Wednesday, December 11, 2013

கடந்து போன காலம்.. The Past - Le Passé

ஆரம்பக் காட்சியைப் புரிந்து கொள்ள கடைசிக் காட்சி வரை நம்மைப் பார்க்க வைக்கும் படம் 'தி பாஸ்ட்' (The Past - Le Passé). தலைப்பை 'தி பாஸ்ட்' என்று வைத்துவிட்டு ஒரு 'பிளாஷ் பேக்' கூட இல்லாமலும், இதுவரை நடந்தது என்ன என்று ஒரு கதை சொல்லி மூலமோ குட்டிக் கதை மூலமோ சொல்ல முற்படாமல் கதையில் வரும் காட்சிகளின் நகர்வை வைத்தும், வசனங்களை வைத்தும் நம்மைப் புரிந்து கொள்ள வைக்கிறார் இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹதி.

ஒரு படத்தைக் கண்ணெடுக்காமல் அதில் மூழ்கி நாமும் அதில் ஒர் அங்கமாகி நடக்கும் நிகழ்வுகளைக் கவனித்து அதைப்பற்றி விமர்சனம் செய்வது மற்றவர் வீட்டு விஷயத்தைப் புறம் பேசுவது போல் உணர வைக்கும் அளவிற்கு அமைந்துள்ள திரைப்படம். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கி நீ என் கதையின் வெறும் கதாபாத்திரமல்ல இது நடிப்பல்ல நிஜமென்று நம்மை நம்ப வைக்கும்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் பங்கை செவ்வனே செய்துள்ளனர். அது முக்கிய கதாபாத்திரமாக இருந்தாலும் சரி ஒரு காட்சியில் வசனமில்லாமல் வந்து போகிறவரென்றாலும் சரி. இப்படி அமைய வேண்டுமென்றால் அந்த இயக்குனர் தன் கண் முன்னே இப்படத்தை இயக்குவதற்கு முன்பே ஓட்டிப் பார்த்திருக்கக் கூடுமென்பது என் கணிப்பு.

'எ செப்பரேஷனை' தொடர்ந்து அதே விவாகரத்தை மையமாகக் கொண்ட படம் 'தி பாஸ்ட்'. அஹ்மத்- மேரியான் இருவரும் காரை பின்னோக்கி எடுக்கும் போது பின்புறம் ஒரே நேரத்தில் திரும்பி பார்ப்பது கடந்தவற்றைத் திரும்பிப் பார்ப்பவர்கள் இவர்கள் என்பது போல 'தி பாஸ்ட்' என்று படத்தலைப்பு விரிகிறது. படத்தின் காட்சிகள் திருமண முறிவுக்குச் செய்யும் ஏற்பாடுகளும் அதன் பிறகு மேரியான் ஏற்படுத்திக் கொள்ளப் போகும் புதிய உறவைப் பற்றியும் புதுத் திருமண வாழ்வையொட்டியும் அதனால் பாதிக்கப்படும் குழந்தைகளைப் பற்றியுமாக நகர்கிறது.

திருமணத்தின் கசப்பால் இரு குழந்தைக்குப் பிறகு விவாகரத்து பெற்று அஹ்மத்தை கைப்பிடித்து அவர் நிழலில் குழந்தைகள் வளர்ந்து, பிறகு அவருடனும் பிளவென்பதால் மற்றொரு விவாகரத்தை வேண்டும் மேரியான், சமீர் என்பவரின் குழந்தையைச் சுமர்ந்து கொண்டு அவரை மறுமணம் செய்ய விரும்புவதை மேரியோனின் மகள் லூசி வெறுக்கிறாள். சமீரின் மகன் ஃபூவாதும் புது உறவுகளை ஏற்க முடியாமலும் தவிர்க்க முடியாமலும் தன் கோபத்தை வெளிப்படுத்துகிறான். தன் வீட்டில் அவனைப் பார்த்துக் கொள்ள யாருமில்லை. அவனது தாய் தற்கொலை செய்ய முயற்சித்துக் கோமாவில் இருக்கிறாள். அவளைத் தற்கொலைக்குத் தூண்டுவது எது? மேயான்- சமீரின் தொடர்பா? இந்தப் புள்ளிகளில் நகர்வதுதான் கதை. ஒரு பதின்ம வயது மகள் தாயின் மூன்றாவது திருமணத்தை எதிர்கொள்ளும் போராட்டமும், அமைதியாக வாயே திறக்காமல் கண்களால் பேசி வேடிக்கை பார்க்கும் அவள் தங்கை அக்காவின் கூற்றில் நியாயமிருக்கிறதா இல்லையா என்று புரிந்துக் கொள்ள முடியாத தவிப்பும், சமீரின் மகனாக வரும் ஃபூவாத்தின் வசனமில்லாத முகபாவத்தில் ஆயிரம் விஷயங்களைச் சொல்லிச் செல்ல வைக்கிறார் இயக்குனர் ஃபர்ஹதி.

தன்னைப் பற்றி மட்டும் யோசித்து சுலபமாகக் கண்ணீருடன் கிழித்துப் போடும் திருமணங்களின் வலியில் துடிப்பது குழந்தைகள் என்பதை அழுத்தமாகக் காட்டி இருக்கும் இயக்குனர் அதில் எந்த மதத்தை வலியுறுத்தியோ, அறநெறி, ஒழுக்கப் பிரச்சனைகளின் போதனையோ இல்லாமல் மிக நேர்த்தியாக அற்புதமாகச் சொல்ல விரும்பியிருக்கிறார். 'எ செப்பரேஷன்' - இஸ்லாமிய சமுதாயத்தை முன்னிறுத்தி அதன் போலித்தனமான பாசாங்குகளையும் முக்கியமாக வர்க்க வேறுபாட்டை வெளிப்படுத்தியும் அந்த உண்மையை உரக்கச் சொல்லியும் ஆஸ்கர் தட்டிச் சென்றவர் ஃபர்ஹதி. இந்தப் படத்தில் மதச்சார்பற்ற மேலை நாடுகளில் சுதந்திரம் என்ற பெயரில் பொறுப்பற்ற தவறான நடத்தையால் அடுத்தத் தலைமுறைக்கு ஒரு தவறான எடுத்துக்காட்டாகின்றனர் என்பதையும் புலப்படுத்தியிருக்கிறார்.

'அம்மா சாகட்டும்' என்கிறான் சமீரிடம் மகன் ஃபூவாத். ஆச்சர்யத்துடன் சமீர் 'ஏன் அப்படிச் சொல்கிறாய்?' என்று கேட்க, 'உயிர் வாழ விரும்பாதவர்கள் தானே தற்கொலை செய்ய முயற்சிப்பார்கள், பின்பு ஏன் அம்மா உயிருடன் இருக்க வேண்டும்?' என்று தாய் தன்னைப் பற்றிச் சிறிதும் எண்ணிப் பார்க்காமல் வெறுக்கத்தக்க செயலின் கோப வெளிப்பாட்டை ஒரு குழந்தையாகத் தம் உடல்மொழியின் மூலம் வெளிப்படுத்தும் அந்தப் பிஞ்சின் நடிப்பு பாராட்டுக்குரியது.

ஏ.ஆர். ரஹ்மான் எப்படித் தன் ஹிட் மெட்டை அடுத்தப் படத்தில் புகுத்தி அதையும் ஹிட்டாக்குவாரோ அப்படி ஃபர்ஹதி ஆஸ்கர் வென்ற 'எ செப்பரேஷனில்' பேமேன் மவாதியுடைய அதே தோற்றத்தையும் ஒப்பனையும் கதாநாயகனான அஹ்மத்தாக வரும் அலி முசஃபாவுக்குத் தந்திருக்கிறார். நானும் இந்தக் கதாநாயகனை படம் முடியும் வரை ஃபர்ஹதியின் மற்றப் படங்களான 'அபவுட் எல்லி', 'எ செப்ரேஷனில்' வரும் பேமேன் மவாதி என்றே நினைத்திருந்தேன். அதன் பிறகுதான் இவர் - அலி முசாஃபா ஓர் ஈரானிய நடிகரைப் பிரஞ்ச் கற்றுக் கொள்ளச் செய்து இந்தப் படத்தில் நடிக்க வைத்துள்ளார் - என்பது பற்றி தெரிந்துக் கொண்டேன்.

இப்படத்தின் கதாநாயகி மேரியானாக வரும் பெஜோ தேர்ந்த நடிகை. சென்ற வருட ஆஸ்கருக்கு சிறந்த நடிக்கைக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். இப்படத்தில் கோபக் கணைகளை வீசும் போதும் தன் மகள் லூசியிடம் 'ஏன் எனக்கு இப்படி ஒரு காரியத்தைப் பண்ணினே' என்று ஓலமிட்டு அழும் போதும், அவர் அடையும் ஆத்திரத்தில் நாமும் சேர்ந்தே நடுங்கிவிடுகிறோம்.

கவிதை நயம் கொண்ட ஃபர்ஹதியின் படங்களில் சில காட்சிகளில் நேரடியாகச் சிலவற்றைச் சொல்லாமல் சொல்லிவிடுவார். இப்படியாக ஒரு காட்சியில் குழாயில் தண்ணீர் கசியும் அஹ்மத் அதைச் சரி செய்து நிறுத்த முற்படுவார். சரி செய்துவிட்டார் என்று நினைக்கும் போது அது மறுபடியும் கசிகிறது என்பார். உடனே சமீர் நீங்க ஒதுங்குங்க நான் சரி செய்கிறேன் என்று குனிவார். இந்தக் காட்சியில் நான் புரிந்துக் கொண்டது மேரியானின் கசியும் அன்பையும் தேவையையும் பூர்த்தி செய்ய முற்பட்டு முடியாமல் இப்போது சமீர் அதில் முயற்சிக்க இறங்கியுள்ளார் என்பதாக.

காட்சிகளைக் கூர்ந்து கவனித்தால் மறைவான நிறைய விஷயங்கள் வசனமில்லாமல் புரிந்துவிடும். இப்படியான நுணுக்கமான காட்சிகளைச் சரியாகப் பதிந்துவிடுபவர் ஒளிப்பதிவாளர் மஹ்மூத் கலாரிதான். இயக்குனர் பார்த்த, பார்க்க விரும்பிய அத்தனை பொருட்களையும் காட்சி விவரிப்பையும் ஒரே 'பிரேமில்' கச்சிதமாக நம் கண் முன் நிறுத்துபவர். சின்ன அறையாக இருந்தாலும் சரி, சாலைக்கு அப்பால் ஓடும் ரெயில் தண்டவாளமாக இருந்தாலும் சரி எல்லாவற்றையும் நமக்குக் காட்டி விடுகிறார். சின்ன ஜன்னலின் வழியாக மேரியான் கீழே குழந்தைகளின் சைக்கிளை சரி செய்யும் அஹ்மத்தை கவனிப்பதைக் கூட அவர் கண் வழியே அந்தக் காட்சியை நம்மைப் பார்க்க வைக்க வல்லவர். நான் விவரிக்கும் ஒவ்வொன்றும் நீங்கள் இந்தப் படத்தைப் பார்த்து இரசிக்கும் போது புரியும்.

'தி பாஸ்ட்' கடந்த காலம் அல்லது கடந்தவை என்பது வெறும் கடந்தவையல்ல நடந்த பாதை, நினைவுகள், பழைய உறவு என்று பல பொருள்படும் இந்தப் படத்தின் முதல் காட்சியில் அஹ்மத்- மேரியான் இருவரும் அடர்த்தியான கண்ணாடியின் வெவ்வேறு புறங்களிலிருந்து கையசைவின் மூலம் மட்டுமே பேசிக் கொள்வார்கள். அதுதான் அவர்கள் வாழ்ந்த கடந்தவையின் புரிதல்.

Tuesday, October 01, 2013

அறிந்தும் அறியாமலும்...

மற்றவர்கள் பேச்சை நான் எப்போதும் கவனிப்பதே இல்லை. எனக்குத் தொடர்புடையதாக இருந்தால் அல்லது என்னுடன் பேசினால் மட்டுமே அதில் கவனம் செலுத்துவேன். மிக அருகிலிருந்து பேசினால் கூட அதை காது கொடுத்து கேட்க மாட்டேன். பலர் இதற்காக என்னைக் கடிந்து கொண்டிருக்கிறார்கள். என் மேலாளர் கூட போனில் ஏதாவது பேசிவிட்டு அது தொடர்பாக என்னிடம் ஏதாவது கேட்டால் எனக்குத் தலையும் புரியாது வாலும் புரியாது. ஆரம்பத்தில் மேலாளர் என்னுடன் இதற்காகவே மிகவும் சினம் கொண்டிருக்கிறார். ஆனால் பின்னர் அவருக்கும் என் சுபாவம் புரிந்து அதன் பின் பிடித்தும் போய்விட்டது.


அதனால் என் பக்கத்தில் உட்கார்ந்தே பலகதைகளும் ரகசியங்களும் பகிர்வார்கள். அதன் பிறகு என்னை அழைத்து ”இவன பாருடா சரியான பேக்கு. இவன மாதிரி எதையுமே கண்டுக்காம இருந்துட்டா பிரச்சனையே இல்ல” என்று முடிக்கும்போதுதான் அங்கு ஏதோ நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வேன். இப்படியான என் சுபாவம் என்னை பாதித்ததே இல்லை. நான் அதற்காக வருந்தியதுமில்லை. ஆனால் இன்று வருந்துகிறேன்.

ஆஷியின் தொலைப்பேசி சம்பாஷனையை கவனிக்காமல் போனதற்கு மனதிற்குள் குமுறுகிறேன். என்ன நண்பன் நான்? இல்லை, உண்மையில் நாங்கள் இருவரும் நண்பர்கள் இல்லை.ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம், அவ்வளவுதான். இருந்தாலும் எங்கள் அறையில் மொத்தம் மூன்றே பேர்தான் உட்காருகிறோம், இருந்தும் நாங்கள் மூவரும் பொதுவான விஷயங்களைப் பேசிக்கொள்வோமே தவிர நட்புரீதியாக சொந்தவிஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில்லை. ஜோசப்புக்கு திருமணம் நடந்தபோது சம்பிரதாய வாழ்த்தைப் பகிர்ந்து கொண்டோமே தவிர உரிமையாக ”ட்ரீட்தாடா” என்றோ ”திருமண புகைப்படத்தைக் காட்டு”என்பது போன்றோ பேசிக்கொண்டதில்லை. உங்களுக்கு விசித்திரமாக இருக்கலாம் ஆனால் நாங்கள் அப்படித்தான்.

இந்த அலுவலகத்தில் நான் கடந்த ஐந்து வருடங்களாகப் பணிபுரிகிறேன். கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் ஆஷி வேலையில் சேர்ந்தார். அதற்கு முன்பு அவரிடத்தில் பணியில் இருந்த மணியிடம் கூட நான் அதிகம் வைத்துக் கொண்டதில்லை. ஜோசப் இதற்கு முன் லண்டனில் எங்கள் தலைமை அலுவலகத்திலிருந்தான். சமீபமாக ஒரு எட்டு மாதத்திற்கு முன்புதான் துபாய்க்கு அவனை மாற்றினார்கள். அலுவலகம் என்பது நான்கு அறைகள் கொண்ட சிறிய அலுவலகம்தான். முகப்பில் வரவேற்பறையில் வேலையில் இருந்த பெண் உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஒருவாரமாக அலுவலகத்திற்கு வரவில்லை.மேலாளர் துபாயில் இருப்பதே இல்லை. லண்டன், துபாய், இந்தியா என்று பறந்து கொண்டே இருப்பார். நானும் ஆஷியும்தான் பெரும்பாலும் அலுவலகத்தில் இருப்போம். ஜோசப் வெளி வேலைகள் அதிகம் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் வருவார் போவார்.

நானும் ஆஷியும் காலை 9மணிக்கு சரியான் நேரத்திற்கு வந்து விடுவோம். கதவைத் திறக்க எங்கள் கைரேகைகள்தான். ஆனால் சரியாக 5மணிக்கு வீட்டுக்குப் போக மாட்டோம். நாங்கள் மூவருமே அப்படித்தான். ஜோசப் திருமணமான பிறகும் கூட நேரத்திற்கு வீட்டுக்குப் போகிறவரில்லை. ஆனால் அன்று நான் கிளம்பும்போதே ஜோசப்பும் கிளம்பிவிட்டார். ஆஷி கண்ணாடிக்கு அந்தப்புறமிருந்து எதோ விவாதத்தில் இருந்தார். நாங்கள் ‘bye' என்று கையசைத்தோம் அதற்குக் கூட பதில் சொல்லவில்லை. அதை எதிர்பார்த்து சொல்லாததால் நாங்களும் கண்டு கொள்ளவில்லை. இப்போது இந்த ஒவ்வொரு விஷயமும் என் மண்டையைக் குடைகிறது.

முகம் சிவந்திருந்தவனை ”என்னஆச்சு” என்று கேட்டிருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது. எனக்கு நினைவிருப்பதெல்லாம் யாருடனோ சத்தமாகக் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்ததுதான். எதையுமே கவனிக்காத எனக்கும் கூட அவன் பேசியது இடையூறாக இருந்தது. காரணம் அவ்வளவு சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார். ‘விஸ்வரூபம்’ பற்றி ஏதோ தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார் என்று மட்டும் எனக்குத் தெரியும். ஒருமுறை திரும்பிப் பார்த்ததுதான் தாமதம் தன் கைப்பேசியுடன் பேசிக்கொண்டே‘ மீட்டிங் ரூமுக்கு’ச் சென்று அங்கு உட்கார்ந்து பேசினார். ஜோசப் என்னைப் போல் இல்லை கொஞ்சம் விவரமானவன். அவன் கவனிக்க முற்பட்டிருக்கிறான். ஆனால் அவனுக்குதான் தமிழ் புரியாதே!அதனால் அவன் புரிந்து கொண்டது ஒரு படத்தைக் குறித்துத்தான் ’கேர்ள்பிரண்டுடன்’ ஏதோ சண்டை. இருவரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை, அதனால் ஒரு படத்தின் சர்ச்சை அவர்கள் உறவை உலுக்கிக் கொண்டிருந்திருக்கிறது. அது தொடர்பானவிவாதங்கள், சர்ச்சைகள் என்று தொடர்ந்து கொண்டிருந்திருக்கிறது. அதுவும் இவனுக்குப் புரிய காரணம் இடையிடையே ஆங்கிலம் கலந்து பேசியதுதான். இதையெல்லாம் இப்போது ஊகித்துச் சொல்கிறான் ஜோசப். அவன் அப்போதே சொல்லியிருந்தாலும் நான் ஒன்றும் தலையிட்டிருக்க மாட்டேன்தான். எதற்காகவோ நான் திரும்பும்போது கண்ணாடிக்கு அந்தப் பக்கம் அவர் பேசிக் கொண்டிருப்பதும் அவர் கண்கள், காதுகள் முகமெல்லாம் சிவந்திருப்பதையும் கவனித்தேன். ஆஷி நல்ல நிறம். ரொம்பக் குளிரென்றாலும் சரி, ரொம்ப வெக்கையாக இருந்தாலும் சரி முகம் சிவந்து விடும். அதனால் அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை நான். கருதியிருக்கவேண்டுமென்று இப்போது மனம் அழுத்துகிறது.

கொஞ்சம் ‘டென்ஷன்பார்ட்டி’ ஏதோவொரு காரணத்திற்காகவும் காரணமே இல்லாமலும் கூட அடுத்தடுத்து சிகரெட் ஊதித் தள்ளுவதில் வல்லவர். நேற்று காலையில் வேலைப்பளுவில் மண்டையை உடைத்துக் கொண்டு மூழ்கியிருந்தபோது’ஏதாவது தலைவலி மாத்திரை இருக்கா’ என்று என்னிடம் கேட்டார். இல்லையென்றேன். ச்சே!எங்காவது சென்று வாங்கிக் கொடுத்திருக்கலாமோ, கொடுத்திருந்தால் இப்படி நடந்திருக்காதோ என்றெல்லாம் இந்த நொடியில் நினைக்கிறேன். 34 வயதில் இப்படியெல்லாம் நடக்குமென்று யார் எதிர்பார்த்தார்கள்? நேற்று மாலை அவர் முகத்தைப் பார்க்கும்போது அதுதான் நான் அவரைக் கடைசியாகப் பார்க்கிறேன் என்று தெரியாமல் போய்விட்டது.

நான் இன்று காலையில் அலுவலகத்தின் உள்ளே நுழையும்போது ஆஷி தன் இருக்கையில் கண் மூடித் தலையைப் பின்புறமாகத் தொங்கவிட்டவனாகக் கிடந்தான். நான் ஏது இவர் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டாரே என்று நினைத்துக் கொண்டே உள்நுழைந்து ‘குட்மார்னிங்’என்றேன். சத்தமே இல்லை.

“தூக்கமா?” என்றேன்.

அதற்கும் சத்தமில்லை. என் கணினியை ‘ஆன்’ செய்து விட்டு மனதிற்குள் ஏதோ ஒரு பயம் பிடிக்க ஆஷியைத் தட்டி எழுப்பலானேன்.

”........” அசைவுமில்லை.

அவர் மீளாஉலகத்தின் நித்திரையில் இருக்கிறார் என்றுஅறியாமல் உரக்கக் கத்திப் பார்த்தேன் தூக்கம் களையுமென்று. பலனில்லை. மெதுவாக நடுக்கத்துடன் என் விரல்களை அவர் நாசியில் வைத்துப் பார்த்தேன் ‘கடவுளே ஒன்றுமாகியிருக்ககூடாது’என்று பிரார்த்தித்தபடி. இறந்து விட்டிருக்கிறார்!! என்னால் நம்பவே முடியவில்லை. என்ன செய்வதென்றறியாமல் பதற்றமானேன். முதலில் ஜோசப்பை அழைத்தேன். ‘எங்கிருக்கிறாய்’என்று கேட்டேன்.கீழேதான் என்றார். விரைந்து வரச் சொன்னேன் விஷயத்தை விவரிக்காமல். வந்து பார்த்தவுடன் ஒரு அடி பின்னால் ஒதுங்கி நின்று ஓலமிட்டார். ஆஷி காதிலிருந்து இரத்தம் கசிவதைகைக் காட்டித் திணறலுடன் ஏதோ சொன்னார். லண்டனில் இருக்கும் மேலாளரைத் தொடர்பு கொண்டு இது பற்றிச் சொன்னேன். அவரோ ‘இறந்துவிட்டாரா?’ என்று அதிர்ச்சி அடைவதற்குப் பதில்‘அலுவலகத்திலா’என்றுவியப்படைந்தார். உடனே போலிஸுக்கு அழைத்து விபரம் சொல்லி என்ன செய்வது என்று கேட்டு அதன்படி காரியங்களைச் செய்யச் சொன்னார். இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது சம்பிரதாயங்களும் பரிசோதனைகளும்.

என்னையும் ஜோசப்பையும் இன்று முழுக்க போலீஸில் வைத்திருந்தார்கள்.

முகம் தெரியாத இணைய நண்பர்களுடன் முகநூலில் வளைய வரும் எனக்குப் பக்கத்தில் இருக்கும் ஒருவரின் பரிதவிப்பில், பிரச்சனையில் பங்கெடுக்க முடியவில்லை என்ற குற்றவுணர்வில் இருந்தேன். ’பிரைன் ஹாமரேஜ்’அல்லது‘கார்டியாக்அரஸ்ட்’ஏதாவது ஒன்றாகத்தான் இருக்க முடியுமென்று ஜோசப் ஊகித்துக் கொண்டிருந்தார்.ஆஷியுடன் பேசிய விஷயங்கள், அலுவலகம் தொடர்பாகப் போட்ட சண்டைகள், பொது விஷயத்தைப் பற்றிய எங்களது விவாதங்கள் எல்லாம் கண்முன் வந்து போய்க்கொண்டிருந்தது. ஆஷியின் முகம் என் கண்சிமிட்டலில் கூட களையவில்லை. ஒருவரின் மறைவு அல்லது பிரிவுக்குப் பிறகுதான் அவர் நம்முடன் எவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கிறார் என்பது புரியும் போலிருக்கிறது என் மரமண்டைக்கு.

ஆஷியின் மறைவுக்குக் காரணம் வேலைப்பளுவா? சிகரெட்பழக்கமா? அவருடைய முன்கோப டென்ஷனா? அல்லது விஸ்வரூமா? எதுவாக இருந்தாலும் அவர் நல் ஆத்மா சாந்தி அடைய மனதாரப் பிராத்தித்துக் கொண்டிருக்கிறேன்.

Monday, April 01, 2013

எங்கே அவள்?


'Money.. Money... Money' இதையே தாரக மந்திரமாகக் கொண்ட கரனுக்கு எல்லாமும் வேண்டும் ஆனால் பணமும் அதிகம் செலவாகிவிடக் கூடாது. அனிதா, கரனுக்கு அப்படியே எதிர்மறையான சிந்தையுடையவள். நாளையென்பது நிச்சயமில்லாத உலகில் சேமிப்பு, பத்திரப்படுத்துதல், கவனத்துடன் பயன்படுத்துதல் என்ற சொல்லுக்கே இடம் தராது தாராளமாகவும் அலட்சியமாகவும் செலவு செய்பவள். தனது மூன்று வயது மகள் ரோஷிமாவுக்கென்றால் கேட்கவே வேண்டாம் கேட்காமல் சகலமும் தந்திடுவாள் அவளுடைய நேரத்தைத் தவிர.

கணவன் - மனைவி இருவரும் வியாபாரம், வெளியூர் பயணமென்று இருப்பதால் ரோஷிமாவை பார்த்துக் கொள்ள சாந்தியை சொந்த ஊரிலிருந்து வரவழைத்திருந்தார்கள். ரோஷிமா மூன்று மாதமாக இருக்கும் போது அனிதாவிற்கு திருப்தி தரக்கூடிய, மனதிற்குப் பிடித்த, நம்பிக்கைக்குரிய, இவள் மகளை தன் குழந்தையாக பார்த்துக் கொள்ள ஒரு ஆள் தேவைப்பட்ட போது அவள் சகோதரி வீட்டில் வேலை செய்யும் சாந்திதான் அவள் நினைவுக்கு வந்தாள். பல வருடமாக அங்கு வேலை செய்யும் ஆதரவற்ற சாந்தியைக் கெஞ்சிக் கூத்தாடி தன் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டாள் அனிதா. தன் பெயருக்கேற்றாற் போல் சாந்தி அமைதியானவள். முப்பத்தெட்டு வயது மதிக்கத்தக்க களையான முக அமைப்பு கொண்ட பெண். வீட்டு வேலை செய்பவளாக இருந்தாலும் நேர்த்தியாக உடுப்பு உடுத்தி கொஞ்சம் மிடுக்கான தோற்றம் அளிக்கக் கூடியவள். குழந்தைப் பராமரிப்போடு, வீட்டைக் கவனித்துக் கொள்வது, சமையல் என்று எல்லாமும் சாந்திதான். மூச்சுக்கு முண்ணூறு தடவை “சாந்திமா சாந்திமா” என்று ரோஷிமா அவளையே சுற்றி வருவது சமயங்களில் அனிதாவுக்கே பொறாமையைத் தந்திருக்கிறது. அனிதாவும் மிகுந்த நேசத்துடன் ”சாந்தி அக்கா, சாந்தி அக்கா” என்று பழகி வேலை ஏவுவாள். கரனைப் பொருத்தவரை சரியான சம்பளத்திற்கு செம்மையாக வேலை செய்பவள்.

---000---

புது வருடத்திற்கு முன்பே தன் புது வீடு தயாராகிவிட வேண்டுமென்று அதிகம் மெனக்கெட்டு கரனுக்கும் தெரியாமல் பொறியாளருக்கும், மேஸ்தரிக்கும், வேலையாட்களுக்கும் தாராளமாக வழங்கி வீட்டை மிகக் கச்சிதமாக அமைத்த திருப்தியில் இருந்தாள் அனிதா. இது இவர்களுக்கு முதல் வீடல்ல. ஆனாலும் இந்தப் புதிய வீட்டை இவர்கள் தங்கும் இல்லமாக்கி மற்றதை வாடகைக்கு விடும் எண்ணத்துடன் எழுப்பப்பட்டது. அந்த இருபது மாடிக் கட்டடத்தில் ஒன்பதாம் தளத்தில் இருக்கும் இரண்டு வீடுகளில் 901-ஆம் வீடு அனிதா கரனுடையது. கரனுக்கு ’அப்பார்ட்மெண்ட் டைப்’ பிடிக்கவில்லை ஆனால் பில்டர்கள் இவர்களுக்குப் பிடித்த வகையில் அமைத்துக் கொடுப்பதாகச் சொன்னதும் ஒப்புக் கொண்டார்கள். பெரு நகரத்தின் மத்தியில், பரபரப்பான வீதியில், எல்லா வசதிகளும் சூழ்ந்த, உயர்ந்த கட்டடத்தில், பலதரப்பட்ட சவுகரியங்களுடன், விசாலமான வீடு அமைவது அவ்வளவு சுலபமல்ல. எழுபது வீடுகள் கொண்ட அந்தக் கட்டடத்தில் இவர்களையும் சேர்த்து குடிவந்திருப்பதென்னவோ முப்பத்தியோர் பேர்தான்.

குடியேறி சில தினங்களே ஆனதால் பக்கத்துவீடு அக்கத்து வீடு என்று யாரையும் இவர்களுக்குப் பரிட்சயமில்லை. சாந்தி மட்டும் குழந்தையின் கைப்பிடித்து லிப்டில் மேலும் கீழும் சென்று எது எங்கே இருக்கிறதென்று அனிதாவிடம் சொல்லிக் கொண்டிருப்பாள். வீட்டில் உள்ளவர்களுடனே பேச அதிகம் நேரமில்லாத கரன் - அனிதாவுக்கு அயலார்கள் பற்றி அக்கறை இருந்ததாகத் தெரியவில்லை.

வீட்டில் மிச்ச வேலைகளான தச்சு வேலை, பெய்ண்ட் டச்சப், தரையில் படிந்த கரை துடைப்பு, குழாய் தண்ணீர் அழுத்தமாக வரவில்லை, பைப் கேஸ் தொடர்பு இன்னும் முழுமை பெறவில்லையென்று பல விஷயங்கள் கிடப்பில் இருந்ததால் விடுமுறை தினங்களிலும், மாலை நேரங்களிலும் வீட்டிற்கு ஆள் வந்து வேலை செய்த வண்ணமிருந்தார்கள். இருநாட்கள் பெய்ண்டர் வந்தால், மூன்று நாட்கள் தச்சு வேலையாள் என்று ஒன்றன் பின் ஒன்றாக வந்து போய் கொண்டிருந்தார்கள்.

அன்றும் அப்படித்தான் அனிதா உள்ளே நுழையும் போது கறை படிந்த பற்களுடன் கருத்த ஒருவன் ஸ்விட்ச் போர்டை தின்னர் வைத்து துடைத்துக் கொண்டிருந்தான். இவளைப் பார்த்ததும் இளித்தான். அனிதா ஒரு புன்முறுவல் தந்துவிட்டு உள்ளே சென்று கதவைத் தாளிட்டாள். அதிசயமாக ஐந்தரை மணிக்கே வீடு திரும்பிய அனிதா கொஞ்ச நேரம் படுத்திருந்துவிட்டு, பின்பு எழுந்து உடை மாற்றி சத்தமே இல்லாத வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் முகப்பில் வந்து ”சாந்தி” என்று குரல் கொடுத்தாள். அவள் குரல் அவளுக்கே எதிரொலித்தது. ஒவ்வொரு அறையாகச் சென்று பார்த்தாள். கழிப்பறையில் யாரோ தண்ணீர் திறப்பது போல் கேட்க உள்ளறை கழிப்பறைக்குச் சென்றாள் அங்கு உயரமான ஒருவன் பளம்பிங் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இவளைப் பார்த்ததும் இந்த பிரஷர் போதுமா மேடம் என்று தண்ணீரைத் திறந்துவிட்டு கேட்டான். ‘ம்ம்’ என்று தலையசைத்து விட்டு வெளியே வந்து மறுபடியும் ‘சாந்தி’ என்று கொஞ்சம் சத்தமாகவே கத்தினாள். பதிலில்லை. மீண்டும் உள்ளறைக்குச் சென்று ப்ளம்பரிடம் ”சாந்தி எங்கே” என்றாள்.

உங்க வீட்டாளை என்னிடம் கேட்கிறாயே என்பது போன்ற பார்வை தந்து, தெரியாது என்பது போல் உதட்டைப் பிதுக்கி இடதும் வலதுமாக தலையசைத்தான். இவள் அறைக்கு மீண்டும் வந்து இவளுடைய கைப்பேசியை கைப்பையில் தேடினால் கிடைக்கவில்லை. ‘காரிலேயே வைச்சிட்டேனோ’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு, மீண்டும் ப்ளம்பரிடம் சென்று ”வேலை முடிந்ததா?” என்றாள். ”இல்ல ‘ஃபளஷ்’ வேலை செய்யலன்னு..” என்று இழுத்தான்.

கேட்டும் கேட்காதது போல் அவள் அவசரமாக வெளியே வந்து, கீழே காருக்குச் செல்ல லிப்ட் பட்டனை அழுத்திக் காத்திருந்தாள். ரோஷிமா அழும் குரல் எங்கோ தூரத்தில் கேட்பது போல் இருந்தது. அது ரோஷிமாவின் குரலேதான் என்று நினைத்துக் கொண்டு எந்தத் திசையென்று தெரியாமல் “ரோஷி ரோஷிமா” என்றாள். “_____” நிசப்தம்.

மீண்டும் வீட்டுக்குள் வந்தாள் தின்னர் அப்படியே மூடி திறந்தபடி அதே இடத்தில் இருப்பதைப் பார்த்து, மீண்டும் வெவ்வேறு அறைகளுக்குச் சென்று தேடினாள். கட்டிலுக்கு அடியில், அலமாரி, அடுப்பறை, தாழ்வாரமென்று எல்லா இடத்திலும் தேடிவிட்டு, மீண்டும் ப்ளம்பர் இருக்கும் இடத்திற்கு வந்து ”உங்க பேரென்ன?” என்றாள் கனிவாக. அவனோ எதிர்பாராதவனாக “என் பேரு ராமு மேடம்” என்றான். “கொஞ்சம் உங்க செல் தரீங்களா? என் ஃபோனை காரில் விட்டுட்டேன் குழந்தை சத்தம் எங்கேயோ கேட்குது...” என்று சொல்லி முடிக்கும் முன் அவன் செல்பேசியை நீட்டினான். “தாங்ஸ்” என்று வாங்கி, வேகமாக சாந்தியின் எண்ணுக்கு அழைத்தாள். “நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது....” என்று ஒலிக்கவே, உடனே கரனுக்கு அழைத்தாள். புதிய எண் என்பதாலோ என்னவோ கரன் அழைப்பிற்கு பதில் தரவில்லை. மறுபடியும் சாந்தியை அழைத்தால் மறுபடியும் அதே போல் ‘not reachable’ என்றே வந்து கொண்டிருக்க... பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.

லிப்ட் பட்டனை 8 என்று அழுத்தினாள். எட்டில் வந்து நின்றதும் எட்டிப் பார்த்து ’ரோஷி’ என்று சத்தம் கொடுத்துவிட்டு அங்கே குழந்தையின் குரல் கேட்கிறதா என்று சோதித்துவிட்டு அடுத்து 7 என்று அழுத்தினாள். இப்படி ஒவ்வொரு தளமாகக் கீழிறங்கி பேஸ்மெண்ட் வரை பார்த்துவிட்டாள். குழந்தையின் சத்தமோ சாந்தியின் குரலோ கேட்கவே இல்லை. மறுபடியும் 9 அழுத்தி வீட்டுக்கு வந்தாள். கீழே சென்றும் மறுபடியும் காரிலிருக்கும் மொபைலை எடுக்க மறந்திருந்தாள்.

லிப்ட் அருகில் மீண்டும் வந்து “சாந்தி, ரோஷீமா” என்று குரல் கொடுத்தாள். பக்கத்து வீட்டிலிருந்து கூட யாரும் வெளியில் வரவில்லை. இவளாகச் சென்று பெல் அடித்தாள் இருட்டாக இருந்தது. யாரும் இருப்பதாக தெரியவில்லை. ’இந்த வீட்டில் குடிவந்துவிட்டதாகச் சொன்னாளே!’ என்று நினைத்துக் கொண்டே திரும்பும் போது கரன் வந்திருந்தான். “கரன், நீ, உனக்கு” என்று குரல் தடுமாற்றத்துடன் ஆரம்பித்தாள்.

“ரிலாக்ஸ், என்ன ஆச்சு உனக்கு. உன் மொபைல் எங்க? சாந்தி ஃபோன் ஏன் ஆஃப்ல இருக்கு?” என்று எரிச்சலானான்.

“என் ஃபோன் கார்ல இருக்குன்னு நினைக்கிறேன். நான் வீட்டுக்கு வரும் போது யாருமே இல்ல... சாந்தி, ரோஷிமா வீட்ல இல்ல. உன் கிட்ட ஏதாவது சொன்னார்களா?” என்று பதட்டமான தொனியில் உளறலாக கேட்டாள்.

ப்ளம்பர் வீட்டிற்குளிலிருந்து வெளியே வந்தான். “சார், எல்லாம் சரி செய்துவிட்டேன்” என்று தலையைச் சொறிந்தான்.

பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து தந்தபடி கரன் “ஆமா, நீ எத்தன மணிக்கு வந்த, நீ வரும் போது வீட்டுல யார் இருந்தாங்க?”

”சார், நான் ஒரு அஞ்சு அஞ்சேகால் மணிக்கு வந்திருப்பேன் அப்போ வீட்டுல ஒருத்தர் இருந்தாரு.” என்று யோசித்தபடி பதில் உரைத்துக் கொண்டே பணத்தைப் பெற்றுக் கொண்டான்.

“கருப்பா.... பல்லெல்லாம்...” என்று திடீர் மறதியிலிருந்து நினைவு திரும்பியவள் போல் பேசியவளைத் திரும்பிப் பார்த்தான் கரன். அவள் தொடர்ந்தாள் “பல்லெல்லாம் கறையா இருந்துதே, தின்னர் வைச்சு தொடைச்சிட்டு இருந்தானே... அவன் மட்டுமா இருந்தான்?”

”அவன் என்ன பண்ணிட்டு இருந்தான்னு தெரியாது. வீட்டுக்குள்ள இருந்து வெளிய வந்தான், வீட்டுல ஆள் இல்லையா மெய்டெனன்ஸ் வெர்க் இருக்குன்னு சொன்னேன். ஆள் இருக்காங்க நீ உள்ள போய் வேலையப் பாருன்னு சொல்லிட்டு ஈரக் கைய அவன் சட்டையில் தொடச்சிட்டு எனக்குக் கதவத் திறந்துவிட்டான்” என்று சொல்லும் போதே அவனுக்கு செல்பேசியில் அழைப்பு வந்தது. “இதோ வந்துட்டேம்மா, கிளம்பிட்டேன்” என்று சொல்லிவிட்டு “சார் அப்போ நான் கிளம்பட்டா?” என்றான்.

“கொஞ்ச இருங்க. அப்ப நீங்க பார்த்த ஆள் உங்க மெய்ட்டேனன்ஸ் ஆபீஸைச் சேர்ந்தவனில்லையா..?” என்று கரனும் கொஞ்சம் பதற்றத்துடன் கேட்டான்.

“இல்ல சார். நாங்க பொதுவா நாலு மணிக்கு முன்னாடியே வேலையெல்லாம் முடிச்சிட்டு போயிடுவோம். ஆனா இந்த வீட்டு வேலைய நாலு மணிக்கு மேலதான் பார்க்கணும்னு ஆபீஸ்ல சொன்னாங்க. அதனால வீட்டுக்கு போய்ட்டு கொஞ்சம் லேட்டா அஞ்சரை கிட்டதான் வந்தேன்..” மீண்டும் கைகடிகாரத்தைப் பார்த்து தனக்கு நேரமாவதை காட்டிக் கொண்டான்.

“புரிஞ்சிக்கோங்க... வீட்டுல எங்க குழந்தையும், வேலை செய்ற அம்மாவும் இருந்தாங்க... இப்படி வீட்டைத் திறந்துப் போட்டுட்டு எங்கேயும் போக மாட்டாங்க. அப்ப நான் கார்ல செல்ஃபோன் எடுக்க லிப்ட் கிட்ட வரும் போது ரோஷிமா அழுகிற சத்தம் கேட்டுது... ஆமா அது ரோஷிமா குரல்தான் எனக்குத் தெரியும்...” என்று அழுகின்ற குரலில் பேசியவளை ப்ளம்பர் விசித்திரமாகப் பார்த்தான். கரன் தொடர்ந்து சாந்தியின் எண்ணுக்கு அழைத்துக் கொண்டிருந்தான். கரனுக்கு அனிதாவின் மீதும் கோபம். அவன் கோபத்தை வேறு எங்கு காட்டுவது? “நீ எத்தன மணிக்கு வந்த அப்போ அந்த ஆள பார்த்து நீ ஒண்ணுமே கேட்கலையா? அப்போ சாந்தி, ரோஷினி எங்கன்னு தேடலையா? என்று கடுகடுப்பான குரலில் கேட்டான்.

”நான் வரும் போது ஒருத்தன் தின்னர் வைச்சு ஸ்விட்ச் போர்ட் தொடைச்சிட்டு இருந்தான். நான் உள்ள போய் டிரஸ் மாத்திட்டு வெளியில் வந்தப்ப அவனில்ல. உள்ள ப்ளம்பர் மட்டும் இருந்தாரு...” என்று தெளிவாக்கினாள்.

இதற்கிடையில் கரன் மெய்டெனன்ஸ் ஆபீஸுக்குப் பேசி இன்று வெறும் ப்ளம்பரை மட்டும் தான் 901-க்கு அனுப்பியிருந்ததை உறுதிப்படுத்திக் கொண்டான். அவர்களுக்கு வேலையாள் பற்றியோ, இவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது பற்றியோ தெரியவே தெரியாது என்றார்கள். அதனாலேயே மெய்டெனன்ஸுக்கு ஐந்து மணிக்கு மேல் போனால் போதுமானது என்று சொல்லியிருப்பதாகவும் தகவல் சொன்னார்கள்.

என்ன செய்வதென்று அறியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது மறுபடியும் குழந்தையின் அழுகை கேட்டது. “கேட்குதா? அந்து நம்ம ரோஷிமாதானே?” என்று நம்பிக்கை வந்தவளாக அனிதா சொல்ல..

”ஆமா ரோஷி சத்தம் மாதிரிதான் கேட்குது என்று லிப்டில் போகாமல் படிக்கட்டுக்கு போகும் கதவைத் திறந்ததும் சத்தம் இன்னும் தெளிவாகக் கேட்டது. சத்தம் மேல் திசையிலிருந்து வந்ததையுணர்ந்து மூன்று பேரும் அதை நோக்கி நடந்தார்கள். பத்தாம் தளத்தில் யாருமே இல்லை. வந்த சத்தமும் நின்றிருந்தது. இன்னும் மேலே ஏறினார்கள், அங்கு ஒரு பாட்டியின் குரல் “அழாதே கண்ணு அம்மா வந்திருவா” என்று சமாதான்ப்படுத்திக் கொண்டு இருந்தது.... பதினொன்றாவது தளத்தில் ரோஷிமா.

ரோஷியைப் பார்த்ததும் வாரி அணைத்துக் கொண்டாள் அனிதா. பாட்டியின் வீட்டுக்குளிருந்து அனிதாவின் வயதொத்த பெண் வந்து ”இது உங்க குழந்தையா? பாவம் நாலு மணியிலிருந்து படியில் உட்கார்ந்து அழுதுட்டு இருக்கா. படிக்கெட்டில் மேலும் கீழும் போறாளே தவிர வீட்டுக்குள் வர மறுத்துட்டா. எங்களுக்கும் யார் வீட்டு குழந்தைன்னு தெரியல... சாந்திம்மான்னு அழுததால மெய்ட்டெனன்ஸ் ஆபீஸில் சாந்தின்னு இங்க யாராவது இருக்காளான்னு கேட்டோம். அவாளுக்கு தெரியலைன்னா... இன்னும் ஒரு மணி நேரம் பார்க்கலாம் இல்லாட்டி போலீஸில் சொல்லலாம்னு இருந்தோம்” என்று நிலையுணர்த்தியவளிடம் ”உங்களுக்கு சாந்தியை தெரியுமா?” என்று பைத்தியக்காரத்தனமாகக் கேட்டாள் அனிதா.

“யாரு சாந்தி? அச்சச்சோ அப்ப இது உங்க குழந்தை இல்லையா...?” என்று கேட்டு குழப்பிக் கொள்ள..

”இல்ல சாந்தி எங்க வீட்டுல வேலைக்கு.....” என்று அனிதா விளக்குமுன்...

“ரோஷி, சாந்தி எங்கடா?” அனிதாவின் கையிலிருக்கும் ரோஷியின் கண்களைத் துடைத்தபடி கேட்டான் கரன்.

மழலையில் ரோஷி “சாந்திமா சாந்திமா” என்று தெம்பில்லாமல் தேம்பினாள்.

குழந்தை கிடைத்த மகிழ்ச்சியிலும், சாந்தி பற்றி விவரம் தெரியாத பதற்றத்திலும் மேல் வீட்டினருக்கு நன்றி கூட சொல்லாமல் கீழே இறங்கி வீட்டுக்கு வந்தார்கள்.

----000----

ஒரு வருடமாகி இருந்தது. சாந்தியின் இடத்தில் இப்போது பார்வதி. சாந்தியை பற்றி இன்னும் எந்த தகவலுமில்லை. சாந்தியை யாரேனும் ஏதேனும் செய்துவிட்டார்களா அல்லது சொல்லாமல் ஓடிப்போய்விட்டாளா? என்று இவர்களால் ஊகிக்க முடியவில்லை. அவளுக்கு உறவில்லாததால் அவளை யாரும் தேடி வரவுமில்லை இவர்களும் தேடிப் போகவில்லை போலீஸிலும் புகார் தரவில்லை.

[நன்றி: அமீரகத் தமிழ் மன்றத்தின் 13-ஆம் ஆண்டு விழா மலருக்காக நான் எழுதிய சிறுக்கதை]

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி