'தாரே ஜமீன் பர்' படம் பார்த்த பாதிப்பிலிருந்து இன்னும் மீள முடியாமலிருக்கிறேன். அய்யனார், குசும்பர், பெனாத்தலார், ஆசிப் என்று பலரும் எழுதிவிட்ட பிறகும், அந்த படத்தை பற்றி எழுதுவதற்கு நிறைய இருந்தாலும் விமர்சிக்க வார்த்தையில்லை என்றுதான் சொல்ல வேண்டும், குறிப்பாக தர்ஷீலின் நடிப்பு குறித்து சொல்லும் போது. என்னைக் கேட்டால் கண்டிப்பாக தர்ஷீல் நடிக்கவில்லை அந்த கதாபார்த்திரமாகவே மாறியிருக்கிறார் என்றுதான் சொல்லுவேன். கான்களையும் கப்பூர்களையும் பச்சன்களையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு சுட்டித்தனம், பிடிவாதம், மகிழ்ச்சி, பயம், அழுகை, தயக்கம், ஏக்கம், கோபம், வெறுமை என்று எல்லாவித உணர்வுகளையும் கண்களிலேயே காட்டிவிடும் அசாத்திய நடிப்பு திறமைப் படைத்தவர். கடைசிக் காட்சியில் ஆசிரியரை மிஞ்சிய மாணவனாக மட்டுமல்ல நடிப்பிலும் இயக்குனரையே மிஞ்சிவிட்ட குட்டி கதாநாயகன் - நிஜ நாயகன் தர்ஷீல். படத்தை பார்க்கும் போது என்னுடைய தம்பிதான் என் நினைவுக்கு வந்தான். அப்படி இருப்பதற்கு Dyslexia என்று பெயரென்றெல்லாம் தெரியாமலேயே இருந்து விட்டோம். ஒரு நல்ல ஆசிரியையாக இராம் ஷங்கர் நிக்கும்பாக அவனை மாற்றியெடுத்த பெருமை என் அக்காவையே சேரும்.
ஆமீர் கானின் தயாரிப்பு இயக்கமாக இருந்தாலும் பாராட்டுகள் போய் சேர வேண்டிய இடம் அதன் மூலக் காரணமான அமுல் குப்த்தை. தர்ஷீலை நமக்கு கண்டுபிடித்து தந்த பெருமையும் இவரையே சாரும் என்று பெருந்தன்மையோடு சொல்லியிருக்கிறார் ஆமீர் கான். படத்தில் பாடல் காட்சிகள் வெறும் காட்சிகளாக இல்லாமல் நம் மனதை வாட்டியெடுக்கும் விந்தையாகிறது. விந்தையின் வித்வான்கள் வித்தகர்கள் இசையமைப்பாளர் ஷங்கர் எஹ்சான் ராய்யும் பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரரான பிரசுன் ஜோஷியும். படத்தின் முதல் பாடலான 'தாரே ஜமீன் பர்' மெல்லிய இசையில் ஓங்கி ஒலிக்கும் சங்கர் மகாதேவன் குரல் முதலில் கேட்கும் போது அத்தனை வலுவாக சென்றடையவில்லை, காரணம் காட்சியில் காட்டப்படும் குழந்தைகளின் முகங்களும், அசைவுகளும், சேஷ்ட்டைகளும் இரசிக்க வைத்ததோடு, படத்தை எதிர்நோக்கி உட்கார்ந்திருந்ததாலும் கூட இருக்கலாம். ஆனால் படம் பார்த்து முடித்த பிறகு மறுபடியும் ஒலிநாடாவில் கேட்கும் போது உலுக்கியெடுக்கவே செய்கிறது பாடலின் வரிகள்.
Dekho inhein yeh hain oss ki boodein
Patto ki good mein aasaman se khude
Angdai le phir karwat badal kar
Nazauk se moti hasde phishal kar
Kho na jaye yehh
Taaare Zaaame per
'வானத்திலிருந்து இலைகளின் மடியில் குதித்த பனித்துளிகள், சோம்பல் முறித்தெழுந்து துயில் கலையும் மிருதுவான முத்துச் சிரிப்பைக் கொண்ட தரைவாழ் நட்சத்திரங்களை கைநழுவவிடாதீர்கள்' என்று நான் பொருள் கொண்டது சரியாயென்று தெரியவில்லை. இப்படி இயற்கையோடு குழந்தையை ஒப்பிட்டு சிலாகிக்கும் அந்த பாடலின் வரிகள் அற்புதம்.
கடைசி பாடலான 'கோலோ கோலோ' ஆசிரியர் மாணவருக்கு தரும் உற்சாகமாக, தன்னம்பிக்கை தரும் சொற்களாக, புது தெம்பாகிறது. அதில் கம்பீரமாக ஒலிக்கும் 'Tu dhoop hai jham se bikhar, tu hai nadee, o bekhabar. Beh chal kahin ud chal kahin, dil khush jahan teri woh manzil he wahin' என்ற வரிகள் நமக்கே புது புத்துணர்வு தருவதாகவுள்ளது. வண்ணமயமான காட்சியமைப்பு, குழந்தைகளும் கண்ணெடுக்காமல் பார்க்கும் பாடல்.
'பம் பம் போலே' என் மகளுக்கு மிகவும் பிடித்த பாடல். சோகமான காட்சிக்கு பிறகு மனதை துள்ள வைக்க ஆமீர் கான் & ஷான் குரலில் இடைவேளையைத் தொடர்ந்து துள்ளிவரும் இந்த பாடல் எல்லா குழந்தையையும் ஆட வைக்கும் .
எல்லா பாடல்களுமே நல்ல பொருட்பட அமைந்து, அதற்கேற்ற காட்சிகள் செறிவாக வந்திருக்கிறது. எல்லா பாடல்களும் நன்றாக இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 'மே கபி பதாத்தா நஹீ' என்ற பாடல். கண்டிப்பாக எல்லோரையும் கலங்க செய்திருக்கும். இந்த கட்டத்தில் அழ ஆரம்பித்ததுதான்... இன்னும் அந்த பாடலை கேட்டாலும் தன்னாலேயே கண்கள் நிறைகிறது காரணமின்றி. 'தாரே ஜமீன் பர்' தாரை தாரையாக கண்ணீர் வடிக்க செய்தது. அதற்காக இது சோகமான அழு மூஞ்சிப்படமென்று ஒதுக்கிவிட வேண்டாம். அப்படியல்ல இது சோகத்தில் ஏற்படும் கண்ணீரல்ல உணர்ச்சியில் வசப்படும் போதும் நெஞ்சை நனைக்கும் கணங்கள் ஏற்படும் போதும் ததும்பிக் கொண்டு நம் மனதை லேசாக்க எழுமே அப்படியான கண்ணீர் அது.
எனக்கு தெரிந்த வகையில் தமிழ்படுத்தியுள்ளேன்.
Main Kabhi Batlata Nahin |நான் எப்போதும் சொன்னதே இல்லை
Par Andhere Se Darta Hoon Main Maa |ஆனால் இருட்டென்றால் பயம்தானேம்மா
Yun To Main,Dikhlata Nahin |நான் எப்போதும் வெளிக்காட்டியதில்லை
Teri Parwaah Karta Hoon Main Maa | உங்கள் மீது எனக்கு அக்கறையுண்டு அம்மா
Tujhe Sab Hain Pata, Hain Na Maa | உங்களுக்கு எல்லாமே தெரியும்தானேம்மா
Tujhe Sab Hain Pata,,Meri Maa| உங்களுக்கு எல்லாமே தெரியும்தானே.. என்னுயிர் அம்மா
குழந்தையின் ஒவ்வொரு அசைவும் யாருக்கு புரிகிறதோ இல்லையோ ஒரு தாயிக்கு சொல்லாமலே விளங்கும், அதை ஆணித்தரமாக நம்பும் குழந்தை தாயைவிட்டு விலகப் போகிறோம் என்று தவிக்கும் தவிப்பை இந்த ஒரு பாடலே சொல்லி முடிக்கிறது. எந்த ஒரு காட்சியும் ஜவ்வாக நீளமாக இழுக்காமல் கோர்வையாக டக்டகென்று முடித்திருக்கும் அபார யுக்தி அமுல் குப்த்தின் மனைவி தீபா பாட்டியாவுடையது.
Bheed Mein Yun Na Chodo Mujhe |கூட்டத்தில் என்னை விட்டுவிடாதீர்கள்
Ghar Laut Ke Bhi Aa Naa Paoon Maa |வீட்டுக்கு திரும்பி வரவும் தெரியாதேம்மா
Bhej Na Itna Door Mujkko Tu |தொலைதூரம் என்னை அனுப்ப வேண்டாமே
Yaad Bhi Tujhko Aa Naa Paoon Maa |என் நினைவுகளும் உங்களுக்கு இல்லாமல் போகும்மா
Kya Itna Bura Hoon Main Maa |நான் அவ்வளவு கெட்ட பையனாம்மா?
Kya Itna Bura Meri Maa |நான் அவ்வளவு கெட்ட பையனா...என்னுயிர் அம்மா?
தாயை பிரிந்து விடுதிக்கு செல்லும் ஒரு குழந்தையின் நிலையை, நிரந்தரமாக தாயை பிரிந்த பிஞ்சுகள் பார்த்து அழும் போது, ஏனோ அந்த பாடல் என் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்த அபியும் இடது பக்கத்திலிருந்த ஜெஸியும் (ஆசிப்பின் மக்கள்) மறைந்த அவர்களது தாயை நோக்கி 'எங்களை நன்றாக அறிந்த நீங்கள், எங்களை விட்டு தொலைதூரம் சென்றது ஏன்?' என்று கேட்பதாக பட்டது எனக்கு.
Jab Bhi Kabhi Papa Mujhe |எப்போதும் அப்பா என்னை
Jo Zor Se Jhoola Jhulate Hain Maa |வேக வேகமாக ஊஞ்சலிலாட்டும் போது அம்மா
Meri Nazar Dhoondhe Tujhe |என் கண்கள் உங்களைதான் தேடுகிறது
Sochu Yahi Tu Aa Ke Thaamegi Maa |என்னை நீங்கள் வந்து கெட்டியாக பிடித்துக் கொள்வீர்கள் என்று நினைத்தேன் அம்மா
Unse Main Yeh Kehta Nahin |அவரிடம் இது பற்றி சொல்ல மாட்டேன்
Par Main Seham Jaata Hoon Maa |ஆனால் உள்ளுக்குள் பயம் தானே அம்மா
Chehre Pe Aana Deta Nahin |முகத்தில் அதை காட்டிக் கொள்ளாமலிருந்தேன்
Dil Hi Dil Mein Ghabraata Hoon Maa |என் மனதிற்குள் நான் பயந்தேன் அம்மா
Tujhe Sab Hain Pata, Hain Na Maa | உங்களுக்கு எல்லாமே தெரியும்தானேம்மா
Tujhe Sab Hain Pata,,Meri Maa| உங்களுக்கு எல்லாமே தெரியும்தானே..என்னுயிர் அம்மா
(Main Kabhi Batlata Nahin)
பாடலை கேட்க இதை கிளிக்கவும்
பாடல் மழையில் நனைந்த நீங்கள் திரையில் குடும்பத்துடன் படத்தையும் பார்த்துவிடுங்கள். இந்த படத்தை பார்க்க குழந்தை பிரியராக, ஒரு தகப்பனாக, தாயாக இருக்க வேண்டிய அவசியமில்லை, இது நம் மனதில் ஒளிந்துக் கிடக்கும் மனிதத்தை தட்டி எழுப்பும் படம். எந்த படத்தையும் ஒப்பிட முடியாத விதிவிலக்கான அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டியப் படம்.
கொசுறு: இது எனது 100வது பதிவு