Wednesday, October 12, 2016

Pink & Parched - இரண்டு படங்களும் சுட்டெரிக்கும் நிஜங்களும்


இரண்டு படங்களுமே இச்சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தைரியமாக முன்னிறுத்துகின்றன. படம் பார்த்த பிறகு மனதில் திரும்பத் திரும்ப எழும் காட்சிகளும், நடைமுறையில் இன்னும் இப்படியான நிகழ்வுகள் உண்மையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றனவே என்ற அவலமும் நம்மைத் தின்று தீர்க்கிறது.

‘பிங்க்’ - நமது சமூகத்தில் நிலவும் ‘கறுப்பு’ எண்ணத்தையும், பெண்களுக்காக மட்டுமே விதிக்கப்பட்ட எழுதப்படாத சட்டங்களைப் பற்றியும் பேசும் அற்புதமான படம். இயக்குநர் அனிருத் ராய் சவுத்ரிக்கு இது முதல் ஹிந்திப் படமாம். ஆனால் அவர் இப்படத்திற்காக மிகத் தெளிவாகத் தமது பாத்திரப்படைப்புக்கான முகங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். இப்படத்தில் ஒரு கதாநாயகி கதாநாயகன் என்றில்லை. ஒவ்வொருவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

அமிதாப் பச்சன் முதிர்ந்த வழக்கறிஞராகக் கலக்கியிருக்கிறார். அவரது நடையுடை பாவனை அத்துனையும் முதிர்ச்சியையும், இயலாமையும் சேர்த்து அமைத்த பிம்பமாக வருகிறார். மினலாக வரும் தாப்ஸி கதாபாத்திரத்திற்கேற்ப எந்த அதிர்வுமில்லாமல் தொலைந்து போனவராக, தனது கையாலாகத்தனத்தை உடல்மொழியில் சொல்லியிருப்பது இயக்குநர் கேட்டுக் கொண்டபடியா அல்லது இதற்கு மேல் அந்தக் கதாபாத்திரம் எதையும் வெளிப்படுத்தக் கூடாதா என்பது விளங்கவில்லை. 'தைரியமான பெண்மணி' என்று ஃபலக் மினலை குறிப்பிட்டாலும், அந்தத் தைரியத்தை வெளிப்படுத்தாமல் அதிர்ந்தும் பேசாமல் அடக்கப்பட்ட சமுதாயத்தால் நசுக்கப்பட்டவராய் எல்லாக் கட்டத்திலும் காட்சி தருகிறார் தாப்ஸி.

மினலாக வரும் தாப்ஸியைவிட, ஃப்லக்காக வரும் கிர்த்திக் குல்ஹரி மிக நேர்த்தியாக நடித்துள்ளார். குறைந்த வசனங்கள் என்றாலும் சரியான தருணத்தில் முறையாக, தேவைக்கேற்பப் பொருந்தி நடித்துள்ளார். அப்படியே ஆண்ட்ரியாவும். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றியும் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இப்படத்தில் இம்மூன்று கதாபாத்திரங்களும் பிரதானம் என்பதை வலியுறுத்த அவர்களின் பெயருக்குப் பிறகே அமிதாப்பின் பெயர் ‘டைட்டில் கார்டில்’ வருகிறது. நம்மூர் சூப்பர் ஸ்டார்கள் இப்படியான விஷயத்திற்கெல்லாம் எக்காலத்திலும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். பாலிவுட்டிலிருந்து இப்படியான நல்ல விஷயங்களை எப்போது கற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.

நம் நாட்டில் சக்தி வாய்ந்த இடத்தில் அல்லது பண பலத்துடன் கூடியவர்கள் பெண்களை எப்படி மடக்குகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள், பிடிக்காத பெண்ணை ஆபாசமாகச் சித்தரித்து வெளியிட்டு எளிதாக அவள் வேலையை இழக்க வைக்கிறார்கள் என்று படத்தில் காட்சிகளாகப் பார்க்கும் போதே மனம் பதறுகிறது.

ஆண்களுடன் ஒரு பெண் சகஜமாகக் கொஞ்சம் சிரித்துப் பேசினால், அவனுடன் வெளியில் சென்றால் அல்லது பார்ட்டிக்குப் போனால் அல்லது குடித்தால் அல்லது இரவு உணவகத்திற்குச் சென்றால் அவளைத் தவறான கண்ணோட்டத்தில் இச்சமூகம் பார்க்கிறது என்பதையும் படித்த பண்பான ஆண்களும் கூட இப்படியான கறுப்பு எண்ணங்களுடன் இருப்பதையும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளார் இயக்குனர்.

‘பிங்க்’கில் நகரத்தில், படித்த பெண்களின் குரலாக வழக்கறிஞர் இருந்து பேசுகிறார் ஆனால் ‘பார்ச்ட்’ படத்தில் வறண்ட பூமியில் வாழும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கான தேவைகளை, விருப்பங்களை அவர்களே பேசுகிறார்கள். சிக்கலின் தீர்வுகளைத் தேடுகிறார்கள், தமக்கான சந்தோஷத்திற்காகப் போராடுகிறார்கள் இறுதியில் விடுதலையும் பெறுவதாக முடிகிறது படம்.

‘பார்ச்ட்’ படத்தில் வரும் பெண்கள் ஏனோ எனக்கு இஸ்லாமியப் பெண்களையே நினைவுபடுத்தினார்கள். அதற்குக் காரணம் படத்தின் முதல் காட்சியாகவும் இருக்கலாம். இறுக்கமான தலை முக்காட்டை ஒதுக்கி தலையைப் பேருந்தின் ஜன்னலில் நீட்டி சுதந்திர காற்றைச் சுவாசிக்கிறார்கள் லஜ்ஜுவாக வரும் ராதிகா ஆப்தேவும் ராணியாக வரும் தனிஷ்தா சாட்டர்ஜியும். அதுமட்டுமின்றிப் பொருள் கொடுத்து பெண் எடுப்பது இஸ்லாமியர்களின் முறையென்பதாலும் எனக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். பெண்ணை ஆட்டை விலை பேசுவதுபோல் மிகச் சரியாகவே காட்டியுள்ளனர். செதுக்கப்பட்ட ஒவ்வொரு காட்சியிலும் வலியும் வலிமையும் நிறைந்து நிற்கிறது. இதில் மதிக்கப்படாத பெண்களின் உள்ளுணர்வுகளைப் பற்றிப் பேசியுள்ளார் இயக்குனர் லீனா யாதவ். ‘பார்ச்ட்’, படத்தைத் திரையில் பார்ப்பது போலில்லை புதியதொரு உலகத்தைச் சுற்றிப் பார்த்து வந்ததுபோல் மனதிற்கு மிக நெருக்கமான ஓர் உணர்வை ஏற்படுத்தியது. யாருமே இப்படத்தில் நடிக்கவில்லை மாறாகக் கதைமாந்தர்களாக மாறியுள்ளனர். லஜ்ஜு, ராணி, பிஜ்லியுடன் நாமும் தோழமையுடன் சுற்றி திரிந்து வரும் வகையில் மிக இயல்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ரஸ்ஸல் கார்பென்டர்.


இரு படங்களின் முடிவுகளும் நமக்குத் திருப்தியையும் நியாயமான தீர்ப்பையும் தந்தாலும் நிஜ வாழ்க்கையில் பொசுக்கப்படும் உண்மைகள் சுடவே செய்கின்றன.

Wednesday, March 30, 2016

மண(ன) முறிவு - Gett: The Trial of Viviane Amsalem

"மனைவியைக் கணவன் அடித்து அல்லது வன்முறைக்கு உள்ளாக்கினானா?"
"வன்முறையென்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நீங்கள் உடல் வன்முறை பற்றிக் கேட்கிறீர்கள் என்றால் தீங்கு இல்லை."
"மனைவியின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறாரா?"
"இது விவாதத்திற்குரியது"
"என் கேள்வியானது கணவர் பணம், உணவு அளிக்கிறாரா?"
"இவள் கடந்த மூன்று வருடங்களாகக் கணவரோடு இல்லை, தனக்கும் தன் குழந்தைகளுக்கும் தேவையானதை அவரே பார்த்துக் கொள்கிறார்."
"கணவர் விபசாரம் அல்லது தான்தோன்றியாக சுற்றித் திரிவது, ஏமாற்று வேலை என்று ஏதேனும்?"
"இல்லை"
"கணவர் ஏதாவது ஒரு வகையில் அவரது மனைவியை அச்சுறுத்துகிறாரா?"
"இல்லை"
"இவரால் இந்தப் பெண்ணின் வாழ்வில் ஆபத்து உண்டு என்று நம்புகிறாரா? "
"பல ஆண்டுகளாக அவர்கள் பேசிக் கொள்வதுமில்லை."
கணவன் இடைமறித்து: "நான் பேச விரும்புகிறேன். அவளுக்குத் தான் என்னுடன் பேச விருப்பமில்லை."
"எல்லாம் சரியாகத்தானே இருக்கு பிறகு விவாகரத்திற்கான காரணம்தான் என்ன?"
"அவள் தன் கணவரை விரும்பவில்லை."
-இப்படி நீதிமன்ற விசாரணையோடு துவங்குகிறது இஸ்ரேலிய திரைப்படமான Gett: The Trial of Viviane Amsalem.

ஒரு பெண்ணின் தேவையை அறிய முற்படாமல், அவள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், அவளுக்கான மரியாதையைத் தராமல் அவள் கணவரின் விருப்பத்தை மட்டுமே பிரதானமாக்குகிறார்கள். முடிந்த வரை அவருக்குச் சாதகமாக விசாரணையைக் கொண்டு செல்கிறார்கள். இரண்டு மணிநேர முழுத் திரைப்படமும் விசாரணையாக, நீதிமன்ற காட்சிகளாக மட்டுமே இருப்பினும், அயர்ச்சியில்லாமல், பல கேள்விகளுடன், வாழ்வியல் சிக்கலுடன், ஆண் ஆதிக்க நீதிபதிகளின் அமைதியான அட்டூழியங்களாக விரிகிறது.

இப்படத்தின் மூலம் இஸ்ரேலின் வாழ்வியல் முறையை விளங்க முடிகிறது. இஸ்ரேலில் எந்த உள்நாட்டு திருமணமும் அல்லது விவாகரத்தும் மதக்குருக்களால் மட்டுமே சட்டப்பூர்வமாக்க முடியுமாம், அதுவும் 'கணவரின்' முழு ஒப்புதலுடன் மட்டுமே சாத்தியமாகுமாம். மத அடிப்படையிலான திருமணச் சட்டங்களில் மாட்டிக் கொண்ட கதாநாயகி வீவியன், கணவர் எலிஷா ஆம்சலெமிடமிருந்து விவாகரத்து கோருகிறார். அவர் தர மறுக்கிறார். வீவியன் தன் தரப்பு நியாயங்களை விவரிக்க அழைத்து வரும் சாட்சியங்களும், எலிஷா நல்லவர் என்று சான்றிதழ் தருகிறார்கள். அவர் நல்லவர்தான் ஆனால் அவர் தனக்கு நல்ல கணவரில்லை என்பதைத் தனது வழக்கறிஞர் மூலம் விளங்க வைக்கப் பாடுபடுகிறார் வீவியன். சாட்சிகளாக வரும் ஒவ்வொருவரும் சமூகத்தில் ஒரு பெண்ணை அவர்கள் பார்க்கும் வெவ்வேறு பார்வைகளின் பிம்பங்களாக உரு தந்திருக்கிறார் இயக்குனர். இந்தச் சமுதாயத்தில் பலருக்கு, ஏன் பெண்கள் உட்பட பலருக்கு, கணவர் அடிக்கவில்லை, குடிக்கவில்லை, வேறு பெண் தேடி செல்லவில்லை, உண்ண உணவு, இருக்க இடம் இதெல்லாம் மட்டுமே மகிழ்ச்சியான வாழ்க்கை என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

பெரும்பாலானவர்களுக்கு இவ்விதமான மனநிலை இருப்பதால்தான் வீவியன் போன்ற பெண்களின் மனம் இவர்களுக்குப் புரிவதில்லை. இதையெல்லாம் மீறி திருமண வாழ்வில் ஒரு பெண் எதிர்பார்க்கும் விஷயங்கள் பற்றி இவர்களுக்கு விளங்குவதில்லை. அதே போல ஒரு மனைவியின் கடமையாகப் பொதுவாகப் பலர் சிந்திப்பதும், அதுவே இந்தப் படத்தில் சொல்லப்படுவதும், கணவருக்குப் பிடித்ததைச் சமைத்துப் போடுதல், கணவரின் பெற்றவர்களைக் கவனித்தல், குழந்தைகளைப் பராமரித்தல், கணவரின் கண்ணுக்கு மட்டும் குளிர்ச்சியாக இருத்தல், கணவரின் தேவைக்கு இணங்குதல் இதைத் தவிர வேறில்லை. அந்தப் பெண்ணுக்கென்று ஒரு மனம் உண்டு, அதில் அவளுக்கும் ஆசைகள், கனவுகள், தேவைகள், எதிர்பார்ப்புகள், உணர்வுகள் உண்டு என்பதை நியாயப்படுத்த முற்படும் போது அதைப் புரிந்து கொள்ளாமல் அதனையும் தவறாகப் பார்க்கும் சமுதாயமும், மத அடிப்படையிலான திருமணச் சட்டங்களும் அவளுக்கு விவாகரத்து என்ற விடுதலை கிடைக்கச் செய்யாமல் செய்கிறது.

இந்தப் பெண் கதாபாத்திரத்தின் மொத்த வலியையும் பணிவையும் செருக்கையும் சேர்த்து அதன் முழு வடிவமாகவே மாறுகிறார் கதாநாயகி வீவியனாக வரும் ரோனித் எல்காபெட்ஸ். அவரே தன் சகோதரர் ஷலோமி எல்காபெட்ஸோடு இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தைப் பொறுத்தவரை பெரிய ஆறுதலானது இஸ்ரவேலர்களின் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் 'Ophir Award' இப்படத்திற்குக் கிடைத்தது மட்டுமல்லாது ஜெருசலேம் திரைப்பட விழாவில் 'பார்வையாளர்களுக்குப் பிடித்த படம் பிரிவுக்கான விருதும் இப்படத்திற்கே கிடைத்துள்ளது ஒரு வகை நம்பிக்கையைத் தருகிறது.

யூதர்களும் பிற மத அடிப்படைவாதிகளுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்பதைப் பறைசாற்றும் படம். கடவுளின் பெயரில் ஆண்கள் மாறு செய்யும் ஒரு பெண்ணின் கதை.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி