Sunday, November 23, 2008

கேள்விகளால் ஒரு வேள்வி

துபாயில் ஆயிரத்தெட்டு சங்கமும் அமைப்பும் இருந்தாலும் அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவை தான் இன்னும் இலக்கிய விழாக்களை நடத்தி வருகிறார்கள். இந்த வெள்ளிக்கிழமை மாலை ’கவிதை கூடல்’ தலைமை கவிக்கோ அப்துல் ரஹ்மான் என்றதும் அவர்கள் உரையை கேட்டே ஆகவேண்டுமென்று வீட்டில் உத்தரவு வாங்கிவிட்டு குழந்தைகளுடன் கிளம்பிவிட்டேன்.

இஷாவிற்கு பிறகு கிளம்பி சென்றதால் விழா ஆரம்பித்துவிடும் என்று தெரிந்திருந்தாலும் பலர் பேசிய பிறகு கடைசியில் தான் கவிக்கோ பேசுவார் என்ற எண்ணத்தில் சற்று தாமதமாகச் சென்று விட்டேன். உள்நுழைந்ததும்தான் அது கேள்வி- பதில் நேரம் என்று தெரிந்தது. முதல் கேள்வியை முத்துகுமரன் சுவாரஸ்யத்துடன் ஆரம்பித்தார். 'புதுக்கவிதை எழுதுபவருக்கு மரபுக் கவிதை தெரிந்திருக்க வேண்டுமா?' என்று கேட்க. ’இப்படி உங்களுக்கு தோன்றுவதே பெரிய விஷயம்தான்’ என்று தொடங்கிய கவிக்கோ புதுக்கவிதையை பெரும்பாலோர் வசனக்கவிதையாக கருத்தை முதலிடம் கொண்டு எழுதிவிடுகிறார்கள். கருத்தை மட்டும் கொண்டது கவிதையாகிவிடாது நயமும் அவசியமென்றார்கள்.


ஒவ்வொருவரும் தமக்குத் தோன்றும் கேள்விகளை கேட்டுத் துளைத்ததற்கெல்லாம் ஊற்றாக தனது அனுபவத்தை வடித்தார்கள் கவிக்கோ. கவிதையை வரையறுக்கக் கேட்டதற்கு, அதை புரிய வைக்க ஒரு குட்டிக் கதை சொன்னார்கள். மனிதனை வரையறுக்க ஒரு கூட்டம் கூடியதாம் அதில் இரு கால் மிருகம் தான் மனிதன் என்று ஒருவர் சொல்ல, இன்னொருவர் 10 நிமிடத்தில் வருகிறேன் என்று ஒரு கோழியை கொண்டு வந்து ‘அப்ப இது மனிதனா’ என்று கேலி செய்ய, சரி இறகில்லாத இரண்டு கால் பிராணி தான் மனிதன் என்று முடிக்கும் முன் மறுபடியும் 10 நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லி சென்றவர் இறகில்லாத கோழியை மறுபடியும் கொண்டு வந்து கேள்வி கேட்க - மனிதனை வரையறுக்க முடியாது என்று முடிவானதாம். அதே போல் தான் கவிதையையும் வரையறுக்க முடியாது என்று முடித்தார்கள்.

கூட்டத்தில் ஒருவர் நீங்கள் காக்கை பற்றி எழுதியிருந்தீர்கள் அந்த கருத்து இங்கிருக்கும் பலருக்கு ஒப்புதலாக இருக்காது அதனை கேட்க விரும்புகிறேன் என்றதும். பல விஷயங்களை பல தளத்தில் பல ஆண்டுகளாக எழுதித் தள்ளுபவருக்கு அது எப்படி நினைவிருக்கும் ஆகையால் என்ன எழுதியிருந்தேன் என்று கேட்டவரையே திரும்பி வினவ. அவரும் அவருக்கு நினைவூட்டுவதாக அதனை எடுத்து தர, புரிந்துக் கொண்ட கவிக்கோ அவர்கள் விவரித்தார்கள். அவர் கறி வாங்க சென்றிருந்த போது ஒரு காக்கை சக காக்கையை சாப்பிட விடாமல் கொத்துவதை கண்டு வியந்தவருக்கு இது எப்படி சாத்தியம் என்று தோன்றியதாம். காக்கையென்றாலே ஒரு வாய் சோறு கிடைத்தாலும் எல்லா காக்கைகளையும் அழைத்து உண்ணுமே இது என்ன வகையென்று யோசிக்கும் போது அவருக்கு பழங்காலத்தில் அரசர்களின் வினை நினைவுக்கு வந்ததாம். அரசர்கள் தான் உண்ணும் முன்பு அதில் விஷம் கலந்திருக்கிறதா என்று அறிந்து கொள்வதற்காக நிறைய பொருட்களும் தங்கமும் தந்து தன்னுடனே ஒரு ஆளை தமக்காக முதலில் சாப்பிட்டு அதில் விஷமில்லாத பட்சத்தில் அரசர்கள் உண்ணுவார்களாம். சிலர் இந்த விஷயங்களுக்காக மைனாவையோ அல்லது வேறு பிராணிகளையோ வளர்ப்பார்களாம். விஷத்தை அருகில் கொண்டு சென்றாலே மைனாவின் கண்கள் சிவந்துவிடுமாம். அந்த விஷயம்தான் இந்த காக்கையின் செயலும் - காக்கை இயற்கையான பண்டத்தை பகிர்ந்து உண்ணாது மனிதன் படைத்த செயற்கையான உணவின் மீது நம்பிக்கையில்லாமல் சக காக்கைகளை அழைத்து உண்ணக் கண்டு பிறகு தின்று கொள்கிறதாக அவர் உணர்ந்ததாக கூறினார். அவர் கூற்றில் உண்மையிருக்கிறதோ இல்லையோ சிந்தனை மிகவும் வித்தியாசமாக தோன்றியது.

தமிழை செம்மொழியாக்குவதின் பயன்களை விளக்கும் போது இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு தமிழை செம்மொழியாக ஏற்றால், உலகப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அதை ஏற்கும், பன்னாட்டு மொழிக் கலைக் களஞ்சியங்களில் - தமிழ் இலக்கியங்கள், பண்பாட்டுக் கருத்துக்கள், கலாச்சாரம் இவற்றை விளக்குவதற்காக தமிழ் தெரிந்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வரக்கூடும். ஓய்வு பெற்றவர் தமிழ் அறிஞர்களுக்கு கூட நல்லவேளை வரக்கூடும் என்று நான் அறியாத விஷயங்களையும் அறிய வைத்தார்.

படிமம், குறியீடு பற்றி பேசும் போது ’பெண்ணே உன் கண்கள் மீன்கள்’ என்று வடித்த வாக்கியத்தில் கூட பல விஷயங்கள் ஒளிந்து கிடப்பதை கூறினார். கண்கள் மீன் வடிவில் இருப்பதால் சொல்லியிருக்கலாம் அல்லது வலை வீசச் சொல்கிறதாக எடுத்துக் கொள்ளலாம், எப்போதுமே தண்ணீரில் இருக்கிறது என்பதாகவும் பொருட்கொள்ளலாம் என்று ஒரே விஷயத்திற்கு பல கோணங்கள் உண்டு வாசிப்பவரின் அனுகுமுறையை பொருத்தே குறியீடுகளை புரிந்துக் கொள்ள முடியுமே தவிர எழுதுபவர் எல்லாவற்றையும் விளக்கி எழுத முடியாது அப்படி விவரித்திருந்தால் அது கவிதையல்ல என்பதற்கு உதாரணமாக

‘என் மனம்
அவளை நினைப்பேனென
அடம்பிடிக்கிறது - நான்
அதட்டினால் அழுகிறது’

என்று சொல்லும் போது மனதை படிமமாக்கி குழந்தையாக்கி கவிஞர் சொல்ல வருவது சிறப்பே தவிர மனம் குழந்தை போல் அடம்பிடிக்கிறது நான் அதட்டினால் அழுகிறது என்று விளக்குவதில் கவிதை காணாமல் போய்விடுகிறது என்று அவர் பாணியில் விளக்கினார்.

கவிஞர்கள் என்றாலே கொஞ்சம் கோபம் இருக்கும் இருக்க வேண்டும் அப்படியிருந்தால்தான் எழுத்தில் வீரியமிருக்கும், வார்த்தைகளில் உண்மையிருக்கும் என்பதற்கு கவிக்கோ ஒரு சிறந்த சான்று. ‘வணக்கம்’ பற்றி எழுந்த சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதில் சொல்லும் போது அவரை பேசவிடாமல் இடைமறித்து பேசிக்கொண்டே போனவரிடம் ‘நான் பேசி முடிக்கும் முன்பே நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டு பேசிக் கொண்டே போனால் எப்படி’ என்று கண்டிப்பாக கேட்ட குரலில் நியாயமிருந்தது. அதையும் தொடர்ந்து விடாது இடைமறித்ததால் ஒலிவாங்கியை கீழே வைத்துவிட்டு ’நீங்களே பேசி முடியுங்கள்’ என்று சொன்னதில் அவர் கோபம் தெரிந்தது. அதனை தொடர்ந்து அவர் தந்த விளக்கம் அற்புதமாக அமைந்தது. எந்த ஒரு வார்த்தைக்கும் பல பொருள் புரிந்துக் கொள்ளலாம். ’கோ’ என்றால் அது மாடு என்றும் பொருள் தரும் அரசன் என்றும் பொருள் தரும். வீடு என்ற சொல் பின்னாட்களில் கண்டுபிடித்த சொல், ஆரம்பத்தில் கோவில் என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அரசன் வசிக்குமிடம் கோவில் ஆனது. அந்த காலத்தில் அரசரை தெய்வமாக கருதி வந்ததால் அரசர் வசிக்குமிடம் கோவிலானது பின்பு வேறுபடுத்த வீடு தோன்றியிருக்கலாம். மொழி என்பது காலத்தோடு வளர்ந்துக் கொண்டே உருமாறிக் கொண்டே போகும் விஷயம். ஆகையால் ‘வணக்கம்’ என்ற வார்த்தை வணங்குதலாகிவிடாது. தொழுகைக்கு நேரமாகிவிட்டது தொழுது விட்டு வருகிறேன் என்றுதானே சொல்கிறோம் மாறாக வணங்கிவிட்டு வருகிறேன் என்று கூடச் சொல்லவில்லையே அப்படியிருக்க ஏன் அந்த நிய்யத்தில்லாத வெறும் வார்த்தைக்கு புதிதாய் அர்த்தம் கண்டுபிடிக்கிறார்கள். உங்களுக்கு அந்த சொல் பிடிக்கவில்லையா சொல்லாதீர்கள் ஆனால் மற்றவரையும் அப்படித்தான் இருக்க வேண்டும் நீ தவறு செய்கிறாய் என்று எந்த அளவுக்கு தவறு என்று தெரியாமலே சுட்டிக் காட்டாதீர்கள். இஸ்லாத்தை முதலில் சரியாக புரிந்துக் கொள்ளுங்கள் பிறகு வாதிடலாம் என்றார்கள். அவர் சொன்னது சத்தியமான வார்த்தையாகப்பட்டது எனக்கு. ’கடவுளின் முகவரி’ அறிந்தவருக்கு இதைக் கூட புரிய வைக்க முடியாதா என்ன?

அவரிடம் கேட்க என்னிடம் இரண்டு கேள்விகள் இருந்தது. ஒன்று இக்காலத்து பெண்ணியவாதி என்ற பெயரில் சிலரும் மற்றவர்களும் படைப்பில் நாக்கூசப்படும் சொற்களைக் கூட பாவித்து எழுதுகிறார்களே, சர்ச்சைக்குரியவர்களாகி எளிதில் பிரபலமாகும் குறுக்கு வழி கொண்டவர்களை பற்றிய அவருடைய கருத்து. இதனை வேறு விதமாக அழகாக நண்பர் ஷாஜி கேட்க, கவிக்கோ அவர்கள் அதனை எதிர்த்து வருவதாகவே சொன்னார்கள் அதுமட்டுமில்லாமல் அது நிலைக்காது என்றும் ஆருடம் சொன்னவர்களை அய்யனார் நண்பர் என்று எங்களிடம் அறிமுகமான அசோக் ’அதில் என்ன தவறு? கவிஞர் அவர்களையே கொண்டாடிக் கொள்கிறார்கள்’ அவ்வளவுதான் என்று எதிர்வாதம் செய்ய. ’கொண்டாடிக் கொள்ளட்டும் ஆனால் உடல் உறுப்புக்கு அவசியமென்ன’ என்று கவிக்கோ கேட்டதற்கு. அவர் எதை சொல்கிறார் என்று தெரிந்தும் கவிஞர்கள் எல்லா உறுப்புகளை பற்றியும்தான் பேசுகிறார்கள் எது ஆபாசமென்று யார் தீர்மானிப்பது என்று கொதித்தெழுந்தார் அவர், அதன் பின் நிலைமை சீரானது.

என்னுடைய இரண்டாவது கேள்வி, 'தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட கவிக்கோ மற்றவர்களை விட எப்படி தனித்து நிற்கிறார்கள்’ என்பது. இந்த கேள்வியை தனியாக கேட்க வேண்டிய அவசியம் வரவில்லை. அது சொல்லாமலே எனக்கு புரிந்துவிட்டது.

இலக்கிய விழா என்றாலே இரம்பம், அறுவையாக இருக்கும் என்று சொல்பவர்களுக்கு நாமம் போடும் வகையில் மிக சிறப்பாக சுவாரஸ்யமாக அமைந்திருந்தது இந்த விழா. அதற்குக் காரணம் முழுக்க முழுக்க கவிக்கோ தான். கேட்டுவிட்டார்களே என்பதற்கான பதிலாக மட்டும் இல்லாமல் இரசிக்கும் படியானதாகவும் அமைந்திருந்தது அவருடைய ஒவ்வொரு பதிலும். கவிதை தெரியாதவர்கள் இக்கூட்டத்ததிற்கு வந்திருந்தால் கூட கவிதைப் பற்றிய ஆர்வம் மிகுந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

Monday, November 17, 2008

வாரணம் ஆயிரம் - வானிறம் ஆயிரம்

நான் பதிவு எழுதியே பல காலமாகிவிட்டது, நேரமில்லாதது ஒரு காரணமென்றாலும் எதையும் பதியும் படியில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். தசாவதாரத்திற்கு பிறகு திரையரங்கில் பார்க்க வேண்டுமென காத்துக் கொண்டிருந்த படம். அதுவும் எங்க ஊரில் எந்தத் தமிழ்ப்படமும் ஒரே வாரம்தான் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வெளிவரும் நாளை எதிர்பார்த்திருந்தேன். திரையரங்கில் நுழையும் போதே ஆசிப் இனிப்பு வழங்கி 'படம் குப்பையாம்; வாழ்த்துகள்!' என்று வரவேற்றார். கொஞ்சம் கல்வரமாக இருந்தது - ஆனாலும் காத்திருந்த. நம்பிக்கை வீண் போகவில்லை.

பொதுவாகவே கவுதமிடமிருந்து விறுவிறுப்பான, அதிர்ச்சிகள் அடங்கிய, திகில் நிறைந்த, புதிர் புகுத்திய படத்தைத்தான் எதிர்பார்ப்போம். இதுவோ நேர்மாறாக மெல்லிய உணர்வுகளுக்கு முன்னுரிமை வழங்கும் படமாக.

படத்தின் ஆரம்பத்திலேயே மிகுந்த அயர்ச்சி அதன் காரணம் படத்தின் பெயரைத் தவிர வேற எதையும் தமிழில் பார்க்காமல் போனதாலும் கூட இருக்கலாம். சின்னச் சின்ன வசனங்களும் ஆங்கிலத்தில் வந்து எரிச்சலைக் கிளப்பியது. ஆனால் படம் நகர நகர நம்மோடு கதைச் சொல்லியும் கூட வந்து நம்மை அவர்களோடு இணைத்துக் கொண்டு படத்தை மெல்ல நகர்த்தும் திறனை கவுதமிடம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் நம் தமிழ் இரசிகர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், விரைவு, ஒரு நகைச்சுவை தடம் என்று எல்லாமும் கலந்த மசாலாவையே சுவைத்து பழகிவிட்டார்கள். அதுவே தமிழ் இரசிகர்களின் எதிர்பார்ப்பு என்று தெரிந்தும் கூட இப்படிப்பட்ட சிகிச்சையை தைரியமாகத் தந்த இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

படத்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் 'கவிதை'. ஏனெனில் சிலருக்கு படம் புரியாமலுமிருக்கலாம். குழந்தைகள் நீதிக் கதையின் முடிவில் அப்ப 'கதை என்ன சொல்ல வருது' என்று கேட்பது போல் படத்தைப் பார்த்து முடித்த பிறகு என்ன சொல்ல முயற்சியிருக்காங்க என்று கேட்பவர்களுக்குச் சொல்ல எந்த நீதியும் இல்லை. நெருக்கமான தகப்பன் மகன் உறவு குறித்த ஒரு வாழ்க்கைப் பயணம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.


இரட்டை வேடத்தில் சூர்யா என்று தோன்றாதபடி அப்பட்டமான இரு உருவம் கொண்டவராக மாறியிருக்கிறார். முதிர்ந்த சூர்யா ஒப்பனையில் மட்டும் முதிர்ச்சியை காட்டாது தனது உடல் மொழியிலும் அற்புதமாக வித்தியாசம் காட்டியுள்ளார். மகன் சூர்யா அந்த வயதிற்கொப்ப காதல் நாயகனாக அப்பாவை தன் நாயகனாக கொண்ட அடக்கமான புதல்வன் என்ற ஒரு வேடம் மட்டுமில்லாமல் அதிலும் வயது வித்தியாசங்களை காட்ட ஒப்பனையை மட்டும் நம்பாமல் உடல் அசைவில், குறும்பு பார்வையில், இளமை துள்ளல் சொட்ட நடித்துள்ளார். அதுவும் அவர் மேகனாவை காணும் போதெல்லாம் மனதின் அதிர்வுகளை கண்களில் காட்டி அந்த இரயில் தடதடக்கும் வேளையில் ஒளித்து வைக்க முடியாமல் உடனே கொட்டிவிட வேண்டும் என்று துடிக்கும் தருணத்தில், அவள் வீட்டு வாசலில் அதே சட்டை, கித்தாருடன் வந்து நிற்கும் போது அவரின் முகபாவங்கள் அப்பப்பா சூர்யா - 'சூர்யா' என்றாலே போதும் தரம் எளிதில் விளங்கும் என்ற விளம்பர வாக்கியத்திற்கு பொருந்தும் அளவிற்கு நடிப்பை கொட்டி, வானம் பல வர்ணங்களை காட்டுவது போல் சூர்யாவும் பல்முக நடிப்பில்.

கதாநாயகி சமீரா - பார்த்தவுடன் பிடித்து போகும் முகமில்லை. ஏ.ஆர். ரஹ்மான் பாடல் கேட்க கேட்க பிடித்து போகுமே அதுபோல சமீராவின் முகமும் அந்த கதாபாத்திரத்தோடு நாம் ஒன்றும் போது பார்த்து பார்த்து பிடித்து போகிறது.

ரம்யா (திவ்யா என்று பெயர் மாற்றிக் கொண்டிருக்கிறார்) கதாபாத்திரமும் மனதில் நிற்கும்படியாக அமைந்திருக்கிறது. அவள் காதல் தெரிவிக்கும் தருணமும் அதன் நேர்த்தியும் மிக அழகு.

நெடுங்காலமாக ஒப்பனை போட்ட முகமென்பதால் சீக்கிரமே முகச்சுருக்கம் ஏற்பட்டுவிட்டதால் சிம்ரனுக்கு வயதானவருக்கான ஒப்பனைக்கு அவசியமில்லாத அளவுக்கு கிழடுதட்டிவிட்டது. அவருடைய மலரும் நினைவுகளில் இளம் சிம்ரனாக மாற்றத்தான் ஒப்பனையாளர் கொஞ்சம் சிரமம் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

பாடல் வரிகள் தாமரை என்பதாலும் அதற்கு ஹாரிஸ் இசையமைத்திருப்பதாலும் கேட்வே வேண்டாம், எனக்கெல்லாம் கேட்காமலே பிடித்து போகும். அதுவும் 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' உண்மையில் மனதில் மழைத்துளி சொட்டும் பாடல்தான்.

இன்னும் முயன்றிருந்தால் நிறைய கத்திரித்திருக்கலாம். தமிழக திரையரங்கில் குழந்தை கடத்தல் விஷயத்தை மொத்தமாக கத்தரித்துவிட்டார்களாம் - அதுவும் நல்லதுதான். தேவையற்ற சாயம் பூசிய நிஜமில்லாத கதாநாயக சாகசம் இந்தப் படத்திற்கு தேவையற்றதுதான்.

படம் முழுக்க ஆங்கிலம் கதைத்துவிட்டு கடைசி காட்சியில் 'வாரணம் ஆயிரத்திற்கு' பொருள் சொல்லும் பாங்கு சிரிப்பை வரவழைத்தது.

படத்திற்கு என்னவோ என்னால் கதைச் சுருக்கம் சொல்ல முடியவில்லை - சுருக்கும் படியாக இல்லையப்பா மிக நீளப்படம்.

படத்தில் நிறைய ஓட்டைகள் என்பதால் பல கேள்விகள். இருப்பினும் ஒரே கல்லில் இரண்டு பேரிச்சம்பழமாக (எங்க ஊர்ல மாங்காய் மரத்தை தேடணும்ங்க) சூர்யா தன் தந்தைக்கும், கவுதம் தன் தந்தைக்கும் நன்றி சொல்லிக் கொள்வதாக அமைகிறது படம்.

இப்படி நம் தந்தை இருந்திருக்க கூடாதா என்று சிலருக்கும், என் குழந்தைக்கு இப்படி ஒரு தகப்பனாக இருப்பேன் என்று சிலருக்கும் தோன்றினாலே இயக்குனருக்கு வெற்றிதான். பார்க்க வேண்டிய படம்தான், ஒரு முறையாவது.
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி