Sunday, December 21, 2008

அவன் அப்படித்தான்

இருபது வருடங்களுக்கு முன் என் கணவர் கூறியது இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்னுள். அன்று ஏற்பட்ட வலியும் வடுவும் இன்னும் இரணமாகத்தான் இருக்கிறது. கையாலாகாதவளாக அப்போது இருந்துவிட்டேன் இந்த முறை அப்படியாகாது. நான் எடுப்பதே முடிவாக இருக்கும். பல வருட மனவுளைச்சல் இத்தனைக் காலங்களுக்கு பின்பு தணிவது எனக்கு ஆத்ம திருப்தியைத்தான் தருகிறதே தவிர சமுதாயத்தில் எங்கள் எதிர்காலத்தின் கேள்விக்குறிகளைப் பற்றி துளியும் கவலைக் கொள்ளாதவளாக இருக்கத் துணிகிறேன்.

எனது முதல் கருவின் சிதைவே என்னை இன்றும் உறுத்தும் இரணம். எந்தப் பெண்ணுமே கருவுற்ற அந்த இன்பகரமான செய்தியை முதலில் பகிர நினைப்பது கணவரிடம்தான். அந்த இன்பத்தையும் நொடிப் பொழுதில் இழந்து தவித்த துர்பாக்கியசாலி நான். கருவிலிருப்பது பெண் சிசுவென்றவுடன் கருச்சிதைவு செய்தாக வேண்டுமென்ற கட்டளை என் மூச்சைத் திணறடித்தது. அவருக்கு அப்படியொரு முகமிருப்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. படித்த, பகுத்தறிவுமிக்கவர்களுமா இப்படிப்பட்ட இழிசெயலில் ஈடுபடுவார்கள்? இதற்காக அவருடன் வாதம் ஏற்படும் போது, பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவர் திடீரென கையையோங்கிக் கொண்டு "நிறுத்துடி தேவடியாமுண்ட. பெரிய புடுங்கி மாதிரி பேசிக்கிட்டே போற, இந்த மயிரெல்லாம் இங்க வேணாம். 'அது' வேணும்னா அப்படியே போயிடு" என்று ஒரே வரியில் வசைபாடி என் வாயை அடைத்துவிட்டார்.

பகுத்தறிவில்லாத கீழ்மட்டத்து ஆண்களில் சிலர் தெருவோரங்களில் போதையில் பெண்டாட்டியை அடித்து மிதிக்கும் போது இப்படிப்பட்ட கொடூர மொழிகளில் பேசுவதைக் கேட்டதுண்டு. அந்த வசைகளை நானே கேட்க வேண்டிய அவல நிலையில் தள்ளப்படுவேன் என்று நினைத்திருக்கவேயில்லை. இப்படிப்பட்ட அவச் சொற்களைக் கேட்டேயிராத எனக்கு என் நரம்புகள் சுண்டியிழுத்து சிசுவுடன் நானும் சேர்ந்து தற்கொலை செய்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் கூட எழுந்தது.

என் சந்தோஷத்தில் மகிழ்ச்சியுறும் என் பெற்றோர்களுக்கு இதைப் பற்றி செல்லாமலேயே இருந்துவிட்டேன். வேறு நெருங்கிய நட்புகளுடனும் ஆறுதலுக்காகக் கூட குறிப்பிடவில்லை. 'நல்லவேள அம்மா கிட்ட உண்டானத சொல்லல' என்று நினைத்துக் கொள்ள முடிந்ததே தவிர, சகலமும் கணவர் என்று இருக்கும் என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பெண்களின் தலையெழுத்தே அப்படித்தான். என்னதான் படித்த பட்டதாரிகளாக இருந்தாலும் கணவன் வகுத்ததே வாய்க்காலென்று இருக்க வேண்டிய சூழ்நிலை. எங்களுக்கென்று என்றுமே தனி முகவரி வைத்துக் கொள்ள முடிவதில்லை.

ஆண்களைச் சார்ந்தே, அவர்களின் அடக்குமுறையில் அடங்கியே வாழ வேண்டிய கட்டாயம். இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் அதை மீறி நடக்கும் போது 'கெட்டவள்', 'திமிர் பிடித்தவள்', 'அகங்காரம் கொண்டவள்' என்ற பெயர்களுடன் வாழ வேண்டியிருக்கும். எங்கள் நடத்தை மீதும் பலி வரும் அபாயமும் உண்டு. ஊரோடு ஒட்டி வாழ எல்லாப் பெண்களும் ஏதோ ஒரு வகையில் முகமூடியுடன் திரிய வேண்டியுள்ளது. கணவர் தவறான பாதையில் சென்றாலும் சரி, தவறான செயல் புரிந்தாலும் சகித்துக் கொண்டு வாழவே தலைப்படுகிறோம். நானும் அப்படித்தான் அவர் கட்டளைக்கு அடிபணிந்து அந்தக் கொடூர செயலுக்குத் துணை் போனேன்.

இந்த விஷயத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதென்றாலும் அந்த பாதிப்பிலிருந்து மீளவே பல வருடங்களானது எனக்கு. இப்படிப்பட்டவரின் குழந்தைக்குத் தாயாக வேண்டுமா என்ற கேள்வி என்னை துரத்த கருவுறாமல் மிகப் பக்குவமாக சில ஆண்டுகளைக் கடத்தினேன். ஆனாலும் தாயாக வேண்டுமென்ற உந்துதல் ஒருபுறமிருக்க. உறவுகளின் நச்சரிப்பும் 'மலடி' என்ற பட்டமும் பயமுறுத்தவே மீண்டும் கருவுற்றேன்.

காலம் சென்று உண்டாகியிருந்தாலும் எந்தச் சலனமுமில்லாமல் மறுபடியும் கருத்தரித்த சிசு ஆணா- பெண்ணா என்ற பரிசோதனைக்கு உள்ளானேன். நல்லவேளையாக இந்த முறை ஆண் என்பதால் மற்றுமொரு பாவச் செயலிலிருந்து தப்பித்தேன். ஆனால் ஆண் கரு என்று தெரிந்ததும் என் கணவருக்குத் தலைகால் புரியவில்லை அவ்வளவு சந்தோஷம். எக்களிப்பில் எகிறிக் குதித்தார். சும்மா சொல்லக் கூடாது மனுஷர் என்னை அந்த ஒன்பது மாதங்கள் மிக நன்றாகக் கவனித்துக் கொண்டார். என்னைக் கொண்டாடினார் என்று சொன்னாலும் தகும். எல்லாம் சரியாக நடந்தாலும் ஓரத்தில் எனக்கு ஒரு ஆசை இருந்து் கொண்டே இருந்தது. அது ஒரு பலி வாங்கும் வெறியென்று் கூடச் சொல்லலாம். 'கரு ஆண் என்று தெரிந்து அதனைச் சிதைக்காமல் வைத்துக் கொள்ள சம்மதித்து கொண்டாடுபவருக்கு பிறப்பது பெண்ணாக இருக்க வேண்டும், மருத்துவம், விஞ்ஞானமெல்லாம் பொய்யாக வேண்டும்' என்று வெறியின் வெளிப்பாடாகத் தீவிரப் பிராத்தனையும் செய்து கொண்டேன்.

ஆனால் பரிசோதனையின் முடிவின்படியே ஆண் மகவைப் பெற்றெடுத்தேன். குழந்தையின் முகம் கண்டதும் சகலமும் மறந்தது. அவன் பிறப்பைக் கொண்டாடினோம், மகிழ்ந்தோம். அவன் எங்களின் ஒரே மகனானான். செல்லமகனுக்குப் பார்த்துப் பார்த்து அனைத்து தேவைகளையும் தந்தோம். அவன் எங்களுக்கு எல்லாமும் ஆனான். என் முந்தானையை பிடித்துக் கொண்டு சுற்றித் திரிந்த பொடியன் வளரத் தொடங்கிய பிறகு எங்களுடன் ஒட்டுவதே கிடையாது. தன் அறைக்குச் சென்று கதவைச் சாத்திய பிறகு அவனை யாரும் அணுகக் கூடாது என்று உத்தரவிட்டான். பதின்ம வயதென்றும் அப்பாவைப் போலவே மூர்க்க குணம் என்று விட்டதும் என் தவறுதான். ஒரு நாள் அவன் இல்லாத வேளையில் நான் அவன் அறையின் பூட்டைத் திருட்டு சாவிக் கொண்டு திறந்து பார்த்ததில் நான் கண்டவை எனக்கு ஒன்றுமே புரியாத வகையில் புதிராக இருந்தது. அந்தக் காட்சி கனவாக இருக்கக் கூடாதா என்று ஒரு கணம் நினைத்துக் கொண்டேன்.

பெண்களின் சாதனங்களாக அடுக்கியிருந்தது. ஆனால் யாருமே சுத்தம் செய்ய அனுமதிக்காத அவன் அறை தூசியும் தும்புமாக குப்பை நிறைந்திருக்கும் என்று எண்ணிய எனக்கு ஏமாற்றம். அவ்வளவு பிரகாசமாக சுத்தமாக இருந்தது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அறையின் ஒரு பகுதியில் புள்ளி வைத்த வண்ணக் கோலமும். அறை பளிச்சென்று இருந்தாலும் என் மனதினுள் ஏதோ இருட்டு பற்றிக் கொண்டதாக ஒரு பயம் எழுந்தது. இதனை இப்படியே விட்டுவிடக் கூடாது, நான் நினைப்பது நிகழ்ந்துவிடக் கூடாது என்று அவன் தந்தையிடம் முறையிட்டேன். அவர் அவருடைய உளவாளியை அழைத்து அவனைக் கண்காணிக்க ஏற்பாடு செய்துவிட்டு எனக்கு ஆறுதலாகவும் பேசினார்.

முன் தினம் நடந்ததை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை. பூட்டிய அறையில் அப்பாவும் மகனும். கண்ணாடி சன்னல் வழியாக அவர்கள் முக பாவங்களை கவனிக்க முடிந்ததே தவிர என்னவென்று யூகிக்க முடியவில்லை. என்றுமில்லாத திருநாளாக அவர் மகனைக் கையோங்கிவிட்டார். ஆனால் அடிக்க மனமில்லாமல் குலுங்கி அவன் கால் அருகே விழுந்து அழுததைக் கண்டு ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் என்னாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை. மிக வீராப்புக் கொண்ட, யாருக்கும் அடி படியாத மனிதர் இவன் காலில் விழுவதைக் கண்டு அஞ்சிக் கதவைத் தட்டும் முன், கோபமாகக் கதவு திறக்கப்பட்டு மகன் வெளியேறிவிட்டான். குழந்தையாக சுருண்டு் கிடந்தவரை நடுவீட்டில் கிடத்தி "என்னங்க? சொல்லுங்க, என்ன ஆச்சு? ஏன் இப்படி. இந்தப் பாதகத்திக்கு ஒண்ணுமே புரியலையே. உங்கள நான் இப்படிப் பார்த்ததேயில்லையே, நான் உங்கள என்னான்னு சமாதானம் செய்வேன்" என்று விசும்பத் தொடங்கினேன். அவர் அவரையே கட்டுப்படுத்திக் கொண்டவராக 'வீட்டு வேலையாட்கள் முன்பு எதுவும் வேண்டாம்' என்ற வகையில் சைகை செய்து உள்ளறைக்குச் செல்ல நான் அவரைப் பின் தொடர்ந்தேன்.

உள்ளறையில் கதவைத் தாளிட்ட பிறகு அவர் கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் கன்னங்களை மடமடவென்று கழுவிய அவர் முகத்தை நோக்கி நான் "என்னான்னு சொல்லுங்க" என்று பதற்றத்துடன் கேட்டேன்.

"என்னத்தடி சொல்லுவேன்... மகன் மகன்னு மார்தட்டிக்கிட்டு இருந்த பய என்னை மார்லயே குத்திப்புட்டான். ஆண் வாரிசு வேணும்னு ஆசப்பட்டேன் இப்ப அவன் நான் ஆணே இல்லன்னு சொல்றானே நான் என்ன செய்வேன்" என்று குரல் எழுப்பி அழுதவாறு அவனுக்கு ஏற்பட்டிருக்கும் நோயைப் பற்றி விளக்கினார்.

சில உயிரியல் மாறுபாட்டினால் எதிர்பாலினமாக அவன் உணர்கிறானாம். இந்தக் கொடுமையை நான் என்னவென்று வெளிப்படுத்த? சின்னக் குழந்தையில் பெண் குழந்தையில்லாத குறையை தீர்க்கும் விதமாக இவனுக்குப் பட்டுப்பாவாடை உடுத்தி பொட்டு வைத்து மகிழ்ந்திருக்கிறேன். அதையே இப்பவும் வேண்டுமென்றால் நான் என்ன செய்வது? பல உளவியல் சிக்கல்களைக் கடப்பதால் பித்துபிடித்தாற் போல் திரிவதை அறிந்து அவனைத் தொடர்ந்து சென்று என் கணவர் வினவவே, ஒப்புக் கொண்டவனாக, அதனை தொடர்ந்துதான் அவன் வாழ்க்கை முறையும் அமையும் என்று தீர்க்கமாக சொன்னவன் மறு பாலினமாக மாற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அதற்குக் காசு வேண்டும் என்று கேட்டிருக்கிறான். இவரோ 'கட்டுப்படுத்தி இப்படியே வாழ பழகிக் கொள் இல்லையேல் குடும்பத்திற்கு பெருத்த அவமானம்' என்று சமாதானம் செய்தும் "முடியாது என் பிரச்சனை உங்களுக்கு புரியாது. இனி உங்களுடன் தங்கவும் என்னால் முடியாது நான் என் இனத்தவர்களுடன் போகிறேன்" என்று கூறிய மகனின் காலிலேயே விழுந்து கெஞ்சியிருக்கிறார். ஒன்றும் செய்வதறியாமல் அவன் வெளியில் போய்விட்டான்.

அதன்பின் நான் இவருக்கு ஆறுதல் சொல்ல, அவர் எனக்கு ஆறுதல் சொல்லவென்று அந்த இரவு கழிந்தது. நேற்று விடியற்காலையில் தான் வீடு திரும்பினான். நான் ஏதேனும் கேட்டுவிடுவேனோ என்று பயந்தானோ அல்லது என்னை எப்படி நேருக்கு நேர் சந்திப்பது என்ற கூச்சமோ தெரியவில்லை தலையைக் குனிந்தவாறு அவன் அறைக்கு சென்று தாழிட்டுக் கொண்டான். அவன் மனது எனக்குப் புரியாமலில்லை. ஒரு தாயாக அவன் சொல்லாமலேயே அவன் விஷயங்கள் எனக்குப் புரிந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியிருக்க கூடாது என்று எண்ணியவளுக்கு புலப்பட்டும் பொருட்படுத்தவில்லை என்றே வைத்துக் கொள்வோம்.

நேற்று முழுக்க நான் பலவாறு யோசித்தேன், எத்தனையோ பெற்றோர்களுக்கு மனநிலை குன்றியக் குழந்தைகள் இருந்தும், பிறவி ஊனமிருந்தும் அதனுடனே அன்பாகவே காலம் தள்ளும் போது இந்த உயிரியல் மாறுபாடு பெரிய விஷயமல்லவே?! எல்லோரும் இவர்களை ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன்? சமுதாயக் கட்டமைப்பை நிர்ணயிப்பதும் நாம்தானே? சமுதாயத்திற்காக நாம் என்று வாழ்ந்தது போதும். சமுதாயம் எங்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளட்டுமே. இதனை ஒரு நோயாக பாவித்து அன்பை மருந்தாக்கி தருவோம். இவர் இப்படியாக அவர்கள் எப்படி காரணமாக முடியும்? அவர்களை ஒதுக்குவது எந்த விதத்தில் நியாயம்? இத்தனை நாள் வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த பிரச்சனையை இப்போது வீட்டுக்குளிருக்கும் போது சமாளிப்பதுதானே புத்திசாலித்தனம்? இப்படி உளவியல் சிக்கலிருப்பவனை வெளியில் அனுப்ப எனக்கு விருப்பமில்லை. அது ஒரு தவறான பாதைக்கு நாங்களே வழிவகை செய்வதல்லவா? வீதிக்குப் போய் ஒரு அலப்பறையாவது மட்டும் கவுரமா? அவன் விருப்பப்படியே தேவையான அறுவை சிகிச்சை செய்து கொள்ளட்டும். அவனை முழுக்க மகளாக மாற்றி அவன் உளவியல் பிரச்சனைகள் தீர அவனைப் போலவே இருக்கும் மற்றொருவரை தேடிப் பிடித்து துணையாக்கித் தருகிறேன். இல்லையேல் அவன் தனியாகவே வாழ முற்பட்டாலும் என் உயிருள்ள வரை துணை நிற்கப் போகிறேன். இதில் என்ன பிரச்சனை இருக்க போகிறது? ஒரு தாயாக அவன் பக்கம் நின்று அவனுக்காக வாதாடி அவன் தந்தையையும் மாற்ற முடியுமென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. உறவினர்களைப் பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? நாங்கள் சிரித்தாலும் அழுதாலும் எட்டியிருந்து வேடிக்கை மட்டுமே பார்க்கும் உறவினர்கள் இதையும் பார்த்துவிட்டு போகட்டுமே. என் மனதை தெளிவாக்கிய பிறகு எனக்கு எதுவுமே தடையாகத் தெரியவில்லை. இது அவன் பிரச்சனை மட்டுமல்ல எங்கள் பிரச்சனையும் தானே? அப்படியிருக்க அவனை தனியாகத் தவிக்க அனுப்ப முடியுமா எங்களால்? எங்கள் முற்பகல் பாவம் பிற்பகலில் விடிந்திருக்கிறது. அதற்கு பாவம் அவனை பலிகடாவாக்க எனக்கு விருப்பமில்லை. கண்டிப்பாக என் கணவரும் இதனை உணர்ந்தேயிருப்பார்.

எங்கள் மகன் எங்களுக்கு புது மகளாவான். ஒருநாள் இந்தச் சமுதாயமும் எங்களுடன் கைகோர்க்கத்தான் போகிறது. அதில் எனக்குச் சந்தேமேயில்லை. முடிவுமெடுத்துவிட்டேன் அந்த முடிவிலிருந்து நாங்கள் மாறுபடப் போவதில்லை. எல்லா பின்விளைவுகளையும் யோசித்த பிறகு நிம்மதியான உறக்கத்திற்குச் சென்றேன்.

விடிந்தது, இன்றைய நாள் எனக்கு இன்னும் பிரகாசமாக.

Sunday, November 23, 2008

கேள்விகளால் ஒரு வேள்வி

துபாயில் ஆயிரத்தெட்டு சங்கமும் அமைப்பும் இருந்தாலும் அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவை தான் இன்னும் இலக்கிய விழாக்களை நடத்தி வருகிறார்கள். இந்த வெள்ளிக்கிழமை மாலை ’கவிதை கூடல்’ தலைமை கவிக்கோ அப்துல் ரஹ்மான் என்றதும் அவர்கள் உரையை கேட்டே ஆகவேண்டுமென்று வீட்டில் உத்தரவு வாங்கிவிட்டு குழந்தைகளுடன் கிளம்பிவிட்டேன்.

இஷாவிற்கு பிறகு கிளம்பி சென்றதால் விழா ஆரம்பித்துவிடும் என்று தெரிந்திருந்தாலும் பலர் பேசிய பிறகு கடைசியில் தான் கவிக்கோ பேசுவார் என்ற எண்ணத்தில் சற்று தாமதமாகச் சென்று விட்டேன். உள்நுழைந்ததும்தான் அது கேள்வி- பதில் நேரம் என்று தெரிந்தது. முதல் கேள்வியை முத்துகுமரன் சுவாரஸ்யத்துடன் ஆரம்பித்தார். 'புதுக்கவிதை எழுதுபவருக்கு மரபுக் கவிதை தெரிந்திருக்க வேண்டுமா?' என்று கேட்க. ’இப்படி உங்களுக்கு தோன்றுவதே பெரிய விஷயம்தான்’ என்று தொடங்கிய கவிக்கோ புதுக்கவிதையை பெரும்பாலோர் வசனக்கவிதையாக கருத்தை முதலிடம் கொண்டு எழுதிவிடுகிறார்கள். கருத்தை மட்டும் கொண்டது கவிதையாகிவிடாது நயமும் அவசியமென்றார்கள்.


ஒவ்வொருவரும் தமக்குத் தோன்றும் கேள்விகளை கேட்டுத் துளைத்ததற்கெல்லாம் ஊற்றாக தனது அனுபவத்தை வடித்தார்கள் கவிக்கோ. கவிதையை வரையறுக்கக் கேட்டதற்கு, அதை புரிய வைக்க ஒரு குட்டிக் கதை சொன்னார்கள். மனிதனை வரையறுக்க ஒரு கூட்டம் கூடியதாம் அதில் இரு கால் மிருகம் தான் மனிதன் என்று ஒருவர் சொல்ல, இன்னொருவர் 10 நிமிடத்தில் வருகிறேன் என்று ஒரு கோழியை கொண்டு வந்து ‘அப்ப இது மனிதனா’ என்று கேலி செய்ய, சரி இறகில்லாத இரண்டு கால் பிராணி தான் மனிதன் என்று முடிக்கும் முன் மறுபடியும் 10 நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லி சென்றவர் இறகில்லாத கோழியை மறுபடியும் கொண்டு வந்து கேள்வி கேட்க - மனிதனை வரையறுக்க முடியாது என்று முடிவானதாம். அதே போல் தான் கவிதையையும் வரையறுக்க முடியாது என்று முடித்தார்கள்.

கூட்டத்தில் ஒருவர் நீங்கள் காக்கை பற்றி எழுதியிருந்தீர்கள் அந்த கருத்து இங்கிருக்கும் பலருக்கு ஒப்புதலாக இருக்காது அதனை கேட்க விரும்புகிறேன் என்றதும். பல விஷயங்களை பல தளத்தில் பல ஆண்டுகளாக எழுதித் தள்ளுபவருக்கு அது எப்படி நினைவிருக்கும் ஆகையால் என்ன எழுதியிருந்தேன் என்று கேட்டவரையே திரும்பி வினவ. அவரும் அவருக்கு நினைவூட்டுவதாக அதனை எடுத்து தர, புரிந்துக் கொண்ட கவிக்கோ அவர்கள் விவரித்தார்கள். அவர் கறி வாங்க சென்றிருந்த போது ஒரு காக்கை சக காக்கையை சாப்பிட விடாமல் கொத்துவதை கண்டு வியந்தவருக்கு இது எப்படி சாத்தியம் என்று தோன்றியதாம். காக்கையென்றாலே ஒரு வாய் சோறு கிடைத்தாலும் எல்லா காக்கைகளையும் அழைத்து உண்ணுமே இது என்ன வகையென்று யோசிக்கும் போது அவருக்கு பழங்காலத்தில் அரசர்களின் வினை நினைவுக்கு வந்ததாம். அரசர்கள் தான் உண்ணும் முன்பு அதில் விஷம் கலந்திருக்கிறதா என்று அறிந்து கொள்வதற்காக நிறைய பொருட்களும் தங்கமும் தந்து தன்னுடனே ஒரு ஆளை தமக்காக முதலில் சாப்பிட்டு அதில் விஷமில்லாத பட்சத்தில் அரசர்கள் உண்ணுவார்களாம். சிலர் இந்த விஷயங்களுக்காக மைனாவையோ அல்லது வேறு பிராணிகளையோ வளர்ப்பார்களாம். விஷத்தை அருகில் கொண்டு சென்றாலே மைனாவின் கண்கள் சிவந்துவிடுமாம். அந்த விஷயம்தான் இந்த காக்கையின் செயலும் - காக்கை இயற்கையான பண்டத்தை பகிர்ந்து உண்ணாது மனிதன் படைத்த செயற்கையான உணவின் மீது நம்பிக்கையில்லாமல் சக காக்கைகளை அழைத்து உண்ணக் கண்டு பிறகு தின்று கொள்கிறதாக அவர் உணர்ந்ததாக கூறினார். அவர் கூற்றில் உண்மையிருக்கிறதோ இல்லையோ சிந்தனை மிகவும் வித்தியாசமாக தோன்றியது.

தமிழை செம்மொழியாக்குவதின் பயன்களை விளக்கும் போது இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு தமிழை செம்மொழியாக ஏற்றால், உலகப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அதை ஏற்கும், பன்னாட்டு மொழிக் கலைக் களஞ்சியங்களில் - தமிழ் இலக்கியங்கள், பண்பாட்டுக் கருத்துக்கள், கலாச்சாரம் இவற்றை விளக்குவதற்காக தமிழ் தெரிந்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வரக்கூடும். ஓய்வு பெற்றவர் தமிழ் அறிஞர்களுக்கு கூட நல்லவேளை வரக்கூடும் என்று நான் அறியாத விஷயங்களையும் அறிய வைத்தார்.

படிமம், குறியீடு பற்றி பேசும் போது ’பெண்ணே உன் கண்கள் மீன்கள்’ என்று வடித்த வாக்கியத்தில் கூட பல விஷயங்கள் ஒளிந்து கிடப்பதை கூறினார். கண்கள் மீன் வடிவில் இருப்பதால் சொல்லியிருக்கலாம் அல்லது வலை வீசச் சொல்கிறதாக எடுத்துக் கொள்ளலாம், எப்போதுமே தண்ணீரில் இருக்கிறது என்பதாகவும் பொருட்கொள்ளலாம் என்று ஒரே விஷயத்திற்கு பல கோணங்கள் உண்டு வாசிப்பவரின் அனுகுமுறையை பொருத்தே குறியீடுகளை புரிந்துக் கொள்ள முடியுமே தவிர எழுதுபவர் எல்லாவற்றையும் விளக்கி எழுத முடியாது அப்படி விவரித்திருந்தால் அது கவிதையல்ல என்பதற்கு உதாரணமாக

‘என் மனம்
அவளை நினைப்பேனென
அடம்பிடிக்கிறது - நான்
அதட்டினால் அழுகிறது’

என்று சொல்லும் போது மனதை படிமமாக்கி குழந்தையாக்கி கவிஞர் சொல்ல வருவது சிறப்பே தவிர மனம் குழந்தை போல் அடம்பிடிக்கிறது நான் அதட்டினால் அழுகிறது என்று விளக்குவதில் கவிதை காணாமல் போய்விடுகிறது என்று அவர் பாணியில் விளக்கினார்.

கவிஞர்கள் என்றாலே கொஞ்சம் கோபம் இருக்கும் இருக்க வேண்டும் அப்படியிருந்தால்தான் எழுத்தில் வீரியமிருக்கும், வார்த்தைகளில் உண்மையிருக்கும் என்பதற்கு கவிக்கோ ஒரு சிறந்த சான்று. ‘வணக்கம்’ பற்றி எழுந்த சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதில் சொல்லும் போது அவரை பேசவிடாமல் இடைமறித்து பேசிக்கொண்டே போனவரிடம் ‘நான் பேசி முடிக்கும் முன்பே நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டு பேசிக் கொண்டே போனால் எப்படி’ என்று கண்டிப்பாக கேட்ட குரலில் நியாயமிருந்தது. அதையும் தொடர்ந்து விடாது இடைமறித்ததால் ஒலிவாங்கியை கீழே வைத்துவிட்டு ’நீங்களே பேசி முடியுங்கள்’ என்று சொன்னதில் அவர் கோபம் தெரிந்தது. அதனை தொடர்ந்து அவர் தந்த விளக்கம் அற்புதமாக அமைந்தது. எந்த ஒரு வார்த்தைக்கும் பல பொருள் புரிந்துக் கொள்ளலாம். ’கோ’ என்றால் அது மாடு என்றும் பொருள் தரும் அரசன் என்றும் பொருள் தரும். வீடு என்ற சொல் பின்னாட்களில் கண்டுபிடித்த சொல், ஆரம்பத்தில் கோவில் என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அரசன் வசிக்குமிடம் கோவில் ஆனது. அந்த காலத்தில் அரசரை தெய்வமாக கருதி வந்ததால் அரசர் வசிக்குமிடம் கோவிலானது பின்பு வேறுபடுத்த வீடு தோன்றியிருக்கலாம். மொழி என்பது காலத்தோடு வளர்ந்துக் கொண்டே உருமாறிக் கொண்டே போகும் விஷயம். ஆகையால் ‘வணக்கம்’ என்ற வார்த்தை வணங்குதலாகிவிடாது. தொழுகைக்கு நேரமாகிவிட்டது தொழுது விட்டு வருகிறேன் என்றுதானே சொல்கிறோம் மாறாக வணங்கிவிட்டு வருகிறேன் என்று கூடச் சொல்லவில்லையே அப்படியிருக்க ஏன் அந்த நிய்யத்தில்லாத வெறும் வார்த்தைக்கு புதிதாய் அர்த்தம் கண்டுபிடிக்கிறார்கள். உங்களுக்கு அந்த சொல் பிடிக்கவில்லையா சொல்லாதீர்கள் ஆனால் மற்றவரையும் அப்படித்தான் இருக்க வேண்டும் நீ தவறு செய்கிறாய் என்று எந்த அளவுக்கு தவறு என்று தெரியாமலே சுட்டிக் காட்டாதீர்கள். இஸ்லாத்தை முதலில் சரியாக புரிந்துக் கொள்ளுங்கள் பிறகு வாதிடலாம் என்றார்கள். அவர் சொன்னது சத்தியமான வார்த்தையாகப்பட்டது எனக்கு. ’கடவுளின் முகவரி’ அறிந்தவருக்கு இதைக் கூட புரிய வைக்க முடியாதா என்ன?

அவரிடம் கேட்க என்னிடம் இரண்டு கேள்விகள் இருந்தது. ஒன்று இக்காலத்து பெண்ணியவாதி என்ற பெயரில் சிலரும் மற்றவர்களும் படைப்பில் நாக்கூசப்படும் சொற்களைக் கூட பாவித்து எழுதுகிறார்களே, சர்ச்சைக்குரியவர்களாகி எளிதில் பிரபலமாகும் குறுக்கு வழி கொண்டவர்களை பற்றிய அவருடைய கருத்து. இதனை வேறு விதமாக அழகாக நண்பர் ஷாஜி கேட்க, கவிக்கோ அவர்கள் அதனை எதிர்த்து வருவதாகவே சொன்னார்கள் அதுமட்டுமில்லாமல் அது நிலைக்காது என்றும் ஆருடம் சொன்னவர்களை அய்யனார் நண்பர் என்று எங்களிடம் அறிமுகமான அசோக் ’அதில் என்ன தவறு? கவிஞர் அவர்களையே கொண்டாடிக் கொள்கிறார்கள்’ அவ்வளவுதான் என்று எதிர்வாதம் செய்ய. ’கொண்டாடிக் கொள்ளட்டும் ஆனால் உடல் உறுப்புக்கு அவசியமென்ன’ என்று கவிக்கோ கேட்டதற்கு. அவர் எதை சொல்கிறார் என்று தெரிந்தும் கவிஞர்கள் எல்லா உறுப்புகளை பற்றியும்தான் பேசுகிறார்கள் எது ஆபாசமென்று யார் தீர்மானிப்பது என்று கொதித்தெழுந்தார் அவர், அதன் பின் நிலைமை சீரானது.

என்னுடைய இரண்டாவது கேள்வி, 'தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட கவிக்கோ மற்றவர்களை விட எப்படி தனித்து நிற்கிறார்கள்’ என்பது. இந்த கேள்வியை தனியாக கேட்க வேண்டிய அவசியம் வரவில்லை. அது சொல்லாமலே எனக்கு புரிந்துவிட்டது.

இலக்கிய விழா என்றாலே இரம்பம், அறுவையாக இருக்கும் என்று சொல்பவர்களுக்கு நாமம் போடும் வகையில் மிக சிறப்பாக சுவாரஸ்யமாக அமைந்திருந்தது இந்த விழா. அதற்குக் காரணம் முழுக்க முழுக்க கவிக்கோ தான். கேட்டுவிட்டார்களே என்பதற்கான பதிலாக மட்டும் இல்லாமல் இரசிக்கும் படியானதாகவும் அமைந்திருந்தது அவருடைய ஒவ்வொரு பதிலும். கவிதை தெரியாதவர்கள் இக்கூட்டத்ததிற்கு வந்திருந்தால் கூட கவிதைப் பற்றிய ஆர்வம் மிகுந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

Monday, November 17, 2008

வாரணம் ஆயிரம் - வானிறம் ஆயிரம்

நான் பதிவு எழுதியே பல காலமாகிவிட்டது, நேரமில்லாதது ஒரு காரணமென்றாலும் எதையும் பதியும் படியில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். தசாவதாரத்திற்கு பிறகு திரையரங்கில் பார்க்க வேண்டுமென காத்துக் கொண்டிருந்த படம். அதுவும் எங்க ஊரில் எந்தத் தமிழ்ப்படமும் ஒரே வாரம்தான் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வெளிவரும் நாளை எதிர்பார்த்திருந்தேன். திரையரங்கில் நுழையும் போதே ஆசிப் இனிப்பு வழங்கி 'படம் குப்பையாம்; வாழ்த்துகள்!' என்று வரவேற்றார். கொஞ்சம் கல்வரமாக இருந்தது - ஆனாலும் காத்திருந்த. நம்பிக்கை வீண் போகவில்லை.

பொதுவாகவே கவுதமிடமிருந்து விறுவிறுப்பான, அதிர்ச்சிகள் அடங்கிய, திகில் நிறைந்த, புதிர் புகுத்திய படத்தைத்தான் எதிர்பார்ப்போம். இதுவோ நேர்மாறாக மெல்லிய உணர்வுகளுக்கு முன்னுரிமை வழங்கும் படமாக.

படத்தின் ஆரம்பத்திலேயே மிகுந்த அயர்ச்சி அதன் காரணம் படத்தின் பெயரைத் தவிர வேற எதையும் தமிழில் பார்க்காமல் போனதாலும் கூட இருக்கலாம். சின்னச் சின்ன வசனங்களும் ஆங்கிலத்தில் வந்து எரிச்சலைக் கிளப்பியது. ஆனால் படம் நகர நகர நம்மோடு கதைச் சொல்லியும் கூட வந்து நம்மை அவர்களோடு இணைத்துக் கொண்டு படத்தை மெல்ல நகர்த்தும் திறனை கவுதமிடம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் நம் தமிழ் இரசிகர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், விரைவு, ஒரு நகைச்சுவை தடம் என்று எல்லாமும் கலந்த மசாலாவையே சுவைத்து பழகிவிட்டார்கள். அதுவே தமிழ் இரசிகர்களின் எதிர்பார்ப்பு என்று தெரிந்தும் கூட இப்படிப்பட்ட சிகிச்சையை தைரியமாகத் தந்த இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

படத்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் 'கவிதை'. ஏனெனில் சிலருக்கு படம் புரியாமலுமிருக்கலாம். குழந்தைகள் நீதிக் கதையின் முடிவில் அப்ப 'கதை என்ன சொல்ல வருது' என்று கேட்பது போல் படத்தைப் பார்த்து முடித்த பிறகு என்ன சொல்ல முயற்சியிருக்காங்க என்று கேட்பவர்களுக்குச் சொல்ல எந்த நீதியும் இல்லை. நெருக்கமான தகப்பன் மகன் உறவு குறித்த ஒரு வாழ்க்கைப் பயணம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.


இரட்டை வேடத்தில் சூர்யா என்று தோன்றாதபடி அப்பட்டமான இரு உருவம் கொண்டவராக மாறியிருக்கிறார். முதிர்ந்த சூர்யா ஒப்பனையில் மட்டும் முதிர்ச்சியை காட்டாது தனது உடல் மொழியிலும் அற்புதமாக வித்தியாசம் காட்டியுள்ளார். மகன் சூர்யா அந்த வயதிற்கொப்ப காதல் நாயகனாக அப்பாவை தன் நாயகனாக கொண்ட அடக்கமான புதல்வன் என்ற ஒரு வேடம் மட்டுமில்லாமல் அதிலும் வயது வித்தியாசங்களை காட்ட ஒப்பனையை மட்டும் நம்பாமல் உடல் அசைவில், குறும்பு பார்வையில், இளமை துள்ளல் சொட்ட நடித்துள்ளார். அதுவும் அவர் மேகனாவை காணும் போதெல்லாம் மனதின் அதிர்வுகளை கண்களில் காட்டி அந்த இரயில் தடதடக்கும் வேளையில் ஒளித்து வைக்க முடியாமல் உடனே கொட்டிவிட வேண்டும் என்று துடிக்கும் தருணத்தில், அவள் வீட்டு வாசலில் அதே சட்டை, கித்தாருடன் வந்து நிற்கும் போது அவரின் முகபாவங்கள் அப்பப்பா சூர்யா - 'சூர்யா' என்றாலே போதும் தரம் எளிதில் விளங்கும் என்ற விளம்பர வாக்கியத்திற்கு பொருந்தும் அளவிற்கு நடிப்பை கொட்டி, வானம் பல வர்ணங்களை காட்டுவது போல் சூர்யாவும் பல்முக நடிப்பில்.

கதாநாயகி சமீரா - பார்த்தவுடன் பிடித்து போகும் முகமில்லை. ஏ.ஆர். ரஹ்மான் பாடல் கேட்க கேட்க பிடித்து போகுமே அதுபோல சமீராவின் முகமும் அந்த கதாபாத்திரத்தோடு நாம் ஒன்றும் போது பார்த்து பார்த்து பிடித்து போகிறது.

ரம்யா (திவ்யா என்று பெயர் மாற்றிக் கொண்டிருக்கிறார்) கதாபாத்திரமும் மனதில் நிற்கும்படியாக அமைந்திருக்கிறது. அவள் காதல் தெரிவிக்கும் தருணமும் அதன் நேர்த்தியும் மிக அழகு.

நெடுங்காலமாக ஒப்பனை போட்ட முகமென்பதால் சீக்கிரமே முகச்சுருக்கம் ஏற்பட்டுவிட்டதால் சிம்ரனுக்கு வயதானவருக்கான ஒப்பனைக்கு அவசியமில்லாத அளவுக்கு கிழடுதட்டிவிட்டது. அவருடைய மலரும் நினைவுகளில் இளம் சிம்ரனாக மாற்றத்தான் ஒப்பனையாளர் கொஞ்சம் சிரமம் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

பாடல் வரிகள் தாமரை என்பதாலும் அதற்கு ஹாரிஸ் இசையமைத்திருப்பதாலும் கேட்வே வேண்டாம், எனக்கெல்லாம் கேட்காமலே பிடித்து போகும். அதுவும் 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' உண்மையில் மனதில் மழைத்துளி சொட்டும் பாடல்தான்.

இன்னும் முயன்றிருந்தால் நிறைய கத்திரித்திருக்கலாம். தமிழக திரையரங்கில் குழந்தை கடத்தல் விஷயத்தை மொத்தமாக கத்தரித்துவிட்டார்களாம் - அதுவும் நல்லதுதான். தேவையற்ற சாயம் பூசிய நிஜமில்லாத கதாநாயக சாகசம் இந்தப் படத்திற்கு தேவையற்றதுதான்.

படம் முழுக்க ஆங்கிலம் கதைத்துவிட்டு கடைசி காட்சியில் 'வாரணம் ஆயிரத்திற்கு' பொருள் சொல்லும் பாங்கு சிரிப்பை வரவழைத்தது.

படத்திற்கு என்னவோ என்னால் கதைச் சுருக்கம் சொல்ல முடியவில்லை - சுருக்கும் படியாக இல்லையப்பா மிக நீளப்படம்.

படத்தில் நிறைய ஓட்டைகள் என்பதால் பல கேள்விகள். இருப்பினும் ஒரே கல்லில் இரண்டு பேரிச்சம்பழமாக (எங்க ஊர்ல மாங்காய் மரத்தை தேடணும்ங்க) சூர்யா தன் தந்தைக்கும், கவுதம் தன் தந்தைக்கும் நன்றி சொல்லிக் கொள்வதாக அமைகிறது படம்.

இப்படி நம் தந்தை இருந்திருக்க கூடாதா என்று சிலருக்கும், என் குழந்தைக்கு இப்படி ஒரு தகப்பனாக இருப்பேன் என்று சிலருக்கும் தோன்றினாலே இயக்குனருக்கு வெற்றிதான். பார்க்க வேண்டிய படம்தான், ஒரு முறையாவது.

Sunday, August 24, 2008

இரங்கல் செய்தி

இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், கண்ணதாசன், எம்.ஜி.ஆர், கலைஞர் மூவரிடமும் ஏழு ஆண்டுகளுக்கு மேல் உதவியாளராக பணியாற்றியவர் கற்பூர நாயகியே (L.R. ஈஸ்வரி அம்மன் பாடல்) காலத்தை வென்றவன் (அடிமைப்பெண் படத்தில்) போன்ற பெருமை மிகு பாடல்களை எழுதிய கலைமாமணி கவிஞர் அவினாசிமணி இன்று 24 ஆகஸ்டு 2008 சென்னையில் காலமாகி விட்டார்கள். இவர் இயக்குனரும் நடிகருமான ஆர். பாண்டியராஜன் அவர்களின் மாமனார் ஆவார்.

அவருடைய பிரிவினைத் தாளாது துயருறும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான அனுதாபங்களையும், அவர்களுடைய நினைவிற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Tuesday, April 29, 2008

அதிரடிக்காரன் ஏ.ஆர்.ஆர்.

மயங்க வைத்த மாலை பொழுதென்று ஒரு வாக்கியத்தில் அடக்கிவிட முடியாத அளவிற்கு இசை விருந்து படைத்தனர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் குழுவினர்.

'ஷார்ஜா வரை போக வேண்டும்', 'பார்க்கிங் கிடைக்காது', 'உன்னை நடக்க வைக்க வேண்டும்', 'இரவு நேரமாகிவிடும்' என்றெல்லாம் அடுக்கடுக்கான காரணம் சொல்லி என்னை அழைத்து செல்லாமல் கழட்டிவிட நினைத்தவருடன் தொற்றிக் கொண்டு சென்றுவிட்டேன் - தொற்றிக் கொண்டது கணவருடன் தாங்க. என்னவென்றாலும் இந்த மாதிரியான நிகழ்ச்சியை ஒரு நண்பர்கள் கூட்டத்துடன் சென்று விசிலடித்து பார்த்த சந்தோஷம் கிடைக்குமா, பொண்டாட்டி கூட வந்தா? அதான் அப்படி போல.

ஷார்ஜா கிரிக்கெட் அரங்கத்துல ஏப்ரல் 18 இசை விழா - ஏ.ஆர். ரஹ்மான், ஹரிஹரன், சித்ரா, சாதனா சர்கம், சிவமணின்னு இன்னும் நிறைய பெயர்கள். டிக்கெட்டில பெரிய பட்டியலை பார்த்ததுமே கண்டிப்பா போகணும்னு முடிவு பண்ணிட்டேன். அதற்கேத்தா மாதிரி அக்காவும் 2 வி.ஐ.பி. டிக்கெட் தந்தாங்க. 'உனக்கு ஏ.ஆர்.ஆர். பிடிக்குமே போயிட்டு வா'ன்னு. என்ன ஒரு நல்ல மனசு பாருங்க. சரி, நம்ம கதைய விடுங்க. நிகழ்ச்சி 8.30 மணிக்குன்னு போட்டிருந்தா மாதிரி சரியா நேரத்திற்கு ஆரம்பிப்பாங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல. உள்ளே நுழையுறோம் ஏ.ஆர். ரஹ்மான் முதல் பாடலை தொடங்கிட்டார் 'கல்பலி ஹெய் கல்பலி'ன்னு 'ரங் தே பாசந்தி' படத்திலிருந்து. 'முதல் பாட்டு தமிழில் இருக்கும்னுல நினைச்சேன்னு' நான் முணுமுணுத்துக்கிட்டே உட்கார்ந்தேன்.


அடுத்த பாட்டே 'காதல் ரோஜா'வே ஹரிஹரன் குரலில். நான் சொன்னது கேட்டுடுச்சோன்னு பார்த்தா அந்த ஒரு பாட்டு மட்டுமில்ல. ஒரு ஹிந்தி, ஒரு தமிழ்ன்னு மாத்தி மாத்தி பாடி எல்லா வகையான இரசிகர்களையும் போட்டு இழுத்துட்டாங்க. 'என்னதான் சொல்லுங்க காதல் ரோஜாவே நம்ம எஸ்.பி.பி. குரலில் கேட்ட மாதிரி இல்ல ஹரிஹரன் தேவையில்லாம மெட்ட மாத்தி பாடி சொதப்புறார்'ன்னு சொன்னதுதான் தாமதம், பக்கத்திலிருந்து என்ன வேண்டா வெறுப்பா கூட்டிப் போனவர் 'ஹரிஹரன் எவ்வளவு பெரிய பாடகர், நீ பெரிய இவளா, அவர போய் சொதப்பல்னு சொல்றீயே'ன்னு சொன்னதும் நான் கப்சிப்ன்னு ஆகிட்டேன். அதன் பிறகு வந்த 'பூம்பாவாய் ஆம்பல்' ஹரிஹரன் - மதுஸ்ரீ பாடினார்கள். மதுஸ்ரீயை இரசிக்கும் அளவுக்கு ஹரிஹரனை இரசிக்க முடியவில்லை. மேடை பாடல்கள் என்றால் வித்தியாசம் காட்டுவதற்காக ராகம் மாற்றி பாடுவது, வரியை விட்டு பாடுவதெல்லாம் எஸ்.பி.பி. ஸ்டைல். அவருக்கு மட்டும்தான் பொருந்தும் என்பதாக மண்டையில் ஏறிடுச்சு போல அதனால் இவர் செய்தால் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஹரிஹரனும் சாதனாவும் சேர்ந்து பாடிய பாடலில் என்ன படமென்று தெரியவில்லை கவாலி பாடல் போல் இருந்தது, பாடலின் முடிவில் இருவரும் மாற்றி மாற்றி அந்த ஸ்வர வரிசைகளை வேகமாகப் பாட என்னை அறியாமல் கைத்தட்டவே தோன்றியது.

'நன்னாரே நன்னாரே'ன்னு 'குரு'வின் பாடலோடு இளமை துள்ள நீத்தி மோகன் ஆடத் தொடங்கியதும் பார்வையாளர்கள் கூட்டமும் ஆடத் தொடங்கிவிட்டது. அந்தப் பாட்டுக்கு மட்டுமல்லாமல் பாடிக்கிட்டே இருந்தா அலுப்பு தட்டிடும் என்பதற்காகவே நடன அமைப்புகளும் நிறைய பாட்டுக்கு அமைத்திருந்தார்கள். பள்ளிப் பிள்ளைகளாக இருக்கும்னு நினைக்கிறேன் ரொம்ப அழகா ஆடினாங்க. ஆடை அலங்காரமும் அற்புதமா இருந்துச்சு. நிழற்பட கருவி அனுமதியில்லன்னு சொன்னதால படம் எடுத்து தள்ள முடியல.

அடுத்து வரும் பாட்டு தமிழிலா ஹிந்தியிலான்னு யோசிச்சிக்கிட்டே இருக்கும் போது, ஒரு கிட்டார் ஸ்கோர் கொடுத்து என்ன பாட்டு என்று குழம்ப வைத்து யாரோ சின்ன பையன் மாதிரி வந்து தேனான குரலில் 'எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணுமடா'ன்னு சொன்னதும் தமிழ் தெரியாத அம்மணிகளும் எழுந்து குதித்தார்கள். யாருடா அந்த பையன்னு பார்த்தா கார்த்திக். அதில் நடுவில் வரும் 'வஹுவஹுவாஹா' ன்னு வருவதையும் பெண் குரலில் அமைவதாக பாடி கலக்கினார்.

தமிழ் பாட்டு பாடினா அது ஹிந்தியிலும் வந்திருந்தா தமிழோடு கடைசி பத்திய ஹிந்தில முடிக்கிறாங்க. ஆனால் ஹிந்தி பாட்டு பாடும் போது அது தமிழிலும் வந்திருந்தா தமிழை தொட்டு முடிக்கலைன்னு நான் புலம்பியவுடன், ஹிந்தில பாடிக்கிட்டு இருந்த மதுஸ்ரீ அதே பாட்ட டக்குன்னு தமிழில் 'கோழி கோழி இது சண்ட கோழி'ன்னு' என்னை பார்த்து பாடுறா மாதிரி இருந்தது. குரலிலே என்னமா ஒரு கிக் வச்சிருக்காங்க இவங்க.

அவங்க மட்டுமா சின்ன குயில் சித்ரா, அவங்க மேடைக்கு வந்ததும் என்ன ஒரு கர கோஷம். 'குமுசுமு குமுசுமு குப்புசே'ன்னு கோரஸ் தொடங்கியது அப்படியே கைத்தட்டு பிச்சிக்கிட்டு போச்சு. அப்படியே குயிலும் 'கண்ணாளனே எனது கண்ணை'ன்னு பம்பாயிலிருந்து அவிழ்த்துவிட அரங்கமெங்கும் உற்சாக ஒலிதான். தமிழில் மட்டுமா பாடுவேன் ஹிந்தியிலும்தான் பாடுவேன் என்பதாக 'ஜெயியா ஜலே'ன்னு லதா மங்கேஷ்கர் பாடிய தில் சே படத்து பாடலை யாருக்கும் சளைத்தவள் இல்லை என்பவராக ரொம்ப ரம்யமாக பாடினாங்க. அவங்க பாடி முடிச்சதும் அதே படத்திலுள்ள 'தில் சே' பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாட பின் அசைவாக தீ டிஜிடல் கிராபிக்ஸில் நடனமாடியது. அதே மாதிரி 'அதிரடிக்காரன் மச்சான் - தீ தீ' என்ற சிவாஜி படப்பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் குரல் கணீரென்று ஒலிக்க எல்லா பாடகர்களும் மேடையில் அவருடன் கோரஸ். உண்மையில் அதிரடிக்காரன் ஏ.ஆர்.ஆர்.தான்.

சமீபத்தில் வந்த 'ஜோதா அக்பர்' படத்திலிருந்து 2-3 பாடல்கள். 'ஜஷ்-இ-பஹாரா' பாடலை மனம் ஒன்றி, என்ன அர்த்தமென்று புரியாத என்னை போன்றவர்களையும் அந்த பாட்டோடு ஒன்ற செய்தவர் ஜாவித் அலி. அழகா அடக்கமா அலட்டாமல் அற்புதமா பாடினார். ரொம்ப 'ஸ்மார்ட்'டாக வேற இருந்தார். சில பாடல்கள் புரியாமலே நம்மை சிலிர்க்க வைக்கவும், குரல் அடைத்து கண்ணில் தண்ணீர் வரவும் வைக்கும் - அப்படி நீங்கள் உணர்ந்ததுண்டா? சில தருணங்களில் சில பாடல்கள் அப்படி என்னை செய்ததுண்டு. அப்படியொரு பாடல்தான் அதே படத்தின் 'கவாஜா மேரே கவாஜா'
கசல் பாடல். ஏ.ஆர். ரஹ்மான் நம்மவர்கள் தொழும் போது தலையில் கைக்குட்டை கட்டிக் கொள்வார்களே அப்படி கட்டிக் கொண்டு ஈடுபாடோ பயபக்தியாக பாடினார். அப்போதும் அருகில் அவருடன் இணைந்து பாடியதும் ஜாவித்தான்.

'ஜலாலுதீன் அக்பர்...' என்று ஏ.ஆர். ரஹ்மான் குரல் ஓங்கி ஒலிக்க 'டிரம்ஸ்' வேகமாக வீசி தள்ளி தொடர்ந்தாற் போல் 'வீர பாண்டி கோட்டையிலே' தட்டி, கிடைக்கும் அன்றாட பொருட்களிலும் மயங்க வைக்கும் மந்திர இசை ஓசை வருமென்று விளங்க வைக்க தண்ணீர் பாட்டில், பெட்டி என்று எல்லாவற்றையும் தட்டி இசை உண்டாக்கினார் சிவமணி. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் தொடர்ச்சியாக. பிரம்மிக்க வைத்தது அவர் அளவற்ற இசை ஆர்வம், திகைக்க வைத்தது அவர் இன்ப இசை அதிர்வுகள், கை வலிக்கப் போகுதுன்னு நினைக்கும் அளவிற்கு மனுஷர் தட்டி உலுக்கிவிட்டார் - பார்வையாளர்கள் மனசையும் சேர்த்து. என்னமா வாசிக்கிறார். அவர் எதை எப்படி தட்டினாலும் இசை. அவர் டிரம்ஸுக்கு மட்டுமே எத்தனை ஒலிவாங்கிகள். மெல்லிய சத்தத்தையும் மனதிற்கு எடுத்து செல்லவாகவிருக்கும். அதே போல் புல்லாங்குழலை ஊதி காற்றில் கீதம் கலந்தார் நபீல். முன்பெல்லாம் டிரம்ஸ் யார், புல்லாங்குழல் யார் என்றெல்லாம் தெரியப்படுத்தக் கூட மாட்டார்கள். இசை கூட்டணியின் விதைகளை விருச்சமாக நமக்கு காட்டியது ஏ.ஆர். ரஹ்மான் என்றால் மிகையில்லை. திறமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக சிவமணி போன்றவர்களை தம் நிகழ்ச்சியில் வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.

பிளேஸ் 'ஒரு கூடை சன் லைட்' என்று பாடிவிட்டு இரண்டாவது முறை பாடும் போது பார்வையாளர்களிடம் வாத்தியார் கோடிட்ட இடங்களை நிரப்பச் சொல்வது போல் 'ஒரு கூடை .....' என்று கேட்க - எல்லோரும் ஒருமித்த குரலில் 'சன் லைட்' என்று கத்த அவரே தொடர்ந்து எல்லா வாத்தியக்காரர்களையும் அறிமுகம் செய்துவைத்தார். அதில் நினைவிருப்பது கல்யாண் -வயலின், சிவகுமார் -மியூசிக் சீக்குவன்ஸ், ரவிசங்கர் -கீபோர்ட், தாஸ் தாமஸ் -சாக்ஸ் அப்படின்னு நினைக்கிறேன். அதனைத் தொடர்ந்து அனைவரையும் செல்பேசியின் வெளிச்சத்தை தூக்கிக் காட்ட சொல்லி வழக்கமான பாடல்கள் பாடாமல் ஏ.ஆர். ரஹ்மான் தோன்றி அவர் சமீபத்தில் இசையமைத்த சேகர் கபூரின் எலிசபெத் (The Golden Age and the stage adaptation of The Lord of the Rings) 'பிரே பார் மீ பிரதர்ஸ், பிரே பார் மீ சிஸ்டர்ஸ்' (Pray For Me Brothers Pray for me sisters) என்று பிளேஸுடன் இணைந்து உருகிப் பாடி நம்மையும் கலங்கச் செய்து நிஜமாகவே ஒரு சகோதரனின் வேண்டுகோளாக எடுத்துக் கொள்ளச் செய்தது அந்த ஆங்கில பாடல்.

ஒவ்வொரு பாட்டு ஆரம்பிக்கும் போதே இந்தப் பாட்டுத்தான்னு ஊகித்து மக்கள் கைத்தட்டி வரவேற்க, பாடுபவர்களும் உற்சாகம் குறையாமல் அதுவும் நம்ம நரேஷ் 'ரூபாரூ'ன்னு வந்தாரு பாருங்க. யப்பா அதுக்கு கருப்பு ஆடையில வந்த பசங்களும் கலக்கலா ஆடினாங்க. ரங் தே பாசந்தி பட காட்சியவிட இது பிரமாதம்னு சொல்ல தோணுச்சு.

* வழக்கமான பாடல்களா இல்லாம புதுசு தரனும்னே குரு, ஜோதா அக்பர், சிவாஜி, அழகிய தமிழ் மகன்னு வந்த புதுப் படங்களிலிருந்து பாடல் தர தவறவே இல்ல.
* இடை இடையே அறிவிப்பாளர் பேசி அறுக்காமல், வித்தியாசமாக ஒரு நிமிஷம் கூட வீணடிக்காம தொடர்ச்சியா பாடல் குவிந்தது.
* பின்புறம் பாடலுக்கேற்ப டிஜிடல் கிராபிக்ஸ் ஸ்கிரீன், வண்ணமயமான விளக்குகள், அருமையான ஒலியமைப்பு எல்லாமே கண் கொட்டாம பார்க்க செய்தது.
* நிகழ்ச்சியின் பலம் எல்லா பாடல்களுக்குமே ஏ.ஆர்.ஆர். கூடவே இருந்து தமது கீ போட்டை தட்டிக் கொண்டிருந்தது.
* டிஜிடல் ஸ்க்ரீன் பிரம்மாண்டமாக வைத்ததால் காலரியில் இருப்பவர்களும் கொடுத்த 125 திர்ஹமுக்கு நிறையவே இரசித்து மகிழ முடிந்திருக்கும்.

நாங்க 11.30 மணிக்கே கிளம்ப வேண்டியிருந்ததால கடைசி பாடலான 'வந்தே மாதிர'த்தைக் கேட்க முடியவில்லை. வெளியில் வந்தால் டிக்கெட் யாராவது தரமாட்டார்களான்னு ஒரு கூட்டமே காத்துக் கிடந்தது. உபயோகித்த டிக்கெட்டை கொண்டு மறுபடியும் உள்நுழைய முடியும் போல அதனால் அதையும் கொடுத்து. டிக்கெட் காட்டினால் கையில் ஒரு வலையம் கட்டிவிட்டார்கள். அதையும் கழட்டிதாங்கன்னு கெஞ்சிக்கிட்டே வந்தார் ஒருத்தர். சரின்னு அதையும் கொடுத்துவிட்டு வந்தோம்.

இதே போன்ற ஒரு ஏ.ஆர்.ஆர். நிகழ்ச்சி சென்னையில் 20ஆம் தேதி கலகலத்ததாமே அதற்கு யாராவது போனீங்களா?

இந்தக் காலத்துல நிறைய பாடகர்கள் குவியுறாங்க ஆனால் அதிர்ஷ்டம்னு ஒண்ணு கூட இருந்தாதான் பலர் காதுகளில் அவர்கள் குரல் ஒலிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஏ.ஆர்.ஆர். வந்த பிறகு பல புது பாடகர்களை துறைக்கு அழைத்து வந்திருக்கிறார். 'சலாம் நமஸ்தே' நிகழ்ச்சியில் ஆஷா போன்ஸ்லே அவர்கள் எஸ்.பி.பி., யேசுதாஸ் இவர்களெல்லாம் ஹிந்தி பாடும் போது 'ஹிந்தி என்னா பாடுபடப் போகுது'ன்னு நினைச்சாங்களாம். ஆனா அந்த அளவுக்கு உடையல நல்லாவே உச்சரிக்கிறாங்கன்னு குறிப்பா சொன்னாங்க. ஆனா தமிழில் அதப்பத்தி யாருமே கவலைப்படுறதில்ல. ஏ.ஆர்.ஆர். கிட்ட எனக்குப் பிடிக்காதது தமிழ் தெரியாத பாடகர்களை தமிழ்க் கொலை செய்வதற்காகவே அழைத்து வந்து நல்ல வரி பாடல்களை கொலை செய்வதுதான். பாட்டு எழுதுபவர்கள் என் பாட்டை 'உதித்' மாதிரி ஆட்கள் கொலை செய்ய வேணாம்னு சொல்ல முடியாதுதான். ஆனால் ரஜினி மாதிரி கதாநாயகர்களாவது 'சஹானா சாரல்' போன்ற அழகிய பாடல்களை ஹிந்திக்காரர்கள் உச்சரிப்பு சிதைக்குதுன்னு சொன்னாத்தான் என்ன? ரஜினி மாதிரி கதாநாயகர்கள் தமிழ் உச்சரிப்பு சிதைவதைப் பற்றிப் பேசினால் சிரிக்கத்தான் செய்வார்கள். யப்பா, நான் ரஜினியை கிண்டல் செய்யலப்பா அவர் சூப்பர் ஸ்டார் என்பதாலே அவர் எப்படி வேணாலும் பேசலாம்.

Friday, February 01, 2008

நாடகமே உலகம்

செய்வதையும்செய்து விட்டு இப்படி எழுத என்ன அருகதை இருக்கிறது என்பவர்களுக்கு முதலிலேயே ஒரு விசயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். இதைச் சொல்லும் தார்மீக உரிமை கூட எனக்குக் கிடையாது என்பதை உணர்ந்த பிறகே இதனை எழுதுகிறேன். ஆனால், நடந்த உண்மைகளுக்கு சாட்சியாக இருக்க நேர்ந்ததால் அதனை வெளிப்படுத்தவே இதனை இங்கே பதிவாக்குகிறேன்.

அரட்டை அரங்கத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். எனக்கும் அப்படித்தான். தொலைக்காட்சியில் அவரவர் பிரச்சனையைப் பேசுவதும் அதற்கு உதவி பெறுவதுமாக இருக்கும் அரட்டை அரங்கத்தைக் கண்ணீர் மல்கப் பார்த்திருக்கிறேன். பேச்சுத்திறனை வியந்திருக்கிறேன். 'வாய் பார்க்காதே' என்று அதட்டும் அம்மாவும் கூட என்னைப் பார்க்க அனுமதித்ததாலோ என்னவோ அந்த நிகழ்ச்சி பிடித்திருந்தது. ஆனால் சிலர் அதை வெறும் நடிப்பு என்று கிண்டல் செய்தபோது கொஞ்சம் யோசித்தாலும் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனுஷ்ய புத்திரனின் 'அரட்டையும் அரட்டலும்' கட்டுரையை வாசித்த போது அந்த நிகழ்ச்சியை பார்க்கும் கண்ணோட்டமே மாறிவிட்டிருந்தது. அதுவும் அவர் அந்தக் கட்டுரையில் எப்படி எல்லோரும் ஒரே மாதிரியான குரலில், பேசும்முறையில், முகபாவத்தில், உடல் அசைவில் பேச முடிகிறது. பல ஒத்திகை பார்த்து பிரச்சனையை கண்ணீருடன் எப்படி சொல்கிறார்கள் என்று எழுப்பிய கேள்வி சிந்திக்கத் தூண்டியது. அதன் பிறகு அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அதுவே ஒலித்துக் கொண்டும் இருந்தது.

துபாயில் அரட்டை அரங்கம் என்று அறிவிப்பைப் பார்த்தேன். ஆனால் கலந்துக் கொள்ள ஆவல் பெரிதாக வரவில்லை. பல நகைச்சுவைப் பட்டிமன்றங்களில் பேச்சுக்காக நகைச்சுவைக்காக எத்தனையோ தலைப்பை எடுத்துப் பேசியிருக்கிறேன். அது வெறும் பேச்சாகத்தான் இருக்குமே தவிர என் மனதின் கருத்தாக வாதமாக அமையாது. என் நோக்கமெல்லாம் பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதாகவும் என்னுடைய பொழுதுபோக்காகவும் மட்டுமே அமையும். அதனாலேயே இந்த 'சீரியஸ்' மற்றும் உருக்கமான அரட்டை விளையாட்டுக்குப் போகவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களே உங்களைப் போன்றவர்கள் நிகழ்ச்சிக்குத் தேவை என்று வீட்டில் சொல்லிவிட கலந்து கொள்ள நேர்ந்தது.

எந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டாலும் அதில் அக்கறை செலுத்தாத வீட்டினருக்கும் கூட இம்முறை நான் ஒவ்வொரு சுற்றில் தகுதி பெறும்போதும் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அவர்கள் 'இந்தச் சுற்றில் தேர்வாகிவிட்டாயா?' என்று கேட்கும் போதெல்லாம் ஏதோ புது பொறுப்பு வந்துவிட்டதாக பயம் மேலோங்கியது. கொடுக்கப்பட்ட தலைப்போ 'அமீரக வாழ்வில் யாருடைய பிரிவு அதிக வேதனை தருகிறது
1. குடும்பம்
2. காதலி
3. நண்பர்கள்
4. தாய்மண்
5. என்னத்த பிரிவு? இங்கு நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்'.

தலைப்பு வந்தவுடன் என்னை நன்றாகத் தெரிந்தவர்கள் அத்தனை பேரும் நான் 'நிம்மதியாக இருக்கிறோம்' என்று தான் பேசுவேன் என்று சரியாகச் சொல்லிவிட்டார்கள். நானும் எல்லாச் சுற்றிலும் நிம்மதியைப் பற்றிப் பேசியே தகுதியும் பெற்றேன். இறுதிச் சுற்றின் முடிவுக்கு எதிர்பார்த்திருந்த போது அழைப்பு வந்தது 'தேர்வாகிவிட்டீர்கள் ஆனால் எங்களுக்காக நீங்கள் வேறு தலைப்பில் பேச வேண்டும். உங்கள் பேச்சுத்திறனை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறோம்' என்று. எனக்குப் பேசக் கொடுத்த தலைப்பு 'தாய்மண் பற்றிய பிரிவு'. விரும்பிப் பேசுவது வேறு, அலங்காரப் பேச்சு வேறு - இதற்கு உடன்பட வேண்டாமென்று தோன்றினாலும் வீட்டில் உள்ளவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக ஒப்புக் கொண்டேன். யதார்த்தமில்லாது சோகம் கொட்டி நடிப்பது எனக்கு கடினமாகப்பட்டது.

ஆனால் 'முடியும்' என்று என் எண்ணத்தையே அதற்கேற்ப மாற்றிக் கொண்டு நாடகத்திற்கு தயாரானேன் அவர்களும் ஒரு சில விவரங்களையும் தந்து 'தயார்படுத்தினார்கள்'. என்னுடன் பேசியவர்களில் ஒரு பெண் அவர்களுக்கு 'brain tumor' இருந்த போது தன் குடும்பத்தினர் எப்படி ஒத்துழைத்தார்கள் என்று பேசி இதைவிட இந்த இடத்தில் இன்னும் உருக்கமாக்குவது எப்படி என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் ஒரு குழந்தையின் மரணத்தை பற்றி ஒத்திகையில் பேசி முடித்தவுடன் தேர்வுக்குழுவினரோ 'அந்த இடத்தில் இன்னும் உருக்கமாக இது போல் பேசுங்கள்' என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்படியாக ஒவ்வொருவருக்கும் எப்படி பேசுவதென்பது பற்றி குறிப்புகள் வழங்கப்பட்டபோதுதான். அரட்டை அரங்கம் என்பது 'நாடக அரங்கம்'தான் என்று தெள்ளத்தெளிவானது. இதனால்தான் எல்லோர் குரலும் ஒரே விதமாக ஒலிப்பதும் புரிந்தது.

நிகழ்ச்சி அரங்கேறியது சில வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு வேலை தினமாதலால் பார்க்கவுமில்லை அது குறித்து வீட்டாருக்கு நினைவுப்படுத்தவும் மறந்திருந்தேன். ஆனால், நான் பேசி முடிந்ததும் முகத்திற்கு வட்டம் போட்டு 'அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்' என்ற பாடலையும் ஒலிக்கச் செய்தார்களாம். ஒளிபரப்பிய நொடியிலிருந்து ஊரிலிருந்து சுற்றமும் நட்பும் அழைத்துப் பாராட்டு மழை பொழிந்தார்கள். என் வாப்பா என்னிடம் சரியாக பேசக் கூட முடியவில்லை காரணம் என் பேச்சைக் கண்டு கண் கலங்கி தொண்டையும் அடைத்துவிட்டிருந்தது. என் நடிப்புக்கு இவ்வளவு சக்தியா என்று நினைத்துக் கொண்டேன். எனது மாமியார் அழைத்து 'நீங்க பேசுனது சந்தோஷமா இருந்துச்சு ஆனா நீங்க பேசின விசயம் வேதனையா இருந்துச்சு. அங்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னா இங்கு வந்திடுங்க' என்று அப்பாவித்தனமாகச் சொன்னது மனதைச் சங்கடப்படுத்தியது. இதையெல்லாம் விட என் மாமா மகனுக்கு நிச்சயித்த பெண் இவனுக்கு துபாய்க்கு தொலைபேசி 'துபாய் மாப்பிள்ளைன்னு சொன்னதும் கல்யாணமாகி நானும் அங்க வரலாம்னு நினைச்சிருந்தேன். உங்க மச்சி பேசுனதப் பார்த்து அந்த ஆசையே போயிடுச்சு. உங்களுக்கெல்லாம் நம்ம நாட்ட பிரிஞ்ச ஏக்கம் இவ்வளவு இருக்குன்னா அங்க இருக்க வேணாம் வந்திடுங்க' என்று சொன்னார்களாம். அதை அவன் என்னிடம் சொல்லும் போது இந்த வருடத்தின் மிகப் பெரிய நகைச்சுவை என்றுதான் சிரிக்க முடிந்தது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுவதை அப்படியே நம்பி விடும் அளவுக்கு இதைக் கேட்கிறவர்கள் முட்டாள்களா, அல்லது அவர்களை முட்டாளாக்க முடிவு செய்து இப்படி வேஷம் போட்ட நாங்கள் முட்டாள்களா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இதைப் போல் எத்தனை பேர் நான் இப்படிப் பேசியதை உண்மையென்று கண்மூடித்தனமாக நம்பி 'உச்சு' கொட்டியிருப்பார்கள், கண்ணீர் வடித்திருப்பார்கள். அதற்கு நானும் காரணமானதை நினைத்து என்னை நானே நொந்துக் கொண்டேன். இந்த மாதம் நடந்த ஜெயா 'மக்கள் அரங்கத்தில்' அதனாலேயே கலந்துக் கொள்ளவில்லை.

அரட்டை அரங்கத்தில் என்னுடன் ஒருவர் 'இலங்கைத் தமிழர்' என்ற முகவுரையோடு ஆரம்பித்துப் பேசினார். ஆனால் அவர் பேச்சு எனக்கு இலங்கைத் தமிழாகத் தெரியவில்லை அதுவும் அவரை முதல் சுற்றில் சாதாரண தமிழில் பேசி பார்த்த நினைவும் இருந்ததால் அவரிடம் நான் கேட்டுக் கொண்டது ஒன்றே ஒன்றுதான் 'நீங்கள் இலங்கைத் தமிழராகப் பேசுங்கள் பிரச்சனையில்லை ஆனால் நீங்கள் பேசுவது மொத்த இலங்கைத் தமிழரின் பிரதிபலிப்பாகட்டும் என்றேன். "மற்றவர்களுக்கெல்லாம் தற்காலிக பிரிவுதான் ஆனால் தாய் மண்ணை மீண்டும் எப்போது பார்ப்போம் என்று தெரியாமல் தவிப்பவர்களின் குரலாக உங்களுடையது ஒலிக்கட்டும்" என்றேன். அவரோ 'நிம்மதி' என்ற தலைப்பிற்குப் பேசினார். இலங்கைத் தமிழராக பேசிய அதே நபர் மக்கள் அரங்கில் சாதாரண தமிழில் பேசி என் சந்தேகத்தை தீர்த்து விட்டார். நாடகத்தில் இது கேடுகெட்ட நாடகம் என்று நினைத்துக் கொண்டேன்.

இந்த அரட்டை அரங்கத்தில் / மக்கள் அரங்கில் எத்தனையோ பேர் பேசுகிறார்கள் ஆனால் ஒருவரும் நடப்பது நாடகம்தான் என்று மற்ற அப்பாவிகளுக்குச் சொல்லாமல் இருப்பது ஏன்? நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களே உண்மையை வெளியில் சொன்னால் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து அதில் ஏற்படும் பச்சாதாபம் குறையும்தானே? ஒத்திகை பார்த்து அழுதழுது சோகத்தை உள்ளிழுத்துப் பேசுகிறார்கள் சரி, ஆனால் ஒத்திகையில் கேட்டுவிட்ட அதே செய்தியை மீண்டும் நிகழ்ச்சியில் கேட்கும் போது எப்படித்தான் மடை திறந்த வெள்ளமாக டி.ஆருக்கும் சரி விசுவுக்கும் சரி தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறதோ தெரியவில்லை. சத்தியமா 'கிளிசரின்' போடாமல் இவ்வளவு கண்ணீர் வடிப்பதை முதல் முறையா பார்க்கிறேன்.

இந்த நிகழ்ச்சி மக்கள் அரங்கமாக, அரட்டை அரங்கமாக இன்னும் 'சன்', 'ஜெயா'வில் பல வருடங்களாக பல ஊர்களில் நடந்தவையாக ஒளிபரப்பிக் கொண்டிருப்பதற்கு காரணம் நம் மக்கள் இன்னும் முட்டாள்களாக இருப்பதுதான். மக்கள் விழித்துக் கொள்ள என் ஒரு பதிவு மட்டும் போதுமா என்ன?

Saturday, January 19, 2008

பீமா - அப்படியொண்ணும் மோசமில்லை

'ஒருவன் தன் பாதையை தேர்ந்தெடுக்கும் போதே அவனது முடிவு எழுதப்பட்டுவிடுகிறது' என்ற முடிவை நோக்கி நகர்வது 'பீமா'. ஆயுதத்திற்கு நண்பர்- பகைவர், நல்லது- கெட்டது என்று எதுவுமே தெரியாமல் 'என் கடன் பணி செய்துக் கிடப்பதே' என்று தன் அழிக்கும் பணியை ஆயுதம் செய்தே விடுகிறது என்று உணர்த்தும் படம். கதாநாயகனின் பெயர்தான் பீமா என்று நினைத்திருந்தேன் ஆனால் விக்ரமிற்கு மகாபாரதத்தில் வரும் பீமனின் தோற்ற அடிப்படை தருவதால் சேகர் 'பீமா'வாகிறார். எதையுமே புதுசாக சொல்ல முயற்சிக்காத, ஏற்கெனவே பார்த்த பல படங்களின் சாயல். ஒட்டுமொத்த 'ரவுடியிஸ' படங்களின் கலவைன்னு சுருக்கமா சொல்லிடலாம். இயக்குனர் லிங்குசாமியின் 'சண்டைகோழி', 'ரன்' வரிசையில் மற்றுமொரு அடிதடி படம் அவ்வளவே. கொஞ்சம் 'தளபதி' சாயலை தொட முயற்சித்திருக்கிறார்கள் என்று நான் கிசுகிசுக்க, "ச்சீ ச்சீ இல்லவே இல்ல" என்று ஒரு விக்ரம் ரசிகர் பதிலளித்தார் படத்தை சிலாகித்தபடி.

சென்னையைப் பற்றிய ஒரு முகவுரையோடு படம் ஆரம்பிக்கும் போது பலவிதமான எதிர்பார்ப்புகள் இருந்தாலும் பெரிய ஏமாற்றங்கள் இல்லையெனலாம். என்னவொரு முரணான வாக்கியமென்று நீங்கள் நினைக்கலாம். எழுதிய எனக்கும் அப்படித்தான். பூசிமெழுகும் காரணத்தைக் கடைசியில் சொல்கிறேன். பீமா கதாபாத்திரத்திற்கு விக்ரம் சரியானவர்தான். படத்தில் மிகப் பெரிய ஆறுதல் எந்த 'பஞ்ச்' வசனங்களுமில்லை. கதாநாயகன் என்று எந்த 'பில்டப்'பும் இல்லாமல் சாதாரணமாகப் படத்தில் நுழையும் விக்ரம், ஒரே நபர் பலரைச் சுற்றிச் சுற்றி அடிப்பது எரிச்சலைத் தந்தாலும் சண்டை போடுவது 'பீமா' விக்ரம் 'சுள்ளான்' இல்லை என்று மனதைத் தேற்றிக் கொண்டேன். படத்தை வண்ணமயமாக மாற்ற ஆங்காங்கே ஒரு பெண்ணைக் கொண்டு நிரப்பும் தமிழ்த்திரை உலகிற்கு இந்தப் படம் மட்டும் எப்படி விதிவிலக்காகும்? அதனால் திரிஷா அப்பப்ப எட்டிப்பார்க்கிறார். ஒரு அடிதடி மன்னனைக் காதலிக்கும் கல்லூரி மாணவியின் 'டிரெண்ட்' எப்பதான் மாறுமோ தெரியவில்லை. பார்த்தவுடன் காதல் என்ற கண்றாவி வேறு - பரவாயில்லை ஏ.எம். ரத்தினத்திற்காக சகித்துக் கொள்ளலாம். பிரகாஷ்ராஜ் வழமையான கதாபாத்திரமாக வராமல் கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பதால் நல்லாவே பொருந்தியிருக்கிறார். சுஜாதாவின் வசனமாக இருந்தாலும் எந்த அசிங்கமான இரட்டை வசனங்களுமில்லை - ஒருவேளை எனக்குப் புரியவில்லையா என்று தெரியவில்லை. எனக்கு ஏனோ ரகுவரனை பார்த்தால் சுஜாதாவைப் பார்ப்பதாகத் தோன்றியது - மிகப் பரிதாபமான கதாபாத்திரம். என் மகள் கண்களுக்கு ரகுவரன் தோற்றம் எப்போதும் ஷாருக்கானாகவே தெரியும் - இதை ஷாருக்கான் கேட்டால் அழுதுவிடுவார். விக்ரம் படமென்றால் ஆஷிஷ் வித்யார்த்தி தொற்றிக் கொள்வாரோ? கமிஷனராக சில காட்சிகள் வந்தாலும் அவர் நுழைந்த பிறகுதான் 'டுமீல்' சத்தம் அதிகரிக்கிறது.

படத்தின் ஒலிநாடா ரொம்ப காலத்திற்கு முன்பே வந்துவிட்டதால் கேட்டு அலுத்துப் போன நல்ல பாடல்கள். ஹாரிஸ் ஜெயராஜ் நல்லாவே தட்டியிருக்கிறார். ஆனால் பாடல் காட்சிகள் மெனக்கெட்டு வேறு நாட்டில் தேவையில்லாமல் படமாக்கி ஏம். ரத்தினத்திற்கு செலவு வைத்திருக்கிறார்கள் தவிர பிரம்மாண்டமெல்லாமில்லை. சில படங்களில் கதாநாயகியாக வலம் வந்த ஷெரின் பாவம் ஒரே ஒரு குத்து பாட்டுக்கு மட்டும். ஒவ்வொரு பாடல் வரும் போதும் எனக்குப் பிடித்த 'எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்' என்ற யுகபாரதியின் வரிகள் சாதனாசர்கம் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடலை தேடிக் கொண்டே இருந்தேன். வந்தது கடைசியாக, எதிர்பார்ப்பை தகர்த்து.

இந்தக் குழுவிடம் வேற என்ன புதுமையை எதிர்பார்க்கச் சொல்றீங்க? ஒரு சண்டை, ஒரு பாடல் கொஞ்சம் வசனமென்று மாறி மாறி சரியான தமிழ் மசாலா படங்களில் ஒன்று. பொழுதை மட்டும் போக்க, மூளையை கழற்றி வைத்து படத்தைப் பார்ப்பவர்களுக்கு நல்ல தீனி. விறுவிறுப்பான 'போர்' அடிக்காத படம். என்ன, திரைகதையை சொதப்பியிருக்கிறார் லிங்குசாமி. போகட்டும் அதையும் பொறுத்துப் போகலாம்- யாருக்காக எல்லாம் ஏ.எம். ரத்தினத்திற்காக. விக்ரம், லிங்குசாமி தங்கள் சம்பளத்தையே விட்டுக் கொடுத்து வெளிவந்துள்ளது 'பீமா'. 'இந்தியன்', 'தூள்', 'கில்லி' என்று தூள் படுத்திக் கொண்டிருந்த ரத்தினம் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தால் விழுந்த அடி இந்த அடிதடி படத்தில் மீட்டெடுக்க வேண்டும். இல்லையெனில் ஜீவி நிலை வந்துவிடும் அபாயமுள்ளது. அவர் வறுமையை ஈடுகட்டவாவது படம் 'ஆஹா ஓஹோ' என்று ஓட வேண்டும். 'சந்திரமுகி', 'சிவாஜி', 'பில்லா' என்ற படங்களையே பெரிய அளவில் ஓட வைத்த நம் மக்கள் இதைச் செய்துவிட மாட்டார்களா என்ன? 'பீமா' படத்தில் 'சுப' முடிவு இல்லாததை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? இந்த முடிவுதாம்பா சரி. ஓடாதோன்னு பயந்து இன்னொரு முடிவை ஒட்டவைத்தால் அபத்தமாகிப் போகும். மொத்த படமே அபத்தம் இதுல தனியா இதுவேறயான்னு கேட்காதீங்க நான் ஜூட். ஆனா மறக்காம படத்தை திரையரங்கில் பார்த்துடுங்க.

Sunday, January 13, 2008

PIT: டிசம்பர் மாதப் போட்டிக்கான படங்கள்

என்னடா முடிந்துப் போனப் போட்டிக்கு தாமதமா பூக்கள் படம் இப்போ வருதுன்னு தவறா நினைக்க வேணாம். பரிசு பெற்ற பூப்படத்தைக் காட்டிலும் இது ரொம்பவே அழகா இருந்ததா தோணுச்சு அதான் போட்டுட்டேன். பரிசு கொடுப்பாங்களா :-)



எப்பா கோபப்படாதீங்க, இது கண்மணி மொக்கைப் போட அழைத்தமையால் நிகழ்ந்தது. கண்டிப்பா நிஜமாவே ஜனவரி மாதப் போட்டிக்கு ஒரு நல்ல படத்தோடு வரேன். மொக்கைப் போட நான் வெத்தலை பாக்கெல்லாம் வச்சி யாரையும் அழைக்கப் போவதில்லை, அனானிகளை மட்டும் அழைக்கிறேன். அனானிகள் இதை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டு மொக்கையாக உங்க வலையை தொடங்கி அதிலிருந்து இனி பின்னூட்டமிடலாம்.

Saturday, January 05, 2008

இதப் பார்த்தாவது திருந்துவாங்களா?

குறும்படமென்றாலே எனக்கு தரமணி எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நான் பணி புரியும் போது என் சக ஊழியர்களால் எடுக்கப்பட்ட பெண்ணியம் தொடர்பான 'சும்மா', பள்ளி படிப்பின் பாரத்தை பற்றிய 'இந்த பாரம் தேவையா' போன்ற கருத்தாழமிக்க படங்கள்தான் நினைவுக்கு வரும். பல மாதங்களுக்கு முன்பு தமிழனில் ஒளிபரப்பிய குறும்படம் பற்றிய கருத்தரங்கம் மீண்டும் குறும்படங்கள் மீது ஆர்வம் வர ஒரு உந்துதலாகயிருந்து, அந்த கருந்தரங்கில் பேசப்பட்ட சில படங்களை இணையத்தில் தேடிப்பிடித்து பார்த்தேன். 'மனுஷி', 'தனியொரு மனிதனுக்கு', 'குப்பை', 'இளைஞா', 'ஒரு மரம் நிழலை தேடுகிறது', 'உயிரே உயிரே', 'செருப்பு', இன்னும் பல கிடைத்தது.

குறும்படம் ஏறத்தாழ ஒரு நல்ல கவிதை வடிவம் பொருந்தியது, ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு அதனை அழுத்தமாக விளங்கச் செய்து நம்மை வெவ்வேறு கோணங்களில் சிந்திக்க வைக்கும் வல்லமைக் கொண்டது, சிலது விழிப்புணர்வூட்டும், சிலது மனிதத்தைத் தோண்டும். நான் பார்த்த அந்த தொலைக்காட்சி கருத்தரங்கில் குறும்படம் எடுத்தவர்களின் அனுபவங்களின் பகிர்வு, அவரவர்களுக்கு பிடித்த குறும்படத்தை பற்றிய விவரிப்பு, விளம்பரப் படத்திற்கும் குறும்படத்திற்கும் உள்ள வேறுபாடு, குறும்படத்தைக் கையாளும் யுக்தி என்று சில பிரபலங்களால் விவாதிக்கப்பட்டது. அதில் 'விஷுவல் மீடியா' படிக்கும் ஒரு மாணவரும் அடக்கம். தமது படிப்பிற்கு இத்தகைய படங்கள் எங்ஙனம் உதவுகிறது என்றும் விளக்கினார். சில மாதங்களுக்கு முன்பு வலைப்பதிவாளர்களுக்காக மலைநாடன் நடத்திய குறும்படப் போட்டியில் எம் வலைப்பதிவர்களும் உற்சாகமாக கலந்துக் கொண்டு பரிசுப் பெற்றது பெருமைக்குரிய விஷயமாகப்பட்டது. பாலபாரதி தனது செல்பேசியிலேயே எடுத்து ஒலி சேர்த்திருந்த திறனும் அவர் கையாண்டிருந்த தலைப்பும் பிரமிக்க வைத்தது. அவரைப் போல பல பதிவர்கள். சமீபத்தில் மங்கையின் குறும்படம் பற்றிய பதிவும் மகிழ்ச்சியளித்தது. குறும்படம் பற்றி பேச, ஒரு பதிவாக எழுத துளிர் விடச்செய்தது இசாக்கின் 'ஒரு குடியின் பயணம்' தான் என்று சொல்லலாம்.


தனது வலைப்பூவை வடிகாலென்று பலர் சொல்லிக் கொண்டாலும் பின்னூட்டத்தின் எண்ணிக்கையில் பதிவின் எடையை நிறுத்திப் பார்க்கும் பலருக்கு மத்தியில் பின்னூட்ட பெட்டியே இல்லாமல் உண்மையிலேயே வலைப்பூவை வடிகாலாக வகுத்துக் கொண்ட இசாக்கை நமக்கெல்லாம் ஒரு சக பதிவராக நல்ல கவிஞராக தெரியும் ஆனால் குறும்படம் எடுக்கக் கூடிய ஆவலை தேக்கி வைத்து ஒரு நல்ல படத்தை தரக்கூடியவர் என்று நேற்று அந்த படத்தை வெளியிட்டு திரையிடும் வரையில் தெரிந்திருக்கவில்லை எனக்கு.

அமீரகத்தில் வாழும் ஒவ்வொருவரும் விடுமுறையை எதிர்நோக்கி வருடம் முழுவதும் உழைக்க, கிடைத்த ஒரு மாத விடுமுறை இடைவேளையையும் இதற்காக பயன்படுத்திய அவரைப் பாராட்டும் முன்பு அதனைப் பொறுத்தருளிய அவர் மனைவிக்குத்தான் பாராட்டுகள் அனைத்தும். கடை தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இசாக்குக்கு சேர வேண்டிய பாராட்டை முழுவதுமாக அவர் மனைவிக்கு தந்தமைக்கு காரணமில்லாமலில்லை. ஒரு கலைஞனுக்கு அவன் மனதிற்கேற்ப சிறந்த படைப்பைத் தர தனது துணை அந்த படைப்பில் பங்குபெற வேண்டுமென்று அவசியமில்லை தேவையான மனநிம்மதியும் அவருக்கு பக்கபலமான இடையூறில்லாத வார்த்தையும்தான் அவரை உயரத்திற்கே அழைத்து செல்லும். அந்த வகையில் இசாக் அதிர்ஷ்டசாலிதான்.

பத்து நிமிடத்தில் தான் சொல்ல வந்த கருத்தை ஆழமாக பதித்திருக்கிறார் - காட்சியாக மட்டுமில்லை நம் மனதிலும். ஒரு குடியின் பயணமென்றதும் பலரும் ஒரு குடிகாரன் குடித்தே தன்னை அழித்துக் கொள்ளும் ஒரு படத்தை எதிர்பார்ப்பார்கள். அப்படியில்லாமல் ஒரு குடிகாரனால் அவனைச் சுற்றியுள்ளவர்களின் பாதிப்பை அழகாக வடித்துள்ளார். குடியைவிட அந்த படத்தில் எனக்கு அதிகம் தென்பட்டது ஒரு பெண்ணின் அறியாமைதான். எப்படி ஒரு பெண் தன் கணவனைச் சார்ந்தவளாக இருப்பின் அவனுடைய குடியையும் தாங்கிக் கொண்டு தன் வாழ்வின் அர்த்தமாகக் கருதும் தன் குழந்தையையும் இழக்கிறாள் என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. குடிகார கணவனால் குழந்தையை இழந்த தருணத்தில் அவனை உதாசீனப்படுத்துவதற்கு பதிலாக, குடி வீட்டில் குடிபுகுந்தவுடன் அவள் அவனை அலட்சியப்படுத்தினாலே குடி எந்தக் குடியையும் கெடுத்துவிட முடியாது. இந்த படத்தைப் பார்க்கும் ஒரு குடிகாரனுக்கு தாக்கம் ஏற்படுமோ இல்லையோ குடிகாரர்களின் மனைவிமார்கள் அந்தப் பெண்மணியின் அழுகையின் ஓலத்தைக் காதில் வாங்கும் போது கண்டிப்பாக தனக்கும் இப்படியொரு கதி ஏற்படுமோ என்று ஈரக்குலை நடுங்கத்தான் செய்வார்கள். அதற்காகவாவது இந்தப் படத்தை அமீரகத்தில் வெளியிட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல் கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டுமென்று ஆசைப்படுகிறார் இசாக்.

அமீரகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் திரையிடவும் கேட்டுக் கொண்டார். எனக்குத் தெரிந்து அமீரகத்தில் மக்கள் குடிப்பார்கள். ஆனால் குடிகாரனாக குடியையே மறப்பவர்கள் அமீரகத்தில் சொற்பமென்பதால் அதனை இங்கு திரையிடுவதற்கு மாறாக தமிழகத்திலென்று மட்டுமில்லாமல் இந்தியாவில் பல்வேறு கல்லூரிகளில் சமூகவியல், 'விஷுவல் கம்யூனிகேஷன்', 'மாஸ்மீடியா' துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கு காண்பித்து அவர்கள் நடத்தும் கிராமப்புற பட்டறைகளிலும், நகர்புற சேவைகளிலும் போட்டுக் காண்பிப்பதோடு நிறுத்திவிடாமல் என்ன புரிந்தது என்று அவர்களுக்கிடையே கருத்து பரிமாற்றம் நடத்தி விழிப்புணர்வு கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

அந்தப் படத்தை பார்க்கும் போது ஒரு இயக்குனராக நடித்த கதாபாத்திரத்திலிருந்து தேவையான திருப்தியான உணர்வுப்பூர்வமான நடிப்பை, சரியான முகபாவத்தை கரக்கவில்லையென்ற குறைபாடு இருந்த போதும் கூட அதனைப் பின்னணி குரல்களும் காட்சியமைப்புகளும் ஒவ்வொரு நகர்வுகளும் திருப்தியளித்து ஈடுகட்டுவதாக இருந்தது. அவர் பேசும் போதுதான் ஒரு பத்து நிமிட படத்திலும் இருக்கும் சிரமத்தை, கட்டுப்பாட்டை உணர முடிந்தது. பத்து நிமிட படத்திற்கே இப்படியென்றால் ஒரு முழு நீளப்படத்தையெடுக்க எவ்வளவு மேடு பள்ளங்கள் கடக்க வேண்டியிருக்கும்!?

பலகோடி மணிநேரங்கள், கோடிக் கணக்கில் பணமென்று செலவிடும் வீணாப்போன இயக்குனர்கள் கிடைத்த வாய்ப்பை ஒரு நல்ல படம் தர முயற்சிக்காமல் வியாபார மயமாக்கல் என்று மட்டும் மனதில் விதைத்துக் கொண்டு உருப்படாமல் ஒரு படம் தருவதற்கு பதிலாக இப்படிப்பட்ட நல்ல குறும்பட இயக்குனர்களைக் கொண்டு பல குறும்படங்களை தந்தால்தான் என்ன?
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி