரமாகும்?" அவன் கேள்வியை கவனிக்காதது போல் மறு கேள்வி கேட்டாள்.

"இது திருவான்மியூர்.." விளக்க நினைத்தான்.

"தெரியுது, இன்னும் அதிக தூரமில்லையே?" ஏற்கெனவே தெரிந்திருந்ததால் தெளிவுபடுத்திக் கொள்ள கேட்டாள்.

"கிட்டதான், வந்திடுச்சு.." என்று கொஞ்சம் வேகத்தைக் கூட்டியபடி கூறினான்.

அவள் 'பட்பட்'டென்று பேசும் சுபாவம் அவனுக்கு பிடித்திருந்தது. அவள் இலக்கிய ஆர்வமும் பிடித்திருந்தது. அவன் பேச்சுக்கு காது கொடுத்ததும் பிடித்திருந்தது. அவள் தமிழ் பேச்சும் பிடித்திருந்தது.

அவன் பின்னால் பார்க்கும் கண்ணாடியில் அவள் தெரியும்படி திருப்பி வைத்தான். புதியதாய் ஒரு உணர்வு அவனைப் பற்றிக் கொண்டிருந்தது.

அதைக் கவனிக்காமலேயே அவள் சேலையைச் சரி செய்துக் கொண்டாள். கோவிலைக் கடக்கும் போது கன்னத்தில் போட்டுக் கொண்டாள். அதையெல்லாம் இரசித்துக் கொண்டே வந்தான் தமிழரசு.

"எல்லா வகையான கவிதையும் பிடிக்கும் என்றீர்களே, காதல் கவிதைகள் யாருடையது பிடிக்கும்?" என்று பேச்சை மீண்டும் மெதுவாக ஆரம்பித்தான்.

அவன் கண்களை பார்க்காமல் வேடிக்கை பார்த்தபடி பதில் அளித்தாள் "ம்ம்.. குறிப்பிட்டு யாரையும் சொல்லத் தெரியலை, யதார்த்தத்தோடு ஒன்றி எழுதி, மனதைத் தொடும் எல்லா கவிதையும் பிடிக்கும். கவிதையாக படிப்பதைவிட பாட்டில் வரும் கவியரசின் வைர வரிகள், தாமரையின் கவிதை கலந்த பாடல்கள் எல்லாம் பிடிக்கும். பா. விஜயின் கவிதைகள், அறிவுமதி, யுகபாரதி, தபுசங்கர், நா. முத்துக்குமார் என்று சொல்லிக் கொண்டே போகலாம்."

"தேவதையின் தேவதைகள் படித்திருக்கிறீர்களா? ரொம்ப திகட்டலா தோன்றவில்லை?" என்றான் முகம் சுளித்தவாறு.

"அப்படியொன்றும் தோன்றவில்லை. அழகியல் அதிகமிருந்தாலும் அழகாகவே இருந்ததாக எனக்குப்பட்டது. நல்ல இரசனையோடு எழுதியிருக்கிறார் கவிஞர்" என்றாள் இரசித்தபடி.

என்ன இரசனையோ என்று சலித்துக் கொண்டவாறு "உரைநடை வீச்சுதானே அதிகம்? கவிதையாக ஒன்றுமே எனக்கு தென்படவில்லை."

"அது என்னவோ உண்மைதான், இருப்பினும் ஒரு பெண்ணை இப்படியெல்லாம் இரசிக்கலாமா என்று பிரம்மிப்பாக இருந்தது எனக்கு" என்று 'கலுக்'கென்று சிரித்தாள் நட்புணர்வோடு.

நீலாங்கரை நுழைந்ததும் அவள், "அடுத்த தெரு, இடதுப்பக்கம்" என்று வழியைக் கவனமாக பார்த்துக் கொண்டு வந்தாள்.

வண்டி இடதுபக்கம் திரும்பியதும் "மெதுவாப் போங்க.." வீடுகளை கவனித்தபடி தன்மையோடு. "இந்த வீடுதான்" என்று ஒரு புன்முறுவல் வைத்தாள் தோழிகளை காணப் போகும் மகிழ்ச்சியில்.

கதவைத் திறந்து இறங்கிக் கொண்டவள் தன் கைப்பையை மாட்டிக் கொண்டு வீட்டை ஒருமுறை மீண்டும் பார்த்து உறுதி செய்து கொண்டு, குனிந்து "போய்ட்டு வரேங்க, உங்களைச் சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி" என்று சிரித்த முகமாகச் சொல்லிவிட்டு அவன் பதிலுக்குக் காத்திராமல் கதவை அடைத்தாள்.

உள்ளே இருந்து சுஜா வர, அவளை நோக்கி கைகளை விரித்து "சுஜி" என்று கூறி அரவணைத்துக் கொண்டாள்.

தமிழரசன் அவளைப் பிரிய மனமில்லாமல் சீருந்தின் ஒலியெழுப்பியை அழுத்தினான், முக மலர்ச்சியோடு திரும்பிப் பார்த்த மீனா "ம்ம்.." என்றாள் 'என்ன' என்பது போல்.

"சாயங்காலம் எத்தன மணிக்கு வரணும்?" என்று ஆவலாக கேட்டான்.

"நான் கூப்பிடுறேனே.." அவளுக்கே தெரியாது என்பதாலும் இவனுக்கேன் அப்படியொரு அக்கறை என்பது போலவும் பதில் வந்தது.

'சரி'யென்று தலையாட்டி அவளைப் பார்த்தபடியே வண்டியை திருப்பிக் கொண்டு போனவன் மனதில் மாலையின் சந்திப்பை நினைத்து பூரிப்பு. வண்டியில் இருந்து இறங்கினாலும், மனதில் ஏறிக்கொண்டவளை நினைத்துக் கொண்டு வண்டியில் நல்ல பாடல் ஒலிக்க செய்தான்.

உள்ளே வந்த மீனாவின் செல்பேசி ஒலித்தது. "அப்பா, இப்பதான் வந்து சேர்ந்து உள்ளே நுழையிறேன்."

நிம்மதி மூச்சுடன் "சரிம்மா. அப்ப சாயுங்காலம் எத்தன மணிக்கு வண்டி வேணும்னு முன்கூட்டியே சொல்லிடு" என்றார் சொல்லி வைத்தாற்போல.

"நானே சொல்லனும்னு நினைச்சேன்ப்பா... வண்டி எத்தன மணிக்குன்னு சொல்றேன் ஆனா இப்ப வந்த ஓட்டுனர் வேணாமே.." என்றாள் தயக்கத்தோடு.

"ஏம்மா ஏதாவது பிரச்சனையா" அப்பா உடனே பதறிவிட்டார்.

"அதெல்லாம் இல்லப்பா, ஆனா வேணாம். நீங்க ஒண்ணும் சொல்லிக்காதீங்க, வேற ஆளு மட்டும் அனுப்பச் சொல்லுங்க போதும்" என்றாள் மீனா.

மகளைப் புரிந்துக் கொண்டவனாக "சரிம்மா, வைக்கிறேன்" என்றார் அப்பா.

"சரிப்பா, அப்புறம் அம்மாக்கிட்ட பேசுறேன்னு சொல்லுங்க" அம்மாவின் மனதை அறிந்துரைத்தாள்.

இணைப்பு துண்டிக்கப்பட்டதும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட சுஜா ஆவலாக "ஏண்டி, ஏதாவது பிரச்சனையா?" என்று மறுமுனையில் அப்பா கேட்டதையே கேட்டாள்.

"அதெல்லாம் இல்ல. சரியான தொணதொணப்புடி அந்தாளு. ஒரு நிமிஷம் வாய மூடல. எல்லாம் தெரிஞ்ச மேதாவின்னு நெனப்பு அவனுக்கு. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற தலைக்கனம், பள்ளிக்கூட வாத்தியாரு மாதிரி கேள்விக்கேட்டுக்கிட்டே சாகடித்தான். மனம்புண்படுத்த வேண்டாமேன்னு பாவம்னு பதில் சொல்லிக்கிட்டே வந்தேன். முகம் கொடுத்து பேசல இருந்தும் விடாம.. அப்பப்பா.." என்று அந்த எரிச்சலை நினைவுப்படுத்தாதே என்பது போல முகம் சுளித்தாள்.

சரி இவள பேசவிட்டா அவ்வளவுதான்னு தோழிகள் கூடி இருக்கும் அறைக்குள் மீனாவை இழுத்துச் சென்றாள் சுஜா. அங்கே நுழைந்ததும் மகிழ்ச்சி சூடிக் கொண்டு எக்களிப்பில் திளைத்தனர்.

Tuesday, May 29, 2007

உங்கள் வீட்டின் நிதி அமைச்சர் யார்?


இல்லற வாழ்க்கையைப் பற்றிப் பெரியவர்கள் அறிவுறுத்தும்போது அன்பும், அறனும் சேர்ந்தால்தான் வாழ்க்கை பண்பும் பயனுமாக இருக்குமென்று சொல்வார்கள். பண்பும் பயனுமான இல்வாழ்க்கையில் இன்றைய காலத்தில் பொருளாதாரமும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கணவனோடு சேர்ந்து மனைவியும் பொருளீட்டுவது தவிர்க்க முடியாததாகிவிட்ட அளவுக்கு இன்றைக்கு வாழ்க்கைச் சூழல்கள் சிக்கலாக மாறி வருவதை கண்கூடாகக் காண்கிறோம். இந்தச் சூழலில் அன்றாட வாழ்வில் அவசியமாகிவிட்ட பொருளாதாரச் சுமையை ஒருவராகவே சமாளிப்பதென்பதும் சிரமமானதாகி வருகிறது. - எப்படி ஒரு கை ஓசை எழுப்பி ஒலியை உருவாக்க முடியாதோ அது போல.. இந்நிலையில் குடும்பத்தின் பொருளாதாரத் திட்டங்களில் கணவனுக்கு மனைவி பக்கபலமாக இருந்து உதவுதலும், தேவையான பொழுதுகளில் கணவனுக்கு அறிவுறுத்துவதும் மிக மிக அவசியமாகும்.

இரண்டு மாடு சேர்ந்து இழுக்கும் வண்டியைப் போலத்தான் குடும்ப வாழ்க்கையும். கணவனும் மனைவியும் எல்லா விஷயங்களிலும் விட்டுக் கொடுத்து புரிந்து சேர்ந்து முடிவெடுத்து திட்டமிட்டால்தான் வாழ்க்கைச் சக்கரம் சீராகச் சுழலும்.

ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு தனியாக இருக்கும்போது தன் தேவையை மட்டும் கவனித்துக்கொள்வது, அனாவசியச் செலவுகள் செய்வது என்று பழக்கப்பட்டு விடுகிறான். அவனுக்குத் திருமணமென்று நேர்ந்து குடும்பப் பொறுப்புகள் கூடும் போது கண்ணைக் கட்டி காட்டில் விட்டதாக புது பொறுப்புகளை கடிந்துக் கொள்கிறான். என்னதான் படித்திருந்தாலும் குடும்பத்தை நிர்வாகம் செய்வது எப்படி என்பதை ஒரு தனிப்பாடமாக இன்னும் கட்டாய கல்வியில் கொண்டு வரவில்லைதானே?! ஆனால் பெண்கள் அப்படி இல்லாமல் திருமணத்திற்கு முன்பிருந்தே தன் தாய்- தந்தையின் வாழ்வை கூர்ந்து கவனிப்பவளாக இருந்து, தந்தைக்கு கணக்கு வழக்குகளிலும், தாயாருக்குக் குடும்ப நிர்வாகத்திலும் உதவியாகப் பங்கேற்று பொறுப்புடன் தலைப்பட தொடங்கிவிடுகிறாள். அவளுக்குத் திருமணமாகி போன பிறகு தன் கணவன் ஈட்டி வரும் வருமானத்திற்குள்ளாக செலவு செய்து செவ்வனே குடும்பம் நடத்த இந்த அனுபவம் அவளுக்குத் துணையாக இருக்கிறது. ஆனால், இது மட்டுமே போதுமா என்றால் போதாது? அடிப்படைச் செலவுகளைக் குறைப்பதில், தேவையறிந்து செலவு செய்வதில் மட்டுமே ஒரு மனைவியின் பங்கு இருந்தால் மட்டும் போதாது. மாறாக ஒட்டுமொத்தமாகக் குடும்பப் பொருளாதாரத் திட்டமிடுதலில் மனைவியும் ஈடுபடும்போதுதான் அந்தக் குடும்பம் பொருளாதார ரீதியாக வளம் பெறுவதோடு, இந்த பங்கிடுதல் குடும்பத்தில் பாசப்பிணைப்பையும் அதிகமாக்குகிறது. எப்படி என்று பார்க்கலாமா?


பொதுவாகவே கணவன் - மனைவி இருவரில் ஏதேனும் ஒருவருக்குச் செலவு செய்ய அலாதிப் பிரியமிருக்கும் மற்றொருவருக்கோ வருங்காலத்திற்காகக் சேமிப்பதே நோக்கமாயிருக்கும். இப்படி இருவேறு துருவங்களாக இருவரும் இருந்தால் அதன் மூலம் ஏற்படப் போகும் விளைவுகள் என்னவென்பது நமக்குத் தெரிந்ததுதானே?! இதைத் தவிர்க்க வேண்டுமானால் ஒரு கூட்டு முயற்சியும், அதற்காக இரண்டு மூளைகளும் சேர்ந்து செயல்படுவதும் அவசியமாகிவிடுகிறது.

உலகமயமாக்கல் காரணமாக திறந்த சந்தை வெளி பெருகி விட்ட இந்தக் காலத்தில் நுகர்வோரின் எதிர்பார்ப்புகளைத் தூண்டி ஏதேனும் பொருளை எப்படியாகிலும் விற்றுவிடும் முயற்சிகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. இந்த நுகர்வோர் சந்தை வெகு இலகுவாக செலவுகளை அதிகரிக்க வைக்கும் தன்மை கொண்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது இருவரின் கடமையாகிறது. கணவன் - மனைவி இருவருமே வேலைக்குப் போக வேண்டிய தேவை இருப்பதால் இருவருமே மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டியதிருக்கிறது. முட்டையிடும் வாத்துக்குதான் வலி தெரியுமென்று ஒரு சொலவடை உண்டு அதன்படி வருமானத்தின் அருமை புரிந்து எந்தப் பொருள் தேவையோ அந்தப் பொருளை வாங்குவது, அந்தப் பொருளை எங்கு வாங்கினால் நியாயமான விலைக்கு கிடைக்கும் என்று மிகுந்த கவனத்துடன் செயல்படுவதும், குழந்தைகளுக்கு எந்த உணவுப் பண்டத்தில் சத்து அதிகம், தூய்மையான நல்ல தரமுள்ள பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பது எங்கே என்று பார்த்துப் பார்த்து வாங்குவதும், அவசரமயமான பணிச்சூழல் காரணமாக உணவகத்தில் அன்றாடமாகவோ அடிக்கடியோ வாங்கிச் சாப்பிடுவதினால் உடலுக்குக் கேடு வராமலும் வரவு- செலவில் துண்டு விழாமலும் பாதுகாப்பதில் பெண்கள் இயல்பாகவே கெட்டிக்காரர்கள். எனவே, இந்த இயல்பை குடும்பப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தினால் அதனால் நன்மைகள் மட்டுமே விளையும்.

வேலைக்குப் போனாலும் வீட்டுப்பொறுப்பையும் கவனித்து, குடும்பத்தையும் நிர்வாகம் செய்து, குழந்தைகளிடமும் அக்கறையுடன் அன்பு செலுத்தும் பண்பும், மிகுந்த சகிப்பு தன்மையும் மிக்கவர்கள் பெண்கள் என்பதைப் புரிந்து கொண்டு நடக்காமல் 'நீ சொல்லி நான் என்ன கேட்பது' என்பது போல் நடந்து கொண்டால் வாழ்வு சுமூகமாகச் செல்லாது என்பது மட்டுமல்ல, அதனால் குடும்பப் பொருளாதாரத்திலும் பல சிக்கல்கள் ஏற்படவே வாய்ப்பு அதிகம்.

இரண்டு வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த, வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இருவர் திருமணத்தில் இணையும் போது பலவிதமான பிரச்சனைகள் எழும். ஆயினும் விட்டுக் கொடுத்து போதல், புரிந்து கொள்ள முயற்சித்தல் என்ற மந்திரங்களைக் கையாண்டால் பிரச்சனைகள் அதிகமாக வர வாய்ப்பில்லை. வரவு- செலவு கணக்கை தீர்மானித்து அதற்கேற்ப செலவு செய்து இந்த மாதம் இந்த பொருட்கள் வாங்குதல் கட்டாயம், இந்த பொருள் வீண் அல்லது வாங்குவதை தள்ளிப் போடலாம் என்று மனைவி எடுக்கும் தீர்மானங்களை கவனத்தோடு கேட்டு கணவர் ஆமோதித்தால் தேவைக்கேற்ற செலவுகளுடன் சிக்கனமாக வாழலாம். ஒருவருடைய கருத்தை மற்றவர் காது கொடுத்து கேட்பதென்பது மிக அவசியம். அப்போதுதான் ஆலோசித்து முடிவும் எடுக்க முடியும்.

கணவருக்குப் பலவிதமான அலுவல் வேலை இருப்பதனால் குடும்ப நிர்வாகத்தையும் சேர்த்து கவனிப்பது என்பது கடினமாக இருக்கலாம். ஆனாலும் எந்த வகையில் மனைவியால் உதவிட முடியும் என்ற கேள்வியும் இருக்கத்தான் செய்யும். ஓடும் வாகனத்தின் கதவு அரைகுறையாக மூடியிருப்பதைப் பார்த்தால் யாரென்றே தெரியாத போதும் அக்கறையுடன் குறிப்பாலோ சைகையாலோ சுட்டிக்காட்டுவோம். அப்படி முன் பின் தெரியாதவர்களுக்கு நாம் செய்யும் போது நம் குடும்பத்தைத் தலையில் சுமக்கும் மனைவிக்கு நம்மை விட அக்கறையுண்டு என்பதில் முதலில் நம்பிக்கை பிறந்து மனைவியை குடும்ப நிதி அமைச்சராக நியமிக்க வேண்டும். அவர்கள் முயற்சியெடுத்து செய்யும் சிறு சேமிப்பையும் ஆதரித்து மெச்சினால் இன்னும் திறம்பட செய்வதில் அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். இவ்வாறு மாதம் முழுக்கக் கஷ்டப்பட்டு ஈட்டிவரும் சம்பாத்தியத்தை சிக்கனமாகச் செலவழித்துச் சேமித்து வைக்கும் பொறுப்புள்ள மனைவி மீது தானாகவே கணவனுக்கு ஒருவித ஈர்ப்பும் அன்பும் ஏற்பட இது நல்ல வாய்ப்பை உருவாக்கும்.

சிலர் இரகசியமாக வைப்பு நிதியை மனைவியறியாமல் சேமிப்பார்கள். ஏதேனும் காரணத்தால் அவருக்கு திடீர் மரணம் நிகழ்ந்தால் அப்படியொரு சேமிப்பு இருப்பதே தெரியாமல் 'நாய் பெற்ற தேங்காயாக' அது யாருக்கும் பயன்படாமல் போய்விடுவதையும் நாம் உலகில் பார்க்கத்தானே செய்கிறோம்? அப்படி நிகழாமல் இருக்க கணவருடைய கடன், வரவு, வைப்பு நிதி, காப்பீடு இவற்றையெல்லாம் பற்றி மனைவி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அறிந்து கொண்டால் அதற்கேற்ப வரவு- செலவைக் கையாளலாம். வேறு வருமானம் இல்லாதபட்சத்திலும் மனைவி கணவருடைய கடனையும் வருமானத்தையும் தெரிந்து வைத்திருந்தால் விரலுக்கேற்ற வீக்கமாக சிக்கனமாகச் செலவிடலாம். இல்லாவிட்டால் வரவு எட்டணா, செலவு பத்தணா, கடைசியில் துந்தனாதான். நாளை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும். மாறாக, கணவரின் பொருளாதார நிலையை உணர்ந்து அவரது சேமிப்பிற்கும் இதரப் பிரச்சனைகளுக்கும் மதியாலோசனையுடன் தீர்வைச் சொல்லும் மனைவியாக நடந்துக் கொண்டால், கணவர் இறுக்கத்திலிருந்து விடுபட்டு மனைவியுடன் நெருக்கமாவார்.

வரவும், செலவுகளும் வெளிப்படையாகத் தெரியும் போது கணவர் மீது மனைவிக்கோ மனைவி மீது கணவருக்கோ தேவையற்ற சந்தேகங்கள் வர வாய்ப்பில்லை. அதுமட்டுமின்றி கணவர் செய்யும் அனாவசியச் செலவுகளை ஒடுக்க மனைவிக்கு அதுவே நல்ல வாய்ப்பாக அமையும். புகைப்பிடிக்கும் பழக்கமோ மற்ற உடலுக்குக் கேடு விளைவிக்கும் பழக்கமோ கணவருக்கு இருந்தால் அதற்கான செலவுகளை அவருக்கே காட்டி பயமுறுத்தி அந்த பழக்கத்தை குறைத்துக் கொள்ளவோ கைவிடவோ செய்ய முடியும். இப்படி ஒளிவுமறைவற்ற அணுகுமுறையால் குடும்பத்தில் ஒருவித பரஸ்பர அன்பு நிலவுவதோடு தேவையற்ற பழக்கத்திலிருந்து விடுபடுவதோடு செலவையும் குறைக்க முடியும். ஒரே கல்லில் பல மாங்காய்கள் என்று கூடச் சொல்லலாம்.

கடன் அட்டைகள் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. பணத்தைக் கையில் சுமக்காமல் எளிதாக உபயோகிக்க அது ஒரு பெரும் ஆறுதல்தான். ஆனால், அது நெருப்பைப் போல. கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்வரைக்கும்தான் அதனால் பயன் அதிகம். கட்டுப்பாட்டை மீறினால் உடம்பைச் சுட்டுக் கொள்ள வேண்டியதுதான். ஆகவே கணவருக்கு எத்தனை கடன் அட்டைகள் உள்ளன, எந்தத் தேதியில் பணம் அடைக்க வேண்டுமென்று தெரிந்து வைத்துக் கொண்டால் அதைப் பற்றி கணவருக்கு நினைவுப்படுத்தவோ அல்லது தாமே நேரிலோ, கணிணியிலோ கட்டணத்தை செலுத்தி விடுவதனால் தாமதமாக பணம் செலுத்துவதால் வரும் அபராதத்திலிருந்து தப்பிக்கலாம். தவணை முறையில் பொருள் வாங்குவது, கடன் அட்டையில் கடனுக்குப் பொருளை வாங்குவதென வீண் வட்டி செலுத்துவதை விட உரிய நேரத்தில் முழு பணத்தையும் அடைத்துவிடுவதன் அவசியத்தை உணர்த்தி அவ்வாறு செய்ய கணவரைத் தூண்டலாம். அல்லது மனைவியே அந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதே நேரம் கடனட்டைகள் மூலம் கிடைக்கும் வாணிபச் சலுகைகளையும் அனுபவிக்கலாம் என்று கணவரை வலியுறுத்தி செயல்பட செய்து கடன் அட்டையிருந்தும் கடனாளியாக இல்லாமல் இருக்கலாம். முடிந்தால் கடன் அட்டையையே ஒழிக்கவும் முயற்சிக்கலாம்.

முன்பெல்லாம் பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கிறான் என்று சொல்வார்கள் இப்போதெல்லாம் தண்ணீருக்கும் பணம் என்ற நிலை அதனை அறிந்து தண்ணீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகச் செலவழித்து நல்ல பெயர் வாங்குவதில் கணவர்- மனைவி இருவரும் போட்டி போட்டால் அவர்களை பின்பற்றும் பிள்ளைகளும் இயல்பாக சிக்கனமாக இருக்க கற்றுக் கொள்வார்கள். இது குடும்பத்திற்கு மட்டுமான திட்டமிடல் கூட இல்லை. இயற்கை வளம் குறைந்து வரும் இந்த காலகட்டத்தில் மிக முக்கியமான செயலும் கூட. தண்ணீர், மின்சாரம், தொலைபேசி, பள்ளிக் கட்டணம் என்று மாதா மாதம் வரும் பட்டியலை தயார் செய்து எப்போது செலுத்த வேண்டுமென்று அறிந்தும் வைத்துக் கொண்டு பணத்தை உரிய நேரத்தில் கட்டிவிடலாம். விலைப்பட்டியல்களையும், ரசீதுகளையும், வங்கியிலிருந்து வரும் கணக்கு விபரங்களையும் சரி பார்த்து ஒழுங்காக ஒரு கோப்பில் அடுக்கிவைத்தால் இந்த மாதத்திற்கும் போன மாதத்திற்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டறியலாம். இவ்வகையான சின்ன விஷயமாகத் தெரியும் வேலைகளை பகிர்ந்துக் கொள்வதன் மூலம் கணவருக்கும் தன்னாலான உதவிகளை மனைவிக்கு செய்ய உந்துதல் வரும்.

என்னதான் ஞாபக சக்தி இருந்தாலும் தினப்படி நடக்கும் செலவுகளை எழுதி வைக்க வேண்டும். இதன் மூலம் இது தேவையற்ற செலவு வரும் நாட்களில் இது இருக்கக் கூடாது என்பதை கண் கூடாகப் பார்த்து புத்திசாலித்தனமாக கையிருப்பை எப்படி புது முதலீட்டில் செலுத்தலாம் என்பதைப் பற்றியும் யோசிக்க அது உதவும். செலவு செய்யும் போது கஞ்சத்தனத்திற்கும் சிக்கனத்திற்குமான வேறுபாட்டை மனைவி கணவருக்கு எடுத்துச் சொல்லலாம். தேவையான பொருட்களையும் வாங்காமல் மிச்சப்படுத்துவது சிக்கனமல்ல லோபித்தனம், அதே போல் ஆடம்பரமென்று ஊதாரித்தனமும் கூடாது செலவு செய்வதை ஒரு கலையாக எண்ணி நடைமுறைப்படுத்தினால் எதுவும் கடினமாகவே இருக்காது என்பதை பொருளாதாரத் திட்டமிடுதலின் மூலமாக ஒரு மனைவியால் உணர்த்த முடியும்.

அன்றாடச் செலவுகளைத் தவிர மற்ற திடீர் செலவான மருத்துவ செலவு, விடுமுறை கொண்டாட்டம், பண்டிகை நாட்களுக்கான விசேஷ செலவு, எதிர்பாராமல் கார் பழுதடைந்தாலோ, விபத்து நேர்ந்தாலோ ஆகும் உபரி செலவு என்று எல்லாவற்றையும் கணக்கில் வைக்காமலிருந்தால் 'பட்ஜெட்'டில் துண்டென்ன வேட்டியே விழும். வரவு- செலவு பட்டியலிடாமல் இருந்தால் செலவுகள் கணக்கில்லாமல் போய்விடும். வரவு- செலவு எழுதிய படி செயல்பட முடியவில்லை என்று கைவிட்டுவிடாமல் அதற்கென்று ஒவ்வொரு வார இறுதியிலும் கணவர்- மனைவி இருவரும் நேரம் ஒதுக்கி சரியாக திட்டம் தீட்டினால் முடிவு பலன் தரும், சேமிப்பும் கூடும். இப்படி அடிக்கடி செலவுகளை விவாதிப்பதில் மனைவி முன்கையெடுப்பதன் மூலம் கணவருக்கும் குடும்பச் செலவுகள் குறித்த பூரணமான நிலை தெரிய வரும். இப்படி செய்வதனால் 'ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் திண்டாட்டம்' என்றெல்லாம் பாடத் தேவையே இருக்காது.. இப்படி அடிக்கடி விவாதிப்பதும், குடும்பம் தொடர்பான செலவுகளைப் பகிர்ந்து கொள்வதும் குடும்பச் செலவுகளுக்கு ஒரு வெளிப்படையான அணுகுமுறையை ஏற்படுத்துவதோடு, பகிர்ந்துகொள்ளுதலும், புரிந்துணர்வும் கணவன் மனைவியிடையே அதன் மூலம் அதிகமாகிறது. இது குடும்பத்திற்கே ஒரு சாந்தமான சூழலை உருவாக்கித் தருகிறது என்பதும் உண்மை - உண்மையைத் தவிர வேறில்லை.

வாழ்க்கை என்பது கொஞ்ச காலம் மட்டும்தான். நாளை என்பதை யாரறிவார் என்று அலட்சியமாக இருந்தால் அதுவே வாழ்க்கையை நரகமாக்கிவிடும். அதனை கணவருக்குப் புரியவைத்து, கட்டுக்கோப்பான ஒரு பொருளாதாரச் சூழலை உருவாக்கி குடும்பப் பொறுப்புகளைக் கரிசனத்தோடு செயல்படுத்தும் பெண்களுக்கு அங்கீகாரமும் முக்கியத்துவமும் வழங்கப்படுதல் மிக அவசியம். இது போன்று தனக்கு வழங்கப்படும் அங்கீகாரம் ஒரு பெண்ணுக்கு தன் குடும்பம் சார்ந்த பொறுப்புணர்வை இன்னும் அதிகமாக்கவே செய்யும். இது சில வேளைகளில், ஆரம்ப காலங்களில் சில பிணக்குகளுக்கு வழி வகுத்தாலும் கூட நீண்ட காலத் திட்டமிடுதலுக்கு இது மிக முக்கியமானது என்பதை இருவருமே உணரும் நிலை ஏற்படும். அது கணவனுக்கும் மனைவிக்குமான உறவை வலுப்படுத்தும் பலப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றில்லாமல் அமைந்த மனைவியை வரமாக மாற்றி, இல்லாள் என்பவள் வாழ்க்கை துணை, அன்பு செலுத்த மற்றும் பகிர்ந்து கொள்ள என்பதை புரிந்துக் கொண்டு தலைப்பட்டு குடும்பத்தின் பொருளாதாரத் திட்டமிடுதலில் மட்டுமல்ல எல்லா விஷயங்களில் சேர்ந்து முடிவெடுத்தால் ஒரு பல்கலைகழகமாக நல்லதொரு குடும்பமாக வாழ்வே ருசிக்கும்.

Tuesday, May 22, 2007

பாரனாய்ட் - Paranoid

'பாரனாய்ட்' என்றால் உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வருது? 'பாரனாய்ட்' ஆல்பமா இல்லை வியட்நாம் போரா? என்ன சுத்த பைத்தியக்கார கேள்வின்னு கிரேக்கம் தெரிஞ்சவங்க சட்டுன்னு கேட்டிடுவாங்க. காரணம் 'பாரனோயா'னாலே 'பைத்தியக்காரத்தனம்'னு பொருள். ஆங்கிலம், ஹிந்தி படங்கள அதிகம் பார்க்கிறவங்களுக்கும் இது புது வார்த்தையில்ல, ஏன்னா தமிழ்ல பைத்தியக்காரின்னு சாதாரணமா திட்டுறா மாதிரி அவங்க ரொம்ப சுலபமா உபயோகிக்கிற வார்த்த அது. ஆனா அந்த அளவுக்கு 'பாரனாய்ட்' சுலபமா குணப்படுத்திடக் கூடிய நோயான்னா இல்லன்னுதான் சொல்லனும்.

நீங்க தன்னம்பிக்கை மிக்கவரா? அதுல தப்பேயில்ல ஆனா மிதமிஞ்சி பொங்கி வழியுற அளவுக்கு நம்பிக்கையிருந்தா பிரச்சனைதான். என்னடா இவ இப்படி சொல்றாளேன்னு யோசிக்கிறீங்களா? உண்மைதாங்க. உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்துல நம்பிக்கை வைக்கலாம் அதப்பத்தி உறுதியாவும் பேசலாம் ஆனா தெரியாத விஷயத்த பத்தி நீங்களே நினச்சுக்கிட்டு இப்படித்தான் இருக்கும்னு ஒரு முன்முடிவோட இருந்துக்கிட்டு சந்தேகப்படுவது முட்டாள்தனமா பைத்தியகாரத்தனமா? என்ன குழப்புறேனா? சரி தெளிவாவே சொல்லிடுறேன். ஒருத்தர் எப்போதும் மத்தவங்க மேல அவநம்பிக்க வச்சி சந்தேகப்பட்டுக்கிட்டே இருந்து, ஒவ்வொரு செயலிலும் குத்தம் கண்டுபிடிச்சிக்கிட்டு இல்லாத பொருள தேடிக்கிட்டு 'நான் சொல்றதுதான் சரி, நான் புடிச்ச முயலுக்கு ஒன்றரைக் காலுன்னு' (மூணுகாலுன்னுதான் அடம்பிடிக்கணுமா என்ன?) அடம்பிடிச்சிட்டிருந்தா இந்த 'பாரனாய்ட்' குணக்கேடுல மாட்டிக்கிட்டாங்கன்னு அர்த்தம். 'பாரனோயா'வால் (Paranoia) பாதிக்கப்படுகிறவர்கள்தான் 'பாரனாய்ட்'. அடம்பிடிக்கிறது எல்லா குழந்தைங்கக்கிட்டயும் இருக்குற குணம். குழந்தைகளா இருக்கும் போது புரியாம அடம்பிடிப்பத நாம குழந்த குணம்னு விட்டுடுவோம். குழந்தையும் வளர வளர நாலுபேருக்கிட்டப் பேசிப் பழகும் போது, பெற்றோர் நடத்தையையும் மத்தவங்க வழக்கங்களையும் பார்க்கும் போது தன்னையே மாத்திக்கிற பக்குவம் வரும். ஆனா பெரியவங்களா ஆனா பிறகும் இப்படி இருக்கிறவங்களுக்கு எந்த உறவுமே நிலையாவோ நெருக்கமாவோ வர முடியாது. ஏன்னா 'பாரனாய்ட்' நோயாளி நெருங்கிப் பழகுறா மாதிரி இருக்கும் ஆனா மனசளவில தூரமாத்தான் இருப்பாங்க. உள்ளுக்குள்ள வஞ்சம் வச்சிக்கிட்டு இதுக்கு இப்படித்தான் அர்த்தம், எத பேசினாலும் நம்மளத்தான் குத்திக்காட்டி மறைமுகமா ஏதோ பேசுறாங்க, இவ செய்ற செயல் நம்மள கெடுக்கன்னு, தானே நினச்சுக்கிட்டு மனசுக்குள்ள எப்பவுமே போராடிக்கிட்டு இருப்பாங்க. சுருக்கமா சொன்னா கற்பனை திறன் இவங்களுக்கு அலாதி, கத கட்டுறதுல ஞானி, குதர்க்கமான சிந்தனைவாதி.

இதுக்கு ஒரு சின்ன உதாரணம் சொல்லட்டா? ஒரு நெருக்கமான ஒருத்தரோட அழைப்புக்காக காத்திருக்கீங்க, அவங்களும் உங்கள அழைக்கிறதா சொல்லிருக்காங்க ஆனா தவிர்க்க முடியாத காரணத்தால அழைக்க முடியல. நீங்க அழைக்கும் போதும் எடுத்துப் பேசுற சூழ்நிலையில இல்லன்னு வச்சுக்கோங்க, சரி ஏதோ பிரச்சன அதான் பேச முடியல, அவங்க சூழ்நில அப்படின்னு நல்லவிதமா நினச்சுக்கிட்டா நல்லது. அப்படியில்லாம வேணும்னே எடுக்கலன்னு நினச்சுக்கிட்டு காரணம் கேட்டும் திருப்தியில்லாம அப்படியிருக்க முடியாது 'பொய்'னு தலையில ஒலிச்சுக்கிட்டே இருக்கிறதனால தையத்தக்கான்னு குதிச்சா 'பாரனாய்ட்'. இதுதான் எல்லாரும் செய்ற விஷயமாச்சேன்னு நீங்க கேட்கலாம். அதுக்காக எல்லாத்துக்கும் 'பாரனாய்ட்'னு சொல்ல முடியாது. இப்படி தோணும் போதே 'ச்சே நமக்கேன் இப்படி தப்பு தப்பா நினக்க தோணுது, அவங்க சொல்றதுல உண்மையிருக்குன்னு மனச நாமே சமாதனப்படுத்திக்க முடியும்னா தப்பிச்சோம். 'பாரனாய்ட்' வந்த பிறகு குணப்படுத்த மருத்துவர தேடுறத விட அதுல விழுந்திடாமப் பார்த்துக்கிறதுதான் புத்திசாலித்தனம். நம்மள நாமே காப்பாத்திக்க முடியிலன்னா நெலம முத்திப் போயி கண்டதுக்கெல்லாம் குறுக்குக்கேள்வி வந்து வாழ்க்கையே போராட்டமாயிடும். இது நாய் குணம் மாதிரி. சில நாய் பார்த்திருக்கிறீங்களா காரைத் துரத்திக்கிட்டே போகும், அல்லது கண்ணுக்கு பயமா தெரியுற ஏதையாவது பார்த்து குரைக்கும் அந்த மாதிரிதான் இதுவும். இந்த சூழல் ஒரு நட்புக்கிடையே வந்துச்சுன்னா 'நம்பிக்க இல்லன்னா போடா'ன்னு சொல்லிட்டு அவங்களா மன்னிச்சி திரும்ப வர வரைக்குமிருக்கலாம். அப்படியில்லாம கணவன் - மனைவிக்குள் வந்திடுச்சுன்னா யோசிச்சு பாருங்க - வாழ்வே நரகம்தான். 'பாரனாய்ட்' நோயால கொலை செஞ்சக் கதையெல்லாம் கூடஇருக்கு. இப்படிப்பட்டவங்க நம்மக்கு நெருங்கின உறவா இருந்தா இவங்களப் பார்த்துப் பரிதாபப்படுறதா, கோபப்படுறதானே தெளிவாயிருக்கிறவங்களுக்கும் குழப்பமாப் போயிடும்.

பொதுவா இந்த 'பாரனாய்ட்' தாக்கம் இரு வேறுப்பட்ட தகுதிகளுக்கிடையே உள்ள உறவுக்குள்ள வர பிரச்சனை. இத 'இரொடொமேனியா' (Erotomania) அப்படின்னு சொல்லுவாங்க. ஒருவர் பிரபலமாயிருந்தா அவங்க நெருங்கிய உறவான அம்மா, தங்கை, நண்பர்னு யாருக்கு வேணும்னாலும் இந்த நோய் வரலாம். ஏன்னா அவங்கள மாதிரி நாம இல்லங்குற தாழ்வுமனப்பான்மையில அவங்க உதாசினப்படுத்துறாங்கன்னு, அவங்க செய்யுற செயல் ஒவ்வொண்ணும் நம்மள மட்டம் தட்டுறதுக்குன்னு தோணிக்கிட்டே இருந்தா 'பாரனாய்டா' வெடிக்கும். குறைகுடம் கூத்தாடுவது சகஜம்தானே? பாரனாய்டில் பலவகைகள் இருக்கிறது 'புரியாத புதிர்' ரகுவரன் ஒருவகைன்னா 'வல்லவன்' ரீமா சென், 'ஆளவந்தான்', 'அந்நியன்' எல்லாம் ரொம்ப முத்தின வேறு வகை. பாரனாய்ட்வாதிகளுடைய சிந்தனை சிதறல் எப்படியிருக்கும் தெரியுமா?

* காலிப் பாத்திரம் மிகுந்த சப்தமிடுறா மாதிரி சின்ன விஷயத்தையும் பிரம்மாண்டபடுத்திப் பெருசா யோசிப்பாங்க.
* நீ பெரியவளா நான் பெரியவனா என்கிற மாதிரி வரிஞ்சிக்கட்டிக்கிட்டு நிற்பாங்க.
* தான் நினைக்கிறது, புரிஞ்சுக்கிறது மேல அவ்வளவு நம்பிக்க அவங்களுக்கு - தான் நினைப்பது சொல்றதுதான் சரின்னு உறுதியாயிருப்பாங்க.
* தன் தவறை மறைக்க மத்தவங்க மேல பழி போடுவாங்க. (உத. கணவனுக்கு மனைவி மேல சந்தேகம் என்பதையும் நேரடியாக் காட்டிக்காம அவ இப்படி உன்னப்பத்தி சொல்றா அப்படின்னு மத்தவங்க மேல பழி போட்டு கேள்வி எழுப்புவாங்க)
* நெருங்கியவங்க எப்போதும் ஏமாத்துறாங்க என்ற உணர்வோடு மறைகழண்டு ஆடுவாங்க.
* பிடிச்சபிடியா உரிமையென்ற பேருல உயிரெடுப்பாங்க, சந்தேகப் பிசாசுங்க.

இப்படில்லாமிருக்கிறதால உறவற்று போயிடுவாங்க, தனியாயிருப்பத ஆரம்பத்தில் நல்லாயிருக்குன்னு நெனச்சாலும் 'வேலையில்லாத மூளை சாத்தானின் பட்டறை'யாச்சே ஏதாவது குழப்பிக்கிட்டே இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோன்னு கணக்குப் போட்டுக்கிட்டு வாக்குவாதத்தில் ஆரம்பிச்சு சண்டையிலப் போயி நிற்கும். தனிமைப்பட்டுப் போன மனசுக்கு பாதுகாப்பில்லாம பய உணர்வு கூடும் அதுவே தூக்கத்தக் கெடுக்கும், பிடிச்ச விஷயங்களக் கூட செய்யப்பிடிக்காமப் போகும். இப்படிப்பட்டவங்கள பாம்புன்னு தாண்டவும் முடியாது பழுதுன்னு மிதிக்கவும் முடியாது, இவங்கள கையாள்வது ரொம்ப கஷ்டம்.

சாதாரணமா இருக்கிறவங்க திடீர்னு தாக்கத்தால சின்ன விஷயத்திற்குக் கூட குரல உயர்த்தி சண்டப்போடுவாங்க. தன்னிலை மறந்து நடந்துக்கிறவங்களும் இருக்காங்க, தான் இப்படியெல்லாம் பேசுறோம்னு தெரிஞ்சும் தன்னையே கட்டுப்படுத்த முடியாதவங்களும் இருக்காங்க. தன் மேல கவனம் வரணும் என்பதற்காகவே ரொம்ப விஷேசமா ஆடுவாங்க. இப்படி வித்தியாசமா ஆடும் போதுதான் அத சாமி வந்திடுச்சுன்னும், பேய் புடுச்சிடுச்சுன்னும் மந்திரிக்க ஆரம்பிச்சிடுறாங்க.

இந்தப் பிரச்சனை வர்றதுக்கு காரணம் மூளையில 'அமிக்டலா'ன்ற (Amygdala) ஒரு பகுதியில சரியா இருக்க வேண்டிய நரம்பணுக்கள் சிதறிப்போய் பாதிப்படைந்திருந்தாலோ, அல்லது சிறு வயதில் சில சம்பவங்களால் பாதிப்பிருந்தாலோ, அதுவுமில்லாம வேற நோய்க்கு சாப்பிடுற மருந்தோட பக்கவிளைவினாலோ இந்த 'பாரனாய்ட்' வரலாம்.

'பாரனாய்ட்' குணப்படுத்துறது ரொம்ப கஷ்டம்னு நான் ஆரம்பத்திலேயே சொன்ன காரணம் பாதிக்கப்பட்டவங்களுக்கு மருத்துவர் மேல முதல்ல நம்பிக்கை வரணுமே? அந்த நம்பிக்கை வந்தாலும் அவர் கொடுக்குற மருந்து மேல நம்பிக்கையிருக்கணும். இந்த மருந்த சாப்பிட்டா நமக்கு அப்படிலாம் தோணாது பூரண குணமாயிடுவோம்னு உறுதியிருக்கணும். இல்லாட்டிப் போனா காசக்கொட்டி வைத்தியம் பார்த்தும் 'ம்ஹும் இந்த மருந்து என்னை மாத்த முடியாது'ன்னு சாப்பிடாம விட்டுட்டா கோவிந்தா கோவிந்தாதான்.

என்ன மண்டையப் பிச்சுக்கிறீங்களா? வேண்டாங்க. சமாதானத்த வெளியில தேடாம அவங்கவங்க மனசுலதான் இருக்குன்னு புரிஞ்சி நடந்துக்கிட்டா 'பாரனாய்ட்' பின்னங்கால் பிடரில அடிச்சா மாதிரி பிறழ்ந்து ஓடிடும்.

Tuesday, May 15, 2007

நான் அவன் இல்லை - விமர்சனம்


எங்க வீட்டு சினிமா கொட்டகையில் நேற்று 'நான் அவன் இல்லை' பார்க்க நேர்ந்தது. எப்படி பழைய பாடல்களைப் புதுப்பித்து 'ரீமிக்ஸ்' என்ற பெயரில் தருகிறார்களோ அதே போன்ற ஒரு முயற்சிதான் இந்தப் படமும். இந்தப் படம் போலவே இன்னும் 'பில்லா', 'முரட்டுக்காளை' என்று வரிசையாக வரப்போகிறதாம். 'பில்லா', 'முரட்டுக்காளை'யெல்லாம் பரவாயில்லை வெற்றி மசாலாப் படங்கள், அதுவும் பிரபலமான கதாநாயகர்களை வைத்து எடுத்தால் ஓட வாய்ப்புள்ளது. ஆனால் முகவரியே இல்லாத ஓடாத அந்தக் காலத்து கே. பாலசந்தர் தந்த ஜெமினி கணேசன் தனது 54வது வயதில் அவரே தயாரித்து நடித்த படத்தை ரொம்ப தைரியமாகத்தான் திரும்ப தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் செல்வா. இதில் பிரபலமடைந்த பெரிய நடிகருமில்லை. 'யுனிவர்சிட்டி'யில் அறிமுகமாகி, 'காக்க காக்க' படத்தில் வில்லனாக கவர வைத்து 'திருட்டுப் பயலே'வில் தனக்கென முத்திரை பதித்த ஜீவனை கதாநாயகனாகப் போட்டு எடுத்த இந்தப் படத்தை வணிக ரீதியாக வெற்றி பெறும் என்ற முழு தைரியத்திற்கு காரணம் அவர் உபயோகித்த வலுவான ஆயுதம். யோசிக்காமல் புரிந்திருக்குமே? அதான் 'கவர்ச்சி'. பெண்களை ஏன்தான் போகப் பொருளாக எல்லோரும் காட்டுகிறார்களோ தெரியவில்லை. எல்லாப் படங்களிலும் அப்படித்தான் என்றாலும் இதில் கூடுதலாகவே. பெண்களை அசிங்கப்படுத்துவதற்காகவே தேடிப்பிடித்து எடுத்த படமா இது என்று எனக்கு சந்தேகமே வந்து விட்டது. காரணம் எல்லாப் பெண்களையும் ஆபாசமாக அலையவிட்டது மட்டுமல்லாமல் முட்டாள்களாக காட்டியிருக்கிறார்கள். ஓர் இரண்டு பேர் முட்டாள்களாக காட்டியிருந்தால் பரவாயில்லை, படத்தில் வரும் அத்தனை பெண்களும், நீதிபதியான லட்சுமி உட்பட அனைவரையும் முட்டாளாக சித்தரித்திருக்கிறார்கள்.

மன்மத லீலைகளால் பெண்களை கவர்ந்து, ஏமாற்றி, திருமணம் முடித்து, நகை- பணத்தை அபகரித்து மறைந்துவிடும் கதாநாயகன் மீது வழக்கு தொடர்ந்து கூண்டில் நிற்க வைத்து சாட்சிகள் சொல்வதை விரிவுபடுத்துவதுதான் கதை. ஜீவனுக்கு மொத்தம் ஏழு கதாபாத்திரங்கள். படித்த மாடலிங் செய்யும் மாளவிகாவிடம் விக்னேஷாக, ஜோதிர்மயியிடம் மாதவன் மேனனாக, எத்தனை போலி சாமியார்கள் வந்தாலும் திருந்தாத சமுதாயத்தை கண்டிப்பதற்காகவே கீர்த்தி சாவ்லாவிடம் போலிச் சாமியார் வேடத்தில் ஹரிதரதாஸாக, தொழிலதிபர் நமீதாவிடம் ஷாம் பிரசாத்தாக வருகிறார். ஆனால் உண்மையில் ஜோசப் பெர்னாண்டஸ், குற்றவாளி கூண்டில் நிற்கும் போது தான் அண்ணாமலை என்கிறார். ஒப்புக்கு சப்பாக சினேகா, அதுவும் வக்கீலுக்குப் படித்த பெண் ஜாகீர் ஹுசைனிடம் பணத்தை ஏமாறுகிறார் ஆனால் அந்த குற்றவாளிக்கே ரசிகையாகிறார், என்ன கண்றாவிடா சாமி! எல்லா சாட்சிகளின் குற்றச்சாட்டின் முடிவிலும் ஒரே மாதிரியான வசனம் 'நான் அவன் இல்லை' என்று. பட்டுக்கோட்டை பிரபாகர் வசனத்தில் கோட்டைவிட்டிருக்கிறார். கதையில் பெரிய ஓட்டையிருக்கும் போது பாவம் அவரும் என்ன செய்வார்.

நமீதா வரும் இடங்களிலெல்லாம் என்னையறியாமல் நான் காட்சியை வேகமாக ஓடவிட்டேன் ஏனெனில் கைக்குட்டையை ஆடையாக உடுத்தி வருகிறார் அதுவும் மழையில் நனைகிறார் அதனை குடும்பத்துடன் பார்க்க முடியுமா? எல்லா நடிகைகளும் கவர்ச்சி காட்டுவதில் போட்டி போட்டிருப்பதால் நடிப்பை மறந்திருக்கிறார்கள். ஆனால் கதாநாயகன் ஜீவன் ஆயிரங்காலத்து பயிரை எளிதாக மேய்வதாக தந்த பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி, தனக்கு தந்தப் பொறுப்பை நன்றாக முடித்திருக்கிறார்.

மாளவிகா திருமணத்தை நண்பர்கள் குடும்பம் சூழத்தான் செய்கிறார்கள் இருப்பினும் மாப்பிள்ளை புகைப்படத்தை புதுத்தொழில் நுட்பமான செல்பேசியில் அவரே எடுப்பதாகச் சொல்லுகிறார்களாம், எடுக்கிறார்களாம். ஏன் திருமணத்திற்கு வந்த வேறு யாரிடமும் புகைப்படம் எடுக்கும் செல்பேசியே இல்லையா என்ன? அதே போல் பழைய படத்தில் சினேகா வேடத்தில் லட்சுமி, இந்த படத்தில் லட்சுமியின் மகள் சினேகா. சினேகா ஜாகீர் உசேன் ஓவியத்தின் ரசிகையாம், அவருடைய கண்காட்சியைத் தேடிப்பிடித்துப் பார்க்க வருகிறார் ஆனால் ஜாகீர் உசேன் எப்படியிருப்பார் வயதானவரா இளைஞரா என்று கூட தெரிந்து வைத்துக் கொள்ளாமலிருக்கிறார். காதில் பூ சுற்ற ஒரு அளவு வேண்டாம்? திரைக்கதை எழுதி இயக்கிய செல்வா இந்த மாதிரி படம் முழுக்க பல ஓட்டைகள் தந்திருக்கிறார். இதனை தைரியமாக தயாரித்தவர் வி. சித்தேஷ் ஜபக். யு.கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ஜெமினியின் பழைய படத்தில் வரும் 'ராதா காதல் வராதா' என்பதை ரீமிக்ஸ் செய்து புதுப்பொலிவு தந்திருக்கிறார். மற்றுமொரு பாட்டு துபாயில் படமாக்கப்பட்டுள்ளது. பழனி பாரதி மற்றும் பா. விஜயின் வரிகளானாலும் மனதில் நிற்கும்படி விஜய் ஆண்டனி தட்டவில்லை என்று சொல்லலாம்.

படம் பார்க்கும் போது அந்த பழைய படம் நினைவில் வராமலில்லை. அந்த பழைய படம் தொலைக்காட்சியில் போடும் போது 'இதெல்லாம் பெரியவங்க படம் பார்க்கக் கூடாது' என்று எங்க அம்மா விரட்டியடித்தது நினைவிலிருக்கிறது. இப்போதெல்லாம் 'பெரியவங்க' படமென்று தனியாக பிரிக்க முடியாது எல்லாப் படங்களுமே அப்படித்தானே? அந்தக் காலத்துக்கு இந்த கதை, புருடா எல்லாம் சரிதான் ஆனால் தொழில்நுட்பங்கள் முன்னேறிய இந்தக் காலக்கட்டத்தில் எடுபடவில்லை. சின்னத்திரை 'சீரியலிலேயே' பொய் சொல்வதை கண்டுபிடிக்கும் இயந்திரத்தைக் கொண்டு வருகிறார்கள் ஆனால் அத்தகைய விஷயங்கள் இதில் இல்லை. காவல் துறையின் விசாரணை, அரசு வழக்கறிஞர் வாதம் எதிலுமே காரசாரமில்லை. ஒரு இடத்தில் குற்றவாளியை வழக்கறிஞர் 'ஜீனியஸ்' என்கிறார் அபத்தமாக. முடிவுரையாக கதை மூலம் சொல்ல வந்தது பின்னணி தெரியாமல் பெண்கள் ஏமாற வேண்டாம் 'பேராசை பெரு நஷ்டம்' என்பதாக. அதற்காகப் பெண்களை இவ்வளவு கேவலப்படுத்தியிருக்க வேண்டாம்.

படித்த பெண்கள், ஒரு பெரிய நிறுவனத்தையே கட்டிக் காப்பாற்றும் பெண் என எல்லாரும் ஒரே மாதிரியாக ஏமாறுவார்களா? ஆளைக் கவிழ்க்கும் வார்த்தைஜாலங்களில் பயிற்சி பெற்றிருந்தாலே, தபு சங்கர் காதல் தொகுப்புகளை மனனம் செய்திருந்தாலே போதும் பெண்கள் எளிதில் மயங்கிவிடுகிறார்கள், பெண்கள் என்றாலே பணத்தையும் அந்தஸ்தையும் பார்த்துத்தான் காதல் வயப்படுகிறார்கள் என்று நிரூபிக்க முயற்சித்திருக்கும் விதமாகவே அமைந்துள்ளது இந்தத் திரைப்படம்.

என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார் இரண்டே வகையான பெண்கள்தான் உண்டு முதல் வகை பெண்கள் முட்டாள்கள். இரண்டாம் வகையினர் புத்திசாலியாக நடிப்பவர்கள் என்று.. அதே கொள்கையுடைவர்தான் இந்த செல்வாவும் போலும். என் நண்பர் அப்படிச் சொல்லும் போதெல்லாம் நான் பதில் தருவது ஆண்களில் 80% ஒழுக்கமில்லாதவர்கள், 10% வாய்ப்பு கிடைக்காதவர்கள், 10% ஒழுக்கமானவர் என்று பொய் சொல்கிறவர்கள் என்று. அதுதான் இந்தப் படத்தின் மூலம் உண்மையென புலப்படுகிறது.

திரைப்படம் என்றாலே 'real' அல்ல 'reel' என்பதை அறிவேன், இருப்பினும் கேட்கிறவன் கேணயனாய் இருப்பின் கேப்பையில் நெய் வடியும் என்பது போல் உள்ளது படம்.

Tuesday, May 08, 2007

வெர்டிகோ - Vertigo

நீங்க நினைக்கிற மாதிரி 1958-ல் வெளிவந்த ஆஸ்கர் விருது பெற்ற ஆல்பிரெட் ஹிச்காக்கின் வெர்டிகோ பற்றியதல்ல. சுழற்சி - 'வெர்டிகோ' பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? 'வெர்டிகோ' என்றது தலை சுற்றுவதை அறிகுறியாகக் கொண்ட ஒரு சாதாரண பிரச்சனயே தவிர பயங்கர நோயெல்லாமில்ல. தலை சுற்றல் எந்தெந்த காரணத்திற்காக வருதுன்னு கொஞ்சம் யோசிப்போமா? ஒரு பெண்ணுக்கு தல சுத்துன்னா வாந்தி வராப் போல இருக்குன்னா, 'நல்ல மருத்துவரா பாரு 'நீ முழுகாம இருக்கன்'னு கேலி செய்வோம். ஒரு சின்ன பையனுக்கு மயக்கமா வருதுன்னா, 'ரொம்ப 'அனிமிக்கா' இருக்க ஒழுங்கா சாப்பிடறதில்ல'ன்னு திட்டுவோம். மெலிஞ்ச ஒருத்தர் கடுமையா உழைச்சுக்கிட்டுருக்கிறப்போ தடுமாறினா 'பசி மயக்கம் சாப்பிட்டு வந்து தெம்பா வேலய பாரு' என்போம். அதனால மயக்கத்திற்கு பல வகையான காரணமிருக்கலாம் ஆனா இந்த 'சுழற்சி'க்கு (வெர்டிகோவிற்கு) ஒரே காரணம்தான் இருக்க முடியும்.

நம்முடை vestibular system ஆட்டம் கண்டுடுச்சுன்னா நாமும் ஆட்டம் கண்டிடுவோம். அதாவது காதின் உட்பகுதியில மூணு அரைவட்ட வளையமா வெட்டு கால்வா மாதிரி ஒருவகை திரவத்தால் சூழ்ந்திருக்குமே அதுக்கு பேருதான் 'லபிரிந்த்' (labyrinth). இதுக்குள்ள இரண்டு நுண்ணிய உறுப்பு இருக்கு 1. மகுல்லா 2. கிரிஸ்டா. இதுல மகுல்லா (maculae) தான் நாம நடக்கும் போது தடுமாறாம புவி ஈர்ப்பு சக்திக்கு ஈடுகொடுத்து நம்மள நடக்கச் செய்யுது. குடிகாரங்கள பார்த்தீங்கன்னா ஒழுங்கா நிற்க முடியாம தள்ளாடுவாங்க காரணம் மகுல்லாவுடைய செயல்பாட்டை உணர முடியாம போறதுதான். அதே மாதிரி சினிமால கதாநாயகி மேல பூ தூவும் போது அப்படியே சுத்துவாளே, சில நடனத்திலும் சில காட்சி அப்படி வருமே, அதே மாதிரி வேகமா நீங்களும் சுத்திப் பாருங்க கால் நின்ற பிறகும் அப்படி 'கிர்'ருன்னு சுத்திக்கிட்டே இருக்கிறா மாதிரி இருக்கும் அந்த மாதிரி நாம வேகமா நடக்கும் போது ஆச்சுன்னா என்ன செய்றது? அப்படி ஆகாம இருக்கத்தான் கிரிஸ்டா (cristae) உதவுது. மீன் தொட்டீல மீன் ஓடுறத பார்த்தீங்கன்னா இங்கேயும் அங்கேயும் வேகமா ஓடும், டக் டக்குன்னு திரும்பும் ஆனா இதுக்கு தல சுத்தாது காரணம் உடம்புலேயே நிறைய கிரிஸ்டா இருக்காம் அதுக்கு. இந்த இரண்டு நுண்ணிய உறுப்பாலான 'லபிரிந்த்' நாம தலைய அசைக்கும் போதோ கண் அசைக்கும் போதோ அந்த செய்திய vestibular நரம்பு மூலமா மூளைத்தண்டுக்கு (brainstem) கொடுத்து அப்புறம் சிறு மூளைக்கு (cerebellum) அனுப்புது. இப்படி ஒழுங்காக நடக்காமல் ஒரு காதும் இன்னொரு காதும் ஒரே மாதிரியான வேலயச் செய்யாம இரண்டுக்கும் சண்டைங்குற மாதிரி நடந்துக்கிட்டு சமநிலைய சமாளிக்க முடியாமப் போகும்போதுதான் இந்த சுழற்சி ஆரம்பமாயிடுது.




ஏன் அப்படி திடீருன்னு பிரச்சன வருதுன்னு நீங்க கேட்கலாம். நம்ம குடும்பத்துல யாருக்காவது இருந்தா நமக்கு வரலாம், மன அழுத்தத்தால இருக்கலாம், வேற நோய்க்கு மருத்துவரே கொடுத்த மாத்திரையோட பக்கவிளைவா வரலாம், திடீர் அதிர்ச்சியால நேரலாம், ரத்த அழுத்தம் சீராயில்லாம இருந்தாலும் ஒட்டிக்கலாம். பொதுவா வயசானவங்களுக்கு இந்த பிரச்சனை வருவது தவிர்க்க முடியாது இது அப்படியே கூடி ஞாபக மறதில கொண்டுபோய் விட்டுடும். வயசானவங்களுக்கு வந்தா ரொம்ப கவனமா இருக்கணும், கழிப்பறைக்குத் தனியாவெல்லாம் போனா கொஞ்சம் பார்த்துக்கணும் காரணம் அங்க வழுக்கி விழுந்துட்டா மண்டையில் அடிப்பட்டுட்டா அப்புறம் நேரா 'கோமா'தான்.

சுழற்சியினால (வெர்டிகோவினால) லேசான தலைவலி, கிறுகிறுப்பு, உடல் சோர்வு எல்லாமும் சேர்ந்து வரும். பூமி அதிர்ச்சி அங்கங்க கேள்விப்படும் போது இந்த சுழற்சி உங்களுக்கு இருந்தா 'அட பூமி அதிர்ச்சியோ'ன்னு யோசிக்கிற அளவுக்கு தடுமாற்றம் வரும், தல சுத்தும். இப்படி பார்த்துட்டு யாராவது கூப்பிடுவதக் கேட்டு, அப்படி திரும்புன்னா போச்சு அப்படியே தள்ளுற மாதிரி இருக்கும். உலகம் நிஜமாவே சுத்துதுன்னு ஒத்துக்குவோம். யாரோ ஏதோ செய்வினை வச்சிட்டாங்களான்னு சிலர் பயப்படவும் செய்வாங்க அப்படி ஒரு மாயை நிறஞ்சதுதான் இந்த சுழற்சி.

ஆரம்பத்திலேயே இப்படி பிரச்சன இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டா ஸ்டூஜெரான் (Stugeron) அப்படின்னு ஒரு மாத்திர தருவாங்க அதிலயே சரியாப் போயிடும். முதல் வாரத்துல சாப்பிட்டும் சரியாகலன்னா ஒரு சோதனையெடுப்பாங்க 'ENG'ன்னு (electronystagmography), அப்புறம் தல சுத்துதா இன்னும்னு சோதிப்பாங்க அப்புறம் CDP எடுப்பாங்க (Computerized Dynamic Posturography). தலைக்காக சில பயிற்சியும் தருவாங்க. ஒழுங்கா பிரச்சனைய மருத்துவர் கிட்ட சொல்லணும், ரொம்ப மன அழுத்ததால ஆரம்பமாச்சா, தல சுத்து மட்டும்தானா இல்ல வாந்தி, காதடைப்பு, காதுல 'கூ'ன்னு கேட்டுக்கிட்டே இருக்கா, இல்ல காது கேட்காத மாதிரி ஒரு உணர்வுன்னு ஏதாவது மத்த விளைவுமிருக்கான்னு. ஆனா அலட்சியமா இந்த பிரச்சனைய விட்டுட்டா தல சுத்து அதிகமாகி எங்கேயாவது விழுந்து மண்டையில் அடிப்பட்டு நெலம இன்னும் மோசமாயிடும். கீழ விழாம தப்பிச்சாலும் இந்த பிரச்சன ரொம்ப முத்திப் போச்சுன்னா பக்கவாதம், 'டியூமர்' எல்லாம் வரும்.

ஒரு விமான ஓட்டுனருக்கு இந்த மாதிரி பிரச்சன இருந்தா என்னாகும்னு யோசிச்சு பாருங்க. ஆனா அவங்களுக்கு இந்த பிரச்சன வரவும் அதிக வாய்ப்பிருக்காம். கடல் மட்டத்துக்கு மேல போய்கிட்டு இருக்கிறப்போ வலது பக்கம் திரும்புறா மாதிரி மாயை தெரியும் நேரா போய்க்கிட்டு இருந்தாலும். அப்படி இருந்தா அவருக்கு மட்டும் பிரச்சனையில்ல அந்த விமானத்துல நாம பிராயாணம் செஞ்சுக்கிட்டு இருந்தா நமக்கும்தான். கவலைப்படாதீங்க அவங்களுக்கு பரிபூர்ண மருத்துவ பரிசோதனையெல்லாம் செஞ்ச பிறகுதான் ஓட்ட அனுமதிப்பாங்க. ஆனா நம்ம நல்ல நேரம் அவசரத்திற்கு இப்படி ஒரு பிரச்சனையுள்ளவர் மாட்டுனா அவரோடு சேர்ந்து நாமும் கதிகலங்க வேண்டியதுதான்.

என்ன படிச்சிட்டு தலச்சுத்துதா? அப்ப ஒரு நல்ல மருத்துவரா பாருங்க.

Monday, April 30, 2007

பெண்கள் விழித்துக் கொள்வார்களா?


ஒரு ஏழப்பட்டப் பொண்ணு எங்க அலுவலகத்திற்கு நேர்முகத்திற்கு வந்திருந்தாங்க. தேவையான படிப்பு, அனுபவம், நல்ல மொழி வளம் எல்லாம் இருந்தது. அவங்க அழைப்புக்காக காத்திருந்தாங்க மேலாளர் அறைக்குப் போய் பொசுக்குன்னு ஒரு நிமிஷத்துல வெளியில வந்திட்டாங்க. வெளியில் வந்தவங்களை என்ன ஆச்சுன்னு கேட்டேன். 'இப்போதைக்கு ஆள் தேவையில்ல தேவைப்படும் போது அழைக்கிறோம்னு சொல்லிட்டாங்க'ன்னு சொன்னாங்க.. எனக்கு ஒண்ணுமே புரியவில்லை, ஆள் தேவைப்பட்டதால்தானே நேர்முகத்திற்கே அழைத்தோம். எல்லா தகுதிகளும் பொருந்தி வந்தவர்களை ஒன்றுமே விசாரிக்காமல் கூட அனுப்பிவிட்டதால் எனக்கு விசித்திரமாக இருந்தது. மேலாளரிடம் நேரடியாக கேட்டேன் 'first impression is the best impression' என்று சிரித்துக் கொண்டார். குழப்பத்துடன் அவர்களுக்கு 'என்ன குறைச்சல்' என்று வக்காலத்தை தொடங்கினேன். 'நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா உனக்கு, அவள் என் அறைக்கு வந்த போது ஒரு பந்து உள் வந்துவிட்டு வந்த வேகத்தில் அடித்து திரும்புவதாக இருந்தது எனக்கு' என்று மறுபடியும் சிரித்தார். அந்த பெண்ணின் உடல் வாகைக் கேலி செய்வது எனக்கு ரசிக்கும் படியாக இல்லை கோபத்தில் கதவை மட்டும்தான் வேகமாக சாத்த முடிந்தது.

இதே போல் பல வருடங்களுக்கு முன் நான் வேறு அலுவலகத்தில் இருந்த போது மனிதவள மேம்பாட்டு பிரிவில் சில மாதங்கள் இருந்தேன். அனுப்பிய பொழிப்புரைகளில் தகுந்தவற்றை பிரித்து தகுதியானவர்களை நேர்முகம் செய்து, வடிகட்டி, நான் சரி என்று நினைப்பவர்களை மட்டும் மேலாளரிடம் நேர்முகத்திற்கு அனுப்புவேன். அப்படி தகுதி பெறுபவர்களை வேலையில் அமர்த்துவார்கள். இப்படி வந்த பொழிப்புரையில் ஒரு காரியதரிசி வேலைக்கு எம்.சி.ஏ. படித்த நல்ல மதிப்பெண்கள் எடுத்த பல பிற தகுதிகள் கொண்ட ஒரு பெண் விண்ணப்பித்திருந்தார். தேவைக்கு அதிகமான தகுதியென்று ஒதுக்க இருந்தேன். கவனித்ததில் 'பாரதிதாசன் பல்கலைக்கழகம்' என்றதும் 'அட தமிழ் பொண்ணு' அழைத்தாவது பேசலாம், இவ்வளவு தகுதியுள்ளவர் சம்பந்தமில்லாத வேலைக்கு விண்ணப்பித்ததைப் பற்றிக் கேட்கலாம் என்ற ஆவல் பிறந்தது. அழைத்தேன். அழகான மொழி வளமும், குரல் வளமும் இருந்தது. என்னை அறிமுகம் செய்து கொண்டு காரணம் கேட்டேன். அவர் சொன்ன காரணம் அதிர்ச்சியாக இருந்தது. அவளுடைய அப்பா பல வருடங்களாக அவரைப் பிரிந்து ஷார்ஜாவில் வேலைப் பார்த்திருந்திருக்கிறார். அவருடைய அம்மாவுக்குப் புற்றுநோய் இருந்ததாம் அதற்கே பல வருடங்கள் சம்பாத்தியம் தொலைத்து மனைவியையும் இழந்து உடல்நலம் சரியில்லாத போதும் இங்கு கஷ்டப்படுவதால், சுமையை பகிர்ந்துக் கொள்ள மகள் தயாரானாலும் அவள் தந்தை அவருடைய 'ஸ்பான்சர்ஷிப்பில்' மகளை அமீரகத்திற்கு அழைக்க முடியாததால் (மகளை தன் விசாவில் எடுத்துக் கொள்ள குறைந்தது 4000 திர்ஹம் அதாவது 45000ரூ. மாத சம்பளம் வேண்டும்) சுற்றுலா நுழைமதியில் வேலை தேடிக் கொண்டிருக்கிறாராம். இரண்டு மாதங்கள் முடியப் போகிறது, தகுதிக்கேற்ற வேலையென்ற அவசியமில்லை ஏதாவது வேலை கிடைத்து நிறுவன நுழைமதி கிடைத்தால் போதும் அப்பாவுக்குத் துணையாக இருந்து கொள்வது மட்டுமே அவளது நோக்கம். கடைசியாக அவர் சொன்ன விஷயம் மனதைத் தின்றது - 'என்னதான் தகுதியிருந்தாலும் அழகும் வேண்டும் போல, நான் கருப்புங்க அதான் வேலையே கிடைக்கவில்லை' என்றார் உடையும் குரலில். பலவகையில் முயற்சி செய்தும் அவரை வேலையில் அமர்த்த முடியவில்லை. அதுவும் வரவேற்பாளினியாகவும் காரியதரிசியாகவும் இருக்க அழகு ரொம்ப முக்கியமாகப்பட்டது மேலாளர்களுக்கு. பழைய நிகழ்வுகளை அசைபோட்டபடியே என் கையாலாகாத்தனத்தை கடிந்துக் கொண்டிருந்தேன்.

அன்று மதியம் சாப்பிட உட்காரும் போது சக தோழிகள் கொண்டு வந்திருந்தைக் கவனித்தேன், சின்ன டப்பாவில் சின்ன துண்டுகளாக வெட்டிய ஆப்பிள் நிரப்பிக் கொண்டு வந்திருந்தாள், 'என்ன இது' என்றேன் 'நான் 'டயட்'டில் இருக்கிறேன்' என்றாள் பெருமையாக. மற்றொருத்தி எனக்கு ஒன்றுமே வேண்டாம் 'ஸ்லிம் டீ' மட்டும் குடிக்கப் போறேன் என்றாள். நான் மட்டும்தான் சாப்பாடு, குழம்பு, பொறியல் என்று எல்லாம் கொண்டு போய் ஒன்றையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என்னை சுற்றி நின்றுக் கொண்டு 'எப்படிப்பா நீ மட்டும் இப்படிலாம் சாப்பிட்டாக் கூட அப்படியே இருக்கே', 'நீ சாப்பிடுவதெல்லாம் எங்கே போகுது', 'அவங்க குடும்பத்துல எல்லாருமே அப்படிதாம்ப்பா' என்று ஆளாளுக்கு தன் பங்குக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தை உற்றுக் கவனித்தால் சமூகக் கட்டாயத்திற்காக கல்லூரி மாணவி, வேலைக்குப் போகும் பெண்கள் மட்டுமல்ல இல்லதரசிகளும் கூட தன்னை கனகட்சிதமாக வைத்துக் கொள்ள சாப்பாட்டைக் குறைத்துக் கொண்டு பலவகைப்பட்ட பக்கவிளைவுக்கு உள்ளாகிறார்கள். உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உடலைப் பேணுவது இல்லை இவர்கள் தங்கள் கணவர்கள் கைவிட்டுப் போகாமல் வைத்துக் கொள்ள 'டயட்' என்ற பெயரில் தன்னைத்தானே வதைத்துக் கொள்கிறார்கள்.

பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நிர்ணயிப்பது யார்? ஒல்லி அழகா பருத்திருப்பது அழகா அல்லது கொஞ்சம் பூசினாற்போல் இருப்பது அழகா? கருப்பு அழகா சிவப்பு அழகா இல்லை இடைப்பட்ட நிறம் அழகா? பெண்கள் அழகைப் பற்றி பேச மன்மதன்களாக இருக்க தேவையில்லை ஆண் என்ற தகுதியிருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள் பலர். பெண்ணின் தேவையென்பது மிகவும் சாதாரணமானது ஆனால் ஒரு ஆண் தன் மனைவியாக வரப் போகும் மனைவிக்கு வேண்டிய தகுதிகளை 'மாட்ரிமோனியலை' எடுத்துப் பார்த்தால் லட்சணம் தெரியும். எத்தனை பெண்கள் இந்த வகையான நிபந்தனைக்குள் வராததால் முதிர்கன்னிகளாக இன்றும் இருக்கிறார்கள்? சந்தையில் எப்படிப்பட்ட பொருள் நல்ல விலைபோகிறது, எந்த பொருட்களின் வியாபாரம் 100% லாபம் தருகிறது என்பதை கணக்கில் கொண்டு ஒரு வியாபாரி, தொழிலதிபரும் பொருளை தந்து அதன் பின் அதற்கேற்ப விளம்பரமும் செய்வான். அதுபோல ஆகிவிட்டது பெண்கள் நிலையும். இதற்கும் ஆண் ஆதிக்க சமுதாயம்தான் காரணம் என்று பொதுப்படையாக முத்திரை குத்தாமல் (அதுவே உண்மையாக இருந்தாலும்) ஆராய்ந்து பார்த்தால் ஊடகங்கள், சினிமா, இதிகாசம், காப்பியம் என்று எல்லாமும்தான் காரணமாகிறது.

'உடுக்கை போன்ற இடுப்பு' என்று அன்று மட்டுமல்ல, 'பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி', 'ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு? ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு', 'ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி' என்றெல்லாம் பாட்டும் வரத் தொடங்கிவிட்டது. ஆனால் குண்டான ஆணைப் பற்றி பாடினால் 'கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா... எந்த கடையில நீ அரிசி வாங்கின உன் அழகுல ஏன் உசுர வாங்குற' இப்படி அல்லது 'கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு' அவன் பருமனாக இருந்தாலும் கருப்பாக இருந்தாலும் இவளுக்கு அழகுதான், ஏன்னா எழுதுறது ஆண்கள் பாருங்க. அதனால் அது அப்படியே ஆகிவிட்டது. இந்த மாதிரியான சூழலில் ஊறிப் போன பெண்கள் நடிகைகளையும், விளம்பரத்திற்கு வரும் பெண்களையும் பார்த்து அதே மாதிரி தாமுமிருக்க முயல்கிறார்கள். ஒல்லி பெண்களுக்கு 'மாடல்' யார் தெரியுமா நம்ம 'பார்பி' பொம்மைதான். ஆனால் ஒவ்வொரு ஊருக்கும் காலத்திற்கேற்பவும் ஆண்கள் இரசனை மாறுகிறது. ஒரு காலகட்டத்தில் குண்டு குஷ்பு பிடித்தால் கொஞ்ச நாட்களுக்கு பின் ஒல்லி சிம்ரன் பிடிக்கும் இப்படி ஆண்களுக்கு என்ன பிடிக்கிறது என்பதற்கேற்ப பெண்களும் ஆட வேண்டிய கட்டாயம். ஆனால், எல்லா ஆண்களும் மனைவிமார் மெல்லிசாக உடைந்துவிடுவது போல் இருக்கவேண்டுமென்று நினைக்கிறார்களா என்று தான் தெரியவில்லை.

ஒரு ஜான் வயிற்றை நிரப்ப முடியாமல் உலகின் பல பகுதியில் பட்டினியாலும் பிணியாலும் வாட, எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாமல் தனக்குத்தானே கட்டுபாட்டை விதித்து சாப்பிட வேண்டிய வயதிலும் சாப்பிடாமல், நோயாளி போல் அளந்து சாப்பிடுகிறார்கள். மெலிந்து காணப்படுவது அழகா உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது அழகா என்று இவர்களுக்கு யார் புரியவைப்பது? பெண்கள் விழித்துக் கொள்வார்களா அல்லது ஆண்களாவது புற அழகு தேவையில்லை அக அழகு போதும் என்று பெண்களுக்கு புரிய வைப்பார்களா?

Tuesday, April 24, 2007

உங்களுக்கு இருக்கா மன உளைச்சல்?


காலம் மாறமாறப் புதுசுப் புதுசா ஏதேதோ கண்டுபிடிக்கிறாங்க. கூடவே நெறய வாயிலேயே நுழையாத நோய்களும் வந்துக்கிட்டே இருக்கு. அப்படின்னா அந்தந்த கால கட்டங்கள்ல இந்த மாதிரியான நோய்களெல்லாம் இல்லாமலா இருந்திருக்கும்? கண்டிப்பா இருந்திருக்கும் ஆனா, ஏன் எதுக்குன்னு ரொம்ப யோசிக்காம, பெருசா எடுத்துக்காம, காரணமே புரியாம போயும் சேர்ந்திருப்பாங்க. இப்பல்லாம் நாம சர்வசாதாரணமா அன்றாடம் கேக்குற ஒரு வார்த்தை என்ன தெரியுமா? 'மனவுளைச்சல்' (depression). பள்ளிக்கூடம் போற குழந்தைக்கு வீட்டுப்பாடத்துல தொடங்கி, வேலைக்குப் போறவங்களோட அன்றாட அலுவல்கள் வரைக்கும் இப்போ நீக்கமில்லாம நிறைஞ்சு நிக்குற வார்த்தை இதுதான். மருத்துவம் விஞ்ஞானமெல்லாம் வளர்றதால மன உளைச்சல்ங்குறது காய்ச்சல், தடுமல் மாதிரி சாதாரணமான நோய்தான்னு கண்டுபுடிச்சிருக்காங்க. என்னடா, குண்டு போடறாளேன்னு பாக்குறீங்களா? இல்ல. நெசமாத்தான் சொல்றேன்.

பாம்புன்னு தாண்டவும் முடியாது பழுதுன்னு மிதிக்கவும் முடியாது அந்த மாதிரிதான் இந்த மன அழுத்த நோயும். இது யாருக்கு வேணும்னாலும் வரலாம். அச்க்ஷய த்ருதி மாதிரி புதுசா இதுவும் இப்போ நம்ம வாழ்க்கைக்குள்ள எதிர்பாராம நுழைஞ்சிடுச்சு. எனக்கில்லன்னு தப்பிக்கவே முடியாது நீங்க. வாழ்க்கைல ஏதாவது ஒரு கட்டத்துல மன அழுத்தத்த நிச்சயமா உணர்ந்திருப்பீங்க. ஆனா ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு காரணங்களிருக்கும் அதுதான் வித்தியாசம். அதுவும் கணிணி தொடர்பான வேலை பார்த்தால் போச்சு. இந்த வம்பு சுலபமா தேடி வரும். நாள் முழுக்க கணினி திரையையே கண்கொட்டாம பார்த்துக்கிட்டிருக்கணும். வீட்டுக்கும் நேரத்திற்கு போக முடியாது. வேலையிருக்கோ இல்லையோ சும்மாவாவது வேலையை கட்டிக்கிட்டு அழுவாங்க. இப்படி அலுவலக நேரத்திற்குப் பிறகு செய்யுற வேலையிலதான் நிறைய தவறுகளும் வரும், அத திருத்தவே அடுத்த இரண்டு நாட்கள் வீணாகும். சிலருக்கு இந்த மன அழுத்த பிரச்சனையால மறதியும் அதிகரிக்கும், ஒரு பொருள எங்கையாவது வச்சிட்டு எங்க வச்சோம்னு தேடி எடுக்கவே நேரவிரயமாகும்.

வேலையில் மட்டுமா இது? வீட்டுக்குப் போனா ஏதாவது பிரச்சனைய உங்க மறுபாதி தொடங்குவாங்க, அதுக்கும் காரணம் இதே வியாதிதான். வீட்டுல இருக்கிற பெண்களும் பாவம் அழுமூஞ்சி 'சீரியல' எவ்வளவு நேரந்தான் பார்க்க முடியும்? (எல்லோரும் வலைப்பூ தொடங்கி எழுத ஆரம்பிச்சாலாவது அதுக்கு ஒரு வடிகாலா அமையும், என்ன நான் சொல்றது) அதனால் கட்டுனவர் எப்ப வருவாருன்னு வழி மேல் விழி வச்சு காத்து கெடப்பாங்க. வந்தவுடனே ஆரம்பிச்சிடுவாங்க பல்லவிய. எனக்கு வீட்டுல ரொம்ப அலுப்பா இருக்கு. காலையிலிருந்து சாயந்திரம் வர தனியாவோ இல்லாட்டி குழந்தையோடோ தொலைக்காட்சியோடோ மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கேன் வெளியில கூட்டிக்கிட்டுப் போங்கன்னு தொடங்கிடுவாங்க. அலுத்துப் போய் வந்தவனுக்கு உடம்புல திராணியில்லன்னு புரிஞ்சிக்கிறது அவங்களுக்கு கஷ்டம்தானே? அதனால அவங்கள ஈடுகட்ட நீங்களும் அழைச்சுட்டுப் போவீங்க, அப்ப உங்க மன அழுத்தம் வேற வழியில வெளிப்படும். உங்கள்ள கொஞ்சமென்ன நிறையப் பேர் அழுத்தத்த புகையா ஊதித்தள்ளுறேன் பேர்வழின்னு இன்னொரு பிரச்சனைய வெல கொடுத்து வாங்குவீங்க. இந்த மன அழுத்தம் உங்களுக்கு கொஞ்சமா இருந்தா தப்பிச்சிக்கலாம் ஆனா கடுமையா மாறாமப் பார்த்துக்கணும். இல்லன்னா அதுவே பல பிரச்சனைய ஏற்படுத்தும்.
என்ன மாதிரி உபாதைன்னு கேட்குறீங்களா? மனவுளைச்சலால இயல்பு வாழ்க்கையே மாறிடும். இல்லற வாழ்வையே சிதைக்கும். இதுல பக்கவிளைவா வேற சிலருக்கு உடல் பருக்கும் இல்லன்னா உடல் மெலியும், இரத்த அழுத்தம் கூடும், இருதய நோய்னு பல கொடச்சல் வரும். இப்ப உங்களுக்கு நமக்கு இந்த அழுத்தம் ரொம்ப இருக்கா கொஞ்சமா இருக்கான்னு கேள்வி வருமே? இந்த அறிகுறி இருக்கான்னு உங்களையேக் கேட்டுப் பாருங்க.

1. தேவையில்லாமல் எரிச்சல்படுறீங்களா?
2. திடீரென்று உற்சாகமாக இருக்குற நீங்க திடீருன்னு மனசு சோர்வாகிடுதா?
3. யாரக் கண்டாலும் தேவையில்லாம கோபம் வருதா?
4. எல்லாம் இருந்தும் வாழ்க்கையில அமைதியே இல்லன்னு தோணுதா?
5. மனசு குழப்பமா இருக்கிறதால எதிலயுமே ஈடுபடமுடியலையா? தீர்மானம் எடுக்க முடியலையா? தடுமாறிப் போறீங்களா?
6. காரணமே இல்லாமல் வாய் விட்டு அழணும் போலருக்கா?
7. அவசியமில்லாம ஒரு குற்றவுணர்ச்சில கூனிக்குறுகி போறீங்களா?
8. மன அழுத்தத்தால சில சமயம் தூக்கம் எல்லா வேலையையும் தள்ளிப் போடச் சொல்லி உங்கள படுக்கச் சொல்லுதா உடம்பு? தூங்குனா பரவாயில்ல ஆனா தொடர்ந்து இரண்டு- மூணு நாட்கள்னு இழுத்தடிச்சா உடனே மருத்துவரை அணுகுங்க.
9. வியாதி முத்திப்போச்சுன்னா தற்கொலை செஞ்சிக்கோன்னு காதில கேட்டுக்கிட்டே இருக்குமாம். செத்துடலாம் அதான் நல்லதுன்னு தோணுமாம்.

இப்படி இந்த சின்ன பிரச்சனையோட விளையாட்டு வகை வகையானது. 1-4 ல சொல்லிருக்கிறது பொதுவா எல்லோருக்கும் இருக்கக் கூடியதுதான் ஆனா அதுவே கடுமையா மாறி வாழ்வையே ஆக்கிரமிச்சிக்காமப் பார்த்துக்கணும், அது ரொம்ப முக்கியம்.

மன அழுத்தம்றது வேலையில சேர்ந்த பிறகுதான் வரும்னு தப்புக் கணக்கு போடாதீங்க, அதற்கு இதுதான் காரணம்னு வரையறையெல்லாம் இல்ல. பொதுவாவே வாழ்க்கைல பெரிய மாற்றம் ஏற்படும் போது வரலாம். அதாவது பிடிக்காத பாடத்தை வற்புறுத்தி படிக்க வைக்கும் போது, புது வேலையில் சேரும் போது, வேலை பிடிக்காமல் போகும் போது, திருமணத்திற்கு தயாரில்லாதப்ப செஞ்சிக்கும் போது, திருமண முறிவு ஏற்படும்போது, பிடிச்சவர இழந்துட்டா, பண கஷ்டம்னு வழக்கமான காரணத்த தவிர

* பரம்பரை வியாதியாக இருக்கலாம்
* பள்ளிப் பருவத்தில் நிறைய வீட்டு வேலையாலக் கூட வரலாம்
* பெத்தவங்க சண்டைய தினம் பார்க்கும் காரணத்தினாலக் கூட ஒட்டிக்கலாம்
* எந்த ஒரு நல்ல நிகழ்ச்சி நடந்தாலும், கொண்டாட்டமிருந்தாலும் இரச்சல் அதிகமா இருக்கும் அப்ப நேரடிலாம்
* அதிகமா ஏதாவது எதிர்பார்த்திட்டிருந்து ஏமாத்தமடஞ்சா ஏற்படலாம்
* வேலைகள் தள்ளிப் போடப்பட்டு அதனால் மலை போல் குவிந்திருக்கும் வேலையை நேரிடும் போது வரலாம்
* அலுவலகத்தில பிரச்சனைன்னு மூச்சிறக்கம் தாங்காம வீட்டுக்கு வந்து அங்கேயும் சண்ட- சச்சரவுன்னு தொடர்ந்தால் பாதிக்கப்படலாம்

இந்த நோய் ஆண்- பெண் பால் வித்தியாசமெல்லாம் பார்க்குறதில்ல. என்னதான் பெண்கள் எதையும் தாங்கும் இதயமாக இருந்தாலும் அவங்க இரத்தத்தில கலந்து உடலுறுப்ப உசுப்பி விடுற உட்சுரப்பில மாத்தம் வந்தாலும் (hormonal changes), மாதவிடாய் மொத்தமா நிற்குற தருவாயிலும் (menopause), குழந்தய பெத்தெடுத்த ஒரு சில மாசத்தில ஆனா ஒரு வருஷத்திற்குள்ள (postpartum depression) இந்த மாதிரி மன அழுத்த பிரச்சனை வர அதிக வாய்ப்பிருக்கு. ரொம்ப மன அழுத்தத்துல இருக்குற பெண்களுக்கு குறை மாசக் குழந்தையோ, மூளை வளர்ச்சிக் குன்றியக் குழந்தையோ பிரசவிக்குற வாய்ப்புகளும் இருக்காம். அதனாலத்தான் கர்பிணிப் பெண்களுக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சுக் கொடுக்குறாங்க, ரொம்ப கொஞ்சுனாலும் அடம்பிடிச்சாலும் கர்பிணிப் பெண்ணுனா கொஞ்சம் சகிச்சிப் போற சலுகை அவங்களுக்கு இருக்கத்தான் செய்யுது.

சரி இந்த பிரச்சனை ஏன் வருதுன்னு யோசிச்சீங்களா? மனவுளைச்சல் வரும் போது நம்ம மூளைல என்னலாம் மாற்றம் வருது தெரியுமா?

'மன' அழுத்தம்னு பேரு வச்சிருந்தாலும் அது மூள சம்பந்தப்பட்டதுதான். மூளையோட செயல்பாடுதானே நம்முடைய இதய துடிப்பு, உணர்வு, உணர்ச்சி எல்லாத்தையும் கட்டுப்படுத்துது. சின்ன வயசுல மூளை பாகத்தையெல்லாம் பத்தி படிச்சது இப்ப கொஞ்சம் ஞாபகத்துக்கு வரலாம் அதாவது மூளையுடைய தகவல் தொடர்பே கோடிக்கணக்கான நீயூரானைக் கொண்டதுதானே. அந்த நீயூரான் மூளையுடை இரசாயனத்துடன் கலக்கும் போதுதான் உடலுக்கும் மூளைக்கும் சரியான தகவல் தொடர்பு நிகழுமாம். அப்போ மூளை இரசாயனம் (brain chemical) எப்பவாவது குறையும் போது இல்லன்னா அதுல ஏத்த இறக்கம் நேரும் போது அல்லது இரசாயனம் சரியா நீயூரான்ல செலுத்த முடியாத போது மனவெழுச்சியிலும், உணர்ச்சியிலும் மாத்தம் வந்து இந்த மனச்சோர்வு, மந்த நிலை, மன அழுத்தம்னு பாதிக்கப்படுறோம். எதுக்கு நீட்டி முழக்குவானேன்? மூளையுல ஏற்படுற இரசாயன மாற்றத்தாலதான் இந்த பிரச்சனை இன்னும் புரியுறா மாதிரி சொல்லனும்னா எப்படி ஒரு தொலைப்பேசியில, செல்பேசியில இணைப்பு ஒழுங்காக் கெடைக்காட்டா நம்ம பேசுறது மத்தவங்களுக்கு கேட்காம 'ஹலோ' ஒன்னுமே கேட்கல 'சிக்னல்' கெடைக்கலன்னு கத்துவாங்களோ அதே மாதிரிதான் இதுவும்.

ஆனா இந்த மாதிரி பிரச்சனை நமக்கு இருக்குதுன்னு புரிஞ்சுக்கிட்டு நமக்கு நாமே உதவிக்கிட்டா கட்டுக்குள்ளக் கொண்டுவந்திடலாம். வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்னு சொல்வாங்க அதனால சிரிப்பு பயிற்சி செய்யலாம், இல்லாட்டி உடற்பயிற்சி எடுத்துக்கலாம் - ரொம்ப கஷ்டம்னு தோணுதா? அப்ப யோகா செய்யுங்க- நேரமில்லன்னு சாக்கா? அப்ப அந்த மாதிரி இருக்கும் போது பிடிச்ச விஷயத்த செய்யுங்க புத்தகம் வாசியுங்க, பாட்டுக் கேளுங்க அல்லது பிடிச்சவங்கள அழைச்சி பேசுங்க (பிடிச்சவங்கள அழைக்கும் போது அவங்க ரொம்ப பரபரப்பா இருந்து உங்களுக்கு நேரம் தராட்டா இன்னும் பிரச்சன அதிகரிக்கும் ஜாக்கிரதை). இந்த மாதிரி பிரச்சனையே வராம இருக்க உங்கள நீங்களே ஆரோக்கியமா வச்சிக்கணும். என்ன செஞ்சும் உங்கள மீறி செயல் நடக்குதா தயங்காம மருத்துவரப் போயுப் பாருங்க மருந்து, சிகிச்சையால குணமடையக் கூடிய விஷயம்தான் இது.

இந்த வியாதியால என்ன ஒரு மன ஆறுதல்னா மூள இருக்குன்னு ஊர்ஜிதப்படுத்திக்கலாம். ரொம்ப பூஞ்சாடிக்காட்டிட்டதால கேவலமான கடியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்ன்னு புரிஞ்சி நடந்துக்கிட்டா சரி. மேலயே சொன்னா மாதிரி பயங்காட்டுறதுக்காக இதையெல்லாம் சொல்லல, தெளிய வைக்கத்தான் இந்த பதிவே.

Friday, April 13, 2007

கன்னத்தில் முத்தமிட்டால்...

சின்ன வயதில் தாய்மை என்பது பெரிய புதிராக தோன்றும் எனக்கு. என் மூத்த அக்காவுக்கு குழந்தை பிறந்த போது அவள் இரசித்து குழந்தையை கொஞ்சுவதைப் பார்த்து எனக்குள்ளே பல கேள்விகள் அதில் ஒன்றே ஒன்றை அவளிடம் உதிர்த்தே விட்டேன் இப்படி "பெத்த குழந்தன்னா பாசம் பொத்துக்கிட்டு தன்னால வந்திடுமோ? நீ பாக்க நானும்தான் பொறந்து வளர்ந்தேன், என்ன இத்தன வருஷமா தெரியும் உனக்கு, ஆனாலும் என்ன விட இப்ப வந்த புள்ள மேலதான் உனக்கு பாசம் அதிகம்" என்று பொறாமையின் வெளிப்பாடு தெரித்தது. அவள் பதிலுக்கு மெளனம் தந்தாள். எனக்கு அதன் பொருள் என்னவென்று அப்போது புரியவில்லை. குழந்தை பருவத்தில் புது புது வார்த்தைகள் அறிய வரும் போது தெரிந்த சில வார்த்தையை வைத்து புது வார்த்தையை நினைவில் வைத்துக் கொள்வது பழக்கமாகயிருந்தது, அப்போது திருக்குறளில் வந்த 'வாய்மை' அதிகாரத்தில் 'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்' என்ற குறளை 'வாய்மை'க்கு பதில் 'தாய்மை'ப் போட்டுக் கொண்டால் நினைவில் எளிதில் நிற்கும் அதற்கு காரணம் என்னவென்றும் அப்போது புரியவில்லை. விடை 2004-ல் நான் தாய்மை அடைந்த போது தான் கிடைத்தது. அந்த இனம்புரியாத மனநிறைவை வார்த்தையில் வடிக்க இயலாது.

திருமணத்திற்கு முன்பே நான் வைத்த முதல் கோரிக்கை இரு குழந்தை என்றால் ஒரு குழந்தை தத்தெடுத்த பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று. எனது கோரிக்கையை என் கணவரும் ஏற்றுக் கொண்டார். ஆண் குழந்தையை தத்தெடுக்க ஆயிரம் பேர் இருப்பார்கள் இல்லையென்றாலும் எப்படியாவது பிழைத்துக் கொள்வார்கள் ஆனால் பெண் குழந்தைகள் அப்படியில்லை. பெண் என்பதால் கூட அவர்கள் அனாதையாக்கப்பட்டிருக்கலாம் என்பதாலே அப்படியொரு கோரிக்கை. பெற்றெடுக்கும் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மற்றுமொரு பெண் குழந்தை தத்தெடுக்க வேண்டாமே என்ற என் கணவரது கோரிக்கையையும் நியாயமென்று நானும் ஏற்றுக் கொண்டேன். 'கன்னத்தில் முத்தமிட்டால்' பார்த்த போது தத்தெடுப்பதிலும் உள்ள சில வகையான சிரமங்கள் புரிந்தது. இருப்பினும் அதற்கு ஆயுத்தமாகத்தான் இருந்தோம். பிறந்தது பெண் என்பதால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லாமல் போனது.

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் வரும் எல்லா பாடல்களும் அற்புதமென்றாலும் என்றுமே ஆனந்த அவஸ்தையாக நான் உணர்வது இந்த பாடலைக் கேட்கும் போதுதான். வைரமுத்துவின் வரிகளை சின்மயியின் வசீகர குரல் உச்சரிக்க ஏ.ஆர். ரகுமான் இசை தவழ்ந்து வந்து காதுக்கு புதுவித இன்பத்தை தந்து மனதை நிரப்பி என்னையும் அறியாமல் கண்களையும் பனித்துவிட செய்யும் இந்த பாடல். முதல் முறை கேட்ட போது மட்டுமல்ல அவ்வகை உணர்வு எந்த மனநிலையில் கேட்டாலும், எத்தனை முறைக் கேட்டாலும் எனக்கு ஏனோ இதே மாதிரியான உணர்வுதான். தன் முதல் பாடலிலேயே தனக்கான ஒரு நல்ல பெயரை தக்கவைத்துக் கொண்டார் சின்மயியும். ஏ.ஆர்.ஆர். எத்தனையோ தமிழ் கொலை செய்யும் பாடகர்களை தமிழ் பாட அழைத்து வந்திருந்தாலும் சில நல்ல பாடகிகளையும் அறிமுகப்படுத்திய பெருமையைக் கொண்டவர். அந்த வகையில் இசையுலகுக்கு சின்மயியின் குரல் ஒரு வரப்பரசாதம்தான். சில பாடல்களை கேட்கும் போது பார்க்க ஆசை தோன்றும். பார்த்த பிறகு பார்க்காமலேயே இருந்திருக்கலாம் என்றும் தோன்றும். ஆனால் இந்த பாடல் அப்படியல்ல. இந்த பாடல் படத்தில் இருமுறை பெண்- ஆண் குரலில் வெவ்வேறு சூழலில் ஒலிக்கும். இரு பாடல் காட்சிகளின் ஒளிப்பதிவும், காட்சியமைப்புகளும், கலை அம்சங்களும், வண்ண தேர்வில் எடுத்துக் கொண்ட சிரமங்களும் அதன் நுனுக்கங்களும் அந்த பாடலை காதலிக்க செய்ய தூண்டும். இரு பாடல்களுமே தண்ணீரிலிருந்துதான் காட்சி விரிவடையும். பெண் என்பதால் என்னவோ தாய் தன் குழந்தையை வர்ணித்து சிலாகிக்கும் அந்த வைர வரிகள் கொண்ட பாடலே எனக்கு மிக பிடித்தமானது.

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் (2)

எத்தனையோ அற்புதமான பாடல்களை பாடிய பி.ஜெயசந்திரன் தான் அந்த ஆண் குரலின் சொந்தக்காரர்.

இசையோடு ஒலிக்கும் ரம்ய குரலுக்கேற்ப வாயசைக்கும் சிம்ரனின் முகபாவமும், குழந்தை கீர்தனாவின் முகபாவமும் பாடலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே (2)
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே (2)


என்று பாடியவுடன் அந்த குழந்தை தன் தாயை ஒரு கணம் நின்று பார்த்துவிட்டு மனதை லேசாக்கி காற்றில் பறப்பாள். அந்த கணம்தான் என் கண்களும் பனிக்கும்.

வானம் முடியுமிடம் நீதானே
காற்றைப் போல நீ வந்தாயே சுவாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊறும் உயிரே

வானத்தின் ஒரு பகுதியை உடுத்தியதுப் போல் நீல சேலையில் தரையில் படர்ந்து தன் மகளை மார்பில் சாய்த்துக் கொண்டு பாடல் வரிகளுக்கேற்ப தாய் சேய்க்கு உண்டான நெருக்கத்தை உணர்த்தும் காட்சி பரிமாணம் அபாரம்.

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே (2)
(நெஞ்சில் ஜில் ஜில்)

ஆனந்த கீதம் ஒலிக்கும் இந்த இடைப்பட்ட நேரத்தில் மகளுடன் அலைகள் இல்லாத கடல் நீரின் நடுவே அலைமோதி விளையாடுவது அழகு.

எனது சொந்தம் நீ, எனது பகையும் நீ

குழந்தை கீர்த்தனாவின் விறைத்த பார்வை, சிம்ரன் எறியப்படும் கல்லுக்கா அல்லது 'எனது பகை' என்று விளித்தமையாலா?

காதல் மலரும் நீ, கருவில் முள்ளும் நீ
செல்ல மழையும் நீ, சின்ன இடியும் நீ (2)

ஆவலான அணைப்புக்காக கையை அகல விரித்து ஓடும் தாயை விளையாட்டாக ஏமாற்றும் குழந்தை.

பிறந்த உடலும் நீ, பிரியும் உயிரும் நீ (2)
மரணம் மீண்ட ஜனனம் நீ,


அற்புதமான வார்த்தை செறிவு.

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே (2)
(நெஞ்சில் ஜில் ஜில்)


ஆண் குரலில் ஒலிக்கும் சரணம்:

எனது செல்வம் நீ, எனது வறுமை நீ
இழைத்த கவிதை நீ, எழுத்துப் பிழையும் நீ
இரவல் வெளிச்சம் நீ, இரவின் கண்ணீர் நீ (2)
எனது வானம் நீ, இழந்த சிறகும் நீ (2)
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ
ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே (2)
(நெஞ்சில் ஜில் ஜில்)


குழந்தையை எழுத்துப் பிழை, நான் தூக்கி வளர்த்த துயரம் என்று சொல்லியிருப்பது படச்சூழலுக்கு சரியென்றாலும் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது.

பலமுறை சொன்ன விஷயங்களை வெவ்வேறு விதமாக புதிய பாடலாக உருவெடுத்து வந்திருந்தாலும், இந்த பாடலில் வரும் கருத்தும் விஷயமும் வேறு எந்த பாடலிலும் வந்ததாக தெரியவில்லை. நிறையப் பாடல்கள் வார்த்தைகள் தொலைந்தே போகும் அளவுக்கு இசையின் இரைச்சல் மிஞ்சும் ஆனால் அமைதியான திகட்டாத மெல்லிசையோடு உணர்வுபூர்வமான குரல், வலிமை மிகுந்த வரிகள், அழகிய ஒளிப்பதிவு, இயக்கம் என்று
இந்தப் பாடல் என் பார்வையில் வித்தியாசப்பட பல காரணங்கள். அதுமட்டுமில்லாமல் இந்த பாடலைக் கேட்கும் போது இல்லாத அமைதியில் மனதை கொண்டு செலுத்துவதாகவும் உணர்வேன்.

புது பாடலாக இருந்தால் பரவாயில்லை ஐந்து வருடத்திற்கு முன்பு வந்த பாடலைப் பற்றி என்ன விவரிப்பு என்று நீங்கள் அலுத்துக் கொள்ளலாம். ஆனால் எனக்கு என்றும் திகட்டாத எப்போதும் சுவைக்கும் பாடல் இது.

நீங்களும் பார்த்துக் கேட்டு மகிழுங்கள்:

ஒரு தெய்வம் தந்த பூவே...

Sunday, April 08, 2007

மிளிரும் நட்சத்திரம்

என்னை நட்சத்திரமாக்கி, தினமும் எழுத செய்து ஊக்கமளித்த தமிழ் மணத்திற்கு மிக்க நன்றி.

பின்னூட்டமிட்டு பதிவை உயிர் வாழ வைத்த அனைத்து நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள். பதிவை படித்து விட்டு பின்னூட்டமிட ஒன்றுமில்லை என்று பார்வையிட்டு மட்டும் சென்றவர்களுக்கு எண்ணற்ற நன்றி. அபி அப்பாவுக்கு 'பிரத்தியேக' நன்றி, காரணம் சிங்கம், புலி என்று ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அழைத்து வந்து என் பதிவை படிக்க செய்தமைக்கு.

'உங்கள் கவனத்திற்கு' பகுதியில் 'நட்சத்திரப் போட்டி'யை போட்டு ஆதரவு தந்த தேன்கூடுக்கும் மிக்க நன்றி.

என் செல்பேசியில் நானே எடுத்தப் படத்தை வைத்து தந்த போட்டியின் சரியான விடை சென்னையில் உள்ள 'கூவம் ஆறு'. சரி எழுதி பரிசை தட்டி செல்பவர் 'ஃபாஸ்ட் பவுளர்'. வாழ்த்துக்கள் பாஸ்ட் உங்களை தனி மடலில் நாளை தொடர்புக் கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை எல்லோருக்கும் நன்றிகள். நட்சத்திர வாரம் நிறைவாகிறது.

துபாய் நல்ல துபாய்

துபாய்க்கு வந்து இந்த அக்டோபரோட பத்து வருஷமாகுது. பத்து வருஷத்துல என்ன கிழிச்ச என்ன சாதிச்சன்னு கேட்டிடாதீங்க அப்புறம் நிறைய சாதிச்சேன்னு பொய் சொல்ல வேண்டி வரும். என்ன நம்ப முடியலையா? என்னாலயே நம்ப முடியல அப்புறம் நீங்க நம்பனும்னு எதிர்பார்ப்பேனா? ஆனா மறக்க முடியாத சில நிகழ்வுகள் இருக்கத்தான் செய்யுது. அக்கா துபாய்ல இருந்த தைரியத்துல நான் ஒரு தப்பித்தலுக்காக போறேன்னு அடம்பிடிச்சதும் வீட்டுல அனுப்பி வச்சாங்க. ஒரு பெண்ணை, அதுவும் எங்க சமூகத்துல- தனியா துபாய்க்கு அனுப்புறதே பெரிய விஷயம்தான். ஆனா வந்து இறங்கியதும் வெளிநாடுன்னு பெரிய பிரம்மிப்பெல்லாமில்ல. அக்கா கூட கேட்டா என்ன வெளியில வேடிக்கைப் பார்த்துட்டு வருவேன்னு பார்த்தா 'ம்மு'ன்னு வரேன்னு. பின்ன சந்தோஷமாவா இருக்கும்?! அப்பா அம்மா அக்காமார்கள், தோழிகள், ஆசையா வளர்த்த மீன்கள், நெருக்கமா இருந்த செடிகள்னு எல்லாத்தையும் விட்டுட்டு வந்தாச்சு. அக்காக்கிட்டக்கூட அதான் கேட்டேன் "உன் புருஷன்ற ஒரு சொந்தத்துக்காக எல்லாத்தையும் எப்படி விட்டுட்டு வர மனசு வந்துச்சு"ன்னு. "நானாவது ஒரு சொந்தத்துக்காக வந்தேன் நீ எதுக்குடி வந்தே"ன்னு ஒரு நியாயமானக் கேள்வி கேட்டவுடனே நான் 'கப்-சிப்'ன்னு ஆயிட்டேன்.

எங்க வீட்டுல நாலு பொண்ணுங்க. நான் தான் நாலாவது. நானும் பெண்ணா பொறந்துட்டதால பெத்தவங்களுக்கு ரொம்ப வருத்தமாம். அம்மா நான் பொறந்தப்ப என்ன தூக்கக்கூட இல்லன்னு பக்குத்து வீட்டு அக்கா அடிக்கடி சொல்லி நினைவுபடுத்துவாங்க. எனக்கப்புறம் ஒரு கடைக்குட்டி ஒரு தம்பி இருக்கான் அது வேற விசயம். ஆனா ஆண் பிள்ளன்னு எதுக்குக் கேட்கிறாங்க? ஆண் பிள்ளையா இருந்தா அவங்களுக்கு எல்லா வகையிலும் உதவியா இருப்பான்னுதானே? அதனால நானும் எப்பவுமே அப்படி இருக்கணும்னு சின்னதிலிருந்தே ஒரு வைராக்கியம். எதுக்குமே பெத்தவங்க கிட்ட காசு கேட்கக் கூடாதுன்னு இருப்பேன். அஞ்சு வரைக்கும்தான் மெட்ரிகுலேஷன் பள்ளி அதுக்கப்புறம் அரசினர் பள்ளிதான், அதனால மாச மாசம் பள்ளிக்கு பணம் கட்டத் தேவையில்ல. பள்ளிக்கூடத்துல எல்லாப் பசங்களும் சுற்றுலாப் போனாக்கூட அத வீட்டுல வந்து சொல்ல மாட்டேன். இன்னிக்கு விடுமுறைன்னு சொல்லிடுவேன். ஒரு வருஷம் படிச்சி முடிச்சதும், இந்த வருஷப் புத்தகத்த கைமாத்தி அதுல கெடைக்குற காச வச்சிதான் புது வருஷ புத்தகத்த வாங்குவேன். அப்பா பத்திரிகையில் புகைப்பட நிபுணர் அதனால நிறைய படச்சுருளோட டப்பா கெடைக்கும். பள்ளி தோழிங்க கிட்ட அவங்கவங்க வீட்டுல இருந்து பூதர்மாவு அதாங்க வாசனப் பவுடர் கொஞ்சம் எடுத்து வரச் சொல்வேன். எல்லா விதமான பவுடர்களையும் அந்த படச்சுருள் டப்பாலக் கொட்டினால் புதுவித வாசன வரும், அத பெரிய வகுப்பு படிக்கிற அக்காங்கக்கிட்ட 5 ரூபாய்க்கு விற்பேன். வாசன மாவுக் கொண்டு வரவங்களுக்கு 50 பைசாக் கொடுத்துட்டு மிச்சத்த என் தேவைக்கு வச்சுக்குவேன். அதே மாதிரி பறவைங்க இறக்கைல வித விதமான நிறத்துல சாயம் பூசி அத மொத்தமாக் கட்டி அதுல ஒரு 'பின்'குத்தி அதையும் 5 ரூபாய்க்கு விற்பேன். சட்டையில் குத்திக்கிற 'பிரோச்' மாதிரி அழகா இருக்கும். இந்த மாதிரி குட்டி குட்டி வியாபாரம் நெறய வச்சிருக்கேன். அப்ப நான் மூணாவது நாலாவதுதான் படிச்சிட்டுருப்பேன். அந்தக் காசை மிட்டாய் வாங்கித் திண்ண செலவழிக்க மாட்டேன். சேர்த்து சேர்த்து வச்சி எதுக்காவது உபயோகமா பயன்படுத்துவேன். அப்பவே பணம் பண்ணுற எண்ணம்னு சொல்ல வரேன். அதுக்கா இந்த பில்டப்புன்னு கேட்காதீங்க.

ஒவ்வொரு அக்காவுக்கா கல்லூரி படிப்பு முடிச்சதும் கல்யாணம் பண்ணி வச்சிட்டிருந்தாங்க. நான் பார்த்தேன் இதுல நம்ம மாட்டிக்க கூடாது, சில வருஷமாவது பெத்தவங்களுக்கு சம்பாதிச்சு தரணும்னு என்னோட பல வருஷக் கனவ நெனவாக்க துபாய் வந்து சேர்ந்தேன். அதே மாதிரியே நடந்துக்கிட்டேன். ஒரு பெண்ணாலயும் எல்லா விதத்திலயும் பெத்தவங்களுக்கு ஒரு ஆணை விட அதிகமாகவே உதவ முடியும்னு நிரூபிச்சிட்டேன். மறக்க முடியாத சில நிகழ்வுன்னு ஆரம்பிச்சுட்டு அத சொல்லலன்னா எப்படி?

நான் துபாயில போன என்னுடைய முதல் நேர்முகம் ஒரு பெரிய நிறுவனம்தான் ஆனா இந்திய நிறுவனம். குடும்ப நண்பரோட செல்வாக்க வச்சு அந்த நிறுவனத்தோட மனிதநலம் மேம்பாட்டு துறை மேலாளரைப் போய் பார்த்தேன். அவர் என்னுடைய பொழிப்புரை, சான்றிதழ் எதையுமே பார்க்கல, அவர் என்னப் பார்த்தவுடன் சொன்ன விஷயம் "உனக்கு நேர்மையா ஒரு அறிவுரை சொல்லணும்னு தோனுது, நீ ஊருக்குப் போய்ட்டு கல்யாணம் முடிச்சுக்கிட்டு வா. இரண்டு பேருக்கும் சேர்த்து வேல தரோம். நீ கல்யாணமாகாத பொண்ணு இங்க வேல பார்த்தீனா எங்க பையனுங்க அவங்க தெறமைய வேலைலக் காட்டமாட்டானுங்க உங்கிட்டக் காட்டத்தான் நினப்பாங்க"ன்னு சொன்னதும், அந்த கசப்பான உண்மை என்ன ரொம்ப பாதிச்சுது. வீட்டுக்கு வந்து 'ஓ'ன்னு அழுதேன். அழுததற்கான காரணம் முதல் அடியே சறுக்குதேன்னு. என் திறமை வேணாம் என் கல்யாண தகுதிதான் வேணுமாம், இந்த நிறுவனம் இல்லாட்டி என்ன எத்தனையோ இருக்குன்னு மனதிடம் இன்னும் கூடிச்சு. இது இஸ்லாமிய ஊருன்னுதான் பேரு ஒரு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு போனேன் "நீ தலையில துணிப் போட்டுட்டு போனேனா வேலைக் கிடைக்காது"ன்னு உபதேசம், அப்படி சொன்னதும் ஒரு முஸ்லிம் பெண்மணிதான். நான் நானாத்தான் இருப்பேன். இப்படி இருந்து வேல கெடச்சா கெடக்கட்டும்னு இருந்தேன். அப்ப திருமணமாகாத பெண்களுக்கு நுழைமதி சுலபமா கிடைக்காததால பெரிய தலவலியா வேற இருந்துச்சு, ஆனா பெரிய நிறுவனமா இருந்தா அந்த பிரச்சனையெல்லாம் இருக்காதுன்னு சொன்னாங்க. அப்புறம் இன்னொரு இடத்திற்கு போனேன் நேர்முகத்திற்கு, எல்லாரும் 'சூட்-கோட்', குட்ட பாவாடைன்னு விதவிதமா வந்திருந்தாங்க. நான் மட்டும்தான் சுரிதார். போச்சுடான்னு நினச்சேன், ஏனா அந்த மேலாளர் "இந்த மாதிரி பாரம்பரிய உடைல நேர்முகத்திற்கு வரக்கூடாது"ன்னார். நான் சொன்னேன் எங்க ஊர்ல இது பாரம்பரிய உடை இல்ல நவநாகரீக உடைதானு ஒரு போடு போட்டேன். என்னதான் நான் மற்ற உடைகளெல்லாம் உடுத்தினாலும், தகுதிக்காக வேலக் கெடக்கினுமே தவிர உடைக்காக இருக்கக் கூடாது பாருங்க. ஆனா அதே நிறுவனத்திலிருந்து இரண்டாவது நேர்முகத்திற்கு வரச் சொன்னதும் ஆச்சரியமா இருந்துச்சு. அங்கேயே வேலையும் கிடச்சுது.

அது சரி, ஏன் சொந்தக் கத சோகக்கதயெல்லாம் சொல்றேன்னு யோசிக்கிறீங்களா? நம்ம வலைஞர்களுக்குள்ள நோயிருக்குல? அட எனக்கும் சேர்த்துத்தான், அதாங்க எழுதுறவங்க யாரு என்னன்னு தெரிஞ்சிக்காம அவங்க படைப்ப வாசிக்கிறதுல கொஞ்ச சிரமப்படுற நோயப்பத்தித்தான் சொல்லுறேன். என்ன படைப்பு, எதப்பத்தி எழுதிருக்காங்க, எப்படி எழுதிருக்காங்கன்னு படிக்க மாட்டோம்ல. நாம யாரு எழுதிருக்கான்னு பார்ப்போம், பின்ன தலைப்பு கவர்ச்சியா இருக்கான்னு பார்ப்போம் அதெல்லாமிருந்தாத்தானே சொடுக்கி வாசிக்கச் சொல்லுது. அதனாலத்தான் என்னைக்குமில்லாத திருநாளா சொந்த புராணம் கொஞ்சம் பாடிருக்கேன். ஆனாலும் ஒரு பதிவுன்னு இருந்தா, அத நாமப் படிக்கும் போது ஏதாவது புதுசா தெரிஞ்சிக்கணும்னு ஆசப்படுவோம்ல? இது வரைக்கு படிச்சுப்புட்டு ஒண்ணுமே இல்லாமப் போனா எப்படி அதுவும் தினமும் ஒரு சுவாரஸ்யம்னு சொல்லிட்டேன்ல, அதுக்காக துபாயப் பத்தி கொஞ்சம் சொல்லிடுறேன். நான் இங்க வந்த போது இருந்த துபாய்க்கும் இப்பவுள்ள துபாய்க்கும் நிறய வித்தியாசம். பத்து வருஷத்துல நம்ம ஊருல அப்படி பெரிய மாத்தம் வந்திருக்கான்னா இந்த ஊரோட ஒப்பிடும் போது அது பெரிய விஷயமில்லன்னு சொல்லலாம்.


1990ல் எடுத்த படங்களைப் பார்க்கும் போது இந்த மாதிரி நானும் எடுத்திருந்தா வட்டம் போட்டு காட்டிருப்பேன். அப்போதெல்லாம் துபாய் ஷார்ஜா ரோட்டுல அந்த மணல்ல உட்கார்ந்து லூட்டி அடிப்பதே தனி சுகமாகத்தான் இருந்தது. இப்போது எங்கு திரும்பினாலும் கட்டிட மயமாயிடுச்சு. வீதில வண்டி கூடிப்போச்சு, போக்குவரத்து நெரிசல் கூடிப்போச்சு, வீட்டு வாடகை ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப ஏறிப் போச்சு. துபாயப்பத்தி விரிவா எழுதலாம்னா அதுக்கு வேலயே வைக்காம நிறை வலைப்பதிவர்கள் எழுதிக்குவிச்சிட்டாங்க. சரி கொஞ்சம் சுருக்கமா:




* உலகத்திலேயே ஒரே 7 நட்சத்திர விடுதின்னா அது 'புர்ஜ் அல் அரப்'தான் (Burj Al Arab). ஒன்றரை வருஷத்துல கட்டி முடிச்சிட்டாங்க. உள்ளப்போயி சுத்திப்பார்க்கவே 60 யூரோ. அப்ப தங்கறதுக்கு எவ்வளவாகும்னு யோசிச்சுப்பாருங்க ஒரு இரவு தங்க $7500லிருந்து $15000 வரை இருக்காம்.


* வெளியில 50-55c ன்னு வெய்யில் கொளுத்தினாலும், குளிர்காலத்த பெரிய திடல்ல அடக்கி வச்சா மாதிரி அமச்சிருக்காங்க 'மால் ஆப் எமிரேட்ஸை' (Mall of the Emirates). இதுதான் உலகின் மிகப் பெரிய வணிக வளாகமாம். உறைபனி மூடிய தரைல வழுக்கிக்கிட்டு போகிற அதிசயம் இந்த மால் ஆப் எமிரேட்ஸுக்குள் இருக்கிற 'ஸ்கீ துபாய்'ல இருக்கு.





* 'பாம்' ('bomb'னு படிச்சிடாதீங்க இது 'Palm') பற்றிக் கேள்விப்பட்டீங்களா இல்லையான்னு தெரியல. ஈச்சை மரத்தோட வடிவத்தில் தீவு. அதாவது கடலுக்குள்ள மண்ணக்கொட்டி வீடு கட்டிருக்காங்க. இந்த மாதிரி இதுவரைக்கு மூணு தீவு உருவாகிக்கிட்டிருக்கு. ஒரு தீவு முழுசா முடிவடஞ்சிடுச்சு. மற்ற இரண்டு தீவுடைய வேல நடந்துக்கிட்டு இருக்கு. இதுவும் சீனச்சுவர் மாதிரி நிலாவிலிருந்து பார்த்தால் தெரியுமாம். நிலவிலிருந்து தெரியுதோ இல்லையோ எங்க அலுவலகத்திலிருந்து பார்த்தா ரொம்ப அழகா தெரியுது. இதுதான் உலகத்தின் எட்டாவது அதிசயமாகப் போகுதுன்னு சொல்றாங்க.

* 'புர்ஜ் துபாய்' கட்டிக்கிட்டு இருக்காங்க. 2008-ல உலகத்திலேயே இதுதான் மிகப்பெரிய கட்டிடமா இருக்கப் போகுதாம். இப்போதைக்கு 117 மாடி கட்டி முடிச்சாச்சு, தற்போதய உயரம் 410.5 மீட்டர், 800 மீட்டரை எட்டுமாம்.

* 'துபாய் லாண்ட்' இது 2009-ல முடியும்போது. இதுவும் உலகத்திலேயே மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தனி நகரமாகவே வரப்போகுதாம்.

இந்த மாதிரி இன்னும் வரப் போகிற அதிசயங்கள் நெறய. இப்படி உலகப் புகழ் பெற்ற, பெறப் போகிற விஷயங்கள் எல்லாமே நான் துபாய்க்கு வந்த பிறகுதான் வந்தது. என்னாலதான் துபாய்க்கு அதிர்ஷ்டமே வந்துச்சுன்னு சொன்னா நம்பவா போறீங்க?

Saturday, April 07, 2007

ப்ளூ கிராஸுக்கு ஒரு கேள்வி

ஈத் பெருநாளுக்கு வழக்கமாக 3-4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். அந்த நாட்களில் பெரும்பாலும் நாங்கள் எல்லோரும் தொலைதூரப் பிரயாணம் செய்ய பிரியப்படுவோம். பத்து பதினைந்து பேர் சேர்ந்து இந்த முறை ஹத்தாவுக்கு போனோம். எத்தனை முறை போனாலும் மீண்டும் போக தூண்டும் ஹத்தா! அந்த நெடுபயணமே எனக்கு பிரியமானது. ஆறு வருடங்களுக்கு முன்பு செல்லும் போது அரட்டத்தில் ஓடும் பைக்கில் 1/2 மணி நேரத்திற்கு 25 திர்ஹம்தான். அரை மணிக்கு என்று எடுத்து விட்டு கைமாற்றி கைமாற்றி ஓட்டி 1 மணி நேரமாக்கிவிடுவோம். உள்ளே சென்றுவிட்டால் தேடி பின்னால் வரும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இப்போது அதே இடத்தில் அந்தப் பாலைவனத்தில் கூடாரம் போட்டு அதையும் வணிக நிலமாக்கியிருந்தார்கள். 4-wheeler drive, பைக், ஒட்டகச் சவாரி, குதிரை சவாரி, மருதாணி இடுதல் என்று பலவகைப்பட்ட அரேபிய பாரம்பரிய விஷயமாகிவிட்டிருந்தது. அந்த இடத்தில் ஒரு பறவையும் உட்கார்ந்திருந்தது அமைதியாக. அருகில் சென்று பார்த்தேன் குதிரைக்குத்தானே கடிவாளம் பார்த்திருப்பீர்கள் ஆனால் இந்த பறவைக்கும் கடிவாளம் போட்டிருந்தது ஏன் என்று வினவினேன் 'கண்ணைக் கட்டிக் கொண்டால் உலகம் இருட்டுன்னு நினச்சிக்குமாம் பூனை' அதே கதைத்தான் இந்த பறவைக்கும். துறுதுறுவென துரத்தி இரை தேடும் பறவையான வல்லூறுவால் அடைந்துகிடக்க முடியாதாம். அப்படியிருந்தால் தன் கூரிய மூக்கை தன்னைதானே மாயித்துக் கொள்(ல்)ளுமாம். சோம்பேறி மனிதர்களை பார்த்திருக்கிறேன் ஆனால் வேலையில்லாமல் உட்கார்ந்திருந்தால் தற்கொலை செய்துக் கொள்ளும் ஐந்தறிவைப் பார்த்து வியந்தேன்.

வல்லூறு கழுகு இனம் ஆனால் கழுகை விட மிக விரைவாகப் பறக்கும் ஆற்றல் மிக்கது. உலகிலேயே மிக அதிகமான வேகத்தில் பறப்பது இந்த வல்லூறு தான். காற்றின் ஏற்ற இறக்கங்கள் இந்த வல்லூறுவின் கண்களுக்கு மட்டும் தெரியுமாம். வல்லூறுவின் உடல் நீளத்தை விட அதன் இறக்கையின் நீளம் இருமடங்கு. அதனைப் பற்றி மேலும் அறிய அந்த பயிற்சியாளரை கேள்வி கேட்டே துளைத்துவிட்டேன்.

இந்த வல்லூறு அரேபிய பாரம்பரிய பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்லாமல் இதனை தானே பிடித்து பயிற்சி தருவது இவர்களுக்கு பெரும் கௌரவமாக விளங்குகிறதாம். பல நாள் கண்காணித்து, அதன் போக்கை அறிந்து, இரையைத் தந்து தூரத்திலிருந்து மறைந்து தாக்கி ஒரு வல்லூறுவை சேதமில்லாமல் பிடிப்பது அவர்களின் வீரத்திற்குச் சவாலாக விளங்குவதால் இந்த விளையாட்டை விரும்பி விளையாடுகிறார்கள். ஆனால் எல்லாராலும் இதனை விளையாட முடியாது, காரணம் இது விலை உயர்ந்த பொழுதுபோக்கு விளையாட்டு. இந்த விளையாட்டைப் பெரிய ஷேக்மார்கள்தான் விளையாடுகிறார்கள். பெரும்பாலும் வல்லூறுகளை மற்றவர்களிடமிருந்து கெளரவப் பரிசாக கிடைத்ததாகவோ அல்லது திறமையால் பிடித்ததாகவோதான் வைத்திருப்பார்கள். இப்போதெல்லாம் இந்தப் பறவைகள் மத்திய கிழக்கு அரபுநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறதாம். நல்ல ரக வல்லூறுவை விலை கொடுத்து வாங்கினால் கிட்டத்தட்ட 30000 டாலராகுமாம். அப்ப ஒரு பறவைக்கு இவ்வளவு விலையா என்று நான் கண் விரித்ததில் என்னைப் பார்த்து பயந்தேவிட்டார் அந்தப் பயிற்சியாளர். வல்லூறு பயிற்சியாளர்களை 'சாகர்' என்று அழைக்கிறார்கள்.
பயிற்சியின் போது அந்த பறவையுடனே முழு நேரமும் செலவிட வேண்டுமாம். இதனை வெறும் கையால் மற்றப் பறவைகளை பிடிப்பதுப் போல் பிடிக்க முடியாது, மிகக் கூரிய நகங்கள் கொண்டதால் தோலாலான கைக்கவசத்தைவிட கடினமான கையுறை அணிந்து அதன் மேல்தான் அதன் கால்களைப் பதிய வைக்கிறார்கள். பார்க்க கையை கார்பெட்டால் சுற்றியிருந்ததுபோல் இருந்தது.

இரண்டு முக்கிய வகைகளான பைரி (Peregrine) மற்றும் வைரி (Saker - cherruq) வல்லூறு வலுவாக பறந்துகொண்டே தன்னைக்காட்டிலும் உருவில் பெரிய பிற பறவைகளைக் கொல்ல வல்லதாம். இதில் பெண் வைரி வல்லூறு வகை, ஆண் வகையைக் காட்டிலும் மிகவும் வல்லமை கொண்டதாம் (தெரிஞ்ச விஷயம்தானே, எப்பவும் பெண் இனம்தானே சிறப்புமிக்கது).

இந்தப் பறவைகளுக்கு பயிற்சி காலத்தின் போது அவர்களே புறாவையோ வேறு பறவையையோ பறக்க விட்டு அதனைப் பிடிக்க பயிற்சி தருகிறார்கள். இது மிகவும் புதிய முறையாகத் தெரிந்தது. பெரும்பாலும் துப்பாக்கி வேட்டையாடுவது, வில்-அம்பு வைத்து வேட்டையாடுவது கேள்விப்பட்டிருக்கிறோம் இது என்ன பறவை மூலம் பறவையை பிடிக்கும் வித்தை, என்ன வேறுபாடு? என்று கேட்டதற்கு. இஸ்லாமிய முறைப்படி இறந்தவைகளை உண்ணக் கூடாது. ஆகையால் உயிருடன் பிடித்து வருவதற்குத் தக்க பயிற்சி தருகிறார்களாம். அப்படி பிடித்து வரும் வல்லூறுக்கு உடனே அதன் உணவைப் பயிற்சியாளர் பரிசளித்து விடுவார்களாம். வேட்டையாடிய உயிரை வெல்லும் பிராணி பசியாறுமென்று தெரியும் ஆனால் இந்தப் பறவை பயிற்சியாளரின் பரிசுக்காக தம் பசியை தள்ளிப் போடுவது விச்சித்தரமாகவும் அதன் தனிச் சிறப்பாகவும் தோன்றியது.



பிப்ரவரி 2003-ல் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகம்மதின் வல்லூறு தன் எடையைக் காட்டிலும் பல மடங்கு அதிக எடையுள்ள ஒரு மானை வேட்டையாடியுள்ளது. பல முறை மானைத் தூக்கியதாகவும் பதிவாகியுள்ளது. இப்படி ஒரு வல்லூறு மானைத் தூக்குவது இதுதான் முதல்முறையென்ற சரித்திர சாதனையும் படைத்துள்ளது. வல்லூறுவை சிறந்த முறையில் பாதுகாத்தாலும், சிறப்பு பராமரிப்பு அளித்தாலும், குளிர்காலத்தில் மட்டுமே வேட்டைக்கு உபயோகித்தாலும், பறவைக்கான சுதந்திரத்தைத் தர நல்ல மருத்துவ பரிசோதனை செய்துவிட்டு அதன் காலில் ஒரு 'சிப்' போல பொருத்தி பறக்க விட்டுவிடுவதனால் அதன் போக்கும் நலனும் கணினியிலேயே அறிந்துக் கொள்ளும் அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறியுள்ளது என்று வியந்தார் அந்தப் பயற்சியாளர்.

என் கேள்விகளால் துவண்டுவிடாமல் மிகவும் ஆர்வத்துடன் அவர் கூறிய விளக்கத்திலிருந்து அவர் அந்தப் பறவை இனத்தின் மேல் வைத்திருந்த பற்றும் ஈடுபாடும் தெரிந்தது. மேலும் கேள்விகள் கேட்டு அவரைத் துன்புறுத்த விரும்பாததால் விடைபெற்றேன். வெளியே வந்த பிறகு தொண்டையில் தொக்கி நின்ற கேள்வி, 'ப்ளூ கிராஸ்' பார்த்தால் நல்லமுறையில்தான் வளர்கிறது வல்லூறு என்று சந்தோஷப்படுவார்களா அல்லது அதிலும் ஏதாவது குறைக் கண்டுப்பிடிப்பார்களா என்பது.

Friday, April 06, 2007

கிறுக்கல்கள்

கவிப் பகைவர்களுக்காக அடக்கி வைத்திருந்தாலும் எனக்குள் இருக்கும் ஆர்வம் அவ்வப்போது துளிர்விடத்தான் செய்கிறது. வெளிவரும் அத்தனையும் குறும்பாக்கள், துளிப்பாக்கள், கவிதைகள் என்று பெயரிட முடியாததால் கிறுக்கலாக...

மர நிழலில் ஒதுங்கினேன்
மர அசைவில்
நேற்று சேகரித்ததிலிருந்து
எனக்கு மட்டும் மழை
***

வானத்தின் ஜன்னலில்
எட்டிப்பார்க்கும் சூரியன்
நட்சத்திரம்
***

செத்தும்
முகத்தில் எச்சில்
சிலை
***

எதிர்பாராமல்
எதிர்கொண்டு முடிந்தது
கூச்சம்
***

ஒட்டக நிழலில்
தொழுகை
பாலைவனம்
***

வெளிநாட்டு வேலை
தள்ளிப்போடப்பட்டது
தாம்பத்யம்
***

நாட்டின் மானம்
பந்தயத்தில் அடமானம்
கிரிக்கெட்
***

நாய்களுடன் போட்டி
எச்சில் இலைக்கு
மனிதன்
***

என்னையே தொடர்ந்தாலும்
நெருங்கி வர முடியாத
நிழல்
***

வீசிவிட்டு
அழுதது குழந்தை

சாமி ஊர்வலத்தில்
திடீர் ஜாதி கலவரம்
பலர் காயம்
சிலர் மரணம்

வீசப்பட்ட
அப்பாவின் ஒற்றைச்செருப்பு
ஒன்றுமறியாமல் வீதியில்.

***

Thursday, April 05, 2007

மூட(ர்) நம்பிக்கை

இந்த முறை நான் சென்னையில் இருந்த போது திடீரென்று புளியந்தோப்பே கோலாகலமாகக் காட்சியளித்தது. போன வாரம் பார்த்த புளியந்தோப்பு போல் இல்லையே! என்ன ஊர்வலம் என்ற ஆர்வமாக நோட்டமிட்டேன். திருவிழாவா? திருமணமா? அரசியல் கூட்டமா என்று யூகிக்க முடியாத கோலாகலம்.

கவனிக்க ஆரம்பித்தேன் - பல குதிரைகள் பவனிவருகிறது, எங்கு திரும்பினாலும் விவசாயிகள் கண்டால் வயிறெரியும் அளவிற்கு ஆடம்பர பிரகாச வண்ண விளக்குகள்.

மல்லிகைப்பூவே கிடைக்காத அந்தத் தருணத்தில் மல்லி மணக்க ஊரில் உள்ள எல்லா பூக்களையும் வைத்து அலங்கரித்து வைத்திருந்தது ஏதோ ஒன்றை. 'போக்கிரி பொங்கல்' பாடலும் சத்தமாக ஒலிபெருக்கியில் ஒலித்து காதுக்கு கேடுவிளைவித்துக் கொண்டிருந்தது. ஒன்றுமே புரியவில்லை. காங்கிரஸ் கட்சி விழா என்று ஒருகணம் நினைத்து விட்டேன் காரணம் கை சின்னம் ஆங்காங்கே காணப்பட்டது. கடைசியில் ஏதோ இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்டது என்று புரிந்தது. ஏனென்றால் ஒரு சிறுவன் குரான் படிப்பது போல் பிரம்மாண்ட உருவம் வண்ண விளக்கால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

"இன்று முஹர்ரம் ஏழுல அதான் 'பஞ்சா' ஊர்வலம் போகுது" என்றார் என் கணவர். 'பஞ்சா' என்ற வார்த்தையே எனக்குப் புதிதாக இருந்தது. வீட்டிற்கு வந்து என் மாமியாரிடம் கேட்க. அது 'நக்கோபா' கூட்டம் செய்யும் சாங்கியம் என்றார்கள். 'நக்கோபா' என்றால் 'வேண்டாம்' என்பதற்கு உருது பேசுபவர்கள் பேச்சு வழக்கில் உபயோகிக்கும் வார்த்தை. அடிக்கடி உபயோகிப்பதால் அவர்களை நாங்கள் அன்புடன் 'நக்கோபா' கூட்டம் என்று அழைப்போம். "முஹர்ரம் பத்துக்கு இன்னும் விசேசமா கெடக்கும், அப்ப பார்க்க போலாம்" என்றார்கள் மாமி.

'பஞ்சா' பற்றி விசாரித்தலில், அதன் சாங்கியம் சம்பிரதாயம் எல்லாமே இஸ்லாத்திற்கு மாறானது என்று புலப்பட்டது.


'முஹர்ரம் 10'ஆம் தேதியும் வந்தது, எல்லோருக்கும் விடுமுறையாகவும் இருந்தது. அமீரகத்தில் கூட முஹ்ரம் 10 அன்று விடுமுறையில்லை. இஸ்லாமிய வருடப் பிறப்பான 'முஹர்ரம் 1' அன்றுதான் விடுமுறை தருவார்கள். இந்த வழக்கம் சவுதியிலும் கூட இல்லை. ஆனால் நம்ம சென்னையில் சிறுவயதில் இராயப்பேட்டையில் இருந்த வரை இந்த விடுமுறை நாளை மார் அடிப்பவர்களை வேடிக்கை பார்க்க அளித்த விடுமுறை என்று தவறாமல் அந்தக் கொடுமையைப் பார்த்து. இது 'பொய் இரத்தம்', 'சாயம்' என்றெல்லாம் தோழிகளுடன் நின்று கேலி செய்தாலும் அக்கம் பக்கத்தில் 'ஷியா'க்கள் இல்லையே என்று ஒருமுறை பார்த்துக் கொள்வேன்.

'ஷியா'களின் நம்பிக்கையே வேடிக்கையானது. இறைவன் ஒருவனே அவனுக்கு இணையும் வைக்கக் கூடாது என்று கூறும் இஸ்லாத்தில் இந்த ஐந்து தெய்வக் கொள்கை வேடிக்கைதானே? 'பஞ்சா' என்ற சொல் பாஞ்ச் (ஐந்து) என்ற சொல்லிலிருந்து வந்ததாம். அதாவது ஐந்து புனிதர்களை வணங்குவதுதான் ஷியாக்களின் நம்பிக்கை.

முஹர்ரம் 10-ஆம் நாளில் தீமிதிப்பிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அங்கு சிறிய பந்தல் போட்டு சின்ன மேடையமைத்து அதில் நிறைய வாள், கேடயம் போன்ற ஆயுதம் போல் ஜோடிக்கப்பட்டு அதன் மத்தியில் காங்கிரஸ் சின்னமும் இருந்தது. அதாங்க கைச்சின்னம்.
முதல் முறையாகப் பார்ப்பதால் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. தீமிதிக்க ஏற்பாடு நடந்து கொண்டிருந்ததால் ஒரே புகை மண்டலமாக இருந்தது. சுற்றுபுறச் சூழலை மாசுபடுத்தும் மற்றொரு ஏற்பாடாகவே தெரிந்தது எனக்கு. இருமிக் கொண்டே அந்த பந்தல் பக்கம் சென்று பார்த்தேன். அங்கு சாம்பிராணி புகை போட்டு வருபவர்கள் தலையில் ஒருவர் மயிலிறகை அந்தச் சாம்பிராணியில் காட்டி அவர்கள் தலையில் வைத்தார். பயபக்தியாக குடும்பமே அந்த மயிலிறகில் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டிருந்தது. வைத்திருக்கும் சந்தனத்தையும் கழுத்தில் தேய்த்துக் கொண்டார்கள். மடச் சாம்பிராணிகள் என்று நினைத்துக் கொண்டேன்.

சிலர் மெனக்கெட்டு தீமிதிக்க ஆயத்தமாகும் தீக்கணலில் உப்பு, மிளகு என்று பொட்டலத்தில் எடுத்து வந்து அந்தத் தீயில் போட்டார்கள். இப்படி போடுவதன் மூலம் முகத்தில், உடலில் வரும் கொறுகொறுப்பு, திருஷ்டியால் வரும் பருக்கள் எல்லாம் மறைந்து விடுமாம், இதுவும் ஒருவகையான முட்டாள்தனமான நம்பிக்கை. நகைப்பாக இருந்தது. இதில் பூமிதி வேறு, வெயிலில் செருப்பில்லாமல் இருந்தவர்களையே நபிகள் கண்டித்ததாக ஆதாரங்கள் இருக்கும் போது தீமிதிப்பு இஸ்லாத்திற்கு எதிரானதுதானே? ஊர்வலம் போவது, கந்தூரி, கொடியேற்றம், சந்தனக்கூடு, தர்கா எல்லாமே இஸ்லாத்திற்கு ஏற்றது அல்ல என்பதை எப்போது உணர்வார்களோ? இதெல்லாம் அறியாமை செயல்களாகத் தெரியவில்லை யாருடனோ போட்டி போடும் அறிவின்மையாகவே தெரிகிறது எனக்கு

'ஷியா' முஸ்லிம்கள்தான் இதைச் செய்கிறார்கள் என்று நினைத்திருந்த வேளையில். அவர்கள் கறுப்பாடை அணியாதிருப்பதை கவனித்தேன். ஷியாக்கள் நபிகள் நாயகத்தின் பேரனான ஹுசைன் (ரலி) இழப்பை துக்க நாளாகச் சித்தரித்து கறுப்பாடையை முஹ்ரம் நாட்களில் அணிந்து கொள்வது வழக்கம். இஸ்லாமிய வரலாற்றில் புனிதப் போர்கள் எத்தனையோ, அதில் இறந்தவர்கள் எத்தனையோ பேர். ஆனாலும் ஹுசைன் (ரலி) மறைவுக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம்? ஏன் துக்க நாளாக அனுசரிக்கிறார்கள்? எதிரிகள் ஹுஸைன் (ரலி) அவர்களின் தலை, கைகள், கால்கள், விரல்களை வெட்டி, பழி வாங்குவதற்காக ஆட்டம் போட்ட செயலை போல் இவர்களும் கை விரல்களை ஏந்தி ஊர்வலம் போவது பெரிய முரண்பாடு தானே? ஊர்வலம் சென்று போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் இவர்கள், மற்றவர்கள் எள்ளி நகையாடும் வகையில் பக்தி பரவசமாக மார் அடித்து, தங்களையே குத்தி வதைப்படுத்திக் கொள்ளும் விஷயத்தையும் இன்னும் செய்து வருகிறார்கள். 'அமைதி' என்று பொருட்படும் இஸ்லாத்தில் இப்படிப்பட்ட காட்டுமிராண்டித் தனத்திற்கு இடமில்லை என்று அறியாமலா இருப்பார்கள் இவர்கள்?

கறுப்பாடைகள் தென்படாததால் மெதுவாக சென்று விசாரித்தேன். "நாங்க 'ஷியா' இல்லீங்க' 'சன்னி' முஸ்லிம்தான். நம்பதான் பஞ்சாலாம் வைக்கிறது" என்றதும் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. "அந்த பூப்போட்டு ஏதோ வச்சிருக்காங்களே அதற்குள் என்ன இருக்கிறது" என்று ஆர்வமாக கேட்டேன். "அதுங்களா, அது ஒரு ஸ்டீல் பாத்திரம் கணக்கா இருக்கும். அத முஹர்ரம் பொறக்கும் போது எடுத்து ஓதி, பந்தல் கட்டி, பூப்போட்டு இப்படி வச்சிருவோம். .
ஏழாம் நாள் குதிரையில் ஊர்வலம் போய் கொண்டு வந்து மறுபடியும் பந்தலில் வச்சிருவோம். அப்புறம் எல்லாம் முடிச்சிட்டு அதுக்குன்னு ஒரு பெட்டியிருக்கு அதுக்குள்ள வச்சிருவோம்" என்றாள் குதூகலத்தோடு. நான் வியப்பாக "ஒரு பாத்திரத்திற்கு பூப்போட்டு அலங்காரம் செய்து, அதுக்கிட்ட வேற மக்கள் போய் ஆசிர்வாதம் வாங்குறாங்க, இஸ்லாத்தில் இதெல்லாம் கூடாதுதானே" என்றேன். அவள் ஒரு முறை முறைத்து விட்டு விலகிச் சென்றாள். பக்கத்தில் இருந்த மற்ற பெண் "நாங்க கால காலமா செய்றது மாத்திக்க முடியாது" என்று என் காதில் கேட்க முணுமுணுத்தாள். 'இவர்களுக்காவது ஏதோ வெறும் சம்பிரதாயம் மற்றப்படி நம்பிக்கையில்லை' என்று என்னை நானே திருப்திப்படுத்திக் கொண்டேன்.

கால காலமாகச் செய்கிறார்கள் என்றால் இவர்கள் 'ஷியா'விலிருந்து பிரிந்த புதிய 'சன்னி'களா? ஏனெனில் 'சன்னி' முஸ்லிம்கள் வழக்கப்படி பஞ்சாவெல்லாம் கிடையாது. 'சன்னி'யோ' 'ஷியா'வோ யாராக இருந்தாலும் சரி, முட்டாள்தனமான இவர்களின் செயல்களுக்கு உடந்தையாக அரசாங்கமும் சிறுபான்மையினருக்கு உதவுவதாக எண்ணி ஊர்வலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு, மின்சார உதவி, முஹ்ரம் பத்தில் விடுமுறை என்ற சலுகைகளை தருகிறது. இதையெல்லாம் நிறுத்தினால் இப்படி தேவையற்ற ஊர்வலமும், அன்றாட வாழ்க்கைக்கு இடையூறும், வீண் விரயங்களும் தானாக நின்றுவிடும்.

Wednesday, April 04, 2007

தலையெழுத்தை மாற்ற முடியுமா?

எது எதில்தான் பெண்ணுக்குப் பெருமை என்று ஒரு விவஸ்தையில்லாமல் போச்சு. பெண் என்று நான் குறிப்பிடுவது பொதுப்படையாத்தாங்க அப்புறம் என்னைத்தான் குறிப்பிட்டாய் என்று கிளம்பிடாதீங்க தாய்க்குலங்களே.

ஒரு பெண் எப்போதுமே ஒரு ஆணை எல்லாக் காலங்களிலும் சார்ந்தவளாகிறாள். சார்ந்தவளாகிறாளா அல்லது சார்ந்தவளாக்கப்படுகிறாளா என்பது புதிராகவே உள்ளது. இதில் எந்த நாட்டுப் பெண்களும் விதிவிலக்கல்ல. பிறந்தவுடன் தந்தையை, தந்தையில்லாமல் போனால் குடும்பத்தில் உள்ள ஆண்களை அதாவது அண்ணன்- தம்பி / மாமன் -மச்சான் என்று யாராவது, திருமணத்திற்குப் பிறகு கணவனை, கடைசி காலத்தில் பிள்ளையை. அதுவும் ஆண் பிள்ளை இல்லாத, கணவன் இல்லாத பெண்ணாகப் போனால் மருமகனைச் சார்ந்தவள் என்று ஆகிவிடுகிறது.

பெண் பெருமை என்று ஆரம்பித்துவிட்டு எங்கேயோ வந்துவிட்டேன். அதான் பெண்ணைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் இப்படித்தான் எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய் முடியும். பெண்ணுக்குப் பெருமை அவள் பெயருக்கு முன்னால் தந்தையின் முதல் எழுத்தை காணாமலாக்கிவிட்டு திருமணத்திற்குப் பிறகு கணவனின் முதல் எழுத்தைப் போட்டுக் கொள்வதாம். இப்படியும் சில பெண்கள்.

இப்படித்தான் என் அக்கா 'S'-இல் தொடங்கும் என் தந்தையின் முதல் எழுத்தை நீக்கிவிட்டு திருமணத்திற்கு பிறகு கணவனின் பெயரில் 'C.N.' என்று மாற்றிக் கொண்டாள். பாஸ்போர்ட்டில் அவள் பெயர் கணவனின் பெயருக்குப் பிறகுதான் அவள் பெயர் வரும். மருத்துவ பரிசோதனை, ஓட்டுனர் உரிமம் என்று எந்த இடத்திற்குச் சென்றாலும் பாஸ்போர்ட்டில் உள்ள பெயரை வைத்துத்தான் அழைப்பார்கள். அவளை எப்படி அழைப்பார்கள் தெரியுமா? 'காடரலி' என்று 'ஸ்டைலாக' அழைப்பார்கள் காரணம் அவள் கணவனின் பெயர் காதர் அலி நஜிமுதீன் (Cader Aly Nagemudeen). அவளுக்கே தன்னை அழைக்கிறார்கள் என்று தெரியாமல் உட்கார்ந்திருப்பாள். இப்போது அவள் பெயரே மறைந்து கொண்டும், மற்ற பெயரில் விளித்தால்தான் திரும்புவேன் என்ற நிலைக்கும் வந்தாச்சு. அக்கா இப்படியென்றால் அம்மா அதற்கும் மேல். அம்மாவின் பெயரை யாராவது கேட்டால் திருமதி. சாகுல் அமீது என்பார்கள். ஒருநாள் நான் கேட்டேவிட்டேன். ஏன் இப்படி என்று? இவர்கள் உண்மையான காரணம் சொன்னார்களா அல்லது எனக்காக, நான் சண்டைக்கு வருவேன் என்று காரணம் சொன்னார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் சொன்ன காரணம் அவர்கள் பெயர் அவர்களுக்கே பிடிக்கவில்லையாம். அப்படியே அவர்கள் பெயர் சொன்னாலும் உங்க பெயரைச் சொல்லுங்க என்று கேட்பார்கள் ஏனெனில் அம்மாவின் பெயர் 'ஷாஜகான்' மகள் ஒரு ஆணைப் போல் தைரியமானவளாக இருக்கட்டும் என்று தாத்தா வைத்த பெயர் அப்படி.

சில பத்தாம்பசலிகள் கணவனின் பெயரை வாயால் சொல்லி விடுவதும் குற்றம் என்று இன்றைய சூழலிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுவாவது இப்போது கொஞ்சம் மறைந்து வருகிறது என்று திருப்திப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் இன்னாரின் திருமதி என்றும் தந்தை பெயரை நீக்கிக் கணவர் பெயரின் முதல் எழுத்தை 'இன்னிஷியலாக' சூட்டிக் கொள்வது கொஞ்சம் அதிகமாகப் படுகிறது எனக்கு. மொத்த அடையாளத்தையும் மறைத்து, மாற்றிக் கொள்வது அதிகம்தானே? நீ நீயாக இரு, உனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொள் என்று சொல்வதில் தவறிருக்கா என்ன?

தந்தையுடைய முதல் எழுத்தைப் பெயருடன் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் எப்போதிலிருந்து வந்தது, ஏன் வந்தது? மேலோட்டமாகப் பார்த்தால் ஒரே பெயரில் பலரிருந்தால் பெயர் குழப்பம் வராமலிருக்க இப்படி சேர்த்துக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் இது உண்மை காரணமாக இருக்க முடியாது இரட்டைப் பெயர் கொண்டவர்களுக்குமா பெயர் குழப்பம் வரும் அப்படிப் பார்த்தால் தாய் தன் கற்பை நிரூபிக்கவே குழந்தையின் பெயருக்கு தந்தையின் முதல் எழுத்தை வைக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. என் நண்பர் ஒருவர் தன் தாயின் பெயரின் முதல் எழுத்தை 'இனிஷியலாகவும்' தன் தந்தையின் பெயரை பெயருக்குப் பின்னாலும் போட்டுக் கொள்வார் - வ. முரளி சண்முகவேலன் என்று. தாய் தந்தை இருவருமே தன் பெயரில் வைத்துக் கொள்ள இப்படிச் செய்யலாம். அப்படியே நடைமுறையுமாக்கலாம் அல்லது தன் பெயரை மட்டுமே எழுதலாம். ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் இப்படிப்பட்ட அதிசயங்கள் நடப்பது சாத்தியமா?

Tuesday, April 03, 2007

கப்பலுக்குப் போன மச்சான் - வாசிப்பனுபவம்

வெளிநாடு போக எப்படியெல்லாம் அல்லல்பட வேண்டியுள்ளது, எத்தனை சிரமங்களையும் வாழ்வின் கரடுமுரடான பாதைகளையும் கடக்கவிருக்கிறது என்பதைப் புலம்பாமலும், சோகத்தைக் கொட்டிச் சாகடிக்காமலும், தனக்கே உண்டான மெல்லிய நகைச்சுவையோடு வடித்திருக்கிறார் நாகூர் ரூமி. மும்பாய்க்கே அழைத்து சென்று அவருடன் சுற்றச் செய்து கழிப்பறை பிரச்சனையிலிருந்து சாப்பாடு- உறக்கப் பிரச்சனை வரை எல்லாவற்றையும் விவரிக்கிறார்.வெளிநாடு சென்று கஷ்டப்படுகிறவர்களுக்கும் வெளிநாடு செல்ல கஷ்டப்படுகிறவர்களுக்கும் என்று சமர்ப்பணத்துடன் ஆரம்பிக்கும் 'கப்பலுக்குப் போன மச்சான்' என்ற இந்தக் குறுநாவல் சந்தியா பதிப்பக வெளியீடு.

படிப்பவருக்கு 'வெளிநாடு கனவே உனக்கு வேண்டாம்' என்று பயம்காட்டியிருந்தாலும் அதில் உண்மையில்லாமல் இல்லை. எத்தனையோ படித்த இளைஞர்கள் இன்றும் வெளிநாடு செல்ல பெட்டி கட்டிவிட்டு பெட்டி பெட்டியாக இடைத்தரகரிடம் பணமும் கொடுத்து விட்டு ஏமாற்றப்படுவது மறைக்க முடியாத ஜீரணிக்க முடியாத உண்மை]

இது கதையா அல்லது முழுக்க முழுக்க உண்மைச் சம்பவமா அல்லது உண்மைச் சம்பவத்தில் கற்பனை கலந்ததா அல்லது சம்பவங்கள் திணிக்கப்பட்டுள்ள உண்மையா என்று குழம்பவே தேவையில்லை. இது அக்மார்க் உண்மை சம்பவங்கள், உண்மை கதாபாத்திரங்களாகத்தான்
இருக்க வேண்டுமென்றே தோன்றுகிறது.

வெளிநாடு போவதற்கு முன் உள்ள கஷ்ட நஷ்டங்களை மட்டும் விவரிக்காமல் நடுநடுவே சில சுவாரஸ்ய தகவல்களும், தகவல்கள் தகவலாக மட்டும் துண்டாக இல்லாமல் கதையோடு ஒட்டியிருக்கும் இயல்பும் நம்மை அந்த கதைக்குள்ளேயே வைத்திருக்கும் யுக்தியும் ரூமி எழுத்திலிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.

* வயிற்றுக் குணவில்லாதபோது சிறிது இலக்கியச் செவிக்கும் ஈயப்படும்
* எம்மி மிதித்து ஏனென்று கேட்காத வாரணாசியை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது இந்த அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் தமிழ்நாடு! வாரணாசி புனிதஸ்லம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். புனிதப் பயணிகள்! புனித வளையல்கள்! புனித மிதி!

இப்படி மெல்லிய நகைச்சுவையைப் பட்டியலிட்டால் முழு நாவலையும் எழுதவேண்டிவரும். (இதெல்லாம் நகைச்சுவையாக்கும் என்று நக்கலடிக்கும் நகைச்சுவை உணர்வேயில்லாதவர்கள் கேட்டால் நான் பொறுப்பல்ல)

- 'மம்மி ரிடர்ன்ஸ் மாதிரி மச்சான் ரிடர்ன்ஸ்! போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடு என்பார்கள் எங்கள் ஊரில். என்னைப் பொருத்தவரை பூவுமில்லை மணமுமில்லை கொண்டு போன பணமுமில்லை.'

- "பணத்துக்குப் பதிலாக பண்டமாற்று முறை இன்றும் புழக்கத்திலிருந்தால் நிறைய பிரச்சினைகள் தீர்ந்திருக்கும். திறமையை, நேரத்தை, மரியாதையை, அன்பை, உறவுகளை, வயதை, இளமையை என்று எல்லா உன்னதங்களையும் கொடுத்து பணமென்ற இந்த தாளை வாங்க வேண்டியிருந்திருக்காது"

என்று சோகத்தைக் கூட தனது எழுத்தின் திறமையால் லேசாக்கியிருக்கிறார் ரூமி.

தேனீர் கடையில் பாடலை சத்தமாக ஒலிக்கவிட்டிருந்ததை "தனது இருப்பை உணர்த்த மனிதர்களின் செவிப்பறைகளை கற்பழிப்பதுதான் ஒரே வழி என்று அவன் முடிவு செய்துவிட்டான்" என்று அழகாக சத்த மாசு தரும் அவஸ்தையைச் சொல்லியிருக்கிறார்.

சென்னை தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், பூவாசல் தமிழ், நல்ல தமிழ் என்று பல பேச்சு வழக்குகள் தென்படுகிறது. ஆனால் கொஞ்சம் ஆங்கிலத்தை தவிர்க்க வேண்டிய இடத்திலாவது தவிர்த்திருக்கலாம். யதார்த்தத்தை ஒட்டி வர சேர்க்க வேண்டியுள்ளது என்று பலரும் சொல்லும் சப்பைக்கட்டை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்னால். ஆங்கிலமில்லாத பேச்சு யதார்த்ததையே மாற்றுங்களென்றால் எழுத்திலும் கொண்டுவந்து யதார்த்தம் பதார்த்தம் என்கிறார்கள். நாகூர் ரூமி ஆங்கில பேராசிரியர் என்பதால் மன்னித்து விட்டுவிடலாம். நாம் மன்னிக்கும் அளவுக்கு சின்ன ஆசாமி இல்லை அவர், கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். பன்முகத் திறமைக் கொண்ட ரூமியின் படைப்புகள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்றில்லாமல் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை எடுத்துச் சொல்லி வெளிநாடு செல்ல பணம் தந்து ஏமாறுபவர்களையும், வெளிநாடு கனவு கண்டு அதன் பிறகு அங்கு சென்று கஷ்டப்படுபவர்களையும் காப்பாற்றும் நல்லெண்ணத்தோடு எழுதப்பட்டிருக்கிறது. இவர் அனுபவத்தை படிப்பினையாகக் கொண்டு ஏமாறாமல் நீந்தி கரையேறிவிடுவார்களா நம்மவர்கள்? எனக்கு தோன்றியதெல்லாம் வெளிநாடு செல்லும் எல்லோருமே கஷ்டப்படுவதில்லை. சரியான அனுகுமுறையில் விசாரித்து வந்து சேர்வது புத்திசாலித்தனம். நல்ல வேலையில் நல்ல சம்பாத்தியத்தில் குடும்பத்துடன் வாழ்பவர்களை கேட்டுப் பாருங்கள் அந்த மகிழ்வான அனுபவத்தை. இருப்பினும் 'சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு போல வருமா' என்று கேட்டால், அது அவரவர் மனதை பொருத்தது என்று சொல்லி தப்பித்துக் கொள்வேன்.அடடா!! கதையைப் பற்றி சொல்ல வந்து கதை வேறெங்கோ போய்விட்டதல்லவா? சரி, விசயத்துக்கு வரலாம்

"அதிர்ச்சிக்கு மனிதர்கள் பழகிடும்போது அது தன் 'அதிர்ச்சி'யை இழந்துவிடுவதைப் பற்றி நாம் அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை! குண்டு மழைக்குப் பழகிவிட்டனர் ஆப்கன் குழந்தைகள்." என்று நடு நடுவே வெவ்வேறு விதமான சமூக அக்கறை.

கரீம், சலீம் பாஷா, கமால் என்று பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் படிக்கும் போதே அத்தனை கதாபாத்திரங்களுக்கும் உருக்கொடுக்க
முடிகிறது. என்னால் மட்டும்தானா அல்லது படிக்கும் அனைவருக்குமா என்று தெரியவில்லை.

படித்து முடிக்கும் போது எல்லா கதாபாத்திரங்களும் நெருங்கிய நண்பர்களாக சொந்தகளாகவே தோன்றுவதால் ரூமி சவுதி செல்லாமல்
பூவாசலுக்கே திரும்பி செல்வது ஜைனப்புக்கு மட்டும் சந்தோஷமில்லை படிக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் தான்.

நாவலின் கடைசிவரை மொத்த நாவலையும் தலையில் ஓடச்செய்து, கதாபாத்திரங்களின் சுக துக்கங்களில் பங்கு கொண்டு, கடைசியில் கண்களில் நெறிக்கட்டுவது போல் உதிராமல் அலம்பலுடன் நிற்கிறது நீர். நல்ல புதினம் படித்ததும் மனதில் நிற்பதோடு மட்டுமல்லாமல் அது குறித்த சிந்தனையை மனதிற்குள் உலாவரச் செய்து கொண்டேயிருக்கும் - நாகூர் ரூமியின் இந்தப் படைப்பைப் போல.
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி