Monday, June 22, 2020

வாப்பாவின் எழுத்து

வாப்பாவிற்குக் கொடுக்க வேண்டிய தந்தையர் தின வாழ்த்து மடல் கையெழுத்திட்டு கொடுக்கப்படாமலேயே போனதை இன்று நினைவுப்படுத்தி வருத்தப்பட்டாள் அக்கா. வாப்பா இருக்கும் காலத்தில் துபாய்க்கு வந்திருக்கும்போது அதைச் செய்திருக்கலாம் இதைச் செய்திருக்கலாம் என்று இன்று தோன்றி பயனில்லைதான். அவர் இங்கு வந்திருந்தபோது நண்பர் திருச்சி சையது என் வாப்பாவை சந்தித்து அவருடைய அனுபவங்களைக் குறிப்புகளாக எழுதி தர இயலுமா என்று கேட்டார். வாப்பா பத்திரிகையில் இருந்த காலத்திலேயே வேலை சம்பந்தமான எந்த ஒரு ரகசியத்தையும் யாருடனும், ஏன் ம்மாவுடனும் கூடச் சொல்ல மாட்டார் ரகசியம் காப்பார். தன் முதலாளியின் மகன் வேறு சாதி பெண்ணை மனம் முடித்த விஷயம் வேறு ஒருவர் மூலம் ம்மாவுக்குத் தெரிய வர அதைப் பற்றிக் கேட்ட போது வாப்பா சொன்னதெல்லாம் “தெரிஞ்சி நீ என்ன செய்யப் போற”என்பதே. அவ்வளவு முதலாளி மற்றும் தொழில் விசுவாசி எனலாம்.

திருச்சி சையது குறிப்புகள் கேட்டதை நானும் வலியுறுத்தவே எனக்கு ஒரு சம்பவத்தை நினைவுக்கூர்ந்து கூறினார்கள்:-

காமராஜரும் நேருவும் கலந்து கொண்ட விழாவில் படம் எடுத்துக் கொண்டிருந்த போது மேடைக்குக் கீழே இறங்கி வந்து பின்னால் நின்று பேசி கொண்டிருந்ததைக் கவனித்து வாப்பா அங்குச் சென்றபோது காமராஜர் நேருவுக்குச் சிகரெட் பற்ற வைக்க அதனை அழகிய காட்சியாகப் பார்த்தவர், படம் எடுத்துவிட்டார். இதனைக் கவனித்த காமராஜர் வாப்பாவிடம் “ஹமீது பாய் அந்தப் படம் வெளியில் வராம பார்த்துகோங்க” என்று தயவாகச் சொல்லவே, வாப்பா அதனை நெகடிவாகக் கூட மாற்றவில்லை. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை அவருடைய மகளாக நான் பகிர்கிறேன் என்றால் இப்படியான அரசியல்வாதிகள் இன்றில்லை என்பதைச் சொல்ல இந்தச் சம்பவம் தேவைப்படுவதால் மட்டுமே.

எம்.ஜி.ஆருடனான வேறு நிகழ்வை வாப்பா கைப்பட எழுதியதை இங்கு பகிர்ந்துள்ளேன்.





No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி