Friday, December 22, 2023

ஆட்டிசம் என்னும் ஆற்றல்


 துபாய் 'நம்ம பசங்க' கிரிக்கெட் குழுமத்தின் நான்காம் ஆண்டு விழாவில் என்னையும் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அந்தக் குழுமத்தினர்க்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்நிகழ்விற்கு என்னை அழைத்ததைவிடப் பத்தொன்பது வயது ஃபஹீமை சிறப்பு விருந்தினராக அழைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் ஆற்றல் மிகுந்த ஆட்டிசம் ஆட்கொண்டவர். என்னைப் பொருத்தவரையில் ஆட்டிசம் நோயுமல்ல, குறைபாடுமல்ல, பாதிப்புமல்ல. நம் கண்ணோட்டைத்தைதான் மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர அவர்கள் வித்தியாசமானவர்கள் என்று தள்ளி வைக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. ஃபஹீம் 'சிட்டி ரோபோ' மாதிரி அவருக்குப் பிடித்த விஷயத்தைத் தந்தால் வருடிவிட்டு அதன் உட்பொருள் தருபவர். 


எந்தத் தேதியை சொன்னாலும் அந்த நாளின் கிழமையை 'அசால்டாக'ச் சொல்பவர். ஒரு நாட்டின் பெயரைச் சொன்னால், அந்த நாட்டில் இப்போது என்ன நேரம் என்று கணினியைவிடச் சரியாகக் கணக்குப் போட்டு உடனே சொல்வார். எல்லா நாட்டின் நாணயங்களைப் பற்றியும் அத்துப்படியாக வைத்திருப்பவர். இதற்காகப் பல விருதுகள் பெற்றவர். குறிப்பாகத் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஐன்ஸ்டீன் சாதனையாளர் விருது. இவருக்குக் கின்னஸ் சாதனை புரிய வேண்டுமென்று ஆசை. 


இதுவரை கின்னஸில் ஐந்தாயிரம் ஆண்டுகளின் தேதி- கிழமைகளே சாதனையாகி உள்ளதாம். இவருக்கோ பத்தாயிரம் ஆண்டுகளின் தேதி- கிழமை தெரியும். எப்போதும் ஆட்டிசம் ஆற்றலாளர்களை மேடை ஏற்றி அவர்களின் திறமைகளை மட்டுமே பறைசாற்றுவார்கள். ஆனால் இந்த மேடையில் ஃபஹீமின் கையால் கிரிக்கெட் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்குக் கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. அவரும் மகிழ்ச்சியாக ஒவ்வொருவருக்கும் அளித்தார், மகிழ்ந்தார். அவருடன் மேடையில் இருப்பதே எனக்குப் பெருமையாக இருந்தது. இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அனைவருக்கும் மிக்க நன்றி. நிறைவான விழா. அல்ஹம்துலில்லாஹ். விழாவில் நான் பேசிய காணொளியை இன்னொரு நாள் வலையேற்றி சுட்டியைத் தருகிறேன்.


ஃபஹீமின் ஆற்றலைப் பற்றி அவரே பெற்றோர்களிடம் சிறு வயதிலேயே தெரிவித்ததோடு, தன்னைச் சோதித்துப் பார்க்க சொல்லி இருக்கிறார். ஃபஹீமின் ஆற்றல் வெளியுலகத்திற்கு தெரிய உறுதுணையாக அவருடைய பெற்றோரும் சகோதரரும் மிகவும் பொறுமையாக, புரிதலுடன் அன்புடனும் ஃபஹீமை கையாளுகிறார்கள்.


ஃபஹீம் கின்னஸ் சாதனை புரிய யாராவது வழிகாட்ட முடியுமா?


 #austism #autismacceptance

Tuesday, October 03, 2023

ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி - என் பார்வையில்

 ஹிந்தி படங்கள் என்று வரும்போது நான் மிகவும் தேர்ந்தெடுத்த படங்களையே பார்ப்பேன். அதில் எனக்குச் சொல்லி வைத்தாற்போல்  ‘குச் குச் ஹோத்தா ஹை’, ‘கபி குஷி கபி கம்’, ‘கபி அல்விதா நா கெஹ்னா’, ‘மை நேம் இஸ் கான்’, ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’,  படங்களெல்லாம் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. வரிசைப்படுத்திய அத்தனையும் கரண் ஜோஹர் இயக்கிய படங்கள். அவர் இயக்கியதால் எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குப்பிடித்தப் படங்கள் அவர் இயக்கியவையாக அமைந்துவிட்டன. சமீபத்தில் அவர் இயக்கி வெளிவந்த ‘ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி’யின் ட்ரைலர் பெரிய தாக்கத்தைத் தராததால் நான் பார்க்காமலே இருந்தேன். என் மகள் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ‘ம்மா நீங்க கண்டிப்பா பார்க்க வேண்டும், your type movie’ என்றால். ஒரு வழியாக நெட்ஃப்லிக்ஸில் வெளியானதால் பார்த்தேன்…


உண்மையில் இது என் type movie தான். வணிகமயமான மசாலா படத்திலும் அழுத்தமான கருத்தைச் சொல்ல முடியும் என்பதை இந்தப் படம் நிரூபித்துள்ளது. பொழுதுபோக்கு அம்சத்திலும் எல்லா லட்சணங்களும் பொருந்தி வந்தாற்போல் தோன்றியது. அதாவது, நகைச்சுவையான ரொமாண்டிக் படத்தில் உறவுச் சிக்கல்களை மையமாக வைத்து, உணர்வுகளையும் உணர்ச்சிவயமான காட்சிகளையும் ஒருங்கே சேர்த்து, வெவ்வேறு பின்னணியின் கலாச்சார இழைகள் பிணையும்போது ஏற்படும் சிக்கல்கள் என்று எல்லாம் சேர்ந்து மிகச் சிறப்பாக வந்துள்ளது. அதுவும் ரன்வீர்சிங் மற்றும் ஆலியா பட்டின் நடிப்பு மிக இயல்பாக இருந்தது.


ஆலியா பட், படத்திற்குப் படம் தன் திறமையை மேம்படுத்திக் கொண்டே செல்கிறார். ரன்வீர் சொல்லவே வேண்டாம் ஒவ்வொரு படத்திலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுபவர். இவர்தான் ’83’வில் கபில்தேவாக இருந்தவர் என்று இந்தப் படத்தை பார்த்தால் சொல்லவே முடியாதபடி ஒட்டுமொத்தமாக உருமாறியிருக்கிறார். ஷபானா ஆஸ்மி – தர்மேந்திராவின் காதல் காட்சிகள் உண்மையில் நெகிழ்ச்சியாக இருந்தது. கிழவன் – கிழவிக்கு என்ன காதல் காட்சி என்று குழம்ப வேண்டாம். அந்தக் காட்சிகளை பார்த்தால்தான் நான் சொல்வது புரியும்.


கதை என்னவோ பழைய சரக்குதான் ஆனால் அதைத் தாங்கிப்பிடிக்கும் கொள்கலன் புதியது. ராணியும் அவள் குடும்பத்தினரும் முற்போக்குவாதிகள். ராக்கியின் குடும்பத்தினர் பாரம்பரியத்தில் ஊறியவர்கள். முற்போக்கு மற்றும் பாரம்பரியத்திற்கான மோதலின் காரணமாக ராக்கியும் ராணியும் ஒவ்வொருவரும் மற்றவரின் வீட்டில் மூன்று மாதங்கள் கழிக்க முடிவு செய்து ஒப்புதல் பெற்று மனங்களை வெல்வதே முழுக்கதை. ஆனால் அதில் வரும் திரைக்கதைகள் மிகவும் சுவாரஸ்யமானவை, நகைச்சுவை மற்றும் மனித உறவுகளைக் காக்க உதவும் உணர்வுகளைத் தூவி சுவையைக் கூட்டியுள்ளார் கரண் ஜோஹர்.


பெண்களின் உள்ளாடையை வாங்க ராணியின் தாயாராக வரும் சுர்னி கங்குளி, ராக்கியை அழைத்துச் செல்ல, அவரோ இதையெல்லாம் பார்க்கவும் கூச்சப்படுவதாகச் சொல்ல, முற்போக்குவாதியானவர் ராக்கியிடம் ‘ஏன், இதை உன் பாட்டி, தாயார், சகோதரி எல்லாரும் அணிவார்கள்தானே?’ என்று கேள்வி எழுப்ப. அதற்கு அவர் ‘ஆம், நாங்கள் பெண்களுக்கு மரியாதை தருகிறோம், ஆகையால் அவர்கள் உள்ளாடைகளைத் தொடுவதோ உற்றுநோக்குவதோ இல்லை’ என்று பதிலளிப்பார். உடனே தாயார் ‘ஏன் காலம் காலமாகப் பெண்கள் ஆண்களின் உள்ளாடையைக் கூச்சப்படாமல் தொட்டு அழுக்குப்போகத் துவைக்கிறார்கள் ஆனால் உன்னால் பெண்ணின் 'ப்ரா’வைத் தொட முடியவில்லையா? அதற்கு வெட்கப்பட மாட்டீர்கள் அசிங்கமாக ‘சோலிக்கே பீச்சே கியா ஹே’ என்று பாடித் திரிவீர்கள், ஆனால் பெண்ணின் உள்ளாடையைக் கவர்ச்சிப் பொருளாக, அருவருப்பாக, விலக்கப்பட்டதாக அல்லது கூச்சத்தோடு பார்க்கவும் முடியாமல் போய்விடுகிறதா? பெண்களை ’மரியாதை’ என்ற போர்வையில் அந்நியப்படுத்தி ஒரு பீடத்தில் வைப்பதைவிட அவளும் உன்னைப் போல் சக உயிர்தான், உனக்குச் சமமானவள்தான்’ என்று இயல்பாக பேசிச் செல்லும் காட்சி பலருக்குப் பாடமாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். நம் வீட்டிலேயே பொதுவாகப் பெண் உள்ளாடையை மறைத்துக் காயப்போடுவதும், ’காய்ந்துவிட்டது அதனை மறைத்து எடுத்துச் செல்’ என்று சொல்லி வளர்க்கப்படுவதால்தான் இன்னும் ஆண்பிள்ளைகள் பெண்களை இனம்புரியாத வயதில் விசித்திரப் பொம்மைகளாகப் பார்க்கிறார்கள். அப்படியில்லாமல், சகஜமாக இயல்பாகப் பழகும்போதுதான் பெண்களை பால்பேதமில்லாமல் தவறாக பார்ப்பதிலிருந்து தடுக்க முடியும். பாலியல் பிரச்சனைகளும் குறையும்.


இந்தப் படத்தில் நிறைய ’ஸ்டீரியோ டைப்’ செய்திகளை சுக்குநூறாக உடைத்திருக்கிறார் திறமையான இயக்குநர். பாடிஷேமிங்கைப் பற்றியும், ஆங்கிலம் தெரியாததை எள்ளல் செய்வதையும், நம் வீட்டு வேலைகளைப்  பெண்களுக்கு என்று ஒதுக்காமல் இருபாலரும் சாதாரணமாக இயங்குவதையும், பிடித்த வேலையைச் செய்ய அல்லது திறமையை வெளிப்படுத்த பால்பேதம் தடையாக இருக்கக் கூடாது என்பதையும், இப்படிப் பல செய்திகளை உள்நிறுத்தி நகைச்சுவைக் கலந்த பொழுதுபோக்கு அம்சமான படமாக்கியுள்ளார். இதில் நடித்த ஒவ்வொருவரும் தனக்கான பணியை மிகச் சிறப்பாகவே செய்துள்ளனர். ஜெயபாரதி பாட்டியாக கர்ஜிப்பது, தோட்டா ராய் சௌத்ரியின் கத்தக் நடனம், வசனமே இல்லாத தர்மேந்திரா ‘குடும்பத்தை உடைத்துவிடாதே’ என்று எந்தப் பிரச்சனையானாலும் அனுசரித்துப் போ என்பதை அழுத்தமாகச் சொல்வது,  "நாங்கள் ஸ்டீயரிங் பிடிக்கலாம், ஆனால் எங்கள் குடும்பங்கள் பின்சீட் ஓட்டுனர்கள்" என்று மனதைத் தொடும் காட்சிகள் ஏராளம்.


பொதுவாக ஹிந்திப் படமென்றாலே வண்ணமயமாக இருக்கும் கவனித்திருக்கிறீர்களா? இந்தப் படம் மிதமிஞ்சிய வண்ணங்களுடன் ஒவ்வொரு ஃப்ரேமும் செதுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் (Cinematographer) நான் பார்த்து வளர்ந்த மனுஷ் நந்தன் என்பதில் எனக்கு அத்தனை மகிழ்ச்சி. காட்சியமைப்புகளும் கச்சிதம் என்பது போலவே இசையும். பிரீதம் சக்கரபர்த்தி பட்டயைத் தீட்டியுள்ளார். ‘ஹாய் ஜும்கா’ பாடல் படம் வரும் முன்பே சூப்பர் ஹிட்டாகி வைரல் ஆனது. மொத்தத்தில் படமொரு பொழுதுக்குப் பெட்டகம். அவசியம் பார்த்துவிட்டு, என்னோடு உடன்படுகிறீர்களா என்று சொல்லுங்கள்.


#raniaurrockykipremkahani #hindimovie

Thursday, March 30, 2023

பாலைவன பரமபதம்

 சமீபத்தில் நான் அபுதாபி சென்றிருந்தேன். அங்கு ஒரு பெண்மணி தன்னை அறிமுகம் செய்து கொண்டதோடு அவருடைய வணிக அட்டையைத் தந்தார். அதில் அவர் தையற்கல்வி கூடம் வைத்திருப்பதாக இருந்தது. உடனே இவர்தான் ‘பாலைவன பரமபதத்தில்’ வரும் திவ்யாவோ என்று யோசித்தேன். இது என் பிழையல்ல, கதாசிரியர் சிவசங்கரி வசந்த் எழுதிய புதினமான ‘பாலைவன பரமபதத்தில்’ பெரும்பாலான கதாபாத்திரங்கள் உண்மையானவை. அதனால் ஒருவரை அந்தக் கதாபாத்திரத்தையொத்த வணிகத்தைப் பார்க்கும்போது இவர்தான் அவர் என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. நானெல்லாம் முகத்திற்கு நேராகப் பேசுவதால் பல பிரச்சனைகளைச் சந்தித்திருக்கிறேன். என் இயல்பை எதற்காகவும் யாருக்காகவும் மாற்ற இயலாததால் என்னை நன்றாகத் தெரிந்தவர்கள் மட்டுமே என்னுடன் பயணிக்க முடிகிறது. என்னைவிடச் சிவசங்கரி வசந்த் ஒருபடி மேல் – தான் ஒருவரைப் பற்றி நினைப்பதையெல்லாம் அப்படியே கதையில் கொண்டு வந்திருக்கிறார். இதை வாசிக்கிறவர்கள் தன்னைப் பற்றிதான் எழுதியுள்ளார் என்று அறிந்து தங்களைத் திருத்திக் கொள்வார்களா என்ன?



’பாலைவன பரமபதம்’ இந்தத் தலைப்புக்கு ஏற்றாற்போல்தான் என் வாசிப்பும் இந்த நூல் பற்றிய என் அபிப்ராயமும் இருந்தது. முதலில் வாசிக்கத் தொடங்கும்போது எதையெடுத்தாலும், யாரைப் பற்றிச் சொன்னாலும் புகாராகவோ அங்கலாய்ப்பாகவோ இருந்ததாக உணர்ந்தேன். ’Gossip’ புதினமா என்றும் முதலில் தோன்றியது. அதன் பிறகு மெல்ல மெல்ல கொரோனா பற்றிய விஷயங்கள் உள் வந்த போதே சுவாரஸ்யம் கூடியது. சுவாரஸ்யமென்றால் நூலை கீழேயே வைக்க முடியாத ஆரவமென்றெல்லாமில்லை நிகழ்வுகளின் அடுக்குகளாகச் சம்பவங்களின் கோவையாகச் சிறப்பாக அமைந்துள்ளது இந்தப் புதினம். இந்த நூல் அபுதாபியின் கொரோனா காலத்தை அப்படியே ஆவணப்படுத்தியுள்ளது. அதனால் இது ஒரு முக்கியமான படைப்பு எனலாம். இதில் பெரும்பாலானவர்கள் பெயர் மாற்றப்பட்ட உண்மையான கதாபாத்திரங்கள். இதில் நண்பர்கள் கெளசர் மற்றும் பிர்தெளஸ் பாஷா இருவரின் சுயநலமில்லாத தன்னார்வ தொண்டுகளைப் பற்றிப் பறைசாற்றியிருப்பது மகிழ்ச்சியளித்தது. அவர்களின் பெயர் மாற்றாமல் அப்படியே தந்திருப்பது இன்னும் சிறப்பு. இந்த ஒமான் பெண்மணி விஷயத்தைப் பற்றி நான் தான் முதலில் பிர்தெளஸ் பாஷாவிடம் சொன்னேன், எண் தந்தேன். அத்தோடு என் வேலை முடிந்தது. மிகவும் கஷ்டப்பட்டுக் காய்கள் நகர்த்திச் சாதித்ததெல்லாம் அவர்தான். எவ்வளவு சிரத்தையாக அதனைக் கையாண்டார் என்று முழுவதும் அறிந்து இருந்ததால் அதனைக் கதையாக வாசிக்கும்போது அவ்வளவு சுவையாக இருந்தது.
சிவசங்கரி வசந்த்தின் முதல் நூல் என்று சொல்ல முடியாத வகையில் மிகவும் சரளமாகத் தோய்வில்லாமல் சம்பவங்களைக் கொண்டு சென்றிருக்கிறார். முதல் நூலே ஒரு புதினம் என்பதனால் அதில் அவருடைய தன்னம்பிக்கை தெரிந்தாலும், அதனை எங்கள் குழுமத்தில் சொல்ல தயங்கியது முரணாகத் தோன்றியது. அதைப் பற்றியும் அவரிடமே கேட்டுப் பஞ்சாயத்தை முடித்துக் கொண்டேன் என்பது வேறு விஷயம். இவர் இவ்வளவு நன்றாகத் தன் முதல் நூலை கொண்டு வந்திருப்பதற்குக் காரணம் ’புக்பெட்டில்’ அவர் எடுத்துக் கொண்ட எழுத்துப் பயிற்சி எனலாம். எனக்குத் தெரிந்தவர்கள், அவர்கள் எப்படி எழுதி கொண்டிருந்தவர்கள் என்பதை அறிவேன் என்பதால், அவர்களின் எழுத்தில் திடீரென்று தெரிந்த முதிர்ச்சியும், மாற்றமும், ஒருவித ஈர்ப்பும், இதெல்லாம் அவர்களுக்குக் கிடைத்த பயிற்சியினால் மட்டுமல்ல, அதனைச் சிவசங்கரி போன்றவர்களின் சுய முயற்சியினாலும், அதனை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதாலும் ஏற்பட்ட விளைவென்றால் மிகையில்லை.
இன்னும் பல நல்ல படைப்புகளோடு வர
வாழ்த்துகள்
Sivasankari Vasanth.

Wednesday, March 29, 2023

பத்திரிகையில்...

எல்லா புகழும் இறைவனுக்கே

 https://www.facebook.com/photo/?fbid=10158746805342364&set=a.412780932363&__cft__[0]=AZX9jKKg5KqwNP9aNGuEZGYtprm8drx0epy2n_78N3EsrOCSRYuO4p91Vtaasbmd9SYJECzW3Ih-Bmec6bmpZwcLiF4h5sX9ZHiP2r5lqmFu8uOU36TgjeP0ZWEAcn2BYwbm6jcLrEvboYMy2M9Bkk-DN3eqCLvc52QpNg7nGf_Kvy_PcuqEGXGmAELrzOttbT8&__tn__=EH-R


ஜெஸிலா இணை இயக்குநராக

 அமீரகக் குறும்படப் போட்டியில் ‘பேரு வெக்கல’ நகைச்சுவைப்படத்திற்காக இணை இயக்குநராகப் புதுப் பரிணாமம் எடுத்து அதில் வெற்றியும் கண்டதில் பேரானந்தம். கதைக்கரு வித்தியாசமானதென்று எதுவுமில்லை, ஆனால் நகைச்சுவையில் அடித்துவிடலாமென்ற நம்பிக்கை இருந்தது. அதற்கேற்ற நடிகர்களையும் இயக்குநர் கெளசர் Kausar Baig சிறப்பாகவே தேர்ந்தெடுத்திருந்தார்.

படப்பிடிப்பின் போது இன்னும் கொஞ்சம் நல்ல செய்யலாம், ’ஒன் மோர் ப்ளீஸ்’ என்று நான் கேட்டபோதெல்லாம் ‘இணை இயக்குநர்’தானே என்ற அலட்சியமில்லாமல் இயக்குநரும் சரி, நடிகர்களும் சரி எனக்குத் திருப்தியாகும் வரை சளைக்காமல் மீண்டும் மீண்டும் நடித்தார்கள். திரையிடப்பட்ட பதினைந்து படங்களில் எங்கள் குறும்படத்தில்தான் நடனக் காட்சி வைத்திருந்தோம். கதாநாயகனான பாலாஜி Balaji Baskaran என் முன்னிலையில் ஆடமாட்டேன் என்று அடம்பிடிக்க, ‘திரையில் அத்தனை பேர் பார்க்கப் போகிறார்களே’ என்ற போது, ’அது பரவாயில்லை நான் அப்போ கண்ண மூடிப்பேன்’ என்றவுடன் சிரித்துவிட்டு நகர்ந்துவிட்டேன். மனிதர் உடல்மொழியால் கலக்கியிருந்தார். மதுரை வட்டார வழக்கு வராமலிருக்கக் கொஞ்சம் சிரமப்பட்டார். சிறந்த நடிகருக்கான விருதும் அவருக்குக் கிடைத்தது.
டப்பிங்கின்போது நான் கொஞ்சம் எல்லோரையும் படுத்திதான் எடுத்தேன், இருந்தாலும் குழுவினர் அனைவருமே ஒத்துழைத்தார்கள். பூர்ணியின் Poorni Balaj குரலை ‘இன்னும் கீச், இன்னும் கீச்’ என்று மீண்டும் மீண்டும் பேச வைத்து எடுத்து, அதனை முகம் சுழிக்காமல் இசையமைப்பாளர் Giftlin Shaju கிஃப்ட்லின், மைக்ரோ நொடியும் வித்தியாசமில்லாமல் சரியாகப் பொருத்தி தந்ததெல்லாம் சுவையான அனுபவமாக இருந்தது. பூர்ணிக்கு நடுவரின் சிறப்புப் பரிசும், கிஃப்டினுக்கு இந்தப் படத்திற்கு இல்லையென்றாலும் ‘நடுவில்’ என்ற எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு குறும்படத்திற்குச் சிறந்த பின்னணி இசைக்கான விருதும் கிடைத்தது.
குறும்படம் முழுமையாகச் சிறப்பாக அமைய முழுக் காரணமென்று நான் குறிப்பிட வேண்டியது Mohamed Rasi Deen ரஸிதீனைதான். அபாரமான ஆற்றலும் ஆர்வமும் உடையவர். நாம் சொல்வதற்கு முன்பாகவே அவர் புரிந்து கொள்ளும் அலைவரிசையையுடையவர். ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என்று எல்லாத் துறையையுமே ஒற்றை ஆளாகச் சிறப்பாகக் கையாண்டு, உரிய நேரத்திற்கு முடித்துத் தந்தார்.


Noah Nitin Chander Samson வின் அறிவுறுத்தலின் பேரில்தான் அந்த நடனத்திற்கு அந்தப் பாடல் சேர்க்கப்பட்டு 'தூள்' நடனமானது. நோவா நோகாமல் இயல்பாக நடித்து முடித்தார். Lakshmi Priya வும் தனக்கு தந்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக தத்ரூபமாக நடித்தார். அவர் வீடு பாபாவின் இருப்பிடமாக சரியாக பொருந்தியது. கலைஞன் நாஷ் கம்மல், பொட்டு, தலைமுடி என்று சின்னச் சின்ன தகவல்களையும் கண்கொத்திப் பாம்பாக இருந்து சரி செய்து சிறப்பு சேர்த்தார்.
குறும்படம் தர வேண்டிய நேரத்தில் கெளசர் ஊருக்கச் செல்ல வேண்டியிருந்ததால், என்னை அவர் இணை இயக்குநராக இருக்க இயலுமா என்று கேட்டார். ‘கரும்பு தின்னக் கூலியா?’ என்று உடனே ஒப்புக் கொண்டு களத்தில் இறங்கினோம். ஒரே நாளில் படப்பிடிப்பு முடிந்தது. டப்பிங்குக்கு ஒருநாள். இரண்டே நாளில் பன்னிரெண்டு நிமிட குறும்படம். போட்டியில் சிறந்த இயக்குநருக்கு இரண்டாம் பரிசும் கிடைத்தது. குறும்படத் திரையிடலுக்குச் சென்ற என்னால், விருது விழாவிற்குச் செல்ல முடியாதது சோகமென்றாலும், குறும்படத்திற்கு மூன்று விருது கிடைத்ததை நிறைவாகவே உணர்ந்தேன்.
இன்னொரு முக்கியமான ஒரு விஷயம், இந்தப் படத்தில் என் பூனை மினி மிகவும் சிறப்பாக நடித்துள்ளது. ❤
இப்படியான வாய்ப்பை அமீரக மக்களுக்கு வழங்கும் Rama Malar ரமா & ஆனந்த் இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
https://youtu.be/5SYzZEzLrV8 குறும்படத்திற்கான சுட்டியை க்ளிக்கவும். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்.


ஒரு காதல் கதை

 சினிமா பார்த்து அழுத அனுபவம் உங்களுக்கிருக்கலாம், கதை வாசித்து அழுத அனுபவம் உண்டா? எனக்கு என்னவாகிவிட்டதென்று தெரியவில்லை, முதல் முறை வாசிக்கும் போது கலங்கினால் பரவாயில்லை. இரண்டாம் முறையும் அப்படியே நிகழ்ந்தது. எழுத்தாளர் Mitheen மீரான் மைதீன் அவர்களின் எழுத்துக்கு அப்படியான சக்தியுள்ளது என்றால் மிகையில்லை. பயமுறுத்த வேண்டுமென்ற ஆற்றல் கொண்டு எழுதுவாரோ என்னவோ 'கயிறுகள் உருவங்களாயின' கதையை வாசிக்கும் போது காரணமில்லாமல் பயம் தொற்றிக் கொண்டது. அவ்வாறே இந்தக் கதையில் அழுவதற்கு ஒன்றுமில்லாமல் அழ வைத்துவிட்டது. இந்தக் கதையை வாசிக்கும் போது எல்லாருக்கும் அப்படியான உணர்வு கண்டிப்பாக ஏற்படாது. ஆனால் இஸ்லாமிய பின்புலத்தைச் சேர்ந்த பெண்மணிக்குக் கண்ணீர் துளிர்ப்பதில் ஆச்சர்யமில்லை. நான் சொல்வது 'ஒரு காதல் கதை' நெடுங்கதையைப் பற்றி.

வஸீலா அவள் வாப்பாவை மருத்துவமனைக்குச் சென்று பார்த்து அவருடைய கையை மெல்லப் பிடித்தபோது என் கண்களில் கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்தது. 'எனக்குத் தனிமை வாய்த்திருந்தால் நான் விபரீதமான முடிவை எடுத்திருக்கக்கூடும்'. 'நடு இரவில் முழிப்பு வந்து சட்டென மொத்தமாய் நடுங்கி, பூஜையறை இருக்கிற வீட்டில் நாம் எப்படி வந்தோமென்று நிலைகொள்ளும்' இடமெல்லாம் என்னால் அந்த உளவியலை புரிந்து கொள்ள முடிந்தது. 'அந்த ஊரே கூடி ஏதோ ஒரு வெற்றியைப் போல எங்கள் திருமணத்தைக் கொண்டாடியது' - இந்த ஒற்றை வரியில் அரசியல் வெளுத்தது.
இருபது வருடங்களாக இரயில் பயணமே செய்யாத என்னைக் கேகே எக்ஸ்பிரஸில் ஏற்றிவிட்டு பயணியாக்கி அவர்கள் பேசுவதை அருகில் உட்கார்ந்து கவனிக்கச் செய்துவிட்டது இந்தக் கதை. எளிமையான
அருமையான
இயல்பான எழுத்து. உரையாடல்களின் மூலம் பல உள்ளடுக்குகளைச் சாமர்த்தியமாக நெருடல் வந்துவிடாதவாறு சேர்த்துள்ளார் கதாசிரியர்.
ஒன்று மட்டும் சத்தியம், கலப்புத் திருமணத்தில் மிகவும் பாதிக்கப்படுவது பெண்தான், 'மதம்' அல்ல. கதையை வாசித்து முடிக்கும்போது நல்லவேளை இப்படியான தவறை நான் செய்ய என்றுமே துணிந்ததில்லை என்ற நிம்மதி பெருமூச்சுவிட முடிந்தது.
'புலம்' பதிபகத்தின் வெளியிடூ. 56 பக்கங்கள் கொண்ட சிறிய நூல். விலை 80 மட்டுமே. கேலக்ஸி நூல் விற்பனையாளர்களிடம் வாங்கலாம்.


Tuesday, January 31, 2023

டார்லிங்ஸ் - பல பெண்களின் கதை

 அன்பு செலுத்தும் ஒருவரை எப்படித் தகாத வார்த்தையில் பேச முடியும், அடித்துத் துன்புறத்த முடியும்? காயப்படுத்துபவர்களுக்குத் தெரிவதுமில்லை வெளிக் காயத்தை விட உள்காயமாக மன கசப்பும் வெறுப்பும் அதிகரிக்கும் என்று. செய்வதெல்லாம் செய்துவிட்டு மறுநாள் கொஞ்சி கெஞ்சி சமாதனப்படுத்த நினைக்கும் ஆணுடன் எப்படிதான் சகித்துக் கொண்டு ஒரு பெண் வாழ முடிகிறது? அவள் அந்த வாழ்விலிருந்து வெளியில் வர நினைத்துவிட்டால் ஏற்படும் விளைவுகளை இருண்ட நகைச்சுவையாக (டார்க் காமெடி) சொல்லப்பட்டு நம்மைச் சிரிக்க வைக்கிறதுடார்லிங்ஸ்திரைப்படம்.


தொடக்கக் காட்சிகளில் ஆலியாபட்டாக வரும் பத்ருநிசா மீது நமக்கு அவ்வளவு கோபம் வருகிறது. தினமும் குடித்துவிட்டுக் காரணமில்லாமல் அல்லது ஏதோவொரு காரணத்தைச் சொல்லி அடிக்கும் கணவருக்கு மறுநாள் சமைத்து போட்டு அலுவலகத்திற்கு வழி அனுப்பும் ஒரு கதாபாத்திரம்.

மகள் தங்கியிருக்கும் அதே குடியிருப்பில் இருக்கும் பத்ருநிசாவின் தாயார் ஷம்சுநிசா (ஷெஃபாலி ஷெரிஃப்) மகள்படும் கொடுமைகளைத் தாங்க இயலாமல், கொடுமையான திருமண வாழ்விலிருந்து துன்புறுத்தும் கணவரை விட்டு வந்துவிடும்படி மகளிடம் கேட்கிறார். ஆனால் பத்ரு தன் கணவனின் 'காதலில்' அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாகவும், கணவரை அவளால் சரி செய்ய முடியும் என்று தான் நம்புவதாகவும் சொல்லிக் கொண்டு தினமும் அடிவாங்குகிறாள்.


நிறையப் பெண்கள் கொடுமையான திருமண வாழ்வில் சிக்கிக் கொள்வதற்குக் காரணம் குழந்தைகள். அந்தக் குழந்தைக்காகச் சகித்துக் கொண்டு இருந்துவிடலாமென்று பிடிக்காத திருமண வாழ்விலும் தொடர்கிறாள். இன்னும் சில பெண்கள், கணவன் தன்னை குழந்தை இல்லாததால் துன்புறுத்துகிறான், பொறுப்பாக நடந்து கொள்வதில்லை. குழந்தையென்று வந்துவிட்டால் சரியாகிவிடுவான் என்று நம்புகிறார்கள். ஆனால் பத்ரு போன்றவர்கள் பிரிந்துவிட்டாலும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பிற்காவது குழந்தை வேண்டும் அதுவும் அந்தக் கொடுமைகார கணவரின் குழந்தை வேண்டுமென்று வேண்டி ஒட்டிக் கொண்டிருப்பதில் கண் மூடித்தனமான அவளது காதலே காரணமாகிவிடுகிறது. இதில் பெரிய ஆறுதலே பாதிக்கப்பட்ட பெண் வெளிப்படையாகத் தன் தாயாரிடம் எல்லாமும் பேச முடிகிறது. சமூகத்தில் அப்படியான சூழலும் பெரும்பாலான இடத்தில் இல்லை என்பதும் அவலம்.

பிரதான பாத்திரமென்று பார்த்தால் 4-5 பேர்தான். சின்னப் பட்ஜெட்டில் அவ்வளவு சிறப்பான கதையை நகைச்சுவையாகச் சொல்ல முடிந்திருக்கிறது பெண் இயக்குநர் ஜஸ்மீட் கே. ரீனால். இந்த இளம் இயக்குநருக்கு இது முதல் படம் என்று நம்ப முடியாத அளவுக்கு மிகவும் கனமான கதைக்கருவை நேர்த்தியாகக் கையாண்டுள்ளார். ஆனால் அது நகைச்சுவையாக நம்மை வந்து அடையவில்லை. உறவுகளில் சிக்கியிருக்கும் பெண்களின் பலவீனத்தை எளிமையாகச் சொல்ல முயற்சி செய்திருப்பதாகத் தெரிகிறது. ஆண்களைத் திருத்துவதற்காகத் திருமணக் கட்டமைப்பு இல்லையே, கெட்டவன் தரங்கெட்டவனாகவே இருந்துவிட்டு போகட்டுமே, அவள் நல்லவளாக ஒதுங்கி வாழ்துவிடலாமே என்பதையும் இப்படத்தின் மூலம் சொல்லியிருப்பதாக நான் உணர்கிறேன்.

ஆலியாபட்டைவிட ஹெஃபாலி மிகச் சிறப்பாக நடித்துள்ளார். கொடூர கணவன் ஹம்ஸாவாக வரும் விஜய் வர்மா மீது ஏற்படும் கோபத்திலிருந்தே வெளிபடுகிறது அவருடைய அபார நடிப்பு. ஸுல்ஃபீயாக வரும் ரோஷன் மாத்யூவின் பாத்திர படைப்பும் சிறப்பு. மலையாளத்தில் பார்த்த ரோஷன் இங்கு நன்றாகவே பொருந்தி நடித்திருக்கிறார்.

இறுதி முடிவு நமக்குத் தெரிந்ததாக இருந்தாலும் பெரிய ஆசுவாசத்தை அளிக்கிறது. பலடார்லிங்ஸின்கதை இது ஆனால் எல்லா முடிவுகளும் இப்படி அமைவதில்லை.

Monday, January 30, 2023

ஃபர்ஹா - உண்மைச் சம்பவம்


 ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’, ’தி டைரி ஆப் ஆன் ஃபிராங்க்’ இந்தப் படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பார்க்கும் போது ஹி__ட்-ல*ர் மீதும் நா-ஸி மீதும் நமக்கு அவ்வளவு வெறுப்புணர்வு எழும். மூன்றில் ஒருவராவது இப்படத்தைப் பார்த்திருக்கக் கூடும். ஆனால் ‘ஃபர்ஹா’ என்ற படத்தைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?  


‘ஃபர்ஹா’ ஒரு ஜோர்டானியத் திரைப்படம். உலகச் சரித்திரத்தில் நடந்த மாபெரும் நில அபகரிப்பான இஸ்ரேலின் உருவாக்கமும், அதன் பின்னர் 1948-இல் நக்பாவின் போது பாலஸ்தீனத்தின் இனப் பேரழிவைச் சித்தரிக்கும் படம். டெரின் ஜே சலாம் என்ற பெண் இயக்குநர் இயக்கிய படம். நிறையத் திரைப்பட விருதுகளைப் பெற்ற படம்.


பல நூறு பாலஸ்தீன கிராமங்களும், சில நகரங்களும் அதிரடியாக ஆக்கிரமிக்கப்பட்டு பல லட்சம் பேர்களை அகதிகளாக்கி, தம் சொந்த ஊரிலிருந்து வெளியேற மறுத்த பல்லாயிரக் கணக்கானவர்களைக் கொன்று குவித்த இஸ்ரேலிய அரசின் கோர முகத்தைக் காண்பிக்கும் படம் ‘ஃபர்ஹா’. கதையென்று மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுமில்லை, ஏனென்றால் இது உண்மையை மட்டும் உள்நிறுத்திய கனமான திரைப்படம். 


நகரத்திற்குச் சென்று படிக்க வேண்டுமென்ற கனவைக் கொண்டவள் ஃபர்ஹா.  அவளுடைய தந்தை அக்கிராமத்தின் மேயராக இருக்கிறார். அவர்கள் வாழும் பகுதியில் இஸ்ரேலியர்களின் ஆக்கிரமிப்புத் தொடங்குகிறது. கிராமவாசிகள் சிதறி ஓடுகிறார்கள். நகரத்திற்குச் தப்பிச் செல்ல ஏற்பாடு செய்கிறார் அவள் தந்தை. அவள் போக மறுக்கிறாள், தந்தையைப் பிரிய முடியாது என்கிறாள். அடம்பிடிக்கும் ஃபர்ஹாவை உணவு பொருட்களை வைக்கும் சிறிய அறையில் வைத்து பூட்டிவிட்டு கிளம்பிவிடுகிறார் தந்தை. பூட்டிய வீட்டின் ஓட்டையில் ஒளிந்து கொண்டு, வெளியில் அவள் பார்க்கும் பயங்கரத்தை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் டெரின்.


மகிழ்ச்சி, பயம், கவலை, தவிப்பு, அழுகை என்று எல்லா உணர்வுகளையும் தன் உடல்மொழியில் காட்டி சிறப்பாக நடித்துள்ளார் 'ஃபர்ஹா'வாக வரும்  கரிம் தாஹிர்.


நெட்பிளிக்ஸில் இந்தப்படம் வெளிவந்த பிறகுதான் இஸ்ரேலிய கலாச்சார அமைச்சரும் நிதியமைச்சரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நெட்பிளிக்ஸை பலநூறு வாடிக்கையாளர்கள் unsubscribe செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இயக்குநருக்கு அச்சுறுத்தலும் சென்று சேர்ந்துள்ளது. இந்த வருட ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


இந்தப் படம் ஆஸ்காரில் வெற்றி பெறுகிறதோ இல்லையோ உண்மையை உரக்கச் சொல்லியதற்காக ஏற்கெனவே வாகை சூடிக் கொண்டது.

Thursday, October 13, 2022

சிறுபான்மையினரின் மொத்த குரல் ‘நட்சத்திரம் நகர்கிறது’


ஒரு பெண் தன் காதலுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறாள், அதுவே அவன் வேண்டாமென்றான பிறகு, அவன் முன்னாள் காதலனாக ஆனவுடன் எப்படி விலகி நிற்கிறாள், அதே சமயம் அவனுடன் இணைந்து வேலையும் செய்கிறாள். தன்னை விரும்புகிறான் என்று தெரிந்தும் அதைச் சட்டை செய்யாமல் நட்பாக மட்டுமே பழக முடிகிறது அவளால். ஆணென்ற பாலின பேதமில்லாமல் தூய்மையான நட்பை மட்டுமே முன்னிறுத்தி சகஜமாக இருக்க முடிகிறது அவளால். தன்னைக் கடினமானவளாகக் காட்டிக்கொள்ளும் அவள், தன்னை ‘அம்பேத்கரைட்’ என்று வலிமையாக முன்னிறுத்துபவள், அதே சமயம் உள்ளே உருகுகிறாள், எளிதாக உடையக்கூடியவளாக மென்மையானவளாகவும் இருக்கிறாள், எதற்காக யாருக்காக என்று அறியாமலே. தான் ‘சில்லு சில்லாக உடைக்கப்பட்ட கண்ணாடி’ என்கிறாள் . அவளுக்கு உளவியல் ரீதியாகச் சிக்கல் இருக்கிறது. சிறு வயதில் அவளுக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளின் தாக்கங்கள் அவளுடைய வாழ்க்கை நெடுகிலும் பயணம் செய்து, எல்லா உறவுகளின் மீதும் சந்தேகம் கொள்ளச் செய்கிறது. இப்படி எல்லாமுமான கலவைதான் ரெனே. அதனை மிகவும் சிறப்பாக உடல்மொழியிலும் கண்களிலுமே பேசியிருந்தார் துஷாரா.


முதல் காட்சியில் காட்டப்படும் சண்டை மேலோட்டமாகப் பார்த்தால் அவள் அவனைத் தூங்கவிடாமல் செய்கிறாள் என்று தோன்றலாம். ஆனால் அந்த ஒரு காட்சி மட்டுமே அவர்களின் பிரிவிற்கான காரணமில்லை. அந்த ஒற்றைக் காட்சியில் இருவரின் உள்ளுணர்வையும் சம அளவில் வெளிப்படுத்தியிருப்பார்கள். அதையே மற்றொரு காட்சியில் - பல சலசலப்பின் வெடிப்பே எங்கள் மனமுறிவு என்றுணர்த்தியிருப்பார் இனியனாக வரும் காளிதாஸ்.
இப்படி வசனங்களின் மூலமாக மட்டுமே பல விதமான மக்களிடையே இருக்கும் காழ்ப்புணர்ச்சிகளைப் பற்றிப் பேச முற்பட்டிருக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித். மேடை நாடகத்தின் கலை அமைப்பு, சுவரோவியங்கள் வண்ணங்கள் என்று மிரட்டியிருக்கிறார் ஜெயரகு. பின்னணி இசையைக் கேட்கும்போது அதுவும் பெரும்பாலான இசைஞானியின் இசையை உட்புகுத்தி விளையாடியது யாரென்று தேடிப் பார்த்தால் டென்மா என்கிறது கூகுள்.
அர்ஜுனாக வரும் கலையரசன் தன் காதலை அவள் அங்கீகரிக்கும் முன்பாகவே தன் வீட்டில் சொல்லும்போது, ”அவங்க என்ன ஆளுங்க?” என்று அம்மாவாக வருபவர் குடும்ப எதிர்ப்பை
அருமையாக
வெளிக்காட்டியிருப்பார். அந்தக் கதாபாத்திரத்தை அவர் அட்டகாசமாகச் செய்திருக்கிறார். அந்தக் காட்சியொன்றே படத்தின் தரத்தைப் பற்றி சொல்ல போதுமானதாகிறது.
’காதல்’ பற்றிய பலவிதமான புரிதல்களை, அதனுடன் ஒரு தொகுப்பாகவே கூட வரும் சாதி மத பேதங்களை, பொருளாதார ஏற்ற தாழ்வுகளை, ஓரின ஈர்ப்பு, நடைமுறை குடும்பக் கட்டமைப்பின் பிரச்சனை என்று எல்லா வகைகளையும் ஒரே படத்தில் கொண்டு வந்து அனைத்து சிறுபான்மையினரின் மொத்த குரலாக ஒலிக்கிறது ‘நட்சத்திரம் நகர்கிறது’. நம்மையும் மாற்று சிந்தனைக்கு நகரச் செய்கிறது.
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி