Saturday, January 09, 2021

நாளைய பிணங்களின் அழுகை

என்னுடைய தந்தையார் இறந்து அவர்களுடைய சடலத்தைக் கிடத்தியிருந்த போது, இறுதியாக அவருடைய முகத்தைப் பார்த்து நெற்றியில் முத்தமிட உச்சி முகர உரியவர்கள் வரலாம் என்ற போதுதான் நான் கடைசியாக வாப்பாவை எப்போது முத்தமிட்டேன் என்று நினைத்து, அப்படி நிகழ்ந்ததே இல்லை என்று எண்ணியபோது தாங்க முடியாத அழுகை முட்டிக் கொண்டு வந்தது, கண்கள் நிறைந்தது. கண்ணீர் துளி அவர் மீது படக் கூடாது அதனால் அழுபவர்கள் முத்தமிட முடியாது என்றதும் வந்த அழுகை நின்றது. இறுதி முத்தமிட்டு விடையளித்தோம்.

நான் வாப்பா என்றழைக்கும் அப்துல் ஜப்பார் அவர்கள் துபாயிலிருந்து தாயகம் திரும்பும்போது விமான நிலையத்தில் "இனி நான் எங்கிருந்து துபாய் வரப் போகிறேன்" என்ற போது, ”ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று சொன்னாலும் உள்ளுக்குள் ஒரு பயமிருந்தது. அதே தவறு மற்றுமொரு முறை நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ விமான நிலையத்தில் பிரியாவிடையளித்து உச்சி முகர்ந்தேன், வாப்பாவும் அனிச்சையாக என் உச்சி முகர்ந்தார்கள். உச்சி முகர்வதை எப்போதும் நான் பெரியவர்களின் ஆசீர்வாதமாகவே உணர்கிறேன்.
நேற்றைய நினைவேந்தல் நிகழ்வில் கவிஞர் யுகபாரதி அவர்கள் வாப்பாவை கட்டித் தழுவ ஆசைப்பட்டு அது நிகழலாமலே போனது பற்றிச் சொன்ன போது இந்த இரு சம்பவங்கள் நினைவில் வந்து சென்றது. நினைத்த மாத்திரத்தில் எல்லாமே செய்துவிடுவது நலம்.
'நேற்றைய சடலத்திற்கு முன் நாளைய பிணங்களின் அழுகை' என்று எங்கோ வாசித்ததுதான் இப்போது நினைவுக்கு வருகிறது!!



No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி