Wednesday, August 27, 2014

ரெக்கை கட்டிப் பறக்குது பாயம்மா பொண்ணோட சைக்கிள்

யுவகிருஷ்ணா ஆல்தோட்டத்தை நினைவுப்படுத்தினாலும் படுத்தினார் மலரும் நினைவுகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலிருந்து ஒரு சம்பவத்தையாவது பதிவிட நினைத்ததே இது.

பீட்டர்ஸ் காலனி குடியிருப்புப் பகுதியில் வளர்ந்த எனக்கு ஆல்தோட்டம் மிகவும் பழக்கப்பட்ட இடம். வண்ண மீன்கள் வாங்குவதற்கும் வாடகை சைக்கிள் எடுப்பதற்கும் அடிக்கடி சென்று வரும் இடம்.

அப்போதெல்லாம் வாடகை சைக்கிள் ஒருமணி நேரம் எடுப்பதற்கு இரண்டு ரூபாய். இப்போது 'வாடகைக்கு சைக்கிள்' உண்டா என்று தெரியவில்லை. அந்த இரண்டு ரூபாய் சேர்க்க நான்கு முறையாவது நான் கடைக்குப் போக வேண்டும்.

எனக்குப் பிடித்த தேங்காய் பிஸ்கெட்டை வாங்காமல் காசை சேமித்து, இரண்டு ரூபாயான பிறகு ஒரு மணி நேரம் சைக்கிளை ஆல்தோட்டத்திலிருந்து வாடகைக்கு எடுத்தோம். நான் சைக்கிளை மிதிக்க, சைக்கிளின் முன் கம்பியில் அனுராதாவும், பின்னாடி 'கெரியரில்' கவிதாவும். சந்தோஷம் பொங்க ஓட்டிக் கொண்டு வரும் வழியில், எதிர்பார்க்கவேயில்லை ஒரு குழந்தை நடுவீதியில் ஆழ்ந்த உறக்கத்தில். சைக்கிள் தடுமாறியது. "ஹையோ கடவுளே ஏற்றிவிடக்கூடாது" என்று நினைத்து முடிப்பதற்குள் ஒரு கணப்பொழுதில் முடிந்துவிட்டது. ஆமாம் குழந்தை மீது சைக்கிளை ஏற்றிவிட்டேன். அதுவும் மூன்று பேர் உட்கார்ந்து இருக்கும் சைக்கிள். நாங்கள் சிறுமிகள் என்றாலும் மூவர் உட்கார்ந்திருந்தால் கனமாகத்தானே இருக்கும்?

ஏற்றிவிட்டேனா? ஏற்றிவிட்டதாகத்தான் நான் உணர்ந்தேன். திரும்பிப் பார்க்கையில் குழந்தை கண்விழித்துப் பார்த்து மீண்டும் கண் மூடியது. உறக்கத்தில் கண் மூடியதா அல்லது குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிட்டதா? பதட்டம். குற்ற உணர்வில் மன்னிப்பு கேட்கும் விதத்தில் நிறுத்தி பார்த்துக் கொண்டே இருக்கையில் அங்கு அடுத்த நொடியில் கூச்சல், சத்தம், எங்கிங்கிருந்தோ ஆட்கள் ஓடி வந்தார்கள். பெரிய கூட்டம் திரண்டது. எங்களை நோக்கி வருகிறார்கள். இது மன்னிக்கும் கூட்டமல்ல சண்டைக்கு வருகிறார்கள்.

"அது பாயம்மாப் பொண்ணு எனக்கு வீடு தெரியும்" என்று ஒரு பெண்மணி சொல்வது என் காதில் தெளிவாகக் கேட்க அங்கிருந்து தெறித்து ஓடினோம். சைக்கிளை ஒரு மறைவான இடத்தில் வைத்து விட்டு, வீட்டுக்குப் போகாமல் வேறொரு மாடியில் நின்று வேடிக்கை பார்த்தோம். அந்த கூட்டத்திற்கு 'சொர்ணாக்கா' மாதிரியான தலைவி குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு வழியெல்லாம் திட்டியபடியே... என்னைத்தான் வசைபாடியபடியே என் வீடு அடைந்தார். கைகளை, உடலை அசைத்து ஏதேதோ சம்பாஷணை செய்தார் உரத்த குரலில். நான் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு அந்தக் கூட்டம் வந்த காரியம் நல்லபடியாக முடிந்தது போல் திரும்பிச் சென்று விட்டார்கள். நான் நன்றாக உற்றுக் கவனித்தேன் அந்தக் குழந்தைக்கு
ஒன்றுமாகவில்லை. குழந்தை என்றால் பச்சக்குழந்தை இல்லை, குழந்தைக்கு 3-4 வயதிருக்கும். குழந்தை அழக்கூட இல்லை. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த குழந்தையைத் துயில் கலைத்து அழைத்து வந்திருப்பது தெரிந்தது. அவர்கள் காலனி வாயிலைவிட்டு வெளியேறும் வரை காத்து கவனித்து ஒளிந்திருந்த நான் தயக்கத்துடன் வீட்டுக்குச் சென்றேன்.

என்னை அடிக்கக் காத்திருந்த உம்மா பிரம்பெடுத்து சாத்த வர, பிரம்பு என் கை வளையலில் பட்டுத் தெறிக்க நான் அலறினேன், வளையல் உடைந்ததற்காக. பிறகு ம்மா கண்டிப்புடன் "இந்த சைக்கிளை முதலில் விட்டுட்டு வா" என்றார்கள்.

எப்படித் திரும்பவும் ஆல்தோட்டத்திற்குப் போவேன்? அதுவும் நான் 'பாயம்மா பொண்ணு' ரொம்பப் பிரபலமாச்சே... போக முடியுமா? என் தோழி அனுராதாவிடம் ஒரு மணிநேரத்தையும் அவளையே ஓட்டி மகிழ்ந்துவிட்டு சைக்கிளை கொடுத்துவிடச் சொன்னேன்.

அன்று ஒரு மணி நேரத்திற்கு இரண்டு ரூபாய் வாடகை சைக்கிள். இன்று வீட்டில் நான்கு பேருக்கு நான்கு சைக்கிள் ஆனால் அதனை உடற்பயிற்சிகாக, வியர்வை வெளியேற, குழந்தைகளுக்கு வெளிப்போக்குக் காட்டவென்று சில மைல்கள் சைக்கிள்களைக் காரில் சுமந்து சைக்கிள் 'டிராக்கிற்குச்' சென்று நல்ல தட்பவெட்பமிருந்தால் மட்டுமே ஓட்டுகிறோம். என்னதான் சொல்லுங்க வாடகை சைக்கிளில் சுற்றித் திரிந்த சந்தோஷம் இந்த சொகுசு சைக்கிளில் கிடைக்கவில்லை.

Sunday, August 03, 2014

இந்நாளில் உன் நினைவு...

சின்ன வயதிலிருந்தே எனக்கு நட்பு வட்டம் அதிகம். எல்லோரும் நெருங்கி வந்தாலும் ஒரு அடி தள்ளி இருப்பதே என் வழக்கம்.

நான் ஆறாங்கிளாஸ் படிக்கும் போது எனக்கு முனீரான்னு ஒரு தோழி. என் மீது ரொம்ப பாசமா, அன்பா என்னை அவள் குழந்தை போல பாவிப்பா. ஆனா அதே அன்பும் அக்கறையும் எனக்கு அவளிடமில்லை. நான் சொல்றதெல்லாம் அவ செய்வாள்..ஆனாலும் அந்த நட்போட ஆழம் அப்போ புரியலை. அவளுக்கு என்ன பொருள் கிடைச்சாலும் அது எனக்குக் கொடுத்திடுவா. நானும் அதன் மதிப்பு தெரியாம அவள் நட்பை விளையாட்டா பயன்படுத்திக்கிட்டேன்னுதான் சொல்லணும். நல்ல படிக்கிற அந்த நட்பு வட்டத்துல அவ மட்டும் நல்ல படிக்கமாட்டா. ஆனா அவளை நல்ல படிக்க வைக்கணும்னோ இல்ல சொல்லித்தரணும்னோ எனக்குத் தோன்றியதே இல்ல.

பல வருடம் தொடர்ந்த நட்பு... எப்பவுமே சிரிச்ச முகமா மட்டுமே என்கிட்ட பேசுவா. என்ன சிரிக்க வைத்து பார்க்கவே ஆசைப்படுவா... என் புத்தகத்திற்கு அட்டைப்போட்டு தருவா. நான் முடிக்க மறந்த வீட்டுப் பாடத்தை நினைவுப்படுத்துவா. ஆனா இந்த மாதிரியான விஷயங்களை கூட நான் அவளுக்கு பண்ணதில்லை. ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பது வரை அப்படியே போச்சு. ஒன்பதாம் வகுப்பு இறுதிப் பரிட்சையில் வடிகட்டுவார்கள் அப்போதான் பத்தாம் வகுப்பில் 'ஆல் பாஸ் ரிசல்ட்' தர முடியும்.

அப்படிச் செய்ததில் முனீரா பாடங்களில் தோல்வி. நாங்களெல்லாம் பத்தாம் வகுப்புக்கு தேர்ச்சிப் பெற அவள் மீண்டும் ஒன்பதாம் வகுப்பில். இதை எதிர்பார்க்காத எனக்குக் குற்ற உணர்வு. அவளுடைய வகுப்பறைக்குச் சென்றேன் - அவளைச் சந்திக்க. தொலைவிலிருந்தாலும் என்னைப் பார்த்தவுடன் முகம் மலரும் முனீரா, முகத்தைத் திருப்பிக் கொண்டாள். என்னிடம் பேசவில்லை. உனக்கு என்ன சந்தேகமென்றாலும் கேள் என்று மிகவும் தாமதமாக கேட்க வந்துள்ளேன் என்பதைப் புரிந்து கொண்டேன். அவளுக்கு ஆறுதல் சொல்ல செல்லவில்லை. அதே நட்பை நாடியே சென்றேன்... ஆனால் அவள் தோல்விக்கு நான் காரணம் என்பதாக அவளுக்குத் தோன்றியது போலும் அதனால் என்னிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. என்னை எங்குப் பார்த்தாலும் என்னைத் தெரியாதவள் போலவே நடந்து கொண்டாள். அன்றுதான் அவளுடைய நட்பின் ஆழத்தைப் புரிந்து கொண்டேன். நான் எந்த தவறும் செய்யாவிட்டாலும் 'மன்னிப்பு' என்று ஒரு கடன் பாக்கியே உள்ளதாக உணர்கிறேன்.
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி