Tuesday, April 24, 2007

உங்களுக்கு இருக்கா மன உளைச்சல்?


காலம் மாறமாறப் புதுசுப் புதுசா ஏதேதோ கண்டுபிடிக்கிறாங்க. கூடவே நெறய வாயிலேயே நுழையாத நோய்களும் வந்துக்கிட்டே இருக்கு. அப்படின்னா அந்தந்த கால கட்டங்கள்ல இந்த மாதிரியான நோய்களெல்லாம் இல்லாமலா இருந்திருக்கும்? கண்டிப்பா இருந்திருக்கும் ஆனா, ஏன் எதுக்குன்னு ரொம்ப யோசிக்காம, பெருசா எடுத்துக்காம, காரணமே புரியாம போயும் சேர்ந்திருப்பாங்க. இப்பல்லாம் நாம சர்வசாதாரணமா அன்றாடம் கேக்குற ஒரு வார்த்தை என்ன தெரியுமா? 'மனவுளைச்சல்' (depression). பள்ளிக்கூடம் போற குழந்தைக்கு வீட்டுப்பாடத்துல தொடங்கி, வேலைக்குப் போறவங்களோட அன்றாட அலுவல்கள் வரைக்கும் இப்போ நீக்கமில்லாம நிறைஞ்சு நிக்குற வார்த்தை இதுதான். மருத்துவம் விஞ்ஞானமெல்லாம் வளர்றதால மன உளைச்சல்ங்குறது காய்ச்சல், தடுமல் மாதிரி சாதாரணமான நோய்தான்னு கண்டுபுடிச்சிருக்காங்க. என்னடா, குண்டு போடறாளேன்னு பாக்குறீங்களா? இல்ல. நெசமாத்தான் சொல்றேன்.

பாம்புன்னு தாண்டவும் முடியாது பழுதுன்னு மிதிக்கவும் முடியாது அந்த மாதிரிதான் இந்த மன அழுத்த நோயும். இது யாருக்கு வேணும்னாலும் வரலாம். அச்க்ஷய த்ருதி மாதிரி புதுசா இதுவும் இப்போ நம்ம வாழ்க்கைக்குள்ள எதிர்பாராம நுழைஞ்சிடுச்சு. எனக்கில்லன்னு தப்பிக்கவே முடியாது நீங்க. வாழ்க்கைல ஏதாவது ஒரு கட்டத்துல மன அழுத்தத்த நிச்சயமா உணர்ந்திருப்பீங்க. ஆனா ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு காரணங்களிருக்கும் அதுதான் வித்தியாசம். அதுவும் கணிணி தொடர்பான வேலை பார்த்தால் போச்சு. இந்த வம்பு சுலபமா தேடி வரும். நாள் முழுக்க கணினி திரையையே கண்கொட்டாம பார்த்துக்கிட்டிருக்கணும். வீட்டுக்கும் நேரத்திற்கு போக முடியாது. வேலையிருக்கோ இல்லையோ சும்மாவாவது வேலையை கட்டிக்கிட்டு அழுவாங்க. இப்படி அலுவலக நேரத்திற்குப் பிறகு செய்யுற வேலையிலதான் நிறைய தவறுகளும் வரும், அத திருத்தவே அடுத்த இரண்டு நாட்கள் வீணாகும். சிலருக்கு இந்த மன அழுத்த பிரச்சனையால மறதியும் அதிகரிக்கும், ஒரு பொருள எங்கையாவது வச்சிட்டு எங்க வச்சோம்னு தேடி எடுக்கவே நேரவிரயமாகும்.

வேலையில் மட்டுமா இது? வீட்டுக்குப் போனா ஏதாவது பிரச்சனைய உங்க மறுபாதி தொடங்குவாங்க, அதுக்கும் காரணம் இதே வியாதிதான். வீட்டுல இருக்கிற பெண்களும் பாவம் அழுமூஞ்சி 'சீரியல' எவ்வளவு நேரந்தான் பார்க்க முடியும்? (எல்லோரும் வலைப்பூ தொடங்கி எழுத ஆரம்பிச்சாலாவது அதுக்கு ஒரு வடிகாலா அமையும், என்ன நான் சொல்றது) அதனால் கட்டுனவர் எப்ப வருவாருன்னு வழி மேல் விழி வச்சு காத்து கெடப்பாங்க. வந்தவுடனே ஆரம்பிச்சிடுவாங்க பல்லவிய. எனக்கு வீட்டுல ரொம்ப அலுப்பா இருக்கு. காலையிலிருந்து சாயந்திரம் வர தனியாவோ இல்லாட்டி குழந்தையோடோ தொலைக்காட்சியோடோ மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கேன் வெளியில கூட்டிக்கிட்டுப் போங்கன்னு தொடங்கிடுவாங்க. அலுத்துப் போய் வந்தவனுக்கு உடம்புல திராணியில்லன்னு புரிஞ்சிக்கிறது அவங்களுக்கு கஷ்டம்தானே? அதனால அவங்கள ஈடுகட்ட நீங்களும் அழைச்சுட்டுப் போவீங்க, அப்ப உங்க மன அழுத்தம் வேற வழியில வெளிப்படும். உங்கள்ள கொஞ்சமென்ன நிறையப் பேர் அழுத்தத்த புகையா ஊதித்தள்ளுறேன் பேர்வழின்னு இன்னொரு பிரச்சனைய வெல கொடுத்து வாங்குவீங்க. இந்த மன அழுத்தம் உங்களுக்கு கொஞ்சமா இருந்தா தப்பிச்சிக்கலாம் ஆனா கடுமையா மாறாமப் பார்த்துக்கணும். இல்லன்னா அதுவே பல பிரச்சனைய ஏற்படுத்தும்.
என்ன மாதிரி உபாதைன்னு கேட்குறீங்களா? மனவுளைச்சலால இயல்பு வாழ்க்கையே மாறிடும். இல்லற வாழ்வையே சிதைக்கும். இதுல பக்கவிளைவா வேற சிலருக்கு உடல் பருக்கும் இல்லன்னா உடல் மெலியும், இரத்த அழுத்தம் கூடும், இருதய நோய்னு பல கொடச்சல் வரும். இப்ப உங்களுக்கு நமக்கு இந்த அழுத்தம் ரொம்ப இருக்கா கொஞ்சமா இருக்கான்னு கேள்வி வருமே? இந்த அறிகுறி இருக்கான்னு உங்களையேக் கேட்டுப் பாருங்க.

1. தேவையில்லாமல் எரிச்சல்படுறீங்களா?
2. திடீரென்று உற்சாகமாக இருக்குற நீங்க திடீருன்னு மனசு சோர்வாகிடுதா?
3. யாரக் கண்டாலும் தேவையில்லாம கோபம் வருதா?
4. எல்லாம் இருந்தும் வாழ்க்கையில அமைதியே இல்லன்னு தோணுதா?
5. மனசு குழப்பமா இருக்கிறதால எதிலயுமே ஈடுபடமுடியலையா? தீர்மானம் எடுக்க முடியலையா? தடுமாறிப் போறீங்களா?
6. காரணமே இல்லாமல் வாய் விட்டு அழணும் போலருக்கா?
7. அவசியமில்லாம ஒரு குற்றவுணர்ச்சில கூனிக்குறுகி போறீங்களா?
8. மன அழுத்தத்தால சில சமயம் தூக்கம் எல்லா வேலையையும் தள்ளிப் போடச் சொல்லி உங்கள படுக்கச் சொல்லுதா உடம்பு? தூங்குனா பரவாயில்ல ஆனா தொடர்ந்து இரண்டு- மூணு நாட்கள்னு இழுத்தடிச்சா உடனே மருத்துவரை அணுகுங்க.
9. வியாதி முத்திப்போச்சுன்னா தற்கொலை செஞ்சிக்கோன்னு காதில கேட்டுக்கிட்டே இருக்குமாம். செத்துடலாம் அதான் நல்லதுன்னு தோணுமாம்.

இப்படி இந்த சின்ன பிரச்சனையோட விளையாட்டு வகை வகையானது. 1-4 ல சொல்லிருக்கிறது பொதுவா எல்லோருக்கும் இருக்கக் கூடியதுதான் ஆனா அதுவே கடுமையா மாறி வாழ்வையே ஆக்கிரமிச்சிக்காமப் பார்த்துக்கணும், அது ரொம்ப முக்கியம்.

மன அழுத்தம்றது வேலையில சேர்ந்த பிறகுதான் வரும்னு தப்புக் கணக்கு போடாதீங்க, அதற்கு இதுதான் காரணம்னு வரையறையெல்லாம் இல்ல. பொதுவாவே வாழ்க்கைல பெரிய மாற்றம் ஏற்படும் போது வரலாம். அதாவது பிடிக்காத பாடத்தை வற்புறுத்தி படிக்க வைக்கும் போது, புது வேலையில் சேரும் போது, வேலை பிடிக்காமல் போகும் போது, திருமணத்திற்கு தயாரில்லாதப்ப செஞ்சிக்கும் போது, திருமண முறிவு ஏற்படும்போது, பிடிச்சவர இழந்துட்டா, பண கஷ்டம்னு வழக்கமான காரணத்த தவிர

* பரம்பரை வியாதியாக இருக்கலாம்
* பள்ளிப் பருவத்தில் நிறைய வீட்டு வேலையாலக் கூட வரலாம்
* பெத்தவங்க சண்டைய தினம் பார்க்கும் காரணத்தினாலக் கூட ஒட்டிக்கலாம்
* எந்த ஒரு நல்ல நிகழ்ச்சி நடந்தாலும், கொண்டாட்டமிருந்தாலும் இரச்சல் அதிகமா இருக்கும் அப்ப நேரடிலாம்
* அதிகமா ஏதாவது எதிர்பார்த்திட்டிருந்து ஏமாத்தமடஞ்சா ஏற்படலாம்
* வேலைகள் தள்ளிப் போடப்பட்டு அதனால் மலை போல் குவிந்திருக்கும் வேலையை நேரிடும் போது வரலாம்
* அலுவலகத்தில பிரச்சனைன்னு மூச்சிறக்கம் தாங்காம வீட்டுக்கு வந்து அங்கேயும் சண்ட- சச்சரவுன்னு தொடர்ந்தால் பாதிக்கப்படலாம்

இந்த நோய் ஆண்- பெண் பால் வித்தியாசமெல்லாம் பார்க்குறதில்ல. என்னதான் பெண்கள் எதையும் தாங்கும் இதயமாக இருந்தாலும் அவங்க இரத்தத்தில கலந்து உடலுறுப்ப உசுப்பி விடுற உட்சுரப்பில மாத்தம் வந்தாலும் (hormonal changes), மாதவிடாய் மொத்தமா நிற்குற தருவாயிலும் (menopause), குழந்தய பெத்தெடுத்த ஒரு சில மாசத்தில ஆனா ஒரு வருஷத்திற்குள்ள (postpartum depression) இந்த மாதிரி மன அழுத்த பிரச்சனை வர அதிக வாய்ப்பிருக்கு. ரொம்ப மன அழுத்தத்துல இருக்குற பெண்களுக்கு குறை மாசக் குழந்தையோ, மூளை வளர்ச்சிக் குன்றியக் குழந்தையோ பிரசவிக்குற வாய்ப்புகளும் இருக்காம். அதனாலத்தான் கர்பிணிப் பெண்களுக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சுக் கொடுக்குறாங்க, ரொம்ப கொஞ்சுனாலும் அடம்பிடிச்சாலும் கர்பிணிப் பெண்ணுனா கொஞ்சம் சகிச்சிப் போற சலுகை அவங்களுக்கு இருக்கத்தான் செய்யுது.

சரி இந்த பிரச்சனை ஏன் வருதுன்னு யோசிச்சீங்களா? மனவுளைச்சல் வரும் போது நம்ம மூளைல என்னலாம் மாற்றம் வருது தெரியுமா?

'மன' அழுத்தம்னு பேரு வச்சிருந்தாலும் அது மூள சம்பந்தப்பட்டதுதான். மூளையோட செயல்பாடுதானே நம்முடைய இதய துடிப்பு, உணர்வு, உணர்ச்சி எல்லாத்தையும் கட்டுப்படுத்துது. சின்ன வயசுல மூளை பாகத்தையெல்லாம் பத்தி படிச்சது இப்ப கொஞ்சம் ஞாபகத்துக்கு வரலாம் அதாவது மூளையுடைய தகவல் தொடர்பே கோடிக்கணக்கான நீயூரானைக் கொண்டதுதானே. அந்த நீயூரான் மூளையுடை இரசாயனத்துடன் கலக்கும் போதுதான் உடலுக்கும் மூளைக்கும் சரியான தகவல் தொடர்பு நிகழுமாம். அப்போ மூளை இரசாயனம் (brain chemical) எப்பவாவது குறையும் போது இல்லன்னா அதுல ஏத்த இறக்கம் நேரும் போது அல்லது இரசாயனம் சரியா நீயூரான்ல செலுத்த முடியாத போது மனவெழுச்சியிலும், உணர்ச்சியிலும் மாத்தம் வந்து இந்த மனச்சோர்வு, மந்த நிலை, மன அழுத்தம்னு பாதிக்கப்படுறோம். எதுக்கு நீட்டி முழக்குவானேன்? மூளையுல ஏற்படுற இரசாயன மாற்றத்தாலதான் இந்த பிரச்சனை இன்னும் புரியுறா மாதிரி சொல்லனும்னா எப்படி ஒரு தொலைப்பேசியில, செல்பேசியில இணைப்பு ஒழுங்காக் கெடைக்காட்டா நம்ம பேசுறது மத்தவங்களுக்கு கேட்காம 'ஹலோ' ஒன்னுமே கேட்கல 'சிக்னல்' கெடைக்கலன்னு கத்துவாங்களோ அதே மாதிரிதான் இதுவும்.

ஆனா இந்த மாதிரி பிரச்சனை நமக்கு இருக்குதுன்னு புரிஞ்சுக்கிட்டு நமக்கு நாமே உதவிக்கிட்டா கட்டுக்குள்ளக் கொண்டுவந்திடலாம். வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்னு சொல்வாங்க அதனால சிரிப்பு பயிற்சி செய்யலாம், இல்லாட்டி உடற்பயிற்சி எடுத்துக்கலாம் - ரொம்ப கஷ்டம்னு தோணுதா? அப்ப யோகா செய்யுங்க- நேரமில்லன்னு சாக்கா? அப்ப அந்த மாதிரி இருக்கும் போது பிடிச்ச விஷயத்த செய்யுங்க புத்தகம் வாசியுங்க, பாட்டுக் கேளுங்க அல்லது பிடிச்சவங்கள அழைச்சி பேசுங்க (பிடிச்சவங்கள அழைக்கும் போது அவங்க ரொம்ப பரபரப்பா இருந்து உங்களுக்கு நேரம் தராட்டா இன்னும் பிரச்சன அதிகரிக்கும் ஜாக்கிரதை). இந்த மாதிரி பிரச்சனையே வராம இருக்க உங்கள நீங்களே ஆரோக்கியமா வச்சிக்கணும். என்ன செஞ்சும் உங்கள மீறி செயல் நடக்குதா தயங்காம மருத்துவரப் போயுப் பாருங்க மருந்து, சிகிச்சையால குணமடையக் கூடிய விஷயம்தான் இது.

இந்த வியாதியால என்ன ஒரு மன ஆறுதல்னா மூள இருக்குன்னு ஊர்ஜிதப்படுத்திக்கலாம். ரொம்ப பூஞ்சாடிக்காட்டிட்டதால கேவலமான கடியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்ன்னு புரிஞ்சி நடந்துக்கிட்டா சரி. மேலயே சொன்னா மாதிரி பயங்காட்டுறதுக்காக இதையெல்லாம் சொல்லல, தெளிய வைக்கத்தான் இந்த பதிவே.

24 comments:

Naufal MQ said...

//நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்ன்னு புரிஞ்சி நடந்துக்கிட்டா சரி. மேலயே சொன்னா மாதிரி பயங்காட்டுறதுக்காக இதையெல்லாம் சொல்லல, தெளிய வைக்கத்தான் இந்த பதிவே. //

சரிங்க டாக்டர்.

அபி அப்பா said...

//இந்த வியாதியால என்ன ஒரு மன ஆறுதல்னா மூள இருக்குன்னு ஊர்ஜிதப்படுத்திக்கலாம்//

நான் ரொம்ம ரிலாக்ஸானவன், எனக்கே இப்போ நீங்க சொன்னது மாதிரி ஒரு வித டென்ஷன், பட படப்பு இருக்கு ஏன்ன்னு தெரியலை!!

Naufal MQ said...

//நான் ரொம்ம ரிலாக்ஸானவன், எனக்கே இப்போ நீங்க சொன்னது மாதிரி ஒரு வித டென்ஷன், பட படப்பு இருக்கு ஏன்ன்னு தெரியலை!! //

அபிஅப்பா,
அதாவது மேல்மாடி காலியா இருந்தா இதுக்கெல்லாம் கவலைப்பட கூடாதுன்னு சொல்றாங்க. அப்புறமும் நீங்க ஏன் பதட்டப்படனும்??!!!???

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\(பிடிச்சவங்கள அழைக்கும் போது அவங்க ரொம்ப பரபரப்பா இருந்து உங்களுக்கு நேரம் தராட்டா இன்னும் பிரச்சன அதிகரிக்கும் ஜாக்கிரதை).//

:))

ஜெஸிலா உங்க பதிவ படிச்சு முடிச்சதும் எப்போதும் கண் சூரியன உத்துப்பாத்தது மாதிரி ஆகிடுது...font.. backround .... :(

Jazeela said...

//சரிங்க டாக்டர்.// இதக் கேட்கவே குளுக்குளுன்னிருக்கு. ;-) டாக்டராகனும்னு படிக்கும் போது ஆசையே இல்ல ஏன்னா அதுக்கு நெறம மதிப்பெண்ணலாம் எடுக்கணும்ல அதனால. ஆனா ரொம்ப தாமதம அப்படி ஒரு ஆச வந்துச்சு, ம்ஹும்.

தேவையான்ன படபடப்புன்னா பரவாயில்ல ஆனா தேவையில்லாம படபடப்புன்னா கொஞ்சம் 'டென்ஷனா' ஆகத்தான் செய்யணும். படபடப்பு இருக்குன்னு மேல்மாடி காலியில்லன்னு ஊர்ஜிதப்படுத்துறீங்களாக்கும்!

//அப்புறமும் நீங்க ஏன் பதட்டப்படனும்??!!!??? // பாஸ்ட், உங்கள மாதிரி ' ' இருந்துட்டா பதட்டம் தேவையில்லதான் ;-)

Jazeela said...

//ஜெஸிலா உங்க பதிவ படிச்சு முடிச்சதும் எப்போதும் கண் சூரியன உத்துப்பாத்தது மாதிரி ஆகிடுது...font.. backround .... :( // கொஞ்சம் பொறுத்துக்கோங்க முத்து சீக்கிரமே வடிவமைப்பை மாத்திடுறேன்.

Naufal MQ said...

//பாஸ்ட், உங்கள மாதிரி ' ' இருந்துட்டா பதட்டம் தேவையில்லதான் ;-) //

பொதுவாவே 'Null' value இருந்தா டென்சன் குறைவு தான்.

Thamizhan said...

மனமார்ந்த(மூளை நிறைந்த) பாராட்டுக்கள்.ஆம்,மனது மூளையில்தான் இருக்கிறது என்பதை நெஞ்சைத்தொட்டு சொல்லலாம்.
நிறைய பேர் மூளை என்று ஒன்று மிகவும் கடினமாக உழைப்பதையே நினைப்பதில்லை.இதயம் போல,சிறு நீரகம் போல மூளை மிகவும் கடினமாக உழைக்கிறது,ஆழ்ந்த கனவில்லாத தூக்கத்தைத் தவிர.
மூளைக்கு 20% ரத்தம் செல்கிறது.மூளைக்கு சாப்பாடு ரத்தத்திலிருந்து செல்லும் சர்க்கரை(குளுக்கோசு)தான்.அதுதான் பசி மயக்கம்.
நாம் நமக்கு உள்ளதை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பது,அடுத்தவர்களிடம் இருப்பதைப் பார்த்து ஏங்காமல்,மற்றவர்கட்கு நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகள் செய்வது,மனந்திறந்து நம்பிக்கை உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்வது போன்றவை நல்லது.
Resentment என்ற மன உட்புகைச்சல் மன நல்த்திற்கும் வாழ்க்கைகுமே பெரிய எதிரி.

ப்ரசன்னா said...

நல்லா எழுதியிருக்கீங்க...எல்லோரும் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.

என்னை பொருத்தவரை, யோகா, தியானம், இசை இது மூணும் ரிலாக்ஸ் பண்ண சிறந்த வழி.

Jazeela said...

//பொதுவாவே 'Null' value இருந்தா டென்சன் குறைவு தான். // nullன்னால்லே dull-தான்.

//மனமார்ந்த(மூளை நிறைந்த) பாராட்டுக்கள்.// நன்றி தமிழன். எந்த ஊரு தமிழன் நீங்க? எனக்கு ரொம்ப பரீச்சயப்பட்ட தமிழன் மாதிரி தெரியுதே ;-)

//நல்லா எழுதியிருக்கீங்க...எல்லோரும் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும். // மிக்க நன்றி பிரசன்னா.

மங்கை said...

நல்ல பயனுள்ள பதிவ, சீரியஸான மேட்டரும் கூட. ஆனா அத ரொமப் லைட்டா நல்லா கொடுத்து இருக்கீங்க..

(இதுக்கே அபி அப்பாக்கு ஒரு மாதிரி இருக்காம்.)

Ayyanar Viswanath said...

உண்மையிலே சீரியஸ் பதிவுதான் :)

மன அழுத்தம் கொஞ்சம் சிக்கலான விடயம்தான்.எளிமையான விளக்கமும் அத விட எளிமையான தீர்வு அனுகுமுறையும் நன்று.
கணினி துறையில இயங்குற பெரும்பாலான இளைய தலைமுறையினருக்கு இந்த பிரச்சினை இருக்கு.எல்லாரும் வடிகால் அல்லது ஒரு மாற்றா தேடிப்போறது நீங்க சொன்னா மாதிரி விலை கொடுத்து வாங்குற மாற்றிகளைத்தான்.

என்னைக் கேட்டா நம்மோட ஒட்டுமொத்த வாழ்வு நோக்கிய அனுகுமுறையும் வெளிப்படையா இருக்கும்படியா மாத்திக்கிட்டோம்னா இந்த சிக்கல்களிலிருந்து விடுபடலாம். வெளிப்படைனா .. கோபம் துக்கம்,சந்தோஷம் இன்னபிற உள்தோன்ற எல்லா உணர்வுகளையும் அடுத்தவர்களை பாதிக்காத அளவிற்க்கு வெளிய கொட்டிடனும் ..:)

Jazeela said...

//நல்ல பயனுள்ள பதிவ, சீரியஸான மேட்டரும் கூட. ஆனா அத ரொமப் லைட்டா நல்லா கொடுத்து இருக்கீங்க.. // நன்றி மங்கை. முதலில் ரொம்ப சீரியஸாதான் எழுதியிருந்தேன். என் நண்பர் ஒருவர் படித்துவிட்டு என்னது பாட்டி மாதிரி எழுதிருக்க ரொம்ப அலுப்பா இருக்குன்னு சொன்னார். அதன் பிறகே ரொம்ப லேசாக வரும்படி மாற்றி எழுதினேன். பாராட்டுகள் & நன்றி என் நண்பருக்குதான்.

//ஒரு மாற்றா தேடிப்போறது நீங்க சொன்னா மாதிரி விலை கொடுத்து வாங்குற மாற்றிகளைத்தான்.// அதுல நீங்களும் சேர்த்திப் போல தெரியுது?

//கோபம் துக்கம்,சந்தோஷம் இன்னபிற உள்தோன்ற எல்லா உணர்வுகளையும் அடுத்தவர்களை பாதிக்காத அளவிற்க்கு வெளிய கொட்டிடனும் ..:) // ஓஹோ இந்த நெனப்புலதான் நம்ம அனானிகள் திரிகிறார்கள் போலருக்கு ;-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாதி பகுதியை வெள்ளையா மாத்திட்டீங்களே..இப்ப கொஞ்சம் பரவால்ல படிக்க்க முடியுது.

Jazeela said...

//பாதி பகுதியை வெள்ளையா மாத்திட்டீங்களே..இப்ப கொஞ்சம் பரவால்ல படிக்க்க முடியுது. // பரவாயில்லையா? ;-(

பலதரப்பட்டவர்கள் கண் வலிக்கிறது, படிக்க சிரமமாக இருக்கிறது என்ற புகார் தந்தமையால்

கேவிஆரின்
தயவால் 'ஜெஸிலாவின் கிறுக்கல்கள்' புது பொலிவுடன் உங்களுக்காக என்ற விளம்பரத்துடன் ஆரம்பிக்க இருந்தேன். ;-) இப்படி சொல்லிட்டீங்களே!

Jazeela said...

ஏப்ரலில் எழுதிய பதிவு இது டெல்ஃபின். ஆனால் உங்கள் பாராட்டு என் பதிவுக்கு வலு சேர்க்கிறது. மிக்க நன்றி.

அன்பேசிவம் said...

என்னுள் இருக்கும் பாரத்தை குறைக்க ஒரு நல்ல நண்பனை தேடுகிறேன்........... மிகுந்த மன வருத்தத்துடன் இப்பதிவை எழுதிகிறேன்.......... ஓரு நல்ல நண்பனை தேடும் ஆவலில்......

Thekkikattan|தெகா said...

அட சூப்பர்ப்பா ஆராய்ந்து நல்லாவே எழுதியிருக்கீங்க, ஜெஸிலா. ரொம்ப பயணுள்ள பதிவு. நன்றி!

Jazeela said...

//என்னுள் இருக்கும் பாரத்தை குறைக்க ஒரு நல்ல நண்பனை தேடுகிறேன்........... மிகுந்த மன வருத்தத்துடன் இப்பதிவை எழுதிகிறேன்.......... ஓரு நல்ல நண்பனை தேடும் ஆவலில்......// அன்பேசிவம், இந்த வலையுலகில் என்னைப் போன்ற எத்தனையோ பேர் இருக்க, மிகுந்த மன வருத்தம் எதற்கு? சில சமயங்களில் அப்படித்தான் தோன்றும், எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாதது போல். உங்களுக்கு முதலில் நீங்க ஒரு நல்ல நண்பனாக இருக்க முயற்சியுங்கள். ஆன்மீகத்தில் நண்பிக்கையுண்டா? அதையும் முயற்சிக்கலாம்.

தெகா, ரொம்ப நன்றிங்கோ.

துளசி கோபால் said...

நல்ல பதிவு ஜெஸிலா.

எப்படியோ இதைக் கோட்டை விட்டுருக்கேன்(-:

இப்ப நம்ம டெல்ஃபீன் பதிவு வழியா வந்தேன்ப்பா.

லேட்டா வந்தாலும்............... வந்துட்டேன்:-)))))

Jazeela said...

எல்லோருமே அப்படித்தான் துளசி, வரும் எல்லா பதிவுகளையும் படிக்க முடியாமல், சில பதிவுகளை கோட்டைவிடத்தான் செய்கிறோம். நன்றி துளசி. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டுதான் எப்படின்னு கேட்கிறீங்களா - இப்ப பின்னூட்டத்தில் லேட்டஸ்டா போய் உட்காருமே அதைச் சொன்னேன் ;-)

Chandravathanaa said...

பயனுள்ள பதிவு

லொடுக்கு said...

இந்த படம் இன்னும் ஓடுதா? சந்திரமுகிக்கு ஆபத்து!!!

Jazeela said...

நன்றி சந்திரவதனா.

லொடுக்கு, இந்த படத்தை எப்ப வேணும்னாலும் பார்க்கலாம்ல ;-)

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி