Monday, July 30, 2007

கணினி ஓவியப் போட்டி! -3

ஓவியப் போட்டிக்கான மற்றுமொரு ஓவியம்.

வாழ்க்கையே ஒரு சதுரங்கம் அதில் நாம் பகடைக்காய்கள்

Sunday, July 29, 2007

வலைப்பதிவர்கள் சந்திப்பு: பரிகசிக்கும் பார்வையில்

துபாய் வலைப்பதிவாளர்கள் சந்திப்பை பற்றி எழுத வேண்டாமென்று நினைத்திருந்தேன். எல்லோரும் இது பற்றி எழுதிவிட்ட போது நான் மட்டும் வித்தியாசமாக என்ன எழுதி கிழிக்கப் போகிறேன்? சொல்லி கொள்ளும்படி எதுவும் நிகழ்ந்துவிடவில்லைதான். ஆனாலும் பதிவும் அந்த மாலையும் நீண்டுவிட்டது. இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தே போய் இருந்ததால் பெரிய ஏமாற்றம் ஒன்றுமில்லை. ஒரே அலைவரிசையில் உள்ள ஆட்களின் சந்திப்பு சுவாரஸ்யம்தானே? பழகிய நண்பர்களோடு வெகுநாட்களுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட அனுபவம்.

என் பார்வையில் வலைப்பதிவர்கள் சந்திப்பு:

வெட்ட வெளியில் வெக்கையில் அவிய திட்டமிட்டே கரமா பூங்காவில் சந்திப்பு ஏற்பாடு. அந்த புல்வெளிக்குள் நான் நுழைந்து "எல்லோருக்கும் வணக்கம்" என்று சொல்ல எல்லோரும் எழுந்து நிற்க. "ரொம்ப மரியாதையெல்லாம் வேண்டாம் உட்காருங்க" என்று நான் சொல்ல, "இத முன்னாடியே சொல்லியிருந்தா எழுந்து நின்னுருக்க மாட்டோம்ல" என்று தன் பெரிய உடம்பை அசைத்ததற்கான சிரமத்தை தெரிவித்தார் அவர். அதே நபர் "உங்களுக்கு யார் யாருன்னு தெரியுமா, அறிமுகம்.." என்று ஆரம்பிக்க நான் 'டக் டக்' என்று எல்லார் பெயரையும் சொல்லி 'சரியா' என்றேன். ஆனால் அந்த ஒருவர் மட்டும் யார் என்று யோசித்த போது 'க்ளூ' வேண்டுமா என்று தொடங்கும் முன்பே "பெனாத்தல்..?" என்று சரியாக கேட்டுவிட்டேன். அறிமுகத்திற்கு பிறகு சுடான் புலி உரும தொடங்கியது.

ஆரம்பத்தில் உருமியது மட்டும்தான் அதன்பின் அடித்த குச்சிக் கோலாட்டத்தில் (கும்மி மட்டும்தான் சொல்லனுமா என்ன?) அவர் இருக்கும் இடமே இல்லாமல் போனது. எல்லோரும் சொல்லி வைத்தாற் போல் அய்யனாரை சாடினார்கள். எதையும் தாங்கும் இதயமாக 'பதில் சொல்லியும் புரியாதக் கூட்டத்துக்கிட்ட என்ன பேசுறது' என்பது போல் மெளனம் காத்தார் அய்யனார். குசும்பன் (இனி அவரை குசும்பர் என்று மரியாதையோடுத்தான் கூப்பிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவ்வளவு அடக்கம், பணிவு, பவ்யம்) தனக்கே உண்டான குசும்புத்தனத்தோடு அய்யனாரிடம் இங்குள்ளவர்களில் யார் யாருடைய வலையை படிப்பீர்கள் யார் யார் நல்ல எழுதுவார்கள் என்று கேட்கும் போது சென்ஷியும் 'கோரஸாக' கேள்வியில் சேர்ந்துக் கொண்டார். அய்யனார் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள பயந்து சுதாரித்துக் கொண்டு "அப்படியெல்லாம் சொல்ல நான் பெரிய புடுங்கியில்ல, அவங்கவங்களுக்கு தெரிஞ்சதை எழுதுறாங்க. ஒருத்தர் எழுதுறது பிடிக்கலைன்னா படிக்க வேணாம் ஆனா அப்படி எழுதாதேன்னு சொல்ல யாருக்கும் அதிகாரமில்ல" என்று உள்குத்துடன் தன்னை மற்றவர்கள் சொல்வதை மனதில் வைத்து பேசினார். பெனாத்தலார் என்னிடம் "என் பதிவுகளை படிப்பீங்களா?" என்று கேட்க நான் திருட்டு முழியோடு "ஆரம்பத்துல படிச்சுக்கிட்டு இருந்தேன் - தேன்கூடு போட்டிக்கெல்லாம் எழுதும் போது ஆனா சமீப காலத்தில் படிக்கிறதில்லன்னு" உண்மையை ஒப்புக் கொண்டேன். "ஓஹோ ஆரம்பத்தில் அந்த தப்பெல்லாம் செஞ்சிருக்கீங்க அப்புறம் திருந்திட்டீங்க" என்று எடுத்துக் கொடுத்தார் சுடான் ஹீரோ.

சென்ஷியிடம் டெல்லியில் இருந்த அனுபவத்தை கேட்க, அவர் அங்குள்ள இடம், மொழி, கலாச்சாரம் பற்றி பேசுவார் என்று ஆர்வமானால் அவர் டெல்லி வலைப்பதிவாளர்களின் பிரதிநிதியாக முத்துலெட்சுமி, மங்கை, கார்த்திக்கை பற்றியே பேசிக் கொண்டிருந்தார். மாலனை சந்திக்க முயற்சி செய்தும் முடியாமல் போனதென்று சொன்னார் (அதற்காக வருந்தினாரா சந்தோஷப்பட்டாரா என்று அவர் முகபாவம் சொல்லவில்லை). நான் அவரிடம் 'சென்ஷி'யின் பெயர் காரணத்தை கேட்டு தெரிந்துக் கொண்டேன். தன் பெயருடன் தன் நண்பர் பெயரை இணைத்து வைத்துள்ளதாக சொன்னார். ஜாதி, மத பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக இவர்களெல்லாம் இப்படி வேறு பெயரில் எழுதுவதாகவும் சொன்னார் (என்னவொரு புத்திசாலித்தனம்). அவரிடம் நான் 'ரிப்பீட்டு' என்ற அவருடைய வழக்கமான பின்னூட்டத்தை தவிர வேறு என்ன உருப்படியாக எழுதுவீர்கள் என்று கேட்டு வைத்தேன். "உருப்படியில்லாத உங்க வலைப்பதிவுக்கெல்லாம் அந்த பின்னூட்டம் கூட கிடையாது உங்க பதிவுகளை படிப்பதே இல்ல, நல்லாவே இருக்காது" என்று சொல்ல. உடனே லொடுக்கு "இல்லப்பா நீ படிப்பதில்லையா நல்லாத்தான் எழுதுவாங்க" என்று எனக்கு ஆதரவாக திருவாய் மலர. "மொக்கையாவும் இருக்காது, ரொம்ப நல்லாவும் இருக்காது, அதனால் நான் படிக்கிறதே இல்லப்பான்னு" சலித்துக் கொண்டார் சென்ஷி.

என் கணவர் பாவம் போல லொடுக்கு பக்கத்தில் சென்று அமர்ந்திருந்தார் ஏற்கெனவே அறிமுகமான முகம் என்பதால். லொடுக்கு தன் மனைவி ஜெசிலாவை மகள் மரியமையும் (ஆமாங்க அவர் மனைவி பெயரும் ஜெசிலா) அழைத்து வந்ததால் ஒருவித துணையாக இருந்தது எனக்கு. ரொம்ப காலம் பழகிய நண்பர்களாக உணர்வதால் லொடுக்கு தம்பதியோடு பேசுவது மிகவும் வசதியாகவும் சுலபமாகவும் இருந்தது. இருவரின் மகள்களும் விளையாட அவர்களுக்கு 'சாக்லெட்' வாங்கி குஷிப்படுத்தினார் அனானி தியாகு. (என் மகள் இரண்டு விஷயங்கள் உள்ளவர்களிடம் உடனே ஒட்டிக் கொள்வாள் -ஒன்று லட்சணமான முகம், இரண்டு ஆங்கிலம், அது இரண்டுமே இருந்ததால் தியாகுவுடன் ஒட்டிக் கொண்டாள்.) தியாகு என்னிடம் "உங்க மகள் ரொம்ப 'கியூட்' காரியம் முடிந்ததும் கழற்றிவிட்டுட்டாங்க" என்றார் மிகவும் பரிதாபமாக. கோபி அறிவு பசியில் வந்திருப்பாராக இருந்திருக்கும் அய்யனார்- சுரேஷின் தீவிர வாசிப்பனுபவங்களை இரண்டு காதுகளையும் சமர்பித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். ரொம்ப நல்ல சாந்தமான பையனாக தெரிந்தார் கோபி.

சுடானை பற்றி ஏதாவது சொல்லுங்க என்று சுடான் புலியிடம் கேட்க "இப்போதைக்கு அந்த நாடு அப்படியேதாங்க இருக்கும். எந்த முன்னேற்றத்திற்கான முயற்சியும் தெரியல" என்று சுருங்க முடித்தார். "அபி அப்பா பதிவை படிக்காம பின்னூட்டம் போடுவதை எப்போ நிறுத்த போறீங்க" என்று நான் கேட்க வழக்கம் போல அவர் எழுதுவதை போலவே ஏதோ தெளிவில்லாமல் பதில் அளித்தார். "தான் ஓட்டவாயில்லை ஒளிவுமறைவில்லாமல் இரகசியங்களை 575 பேரிடம் மட்டுமே பகிர்ந்துக் கொண்டு யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் என்றும் சொல்லிவிடுவேன்" என்று ஒப்புதல் வாக்குமூலமளித்தார். அது மட்டுமில்லாமல் சொற்பிழை அதிகம் செய்வதால் அனானியாக பின்னூட்டம் போடமுடியவில்லை, கண்டுபிடித்துவிடுகிறார்கள் என்ற ஆதங்கம் வேறு (ரவிசங்கர், சீக்கிரமா ஒரு தமிழ் பிழை திருத்த மென்பொருளுக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா- ரொம்ப அவசியப்படுது). "உங்கள மரமண்டையென்றா மாதிரி பின்னூட்டத்தில் நான் சொல்லியிருந்தேனே கோபமில்லயே" என்று நான் கேட்டதற்கு. "இந்த வலையுலகுக்கு வரும் போதே ரோஷம், சூடு, சுரணை எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டுதான் வந்தேன். அதனால் தாராளமா இன்னும் நிறைய திட்டலாம்" என்று பெருந்தன்மையோடு அனுமதியளித்தவுடன் யாரோ 'சூடு, சுரணையெல்லாம் அதுக்கு முன்னாடி இருந்துச்சாக்கும்' என்று முணுமுணுத்ததுக் கேட்டது.

"நீங்க ரொம்ப சீரியஸான பதிவுகளை மட்டும்தான் படிப்பீர்களா? உங்க பின்னூட்டத்தை அய்யனார், சுகுணா திவாகர், தமிழ்நதி, டிசே போன்றவர்கள் பதிவில்தான் பார்க்க முடிகிறதே?" என்று வெளிப்படையாக கேட்டார் குசும்பர். நடுவில் சென்ஷி "ஓஹோ, நீங்க அந்த 'பின்நவீனத்துவ வியாதி' பிடிச்சவங்களா, அதெல்லாம் கண்டாலே எனக்கு பிடிக்காது" என்று வெறுப்புடன் முகத்தை வைத்துக் கொண்டார். அடடா மக்கள் இவ்வளவு கவனிக்கிறார்களா கொஞ்சம் உஷாராகத்தான் இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு நான் "அப்படியல்லா எல்லாம் படிப்பேன். ஆனால் நேரமே இல்லாத போது மொக்கை பதிவு மாட்டும் போது நேரவிரயமாக தெரியும். மற்றபடி மொக்கை பதிவுகளுக்கு என்ன பின்னூட்டம் போடுவது என்று எனக்கு தெரியவில்லை. உங்க 'விடை பெறுகிறேன்' பதிவையும் சந்தோஷமாக இந்த மாதிரி நல்ல காரியமெல்லாம் நடக்குதான்னு ஆர்வமாக படித்தேன் (சும்மாப்பா கோபிச்சுக்காதீங்க), அதற்கு என்ன பின்னூட்டம் போடுவது என்று எனக்கு புரியவில்லை" என்று சமாளித்தேன். "செந்தழல் ரவி நல்ல சரக்குள்ளவர் (இந்த இடத்தில் சரக்கு என்பது அறிவை குறிக்கிறது என்று அறிக! குசும்பர் சொன்னதற்காக வேறுவிதமாக நினைத்துவிட வேண்டாம்) ஆனால் சீரியஸான பதிவு எழுதுங்க என்றால் அப்படி எழுதினால் வேலைக்காவாதுப்பா என்கிறார்" இப்படி விஷயம் தெரிந்தவர்களும் கும்மி கோதாவில் இறங்குவதை சொன்னவுடன் நான் "ஆமா செந்தழல் நல்லா எழுதுவார், மொக்கை போடவும் திறமை வேண்டும் தெரியுமா?" என்று நான் கேட்டதை கிண்டல் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் குசும்பர் "நிஜமாவே அவர் நல்லாதாங்க எழுதுவார்" என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல "அடடா நானும் நிசத்துக்குதானே சொன்னேன்" என்று சிரிக்க. உடனே சுரேஷ் "நீங்க 'விடை பெறுகிறேன்' என்று எழுதுவதற்கு கூட ஒரு தனி திறமை வேண்டும், அப்படி ஒரு சிந்தனை எல்லோருக்கும் தோணிடாது" என்று பாராட்டியவுடன் குசும்பர் உச்சி குளுந்து வெட்கப்பட்டார். "உங்க அரசியல் கட்டுரை ரொம்ப பிடிக்கும் நடுநிலையா இருக்கும்" என்று அய்யனார் சுரேஷிடம் சொல்ல. "அரசியல் கட்டுரையுல யாரும் நடுநிலைனெல்லாம் சொல்ல முடியாது" என்று உண்மை உரைத்தார். "மாயவரத்தான் கூட அரசியல் கட்டுரை நல்ல எழுதுவார். சன்னாசி படிச்சிருக்கீங்களா? உங்களுக்கு சுட்டிக் கூட அனுப்பினேனே" என்று என்னிடம் அய்யனார் ஆர்வமாக கேட்க "ஆமா படிச்சேன். நல்லா இருந்தது. நிறைய எழுத மாட்றார்" இப்படி நல்ல எழுதுபவர்கள் நிறைய எழுதாததை சோகமாக சொன்னேன். சுரேஷும் "ஆமாம். நானும் சன்னாசி வாசிப்பேன் நல்லா எழுதுவார்" என்றார்.

திடீரென்று சென்ஷி "நட்சத்திர பதிவரை எந்த அடைப்படை தகுதியில் தேர்ந்தெடுக்கிறார்கள்" என்று ஆவேசமாக கேட்க நான் விளக்கம் அளித்தும் திருப்திப்படாமல், "அதெப்படிங்க அந்த நிர்மலோ யாரோ நட்சத்திர வாரத்தில் ஒரே ஒரு பதிவு போட்டோ, ஒண்ணுமே எழுதாமலோ ஒரு பிரச்சனை வந்து எல்லாம் கிண்டல் செஞ்சாங்களே ஏன் இந்த மாதிரி ஆட்களையெல்லாம் நட்சத்திரமாக்கணும்" என்று கேட்க. "தமிழ்மணம் எல்லோருக்கும் வாய்ப்பு தருகிறார்கள் அதனை சரியாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் அப்படி செய்யாதது தமிழ்மணத்தின் குற்றமாகாது" என்று சொல்லியும் 'இல்லை இல்லை' என்பது போல் தலையாட்டிக் கொண்டிருந்தார் சென்ஷி. (அவருக்கு அய்யனார் நட்சத்திரமானதில் கடுப்போ என்னவோ!). "அபிஅப்பா திமுக பற்றிய அரசியல் கட்டுரை எழுத வேண்டாம் கண்டிப்பாக உங்க 'இமேஜுக்கு' யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்" என்று லொடுக்கு கருத்து சொல்ல, அந்த மாதிரி கட்டுரைகளை தனிமடலாக வலம் வர செய்கிறேன். அந்த உறவின் தீவிரத்தில்தான் லக்கிலுக் என்னை வந்து சந்தித்தார் என்று சொன்னார்.

என்னை விட மிக குறைவாக பேசியது இரண்டு பேர். 1) கதிர், பாவனா பற்றி பேசும் போது மட்டும் வாய் திறந்தார் (ஜொள்ளு விட இல்லப்பா, பேசுறதுக்கு). அவர் கடைசியாக எழுதிய நிராகரிப்பட்டவர்கள் பற்றி நான் சிலாகிக்கும் போது கொஞ்சம் இலச்சையில் முகம் சிவந்தார். 2) சுல்தான், வந்தவுடன் என்னை எங்கேயோ பார்த்த நினைவு இருப்பதாக சொன்னார். அதன் பிறகு 'எங்கே பார்த்திருக்கிறேன்' என்று சிந்தித்துக் கொண்டே இருந்தாரோ என்னவோ வாய் திறந்து பேசி நான் பார்க்கவே இல்லை. மறுபடியும் போகும் போது "நீங்க ஆவேசமா பேசி பார்த்த நினைவு எங்கன்னுதான் தெரியலை" என்றார் மறுபடியும். அதுவா ஏதாவது பட்டிமன்றத்தில் பார்த்திருப்பீர்கள் என்று நான் சொல்ல "ஆம்மாம்மாமா, லியோனி பட்டிமன்றத்தில் பேசினீங்கள, அதானே பார்த்தேன்" என்று முகம் மலர்ந்தார். தெளிவுப் பெற்றதால் தலை வெடிக்காமல் கண்டிப்பாக தூங்கியிருப்பார் என்று நம்புகிறேன்.

அப்புறம் இடையிடையே தமிழச்சி- செல்லா பிரச்சனை, லக்ஷ்மி- மோகன்தாஸ் வாதங்கள், எது சரி- எது தவறு என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள், நான் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் ஒருமித்த கருத்தாக எல்லோரும் சொன்னது வலையில் கும்மி கூடிய பிறகு காட்டமான வாக்குவாதங்களும், புழுதி வாறி இறைக்கும் ச(சா)கதி சண்டைகளும் குறைந்துவிட்டதாக பலர் சந்தோஷப்பட்டாலும் சிலர் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார்கள்.

இப்படியே பேசி கிட்டத்தட்ட ஐந்து மணிநேரத்தை ஓட்டிவிட்டு அபிஅப்பா தயவிலா யாரோட தயவிலென்று தெரியாது (யாராக இருந்தாலும் அவர் ரொம்ப நல்லவர்) 'ஆர்டர்' பண்ணி சாப்பிட்டுவிட்டு பதிவர்களுடன் பேசி மகிழ்ந்த மகிழ்ச்சியில் வீடு திரும்பினோம்.

Saturday, July 28, 2007

சித்திரம் பேசுதடி

ஆளாளுக்கு விதவிதமாப் போட்டி வைக்கிறாங்க. நாம போட்டி தான் வைக்கிறதில்ல போட்டில கலந்துக்கவாவது செய்யலாம்னு நினைச்சேன். செல்லா புகைப்படப் போட்டில கலந்துக்கலாம்னு பார்த்தா முதல் 30 படம்தான்னு சொல்லிட்டாரு. இந்நேரத்திற்கு அதற்கு மேலேயே வந்திருக்கும்னு விட்டுட்டேன். நம்ம சிந்தாநதி கணிணி ஓவியப் போட்டி அறிவிச்சிருக்காங்க. நல்ல மனுசர் ஜூலை 30 வரைக்கும் கெடு கொடுத்தது மட்டுமல்லாம ஒருவர் அதிக பட்சம் மூன்று படங்கள் அனுப்பலாம்னு சொல்லிட்டார். நல்ல மனுசன்.

சரி நம்ம பங்குக்கு என் படங்கள் - நான் வரைந்த படங்கள்னு சொல்ல வந்தேன்.

Mr.பீனின் புலம்பல்



தேவதாசியின் மனமில்லா அபிநயம்

வாய்ப்புக்கு நன்றி.

Thursday, July 26, 2007

பழக வருகிறார் உங்களுடன்

எல்லா மனிதர்களுக்குமே தன்னுடைய சொல்லுக்கு மதிப்பு தருபவர்களை பிடிக்கும். இதில் ஆண்- பெண் என்ற விதிவிலக்கெல்லாமில்லை. காதலிக்கும் போது காதலன் சொல்வதை அப்படியே காதலி கேட்டுவிட்டால் 'அடடா, இவ மனைவியாய் வர நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்ற எண்ணத்தில் மிதப்பர்கள். அதே போல காதலியும் தன் பேச்சை காதலன் கேட்டுவிட்டால் 'நான் போடுற கோடுக்குள்ள கட்டுப்பட்டு வாழணும் வீட்டுக்குள்ள, நான் கைக்கட்டி வாய்ப்பொத்தி நில்லுன்னா நிற்கணும் டோய்..'ன்னு பாட தொடங்கிவிடுவார்கள். கல்யாணத்திற்கு பிறகுதான் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பது வேறு கதை.

யாரெல்லாம் உங்க சொல் பேச்சு கேட்டு நடப்பார்கள்?

1. மனைவி (அவ சொல் பேச்சு கேட்டுத்தான் நானே நடக்குறேன்னு சிலர் புலம்புறது கேட்குது - அதுல தப்பே இல்ல கீப் இட் அப்)

2. குழந்தைகள் (அதெல்லாம் அந்தக் காலம், இந்த காலத்து புத்திசாலி குழந்தைகள் சொல்வதைத்தான் நாம் கேட்டு நடக்க வேண்டி இருக்குன்னு அனுபவபூர்வமா எனக்கும் தெரியும்.)

3. வளர்க்கும் நாய் (நீங்க சொல்றா மாதிரி கேட்குதுன்னு வெளியில சொல்லிடாதீங்க 'ப்ளூ க்ராஸ்' தயாரா நிற்கிறாங்க)

யார் கேட்கிறார்களோ இல்லையோ இவர் கேட்பார். ம்ம் சொல்லுங்க ஆனா இவருக்கு ஆங்கிலம் மட்டும்தான் புரியும் அதுவும் ஒற்றை வார்த்தையில் சொன்னால்தான் புரியும். உங்க சொல்பேச்சுக் கேட்கும் 'மவுஸை' கொண்டுப் போய் LAUGH, CRY, DANCE, JUMP, GO TO HELL, F*****F இப்படி ஏதாவது தட்டிப் பாருங்க திட்டிப் பாருங்க உடனே செய்வார், சொல்படி கேட்பார். அதுவும் Internet Explorer 6 உபயோகித்தால் ரொம்பவும் சந்தோஷப்படுவார். ஆனா நீங்க சொல்வது புரியலைன்னா உடனே உதட்டை பிதுக்கி புரியலைன்னு ஒத்துக்குவார்.

இதை சொடுக்கித்தான் ஆணையை பிறப்பிக்க முடியும். இண்டர்நெட் எஸ்ப்லோரரில் உலவுபவராக இருந்தால் சொடுக்குங்கள் ஆணையிடுங்கள், இதோ உங்கள் அடிமை (பயர்பாக்ஸிலும் வேலை செய்யும் ஆனால் ஆணை பிறப்பித்த பிறகு ஒரு உரல் வரும் அதை க்ளிகினால் தான் அவரை பார்க்க முடிகிறது):



இந்த மாதிரி தமிழில் ஆணை பிறப்பித்து விளையாடினால் இன்னும் நல்லா இருக்கும்ல? எங்கே நம் மென்பொருள் வீரர்கள்? (இந்த மாதிரி விளங்கா வெட்டி வேலையெல்லாம் நாங்க செய்வதில்லைன்னு சொல்றாங்கப்பா!)

Wednesday, July 18, 2007

வலைப்பதிவாளர்கள் தயாரா?

அலுவலகம் முடிந்து வீட்டுக்குப் போகும் முன்பு தமிழ்மணம் மேயும் வழக்கம். அப்படி உலாவி விட்டு வீட்டுக்குப் போகும் போது ஏதோ தோழிகளுடன் சிரித்து மகிழ்ந்துவிட்டு வீடு திரும்பும் உணர்வு மிஞ்சும். அப்படித்தான் நேற்றும் போகும் போது மிதக்கும் வெளி எழுதிய 'ஒரு பெண்ணைக் கொலை செய்தோமையும்' பத்ரி ஷேஷாத்ரி இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதிய 'ராஜீவ் காந்தி கொலை பற்றி இரண்டு விஷயங்களும்' படித்தேன். மிதக்கும் வெளியின் அந்த பதிவை படிக்கும் போது எனக்கு சுபா சுந்தரத்தின் மகள் (தற்)கொலையே (?) நினைவுக்கு வந்தது. அதற்கு அடுத்த பதிவாக நான் படித்தது சுபா சுந்தரம் காலமாகிவிட்ட இரண்டு வருட பழையச் செய்தி. இந்த இரண்டு பதிவையும் அடுத்தடுத்து பாடித்தது தற்செயலாக சம்பவித்திருக்கலாம் ஆனால் எப்படி அப்படி என்று இழப்புகளையும் இறப்புகளையும் அசைப்போட்டுக் கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். அந்த நேரம் நான் ஒரு பெரிய 'round-about'ஐ கடந்துக் கொண்டிருந்தேன். நான் நடு 'டிராக்'கில் இருந்தேன் நேராக செல்வதற்காக. நேராக செல்கிறேன் என்று சுட்டிக்காட்டும் கருவியையும் (indicator) தட்டிவிட்டு 'round-about'ன் மத்தியில் கடக்க இருக்கும் போது பெரிய பேருந்து என்னுடைய வலதிலிருந்து இடப்பக்கம் திரும்புகிறது என்னுடைய சின்ன வண்டியை கவனிக்காமலேயே. பேருந்தின் ஒளி கண்சிமிட்டவே நான் கவனித்து 'இறைவா உன்னுடைய காவல்' என்று ஒரு கத்து கத்திவிட்டு அப்படியே இடப்பக்கமாக திரும்பினேன். ஓட்டுனரை திட்டவோ, horn அடிக்கவோ தோன்றவேயில்லை. ஓட்டுனரின் முகத்தைப் பார்த்தேன், என்னைவிட அவர் கண்ணில்தான் பயம் அதிகமாகத் தெரிந்தது. காரணம் இந்த ஊரின் சட்டத்திட்டம் அப்படி. நேற்று அந்த அசம்பா விதம் நடந்திருந்தால் அதே நொடியில் நான் போய் சேர்ந்திருப்பேன். ஆனால் விபத்துக்கு காரணமான அந்த ஓட்டுனர் வாழ்நாள் முழுவதும் கம்பிகளுக்குப் பின்னால்தான் சிறையில் வாழ்க்கை நடத்தியிருக்க வேண்டும். எல்லா புகழும் இறைவனுக்கே என்று மறுபடியும் ஒரு முழு வட்டம் எடுத்து வந்தேன்.

அதன் பிறகு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போதும் என் மண்டைக்குள் ஓடியதெல்லாம் 'நான் இறந்துவிட்டால் வலைப்பதிவு நண்பர்களுக்கு யார் தெரிவிப்பார்கள்' என்று (ரொம்ப கிறுக்குத்தனமா தெரியல?). 'நீ இருந்தா என்ன, செத்தா என்னன்னு' நீங்கள் நினைப்பது புரிகிறது இருப்பினும் நான் எந்த அளவுக்கு இந்த வலையுலகில் மாட்டிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கே புலப்பட்டது. (என்னைப் போல் கண்டிப்பாக பலரும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்). நான் இறந்துவிட்டால் யாருக்கு பெரிய இழப்பு? கண்டிப்பா வலைப்பதிவர்களுக்கோ என் அலுவலகத்துக்கோ இல்லையே? இருந்தாலும் இதெல்லாம்தான் முதலில் வந்து நிற்கிறது எனக்கு. 'ச்சே, என்ன ஒரு இயந்திர உலகில் சிக்கிக் கொண்டிருக்கிறேன்' என்று யோசித்தேன். சாவைப் பற்றி கண்டிப்பாக நான் பயப்படவில்லை என்பது மட்டும் விளங்கியது. ஆனால் சில ஜீவன்களுக்காக வருத்தப்பட்டேன். முதலில் என் மகள், தாயில்லாதவளாக வளர்வாளே என்று. அதற்கு அடுத்தபடியாக என் பெற்றோர். பெற்றோர்களுக்குப் பெரியக் கொடுமையே தன் குழந்தையை தமக்கு முன் இழப்பதுதான் என்பது என் அபிப்பிராயம். அப்படிப்பட்ட தண்டனையை என் பெற்றோருக்கு நான் தரக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

இதே போல் போன வாரம் உடல்நிலை சரியில்லாத போதும் இப்படித்தான் சாவைப் பற்றி நினைத்துக் கொண்டேன் (நீங்க எப்பவாவது உங்க சாவைப் பற்றி யோசித்ததுண்டா?). கணிணி முன் உட்காரக் கூட முடியாத நிலை, அப்போதும் ஒரு பதிவுப் போட்டு இப்போதே தெரிவித்து, மக்கள் எழுதும் கடைசி அஞ்சலிகளை படித்துக் கொள்வோமா என்ற பைத்தியக்கார ஆசைகள் (அப்படிலாம் வேற நினைப்பு இருக்கான்னு முணுமுணுப்பது கேட்கிறது!). அத்தோடு அந்த தருணத்தில் மண்டையில் உதித்த 'சூப்பர்' சிந்தனை என்னவென்றால் எல்லோரும் ஆறு, எட்டு, சுடர் என்று விளையாடுவது போல் என் மறைவுக்காக ஆளாளுக்கு ஒரு சின்ன கட்டுரை எழுத வேண்டும், தலைப்பு 'நாளை உன் மரணம் நேர்ந்தால்' எல்லோரும் கண்டிப்பாக மொக்கை இல்லாத தீவிர பதிவாக ஒவ்வொருவரும் மரணத்திற்கு முன்பு செய்ய வேண்டிய கடமைகளை எப்படி ஒரே இரவில் முடிப்பீர்கள், எந்த அளவுக்கு தயாராக இருப்பீர்கள் என்று யோசிக்க வைக்க வேண்டுமென்றெல்லாம் கற்பனை. குறிப்பாக என் கடைசி பதிவில் ஒரு வேண்டுகோள் விடுக்க வேண்டுமென்று இருந்தேன். (என்னத்த பெருசா புதுசா கேட்டுவிட போறேன் - அதே அரைத்த புளித்த மாவுதான்)

1) சாதி, மத, இன உணர்வுகளை தூண்டும் பதிவுகளை பதியாதீர்கள்.
2) தனி மனிதத் தாக்குதல்கள் வேண்டாம். பின்னூட்டம் போடுவது ஊக்கத்திற்காக இருக்க வேண்டுமே தவிர யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.
3) அனானி பின்னூட்டங்களை வெளியிடலாம் பதிவுக்கு தொடர்புடையதாக இருப்பின். அனாவசிய சம்பந்தமில்லாத பிரச்சனைகளை வளர்க்கும் ஜல்லியை தவிர்க்கலாம்.

இப்படிலாம் நான் சொன்னா மட்டும் திருந்திவிடவா போகிறார்கள் நம் மக்கள்? இருப்பினும் நப்பாசை, திரைப்படத்தில் அந்த கடைசிக் காட்சியில் எப்பேர் பட்ட வில்லனும் திருந்திவிடுவது போல திடீரென்று திருந்திவிட்டால் வலையுலகிற்கு நல்ல காலம்தானே? இப்படி நடக்குமென்றால் நான் சாக ரெடி, நீங்க திருந்த ரெடியா?


இப்படியெல்லாம் அப்போ அதாவது போன வாரம் என்னுடைய காய்ச்சலின் சீதோஷ்ண அளவு (temperature) 39° C இருந்த போது எழுத நினைத்தது. இதெல்லாம் சாக்காக வைத்து கொலை வெறியில் அலையாதீங்கப்பா.

Sunday, July 15, 2007

சுகுணா என் காதலி

இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. இதில் எவ்வகையான உள்குத்துமில்லை. (இப்படி ஏதாவது பில்டப் கொடுத்தாதான் ஒருநாளாவது இந்த படம் ஓடும்:-) )

இப்படியாகும் என்று நினைக்கவேயில்லை நான். எதுதான் நான் நினைத்த படியெல்லாம் நடந்திருக்கிறது? இந்த பாஸ்கரும் அந்த பாஸ்கராக இருப்பான் என்று தோன்றக் கூட இல்லை எனக்கு. கல்லூரி முடிந்தவுடனேயே இங்கு வந்துவிட்டதால் ஊர் வாசனையே இல்லாமல் போய் விட்டது. பிடித்தது கிடைக்காது என்று தெரிந்த பிறகு கிடைத்ததை பிடிப்பதற்கு முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன். முதல் வாரம் அவள் வீடு என்று தெரியாமலேயே இருந்திருக்கிறேன். ஒரு வெள்ளிக்கிழமை விடுமுறை நாளில் தான் அவள் முகம் பார்க்கும் வாய்ப்பே கிடைத்தது. எனக்கு மிகுந்த ஆச்சரியம். அவள் தானா அல்லது பார்ப்பவர்கள் எல்லாம் அவளாக ஒரு காலத்தில் தெரிந்துக் கொண்டிருந்த அதே நோய் மீண்டும் வந்துவிட்டதா என்று எனக்கே சந்தேகம். என் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதாக அதே கணம் பாஸ்கரும் 'சுகுணா' என்று விளித்து என் அச்சத்தை தெளிவாக்கிவிட்டான். ஆமாம் அது என் சுகுணாவேதான். எப்படி அடுத்தவன் பொண்டாட்டியை 'என் சுகுணா' என்கிறேன் என்றெல்லாம் கேட்க கூடாது. இப்போது வேண்டுமானால் அவள் பாஸ்கரின் மனைவியாகி போகலாம், என் மனதளவில் இன்றும் அவள் 'என் சுகுணா'தான்.

லேசில் எந்த பெண்ணையும் பிடித்துவிடாது எனக்கு. சின்ன வயதிலிருந்தே அம்மாவை கண்டால் ஒருவகை வெறுப்பு, காரணம் அவள் என்னை பெற்றவள் அல்ல என்பதால் இல்லை அவள் என் தந்தையை சந்தோஷமாக வைத்துக் கொள்ளாததால். யாரிடமும் ஒட்டாமலேயே வளர்ந்துவிட்டேன். என் சிந்தனைகளையும் யோசனைகளையும் அவ்வப்போது எழுதுவேன் அதற்கு 'கவிதை' என்று நானே பெயர் சூட்டிக் கொண்டேன். ஆனால் அது எனக்கு மட்டுமே புரிந்தது. அதனால் அதனை இப்போது எவரேனும் வாசித்தால் 'பின் நவீனத்துவத்துடன்' சேர்த்து விடக் கூடும். அந்த வகையான எழுத்துக்கள். எழுதியதை வெறுப்பில் பறக்க விட்டுக் கொண்டிருந்த போது, இனி எழுதவே போவதில்லை என்று எல்லாவற்றையும் வீசிக் கொண்டிருந்த போது சில பக்கங்கள் சுகுணாவின் காலை சென்றடைய குப்பை என்று ஒதுக்காமல் ஒரு காகிதத்தை மட்டும் கையில் எடுத்தாள். முதலில் என் காகிதத்தை ஒரு பெண் தொட்டாள் என்றதும் கோபம்தான் பிளறியது, பறக்கவிட்டாலும் அந்த குப்பை எனக்கே சொந்தமானது. எடுத்தவள் முகம் மலர்ந்தது. தூரத்திலிருந்து கவனித்தேன். "ஹே சூப்பர் கவிதைடி" என்று தோழியிடம் இரசித்து சொல்லியது அந்த அமைதியான சூழலில் அவள் வார்த்தை மட்டும் என் காதில் எட்டவே அவளை நான் இரசிக்க ஆரம்பித்தேன். ஆனால் அவளை அடிக்கடி காணவே முடியாது. என் சுகுணா மிகவும் அடக்கமானவள், அமைதியானவள், அழகானவள். பூமிக்கும் வலிக்காமல் நடப்பவள். பூமியை மட்டுமே பார்த்து நடப்பவள். எத்தனையோ முறை நான் அவளை கடந்து சென்ற போதும் அவள் என்னை கவனித்ததே இல்லை. நான் வசீகரிக்கும் ஆணாக இல்லாமல் போனதால் என்று சொல்லிவிடாதீர்கள். என்னை மட்டுமல்ல அவள் யாரையும் ஏறிட்டுப் பார்ப்பதில்லை. ஆனால் அந்த பாவி பாஸ்கரை மட்டும் எப்படித்தான் கவனித்தாள் என்று இன்னும் எனக்கு புரியவேயில்லை. ஒரே ஒரு முறைதான் அவளை அவனுடன் பார்த்தேன், மனம் ஒப்பவேயில்லை. அதுவும் அவள் வீட்டுக்கு கொஞ்ச தூரத்தில்தான் நின்று பேசிக் கொண்டிருந்தனர் இருவரும். என்ன உறவு என்று அவசரப்படாமல் தெரிந்துக் கொள்ளும் அவசரத்தில் நான் இருந்தேன். நானே அவள் வீட்டில் உள்ள ஒரு பெரியவரிடம் எதேச்சையாக ஏதோ காட்டுவதாக அவர்களை காட்டி விட்டேன். அதன் பிறகு என்ன ஆனது என்று எனக்கே தெரியாது. ரொம்ப நாளாக அவளை வெளியில் பார்க்க முடியவில்லை. காட்டிக் கொடுத்ததால் அவளை வீட்டில் அடித்தார்களோ என்று எனக்கு நானே கற்பனை செய்துக் கொண்டு கொஞ்ச காலம் குற்ற உணர்ச்சியில் இருந்தேன்.

நான் கல்லூரியில் இறுதி ஆண்டு முடிக்கும் போதுதான் அவள் முதல் ஆண்டில் காலெடுத்து வைத்திருந்தாள். அதனால் இன்னும் அவளுக்கு மணமகன் தேட காலமிருக்கிறது என்று கணித்துக் கொண்டு வெளிநாடு வேலை கிடைக்கவே பறந்துவிட்டேன். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு என்னுடைய திருமண பேச்செழவே, அவள் இறுதியாண்டுக்கு இப்போதுதான் வந்திருப்பாள் என்று கணக்கிட்டு அவளை விசாரிக்க சொல்லும் போது தெரிந்துக் கொண்டேன் அவள் பாஸ்கருடன் ஓடிப் போய்விட்டாள் என்று. 'ஓடி போய்விட்டாள்' என்று யாரும் தெரிவிக்கவில்லைதான், ஆனால் வேற்று சாதி பாஸ்கர் என்ற பையனுடன் திருமணம் முடிந்து விட்டது என்று தெரிய வந்தது. அப்போதுதான் நான் என் வாழ்க்கையின் 'வில்லனின்' பெயரையே தெரிந்துக் கொண்டேன். அவள் தூரத்தில் அவனுடன் இருக்கும் போது அவள் முகம் தனியாக பளிச்சிட்டு தெரிந்தது, அப்போது அவனை நான் கவனிக்காததால் இப்போது அவர்கள் வீட்டிலேயே மேல் தளத்தில் வாடகைக்கு இருக்கிறேன். இருப்பினும் ஓரத்தில் ஒரு வகை ஆசை. அந்த ஆசையில் ஒருவகை வலி. அதனால் என் மனசு எனக்கு சொன்னதெல்லாம் 'இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அவளை சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறதென்றால் அதுவும் கடல் கடந்து, அவள் வாழ்க்கையில் உனக்கு இன்னும் இடம் இருக்கிறது' என்று சொல்லிக் கொண்டே இருந்தது. கடிவாளமில்லாத மனது கண்டபடி அலைபாயத்தானே செய்யும்? ஆனால் சில நேரங்களில் அவர்களை கடந்து நான் மேலே ஏறும் போது, பாஸ்கரும் சுகுணாவும் அவர்களுடைய குட்டி தேவதையுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். மிகுந்த பொறாமையாக இருக்கும். நான் இருக்க வேண்டிய இடத்தில் அவன் என்று நினைத்துக் கொள்வேன். குட்டி தேவதையின் பெயர் கூட தெரியாது எனக்கு. என்னை கண்டாலே ஓடி ஒளிந்துக் கொள்வாள். 'உனக்குமா என்னை பிடிக்கவில்லை' என்று நான் நினைத்துக் கொள்வேன். நான் கடக்கும் போது என்னை நிமிர்ந்தும் பார்த்ததில்லை என் சுகுணா. பார்த்தால் மட்டும் அவளுக்கு என்னை தெரிந்துவிடப் போகிறதா என்ன? இருப்பினும் கண்ணுக்குள் கலக்க மாட்டாளா என்ற அற்ப ஆசை இருக்கத்தான் செய்கிறது. அப்படி வாய்ப்பு கிடைக்காதா என்று நான் பார்க்கும் போதெல்லாம் அவள் முதுகை மட்டுமே காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். அவர்கள் பேசி சிரித்து மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும் போது 'ஒருவேளை அவள் என்னுடன் இருந்திருந்தாள் இவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்திருக்க முடியாதோ' என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டாலும் என் அலைபாயும் மனம் 'இதை விட சந்தோஷமாக இருந்திருப்பாள். பிடிக்காத மனைவியென்பதாலேயே முன்னேற முயற்சிக்காமல் அவளையும் இங்கு அழைத்து வராமல் இருக்கிறாய். இவள் மனைவியாகியிருந்தால் நீ எங்கேயோ போயிருப்பாய்' என்று சொல்லி என்னை கற்பனை உலகிற்கு இழுத்து செல்லும்.

வாழ்க்கையில் எனக்கு காதல் என்று பூத்தது இவளுடன் மட்டும் தான் அதையும் தெரிவிக்காமலேயே என் வாழ்வு முடிந்து விட்டால், என் காதலுக்கு அர்த்தமில்லாமல் போய்விடுமே? இவளுடன் பேசாமலேயே பழகாமலேயே பல நாட்கள் குடித்தனமே நடத்தியிருக்கிறேன் என் மனதளவில், என் உலகத்தில். இவளுக்காக குற்ற உணர்ச்சியில் இருந்த போது சோறு தண்ணியில்லாமல் என்னை நானே வதைத்திருக்கிறேன். 'நம் உலகம்' என்று ஒரு வலைதளமே அமைத்து இவளுக்காக எழுதுவதாக எழுதி தள்ளியிருந்திருக்கிறேன் ஏதாவது ஒரு மூலையில் இவள் படித்துவிடமாட்டாளா என்ற ஆவலுடன். 'உனக்காக எழுதித் தள்ளியதை எவன் எவனோ இரசித்துவிட்டு சென்றிருக்கிறான் சுகுணா. ஆனால் எழுதவே வேண்டாமென்றிருந்த என்னை எழுத வைத்த உனக்காக நான் எழுதும் போது நீ இல்லாதது எனக்கு எங்கோ நோவுகிறது. சுகுணா உனக்கான என் காதலை தெரிவிக்க வேண்டும், வேண்டும்' என்ற வெறியில் தான் அவளுக்காக அந்த கடிதத்தை நான் எழுதினேன். அந்த கணத்தில் எனக்கு 'நான் திருமணமானவன், ஒரு குழந்தையின் தகப்பன்' என்ற உணர்வே இல்லாமல் இருந்தது. மனைவியை காதலிக்காமலேயே மகன் எங்கிருந்து வந்தான் என்ற அசட்டுத்தனமான கேள்வியை நீங்கள் கேட்கக் கூடாது. காதலில் பிறப்பதல்ல உயிர், கலவியிலும் உருவாகும் என்பதால் பிறந்துவிட்டான். எழுதினேன் காதல் சொட்டும் கவிரசனையோடல்ல, மிகவும் சுருக்கமாக 'கற்பனையில் வாழ்ந்துவிட்டோம் சிறிது காலமாவது நிஜத்தில் வாழ்ந்து பார்ப்போமா, வாய்ப்பளிப்பாயா?' என்று மட்டுமே ஒரு அழகிய ஆங்கில வரிகள் பதித்த காதல் வாழ்த்து அட்டையில் என் கைப்படவும் எழுதிவிடாமல் தட்டச்சு செய்து அதை படிமமெடுத்து ஒட்டி எவ்வளவு நாசுக்காக அவள் 'யார் யார்' என்று யோசிக்கும் தவிப்பை அவளுக்கு தர நினைத்தேன்? இது வக்கரமாக உங்களுக்கு தெரியலாம். ஆனால் அது என் காதலுக்கு நானே செய்துக் கொள்ளும் ஒரு வகையான சமாதானம். நான் இந்த வீட்டுக்கு வந்து ஒரு மாதமே ஆகிறது இருப்பினும் காலம் கடத்தாமல் எழுதவே தோன்றியது எனக்கு. எழுதிவிட்டேன் அனுப்பியும் விட்டேன்.

என் கடிதம் கைக்கு கிடைத்து விட்டதா அல்லது வேறு சில காரணமா என்று தெரியவில்லை, நான் கடிதம் அனுப்பி இரண்டாவது நாளிலேயே அவர்கள் வீட்டில் ஏதோ பூகம்பம் வெடித்தது போல் பலத்த சண்டை நிகழ்ந்துக் கொண்டிருந்தது, அப்போது தான் நான் அலுவலகம் முடிந்து மாலை வீட்டுக்குள் நுழைகிறேன். உரையாடல்களின் சத்தம் கேட்காதது போல் படி ஏறினேன். சண்டையென்று அந்த சத்தத்தை வைத்து உணர்ந்து கொள்ள முடிந்ததே தவிர சொற்கள் சரியாக காதில் கேட்காததால் சம்பவம் புலப்படவில்லை. இருவர் குரலில் அவன் குரல் தூக்கலாக ஒலிக்கவே சுகுணாவின் குரல் கேட்காமலேயே இருந்தது. அடிக்கடி உரக்க தெளிவாக கேட்டதெல்லாம் 'கத்தாதே' என்ற ஒரே வார்த்தை மட்டும். சலசலப்புக்கு பிறகு பாஸ்கர் வெளிக் கதவை திறக்கும் சத்தம் கேட்டது, மேலிருந்து எட்டிப் பார்த்தேன். கோபத்தில் சிவந்திருந்தது பாஸ்கரின் முகம். எட்டிப் பார்க்கும் என்னையும் கவனிக்காமலேயே குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக வெளியில் சென்று விட்டான். கீழே சென்று அவளிடம் ஆறுதலாக ஏதேனும் பேசலாமா, இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று தோன்றியது. இருப்பினும் பாஸ்கர் மறுபடியும் வந்துவிட்டால் என்ற அச்சத்தில் அப்படியே உட்கார்ந்து விட்டேன். வேறேதும் சத்தம் கேட்கிறதா என்று காதை கூர்மைப்படுத்திதான் வைத்திருந்தேன் ஆனாலும் வேலையின் அலுப்பா என்று தெரியவில்லை, என்னையறியாமலேயே தூங்கிப் போனேன். கனவிலும் சுகுணாதான் என்னுடன். திடீரென, நடு இரவில் கூக்குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். சத்தம் கீழிருந்துதான் என்று ஓடி இறங்கி சென்றேன், ஹாலில் பாஸ்கர் கையை தலை மேல் வைத்து அழுதுக் கொண்டிருந்தான். மகள் சோஃபாவில் படுத்திருந்தாள். சுகுணாவை என் கண்கள் தேடியது. அழுகைக்கான காரணமும் புரியவில்லை. அருகில் சென்று அவன் தோளில் கை வைத்தேன். என் கையை பிடித்துக் கொண்டு அழுதான். அக்கணம் என் மனதை பிசைந்தது, மிகவும் சங்கடமாகிப் போனது. "என்ன ஆச்சுங்க" என்று தயக்கத்துடன் கேட்டேன். ஒன்றும் சொல்லாமல் அவன் மேலும் குரலுயர்த்தி அழுதான். ஒருவகையான பயம் என் மனதை பிடித்துக் கொண்டது காரணமேயில்லாமல். மறுபடியும் உலுக்கி "சொல்லுங்க" என்றேன். உள் அறையை கைக்காட்டி மறுபடியும் குரல் உயர்த்தி அழுதான். எனக்கு உள் அறைக்கு போக ஏதோ தயக்கமாக இருந்தது. வெளி கதவும் திறந்தே இருந்தது. கீழ் தளம் என்பதால், இவன் அழும் சத்தம் கேட்டிருந்திருக்கும் அந்த வில்லாவின் காவலாளிக்கு, ஓடிவந்தார், "கியா ஹுவா சாப்" என்றான். பிறகு அவனே உள் அறைக்கு தைரியமாக தயக்கமில்லாமல் ஓடிப் பார்த்துவிட்டு ஒரே ஒரு கணம் திகைத்து நின்றான். அவன் கண் விரிந்ததில் உள்ளே ஏதோ விபரீதம் நடந்திருக்கு என்பதை மட்டும் புரிந்துக் கொண்டேன்.

வெளியில் ஓடிவிட்டான் காவலாளி. கொஞ்ச நேரத்தில் காவல்துறை படையெடுத்து வந்திருந்தது. வில்லாவில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூடி வீட்டின் வெளியே நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். விடியும் நேரமும் நெருங்கிவிட்டது. காவல்துறை அதிகாரிகள் வீட்டிற்குள் அனுமதியில்லாமல் நுழைந்தார்கள், கூடவே காவலாளி "யஹான் சாப்" என்று உள் அறையை கைக்காட்டினார். பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே பேசிவிட்டு, செல்பேசியில் யார் யாருக்கோ வேற்று பாஷையில் பேசிக் கொண்டனர். காவல்துறை அதிகாரிகளிடமும் பாஸ்கர் ஒன்றும் சொல்லாமல் அழுகையை மட்டும் பதிலாக தந்தார். என்னை கேட்டார்கள் 'who are you?' என்று. உள் அறையில் என்ன நேர்ந்திருக்கிறது என்று பார்க்கும் துணிச்சல் கூட இல்லாத நான் என்ன பதில் சொல்லிவிடப் போகிறேன். நான் யாரென்று சொல்லக் கூட பயந்துக் கொண்டு 'நான் பாஸ்கருடைய சிநேகிதன் மேல் அறையில் குடியிருக்கிறேன்' என்றேன். "எப்போது இந்த சம்பவம் நிகழ்ந்தது" என்றார். எந்த சம்பவம் என்று புரியாத எனக்கு கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. இப்பதான் புரிகிறதா எங்களுக்கு எப்பவோ புரிந்து விட்டது என்று நினைக்கிறீர்களா? எனக்கு புரிவதெல்லாம் நடந்துவிடக் கூடாது என்பதாலேயே மழுங்கல் ராஜாவாக நின்றிருந்தேன். எந்த சம்பவம் என்று கேட்டால் அபத்தமாகி போகுமோ என்று யோசித்துக் கொண்டேன் "பாஸ்கர் அழும் குரல் கேட்டே கீழே வந்தேன், என்ன நடந்தது..." என்று இழுக்கும் முன்பே, பெரிய அதிகாரி மற்றவரிடம் வேற்று பாஷையில் ஏதோ சொல்ல. அது இவர்களிடம் 'ஸ்டேட்மெண்ட்' வாங்கிக் கொள் என்பதாக தொணித்தது, காரணம் 'ஸ்டேட்மெண்ட்' என்ற வார்த்தை மட்டும் ஆங்கிலத்தில் இருந்தது.

மெதுவாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள் அறையில் எட்டிப் பார்த்தேன். குனிந்த தலை நிமிராத என் சுகுணா மொத்தமாக பூமி பார்த்தபடியே தொங்கிக் கொண்டிருந்தாள். அவள் முகத்திலிருந்து கண்ணெடுக்க முடியவில்லை என்னால். நான் மேலே உறங்கிக் கொண்டிருக்கும் போதா நீ மொத்தமாக உறங்கிவிட்டாய் என்று உலுக்கலாம் போல் இருந்தது. கனவா நிஜமா, என் சுகுணா ஆத்திரத்தில் அவசரத்தில் எடுத்த முடிவாக இருக்கும், இந்த நிகழ்வை திரும்ப எடுத்துக் கொள்ள முடியாதா? கணிணியில் இருக்கும் 'undo' போல் வாழ்க்கையிலும் இருக்க வேண்டும்.. எங்கே அந்த கால இயந்திரம்... எங்கே.. என்று பித்து பிடித்து கத்த இருந்தேன். அப்போது என்னை நடுங்க வைக்கும் அளவுக்கு என்னை ஒரு தள்ளு தள்ளிக் கொண்டு அந்த உள் அறையில் நுழையும் போது நான் மீண்டும் சுதாரித்துக் கொண்டேன். அல்லது அந்த நிமிடமே பித்து பிடித்துக் கொண்டிருந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. என்னை இடித்து தள்ளி உள்நுழைந்தது காவல் துறை அதிகாரிகளோ யாரோ தெரியவில்லை, அந்த உடுப்பில் இல்லை, சுகுணாவை கீழே கிடத்தினார்கள். அதற்கு மிகுந்த சிரமப்பட்டார்கள். அவள் கையில் இருக்கும் காகிதத்தை எடுத்தார்கள். அதில் 'என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை' என்ற சுய வாக்குமூலம் இருந்ததாக பேசிக் கொண்டார்கள்.

அதன் பிறகு பாஸ்கரை தனியாக அழைத்து சென்று ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒன்றுமே அறியாமல் உறங்கிக் கொண்டிருந்த மகள் எழுந்து "அம்மா, அம்மா" என்று அவள் கண்கள் தேடவே மற்ற அறையிலிருந்து அதை கேட்ட பாஸ்கர் 'ஓ' என்று அழ தொடங்கிவிட்டான். ஒரு குழந்தையின் தவிப்பிற்கு நான் காரணமா என்று குடைய ஆரம்பித்தது மண்டைக்குள்.

அவள் தற்கொலைக்கு எது காரணம் என்று எனக்கு தெரியவேயில்லை. 'ஆனால் நான் தான் காரணமா? என் கடிதம் தான் காரணமா' என்று தெரிந்துக் கொள்ள முடியவே இல்லை. எப்படி கேட்பேன் அது பற்றி. யாரிடம் கேட்பேன்? அப்படியே அந்த கடிதம் காரணமாக இருந்தாலும் அதை நான் தான் எழுதினேன் என்று சொல்லிக் கொள்ளும் தைரியமில்லை எனக்கு. 'எப்படி ஒரு வாக்கிய கடிதம் ஒரு உயிரை பறிக்க முடியும்?' என்று எனக்கு நானே சமாதானப்படுத்திக் கொண்டாலும் 'அப்படித்தான் இருக்கும்' என்று என் கடிவாளம் இல்லாத மனது சொல்லி என் உயிரை உருக்குகிறது, பைத்தியக்காரனாக இன்னும் அலைய வைக்கிறது கால இயந்திரத்தை தேடி.

Tuesday, July 10, 2007

அதிரத்தான் செய்கிறது ஆச்சரியத்தில்!

படம் சொல்லும் கதை:



எல்லோருமே ஏதோ ஒரு வகையில் ஒரு வகையான ஊனம்தான். ஆனால் ஆளுக்காள் ஊனத்தின் தன்மை வேறுபடும், சிலர் மனதளவில், சிலர் கல்வியில், சிலர் உடலில். ஆனால் தன்னம்பிக்கையென்ற மருந்திருந்தால் எவ்வகை ஊனத்தையும் பொருட்படுத்தத் தேவையில்லை என்பதற்கு அலிசன் லப்பர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பிறவியிலேயே கைகள் இல்லாததால் திருமணம் முடிக்கவும், தன்னைப் போலவே குழந்தையும் பிறந்துவிடுமோ என்ற அவநம்பிக்கையெல்லாம் இல்லாமல் துணிந்து பெற்றெடுத்து தாய்மையை தன்னுடைய 34ஆம் வயதில் உணரும் மனதிடம் மிக்கவர். தன் குழந்தையை ஒரு வரப்பிரசாதமென்றும், குட்டி தேவதையென்றும் சிலாகிக்க காரணமுள்ளது, மகன் பாரிஸ் ஆலன் ஜார்ஜ் தாயின் நிலையுணர்ந்து தனது ஐந்தாவது நாளிலிருந்தே தலையை தூக்கி தானே பால் குடித்துக் கொள்ளவும், அணைக்க வரும் தாயை தாமே கட்டிக் கொள்ளவும் தெரிந்த ஆறாம் அறிவுப் பெற்ற புத்திசாலிக் குழந்தை.

'குழந்தையை அரவணைக்க கைகள் இல்லையே' என்ற கவலை தரும் அந்த எண்ணத்தைக்கூட தன்னுடன் வைத்துக் கொள்வதில்லை என்று முகம் மலரும் அலிசன் 'கைகள் இல்லையென்றால் வாழ்க்கையே முடிந்து விடுமா?' என்று தம்மையேக் கேட்டுக் கொண்ட கேள்விதான் அவருக்கு அவரே தந்துகொள்ளும் ஊட்டச்சத்தும் ஊக்கச்சத்தும்.

தாய்மைக்கு இல்லை ஈடு. ஆச்சரியத்தில் அதிர்ந்ததாள் பகிர்ந்துக் கொண்டேன்.

Friday, July 06, 2007

பழிக்கு பழி

ஒரு படத்துல வடிவேலை ஒவ்வொரு மிருகமா பழிவாங்குறா மாதிரி நகைச்சுவை காட்சி வச்சிருப்பாங்க. இந்த படங்களை பார்த்ததும் அதுதான் நினைவுக்கு வந்தது.


மனுஷ மக்கள் மேல எப்படி 'உச்சா' போகணும்னு படிச்சி தெரிஞ்சுக்குது இந்த புறா. சமாதான புறா கூட அமைதி பேச்சு வார்த்தை நடத்திடலாமா?



நீ மட்டும் தான் ஓட்டப் போட்டு காசு சேமிப்பியா நாங்களும்தான்னு போட்டி போடுதுங்க. முதுகுல ஊறல் எடுத்துச்சுன்னா பக்கத்துல பன்றி இருக்கான்னு பார்த்துக்கிடுங்க.




சொன்ன பேச்சு கேளு மக்கர் பண்ணாதேன்னு உலுக்குது. நம்மால் ஒண்ணுமே செய்ய முடியாதவங்கள (மேலாளர்/ மனைவி/ கணவன்/ துரோகி) அந்த இடத்துல வச்சு பாருங்க சிரிப்பா வருது ;-)



உன் மூஞ்சு மேல என் காலை வைக்கன்னு வலது காலை எடுத்து வைக்கப் போகுது.

Tuesday, July 03, 2007

ரஜினி 'ஸ்கீ துபாய்' வந்தால்?

துபாய்க்கு வந்த புதுசுல எந்த பொருளைப் பார்த்தாலும் எனக்காக வாங்கிக்கணும்னு தோணவே தோணாது. தம்பிக்கு வாங்கலாம், அக்காவிற்கு, அப்பாவிற்கு அம்மாவிற்குன்னுதான் தோணுமே தவிர, ரொம்ப அத்தியாவசியப்பட்டால் தான் எனக்குன்னு ஏதாவது வாங்க தோணும். ஆனா இப்பல்லாம் அப்படியில்ல. அதுக்கு இரண்டு காரணம், ஒரு பொருள வாங்கி ஆசையா ஊருக்கு அனுப்பி வைச்சா ஒண்ணு 'ஏற்கெனவே என்கிட்டே இதே இருக்கு'ன்னு பதில் வரும் இல்லாட்டி 'இங்கதான் இது கெடைக்குதே, இத அங்கிருந்து அனுப்பினியாக்கும்?'ன்னு கேள்வி வரும். அதனால ஊரிலிருந்து 'இத வாங்கி அனுப்பு'ன்னு சொல்லாம எதையுமே நானா வாங்கி அனுப்புறதில்ல.

அந்த மாதிரி எந்த சுற்றுலா தளம் புதுசா வந்தாலும் போய் பார்க்க வேண்டுமென பெரிசா ஆர்வமே இருக்காது. அந்த மாதிரிதான் 'ஸ்கீ துபாயும்' வந்து இரண்டு வருடமானாலும் போனதேயில்ல. இந்த முறை ஊரிலிருந்து வந்தவங்களை ஒவ்வொரு இடமா சுத்திக்காட்டிக்கிருந்த போது உலகின் மிகப் பெரிய வணிக வளாகத்தில் ஒன்றான 'மால் ஆப் எமிரேட்ஸுக்கு' (Mall of Emirates) போனோம். அதுக்குள்ள தான் உலகத்தின் மிகப் பெரிய 'ஸ்கீ' வாசஸ்தலமான (Ski resort) 22,500 சதுர அடி பரப்பளவு கொண்ட 'ஸ்கீ துபாய்' அமைந்திருக்கு. அதாவது மூன்று கால்பந்து மைதானத்தின் அளவுன்னா பார்த்துக்கிடுங்க. ஒரே நேரத்தில் 1500 மக்கள் கூடி களிக்கலாமாம்.

'ஸ்கீ துபாய்' ஒரு அதிசய உலகம். உறைபனி மூடிய தரைல சறுக்கிக்கிட்டு போகிற அதிசயத்திற்காக அமைச்சது. இந்த அரங்கில் காலையில் -1 டிகிரியும் இரவு நேரங்களில் -6 டிகிரியுமிருக்கிறா மாதிரி அமைக்கப்பட்டிருக்கு. எப்படின்னு கேட்கிறீங்களா விமானத்தில் உபயோகிக்கும் அதே மாதிரியான தொழில்நுட்பம் தான் இங்கேயும். 33000 அடி உயரத்தில் பறக்கும் போது, வெளில -30 டிகிரியும் உள்ள 22 டிகிரியும் வச்சிருப்பாங்க, அந்த மாதிரிதான் இதுவும். வெளியில 40 டிகிரியா இருக்கும், உறைபனி உள்ளரங்கில் -4 டிகிரியா இருக்கும், கிட்டத்தட்ட 50 டிகிரி வித்தியாசம் தாங்குற மாதிரி மிகவும் சக்தி வாய்ந்த இன்சுலேசன் அமைப்பு கொண்டதாம். கண்ட்ரோல்டு டெம்பரேச்சர் - கட்டுப்பாடான வெப்பநிலை என்பது இந்த பனிச்சறுக்கு மைதானதுக்கு மிகவும் அவசியமாம். பனிக்கட்டி (ஐஸ்) உருகாமல் இருக்க வெப்பநிலை எப்போதும் 0 வுக்கு கீழே இருக்கணுமாம். உள்ளறை வெப்பம் கட்டுப்பாட்டிலிருக்க தனியான வெப்ப தடுப்பான்களுக்கும் வகை செஞ்சிருக்காங்க. அப்புறம் முழுக்க பனிக்கட்டி என்பதால் கட்டிடத்தின் மேல் வரும் பளு அதிகமாக இருக்குமென்பதால் தூண்கள் வடிவமைப்பு இதற்காக பிரத்யேகமானதாகவும் கூரை வடிவமைப்பை கொள்ளளவு தாங்குமாறும் அமைச்சிருக்காங்க.

வெளியில 40-45c ன்னு வெய்யில் கொளுத்தினாலும், குளிர்காலத்த பெரிய திடல்ல அடக்கி வச்சா மாதிரி உள்ளே போனதும் குளு குளுன்னு இருந்தது. இதற்குள்ள போவதற்காக அவர்களே பிரத்யேக உடைகளும் தராங்க. 'ஸ்கீ பனிச்சறுக்கம் தெரிஞ்சவங்க மட்டும்தான் இதற்குள் போக வேணும்னில்ல, பழகிய திறமைசாலிகளுக்குன்னு ஒரு இடம். அனுமதி சீட்டு வாங்கிற இடத்திலேயே தெளிவாப் போட்டிருக்காங்க. 'ஸ்கீ ஸ்லோப்பா' (Ski slope) அல்லது 'ஸ்னோ பார்க்கா' (Snow park). 'ஸ்கீ ஸ்லோப்பில்' போவதற்கு குறைந்தபட்ச திறமையாவது இருக்க வேண்டும். அதாவது தன்னால் நிறுத்த தெரியணும், chair lift உபயோகிக்க தெரியணும், தன்னாலேயே மேற்பார்வை செய்து கொள்ளும் அளவுக்கு இருந்தால்தான்..
இல்லாட்டி என்னைப் போன்றவர்கள் 'ஸ்னோ பார்க்' போய் பனியில் சும்மா சறுக்கி விளையாட வித விதமான சறுக்கு மரமிருக்கு. ஸ்விட்சர்லாந்துக்கு போனா மாதிரி பனிக்கட்டிய கையிலெடுத்து ஒருவர் மீது ஒருவர் அடிச்சி விளையாடலாம். பொதுவா ஐரோப்பியர்கள் மட்டுமே இங்க வருவாங்கன்னு இல்ல பலதரப்பட்ட மக்களும் வராங்க. குளிரைத் தாங்க கூடிய எல்லோரும் போகலாம்.

அவங்களே தரக்கூடிய பிரத்யேக உடை அணிஞ்சிருந்தும் என் கூட வந்த மக்கள் 'குளிருதுப்பா உறைஞ்சு போறேன் போலாமா?'ன்னு கேட்டு உயிரை எடுத்துட்டாங்க. ரொம்ப நேரம் உள்ளே இருக்க அவங்களால முடியவில்லை. என் மகள் குளிரின் காரணமாக உள்ளேயே வரமாட்டேன்னு அடம்பிடிச்சதால் என் கணவர் அவளோடு வெளியில் உட்கார்ந்து கொண்டு கண்ணாடி வழியாக ரசித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு உள்ளேயே அழகான சின்ன 'இக்ளூ' இருக்கிறது.. அதன் உள்ளே மட்டும் ரொம்ப இதமான வெப்பமாக இருப்பதால் அங்கேயே என்னுடன் வந்த மக்கள் குளிர் காய்ந்தார்கள். 'மற்றவர்களும் 'இக்ளூ'வுக்குள்ளே போக வேணாமா?'ன்னு வெளியே இழுத்துவந்தேன். இப்படியே கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஓடிடுச்சு.

அங்க ஒவ்வொருத்தரும் சறுக்குவதப் பார்த்தா நமக்கே ஆசையா இருக்கும். கவலையில்லை அதையும் கத்துத்தரோம்னு சொல்றாங்க. சறுக்கிப் பழகுவதை சொல்லித்தர திறமையான பயற்சியாளர்களும் இருக்காங்க. அதற்கு தனி நேரமும் தனிக் கட்டணமுமிருக்கு. எதையும் படிச்சிக்கிறதுக்கு வயசு தேவையில்லதான் ஆனா நேரம் வேணுமே அது இல்லாததால நீங்க துபாய் வந்தாலும் 'ஸ்கீ பார்க்' பக்கம் மட்டும் போயிருந்து நீங்க 'ஸ்லோப்பில் ஸ்கீ' செய்தால் என்னால் வேடிக்கை பார்க்க முடியும் அவ்வளவுதான். திடீரென என் அக்காவின் மகள் கேட்டாள் "ஸ்கீ துபாய்க்கு' ரஜினி வந்தால் என்ன சொல்வார்" என்று. அவள் ஒரு ரஜினி ரசிகை. "என்ன சொல்வார்? குளிரில் பல்செட்டு ஆடுதுன்னு சொல்வாரா?"ன்னு கேட்டேன். இல்ல "Cool என்பார்" என்று அந்த குளிரிலும் என் வயிரெறியச் செய்தாள். அங்கு வந்திருந்தவர்கள் வாயிலெல்லாம் இதே வார்த்தைதான் ஒலித்தது. 'தாங்க முடியலடா சாமி'ன்னு வெளியில ஓடி வந்துட்டேன்.

துபாய் சுற்றுலா போனா மறந்துவிடக் கூடாத முக்கியமான இடம் இது. அட! கட்டணம் விவரம் சொல்ல மறந்துட்டேனே? நாங்க போன ஸ்கீ பார்க்குக்கு ஒருவருக்கு திர்ஹம்ஸ் 70 (ரூபாய் 840/-) - (3 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டும்தான் அனுமதி) குழந்தையானாலும் 70 திர்ஹம்ஸ்தான். பிரத்யேக உடைகளாக ஜாக்கெட் (Jacket), கால்சட்டை (Trouser), சாக்ஸ் (Socks) (சாக்ஸை மட்டும் உபயோகித்து தூக்கிப் போட்டிடலாம் அல்லது எடுத்துட்டு போய்விடலாம்). தொப்பி மற்றும் கைகவசம் அதான் gloves நாம எடுத்துட்டுப் போய்ட்டா குளிர்தாங்க வசதியா இருக்கும். இல்லாட்டி அதை வாங்க தனி கட்டணம். நல்லவேளை நாங்க கொண்டு போயிருந்தோம். அப்புறம் 'ஸ்கீ ஸ்லோப்'க்கு 2 மணி நேரத்திற்கு 150 திர்ஹம்ஸ் (ரூ. 1800), இன்னும் 1 மணி நேரத்திற்கு தொடர இன்னொரு 40 திர்ஹம்ஸ் (ரூ. 480) வைக்கணும். அப்புறம் நான் ரொம்ப இரசிச்ச விஷயம் அந்த லாக்கர்தான் 10 திர்ஹம் கொடுத்து சாவி/ கார்ட் வாங்கி நாம்ம பொருட்களை வைத்து பூட்டிட்டு, திரும்ப வந்த பிறகு ரிமோட் மாதிரி வச்சி திறந்து அப்புறம் அந்த கார்டை ஒரு பெட்டியில் செலுத்தினா 10 திர்ஹம் திருப்பி துப்பிடுதுப்பா. பட்டிக்காட்டான் மொட்டாய் கடையை பார்த்தா மாதிரிதான் பார்த்தேன்.

அப்படியே இதை கிளிக்கிப் பாருங்க:

பிடித்த பெயரை பனிக்கட்டியில் எழுதிப் பாருங்க
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி