Monday, February 02, 2009

Slumdog Millionaire - என் பார்வையில்

இறைவனின் மிகச் சிறந்த படைப்பில் ஒன்றுதான் நம்முடைய மூளை. எந்த ஒரு நிகழ்வையும் பார்க்கும் போது, கேட்கும் போது, இரசிக்கும் போது, உணரும் போது அது தொடர்புடைய எல்லா விஷயங்களும் பதிந்துவிடுகிறது - மனித மூளையில். அந்தப் பதிவின் பிரதிபலிப்பே நம் நினைவுகள்.

அப்படிப்பட்ட நினைவுகளில் தங்கிவிட்ட விஷயங்களிலிருந்து தனக்குத் தேவைப்படும் பதில்களை தேடியெடுத்து கேட்ட கேள்விகளுக்கு, படிக்காத கீழ்மட்டத்திலிருக்கும் இளைஞன் சரியான பதில்களைத் தந்து அசத்தியதை ஒப்புக் கொள்ள முடியாத 'மில்லியனர்' நிகழ்ச்சி நடத்துனர்
அந்த இளைஞனை காவலாளிகளிடம் ஒப்படைத்து அவர்கள் உலுக்கி எடுக்கும் போது அந்த சந்தேக முடிச்சுகள் வலியுடன் அவிழ்வதாக விரிகிறது 'ஸ்லம்டாக் மில்லியனர்' திரைப்படம்.

பத்தே பத்து கேள்வியில் தலையெழுத்தே தலைகீழாக மாறிப்போகும், பணம் சம்பாதிக்கக் குறுக்கு வழியென்றெல்லாம் இல்லாமல். தன் காதலி இரசித்து பார்க்கும் நிகழ்ச்சியில் தானும் கலந்து கொள்ள வேண்டும் அவளை நரகத்திலிருந்து வெளிக்கொணர வேண்டுமென்ற காரணங்களுக்காக மட்டும் வாய்ப்பெடுத்து கொள்கிறான் நாயகன்.

மனதிற்குப் பிடித்த நடிகரை காண மலத்தில் குதித்தவனுக்கு அவர் குறித்தான முதல்கேள்வியைக் கேட்கும் போது சிரமமில்லாமல் பதில் சொல்கிறான் முஸ்லிமாக இருந்தாலும் இராமன் கையிலிருப்பது வில்லும் அம்பும் என்று தனக்கு எப்படித் தெரியும் என்பதை, ரத்த வெறியும் மதமும் பிடித்த மனித மிருகங்கள் தன் தாயைக் கொன்ற வலியிலிருந்து வெளிப்படுத்துகிறான். அநீதியே வெற்றி கொள்ளும் வேலைகளாகப் பார்த்துப் பழகியவனுக்கு 'சத்தியமே வெல்லும்' என்ற சொற்றொடர் மீது நம்பிக்கை வராமல் அதனை ஊர்ஜிதப்படுத்த அவையோர்கள் பதில் அவசியமாகிறது. 'தர்ஷன் தோ கன்ஷ்யாம்' வரிகளுக்கு சுர்தாஸ் சொந்தக்காரர் என்பதை தன் கண்ணை இழக்க நேரிட்டிருக்கும் தருணத்திலிருந்து உயிருக்குத் தப்பியோடிய தருணம் சொல்லித் தந்திருக்கிறது. அமெரிக்க டாலர் 100இல் இருப்பது பெஞ்சமின் ப்ராங்களின் என்று தனக்கு தன் குருட்டு நண்பன் சொன்னது எப்படி மறந்து போயிருக்கும்??!!.

இப்படி ஒவ்வொரு கேள்விக்கான பதிலுக்கும் அவனது வாழ்க்கையோடு ஒட்டிய ஒவ்வொரு பின்னணி. அதுவும் எந்த ஆங்கில படத்திலும் ஒலிக்காத புதுமை நம் ஏ.ஆர்.ஆர். கைவண்ணத்தில் அருமையான உணர்வுப்பூர்வமான இசையலை.

வித்தியாசமான கதை தான் ஆனால் வழக்கம் போல் ஆயிரம் ஓட்டைகளும். படம் நல்லாத்தான் இருக்கு ஆனால் ஆஸ்கர் வரை கொண்டாடப்படுவதன் காரணம்தான் புலப்படவேயில்லை. ஏ.ஆர். ரஹ்மானுக்கு 'கோல்டன் குளோப்' கிடைத்தது பெரிய ஆறுதல் என்றாலும் படத்தை வணிகமயமாக்கியதோடு நம் நாட்டின் மானத்தையும் விற்றுவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டுகளில் உண்மையில்லாமல் இல்லை.

படத்தில் பெரிய குறையே மொழிதான்.

ஹிந்தி படமாகவே வெளிவந்திருக்கலாம். இந்திய அதிகாரி எழுதிய புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படமானாலும் இயக்கம் டானி பொயில் திரைக்கதை சைமன் பியூஃபோய் என்றெல்லாம் ஆங்கிலேயர் என்பதால் ஆங்கிலப் படமாகிப் போனது போலும். படிப்பறிவில்லாத ஜமாலும் சலீமும் சிறுவயதில் ஹிந்தி பேசுபவனாகக் காட்டிவிட்டு பதின்ம வயதில் நுனிநாக்கு ஆங்கிலத்தில் பிளந்துக் கட்டுவதையாவது பொறுத்துக் கொள்ள முடிகிறது, அவன் வளரும் சூழல் அப்படியோ என்று. ஆனால் குழந்தைகளைப் பிச்சையெடுக்க தயார் செய்பவன் ஆரம்பத்தில் ஹிந்தியே பேசிக் கொண்டிருந்தவன், வளர்ந்த குழந்தைகளைப் பார்த்தவுடன் ஆங்கிலத்தில் மாறிய காரணம் என்னவென்றே புரியவில்லை. திருடனை முஸ்லீம்களாகக் காட்டி அவன் தொழுவதையும் ஒரு காட்சியாக வைத்து 'நான் பாவம் செய்பவன், என்னை மன்னித்துவிடு இறைவா' என்று இறையும் காட்சிகள் தேவையில்லாமல் புகுத்தப்பட்டதாகவே உணர்கிறேன். இதில் என்ன அற்ப திருப்தியோ இவர்களுக்கு?!.

நம் நாட்டில் நடக்கும் ஏமாற்றுவேலைகள், குழந்தைகளைக் கடத்தி கண்களை பிடுங்கி பிச்சையெடுக்க வைப்பது, ஜாதிக் கலவரங்கள், சேரியென்றால் நடத்தும் எகத்தாளங்கள்,
பிராத்தல் - சிகப்பு விளக்கு, ரவுடியிஸம் - குண்டாஸ், திரை ஊடகத்தில் வரும் போலி முகங்கள் என்று எல்லா அவலங்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து அதை மட்டுமே
சார்பாகக் காட்டி இந்தியா இப்படித்தான் என்ற போலி முத்திரை பதியவைக்கும் ஒரு முயற்சி. இப்படியெல்லாம் வந்து விட்டால் மட்டும் நம் நாட்டின் பெருமைகளும் வளர்ச்சிகளும்
தடைப்பட்டுவிடுமா என்ன? கையை வைத்து சூரியனை மறைக்கும் சமாச்சாரம் எடுப்படாதுதானே?

நான் எழுதியது சொல்ல வந்தது சொல்லியிருப்பது எல்லாமே புரிய 'Slumdog Millionaire'ரை ஒரு முறையாவது பார்த்துவிடுங்களேன் என்னோடு ஒத்துப் போவீர்கள்.
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி