Monday, May 11, 2020

நடிகர் கமலஹாசன் பிறந்தநாள்

தாமதமாகச் சென்றதால் ஏதாவது உங்களுக்குக் கிடைக்க வேண்டியது எதுவும் கிடைக்காமல் போயிருக்கிறதா?
எனக்கு அப்படி நிகழ்ந்துள்ளது.

அப்போது நான் எட்டாம் வகுப்பில் இருந்தேன். நடிகர் கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி நடந்தது. எங்கள் பள்ளியிலிருந்தும் கலந்து கொண்டோம். நான் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டேன், என்னைப் போலவே தோழி சாய்ராவும் அதே போட்டியில் எங்கள் பள்ளியிலிருந்து, என் வகுப்பிலிருந்தே கலந்து கொண்டாள். போட்டியின் தலைப்பு 'கண் தானம்'. வரைந்து முடித்த பிறகு மற்றவர்களெல்லாம் என்ன வரைந்திருக்கிறார்கள் என்று பார்வையிட்டேன்.

நிறைய அழகான ஓவியங்கள் இருந்தன. 'சொக்கா எனக்கில்ல' என்று நினைத்தபடியே வந்துவிட்டேன்.

சில தினங்களுக்குப் பிறகு நான் பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றபோது என் வீட்டுக்கு கமலஹாசன் நற்பணி மன்றத்திலிருந்து வந்து ஒரு 'போஸ்ட் கார்ட்' தந்து, நான் ஓவியப் போட்டியில் முதல் பரிசு வென்றதாகச் சொல்லி, பல பள்ளிகள் கலந்து கொண்ட அந்தப் போட்டியில் எனக்கு முதல் பரிசு என்று சொல்லியதோடு, என் தந்தையிடம் ஏன் நான் வரைந்த ஓவியத்தை திரு. கமலஹாசன் தேர்ந்தெடுத்தார் என்பது வரை சொல்லிச் சென்றுள்ளனர். அந்தப் 'போஸ்ட் கார்டில்" "நீங்கள் போட்டியில் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி. நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் வரும், வந்து சேருங்கள்" என்பதாக இருந்தது.

மறுநாள் பள்ளியில் அதைக் காட்டி காலையில் கூடும் சபையில் கைத்தட்டுக் கிடைக்கப் போகிறது என்று மிகுந்த உற்சாகத்துடன் சென்றேன். வழக்கம்போல் தாமதமாகச் சென்று விட்டதால் தனியாக நிற்க வைத்துவிட்டார்கள். அந்த அட்டையைக் காட்டி இது பற்றிச் சொல்ல வேண்டுமென்று என்னை வழிமறித்த ஆசிரியரிடம் காட்டினேன். 'அதெல்லாம் வேண்டாம் இங்கேயே நில்லு' என்று தள்ளினார். சபையில் யாருக்கோ கைத்தட்டல் கிடைப்பது தெரிந்து உற்றுநோக்கிக் கேட்டால் சாய்ராவும் அதே அட்டையைக் காட்டி கைத்தட்டல் வாங்கிக் கொண்டிருந்தாள். வெற்றி பெற்றதை அங்கீகரிக்க எனக்குக் கிடைக்க வேண்டிய கைத்தட்டு, ஆனால் அவளுக்குத் தபால் மூலம் வெறும் பங்குபெற்றதற்கான பாராட்டு அட்டைக்காகக் கைத்தட்டு. 'சொக்கா எனக்கில்ல' என்று நினைத்தபடியே விட்டுவிட்டேன்.

அதன் பிறகு இது பற்றி நான் யாரிடமும் சொல்லாமல் அட்டையைப் பையில் வைத்துக் கொண்டேன். முறையான அழைப்பிதழ் வரும்போது இவர்களுக்கு உண்மை புரியட்டும் என்று நினைத்தேன். நாள் நெருங்கியது, அழைப்பிதழ் வரவில்லை. அந்த நிகழ்வும் நடக்கவில்லை. காரணம் நடிகர் கமலஹாசனின் தந்தை இறந்துவிட்டதால் அவருடைய பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு ரத்தானது. கமல் தந்தை இறந்ததற்கு அவரைவிட நான் மிகுந்த சோகத்தில் இருந்தேன்.

சில வாரங்கள் கழித்துத் தலைமையாசிரியர் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. 'ஏன் எனக்கு அழைப்பு? நான் எந்தத் தவறும் செய்யவில்லையே' என்று நினைத்தபடி தலைமையாசிரியரைச் சென்று சந்தித்தேன். அவர் பெயர் ஃபாத்திமா. அந்தத் தலைமையாசிரியருடன் ஒருவர் இருந்தார். என்னைப் பார்த்து புன்னகைத்தார், வாழ்த்தினார். ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றதைச் சொல்லி, மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வைப் பற்றிச் சொல்லி அதற்கான அழைப்பிதழ் தந்து, என்னுடன் மற்றுமொருவரும் நிகழ்வில் கலந்து கொள்ளலாம் என்றார் கமலஹாசன் நற்பணி மன்றத்தைச் சேர்ந்தவர். என் தலைமையாசிரியரின் முகத்தில் எந்த மகிழ்ச்சியும் இல்லை. இத்தனை பள்ளிகளுக்கு நடுவே தன் பள்ளியிலிருந்து ஒருவர் வெற்றி பெற்றதில் அவருக்கு மகிழ்ச்சியில்லை. அந்த அலுவலகத்தில் சாய்ராவின் மாமாவும் உட்கார்ந்திருந்தார், அவர் பள்ளி தொடர்பான பணியிலிருந்தார்.

நற்பணி மன்றத்தினர் சென்ற பிறகு தலைமையாசிரியையிடம் சாய்ராவின் மாமா "இந்தப் போட்டியில்தானே சாய்ரா வெற்றிப் பெற்றதாகச் சொன்னாள், எப்படி இப்போது இவள் பெயர் அழைப்பிதழில்?" என்பதாக உருதுவில் கேட்டார். எனக்கு மொழி விளங்காது என்று நினைத்து என் முன்னிலையில் தலைமையாசிரியரும் "ஆமாம், இவள் தந்தை பத்திரிகையில் இருப்பதால் ஏதாவது சொல்லி பரிசு வாங்கி இருப்பார்" என்பதாக விஷத்தைக் கக்கினார். எனக்கு அது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

இந்த ஃபாத்திமா என்பவர் தலைமையாசிரியர் ஆகும் வரை பள்ளி நிர்வாகத்தில் எனக்கு எந்தச் சிக்கலும், பாகுபாடும் தெரியவில்லை. ஆனால் இவர் வந்த பிறகு, அதுவும் இவர் தலைமைப் பொறுப்புக்கு முன்பே துணைத் தலைமையில் இருந்தபோதே என்னைத் 'தமிழ்' என்று ஒதுக்குவார். எந்தப் போட்டியில் பெயர் கொடுத்தாலும் எனக்கு வாய்ப்பு தர மறுப்பார். என் ஆசிரியை எனக்காகப் பேசி வற்புறுத்தினால் மட்டுமே போனால் போகிறது என்ற விதத்தில் வாய்ப்பளிக்கப்படும். அது உருதுப் பள்ளி என்பதால், தமிழ் பேசும் என்னைப் போன்றவர்களை வேறு விதமாகவே பார்ப்பார்.

அதன் பிறகு விழாவுக்கு ஆசிரியை யாரும் உடன் வர விருப்பம் தெரிவிக்காததால் அதே தலைமையாசிரியருக்குப் பயந்து கொண்டுதான், நான் என் தாயாருடன் நிகழ்ச்சிக்குச் சென்றேன். நிகழ்வில் எனக்குப் பரிசளிக்கப்பட்ட இந்தப் புகைப்படம் செய்தியுடன் எல்லாத் தமிழ்ப் பத்திரிகைகளிலும் வந்தது. சில ஆசிரியைகளுக்கு மட்டும் காட்டினேன்,

மற்றவர்களுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாததால். பத்மாவதி தமிழ் ஆசிரியர் மற்றும் மீஹால் ஆங்கில ஆசிரியர் இருவரும் என்னைப் பாராட்டி மகிழ்ந்தனர் 'நம் பள்ளிக்கூடம் மேல்நிலைப் பள்ளி என்றும் தெரியவில்லை, பத்திரிகையில் உயர்நிலைப் பள்ளி என்று செய்தியில் இருக்கிறது' என்று மட்டும் குறிப்பிட்டார்.

நான் சென்னையில் இருந்த வரை இந்த சம்பவத்தைத் தவிர வேறு எந்தப் பாகுபாடுமில்லாமல் மிகவும் பாதுகாப்பாகவே வளர்ந்துவிட்டேன். இந்தப் பாகுபாட்டையும் என்னுடன் படித்த மற்ற தமிழ் பிள்ளைகள் உணர்ந்தே இருக்க மாட்டார்கள். காரணம் வெளி பள்ளிகளுடனான போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று வரும்போது மட்டுமே இந்தப் பிரச்சனை எழும்.

ஆனால் அமீரகம் வந்த பிறகுதான் சாதி, மத, மொழியால் நாம் பிளவுபட்டிருப்பதே எனக்கு புலப்பட்டது. சமீபத்தில் பஞ்சகனி எனும் சுற்றுலா தளத்திற்கு சென்றிந்த போது மத அடையாளங்களால் பல இடங்களில் வித்தியாசமான பார்வைக்கு ஆளாக்கப்பட்டோம். கோவில் போன்ற சுற்றலா தளத்திற்கு சென்றிந்தபோது அவர்களின் பார்வையால் ஒரு அச்ச உணர்வே ஏற்பட்டு வேண்டாம் திரும்பி சென்று விடலாம் என்று பயந்து திரும்பிய இடங்களும் உண்டு. இப்படியான நிலை தமிழ்நாட்டில் வராமல் இருக்க வேண்டும்.

இப்போது வன்மத்தை முகநூலில் கொட்டும் நபர்களைக் காணும்போது மிகுந்த ஆச்சர்யமாக உள்ளது, 'இவர்கள் வளரும்போது இப்படியான பாகுபாடு எண்ணத்துடனே வளர்வார்களா? அல்லது அப்படி சொல்லித்தான் வளர்க்கப்படுவார்களா?' என்று விளங்கவில்லை. ஆனால் நான் 'பீட்டர்ஸ் காலனி'யில் மாற்றுமதச் சகோதரர்கள் என்று எந்த வேறுபாடுமில்லாமல், (இப்பவும் 'மாற்றுமத' என்று எழுதும்போதும் எனக்கு வித்தியாசமாகதான் தெரிகிறது.) அப்படியான எந்தவித பிளவுமில்லாமல் வேறுபாடுமில்லாமல் மிக நெருக்கமாகவே அண்டை அயலாரோடு பழகினோம்.

எப்போது சாதி மதப் பிரிவினை ஏற்பட்டது? ஏற்கெனவே இருந்ததா அல்லது நான் தான் அது குறித்துத் தெரியாமலேயே வளர்ந்திருக்கிறேனோ? அல்லது நகரத்தில் இல்லை. கிராமங்களில் தான் பிரிவினை அதிகமாக இருந்து அதன்பின் பரவியதா?

இப்போது எதற்காக இந்த மலரும் நினைவுகள் என்று நீங்கள் நினைக்கலாம், கொரோனா நேரத்தில் பழைய புகைப்படங்களை எடுத்துக் குழந்தைகளுடன் அதன் பின்னணி பற்றிச் சொல்லும்போது எழுந்த கேள்விகளின் தொகுப்பே இந்த நினைவலை.

No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி