Tuesday, August 18, 2020

குஞ்சன் சக்சேனா - உயரப் பறக்கத் துடிப்பவள்

 என் தோழி ஒருத்தி சின்ன வயதிலிருந்தே 'மாடலிங்' செய்ய வேண்டுமென்று கனவு கண்டு அதற்கேற்ப தன் உடலைத் தயார் செய்து கொண்டு, வேலைக்குச் செல்ல ஆயுத்தமாகும்போது அவள் சந்தித்த பல துன்பமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாள். அதில் அதி முக்கியமானது அவள் நாட்டில் விளம்பர நிறுவனங்கள் 'மாடலிங்' செய்பவர்களை விபச்சாரிகளாகப் பார்ப்பதையும், சாடையாகவும் வெளிப்படையாகவும் 'நீ மாடலிங் செய்பவள்தானே?' என்று அதனைத் தரைகுறைவாகப் பேசுவதையும், உடனுக்குடன் உடை மாற்ற வேண்டிய இடங்களில் 'உங்களுக்கெல்லாம் மறைவான இடம் எதற்கு? அப்படியே நின்று மாற்றிவிட்டுக் கிளம்பு' என்று அசிங்கமாக நடத்தியதையும் சொல்லி வேதனைப்பட்டிருக்கிறாள்.

போதுமென்ற அளவிற்குச் சகித்துக் கொண்டு, அவள் நாட்டிலிருந்து துபாய்க்கு வந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கிய போது 'மொத்தமாக விலை போய் விட்டாயா' என்று கேலி பேசிச் சிரித்தவர்கள் நம் நாட்டவர்கள் அல்ல, அவள் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஐரோப்பியர்கள். பெண் அடக்குமுறை, கீழ்மை, பேதம் எல்லா நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது.
நேற்று 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் பார்க்கும்போது ஏனோ எனக்கு என் தோழியைப் பற்றிய இந்த விஷயம் நினைவுக்கு வந்தது. அதே மாதிரியான நிலை நம் நாட்டுப் பெண் விமானிக்கு வேறு விதமாக நிகழ்ந்துள்ளது. இந்தப் படம் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். இன்றைய தேதியில் 1625 பெண் போர் விமானிகள் இருந்தாலும், கார்கிலில் 1999 ஆம் ஆண்டு ஒரே ஒரு பெண் விமானியாக இருந்தவர் கடந்து வந்த கசப்பான சம்பவங்களையும், நம் நாட்டு ஆடவர்களின் உள்ளுணர்வையும், அடக்குமுறையின் பிரதிபலிப்பையும் மிக அழகாகப் பதிவு செய்துள்ளது இந்தப் படம்.
'நான் பைலெட் ஆனால் என்னைப் பைலட் என்றுதான் பார்ப்பார்களே தவிரப் பெண்ணென்று பிரித்துப் பார்க்க மாட்டார்கள் என்று நம்பினேன். இங்கு மல்யுத்தம் செய்துதான் என் திறனை வெளிப்படுத்த வேண்டுமா? நான் விமானத்தை ஓட்ட வந்துள்ளேன், விமானத்தைக் கையில் தூக்க அல்ல. உங்களுக்கெல்லாம் பயம், நான் உயர் அதிகாரியாகிவிட்டால் எல்லோரும் எனக்குச் சல்யூட் செய்ய வேண்டுமென்ற பயம், அதுதானே? அதனால் உங்கள் மரியாதை சத்தியமாகக் குறைந்துவிடாது. உங்கள் குறுகிய எண்ணம், உங்கள் பயம், உங்கள் கூத்து கும்மாளம், ஆணென்ற உங்கள் பொய்யான பெருமை இவை மட்டுமே உங்கள் அதிகாரம்' என்ற வசனம் மட்டுமே எனக்குப் போதுமானதாக இருந்தது இந்தப் படம் எனக்குப் பிடித்துப் போக.

விமானியாகவும், அதிகாரியாகவும், காரியதர்சியாகவும் எந்த வேலையைச் செய்தாலும் பெண்ணை இந்தச் சமுதாயம் பார்க்கும், பார்வை கேட்கும் கேள்விகள், நடத்தும் விதம்... சொல்லி மாளாது.
இவைகளையெல்லாம் புறங்கையால் தள்ளிவிட்டு நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும், யாருக்கும் அஞ்சாத மனதோடும் இருப்பவர்களுக்கு மட்டுமே இங்கு வெற்றி நிற்சயம்.
அவசியம் இந்தப் படத்தைப் பாருங்கள். மகளை நேசிப்பவர்களுக்கு, பெண்ணை மதிப்பவர்களுக்குப் பிடிக்கும்.

No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி