Monday, July 31, 2006

நெஞ்சு பொறுக்குதில்லையே...



போடும் பருக்கைகளை
பகிர்ந்து உண்டு பழகிவிட்டது
பறவை இனம்

நாய் பூனையும் கூட
சேர்ந்து உண்ண
கற்றுக் கொண்டது

மனிதர்களாகிய நாம்தாம்
தவித்தாலும் தாகத்தை
தொலைக்க தவிர்க்கிறோம்
நதிநீரை

Wednesday, July 26, 2006

லேசா லேசா...

பூக்களின்
வேர்வை
பனித்துளிகள்
**

அலை அடித்து
கலைந்த கற்பனை
மணல் வீடு
**

விலைப்போகாத
வேதனைக்குரிய விளைச்சல்
முதிர்க்கன்னி
**

காக்கை பயந்ததோ இல்லையோ
குழந்தையின் வயிறு நிறைந்தது
சோலைக்காட்டு பொம்மை
**

என் பெயர்
கரைந்தது
அவள் நாக்கில்
**

இந்த அனாதையுடன்
விளையாட வந்துவிடு
தாயில்லா பறவையே!
**

குஞ்சு பறவையே
பறந்து போய்விடு
பூனை வரும் நேரம்
**

உயரத்திலிருந்து விழும்
உனக்கு வலிக்கவில்லையோ
அருவி
**

Sunday, July 23, 2006

இல்லாமை இல்லை!?

தானத்தில் சிறந்த தானம் எது?

சமாதானம், நிதானம், பிரதானம் என்று ஆரம்பித்து விடாதீர்கள்.

வரவில்லாத சேவை நிறுவனங்கள் (Non-profit organisation) பற்றியோ அல்லது உடல் உறுப்பு தானம், இரத்த தானம் என்ற விஷயங்கள் பற்றியது என்று எதிர்பார்த்து விடாதீர்கள்.

நான் சொல்ல இல்ல இல்ல எழுத வருவது நம்மால முடிந்த செய்ய கூடிய சின்ன தரும சிந்தனைகள் பற்றியது.

தானம் என்கிற இந்த மூன்று எழுத்துக்குள் எவ்வளவு பெரிய விஷயங்களெல்லாம் அடங்கி இருக்கின்றன். ஆனால் தானத்தின் அடிப்படையென்று பார்த்தால் அன்பு செலுத்துவதிலிருந்து ஆரம்பமாகுகிறது.

ம்ருதுவாக்ய ப்ரதாநேந
ஸர்வே துஷ்யந்தி ஜந்தவா:
தஸ்மாத் ததேவ வக்தவ்யம்
வசநே கா தரித்ரதா

(பயந்துவிடாதீர்கள். ஹந்தி இலவசமாக படிக்க வேண்டுமென்றால் கட்டாயம் சமஸ்கிரதம் படிக்க வேண்டுமென்பதால் கற்றது. கற்றதை அகராதியில் கண்டபோது புகுத்த வேண்டுமென்பதால், மன்னிக்கவும் பதிக்க வேண்டுமென்பதால்...) அதாவது தாழ்ந்த குரலில் அன்புடன் இனிமையாகப் பேசினால் எல்லா பிராணிகளும் மகிழ்ச்சியடைகின்றன. பாய வரும் பசுவை 'பா, பா' என்று அன்புடன் அழைத்துத் தட்டிக் கொடுத்தால் நாக்கால் நம்மை நக்கிக் கொடுக்குமன்றோ! (முட்டாமல் விட்டால் சரி, என்று சொல்வது கேட்கிறது). ஆகவே, இனிமையாகப் பேசுதலென்ற தானத்தைச் செய்ய வேண்டும். இனிய பேச்சுக்கென்ன ஏழ்மை வந்து விட்டது?

இதையே தான் இரண்டு வரியில் சுருங்க சொல்கிறார் நம்ம திருவள்ளுவர்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

என்னடா தானம் என்று ஆரம்பித்து விட்டு அதன் அடிப்படையில் திசை திரும்பிவிட்டேன் என்று எண்ணலாம். எண்ணும் எண்ணத்தில் தான் தானம் உருவாகுகிறது. ஒருவர் மீது அன்பு செலுத்துவதில், இரக்கப்படுவதில்தான் 'தானம்' பிறக்கிறது.

வேண்டுதல், நேர்த்திக்கடனுக்காக உணவளிப்பது இவைகள் தான- தர்மத்தில் அடங்காது. தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்ற பாடல் கேட்டிருப்பீர்கள். அதில் எவ்வளவு உண்மை அடங்கியுள்ளது என்று உணர்ந்ததுண்டா?

அதற்காக பேகனாக, பாரியாக, சீதகாதியாக, கர்ணனாக இருக்க சொல்லவில்லை. தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும், ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போட வேண்டும், அதைதான் ஒளவையார் வானம் கருக்கின் தானம் சுருங்கும் என்று சொல்லியிருக்கிறார். வறட்சி, பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் அதை மீறி தானம் செய்ய முடியாதுதான். ஆனால் வறட்சியே வராமலிருக்க சிறந்த வழியும் தானம்தான். என்ன குழப்புகிறேனா? உண்மைதான்.

நம் சம்பாத்தியத்தில், மாத வருமானத்தில் 5 அல்லது 10 சதவீதம் கட்டாயமாக இல்லாதவர்களுக்கு வழங்கி வாருங்கள் வறட்சி, பற்றாக்குறை, இல்லாமை, கடன் என்ற வார்த்தைகளைக்கூட மறந்தவர்களாகி விடுவீர்கள்.

அதற்காக அந்த பணத்தை CRY, UNICEF, உதவும் கரங்கள் என்று தேடிபிடித்து அனுப்ப சொல்லவில்லை. வீட்டிலிருந்துதான் உதவி ஆரம்பிக்கிறது. உற்றார் உறவினர்கள், நண்பர்கள், அயலார்கள், தெரிந்தவர்கள், அவர்களை சூழ்ந்தவர்கள் என்று தேவைகள் அருகாமையிலேயே இருக்கும். அதற்காக உதவும் நிறுவனங்களுக்கு அனுப்ப அவசியம் இல்லை என்று சொல்லவரவில்லை, இந்த மாதம் இவர்களுக்கென்றால் அடுத்த மாதம் அவர்களுக்கு அவ்வளவுதான்.

இப்படி எல்லோரும் ஒரு கொள்கையாக, செயற்திட்டமாக கொண்டுவிட்டால் நமக்கும் துன்பமில்லை பிறருக்கும் இன்னல் இல்லை.

வலது கையால் கொடுப்பது இடது கையிற்கு கூட தெரியாமல் கொடுங்கள். பண உதவியை நமக்கு நாமே கட்டாயமாக்கிக் கொண்டோமானால் தானாக வரவு பெருகும். எப்படின்னு கேட்காதீர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பண உதவியை தவிர அறிவு தானம் தரலாம், ஓய்வு நேரத்தில் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி சொல்லி தரலாம். நமது பழைய உடுப்பை சுத்தம் செய்து இல்லாதவர்களுக்கு தரலாம். அலுவலகத்தை பழுதடைந்த கருவிகளை, கணினிகளை இலவச பாடசாலைகளுக்கோ, பிற உதவி நிறுவனங்களுக்கோ தந்து உதவலாம். உதவி என்று ஆரம்பித்து விட்டாலே தானாக சிக்கனம் கூடி, பிறருக்கு கொடுக்க கை நீளும்.

'எங்க வாங்குவது கையிற்கும், வாயிற்கும் தான் சரியாக இருக்கு' என்று நினைத்துக்கூட விட வேண்டாம். அந்த ஐந்து சதவீதம் நீங்கதான் கையில் கிடைப்பதாக எடுத்துக் கொள்ளுங்களேன். கடன்கள் எல்லாம் முடிவடையட்டும் பிறகு கொடை கொள்கையை ஆரம்பிப்போம் என்று தள்ளிப் போட வேண்டாம். நாளை என்பது எப்போதும் வராத இன்றின் நேற்று. ஆகவே நல்ல காரியத்தை தள்ளிப் போடாமல் உங்கள் வருவாயிலிருந்து மாத மாதம் 5 அல்லது 10 சதவீதத்தை உதவிக்கு என்று எடுத்து வையுங்கள்.

இப்படி எல்லோரும் செய்ய தொடங்கி விட்டாலே எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும், இல்லாமை இல்லாத நிலையும் இருக்கும்.

Thursday, July 20, 2006

தனி மரம்

பரபரப்பான சாலையில் அமைந்திருந்தது அந்த அலுவலகக் கட்டிடம். பத்து வருடங்களுக்கு மேலாகியும் புதிதாகவே இருந்தது. சாளரத்தின் கண்ணாடிகள் கூட தினம் துடைப்பதால் பளிச்சென்று இருந்தன.

காலையில் தினமும் வாசனைத் திரவம் இங்கும் அங்கும் தெளித்திருந்ததால் உள்ளே நுழைந்ததுமே அந்த இடமே கமகமக்கச் செய்திருந்தது. கதவின் இரு பக்கமும் செடிகள் தொட்டியில் வளர்ந்திருந்தன. வெளியில் இருந்து வருபவர்கள் உட்காருவதற்கு சொகுசான இருக்கைகளும், அவர்கள் காத்திருக்கும் நேரம் தெரியாமலிருக்க படிப்பதற்கு நிறைய நாளிதழ்களும், மாத இதழ்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

உள்ளே நுழைந்ததும் உடலே உறைந்து விடும் அளவுக்குக் குளிராக இருக்கும் அந்த முன் வரவேற்பறை பெரிய இடம் என்பதால் குளிரூட்டியின் தட்பம் எப்போதும் 17-18 தான் இருக்கும். வெயிலில் இருந்து உள்ளே வருபவர்களுக்கு ரொம்பக் குளிராக தெரிவதில்லை.

படியேறி உள்ளே நுழைந்தால் முதலில் அமர்ந்திருப்பது காவல்காரனாக இருந்தாலும், ஏனோ அவன் இடத்தில் அவன் இருப்பதே இல்லை. டீ குடிக்க என்று ஒரு அரை மணி நேரம் காணாமல் போய்விடுவார், பளு இறக்கி வைக்க ஆள் தேவையென்றால் முன்னாடி போய் நிற்பார். எந்த மாடியிலாவது குழல் விளக்கோ, தண்மியோ வேலை செய்யவில்லை என்றால் அதற்கும் இவர் தான் ஓடுவார்.

அந்த முன் முகப்பே அமைதியாக இருக்கும். அந்த வரவேற்புக் கூடத்தில் கேட்பது வரவேற்பாளினி புஷ்பாவின் குரல் மட்டும்தான்.

உயரத்திற்கேற்ப சரியான உடல் வாகு. அதில் ஆறு கஜ சேலையை அழகாக சுற்றிக் கொண்டு அதற்கு ஏற்ற வண்ணத்தில் பொட்டும், சேலையின் இரு வண்ணத்தைக் கடன் வாங்கி செய்தது போலான வளையல்கள் கை நிறைய. கைச்சட்டையின் கழுத்து அகலமாக வைத்து, கழுத்தில் சின்ன சங்கிலியில் பளபளக்கும் தொங்கட்டான். கிள்ளினால் இரத்தம் ஓடுவது தெரியும் அளவுக்கு நல்ல நிறம். உதடு வெளிறாமல் தெரிய அடர்த்தியான உதட்டுச் சாயம். கண்களில் மையிட்டு, கண் முடிக்கு வர்ணம் பூசி, கண் இமைகளில் உடைக்கு ஏற்ற நிறம் நிரப்பி இருந்தாலும் அது கவர்ச்சியாக இருக்காது. நீளமான, மைப்பூசிய கூந்தலை விரித்து விட்டிருப்பார்கள். உடை அலங்காரம் வயதை குறைத்துக் காட்டும் யுக்தியாக இருந்தாலும், முகத்தின் சுருக்கம் அவர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று சரியாகக் காட்டிக் கொடுத்துவிடும்.

“குட் மார்னிங் ஜெ.என். குரூப்” என்று 60 வினாடிகளுக்குள் 30 முறைக்கு மேல் அதையே ஸ்லோகம் போல் திரும்பத் திரும்ப தொண்டைத் தண்ணீர் வற்றினாலும் சளைக்காமல், குரல் பிசிறாமல், முகம் வாடாமல் தெம்பாக, நாள் முழுக்க முழங்குவார்கள்.

மணியடித்தால் தொலைபேசியை எடுத்து புன்முறுவலுடன் காலை வணக்கத்தைத் தொடர்ந்து அலுவலகத்தின் பெயரை அழகாக உச்சரித்து விட்டு உரியவர்களுக்கு தொடர்பைக் கொடுக்க வேண்டும். ஆனால் அது ஓயாத தொலைபேசி மணியாக இருந்ததால் அவர்கள் அதனை தொல்லைபேசி என்று செல்லமாக அழைப்பார்கள். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதை ரொம்பவும் உணர்ந்து நடந்துக் கொள்வார்கள்.

எட்டு அழைப்பு வந்தாலும் ‘மட மட’வென அடுக்கி நிலுவைய்¢ல் போட்டு ‘டக் டக்’கென்று உரியவர்களுக்குக் கொடுப்பார்கள். இடை இடையே அலுவலகத்தின் முகவரி, தொலைநகல் எண், கடைகளின் தொலைபேசி எண்கள், அலுவலகம் அமைந்திருக்கும் இடத்தின் குறிப்பு என்று பல வித அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும். இதில் தவறான எண்ணைச் சுழற்றுபவர்கள் மன்னிப்பு கேட்டும் வைப்பார்கள். நடு நடுவே உள்ளே நுழையும் பார்வையாளர்களுக்கும் இவர் 2வது மாடியில் இருக்கிறார், அவர் இருக்கை நேராக போய் 2வது வலதில் முதல் இருக்கை என்று சொல்ல இவளை அமர்த்தி இருக்கிறார்கள்.

புஷ்பா இவ்வளவு பம்பரமாக மும்மரமாக வேலை செய்தும் இவர்களுக்கு மேலாளர் துண்டுச் சீட்டு அனுப்புவார். அதில் ‘நம்ம இயக்குனர் காலை 11 மணிக்கு அழைக்கும் போது 5 ரிங் போன பிறகுதான் நீ அவர் அழைப்புக்கு பதில் அளித்தாயாம், இனி அப்படி நடக்காமல் இருக்க எச்சரிக்கிறேன்’ என்று.
“ஒரே ஆள் அத்தனை அழைப்பையும் ஒரே நேரத்தில் எடுப்பது எப்படி சாத்தியம்?” என்று அடிக்கடி என்னிடம் புலம்புவார் அவர்.

பார்க்கப் பாவமாக இருக்கும் “அதெல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில் விடுங்க, அவரவர்களுக்குத்தான் அவரவர்கள் வேலையில் உள்ள சிரமம் தெரியும்” என்று நான் சொல்லும் சமாதானம் அவர்களுக்குப் பெரிய விஷயமாகத் தோன்றும்.

புஷ்பா விவாகரத்து பெற்று தனித்து வாழ்பவர். 14 ஆண்டுகள் கணவனுடன் வாழ்ந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் கணவனால் விவாகரத்து தரப்பட்டவர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உண்டு. ஆனால் குழந்தைகளும் இவருடன் இல்லை. நான் இந்த நிறுவனத்தில் சேர்ந்த பிறகே அவர் வந்து சேர்ந்தார். வயதில் மூத்தவர் என்று கூடப் பாராமல் ச்¢றியவரில் இருந்து பெரியவர்கள் வரை அவர் மீது ஒரு அலட்சியம். அது எனக்குப் பிடிக்காமல் போனாலும், ‘வயதிற்கு ஏது மரியாதை இங்கு நாற்காலிக்குத்தானே?!’ என்று என்னை நானே சமாதானம் செய்து கொள்வேன்.

இரண்டரை வருடமாகியும் அவருடன் யாருமே ஒட்டுவதில்லை. அப்படியே பேசினாலும் அந்த நபர்களின் கண்கள் சரியான இடங்களில் அவரை பார்ப்பதில்லை. நேரடியாகவே ‘இன்று என்னோடு வருகிறாயா?’ என்று கேட்கும் துணிச்சலான, பொறுக்கித்தனமான ஆண்களையும் சந்தித்திருக்கிறார் அவர்.. எல்லாவற்றையும் சமாளித்து சகித்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்த அவர் பழகிக் கொண்டது போல எனக்குத் தோன்றும்.

பார்வையாளர்கள் நிறுவனத்தின் உள்ளே நுழையும் போது அவர்களின் பெயர், செல்பேசி எண், பார்க்க வரும் நபரின் பெயர், உள்ளே நுழையும் நேரம், வெளியே செல்லும் நேரம் என்று எல்லாவற்றையும் காவல்காரன் பதிவு செய்ய வேண்டும். அவன் இருக்கையில் எப்போதும் இல்லாமல் போவதால் அந்த வேலையும் அவனுக்கு வரும் அழைப்பையும் இவர்தான் எடுக்க வேண்டி இருக்கும். இப்படிப்பட்ட சின்னச் சின்ன உதவிகள் செய்தும் கூட அவன் மற்றவர்களிடம் இவரைப் பற்றி தவறான வதந்திகளை பரப்புவான். “இந்த கிழவி எப்போதும் போனை பிடிச்சுக்கிட்டு கொஞ்சிக்கிட்டு இருக்குன்னு” இரக்கம் இல்லாமல் அவதூறு அளப்பான். அதெல்லாம் தெரிந்திருந்தும் அவன் விட்டுச் செல்லும் பணியை முகம் சுளிக்காமல் செய்வார் அவர்.

அவருக்கு நாள் முழுக்க பேசிக் கொண்டே இருக்கும் வேலையாக இருந்தாலும் தொண்டையை ஈரமாக்கிக் கொள்ளக்கூட தண்ணீர் குடிக்க முடியாது. காரணம், இயற்கை அழைப்பு வரும் போது எழுந்து போனால் அந்த இடத்தில் இருந்து அந்த வேறுவிதமான தொலைப்பேசியை இயக்க என்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. என்னையும் அவர்கள் அடிக்கடி கூப்பிட முடியாது - என் மேலாளர் மிகுந்த கோபக்காரர் என்பதால் அவரால் நான் ஏச்சுக் கேட்பதை அவர் விரும்பவில்லை. குளிரூட்டியால் குளிர்ந்து இயற்கை அழைப்பை தவிர்க்க முடியாதபட்சத்தில் மட்டுமே என்னை அழைத்துக் “கொஞ்சம் வர முடியுமா?” என்று கெஞ்சிய குரலில் கேட்பார் அவர்.
எல்லோரிடமும் இடைவெளிவிட்டே பழகும் இவர் என்னைக் கண்டால் அன்பைப் பொழிவார். அதிகம் பேசிக் கொள்ள நேரம் கிடைக்காவிட்டாலும் அவரை நான் கடந்து செல்லும் போது நான் தரும் புன்முறுவலே அவருக்குப் போதுமானதாக இருந்தது. எத்¢ர்பார்ப்பில்லாத அன்பு என்று புரிந்துக் கொண்டதால் என்னை பிடித்ததோ என்னவோ?!. சாப்பாட்டு இடைவெளியில் வீட்டுக்குப் போகவில்லை என்றால் நானே போய் அவரிடம் பேசிக் கொள்வேன். நான் யாருடனாவது சகஜமாக நெருங்கிப் பேசிப் பழகுவதை பார்த்தால் போதும் கூப்பிட்டு அறிவுரை தருவார் புஷ்பா. அவரது காதல் திருமணம் தந்த கசப்பான அனுபவத்தை மனதில் வைத்துக் கொண்டு என்னை, “அதிகம் யாருடன் நெருங்கிப் பழகாதே, நீ நட்பாக பழகினாலும் மற்றவர் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடும்” என்று அறிவுரை சொல்வார். அது எனக்குள் கோபத்தை வரவழைத்தாலும் என் நல்லதுக்குத்தானே சொல்கிறார் என்று எண்ணி சமாதானம் ஆவேன்.

நிறுவனத்தைப் பற்றியோ அதில் உள்ளவர்களைப் பற்றியோ பேசிக் கொள்ளவே மாட்டோம் எங்களைப் பற்றி பேசிக் கொள்வோம். அவர் குடும்பத்தைப் பிரிந்து வாழ்பவர் போல் பேசாமல் இன்னும் அவர்களுடனேயே வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள் போல் கணவனைப் பற்றியும், மகள்களைப் பற்றியும்தான் எப்போதும் பேசுவார். அப்படி பறிமாறிக் கொள்ளும் போதே அவரின் முகத்தில் சந்தோஷம் தலை தூக்கும். சாப்பிட நான் எதைக் கொண்டுப் போனாலும் ‘இது என் ஷில்பா குட்டிக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்பார். என்னிடம் ‘கலகல’வென பேசினாலும் யாராவது நாங்கள் பேச்¢க் கொண்டிருக்கும் போது வந்தால் முகத்தை சட்டென்று மாற்றி நாங்கள் அமைதியாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு மட்டும் தான் இருக்கிறோம் என்பது போல் காட்டிக் கொள்வார்.

என்ன மனக் கஷ்டமாக இருந்தாலும் சமாளித்தவாறு புன்சிரிப்புடன் பேசி, வருபவர்களை உபசரிப்பதே வேலையாகக் கொண்ட அவர்களைப் பார்க்கும் போது அதுவே எனக்கு தன்னம்பிக்கை தருவதாக இருந்தது.

அன்றும் அப்படித்தான்.

நிறைய வேலையால் சுழன்று கொண்டிருந்த நான் ஒரு தொலைநகலை எதிர்பார்த்தவளாக அதனை எடுக்க வரவேற்பரை பக்கமாக போன போது புஷ்பாவின் முகம் சிவந்திருப்பதைக் கண்டேன். வழக்கம் போல் அழைப்புகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் குரலில் உற்சாகம் இல்லை.

என்னைக் கண்டதும், காத்திருந்தது போல் ‘கொஞ்சம் இதப் பார்த்துக்குறியாம்மா? நான் கழிப்பறை வரை போய்ட்டு வந்திடுறேன்’ என்றார். பல வேலைகளுக்கு நடுவே நான் இருந்தாலும் குறிப்பறிந்து ‘சரி சீக்கிரம் வந்திடுங்க’ என்று சொல்லிய படி காதில் அந்த பேசும் கருவியை மாட்டிக் கொண்டேன்.

பத்து நிமிடம் கழித்து வந்தவர், முகமெல்லாம் சிவந்து இருந்தது. தண்ணீர் குடித்ததில் கொஞ்சம் சிந்தி மேலே அங்கங்கு நனைந்து இருந்தது. பொய்யான சிரிப்பை வரவழைத்து சூட்டிக்கொண்டார்கள் ‘வந்துட்டேன், நீ போம்மா’ என்றார்கள். அவர்கள் குரலே அழுதுவிட்டு வந்திருக்கிறாரென்பதை காட்டிக் கொடுத்து விட்டது. ஆனால் நான் ஒன்றுமே கேட்டுக் கொள்ளவில்லை- அந்த நேரத்தில்.

சாப்பாட்டு இடைவெளிக்கு அரை மணி நேரமே இருந்தது, காத்துக் கொண்டிருந்தேன் இடைவெளிய்¢ல் அவரைச் சந்திக்க. வீட்டுக்குச் சாப்பிட வரவில்லை என்று அக்காவை அழைத்து சொல்லி விட்டேன். அவரது அழைப்பிற்காகக் காத்திருக்கத் துவங்கினேன். அடுத்தவர் பிரச்னையில் மூக்கை நுழைப்பது அநாகரிகம் என்று அறிவு உணர்த்தியதை மனசு ஒப்புக் கொள்ளவில்லை. நான் காத்திருந்ததற்கு ஏற்ப சரியாக ஒரு மணிக்கு புஷ்பாவே என்னை அழைத்தார்.

“கொஞ்சம் வர்றியாம்மா” என்றார் அழுகை கலந்த வறண்ட குரலில்.

“வரேன்” என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நான் கீழே போனேன். என்னவாக இருக்கும் யாராவது திட்டினார்களா, வெளி இருந்து யாராவது கூப்பிட்டு கண்டபடி பேசிவிட்டார்களா, ஒருவேளை உடல்நிலை குறைவோ என்று பலவாறு யோசித்தபடி வரவேற்பறை பக்கம் சாப்பிட ஒதுங்கும் சின்ன அறைக்கு சென்றேன்.

கலங்கியிருந்த கண்களில், நீயாவது என்னிடம் ஏதாவது என்னைப் பற்றிக் கேளேன் என்ற ஏக்கமான பார்வை தென்பட்டது.
“என்ன புஷ்பா அக்கா ஒரு மாதிரியா இருக்கீங்க? உடம்புக்கு ஏதாவது...” என்று தொடங்கி விட்டுப் பின்னர் அவரே தொடரட்டும் என்று இடைவெளி விட்டேன்.

அவரைப் பார்க்காதது மாதிரி நான் மேசையை நோக்கிக் குனிந்த நேரத்தில் எச்சிலோடு சேர்த்து அழுகையை அவர் முழுங்குவது தெரிந்தது. அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொஞ்சம் தண்ணீர் குடித்துத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டவர் என் கண்களைப் பார்க்க முடியாமல் தவிர்த்து “ஒண்ணுமில்லையேம்மா ” என்றார்கள்.

அவரே சொல்லும்வரையில் நானாக துருவிக் கேட்பது நாகரீகமில்லை என்பதால் பேச்சை மாற்றியபடி “சரி வாங்க. சாப்பிடலாமா?” என்றேன் வரவழைத்துக் கொண்ட உற்சாகக் குரலில்.

என் கண்கள் அவரை நேரே பார்த்த போதும் முகம் கொடுக்காமல் “ம்ம்” என்று மட்டும் தலை குனிந்தபடி கூறினார்கள்.

எனக்கு மனசு கேட்கவேயில்லை புஷ்பா அக்கா இப்படி மனம் ஒடிந்து பார்த்ததே இல்லை நான். என்னிடம் ஏதோ சொல்ல நினைக்கிறார் ஆனால் ஏனோ ஆரம்பிக்க முடியவில்லை. ஒருவேளை சத்தமாக அழுதுவிடுவாரோ என்ற பயம் உள்ளுக்குள் இருக்கிறதோ என்னவோ என்றெல்லாம் நான் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவராகவே ஆரம்பித்தார்.

கலங்கிய கண்ணுடன் என்னை நிமிர்ந்து பார்த்து, “இன்னிக்கு ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்” என்று கொஞ்சம் நிறுத்தி மறுபடியும் தண்ணீர் குடித்து தொடர்ந்தார்கள் “என் மூத்த மகளுக்கு திருமணமாம்” என்று அழுகையோடு கூடிய குரலில் சொன்னார்கள்.

அதன் பின்னணியே புரியாமல் “நல்ல விஷயம் தானே, அதற்கு ஏன் கலங்கி இருக்கீங்க?” என்று வெளியில் சிரிப்புடனும் உள்ளுக்குள் திகைப்புடனும் கேட்டேன்.

நான் அறியாமையில் கேட்பதை உணர்ந்து, ஆதங்கக் குரலில் “அது இல்லம்மா, நான் ஒரு நல்ல மனைவியா இருந்தேனான்னு தெரியலை. ஆனா சத்தியமா நல்ல தாயா இருந்தேன்.” என்றவுடன்,
அவரது நிலையைக் கொஞ்சம் புரிந்தவளாக, பீறிட்டு வரும் அழுகையை தடுக்க முனைந்து சமாதானப்படுத்து வதற்குள்...

“வீட்டுல ஒவ்வொரு வேலையைப் பார்க்க வெவ்வேறு ஆட்கள். சமையற்காரர், தோட்டக்காரர், எடுபிடிகள், இப்படி நிறைய உதவி செய்றதுக்கு ஆள் இருந்தாலும், என் குழந்தைகளுக்குரிய அத்தனை வேலைகளையும் விரும்பி செய்வேன் நான். மற்ற பணக்கார வீட்டு பொண்ணுங்களப் போல கடைத்தெரு, கிளப்ன்னு இல்லாம என் நேரத்த முழுக்க அவர்களுக்காகத்தான் செலவிட்டேன்.” அவரது குரலின் ஒலி அளவு கூடிக் கொண்டே போனது.
நடுவில் புகுந்து “இப்ப என்ன நடந்து போச்சு?” என்று அமைதியான குரலில் பேசி அவர்கள் சத்தமாகப் பேசுவதை சூசகமாக உணர்த்தினேன்.
மறுபடியும் குரலை தாழ்த்திக் கொண்டு “இரட்டை பொண்கள் பிறந்தவுடன் முகம் சுளித்த அந்த மனுஷனுக்கு “பெண்ணுனா அதிர்ஷ்டம்”ன்னெல்லாம் சொல்லி தேற்ற்¢யவ நான். ஒரு குழந்தைக்கு பால் கொடுத்துக் கொடுத்துக்கிட்டிருக்கும் போதே அடுத்த குழந்தை அழுதால் துடித்து அடுத்த குழந்தையை எடுத்து பாலூட்டுவேன். இரண்டு பேரையும் இரு கண்ணா நெனச்சு பதினைந்து வயசு வரை வளர்த்தேன்.” கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டதில் அவர்களின் மார்பு ஏறித் தணிந்தது. அதில் இருந்த ஏக்கம் எனக்குப் புரிந்தது.

அவர்கள் சோகம் என்னையும் தாக்கியதில் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன். அமைதியை நிரப்ப மீண்டும் ஒலித்தது அவர்கள் குரல் “மேற்படிப்புக்காக மகள்கள் இரண்டு பேரும் அமெரிக்காவிற்கு போய்ட்டாங்க. எனக்கும் என் கணவருக்கும் பிளவு ஆரம்பமாகி விவாகரத்தில முடியும் போது கூட குழந்தைகளை என் பக்கம் வாதாட கேட்டதில்ல. ஏன் தெரியுமா, சொகுசா வாழ்ந்து பழகிய குழந்தைகள் என் சுயநலத்துக்காக எங்கூட அழைச்சிக்கிட்டேனா பணத்தால கிடைக்குற சந்தோஷம், அமெரிக்க மேல் படிப்பு, ஆடம்பர வாழ்க்கை எல்லாமே பறிபோய்விடும்ன்னு குழந்தைகள் பற்றியே வாய் திறக்கவில்லை நான். ஜீவனாம்ச பணம் வாங்கிக்கிட்டதுல மகள்களுக்கு என் மேல கோபம். அந்தப் பணம் என் வாழ்க்கையை நகர்த்தறதுக்குன்னு புரிந்துக்கொள்ளக் கூட அவங்க தயாரா இல்ல. அவங்க இங்கு வந்து போகும் போது என்னைக் கூப்பிட்டுப் பேசக்கூட பிடிக்காமல் போயிடுச்சு. நான் நினைச்சிக்கிட்டேன் அவர்களோட அப்பாவுடைய கட்டுப்பாட்டால் எங்கிட்ட பேச முடியிலன்னு. பிறகுதான் தெரிஞ்சது அவர்களுக்கேதான் என்னை பிடிக்காம போய் விட்டதுன்னு.” நிறுத்தும் போது அந்த பக்கம் யாரோ போவது கேட்கவே கொஞ்சம் மௌனத்தைப் போர்த்திக் கொண்டு, எங்களை தாண்டிப் போகும் வரை காத்திருந்து மீண்டும்,
“இன்னிக்கு என் தோழி மூலம் என் மூத்த மகளுக்குத் திருமணம்ன்னு கேள்விப்படும் போது என் ஈரக்குலையே நடுங்கிவிட்டது தெரியுமா? இருபத்தி-மூன்று வயதே இருக்கும் என் மகளுக்கு திருமணம் நடத்த என்ன அவசரம்? அவள் ஏதாவது தவறான வழியில் போய் விட்டாளோ? பெரிய இடத்து மாப்பிள்ளை அவனும் படித்துக் கொண்டிருப்பவன் தான். அதுவும் வேறு சாதின்னு சொல்லும் போதே காதல் திருமணம்ன்னு யூகிக்க முடிந்தது. அதைத் தவிர வேறு விபரங்கள் தர முடியவில்லை என் தோழியால்.”
கொஞ்சம் யோசித்தபடி “என் மகளுடைய திருமணத்தைப் பற்றி யாருக்கிட்ட கேட்க? எங்களுக்கும் காதல் திருமணம்தான் இப்ப நான் எங்கு நிற்கிறேன் வாழ்க்கையில? மனம் ஒத்துப்போகலைன்னு அவருக்கு 14 வருஷம் கழிச்சிதான் புரிந்து வெட்டி விட்டார். உடைந்து போன நான் போக கதி இல்லாம தற்கொலை செய்துக் கொள்ள துணிந்து, அப்புறம் சில நல்ல சொந்தங்களால் உருக்குலைஞ்ச நான் மீண்டும் தெளிவானேன். என் படிப்பு உதவிச்சு சொந்தக் காலில் நிற்க. எது எப்படிப் போனாலும் என் தாய்மைதான் என்னைக் கொல்றது. என் மகளுடைய தாயா கடமைக்காவது என்னைத் திருமணத்திற்கு அழைப்பார்களா? அழைத்தாலும் போகத்தான் என்னால முடியுமா? இப்படிப்பட்ட பெரிய விஷயம் வீட்டில் நடக்கிறது, அடுத்த வாரம் திருமணம், பெற்றவளிடம் ஒரு வார்த்தை சொல்லலாம் என்ற நெனப்பு வந்துச்சா?” என்று பல கேள்விகள். மனதில் தேக்கி வைத்திருந்ததை கொட்டித் தீர்த்தார்கள்.

யோசித்தவளாக, வார்த்தை தேடுபவளாக ஆரம்பித்தேன். என்னாலும் இந்தக் கேள்விகளுக்கு விடையைத் தேட முடியவில்லை. அடுத்தவர் வாழ்க்கையில் ஆயிரம் சிக்கல்கள் இருக்கும்போது என்னுடம் எல்லாம் திறந்து விவாதிக்கும் அவருக்கு என்னால் வார்த்தைகளாலாவது ஆறுதல் சொல்ல முடியுமா என்று யோசித்தேன்.

“எல்லாம் முடிஞ்சி போச்சு, ஏன் வீண் எதிர்பார்ப்புகள்? ஆடு பகையாகி, குட்டியை உறவுக்கு அழைச்சா எப்படி? அவர்கள் திருமணத்திற்கு அழைச்சாலும் நீங்க போனீங்கன்னா யாரும் மதிக்கவே மாட்டாங்க. உங்களுக்குத் தாயின் அங்கீகாரம் கூடக் கிடைக்காது. உங்க மகள் கூப்பிட்டுப் பேச வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீங்க, நீங்களே நல்ல தாயாக ஆசீர்வதிக்க அழைத்துப் பேசுங்க” என்று சமாதனப்படுத்த முடியாத வார்த்தையாக இருந்தாலும் என்ன சொல்லித் தேற்றுவது என்று தடுமாறி தோன்றுவதைச் சொல்லி வைத்தேன்.

ஏதோ நான் சொல்லியது புது தெம்பு தந்தது போல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்து களைந்து “ரொம்ப சரியா சொன்னேம்மா, நான் கூப்பிட்டுப் பேசுறேன். ஒண்ணு சொல்றேம்மா என்ன சண்டை வந்தாலும் கணவனுடன் சகித்துப் போய் விட வேண்டும். நம்ம சமுதாயத்தில் தனியாக வாழ்வது ரொம்பக் கொடுமை. அனுபவிச்சவ தனியா தவிக்கிறான்னு சில கேலி பார்வைகள். நண்பர்கள் வீட்டில் விசேஷம்னு போனா யாரும் சரி வர பேசுறதில்ல, நல்ல பேசி பழகிட்டா இவ வீட்டுக்கெல்லாம் அடிக்கடி வரத் தொடங்கிடுவா என்ற பயம். அவளவளுக்கு நம்ம புருஷனை இவ கவர்ந்து விடுவாளோன்னு என்னிடத்தில் பேசுவதே தயக்கம். எந்த குற்றமும் செய்யாத என்னை சமுதாயம் ஒதுக்கியே பார்க்குது” என்று மனவலியுடன் அவர் அறிவுரை போலச் சொன்னபோது என் பெண்ணுரிமை வாதங்களை ஒதுக்கி வைத்து விட்டு எரிச்சலின்றி கேட்டுக் கொண்டிருந்தேன் ஆறுதலாக..

அவர் சொன்ன அறிவுரை மனதில் ஆழமாகப் பதிந்தது. அவரும் தன்னம்பிகையுடன், தன் மகளுடன் பேசப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் தான் மதிய சாப்பாட்டைச் சாப்பிடவில்லை என்பதை மறந்தவராக திறக்காத உணவு டப்பாவை பைக்குள் திணித்து “பார்க்கலாம்மா” என்று வேறு எதையோ யோசித்த படி வெளியில் நகர்ந்தார்கள்.

சாப்பாட்டு இடைவெளி நேரம் முடிந்து விட்டாலும், அரக்கப் பரக்க உருளைக்கிழங்கை ரொட்டிக்குள் வைத்து சுருட்டி வாய்க்குள் திணித்துக் கொண்டேன். மிச்ச அலுவல் நேரத்தில் தெம்பாக வேலை செய்ய வேண்டி இருக்கே அதற்கு.
மறுபடியும் “குட்டா·ப்டர்னூன் ஜெ.என். குரூப்” என்று தொடர்ந்தது..

அமீரகத் தமிழிணைய நண்பர்கள் அமைப்பின் 5-ஆவது ஆண்டுவிழா மலருக்காக எழுதியது


Tuesday, July 18, 2006

ஆதங்கம்!

புது வண்டியில்
முதல் விபத்து
எலுமிச்சை
**

பால் அபிஷேகம்
பட்டினியில் அழுதது
பச்சிளங்குழந்தை
**

உடையாமல் இருக்க
உடைத்தார்கள்
பூசனிக்காய்
**

நீ தூங்கினாலும்
சிணுங்கி எழுப்பியது
கொலுசு
**

மழையில் நனையாத
பூ
முழுநிலா
**

மழையில் நனையாமல் இருக்க
நான் நனைந்தேன்
குடை
**

உபசரித்து விரித்தது
முடிந்த பின்
எச்சில் இலை
**

காலி பணப்பை
வெதும்பும் திருடன்
கடன் அட்டை
**

உச்சரிப்பு சிதைவு
இந்திப் பாடகர்
பிரபலமானது தமிழ்பாட்டு
**

நூறுநாள் ஓட்டம்
தமிழ்படம்
ஆங்கிலத்தில் தலைப்பு
**

Sunday, July 16, 2006

திருமணம் - வாழ்வின் மாற்றம்

திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவு வாழ்வின் அர்த்தமுள்ள அவசியமான திருப்புமுனை என்று சொல்வதைவிட வாழ்விற்கே புது உருவம் தரும் தருணம் எனலாம்.

திருமணத்தின் போது புகைப்பட நிபுணர் நகைச்சுவைக்காக சொல்வது, ‘கடைசியாக ஒருமுறை சிரிச்சுடுங்க பார்க்கலாம்’ என்று. அது கடைசி சிரிப்பா அல்லது வாழ்வின் ஆரம்பமா என்று நாம் வாழ்வதை பொறுத்தே அமையும்.

திருமணம் வாழ்வின் தரம் மாறுவது, மேம்படுவது மட்டுமல்லாமல் வாழ்வையே மொத்தமாக மாற்றிவிடுவது பலப்பேருடைய அனுபவமாக இருக்கலாம். இரு மனம் கொண்ட வாழ்வில் பல ஒற்றுமைகளை விட வேற்றுமைகளையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்து அதன்படி நம்மை மாற்றிக் கொண்டு விட்டுக்கொடுத்து போவதுதான் நுண்ணறிவுள்ள செயல்.

பெரும்பாலான இன்றைய தலைமுறைகள் திருமண வாழ்வின் நன்மை தீமைகளை, ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொள்ளாமல், தான் திட்டமிட்ட கனவு உலகை காண மட்டுமே ஆயுத்தமாகுகிறார்கள்.

நிச்சயித்த திருமணமோ, காதலித்து திருமணமோ, திருமணத்திற்கு முன்பு லட்சக் கேள்விகள் கேட்டு அதில் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துக் கொண்டதாக திருப்த்தியடைந்து அதுவே வாழ்விற்கு தேவையான எல்லா பதில்கள் என்று மகிழ்ச்சிக் கொண்டு வாழ்வை தொடங்குகிறார்கள். திருமணத்திற்கு முன்பு எல்லோருமே தன்னுடைய ஒரு பக்கத்தை மட்டுமே காட்டுகிறார்கள். இவளை கவர அவனும், அவளை கவர இவனும் தன்னையறியாமல் நாடகம் நடத்திவிட்டு, இயல்பு வாழ்க்கை என்று வரும் போது ‘தவறு செய்து விட்டோமா?’ என்ற குற்ற உணர்வில் குழம்பி நிற்கிறார்கள். எதிர்பார்ப்பைவிட இருப்பதை அப்படியே நேசிக்க கற்றுக் கொண்டாலே வாழ்விற்கு வெளிச்சம்தான்.

வேற்றுமையா ஒரு திருமணமுறிவிற்கான காரணம்? அதை விட முக்கியமானது அதனை எப்படி கையாளுவது என்பது. கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு, மனஸ்தாபம் இதெல்லாம் எல்லா உறவுமுறைகளிலும் இருக்கும் போது ஏன் கணவன் - மனைவி இடையில் வந்தால் மட்டும் திருமணமுறிவுகள், விவகாரத்துகள்? யோசித்திருக்கிறீர்களா?

வாக்குவாதம், விவாதத்தின் பிறகு செய்ய வேண்டியவை எல்லாம்:

  • மன்னித்து மறந்து விட வேண்டும் (இருவரும் ஒரே விஷயத்தை மனதில் வைத்திருப்பதில் பயனில்லை பாருங்க).
  • தவறிலிருந்து திருத்திக் கொள்வது (வாயே திறக்க கூடாதுன்னு திருத்திக்கிட்டா பிரச்சனையே இல்லை)
  • புரிந்துக் கொண்டு இன்னும் நெருங்குவது (புரியா விட்டாலும் புரிந்தது போல் சமாதானப்படுத்தி முடித்து விட வேண்டும், சண்டையை.)
  • இருப்பதை அப்படியே நேசிப்பது (வேற வழி!)
  • சிநேகபாவமாக விட்டுக்கொடுப்பது (விட்டுக்கொடுக்கலன்னா வாங்கி தர வேண்டி இருக்கும், அன்பளிப்பு).

கருத்து வேறுபாடு என்பது எப்போது வருமானால்

  • மற்றவர் கருத்தை காது கொடுத்து கேட்காத போது (என்றுதான் பேசுவதை கேட்டிருக்காங்க, அவங்களே பேசிக்கிட்டிருந்தா?)
  • மற்றவர் கருத்தை மதிக்காத போது (மனுஷன மதிச்சாதானே கருத்தை மதிக்க!)
  • மற்றவர் கருத்தை ஏற்க முடியாத போது (கேட்டாதானே ஏற்பதைப் பற்றி பேச)
  • மற்றவர் கருத்தை சரியென தெரிந்தும் மனம் ஒப்பாமல் மறுக்கும் போது (எகத்தாளம், அகங்காரம்.)

திறமையாளர்களுக்கு தெரியும் திருமணத்தின் மூலம் தனக்கு என்ன வேண்டுமென்று, எப்படிப்பட்ட துணை அமைய வேண்டுமென்று, எந்த மாதிரியயன குணநலம் கொண்ட துணையை தேர்ந்தெடுத்து வாழ வேண்டுமென்று.

ஆரோக்கியமான தாம்பத்தியத்திற்கு நெருக்கடி, பொறாமை, சந்தேகம், உரிமை கொண்டாடுதல் (Possessiveness) இதெல்லாம் இல்லாமல் இருந்தாலே போதுமானது.

சுதந்திரமாக வெளிப்படையாக பேசுதல், கிண்டல் செய்தல், கருத்து பரிமாற்றம் இவைகளைக் கொண்டு மிகுந்த நெருக்கம் உண்டாக வேண்டுமே தவிர சண்டையின் ஆரம்பமாக கூடாது.

‘என்னைப் பற்றி கொஞ்சமாவது கவலை இருக்கா’ என்று துணைவி கேட்டால்.

‘நீதானே தேவையில்லாதவற்றிக்கு எல்லாம் கவலைப்பட கூடாதுன்னு சொன்ன’ என்று நையாண்டியாக பேசினால். கிண்டல் என்று புரிந்துக் கொள்ளும் தன்மை இருத்தல் வேண்டும்.

அறிவாளிகளுக்கு தெரியும், காதலோ அன்போ வரையறுக்கப்பட்டதோ அல்லது வரம்பற்றதோ இல்லையென. அந்த உணர்வானது தனது துணை தம்மை நடத்துவது சார்ந்தது, மங்கும் மிளிரும் ஆனால் நிச்சயமாக மறையாதது. இதை புரிந்து நடந்தால் நெருக்கம் கூடும். நாம் என்ன கொடுப்போமோ அது அதிகமடங்காக திருப்பி கிடைக்கும். (கொடுக்கல்- வாங்கல் வியாபாரம் மாதிரிதான்).

கர்வம் - தன்னம்பிக்கை, நேர்மை - நேர்த்தியின்மை, மிதமிஞ்சிய நம்பிக்கை(over confidence) - திட நம்பிக்கை (optimism), அடக்கம் - பவ்யம் இவைகளுக்கு ஒரு நூல் இடைவெளிதான் வித்தியாசம் இருப்பதை புரிந்துக் கொண்டு நடக்க வேண்டும்.

இவையெல்லாம்தான் திருமணத்தை உருவாக்கவும், உடைக்கவும் செய்யும்.

Thursday, July 13, 2006

குருதி வியர்வை

விவசாயின் காயம்
மருந்து
உழவு மண்
**

செத்தால்தான்
சோறு
சாவு கூத்தாடி
**

கடன்பட்டவனின்
இரத்த வாடை
வட்டிப்பணம்
**

பிணம் எரிந்தால்தான்
எரியும் வயிற்றுக்கு சோறு
வெட்டியான் வாழ்க்கை
**

நிலத்தில் வயிற்றை கழுவ
வானத்தை நோக்கினர்
விவசாயிகளின் வறுமை
**

உயர்ந்தது உன் கொள்கையென
கைத்தட்டி உயர்த்தி விட்டோம்
உயர்ந்தது விலைவாசியும்.
**

எச்சிலை சேர்த்து
தாகத்தை தொலைத்தனர்
தண்ணீர் பஞ்சம்
**

பழைய சன்னல் திரையில்
புது பாவாடை
ஏழை குடியாள்
**

Wednesday, July 12, 2006

மரணப் போட்டி



அடக்கம் செய்தனர் எனை
ஆடம்பரமில்லை, கூட்டமில்லை
கண்ணீருமில்லை, கவலையும் தென்படவில்லை
நான் நிழலாக சுவற்றில் மட்டும்

நிசப்தத்திலும் நித்திரையில்லை
இறந்த பின்பும் நிம்மதியில்லை
செத்தும் சாகடித்திருந்தேன்
குழந்தையை, அவள் தகப்பனுடன்

குடித்து வண்டி செலுத்தினேன்
இடித்து மரணித்தோம்
யார் முந்தி, அதிலும் போட்டி
என்னால் இரண்டு விதவைகள்

நேற்று இருந்த நண்பர்கள்
இன்று இருக்கவில்லை
சந்தோஷத்தில் ஊற்றி திளைத்தனர்
சடங்கில் எங்கோ தொலைந்தனர்

நிறுவனம் நிரப்பியிருந்தது
என் இடத்தை
குடும்பத்தில் ஈடுகட்டமுடியுமா
என் இடத்தை?

இறந்த இதயமும்
வெட்கத்தில் அழுதது
‘அப்பா’ என்று அழுபவனை
அணைத்துக் கொள்ள துடித்தது

இறப்பில் தெளிந்தது
என் போதை மட்டுமல்ல
என் பேதமையும்தான்
கடந்த பின் விடிந்து பயன்?

மணமற்ற மலர் படத்திற்கு
மீண்டும் பிறக்க பிடிக்கவில்லை
வாழ பிடிக்காமலல்ல
மீண்டும் மரிக்க பிடிக்காமல்.

Tuesday, July 11, 2006

உயிரினமே

குடத்தை கீழே வைக்காமல்
நகர்ந்தது தண்ணீரை தேடி
நத்தை
**

வண்ணங்களின் கலவையை
களவாடினேன் இறையிடமிருந்து
பட்டாம்பூச்சி
**

வீட்டுக்குள்ளே
வீட்டைக்கட்டியது
எறும்புகள்
**

சேமிப்பை கற்றுக்கொண்டேன்
ஒழுகினத்தை கற்றுக்கொண்டேன்
எறும்புகளிடமிருந்து.
**

பூமியில்
பிணைந்த வாழ்க்கை
மண் புழுக்கள்
**

நிர்வாண குளியலை
ஒழிந்து பார்த்து ரசித்தது
சுவற்று பல்லி
**

கண்ணீரால்தான்
கடல் கசந்ததோ
மீன்கள்
**

கனவில்லை காரணம் தூக்கமில்லை
ஓசை காதை பிளந்தது
கொசுக்கடி
**

ரங்கோலி
ஏமாற்றம்
பசியுடன் எறும்புகள்
**

Monday, July 10, 2006

ஆறாவது அறிவு

செந்தில் குமரனின் அழைப்பிற்கிணங்க ஆறு சேர வந்தேன்.

ஆறு அறிவு கொண்ட மனிதன் வலைப்பூவில் ஆறு பதிப்பதால் அவன் காயங்கள் ஆறிவிடபோவதுமில்லை, வடுக்களையும் ஆற்றிவிட போவதுமில்லை.

என்ன ரொம்ப சீரியஸா போகுதேனு பயந்திடுடாதீங்க..

எப்பவுமே இப்படிதான் நாம் ஒரு புத்தகம் படிக்கும் போது அந்த புத்தகத்திகிணங்க நம் மனநிலையும் மாறிவிடும். அதே போல் ஒரு படம் பார்க்கும் போதும். என்ன ஒப்புக் கொள்ள முடியவில்லையா? ஒரு அறையில் இருவர் சண்டைப்போட்டுக் கொண்டு காரசாரமாக விவாதம் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் நீங்கள் நுழையும் போது நம்மை அறியாமல் நிகழும் ஒரு பதற்றம் - அது ஏன்? எதற்காக? சில சமயங்களில் நாம் சொல்ல வந்ததை மற்றவர்கள் சொல்வதும், நாம் இப்படி நடந்துவிடுமோ என்று பயங்கொள்ளும் நேரத்தில் நிகழ்ந்துவிடுவதும், மனசே சரியில்லை என்று தோன்றும் போது நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்களும் நம்மை தேடுவதும் எதனால்? ஆமா இவ என்னடா ஆறு விளையாட்டுல கலந்துக்க சொன்னா ஆறாவது அறிவை ஆராய்கிறாள் என்று சலிப்பு ஏற்பட்டிருக்கும். என்ன செய்றதுங்க ஆறு என்றவுடன் எந்த ஆறு நினைவுக்கு வருதோ அதைதானே கிறுக்க முடியும். இப்படி என் ஆறாவது அறிவை வைத்து முன் கூட்டிய அறிந்த ஆறு விஷயங்கள்:
  1. 1. ஆசையாக வளர்த்த மீன் குட்டிப் போட்டு சில நாட்களிலேயே செத்து போகும்ன்னு தோனுச்சு - செத்து போச்சு ;-(
  2. 2. வீட்டுக்கு வரிசையாக நிறைய விருந்தாளிகள் முன் அறிவிப்பு இல்லாமலே வர போறாங்கன்னு தெரிந்து வீட்டை சுத்தம் செய்து சாப்பிட, அருந்த ஏதேதோ செய்து வைத்தது.
  3. 3. என் நண்பனும் தோழியும் காதலில் மாட்டி கல்யாணத்தில் முடிவார்கள் என்று வாய்விட்டு கூறி, இரு தரப்பினரிடமிருந்தும் நட்பை கொச்சைப்படுத்துவதாக திட்டு வாங்கி. கடைசியில் நான் சொன்னதே ஆரம்பமாகி, திருமணத்தில் முடிந்து இப்ப ஒரு குழந்தை. ;-)
  4. 4. வண்டி எடுக்கும் போதே ஏதோ அசம்பாவிதம் நேரும் என்று தோன்ற.பிராத்தித்து வண்டி எடுத்து, கவனமாகத்தான் ஓட்டினேன், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது போல் லேசான மோதலில் தப்பியது என் வண்டியும் மற்றவர் வண்டியும்.
  5. 5. இரண்டு பெண் குழந்தையை பெற்றவர்கள் மூன்றாவதை சுமக்கும் போது. 'தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் இதுவும் பெண் குழந்தைதான்' என்று மனசுல பட்டதை பட்டுன்னு சொல்லி, 'அடிப்பாவி அப்படிலாம் சொல்லாதேன்னு' சொன்னாங்க. அப்படியே ஆகிவிட்டது. மூன்றாவதும் முத்தான பெண் குழந்தை.
  6. 6. நேற்றுக் கூட ஏதோ காரணமே இல்லாமல் மனசே சரியில்லை. ஊருக்கு அழைத்து பேசிய பிறகுதான் ஏன் என்று புரிந்தது. அக்காவுக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்களாம்.
ஆறு: 666 இது சாத்தான் எண்ணாக இருக்கலாம் ஆனால் 6+6+6=18 (1+8=9) 6x6x6=216 (2+1+6=9) ஒன்பது பலருக்கு அதிஷ்ட்ட எண். அதிஷ்டம் துரதிஷ்டம் என்று பலர் நம்புவார்கள். சிலர் உணர்ந்து அதனை பொய் என்பார்கள். சில சமயங்களில் இந்த சம்பவங்கள் நடந்திருக்க வேண்டாம் என்று தோன்றும் வாழ்க்கையிலலும் கணினி போல undo செய்யும் வசதி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்படிப்பட்ட மனதை பாதித்த ஆறு சம்பவங்கள்.
  • * அஞ்சலி நாய் புத்திபேதலித்து இறந்தது.
  • * பால்காரன் பசு கன்னு போடும் போது செத்துப் போனது.
  • * பத்தாம் வகுப்பு இறுதியான பொது தேர்வில், ஒரு சக மாணவி நல்ல படிக்கும் பெண், இரவு முழுக்க கண் விழித்து படித்ததில் சுயம் இழந்து ஏதோ குழம்பி, தன்னிலை மறந்து பரிட்சை தாளை கிழித்து, வகுப்பறையில் கலாட்டா செய்து எல்லோரையும் பீதியடைய செய்து, அந்த 15 நிமிட கோலத்தால் அன்று அவள் பரிட்சை எழுத முடியாமல், ஒரு வருடம் வீண் செய்ய வேண்டியாகிவிட்டது.
  • * என் தோழி அபிராமியின் அப்பா திடீர் மரணம். வாழ்க்கையின் மேல்மட்டத்தில் இருந்து திடீர் சரிவு. பெரிய பள்ளியில் படித்துக் கொண்டிருந்தவர்கள் தொடர்ந்து பணம் கட்டணம் கட்ட இயலாமல் சாதாரண பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள். அப்பாவின் இழப்பின் துயரத்தில் இருந்து மீண்டு அவள் வாழ்வின் முதல் நாளில் எங்களை எல்லாம் சந்தித்து புது பள்ளிக்கூடம் சேர்ந்துவிட்டேன் நாளை புது பள்ளி உடுப்பு (uniform) என்று உற்சாகமாக சொல்லி சென்றவள். அப்பாவின் இழப்பை தாங்காத அவள் அம்மா, மகள் குளிக்கும் சமயத்தில் எரிவாயுவை திறந்துவிட்டு. கடைசிக்குட்டி மகனுடன் சேர்ந்து செய்துக் கொண்ட தற்கொலையில் அபிராமியும் பலியானது.
  • * பக்கத்து வீட்டு ரோஜா அக்காவின் கணவர் கால் தடுக்கி விழுந்து, சின்ன கல் நெற்றிபொட்டில் குத்தி அகால மரணமடைந்தது.
  • * சக ஊழியர் 29 வயதிருக்கும். திருமணமாகி, கர்பிணி மனைவியை தாயகம் விட்டு, வேலையை துபாயில் தொடர வந்தவர் இயற்கை எய்தியது.

ஆறு என்றவுடன் ஆறாவது அறிவை தவிர நினைவுக்கு வருவது:

  1. கடலில் இணையும் கரைக் கொண்ட ஆறு
  2. ஆறுநாள் யுத்தம் (இஸ்ரேல் - அரபு நாடுகள் 1967)
  3. ஆறு வித்தியாசங்கள்
  4. ஆறு விரல் கொண்ட என் தோழி
  5. ஆறு படம்
  6. டிசம்பர் ஆறு

வேரென்ன எழுதுவது?

-என்னை விரும்பிய ஆறு உள்ளங்கள் என்று காதல் காப்பியம் எழுதலாம். ;-)

-நான் சமைத்து திட்டு வாங்கிய ஆறு பண்டங்கள் பற்றி சமையல் குறிப்பு எழுதலாம். ;-)

-நான் பெற்ற பாராட்டு பரிசுகள் என்று பெருமை பட்டியலிடலாம்.

எதற்கு வம்பு, அப்படியே நிறுத்திப்புட்டு வேறு நபர்களை ஆறு விளையாடிற்கு அழைப்போம். பெறும்பாலும் எல்லோரும் ஆறு போட்டாகிவிட்டார்கள், இருப்பினும் அழைத்து பார்ப்போம்.

  1. ஆசிப் மீரான் (சின்ன பசங்க விளையாட்டுன்னு ஒதுங்கிட வேண்டாம். உங்களை இளசாக்க சின்ன முயற்சி ;-) ஊரிலிருந்து வந்த பிறகு எழுதினால் போதும்.)
  2. முஜீப்
  3. மஞ்சூர் ராசா
  4. கோவி.கண்ணன்
  5. உமா கதிர்
  6. கவிமதி

Sunday, July 09, 2006

தாயின் தவிப்பு

(காக்க காக்க படத்தின் உயிரின் உயிரே பாட்டின் மெட்டுக்கேற்ப எழுதப்பட்டது)

uyirin uyirae...uyirin uyirae
nadhiyin madiyil kaathu kidaikindrean
eera alaigaL neerai vaari mughathil iraithum
muzhudhum vaerkindrean

கண்ணின் மணியே கண்ணின் மணியே
உலகில் உதிக்க பார்த்து இருந்தேனே
கருவில் துடித்தும் உதைத்தும் மிதித்தும் கடினம் கொடுத்தும்
உணர்வில் ரசித்தேனே

nagarum neruppai kozhundhu vetterindean...
aNaindha pinbhum...analin maelirundean
kaalaipaniyaaga yeNNai vaarikondaay
naeram kooda yedhiri aagivida...yughaNgaL aaga vaedam maarivida...
aNaththu kondaayae...pinbhu yaenoa sendraay

அசையும் தேராய் மெல்ல நடந்திருந்தேன்
பார்த்தும் பூத்தும் ... காத்துக் கொண்டிருந்தேன்
சிப்பி முத்தாக எனக்குத் தாய்மை தந்தாய்
பத்து மாதம் சுலபமாகிவிட..
பகலும் இரவும் ஒன்றாய் மாறி விட
உயிராய் உதித்தாயே.. தாய்ப்பால் ஏனோ மறுத்தாய்

swasamindri thavikiraenae
unadhu moochchil pizhaikkiraenae
idhazhLgaLai idhazhLgaLaal nirappida vaa peNNae
ninaivu yengoa neendhi chella
kanavu vandhu kaNNai kiLLa
nizhal yedhu nijamayedhu kuzhambinean vaa peNNae
kaatril yendhan kaigaL rendum
uNNai andri yaarai thaedum
vilagi poagaadhae tholaindhu poavaenae
naan...naan...naaan

சுவாசமாக நானிருந்தேன்
கவசமாகக் காத்திருப்பேன்
அன்னையை மன்னித்து அருந்திட வா கண்ணே
நிலை தடுமாறி நடந்து செல்ல
கண்ணீர் வந்து கண்கள் நிரம்ப
துயரங்கள் துடைத்திட துடிக்கிறேன் குடித்திடு கண்ணே
உலகில் உந்தன் பிறப்பென் உச்சம்
உன்னால்தானே என் வாழ்வில் வெளிச்சம்
வெறுத்து ஒதுக்காதே இறந்து போவேனே
நான் நான் நான்...

Tuesday, July 04, 2006

பெண்ணே...

கொலை செய்தால் ஊரறிய
வலி அவளுக்குள்
கருசிதைவு
**

பெண்கள் கேட்டால் -விபச்சாரம்
ஆண்கள் கேட்டால்
வரதட்சணை
**

நாளைய கல்பனாசாவ்லாவை
இரையாக்கினால் கள்ளிப்பாலுக்கு
பெண் சிசுக் கொலை
**

சாதி தீயினால்
துணிந்து எரிந்தால்
‘சத்தி’
**

தாள்ளிட்டு ஆடினால் விபச்சாரம்
அம்பலத்தில் ஆடினால்
அழகி போட்டி
**

துளிப்பா

எச்சிலை சேர்த்து
தாகத்தை துளைத்தார்
தண்ணீர் பஞ்சம்
**

உயிர்
மேட்டுக்குடி பகற்டுடுப்பானது
பட்டு பூச்சி
**

முகத்தில்
அழகிய வளைவு
சிரிப்பு.
**

மனம் அறிந்து கூறினேன்
மனம் அழுதது
காயப்படுத்திய பொய்
**

மாலை காற்றில்
கலைந்தது வண்ணம்
காலை பொழுது.
**

Monday, July 03, 2006

மறக்க முடியுமா?

நிலவை வான் மறக்குமா
வான் உலகை மறக்குமா
உலகம் பூமியை மறக்குமா
பூமி நிலத்தை மறக்குமா
நிலம் பாதையை மறக்குமா
பாதை கால்சுவடை மறக்குமா
கால்சுவடு உரிய கால்களை மறக்குமா
கால்கள் வழிகாட்டிய கண்களை மறக்குமா
கண்கள் காக்கும் இமையை மறக்குமா
இமை உடலை மறக்குமா
உடல் உயிரை மறக்குமா
உயிர் எதுவும் மறக்குமா
எதுவும் எதையும் மறக்காத போது
என்னை மட்டும் நீ ஏன் மறந்தாய்?

Sunday, July 02, 2006

அய்கூ வடிவம்

தொண்டையில் மேகம் கூடி 
கண்களில் மழை வந்தது 
தேங்கி நின்றது பிரிவு. 

** 

இரு கைகளுக்கு நடுவே 
நகர்கிறது நாட்கள் 
குயவன். 

** 

சூரியனுக்கு கீழ் 
எல்லாம் வெளிச்சம் 
கடற்கரை குளியல் 

** 
மயங்க வைத்ததும் அதுதான் 
காயப்படுத்தியதும் அதுதான் 
சுழலும் நாக்கு. 

**
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி