Thursday, May 27, 2010

நினைவுகளில் நீ


நீ இல்லாத வெறுமையை

நூலாக்கி

கோர்த்துக் கொண்டேன்

என்னுள்

தைக்க முடிகிறது

நம் நினைவுகளாலான

வண்ணம் மிகுந்த

கனவுகளை

Tuesday, May 25, 2010

மறைவின் நிஜங்கள்


ஆசையோடு
நீ வாங்கி வந்த
பென்ஸ் கார்
கொளுத்தும் வெயிலில்
காத்திருக்கிறது
நீ வந்தமர்ந்து
குளிர வைப்பாயென.
அதனிடம் நான்
சொல்லவில்லை
நீ விமான விபத்தில் மறைந்து
என் எண்ணங்களை
வியாபித்திருக்கிறாயென
நீ இல்லாமலிருப்பது
தெரிந்தால்
சுட்டெரிக்கும் வெப்பத்தை
சாதகமாக்கிக் கொண்டு
அது பொசுங்கிவிட்டாலும்
ஆச்சர்யப்படுவதற்கில்லை

Thursday, March 25, 2010

மெல்லத்தமிழினி சாகும்??


'Emirates only தமிழ் radio station' இப்படியான அறிமுகத்தோடு ஆரம்பிக்கப்படுகிறது ஹலோ 89.5 FM. இதையே ‘அமீரகத்தின் ஒரே தமிழ் வானொலி’ என்று அறிமுகப்படுத்தினால் என்ன குறைந்துவிடப் போகிறார்களா? அல்லது தமிழர்களுக்குத்தான் பிடிக்காமல் போய்விடுமா? சரி, முழுவதுமாகத் தமிழிலேயே பேசுவது FM-ன் கலாசாரமில்லையென்றால் ‘அமீரகத்தின் முதல் தமிழ் radio station' என்றாவது சொல்லிவிட்டுப் போகட்டுமே.

தமிழுக்காகவென்று ஆரம்பிக்கப்படும் எந்த ஒரு ஊடகமும் ஒரு முடிவோடுதான் இருக்கிறார்கள் ’தமிழைப் பருக தரவே கூடாது’ என்ற முடிவோடு. ஏன் இப்படி? இதற்குக் காரணம் யார்? இரசிகர்களா? கண்டிப்பாக இருக்க முடியாது. கேட்பவர்களையும் பார்ப்பவர்களையும், ரசிப்பவர்களையும் கெடுப்பதே ஏன் சொல்லப்போனால் அவர்களின் ரசிப்புத் தன்மையைச் சிதைப்பதே இப்படியான கலப்படமான ஊடகம்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நாங்கள் என்ன செந்தமிழிலா நிகழ்ச்சி வழங்கக் கேட்கிறோம்? அல்லது ஆங்கிலமே கலக்காமல் முழுக்கத் தமிழில் இருக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறோமா?

ஒரு வாக்கியத்தில் ஒரு வார்த்தை மட்டும் தமிழைப் புகுத்துவதற்குப் பதிலாக 80% தமிழும் 20% ஆங்கிலமும் போனாப் போகுது என்று இருக்கட்டும் என்று விட்டது போக இப்போது நிலை தலைகீழாக 25% தமிழ் 75% ஆங்கிலமென்று பேசிக்கொண்டு ’ஒரே தமிழ் வானொலி’ என்று நாக்கூசாமல் சொல்வதைத்தான் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இவர்கள் பி.எச். அப்துல் ஹமீத்தின் நிகழ்ச்சிகளை கேட்டதில்லையா? இல்லை பி.எச். அப்துல் ஹமீத்தின் நிகழ்ச்சிகள் வெற்றிப்பெறதான் இல்லையா? இன்னும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை இவர்கள் மறந்துவிட வேண்டாம். அவரோடு ஒப்பிட இவர்கள் தகுதியற்றவர்களாகவே இருந்துவிட்டு போகட்டும் ஆனால் அவ்வாறான சிறு முயற்சிக் கூடயில்லையே!?

மலையாள அலைவரிசையை இவர்கள் கேட்டுப் பார்க்கட்டும் எவ்வளவு அழகாக தன் மொழி சிதைவு இருக்காத வகையில் கவனமாகக் கையாளுகிறார்கள் என்று. அவர்களிடமிருந்து படிக்கட்டும். ஹிந்தி 101.6 கேட்க இனிமையாக உள்ளது. ஆரோக்கியமான நல்ல நிகழ்ச்சிகள் தருகிறார்கள். வண்டி ஓட்டுபவர்கள்தான் அதிக அளவில் கேட்கிறார்கள் என்பதைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப தகவல் பரிமாறுகிறார்கள். அவர்கள் மொழியில் இனிமையில்லாததாலோ என்னவோ ஆங்கிலம் கலக்கிறார்கள் அதுவும் ஆங்கிலத்தை அழகாக உச்சரிக்கிறார்கள். ஆனால் தமிழுக்கு அப்படியான அவசியமில்லையே.

நம் மொழியில் ஒரு வகை ஓசையிருக்கிறது. அழகான ஒலியிருக்கிறது, ஆங்கிலமே கலக்கத் தேவையில்லைதான் இருப்பினும் சுலபமாக்கிக் கொள்ளக் கொஞ்சம் ஆங்கிலம் கலந்தால் இருந்துவிட்டுப் போகுது என்று சொல்லலாம் அதற்காக இப்படியா? சென்னையில்தான் ‘தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்’ என்று தத்திகினத்தோமோடு பேசுவதை நவநாகரீகமாகக் கருதுகிறார்கள். தமிழர்களிடம் தமிழில் பேசுவதை மரியாதை குறைவாகவோ, முகசுளிப்போடு பார்க்கிறார்கள் தமிழின் அருமை தெரியாதவர்கள். இருந்துவிட்டுப் போகட்டும்.

’சென்னை தமிழில்’ நிகழ்ச்சியென்று மிக நாராசமான நிகழ்ச்சியும் போகத்தான் செய்கிறது ரசிப்பவர்களும் இருக்கிறார்கள், அப்படியான மட்டமான ரசனையையும் அவர்கள் மூளைக்குப் பழக்கியதில் இவர்களுக்குப் பெரும்பாலான பங்குள்ளது என்பதை இவர்கள் மறக்க வேண்டாம். தமிழ்நாட்டில் தமிழுக்கு மரியாதை அவ்வளவுதான், ஏனெனில் தாய்மடி சுலபமாக கிடைக்கும் போது கசக்கத்தான் செய்யும்

எங்களுக்கு அப்படியல்ல அன்னிய நாட்டில், பல மொழிக் கலாசாரத்தில் வாழும் எங்களுக்கு எப்பவாவது தாயின் அரவணைப்பு கிடைக்கும் போது அதில் அலாதி சுவையிருப்பதாக நம்புகிறோம். தமிழ் நிகழ்ச்சியைத் தேடி கூட்டம் கூடுகிறது. ஊருக்குச் சென்றால் தவறாமல் தமிழ்ப் புத்தகம் வாங்கி வருகிறோம். புதிய தமிழர்களை பார்க்கும் போது புது உறவு கிடைத்ததாகக் கொண்டாடுகிறோம். தமிழ் வானொலி வருகிறது என்று சந்தோஷப்படுகிறோம், தமிழ் பாடல் கேட்டு ஆனந்தத்தில் திளைக்கிறோம். நடுநடுவே பேச ஆரம்பித்துவிட்டார்கள் அதில் தமிழை எங்கே என்று தேடுவதாக உள்ளது! ஏன் இப்படி? யார் இந்த கலாசாரத்தை உருவாக்கியது? சக்தி FM இப்படி பாடாவதியான நிகழ்ச்சி நடத்தி காணாமலே போய்விட்டார்கள். சென்னையில் தருவது போன்ற நிகழ்ச்சியை இங்கு தர வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, இங்குள்ளவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு, அணுகுமுறைக்கேற்றவாறு, தேடலுக்கேற்றவாறு நிகழ்ச்சியை மாற்றிக் கொள்ள முனைவார்களா? எங்களைப் புரிந்துக் கொள்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம் அல்லது Hello கூடிய சீக்கிரத்தில் Bye Bye சொல்லிவிடும்.

Thursday, February 25, 2010

ஒரு வெற்றி விழாவும் சில பின்னணிகளும்..

அமீரகத் தமிழ் மன்றத்தின் விழாக்களைப் பற்றி எழுத வேண்டுமென்றாலே நான் மட்டுமல்ல எங்கள் அமைப்பின் தலைவர் ஆசிப்பும் கூட நம் குழந்தையைப் பற்றி நாமே கூறிக் கொள்வது சரியல்ல என்று எண்ணியே பதியப்பட வேண்டிய பகிரப்பட வேண்டிய விஷயங்கள் பல விட்டுப்போயுள்ளது.

வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் செய்து பார் வரிசையில் விழாக்களை நடத்திப்பார் என்பதையும் சேர்க்க வேண்டிய கட்டாயத்தின் அவசியத்தை உணர்ந்தேயிருப்பார்கள் அமீரகத்தின் தமிழ் அமைப்புகள்.

அபுதாபி பாரதி நட்புக்காக அமைப்பும் அமீரகத் தமிழ் மன்றமும் இணைந்து கோபிநாத் அவர்களை அழைத்து இரு தினங்கள் நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டிருந்தோம். பத்தாம் ஆண்டு விழா என்பதால் பலமணி நேரம் நிறைவான நிகழ்ச்சி தர வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்தாலும் அபுதாபியில் வியாழக்கிழமைகளில் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பேயில்லை என்பதையறிந்து கோபிநாத் வந்தால் போதும் பத்தாம் ஆண்டுவிழா சிறப்பு பெற்றுவிடுமென்ற நம்பிக்கையில் வியாழன் நிகழ்ச்சி நடத்த ஒப்புக் கொண்டு அரும்பாடுபட்டு அரங்கத்தையும் அமர்த்தினோம். ஒவ்வொரு அரங்கத்தைக் கேட்கும் போதும் அந்த தேதியில் கிடைக்கவில்லை என்று செய்தி வரும் போது மிகவும் சோர்வாகியது மனது. சுழற்றாத எண்ணுமில்லை, மேயாத இணைய தளமுமில்லை என்ற அளவுக்கு எல்லா இடத்தில் தேடியும் எங்கள் தேவைகளோடு சரிவரவில்லை. இறுதியில் துபாய் பெண்கள் உயர்தொழில் நுட்பக் கல்லூரி வளாக அரங்கம் முடிவானது. எல்லா அரங்கமும் தட்டிக்கழிந்தது இது போன்ற அற்புதமான வசதிகள் கொண்ட அரங்கத்திற்காகவென்று நம்பினோம். இந்த அரங்கம் எங்களுக்குக் கிடைத்ததே எங்களுக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக இருந்தது. இதுவரை இங்கே எந்தத் தமிழ் நிகழ்ச்சியும் நடைபெற்றதே இல்லை. எங்கள் பத்தாம் ஆண்டுவிழாவே முதல் தமிழ் நிகழ்ச்சி என்பதோடு அமீரகத்திற்கு முதல் முறையாக கோபிநாத் என்ற நிறைவான இன்பத்தில் திளைத்திருந்த வேளையில், `நீயா நானா போன்ற ஒரு ஆரோக்கிய விவாத மேடையில் பங்குபெற விருப்பமா` என்ற அறிவிப்பை பரவலாக வலம்வர செய்து மக்கள் உற்சாகமாக பெயர்கள் தந்துக் கொண்டிருந்த தருணத்தில்தான் விஜய் டி.வி.யில் `நீயா நானா` பகுதியில் ஒரு சர்ச்சைக்குரிய தலைப்பின் பிரச்சனை பீறிட்டது.

கோபிநாத் இங்கு வந்துவிடுவாரா என்ற சவால்கள், கோபிநாத் எங்கே வரப்போகிறார் என்ற ஏளனங்கள், கண்டிப்பாக நிகழ்ச்சி நடக்கப் போவதில்லையென்ற எதிர்மறை துன்புறுத்தல்கள் எங்களைத் துரத்தியது. என்னவானாலும் சரி கோபிநாத் வந்தே ஆக வேண்டுமென்ற ஆதங்கம் மேலோங்கியது.

எதிர்மறையான செய்திகளும், சிலரின் பொறாமை சூழ்ச்சியிலும் குழப்பித்திற்குள்ளான அபுதாபி அமைப்பு அதன் விளைவாக எங்களுடன் இணைந்து செயல்படவிருப்பதிலிருந்து பின்வாங்கியது. கோபிநாத்தை நாங்கள் நேரடியாகத் தொடர்பு கொண்ட போது 18 ஆம் தேதிக்கு அவருக்கு படப்பிடிப்பிடிப்பு இருப்பதால் வரவியலாது என்ற செய்தி எங்களை நொறுங்க வைத்தது. ’அடுத்து என்ன?’ என்ற போது எத்தனை நாட்கள் காத்திருந்தாலும் பரவாயில்லை ஆனால் நம் ஆண்டுவிழா கோபியோடுதான் என்பதில் உறுதியாக இருந்தோம். வெவ்வேறு தினங்களின் சாத்தியக்கூறுகளையும் மற்ற விருந்தினர்களின் வசதிகளையும் சரிப்பார்த்திருந்த போது குறித்த தேதியில் நிகழ்ச்சி நடைபெற வேண்டுமென்ற என் பிராத்தனை வீண் போகவில்லை. பிராத்தனையின் பலனாக 18 ஆம் தேதியிருந்த படப்பிடிப்பு அவரே ஒத்திவைத்து ஒத்துழைத்தது முதல் மகிழ்ச்சி. எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று விழா வேலைகளில் மூழ்கினோம்.

எவ்வளவு விளம்பரம் செய்திருந்தாலும், விழா அமைப்பவரின் பின்புலம் சிறப்பானதாக இருந்தாலும், விழாவின் விருந்தினர்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் சரி நம் தமிழ் மக்கள் நேரத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்து சேர்வது என்பது இன்னும் குதிரைக் கொம்பாக உள்ள விஷயமே. அப்படியிருக்க அமீரகத் தமிழ் மன்றம் நடத்திய 10 ஆம் ஆண்டு விழா வியாழன் 18 பெப்ரவரி 2010 துபாய் உயர்தொழில்நுட்பக் கல்லூரியில் சரியான நேரத்திற்குத் தொடங்கியதே விழாவின் முதல் வெற்றி.

நிகழ்ச்சி தொய்வில்லாமல் நன்றாக அமைந்தது என்று பலதரப்பட்ட பார்வையாளர்களின் மடல்கள் வந்து குவிந்தாலும் மேடைக்குப் பின்னால் நடந்த இடையூறுகளை யாரும் அறிந்திருக்க முடியாதுதான். நாங்கள் செய்த முதல் தவறு நம் மக்களை நம்பி நுழைவுச் சீட்டை கிழிக்காமல் உள்ளே அனுமதித்தது. ஆயிரத்தி இருநூறு மக்கள் மட்டுமே கூட முடியும் என்பதால் அழைப்பிதழையும் விநியோகித்து நேரத்திற்கு வர முடியாவிட்டால் வாயில் கதவு பூட்டப்படும் என்று எச்சரிக்கை விடுத்தும் நிறைய பேரால் நேரத்திற்கு வர இயலவில்லை. காரணம் வியாழன் வேலைநாள் என்பதால் மக்கள் வரத் தாமதமானது. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மிகவும் சாமர்த்தியமாக சிலர் தம்முடைய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்து அழைப்பிதழ் இல்லாமலேயே அரங்கிற்கு வரச் செய்து, தம் நுழைவுச்சீட்டை மீண்டும் வெளியில் அனுப்பி அவர்களை உள்நுழையச் செய்த சூழ்ச்சி எங்களைப் பல பிரச்சனைகளுக்குள்ளாக்கியது. அழைப்பிதழ்கள் இருந்தும் பலர் வெளியேறியதும், பலர் நின்று கொண்டு நிகழ்ச்சி பார்க்க நேர்ந்ததும் இதனால்தான். நிறைந்த அரங்கத்தைத் தந்திருந்தாலும் இதனை முதன்மைக் குறையாகவே கருதுகிறோம்.

முக்கிய பிரமுகர்களுக்கு வேறு நிறத்தில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தாலும் அதில் இருக்கை வரிசைகள் குறிக்கப்பட்டிருந்ததை யாருமே பொருட்படுத்தாமல் தானே அதிபதி என்பதாக முதல் வரிசையில் உட்கார்ந்ததால் எங்கள் புரவலர்களும் நிற்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளானார்கள். ஒரு நிகழ்ச்சி நடக்கப் பொருளாதாரம் மிகவும் முக்கியமானது. அந்தப் பொருளை தந்து உதவிய புரவலர்களுக்கு முதல் வரிசையை தந்து கவுரவிப்பதுதானே நியாயம்? அந்த வகையான மரியாதையைக் கூட செய்ய முடியாமலாகிவிட்டது சிலரின் ஒத்துழைப்பில்லாமல் போனதால். தன்னார்வக் குழு அமைத்து இருக்கை சரிப்பார்த்து அமர வைக்க வேண்டிய சிலரே தம் அறை நண்பர்களை முன்னிருக்கையில் உட்கார வைத்து வேடிக்கை பார்த்த நிகழ்வு கூட நம் விழாவில்தான் முதன்முறையாக நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். எப்படித்தான் நம் மக்களால் இப்படி இருக்க முடிகிறது என்று யோசிக்கக் கூட முடியவில்லை.

நாம் ஒரு விழாவிற்குப் போவோம் எவ்வளவு பெரிய சிறப்பு விருந்தினர் வந்திருந்தாலும் மேடையில் அவர் வரும்போது பார்த்துக் கொள்வோமே தவிர எப்படியாவது முந்தியடித்துக் கொண்டு மேடையேறி அவர் அருகே நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியதே இல்லை. நான் என்னைப் போலவே மற்றவர்களையும் எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் சில அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களே பின் வழியாக மேடைக்கு வந்து பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு நம்மவர்கள் மேடை நிர்வாகத்தைச் சரியாக கவனித்துள்ளார்கள். மேடையில் விலை மதிப்புள்ள பொருட்களிருக்கும் அது தவறுதலாக களவுப் போய்விட்டால் யாரைச் சந்தேகிப்பது? இந்த பொது அறிவு கூட இல்லாமல் எப்படித்தான் சிலரால் செயல்பட முடிகிறதென்றே புரியவில்லை. நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களை அணுகி உத்தரவு கேட்டல்லவா பின் மேடைக்கு வர வேண்டும்? யார் கொடுத்தார்களோ இவர்களுக்கு அந்த தைரியத்தை.

இவர்கள் இப்படியென்றால் விழாவிற்கு ஒரு வாரத்திலிருந்து ஏன் விழாநாளன்று கூட நுழைவுச் சீட்டுக் கேட்டு மிரட்டல்கள். சொன்னால் நம்பமாட்டீர்கள் நுழைவுச்சீட்டு இந்த இடத்தில் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று பலவாறு விளம்பரப்படுத்தி ஒரு வாரத்திற்கு முன்பே நுழைவுச் சீட்டுகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டு விட்டது. எல்லாம் முடிந்த பிறகு மிகவும் தாமதமாக தனக்கு எப்படியும் கிடைத்துவிடுமென்ற எண்ணத்தில் வாங்காமல் விட்டுவிட்டு நான் இன்னார், நான் இந்த நிறுவனத்தின் மேலாளர் ’எனக்கு நுழைவுச்சீட்டு தராமல் எப்படி விழா நடக்க முடியும்’ என்ற தொனியில் மிரட்டல்களையும் பொறுத்துக் கொண்டோம். தெரியாதவர்களிடமும் இனிமையாகப் பேசி நுழைவுச்சீட்டு முடிந்துவிட்டது என்று சொன்னாலும் மற்றவர்களின் சூழ்நிலையோ பிரச்சனையோ அறியாமல் அதட்டுவதும், ’என்ன முகத்தில் அறைந்தாற் போல் தொலைப்பேசியை அவர் துண்டிக்கிறார் நான் யார் தெரியுமா?’ என்ற வண்ணம் புகார் எழுப்பியவர்களையும் இந்த இடத்தில் நினைவுகூராமல் இருக்க முடியவில்லை. விழா நடப்பதே இவர்களைக் கொண்டு நிறுத்தத்தான் என்று எப்படி இவர்களால் நம்பமுடிகிறது. இந்த ஆதிக்கப் போக்கோடு இருப்பவர்கள் எப்போதுதான் மாறுவார்கள்?

இதாவது பரவாயில்லை. கட்டுப்பாடு என்ற விசயம் மருந்துக்குக் கூட நம் மக்களிடையேயில்லை. அரங்கிற்குள் தண்ணீரோ பிற தின்பண்டங்களோ கொண்டு வரக்கூடதென்று அழைப்பிதழில் அச்சிட்டிருந்தும் ஏமாற்றி எடுத்துச் செல்வதை சாமர்த்தியமாகவே நினைக்கிறார்கள் அவர்கள். நிகழ்ச்சி முடிந்ததும் அரங்கம் முழுக்க தண்ணீர் பாட்டில்கள். மீண்டும் ஒரு தமிழ் நிகழ்ச்சிக்கு அரங்கத்தை வழங்க நிர்வாகம் யோசிக்காமல் என்ன செய்யும்? வெளியில் உணவகத்திலும் கூட இதே நிலைதான். ஆயிரம் குப்பைக் கூடைகள் வைத்திருந்தும் தரை முழுக்க தேநீர் கோப்பைகளை விசிறியடித்து நமது பண்பாட்டைக் காப்பாற்றினார்கள் தமிழர்கள். இதனால் எனக்கென்ன நஷ்டம் என்ற நினைப்பிருக்கிறதே தவிர இம்மாதிரியான விழாக்களை எத்தனை சிரமப்பட்டு நடத்துகிறார்கள் என்பது போன்ற உணர்வு துளியும் இருப்பதாகத் தெரியவில்லை.

எத்தனை மனக் கசப்புகள் இருந்தாலும் ஓய்வில்லாமல் பலவகை விழா வேலையால் உடல் சோர்ந்திருந்தாலும், விழாவின் வெற்றிக் களிப்பிலும் மக்களின் நம்பிக்கையான வார்த்தைகளிலும் பாராட்டுதல்களிலும் கிடைக்கும் உற்சாகம் எல்லாவற்றையும் மறக்கச் செய்து நம்மை புதுப் பொலிவோடு நம்முடைய அடுத்த விழாவை நோக்கி விரையச் செய்கிறது...

இதையும் பாருங்கள்:
http://kusumbuonly.blogspot.com/2010/02/blog-post_23.html

மற்ற படங்களையும் காணொளியையும் பார்க்க எங்கள் முகப்புத்தக பக்கத்தில் இணைந்துக் கொள்ளுங்கள்: http://www.facebook.com/ameeraga.thamiz.mandram

தமிழ் இணையச் செய்தித் தளங்களில் எங்களது செய்தி:

http://sangamamlive.in/index.php?/content/view/7043/1/

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2010/uae-tamil-mandram-celeberates-10th.html

http://www.tamilsaral.com/news%3Fid%3D3567.do

http://www.thinnai.com/?module=displaystory&story_id=81002201&format=html

விழா செய்தி ஆங்கிலத்திலும்:

http://www.prlog.org/10544127-10th-anniversary-of-ameeraga-thamiz-mandram-tamil-association.html

http://www.pressreleasepoint.com/ameeraga-thamiz-mandram039s-10th-anniversary-celebration
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி