சில நேரங்களில் சில மனிதர்கள்


மதம் என்பது ஒரு மார்க்கம், வழிகாட்டி, மனிதனை நெறிப்படுத்த என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, என் தோழியுடைய கேள்வியினாலும் திட்டத்தினாலும் நான் திக்கற்று நின்றேன்.

தனக்குச் சாதகமாக இருக்கும் வரை மனிதன் தான் சார்ந்த மதத்தைப் போற்றுகின்றான். அதனைப் பின்பற்றுவதைத் தம்பட்டமும் அடித்துக் கொள்கிறான். ஆனால் தனக்கு ஒத்துவராது என்று வந்துவிட்டால் 'முடிந்த வரை நான் கடைப்பிடிக்கிறேன் மற்றவற்றை இறைவன் பார்த்துக் கொள்வான்' என்று இறைவன் மீதே பழிபோட்டு விஷயத்தையே மூடிவிடுகின்றான்.

என்னுடன் வேலை பார்த்த ப்ரியா ஒரு சிரியா நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியரைத் திருமணம் செய்து கொள்ள மதத்தை மாற்றிக் கொண்டாள். திருமணத்திற்காக மட்டுமே அந்த மதம் மாற்றமென்று கட்டிக்கொண்டவனுக்கும் தெரியும் சமுதாயத்திற்கும் தெரிய வேண்டுமென்ற வகையிலேயே இருந்து கொண்டாள். இது ஒரு ரகமென்றால் மற்றொரு ரகம் எனது அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் ப்ரிஸ்லினா. இவள் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவள் இவள் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியரைக் காதலித்து திருமணம் செய்ய ஆசைப்பட்டாள். ஆனால் காதலுக்காக மதம் மாற விரும்பவில்லை. வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்வது பல நாடுகளில் தடையென்றாலும் இந்தியாவில் சில நெருக்கடிக்கப்பால் சுலபம்தான். ஆனால் இந்தியாவில் தேவையான கோப்புகளும், ஆவணங்களும் அதன் வரையறைகளும் சட்டதிட்டங்களும் சுலபமாக இல்லாத காரணத்தால் சீஷெல் நாட்டை அணுகித் திருமணம் செய்து கொண்டார்கள். மனதிற்குப் பிடித்தவரை கைப்பிடிக்க ஒருநாள் திருமண வைபவத்திற்காகக் கூட தன் மதத்தை விட்டு கொடுக்காதவள் வருங்காலத்தில் தன் சந்ததியினர்கள் அவள் மதத்தின் வழியில் வரப்போவதில்லை என்று அறியாமலா துணிந்திருப்பாள்? அதைப் பற்றியும் பேசி முடிவெடுத்திருப்பார்களாக இருக்கும்.

இப்படி மனம், திருமணம் என்று வந்துவிட்டால் எவ்வளவுதான் மத ஈடுபாடு உடையவராக இருந்தாலும் சரி அதிலிருந்து விலகியே நிற்கிறார்கள். காதலைப் புத்தியால் பார்த்து புரிந்து கொள்வதை விட மனதால் உணர்ந்து புரிந்து கொள்வதே சிறந்தது. புத்தி சமுதாயத்தை வைத்துப் பழகும் சூழலை வைத்து அதற்கேற்ப மாறிக் கொள்ளும் ஆனால் மனது அப்படியானதல்ல. அதனால் காதலைப் பொறுத்தவரை மனதால் முடிவெடுப்பதே சிறந்ததாக இருக்கும். `காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வதைவிட புத்தியில்லை என்பதே பொருத்தம்` என்றும் கூட நான் நினைத்துக் கொள்வதுண்டு. ஏனெனில் காதலித்த அந்த ’ஒரு’ நபருக்காக பல ஆண்டுகாலம் கடைபிடித்துவரும் கோட்பாடுகளையும், சம்பிரதாயங்களையும், பழக்கவழக்கங்களையும், மத நம்பிக்கையையும் விட்டுக்கொடுக்க முடிகிறதென்றால் ஒன்று அவர்கள் காதல் இதை எல்லாவற்றிக்கும் மேலானதாக இருக்கும் அல்லது தன் மதம் மீது பெரிய ஈடுபாடில்லாதவராக இருக்க வேண்டும். இதெல்லாம் இப்படியிருக்க இன்று என் சிநேகிதி இப்படி கேட்டது மிகுந்த ஆச்சர்யமடைய வைத்தது. இவளுடைய விஷயம் மிகவும் வேறுபாடானது.

இவளும் காதல் வசப்பட்டவள் தான் அதுவும் தன்னுடைய பதினைந்தாம் வயதிலிருந்தேவாம். தன் பின்னாடியே சுற்றிக் கொண்டிருந்தவனை யார் என்னவென்று அறியாமல் மிகத் தீவிரமாக ஒருவரையொருவர் காதலித்து விட்டு, தன் இருபதாம் வயதில்தான் அவனை யாரென்று தெரிந்து கொண்டாளாம்.

நிற்க!! நீங்கள் சந்தேகிப்பது தவறு, நீங்கள் நினைப்பது போல் அவன் மிகக் கெட்டவனுமல்ல, அவளை விட்டு விலக நினைப்பவனுமல்ல, மோசமான பின்னணியிலிருந்து வந்தவனுமல்ல, இவளை ஏமாற்றிவிட்டு ஓடிவிட துடிப்பவனுமல்ல. இத்தனைக்கும் இருவரும் ஒரே மதத்தையும் குலத்தையும் சாதியையும் சேர்ந்தவர்கள்தான், கிறிஸ்தவர்கள் தான். பரம்பரை பாரம்பரியத்திலும் சரி, பணத்திலும் சரி இருவரும் சமமானவர்களே. `அப்போ என்னப்பா பிரச்சனை` என்று மண்டையை பிய்த்துக் கொள்கிறீர்களா? பொறுமை பொறுமை. இவர்கள் காதல் கதையை முழுவதுமாகக் கேட்டுவிட்டு அதன் பிறகு இவன் யாரென்று புரிந்து கொள்ளுங்கள்.

இவளை இவன் முதலில் பார்த்த இடம் எது தெரியுமா? சொன்னால் சிரிக்கக் கூடாது. எனக்கு முதலில் கேட்கும் போது கொஞ்சம் எள்ளலாகத்தான் இருந்தது. இவன் இவளைப் பார்த்து இந்த ’இழவு’ காதலில் வசப்பட்டது ஒரு இழவு வீட்டில். உண்மைதான். அவளுடைய உறவினர் ஒருவர் இறந்துவிட்டிருக்கிறார். ஆனால் குடும்பப் பிரச்சனை காரணமாக இவள் தாய் தந்தை போக மறுத்த வீட்டுக்கு இவள் பாட்டி அதாவது அம்மாவின் அம்மாதான் இவளை அழைத்துக் கொண்டு அந்த இழவு வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு வைத்துதான் இவன் அவளைப் பார்த்திருக்கிறான். அப்போது அவள் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாளாம். அப்போது அவன் கல்லூரி முதலாமாண்டு மாணவன். அதன் பிறகு ஒரு வருட பின் தொடர்ச்சியாக வாழ்த்து மடல், குறுஞ்செய்தி, மின்னஞ்சல், பேச்சாடல், காதல் தூதுகளென பல முயற்சிக்குப் பிறகு இவளுடைய பத்தாம் வகுப்பு பரீட்சைக்குப் பிறகு காதல் சம்மதம் தந்திருக்கிறாள். அதன் பிறகு வழக்கமான காதலர்களாகி விட்டாலும் இவர்கள் இருவருமே மிகவும் சாமர்த்தியமானவர்களாக இருந்திருக்க கூடும். அதனால் தான் இவர்களின் காதலைப் பற்றி வீட்டிற்கு ஐந்து வருடக் காலமாக தெரியாமலேயே இருந்திருக்கிறது. அதன் பிறகும் தெரியாமல்தான் இருந்திருக்கிறது. ஆனால் இவர்களே சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார்கள். ஆமாம், இவள் பாட்டியின் மறைவில் தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

இவள் பாட்டி இறந்ததைச் சொல்பவர்களுக்கெல்லாம் சொல்லியாகிவிட்டது என்று சொல்ல உள்ளுக்குள் ஏதோ சலசலப்பு நிகழ்ந்திருக்கிறது. அதன் பிறகு நெருங்கிய உறவினர்கள் இவளின் வீட்டார்களுடன் பலர் வாக்குவாதங்கள் செய்திருக்கிறார்கள். பஞ்சாயத்து தொடந்திருக்கிறது. இதன் முடிவாக `வேண்டாதவர்களெல்லாம் பாட்டி சடலத்தைக் கடைசியாகப் பார்க்க வருவார்கள் அவர்களுடன் யாரும் பேச கூடாது` என்றெல்லாம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வந்த குடும்பத்தின் தலைவி பாட்டி காலை பிடித்துக் கொண்டு `அம்மா என்னிடம் கடைசி வரைக்கும் பேசாமலிருந்திட்டீர்களே அம்மா` என்று பயங்கரமாக அழுது புலம்பியிருக்கிறார்கள். அந்த நொடியில் தான் இவள் தன் வீட்டிற்கு வந்து அழும் அந்த பெண் தன் சித்தி என்று தெரிந்து கொண்டதோடு, தன் தாயின் சொந்தத் தங்கையாக இருந்தாலும் ஜென்ம பகையாளிகள் என்று அறிந்து கொண்டிருக்கிறாள். இவள் தாய் தந்தை மட்டுமல்லாது அவள் தந்தை வழி சொந்தங்களுக்கும், தன் தாயின் சகோதர்களுக்கும் கூட இவர்கள் எந்த விதத்திலும் ஒட்டுதல் இல்லை என்பதையும் தன் பாட்டி இறக்கும் தருவாயில் கூட இவர்களைப் பார்க்க விரும்பவில்லை என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறாள்.

`அப்படியென்ன ஜென்மப் பகையாம்?` என்று யோசிக்கிறீர்களா? இதே கேள்விதான் எனக்கும் வந்தது. அதுவும் ஒரு காதல் கதைதான். தன் சித்தி காலகாலமாக குடும்பப் பகையாக இருக்கும் வீட்டின் பிள்ளையோடு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டார்களாம். அதுவும் தன் அக்காளுக்கு திருமணமாகும் முன்பே. இதனால் சித்தியின் அக்கா அதாவது என் தோழியின் அம்மாவின் திருமணத்தடை, தாத்தாவின் மறைவு, சொத்துத் தகராறு, மாமா- அத்தை விவாகரத்து, என்ற பல பிரச்சனை பின்னணியில் `பகை` ஜென்ம பகையாக விசுவ௫பம் எடுத்துள்ளது. ஆமாம், என் சிநேகிதியின் காதல் கதையிலிருந்து எப்போது நாம் அவள் சித்தியின் காதல் பிரச்சனைக்கு மாறினோம்? தொடர்பில்லாமலாயிருக்கும்?

என் சிநேகிதி காதலிப்பது வேறு யாரையுமில்லை அப்படிப்பட்ட சித்தியின் அருமை புதல்வனைத் தான். இவள் சித்தியைத் தெரிந்து கொண்ட போதுதான் தான் தன் சகோதரன் அதாவது சித்தியின் மகனைக் காதலிப்பது அதுவும் பல சந்ததியாகத் தொடர் பகையை வளர்த்துவரும் குடும்பத்தில் ஒருவனை காதலிக்கும் விஷயம் இவள் மண்டையில் உறைத்திருக்கிறது. உரைத்தால் காதல் ஓய்ந்து விடுமா என்ன? பிரச்சனை எழும்பும் போது பார்த்துக் கொள்ளலாமென்று விட்டுவிட்டார்களாம். இதெல்லாம் கேட்கும் போது எனக்கு கே.பாலசந்தர் படத்தைப் பார்ப்பது போல் உணர்வு. உங்களுக்குமா? நாம் குழம்புவது போல் அவர்களுக்குக் குழப்பமே இல்லை - மிகத் தெளிவாக இன்னும் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது இவளுக்கு இருபத்தெட்டு வயதாகிவிட்டது இன்னும் இந்த பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.

காதலர்களும் காதலை விட்டுக் கொடுப்பதாக இல்லை. குடும்பமும் பகையை மறப்பதாக இல்லை. அது மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களை பொறுத்தமட்டில் இந்த உறவு மிகப் பெரிய பாவமாம். இந்தத் திருமணம் நடந்தால் தற்கொலை செய்து கொள்வோம் என்றெல்லாம் இருவீட்டாரும் பயமுறுத்தியும் பார்த்துவிட்டார்கள். இந்தக் காதலர்கள் தளராமல் இன்னும் உறுதியாகவே இருக்கிறார்கள். இவர்களே மதம் மார்க்கமெல்லாம் ஆராய்ந்து, பிஷப் பாதிரியார் என்று எல்லோரிடமும் பேசி விவாதித்து கடைசியில் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்கள். அவர்களின் முடிவைத்தான் என்னிடம் கேள்வியாக இறக்கி வைத்து என்னை திக்குமுக்காட வைத்துவிட்டாள். அவளுடைய தோழிகளில் நான் மட்டும்தான் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவள், அதனால் தான் என்னிடம் இந்தக் கேள்வியையும் சந்தேகத்தையும் எடுத்து வைத்திருக்க வேண்டும். அந்தக் காதல் ஜோடிகளின் முடிவானது தாம் பிறந்த மதத்தை மாற்றிக் கொள்வதென்று.

கிறிஸ்துவ மதம் சித்தி மகனை அண்ணன் என்று சொல்வதால் திருமணத்திற்குத் தடையாக இருக்கும் மதத்தை தூக்கியெறிவதென்பது அவர்களின் தீர்க்கமான முடிவு. முடிவை கேட்கும் போதே `திக்`கென்றது என் மனம். அடுத்து அவள் என்னிடம் ஒரு கேள்வி கேட்டாள் ``ஆமாம், உங்க இஸ்லாம் மதத்தில் தாயுடன் பிறந்தவர்களின் புதல்வர்களையோ தந்தையுடன் பிறந்தவர்களின் புதல்வர்களையோ திருமணம் செய்து கொள்வது குற்றமாகாதாமே?``. அவள் கேள்வியிலிருந்து ஒன்று மட்டும் புரிந்தது. அவளுக்குத் தாம் பிறந்த மதத்தையும் தெரியவில்லை, இஸ்லாம் மதத்தையும் விரும்பவில்லை, ஆனால் தனக்குச் சாதகமான ஒன்றை தேடுகிறாளென்று நன்றாகவே விளங்கியது. நான் மிக நிதானமாக சொன்னேன் ”திருமணத்திற்காக மதத்தை வளைப்பது சரியல்ல” என்று.

``சரி- தவறு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் எங்கள் மதத்தில் தடை செய்யப்பட்டது உங்கள் மதத்தில் சாத்தியமென்றால் அது எங்களுக்கு சாதகமென்றால், எங்கள் திருமணத்திற்கு விமோச்சனமென்றால் நாங்கள் ஏன் அந்த மதத்தை தேர்ந்தெடுக்கக் கூடாது? எத்தனையோ காதலர்கள் தம் காதல், திருமணத்தில் முடிய காதலர்களில் ஒருவர் விட்டுக் கொடுத்து மதம் மாறுவார்கள். நாங்கள் ஏன் இருவருமே அதே விஷயத்திற்காக மதம் மாறக் கூடாது?`` என்று சூடாகக் கேட்டாள். பதிலளிக்க வார்த்தையில்லை. அவள் முடிவை என்னால் மாற்ற இயலாது. ஒருவேளை இவள் முடிவுக்கு அஞ்சி அவர்களின் குடும்பத்தினர் பிடிவாதத்தைக் கைவிடலாம் அல்லது அவர்களது கோட்பாடுகளை மாற்றிக்கொள்ளலாம். காலம் கனியுமென்று எனக்குள் நினைத்துக் கொண்டு் அவள் கேள்விக்கு புன்முறுவலைப் பதிலாகத் தந்தபடி மனிதர்களின் புது நிறத்தை புரிந்துக் கொண்டவளாக இறைவனிடம் முறையிடக் கிளம்பிவிட்டேன். அஸர் தொழுகைக்கு நேரமாகிவிட்டது.

நினைவுகளில் நீ


நீ இல்லாத வெறுமையை

நூலாக்கி

கோர்த்துக் கொண்டேன்

என்னுள்

தைக்க முடிகிறது

நம் நினைவுகளாலான

வண்ணம் மிகுந்த

கனவுகளை

மறைவின் நிஜங்கள்


ஆசையோடு
நீ வாங்கி வந்த
பென்ஸ் கார்
கொளுத்தும் வெயிலில்
காத்திருக்கிறது
நீ வந்தமர்ந்து
குளிர வைப்பாயென.
அதனிடம் நான்
சொல்லவில்லை
நீ விமான விபத்தில் மறைந்து
என் எண்ணங்களை
வியாபித்திருக்கிறாயென
நீ இல்லாமலிருப்பது
தெரிந்தால்
சுட்டெரிக்கும் வெப்பத்தை
சாதகமாக்கிக் கொண்டு
அது பொசுங்கிவிட்டாலும்
ஆச்சர்யப்படுவதற்கில்லை

மெல்லத்தமிழினி சாகும்??


'Emirates only தமிழ் radio station' இப்படியான அறிமுகத்தோடு ஆரம்பிக்கப்படுகிறது ஹலோ 89.5 FM. இதையே ‘அமீரகத்தின் ஒரே தமிழ் வானொலி’ என்று அறிமுகப்படுத்தினால் என்ன குறைந்துவிடப் போகிறார்களா? அல்லது தமிழர்களுக்குத்தான் பிடிக்காமல் போய்விடுமா? சரி, முழுவதுமாகத் தமிழிலேயே பேசுவது FM-ன் கலாசாரமில்லையென்றால் ‘அமீரகத்தின் முதல் தமிழ் radio station' என்றாவது சொல்லிவிட்டுப் போகட்டுமே.

தமிழுக்காகவென்று ஆரம்பிக்கப்படும் எந்த ஒரு ஊடகமும் ஒரு முடிவோடுதான் இருக்கிறார்கள் ’தமிழைப் பருக தரவே கூடாது’ என்ற முடிவோடு. ஏன் இப்படி? இதற்குக் காரணம் யார்? இரசிகர்களா? கண்டிப்பாக இருக்க முடியாது. கேட்பவர்களையும் பார்ப்பவர்களையும், ரசிப்பவர்களையும் கெடுப்பதே ஏன் சொல்லப்போனால் அவர்களின் ரசிப்புத் தன்மையைச் சிதைப்பதே இப்படியான கலப்படமான ஊடகம்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நாங்கள் என்ன செந்தமிழிலா நிகழ்ச்சி வழங்கக் கேட்கிறோம்? அல்லது ஆங்கிலமே கலக்காமல் முழுக்கத் தமிழில் இருக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறோமா?

ஒரு வாக்கியத்தில் ஒரு வார்த்தை மட்டும் தமிழைப் புகுத்துவதற்குப் பதிலாக 80% தமிழும் 20% ஆங்கிலமும் போனாப் போகுது என்று இருக்கட்டும் என்று விட்டது போக இப்போது நிலை தலைகீழாக 25% தமிழ் 75% ஆங்கிலமென்று பேசிக்கொண்டு ’ஒரே தமிழ் வானொலி’ என்று நாக்கூசாமல் சொல்வதைத்தான் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இவர்கள் பி.எச். அப்துல் ஹமீத்தின் நிகழ்ச்சிகளை கேட்டதில்லையா? இல்லை பி.எச். அப்துல் ஹமீத்தின் நிகழ்ச்சிகள் வெற்றிப்பெறதான் இல்லையா? இன்னும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை இவர்கள் மறந்துவிட வேண்டாம். அவரோடு ஒப்பிட இவர்கள் தகுதியற்றவர்களாகவே இருந்துவிட்டு போகட்டும் ஆனால் அவ்வாறான சிறு முயற்சிக் கூடயில்லையே!?

மலையாள அலைவரிசையை இவர்கள் கேட்டுப் பார்க்கட்டும் எவ்வளவு அழகாக தன் மொழி சிதைவு இருக்காத வகையில் கவனமாகக் கையாளுகிறார்கள் என்று. அவர்களிடமிருந்து படிக்கட்டும். ஹிந்தி 101.6 கேட்க இனிமையாக உள்ளது. ஆரோக்கியமான நல்ல நிகழ்ச்சிகள் தருகிறார்கள். வண்டி ஓட்டுபவர்கள்தான் அதிக அளவில் கேட்கிறார்கள் என்பதைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப தகவல் பரிமாறுகிறார்கள். அவர்கள் மொழியில் இனிமையில்லாததாலோ என்னவோ ஆங்கிலம் கலக்கிறார்கள் அதுவும் ஆங்கிலத்தை அழகாக உச்சரிக்கிறார்கள். ஆனால் தமிழுக்கு அப்படியான அவசியமில்லையே.

நம் மொழியில் ஒரு வகை ஓசையிருக்கிறது. அழகான ஒலியிருக்கிறது, ஆங்கிலமே கலக்கத் தேவையில்லைதான் இருப்பினும் சுலபமாக்கிக் கொள்ளக் கொஞ்சம் ஆங்கிலம் கலந்தால் இருந்துவிட்டுப் போகுது என்று சொல்லலாம் அதற்காக இப்படியா? சென்னையில்தான் ‘தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்’ என்று தத்திகினத்தோமோடு பேசுவதை நவநாகரீகமாகக் கருதுகிறார்கள். தமிழர்களிடம் தமிழில் பேசுவதை மரியாதை குறைவாகவோ, முகசுளிப்போடு பார்க்கிறார்கள் தமிழின் அருமை தெரியாதவர்கள். இருந்துவிட்டுப் போகட்டும்.

’சென்னை தமிழில்’ நிகழ்ச்சியென்று மிக நாராசமான நிகழ்ச்சியும் போகத்தான் செய்கிறது ரசிப்பவர்களும் இருக்கிறார்கள், அப்படியான மட்டமான ரசனையையும் அவர்கள் மூளைக்குப் பழக்கியதில் இவர்களுக்குப் பெரும்பாலான பங்குள்ளது என்பதை இவர்கள் மறக்க வேண்டாம். தமிழ்நாட்டில் தமிழுக்கு மரியாதை அவ்வளவுதான், ஏனெனில் தாய்மடி சுலபமாக கிடைக்கும் போது கசக்கத்தான் செய்யும்

எங்களுக்கு அப்படியல்ல அன்னிய நாட்டில், பல மொழிக் கலாசாரத்தில் வாழும் எங்களுக்கு எப்பவாவது தாயின் அரவணைப்பு கிடைக்கும் போது அதில் அலாதி சுவையிருப்பதாக நம்புகிறோம். தமிழ் நிகழ்ச்சியைத் தேடி கூட்டம் கூடுகிறது. ஊருக்குச் சென்றால் தவறாமல் தமிழ்ப் புத்தகம் வாங்கி வருகிறோம். புதிய தமிழர்களை பார்க்கும் போது புது உறவு கிடைத்ததாகக் கொண்டாடுகிறோம். தமிழ் வானொலி வருகிறது என்று சந்தோஷப்படுகிறோம், தமிழ் பாடல் கேட்டு ஆனந்தத்தில் திளைக்கிறோம். நடுநடுவே பேச ஆரம்பித்துவிட்டார்கள் அதில் தமிழை எங்கே என்று தேடுவதாக உள்ளது! ஏன் இப்படி? யார் இந்த கலாசாரத்தை உருவாக்கியது? சக்தி FM இப்படி பாடாவதியான நிகழ்ச்சி நடத்தி காணாமலே போய்விட்டார்கள். சென்னையில் தருவது போன்ற நிகழ்ச்சியை இங்கு தர வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, இங்குள்ளவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு, அணுகுமுறைக்கேற்றவாறு, தேடலுக்கேற்றவாறு நிகழ்ச்சியை மாற்றிக் கொள்ள முனைவார்களா? எங்களைப் புரிந்துக் கொள்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம் அல்லது Hello கூடிய சீக்கிரத்தில் Bye Bye சொல்லிவிடும்.

ஒரு வெற்றி விழாவும் சில பின்னணிகளும்..

அமீரகத் தமிழ் மன்றத்தின் விழாக்களைப் பற்றி எழுத வேண்டுமென்றாலே நான் மட்டுமல்ல எங்கள் அமைப்பின் தலைவர் ஆசிப்பும் கூட நம் குழந்தையைப் பற்றி நாமே கூறிக் கொள்வது சரியல்ல என்று எண்ணியே பதியப்பட வேண்டிய பகிரப்பட வேண்டிய விஷயங்கள் பல விட்டுப்போயுள்ளது.

வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் செய்து பார் வரிசையில் விழாக்களை நடத்திப்பார் என்பதையும் சேர்க்க வேண்டிய கட்டாயத்தின் அவசியத்தை உணர்ந்தேயிருப்பார்கள் அமீரகத்தின் தமிழ் அமைப்புகள்.

அபுதாபி பாரதி நட்புக்காக அமைப்பும் அமீரகத் தமிழ் மன்றமும் இணைந்து கோபிநாத் அவர்களை அழைத்து இரு தினங்கள் நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டிருந்தோம். பத்தாம் ஆண்டு விழா என்பதால் பலமணி நேரம் நிறைவான நிகழ்ச்சி தர வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்தாலும் அபுதாபியில் வியாழக்கிழமைகளில் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பேயில்லை என்பதையறிந்து கோபிநாத் வந்தால் போதும் பத்தாம் ஆண்டுவிழா சிறப்பு பெற்றுவிடுமென்ற நம்பிக்கையில் வியாழன் நிகழ்ச்சி நடத்த ஒப்புக் கொண்டு அரும்பாடுபட்டு அரங்கத்தையும் அமர்த்தினோம். ஒவ்வொரு அரங்கத்தைக் கேட்கும் போதும் அந்த தேதியில் கிடைக்கவில்லை என்று செய்தி வரும் போது மிகவும் சோர்வாகியது மனது. சுழற்றாத எண்ணுமில்லை, மேயாத இணைய தளமுமில்லை என்ற அளவுக்கு எல்லா இடத்தில் தேடியும் எங்கள் தேவைகளோடு சரிவரவில்லை. இறுதியில் துபாய் பெண்கள் உயர்தொழில் நுட்பக் கல்லூரி வளாக அரங்கம் முடிவானது. எல்லா அரங்கமும் தட்டிக்கழிந்தது இது போன்ற அற்புதமான வசதிகள் கொண்ட அரங்கத்திற்காகவென்று நம்பினோம். இந்த அரங்கம் எங்களுக்குக் கிடைத்ததே எங்களுக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக இருந்தது. இதுவரை இங்கே எந்தத் தமிழ் நிகழ்ச்சியும் நடைபெற்றதே இல்லை. எங்கள் பத்தாம் ஆண்டுவிழாவே முதல் தமிழ் நிகழ்ச்சி என்பதோடு அமீரகத்திற்கு முதல் முறையாக கோபிநாத் என்ற நிறைவான இன்பத்தில் திளைத்திருந்த வேளையில், `நீயா நானா போன்ற ஒரு ஆரோக்கிய விவாத மேடையில் பங்குபெற விருப்பமா` என்ற அறிவிப்பை பரவலாக வலம்வர செய்து மக்கள் உற்சாகமாக பெயர்கள் தந்துக் கொண்டிருந்த தருணத்தில்தான் விஜய் டி.வி.யில் `நீயா நானா` பகுதியில் ஒரு சர்ச்சைக்குரிய தலைப்பின் பிரச்சனை பீறிட்டது.

கோபிநாத் இங்கு வந்துவிடுவாரா என்ற சவால்கள், கோபிநாத் எங்கே வரப்போகிறார் என்ற ஏளனங்கள், கண்டிப்பாக நிகழ்ச்சி நடக்கப் போவதில்லையென்ற எதிர்மறை துன்புறுத்தல்கள் எங்களைத் துரத்தியது. என்னவானாலும் சரி கோபிநாத் வந்தே ஆக வேண்டுமென்ற ஆதங்கம் மேலோங்கியது.

எதிர்மறையான செய்திகளும், சிலரின் பொறாமை சூழ்ச்சியிலும் குழப்பித்திற்குள்ளான அபுதாபி அமைப்பு அதன் விளைவாக எங்களுடன் இணைந்து செயல்படவிருப்பதிலிருந்து பின்வாங்கியது. கோபிநாத்தை நாங்கள் நேரடியாகத் தொடர்பு கொண்ட போது 18 ஆம் தேதிக்கு அவருக்கு படப்பிடிப்பிடிப்பு இருப்பதால் வரவியலாது என்ற செய்தி எங்களை நொறுங்க வைத்தது. ’அடுத்து என்ன?’ என்ற போது எத்தனை நாட்கள் காத்திருந்தாலும் பரவாயில்லை ஆனால் நம் ஆண்டுவிழா கோபியோடுதான் என்பதில் உறுதியாக இருந்தோம். வெவ்வேறு தினங்களின் சாத்தியக்கூறுகளையும் மற்ற விருந்தினர்களின் வசதிகளையும் சரிப்பார்த்திருந்த போது குறித்த தேதியில் நிகழ்ச்சி நடைபெற வேண்டுமென்ற என் பிராத்தனை வீண் போகவில்லை. பிராத்தனையின் பலனாக 18 ஆம் தேதியிருந்த படப்பிடிப்பு அவரே ஒத்திவைத்து ஒத்துழைத்தது முதல் மகிழ்ச்சி. எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று விழா வேலைகளில் மூழ்கினோம்.

எவ்வளவு விளம்பரம் செய்திருந்தாலும், விழா அமைப்பவரின் பின்புலம் சிறப்பானதாக இருந்தாலும், விழாவின் விருந்தினர்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் சரி நம் தமிழ் மக்கள் நேரத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்து சேர்வது என்பது இன்னும் குதிரைக் கொம்பாக உள்ள விஷயமே. அப்படியிருக்க அமீரகத் தமிழ் மன்றம் நடத்திய 10 ஆம் ஆண்டு விழா வியாழன் 18 பெப்ரவரி 2010 துபாய் உயர்தொழில்நுட்பக் கல்லூரியில் சரியான நேரத்திற்குத் தொடங்கியதே விழாவின் முதல் வெற்றி.

நிகழ்ச்சி தொய்வில்லாமல் நன்றாக அமைந்தது என்று பலதரப்பட்ட பார்வையாளர்களின் மடல்கள் வந்து குவிந்தாலும் மேடைக்குப் பின்னால் நடந்த இடையூறுகளை யாரும் அறிந்திருக்க முடியாதுதான். நாங்கள் செய்த முதல் தவறு நம் மக்களை நம்பி நுழைவுச் சீட்டை கிழிக்காமல் உள்ளே அனுமதித்தது. ஆயிரத்தி இருநூறு மக்கள் மட்டுமே கூட முடியும் என்பதால் அழைப்பிதழையும் விநியோகித்து நேரத்திற்கு வர முடியாவிட்டால் வாயில் கதவு பூட்டப்படும் என்று எச்சரிக்கை விடுத்தும் நிறைய பேரால் நேரத்திற்கு வர இயலவில்லை. காரணம் வியாழன் வேலைநாள் என்பதால் மக்கள் வரத் தாமதமானது. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மிகவும் சாமர்த்தியமாக சிலர் தம்முடைய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்து அழைப்பிதழ் இல்லாமலேயே அரங்கிற்கு வரச் செய்து, தம் நுழைவுச்சீட்டை மீண்டும் வெளியில் அனுப்பி அவர்களை உள்நுழையச் செய்த சூழ்ச்சி எங்களைப் பல பிரச்சனைகளுக்குள்ளாக்கியது. அழைப்பிதழ்கள் இருந்தும் பலர் வெளியேறியதும், பலர் நின்று கொண்டு நிகழ்ச்சி பார்க்க நேர்ந்ததும் இதனால்தான். நிறைந்த அரங்கத்தைத் தந்திருந்தாலும் இதனை முதன்மைக் குறையாகவே கருதுகிறோம்.

முக்கிய பிரமுகர்களுக்கு வேறு நிறத்தில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தாலும் அதில் இருக்கை வரிசைகள் குறிக்கப்பட்டிருந்ததை யாருமே பொருட்படுத்தாமல் தானே அதிபதி என்பதாக முதல் வரிசையில் உட்கார்ந்ததால் எங்கள் புரவலர்களும் நிற்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளானார்கள். ஒரு நிகழ்ச்சி நடக்கப் பொருளாதாரம் மிகவும் முக்கியமானது. அந்தப் பொருளை தந்து உதவிய புரவலர்களுக்கு முதல் வரிசையை தந்து கவுரவிப்பதுதானே நியாயம்? அந்த வகையான மரியாதையைக் கூட செய்ய முடியாமலாகிவிட்டது சிலரின் ஒத்துழைப்பில்லாமல் போனதால். தன்னார்வக் குழு அமைத்து இருக்கை சரிப்பார்த்து அமர வைக்க வேண்டிய சிலரே தம் அறை நண்பர்களை முன்னிருக்கையில் உட்கார வைத்து வேடிக்கை பார்த்த நிகழ்வு கூட நம் விழாவில்தான் முதன்முறையாக நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். எப்படித்தான் நம் மக்களால் இப்படி இருக்க முடிகிறது என்று யோசிக்கக் கூட முடியவில்லை.

நாம் ஒரு விழாவிற்குப் போவோம் எவ்வளவு பெரிய சிறப்பு விருந்தினர் வந்திருந்தாலும் மேடையில் அவர் வரும்போது பார்த்துக் கொள்வோமே தவிர எப்படியாவது முந்தியடித்துக் கொண்டு மேடையேறி அவர் அருகே நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியதே இல்லை. நான் என்னைப் போலவே மற்றவர்களையும் எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் சில அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களே பின் வழியாக மேடைக்கு வந்து பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு நம்மவர்கள் மேடை நிர்வாகத்தைச் சரியாக கவனித்துள்ளார்கள். மேடையில் விலை மதிப்புள்ள பொருட்களிருக்கும் அது தவறுதலாக களவுப் போய்விட்டால் யாரைச் சந்தேகிப்பது? இந்த பொது அறிவு கூட இல்லாமல் எப்படித்தான் சிலரால் செயல்பட முடிகிறதென்றே புரியவில்லை. நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களை அணுகி உத்தரவு கேட்டல்லவா பின் மேடைக்கு வர வேண்டும்? யார் கொடுத்தார்களோ இவர்களுக்கு அந்த தைரியத்தை.

இவர்கள் இப்படியென்றால் விழாவிற்கு ஒரு வாரத்திலிருந்து ஏன் விழாநாளன்று கூட நுழைவுச் சீட்டுக் கேட்டு மிரட்டல்கள். சொன்னால் நம்பமாட்டீர்கள் நுழைவுச்சீட்டு இந்த இடத்தில் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று பலவாறு விளம்பரப்படுத்தி ஒரு வாரத்திற்கு முன்பே நுழைவுச் சீட்டுகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டு விட்டது. எல்லாம் முடிந்த பிறகு மிகவும் தாமதமாக தனக்கு எப்படியும் கிடைத்துவிடுமென்ற எண்ணத்தில் வாங்காமல் விட்டுவிட்டு நான் இன்னார், நான் இந்த நிறுவனத்தின் மேலாளர் ’எனக்கு நுழைவுச்சீட்டு தராமல் எப்படி விழா நடக்க முடியும்’ என்ற தொனியில் மிரட்டல்களையும் பொறுத்துக் கொண்டோம். தெரியாதவர்களிடமும் இனிமையாகப் பேசி நுழைவுச்சீட்டு முடிந்துவிட்டது என்று சொன்னாலும் மற்றவர்களின் சூழ்நிலையோ பிரச்சனையோ அறியாமல் அதட்டுவதும், ’என்ன முகத்தில் அறைந்தாற் போல் தொலைப்பேசியை அவர் துண்டிக்கிறார் நான் யார் தெரியுமா?’ என்ற வண்ணம் புகார் எழுப்பியவர்களையும் இந்த இடத்தில் நினைவுகூராமல் இருக்க முடியவில்லை. விழா நடப்பதே இவர்களைக் கொண்டு நிறுத்தத்தான் என்று எப்படி இவர்களால் நம்பமுடிகிறது. இந்த ஆதிக்கப் போக்கோடு இருப்பவர்கள் எப்போதுதான் மாறுவார்கள்?

இதாவது பரவாயில்லை. கட்டுப்பாடு என்ற விசயம் மருந்துக்குக் கூட நம் மக்களிடையேயில்லை. அரங்கிற்குள் தண்ணீரோ பிற தின்பண்டங்களோ கொண்டு வரக்கூடதென்று அழைப்பிதழில் அச்சிட்டிருந்தும் ஏமாற்றி எடுத்துச் செல்வதை சாமர்த்தியமாகவே நினைக்கிறார்கள் அவர்கள். நிகழ்ச்சி முடிந்ததும் அரங்கம் முழுக்க தண்ணீர் பாட்டில்கள். மீண்டும் ஒரு தமிழ் நிகழ்ச்சிக்கு அரங்கத்தை வழங்க நிர்வாகம் யோசிக்காமல் என்ன செய்யும்? வெளியில் உணவகத்திலும் கூட இதே நிலைதான். ஆயிரம் குப்பைக் கூடைகள் வைத்திருந்தும் தரை முழுக்க தேநீர் கோப்பைகளை விசிறியடித்து நமது பண்பாட்டைக் காப்பாற்றினார்கள் தமிழர்கள். இதனால் எனக்கென்ன நஷ்டம் என்ற நினைப்பிருக்கிறதே தவிர இம்மாதிரியான விழாக்களை எத்தனை சிரமப்பட்டு நடத்துகிறார்கள் என்பது போன்ற உணர்வு துளியும் இருப்பதாகத் தெரியவில்லை.

எத்தனை மனக் கசப்புகள் இருந்தாலும் ஓய்வில்லாமல் பலவகை விழா வேலையால் உடல் சோர்ந்திருந்தாலும், விழாவின் வெற்றிக் களிப்பிலும் மக்களின் நம்பிக்கையான வார்த்தைகளிலும் பாராட்டுதல்களிலும் கிடைக்கும் உற்சாகம் எல்லாவற்றையும் மறக்கச் செய்து நம்மை புதுப் பொலிவோடு நம்முடைய அடுத்த விழாவை நோக்கி விரையச் செய்கிறது...

இதையும் பாருங்கள்:
http://kusumbuonly.blogspot.com/2010/02/blog-post_23.html

மற்ற படங்களையும் காணொளியையும் பார்க்க எங்கள் முகப்புத்தக பக்கத்தில் இணைந்துக் கொள்ளுங்கள்: http://www.facebook.com/ameeraga.thamiz.mandram

தமிழ் இணையச் செய்தித் தளங்களில் எங்களது செய்தி:

http://sangamamlive.in/index.php?/content/view/7043/1/

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2010/uae-tamil-mandram-celeberates-10th.html

http://www.tamilsaral.com/news%3Fid%3D3567.do

http://www.thinnai.com/?module=displaystory&story_id=81002201&format=html

விழா செய்தி ஆங்கிலத்திலும்:

http://www.prlog.org/10544127-10th-anniversary-of-ameeraga-thamiz-mandram-tamil-association.html

http://www.pressreleasepoint.com/ameeraga-thamiz-mandram039s-10th-anniversary-celebration

நம்மைப் போல் ஒருவன்


இந்தியாவில் பல வகையான தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்தே உள்ளன ஆனால் நம்மில் பலர் அதனை அந்தக் காலகட்டத்தின் சூடான செய்தியாக மட்டுமே பார்க்கின்றோம். அதன் பிறகு யாரும் அந்தச் செய்தியைப் பின் தொடர்ந்து செல்வதில்லை. அவ்வகையான குற்றங்களைப் பல வருடங்களாக சல்லடைப் போட்டு அலசி வடிகட்டி தீர்ப்பு வரும் போது செத்தவர்களைப் புதைத்த இடத்தில் புல்லும் முளைத்து அதனை மாடும் தின்று சாணியும் போட்டு அள்ளியிருப்பார்கள்.

1999ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கந்தகாருக்குக் கடத்தப்பட்ட நிகழ்வு, நம் நாட்டின் நாடாளுமன்றத் தாக்குதல், மும்பாய் குண்டுவெடிப்பு சம்பவங்கள், கோவை குண்டுவெடிப்பு அதிர்வு, மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல், குஜராத் வன்முறை இப்படி நாம் கடந்து போன தீவிரவாத செயல்களை நாம் மறந்தே விட்டோம். ”மறதி ஒரு தேசிய வியாதியாகிவிட்டது” என்ற குற்றச்சாட்டை பிரதானப்படுத்தி, தீவிரவாதத்திற்கு தீவிரவாதமே தீர்வென்ற சீற்றத்துடன் கிளம்பிய என்னைப் போல் உங்களைப் போல் ஒரு பொதுமக்களில் ஒருவனே ‘உன்னைப் போல் ஒருவன்’.

இந்தியாவில் நடக்கும் தீவிரவாதத்தைத் தமிழ் ஊடகம் தள்ளி நின்றே வேடிக்கை பார்க்கும். தனக்கும் இந்தியாவிற்கும் சம்பந்தமே இல்லாதது போல் தமிழ்நாடு தனி நாடு போல அது ஒரு அமைதிப்பூங்கா என்று சொல்லிக் கொண்டு அந்தத் தீவிரவாத நிகழ்வில் எத்தனை தமிழர்கள் உயிரிழந்தார்கள் என்று மட்டுமே கணக்கில் கொள்ளும் என்ற உண்மையைப் போட்டு உடைக்கிறது ‘உன்னைப் போல் ஒருவன்’. இது என்ன பெரிய விஷயம் நம் தமிழ் சகோதரர்கள் கோடிக் கணக்கில் ஈழத்தில் உயிரிழந்த போதே நீலிக் கண்ணீரை மட்டுமே வடிக்க முடிந்த நமக்கு இதெல்லாம் சகஜம்தானே?

காவல்துறையின் கடமையில் மூக்கை நுழைக்கும் அரசியல்வாதிகளைக் குறித்தும், அதனால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும் வெளிச்சம் போடும் இயக்குனர் சக்ரி டொலெட்டிக்கு இது தனது முதல் படம் என்று சொல்லிக் கொள்ள முடியாத அளவுக்கு கமலின் தலையீடுகளே அதிகம் வெளிப்படுகிறது.

மிகவும் கூர்மையான வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவதாக வசனங்கள் தொணித்தாலும் மிகவும் நெருடலாக இருப்பது ஆங்கிலக் கலப்பு. நிகழ்வில் ஆங்கிலத்தையே உயர்த்தி பிடிக்கும் தமிழ்நாட்டவர்களை யதார்த்தமாகக் காட்ட முயன்றிருந்தாலும் பாமரர்களுக்கும் போய் சேர வேண்டுமென்ற எண்ணமில்லாத வசனங்களை வடித்திருக்கிறார் இரா. முருகன். ஒரு காட்சியில் மலையாளியான கமிஷனர் மாரார் (மோகன்லால்) அதிகாரி சேதுவுக்கு (பரத்ரெட்டி) தமிழ் கற்றுத் தருவதாக காட்டும் போது கூடவா இடரவில்லை இவர்களுக்கு? ’பைனரியில்’ சொல் என்று கேட்கப்படுவது எத்தனை பேருக்குப் புரியப் போகுதோ! தலைமை செகரட்டரியாக வரும் லக்ஷ்மி தஸ்புஸ் என்று சரளமாக ஆங்கிலத்தில் கமிஷ்னரிடம் பேசும் காட்சியும் அதிலிருக்கும் மெல்லிய நகைச்சுவையும் எத்தனை பேர் இரசிக்கப் போகிறார்களோ தெரியவில்லை. திரையரங்கிற்கு அதிக அளவில் சென்று படம் பார்ப்பது மாணவர்கள்தான், அவர்களே ‘என்னப்பா படம் ஒரே பீட்டரா’ இருக்கு என்று சொல்லிவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

என்னதான் எந்த மதத்திற்கும் ஆதரவில்லாதவராகவும், பெயர்களில் கூட கவனமாகக் கையாண்டிருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், ’முஜே ஃபக்கர் ஹே’ (நான் பெருமைப்படுகிறேன்) என்று மார்தட்டிக் கொள்ளும் தீவிரவாதிகளை முஸ்லிமாகவும் தனது மார்க்கத்திற்காக அப்படி செய்வதாகவும் தேவையற்ற வசனங்களைப் புகுத்தியவர் ஒரு ஹிந்து தீவிரவாதி மட்டும் மிகவும் அப்பாவியாக ‘முஜே பக்கர் நஹி ஹே’ (எனக்குப் பெருமை இல்லை) என்று தான் அறியாமல் செய்த தவறாக ஒப்புதல் அளிப்பது இவர்களின் முகமூடியைக் கிழிக்கிறது. நான் அசலான ‘எ வெட்னெஸ்டே’ பார்க்காததால் கிழிந்தது இவர்கள் முகமூடியா அல்லது அசலிலும் அப்படித்தான் வருமா என்பது தெரியவில்லை.

குஜராத் கலவரத்தில் ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை வெட்டி சிசுவை வெளியே வீசிய கொடூரத்தை இரண்டு சொட்டு கண்ணீரால் நிரப்புகிறார் கமல். அதுவும் அந்தக் காட்சி ஏதோ இந்த படத்தில் கமலின் நடிப்புக்கு பஞ்சம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஒரு சொருகல் போல் தெரிகிறதே தவிர மனதை அழுத்தும் உணர்ச்சிப்பூர்வமான காட்சியாகப்படவில்லை.

என்னதான் நேர்மையானவனாக இருந்தாலும் அவன் முஸ்லிமாக இருந்துவிட்டால் அவர் நேர்மையும் சந்தேகத்திற்குட்படுகிறது, கேள்விக்குள்ளாகிறது என்பதை அழகாக நிரூபிக்கும் யதார்த்த காட்சி - கமிஷ்னர் மாரார் அதிகாரி ஆரிஃப் மீது ஒரு கண் இருக்கட்டும் என்று சொல்வது. ஆரிஃபாக வரும் கணேஷ் வெங்கட்ராமனை ‘அபியும் நானும்’ படத்திலேயே மிகவும் பிடித்துப் போனது எனக்கு. அதிகாரிக்கு ஏற்ற உடலமைப்பு, தெளிவான துடிப்பான முகம். கொடுத்த பாத்திரத்தில் அம்சமாகப் பொருந்தியிருக்கிறார்கள் இவரும் சேதுவாக வரும் பரத்ரெட்டியும். இவர் கதாபாத்திரம் மட்டுமல்லாது படத்தில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களும் குறிப்பாக
* தலைமை செக்ரட்டரியாக வரும் லக்ஷ்மி அந்த கிழடுதட்டிய முகத்தையும் கிளோஸப்பில் காட்டும் போது பயமுறுத்தாதவர்,
* நம் பதிவுலகத்திற்கு மிகவும் தேவைப்படும் மின்னஞ்சல் திருடர் (hacker) ஆனந்த் - இவர் சிறு வயதில் ’மே மாதம்’, ’அஞ்சலி’ படங்களில் நடித்தவர் ஆள் உயரமாகியிருக்கிறார் தவிர முகம் இன்னும் அதே குழந்தை முகமாக அவரை காட்டிக் கொடுக்கிறது
* நத்தாஷா ராஜ்குமாராக வரும் அனுஜா ஐயர் - துணிச்சலான பெண்மணியென்று காட்டவா சிகரெட்டை பற்ற வைத்திருக்கிறார்கள்? கொடுமை.
இப்படியாக ஒவ்வொருவரும் தன் பங்கை மிக அற்புதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.

கமல்ஹாசன்- மோகன்லால் என்ற இரண்டு இமயத்தின் நடிப்பை விவரிக்கத் தேவையில்லை. இருவரும் கடைசிக் காட்சியில் கைக்குலுக்கிக் கொள்வது ஒருவருக்கொருவர் நடிப்புக்கு சபாஷ் சொல்வதாகத் தோன்றியது. ’டைட்டில் கார்டில்’ இருவரின் பெயர்களுக்கு முன்பும் எந்த அடைமொழியும் வராதது பெரிய ஆச்சர்யம்.

படத்தில் மறக்க முடியாத ஒன்று அந்த முதல் காட்சி. விஜய் இரசிகர்கள் கண்டிப்பாக அதிருப்தி அடைய வைக்கும் அந்தக் காட்சியை விஜ்யின் நண்பர் ஸ்ரீமன் செய்தது மிகவும் சிறப்பு.

படத்தின் பலம் காட்சியமைப்புகள் அதிலும் மனோஜ் சோனியின் கேமிரா தேவையானதை மட்டும் கச்சிதமாக படம்பிடித்திருக்கிறது. அடுத்து என்னவென்ற எதிர்பார்ப்பை தூண்டும் விறுவிறுப்பை கொண்டு வரவே தேவையில்லாதவற்றை நெருக்கமாக நறுக்கிவிட்டிருக்கிறார் ராமேஷ்வர் பகத். காவல்துறையினரின் தினசரி நிஜ வாழ்வில் நடக்கும் விஷயங்கள், அதில் ஊடகங்கள் ஆதாயம் தேடும் பாங்கு, ஆட்சித்துறையின் குடைச்சல் என்ற கலவை, நகலாக இருந்தாலும் அசத்தியிருக்கிறார்கள். பாடல்கள் இல்லாமல் அழகான பின்னிசையில் விளையாடியிருக்கும் ஸ்ருதிஹாசனுக்கு ஒரு ‘பேஷ்’.

இந்தப் படத்தின் வெளியீட்டை இரத்து செய்ய வேண்டுமென்ற ’பிரமிட் சாய்மீரா' நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்து, மூன்றரை கோடி வங்கி உத்தரவாதம் அல்லது சொத்து ஆவணம் தாக்கல் என்ற அடிப்படையில் வலியுடன் பிரசவித்த ‘உன்னைப் போல் ஒருவன்’ காட்டமான விஷயத்தை மிகவும் மென்மையாக்கி நமக்குள் செலுத்தும் முயற்சியை மட்டும் மேற்கொண்டிருந்தால் சர்ச்சைகளிலிருந்து தப்பித்திருக்கலாம்.

ஒரு திரைப்படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்க விரும்புபவர்கள் சண்டைக்காட்சியில்லை, பாடல்களில்லை என்று புலம்பினாலும் வசனங்களில் நகைச்சுவை கலந்து காட்சியில் விறுவிறுப்பு சேர்த்திருப்பதால் பொழுதுபோக்கு பிரதியாகவும் எடுத்துக் கொள்ளலாம். ‘எ வெட்னெஸ்டே’ பார்க்காமல் இந்தப் படத்தை பார்ப்பவர்களுக்குக் கண்டிப்பாகப் படம் பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது. நானும் ‘எ வெட்னெஸ்டே’ பார்க்கவில்லை, சில கசப்புகளை மீறி எனக்கும் படம் பிடித்திருக்கிறது. இன்னும் நிறைய குறுகிய கால அளவு படங்கள் வந்து நம் நேரத்தை காப்பாற்ற வேண்டும்.

விளையாட்டாக விவசாயம்


முகப்புத்தகத்தில் ஹாஜா மன்சூர் என்பவர் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். என் நண்பர் அவருக்கும் நண்பரென்பதால் சேர்த்துக் கொண்டேன். தினம் தினம் ஒரு ஆப்பிள் மரம், ஒரு ஆரஞ்சு மரம் என்று பரிசு வந்த வண்ணமிருந்தது. நானும் பரிசை வாங்காமல் தவிர்த்துக் கொண்டிருந்தேன் அது என்ன ஏது என்று தெரியாமலேயே. அதன் பிறகு தோழி சுவாதியும் பரிசு அனுப்பினார்கள். கோ மாதாவை அனுப்பியிருக்கிறேன் மங்களகரமா தொடங்குங்க என்றார்கள். என்னடா இதுன்னு ஒரே குழப்பமா இருந்தது. வரும் பரிசுகளையெல்லாம் கல்லாவில் போட்டுக்கிட்டே இருந்தேன். நண்பர் சுபைரும் என்னை பக்கத்து தோட்டக்காரனா ஆக்கிக்கோங்கன்னு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். என் அக்கா மகன் வேறு ஒரு கோழி அனுப்பி வைத்தான். ஆஹா இதுக்கு மேல தாங்காது எல்லோரும் பரிசு அனுப்பிக்கிட்டே இருக்காங்கன்னா ஏதாவது விஷயமிருக்குமென்று போய் பார்த்தேன். பார்த்த பிறகுதான் தெரிந்தது அது ஒரு விவசாய விளையாட்டுன்னு. பொதுவா எனக்கு ஏதாவது ஒரு கணினி விளையாட்டு பிடிச்சிருந்தா விளையாடி விளையாடி கொஞ்ச நாள் பைத்தியமா இருப்பேன். அப்புறம் அந்த சீசன் முடிந்த பிறகு அடுத்த கணினி விளையாட்டு அல்லது வேறு பொழுதுபோக்குன்னு தொடரும். பொழுதை போக்கும் விதம் நேரமில்லாவிட்டாலும் மூச்சு முட்டும் அளவுக்கு அலுவல் வேலையிருக்கும் நேரம் எரிச்சல் ததும்பும் போது இளைப்பாறும் நிழல் ஒரு வகையான மாற்றம்தான் நமக்கு இந்த முகப்புத்தம் விளையாட்டெல்லாம்.

நான் விவசாய விளையாட்டுன்னு குறிப்பிட்டது ‘ஃபார்ம் வைல்’ (Farm Ville) பற்றி தான். முகப்புத்தகத்தில் இருப்பவர்கள் எனக்கு தெரிந்து அத்தனை பேரும் இதனை ருசிப்பார்க்காமல் இருந்திருக்க மாட்டார்கள். பொதுவாக கணினி விளையாட்டு நம்மை மீண்டும் மீண்டும் விளையாட தூண்டும் நம் மனதில் குறிக்கும் இலக்கை எட்டும் வரை. சில வகை விளையாட்டின் மீது கிறுக்காகவே மாறுவோம். அப்படித்தான் நான் ஸ்கிராம்பிலில் கிடந்தேன். தூக்கத்தில் கூட இந்த வார்த்தை அந்த வார்த்தை என்று நினைத்து கோட்டை கட்டுவேன். கை பரபரக்கும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாட தூண்டும், பொறுமை இழக்கவும் செய்யும் ஆனால் இந்த விவசாய விளையாட்டு மிகவும் மாறுபட்டது, நமக்கு பொறுமையையும் கற்பிக்கிறது என்றால் மிகையாகாது. நமக்கு தந்த நிலத்தில் சாகுபடி செய்ய வேண்டும், விதைக்க வேண்டும். விதை தேர்வு நம்முடையதே. ஒவ்வொரு விதைக்கும் கால அவகாசமுண்டு. விதையை வாங்கும் போது பணம் செலுத்த வேண்டும். மகசூலை உரிய நேரத்தில் அறுவடை செய்யவேண்டும் யாருடைய உத்தரவிற்கும் காத்திராமல், இல்லாவிட்டால் காய்ந்துவிடும் என்று நம் அரசாங்கத்திற்கு தெரியாத விஷயங்களெல்லாம் கணினி விளையாட்டுக்கு கூட தெரிந்திருக்கிறது. ஓய்வு நேரத்தில் பக்கத்து தோட்டத்தை பார்த்து காக்கா விரட்டினால், குப்பையள்ளிப் போட்டால், புல்லுருவி நீக்கினால் நமக்கு பொற்காசு வழங்கப்படுகிறது. நல்ல மகசூல் (மகசூல் என்பது ஒரு அரபி வார்த்தை) கிடைத்தால் அதற்கும் பாராட்டி பொற்காசுகள். இந்த நடைமுறை போல உண்மையாக இருந்தால் நம் நாட்டு விவசாயிகளின் பிரச்சனை தீர்ந்து நாடும் நலம் பெருமில்லையா?

இந்த விளையாட்டை வெறும் விளையாட்டாகப் பார்க்க முடிவதில்லை. ஒவ்வொரு விதைநெல்லுக்கும் நமக்கு கொடுக்கப்படும் குறுகியக் காலகட்டத்தில் காத்திருக்க கடினமாக இருக்கும் நேரத்தில், கண்டிப்பாக விளையாடும் ஒவ்வொருவரும் விவசாயிகளின் வாழ்க்கையை பற்றியும், துயரங்களை பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் கொஞ்சமாவது யோசிப்பார்கள் கவலை கொள்வார்கள் என்பது உறுதி. விளையாட்டில் கூட விவசாய விளைபொருட்களில் விலை அதிகமாகவே இருக்கிறது.

உண்மையில் விவசாய விளைபொருட்களின் தேவை எப்போதுமிருக்க அதன் விலை உயர்வுக்கு காரணமென்ன? இவர்கள் விளைச்சலுக்கு ஏன் வேறு நபர் விலை நிர்ணயிக்கிறார்கள்? பருத்தி பயிரீட்டின் நஷ்டத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது நமக்கெல்லாம் வெறும் செய்தியாகவே இருந்திருக்கிறது. இவர்களைப் பற்றி அக்கறை கொள்வதுதான் யார்? விவசாயிகளுக்கு விளையவில்லையென்றாலும் இழப்பு, அதிக அளவில் எல்லோருக்கும் ஒரே விதமாக அதிகமாக விளைந்துவிட்டாலும் விலை சரிவு என்றாலும் பேரிழப்பு. அவர்கள் எதிர்பார்த்தபடி அவர்கள் வாழ்க்கை அமைவதேயில்லை என்பது பெரிய சோகம். என் நண்பர் ஒருவர் உர மருந்து வியாபாரியாக இருந்து பிறகு அந்தத் தொழிலின் துரோகத்தை உணர்ந்து கைவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். எப்படியென்றால் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதைதான் உர வியாபாரிகளுடையதாம் நோயையும் உண்டாக்கி மருந்தையும் விற்பனை செய்வார்களாம். என்ன கொடுமை!

கொஞ்ச நாட்களுக்கு முன்பு வந்த மடலில் பூச்சிக் கொல்லி மருந்தை அந்த பகுதி மக்கள் சுவாசிப்பதால் ஏற்படும் அபாயங்களை விளக்கியிருந்தது. மருந்தை சுவாசிப்பதனாலேயே பிரச்சனையென்றால் அந்த விளைச்சலை சாப்பிடுபவர்களுக்கு என்ன நேரும்? வெளிநாட்டில் செய்ய முடியாத அபாய ஆராய்ச்சிகளை அந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்து தந்திரமாக நமது நாட்டிற்கு யோசனைகளை அனுப்பி சோதனைகளை மேற்கொள்கிறார்கள். நம் மக்கள் உயிர் வழக்கம் போல் அவர்களுக்கு வெறும் மயிர் என்பதால்.

விவசாயிகளும் கூட்டுறவு சங்கமென்றெல்லாம் வைத்திருந்தாலும் அதன் மூலம் பால் பிரச்சனை ஓய்ந்ததே தவிர கரும்பு சாகுபடியாளர்களோ, பருத்தி பயிரீட்டாளரோ பயன் பெறவில்லை. இந்த விஷயத்தையெல்லாம் எல்லா வகையான ஊடகங்களும் கட்டம் கட்டி காசு பார்த்து நகர்ந்துவிட்டதே தவிர தீர்வை எதிர்பார்த்து யாரும் செயல்படுவதில்லை என்பது துரதிஷ்டமே. நான் மட்டும் எழுதி கிழித்து ஏதெனும் தீர்வு வந்துவிட போகிறதா என்ன? நம்முடைய பல வகையான கையாலாகாத்தனத்தில் மற்றொன்று.

ஒருவேளை நம்ம அரசியல்வாதிங்க இந்த விவசாய விளையாட்டு விளையாடினால் திருந்துவார்களோ? ம்ஹும் விளையாட்டையே மாற்றியமைக்க உத்தரவிட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. சரி, நீங்க Farm Ville விளையாடினால் மறக்காமல் எனக்கு பரிசு அனுப்பிவிடுங்கள்.

Blog Widget by LinkWithin