Wednesday, September 23, 2009

நம்மைப் போல் ஒருவன்


இந்தியாவில் பல வகையான தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்தே உள்ளன ஆனால் நம்மில் பலர் அதனை அந்தக் காலகட்டத்தின் சூடான செய்தியாக மட்டுமே பார்க்கின்றோம். அதன் பிறகு யாரும் அந்தச் செய்தியைப் பின் தொடர்ந்து செல்வதில்லை. அவ்வகையான குற்றங்களைப் பல வருடங்களாக சல்லடைப் போட்டு அலசி வடிகட்டி தீர்ப்பு வரும் போது செத்தவர்களைப் புதைத்த இடத்தில் புல்லும் முளைத்து அதனை மாடும் தின்று சாணியும் போட்டு அள்ளியிருப்பார்கள்.

1999ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கந்தகாருக்குக் கடத்தப்பட்ட நிகழ்வு, நம் நாட்டின் நாடாளுமன்றத் தாக்குதல், மும்பாய் குண்டுவெடிப்பு சம்பவங்கள், கோவை குண்டுவெடிப்பு அதிர்வு, மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல், குஜராத் வன்முறை இப்படி நாம் கடந்து போன தீவிரவாத செயல்களை நாம் மறந்தே விட்டோம். ”மறதி ஒரு தேசிய வியாதியாகிவிட்டது” என்ற குற்றச்சாட்டை பிரதானப்படுத்தி, தீவிரவாதத்திற்கு தீவிரவாதமே தீர்வென்ற சீற்றத்துடன் கிளம்பிய என்னைப் போல் உங்களைப் போல் ஒரு பொதுமக்களில் ஒருவனே ‘உன்னைப் போல் ஒருவன்’.

இந்தியாவில் நடக்கும் தீவிரவாதத்தைத் தமிழ் ஊடகம் தள்ளி நின்றே வேடிக்கை பார்க்கும். தனக்கும் இந்தியாவிற்கும் சம்பந்தமே இல்லாதது போல் தமிழ்நாடு தனி நாடு போல அது ஒரு அமைதிப்பூங்கா என்று சொல்லிக் கொண்டு அந்தத் தீவிரவாத நிகழ்வில் எத்தனை தமிழர்கள் உயிரிழந்தார்கள் என்று மட்டுமே கணக்கில் கொள்ளும் என்ற உண்மையைப் போட்டு உடைக்கிறது ‘உன்னைப் போல் ஒருவன்’. இது என்ன பெரிய விஷயம் நம் தமிழ் சகோதரர்கள் கோடிக் கணக்கில் ஈழத்தில் உயிரிழந்த போதே நீலிக் கண்ணீரை மட்டுமே வடிக்க முடிந்த நமக்கு இதெல்லாம் சகஜம்தானே?

காவல்துறையின் கடமையில் மூக்கை நுழைக்கும் அரசியல்வாதிகளைக் குறித்தும், அதனால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும் வெளிச்சம் போடும் இயக்குனர் சக்ரி டொலெட்டிக்கு இது தனது முதல் படம் என்று சொல்லிக் கொள்ள முடியாத அளவுக்கு கமலின் தலையீடுகளே அதிகம் வெளிப்படுகிறது.

மிகவும் கூர்மையான வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவதாக வசனங்கள் தொணித்தாலும் மிகவும் நெருடலாக இருப்பது ஆங்கிலக் கலப்பு. நிகழ்வில் ஆங்கிலத்தையே உயர்த்தி பிடிக்கும் தமிழ்நாட்டவர்களை யதார்த்தமாகக் காட்ட முயன்றிருந்தாலும் பாமரர்களுக்கும் போய் சேர வேண்டுமென்ற எண்ணமில்லாத வசனங்களை வடித்திருக்கிறார் இரா. முருகன். ஒரு காட்சியில் மலையாளியான கமிஷனர் மாரார் (மோகன்லால்) அதிகாரி சேதுவுக்கு (பரத்ரெட்டி) தமிழ் கற்றுத் தருவதாக காட்டும் போது கூடவா இடரவில்லை இவர்களுக்கு? ’பைனரியில்’ சொல் என்று கேட்கப்படுவது எத்தனை பேருக்குப் புரியப் போகுதோ! தலைமை செகரட்டரியாக வரும் லக்ஷ்மி தஸ்புஸ் என்று சரளமாக ஆங்கிலத்தில் கமிஷ்னரிடம் பேசும் காட்சியும் அதிலிருக்கும் மெல்லிய நகைச்சுவையும் எத்தனை பேர் இரசிக்கப் போகிறார்களோ தெரியவில்லை. திரையரங்கிற்கு அதிக அளவில் சென்று படம் பார்ப்பது மாணவர்கள்தான், அவர்களே ‘என்னப்பா படம் ஒரே பீட்டரா’ இருக்கு என்று சொல்லிவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

என்னதான் எந்த மதத்திற்கும் ஆதரவில்லாதவராகவும், பெயர்களில் கூட கவனமாகக் கையாண்டிருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், ’முஜே ஃபக்கர் ஹே’ (நான் பெருமைப்படுகிறேன்) என்று மார்தட்டிக் கொள்ளும் தீவிரவாதிகளை முஸ்லிமாகவும் தனது மார்க்கத்திற்காக அப்படி செய்வதாகவும் தேவையற்ற வசனங்களைப் புகுத்தியவர் ஒரு ஹிந்து தீவிரவாதி மட்டும் மிகவும் அப்பாவியாக ‘முஜே பக்கர் நஹி ஹே’ (எனக்குப் பெருமை இல்லை) என்று தான் அறியாமல் செய்த தவறாக ஒப்புதல் அளிப்பது இவர்களின் முகமூடியைக் கிழிக்கிறது. நான் அசலான ‘எ வெட்னெஸ்டே’ பார்க்காததால் கிழிந்தது இவர்கள் முகமூடியா அல்லது அசலிலும் அப்படித்தான் வருமா என்பது தெரியவில்லை.

குஜராத் கலவரத்தில் ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை வெட்டி சிசுவை வெளியே வீசிய கொடூரத்தை இரண்டு சொட்டு கண்ணீரால் நிரப்புகிறார் கமல். அதுவும் அந்தக் காட்சி ஏதோ இந்த படத்தில் கமலின் நடிப்புக்கு பஞ்சம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஒரு சொருகல் போல் தெரிகிறதே தவிர மனதை அழுத்தும் உணர்ச்சிப்பூர்வமான காட்சியாகப்படவில்லை.

என்னதான் நேர்மையானவனாக இருந்தாலும் அவன் முஸ்லிமாக இருந்துவிட்டால் அவர் நேர்மையும் சந்தேகத்திற்குட்படுகிறது, கேள்விக்குள்ளாகிறது என்பதை அழகாக நிரூபிக்கும் யதார்த்த காட்சி - கமிஷ்னர் மாரார் அதிகாரி ஆரிஃப் மீது ஒரு கண் இருக்கட்டும் என்று சொல்வது. ஆரிஃபாக வரும் கணேஷ் வெங்கட்ராமனை ‘அபியும் நானும்’ படத்திலேயே மிகவும் பிடித்துப் போனது எனக்கு. அதிகாரிக்கு ஏற்ற உடலமைப்பு, தெளிவான துடிப்பான முகம். கொடுத்த பாத்திரத்தில் அம்சமாகப் பொருந்தியிருக்கிறார்கள் இவரும் சேதுவாக வரும் பரத்ரெட்டியும். இவர் கதாபாத்திரம் மட்டுமல்லாது படத்தில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களும் குறிப்பாக
* தலைமை செக்ரட்டரியாக வரும் லக்ஷ்மி அந்த கிழடுதட்டிய முகத்தையும் கிளோஸப்பில் காட்டும் போது பயமுறுத்தாதவர்,
* நம் பதிவுலகத்திற்கு மிகவும் தேவைப்படும் மின்னஞ்சல் திருடர் (hacker) ஆனந்த் - இவர் சிறு வயதில் ’மே மாதம்’, ’அஞ்சலி’ படங்களில் நடித்தவர் ஆள் உயரமாகியிருக்கிறார் தவிர முகம் இன்னும் அதே குழந்தை முகமாக அவரை காட்டிக் கொடுக்கிறது
* நத்தாஷா ராஜ்குமாராக வரும் அனுஜா ஐயர் - துணிச்சலான பெண்மணியென்று காட்டவா சிகரெட்டை பற்ற வைத்திருக்கிறார்கள்? கொடுமை.
இப்படியாக ஒவ்வொருவரும் தன் பங்கை மிக அற்புதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.

கமல்ஹாசன்- மோகன்லால் என்ற இரண்டு இமயத்தின் நடிப்பை விவரிக்கத் தேவையில்லை. இருவரும் கடைசிக் காட்சியில் கைக்குலுக்கிக் கொள்வது ஒருவருக்கொருவர் நடிப்புக்கு சபாஷ் சொல்வதாகத் தோன்றியது. ’டைட்டில் கார்டில்’ இருவரின் பெயர்களுக்கு முன்பும் எந்த அடைமொழியும் வராதது பெரிய ஆச்சர்யம்.

படத்தில் மறக்க முடியாத ஒன்று அந்த முதல் காட்சி. விஜய் இரசிகர்கள் கண்டிப்பாக அதிருப்தி அடைய வைக்கும் அந்தக் காட்சியை விஜ்யின் நண்பர் ஸ்ரீமன் செய்தது மிகவும் சிறப்பு.

படத்தின் பலம் காட்சியமைப்புகள் அதிலும் மனோஜ் சோனியின் கேமிரா தேவையானதை மட்டும் கச்சிதமாக படம்பிடித்திருக்கிறது. அடுத்து என்னவென்ற எதிர்பார்ப்பை தூண்டும் விறுவிறுப்பை கொண்டு வரவே தேவையில்லாதவற்றை நெருக்கமாக நறுக்கிவிட்டிருக்கிறார் ராமேஷ்வர் பகத். காவல்துறையினரின் தினசரி நிஜ வாழ்வில் நடக்கும் விஷயங்கள், அதில் ஊடகங்கள் ஆதாயம் தேடும் பாங்கு, ஆட்சித்துறையின் குடைச்சல் என்ற கலவை, நகலாக இருந்தாலும் அசத்தியிருக்கிறார்கள். பாடல்கள் இல்லாமல் அழகான பின்னிசையில் விளையாடியிருக்கும் ஸ்ருதிஹாசனுக்கு ஒரு ‘பேஷ்’.

இந்தப் படத்தின் வெளியீட்டை இரத்து செய்ய வேண்டுமென்ற ’பிரமிட் சாய்மீரா' நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்து, மூன்றரை கோடி வங்கி உத்தரவாதம் அல்லது சொத்து ஆவணம் தாக்கல் என்ற அடிப்படையில் வலியுடன் பிரசவித்த ‘உன்னைப் போல் ஒருவன்’ காட்டமான விஷயத்தை மிகவும் மென்மையாக்கி நமக்குள் செலுத்தும் முயற்சியை மட்டும் மேற்கொண்டிருந்தால் சர்ச்சைகளிலிருந்து தப்பித்திருக்கலாம்.

ஒரு திரைப்படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்க விரும்புபவர்கள் சண்டைக்காட்சியில்லை, பாடல்களில்லை என்று புலம்பினாலும் வசனங்களில் நகைச்சுவை கலந்து காட்சியில் விறுவிறுப்பு சேர்த்திருப்பதால் பொழுதுபோக்கு பிரதியாகவும் எடுத்துக் கொள்ளலாம். ‘எ வெட்னெஸ்டே’ பார்க்காமல் இந்தப் படத்தை பார்ப்பவர்களுக்குக் கண்டிப்பாகப் படம் பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது. நானும் ‘எ வெட்னெஸ்டே’ பார்க்கவில்லை, சில கசப்புகளை மீறி எனக்கும் படம் பிடித்திருக்கிறது. இன்னும் நிறைய குறுகிய கால அளவு படங்கள் வந்து நம் நேரத்தை காப்பாற்ற வேண்டும்.

Monday, September 07, 2009

விளையாட்டாக விவசாயம்


முகப்புத்தகத்தில் ஹாஜா மன்சூர் என்பவர் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். என் நண்பர் அவருக்கும் நண்பரென்பதால் சேர்த்துக் கொண்டேன். தினம் தினம் ஒரு ஆப்பிள் மரம், ஒரு ஆரஞ்சு மரம் என்று பரிசு வந்த வண்ணமிருந்தது. நானும் பரிசை வாங்காமல் தவிர்த்துக் கொண்டிருந்தேன் அது என்ன ஏது என்று தெரியாமலேயே. அதன் பிறகு தோழி சுவாதியும் பரிசு அனுப்பினார்கள். கோ மாதாவை அனுப்பியிருக்கிறேன் மங்களகரமா தொடங்குங்க என்றார்கள். என்னடா இதுன்னு ஒரே குழப்பமா இருந்தது. வரும் பரிசுகளையெல்லாம் கல்லாவில் போட்டுக்கிட்டே இருந்தேன். நண்பர் சுபைரும் என்னை பக்கத்து தோட்டக்காரனா ஆக்கிக்கோங்கன்னு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். என் அக்கா மகன் வேறு ஒரு கோழி அனுப்பி வைத்தான். ஆஹா இதுக்கு மேல தாங்காது எல்லோரும் பரிசு அனுப்பிக்கிட்டே இருக்காங்கன்னா ஏதாவது விஷயமிருக்குமென்று போய் பார்த்தேன். பார்த்த பிறகுதான் தெரிந்தது அது ஒரு விவசாய விளையாட்டுன்னு. பொதுவா எனக்கு ஏதாவது ஒரு கணினி விளையாட்டு பிடிச்சிருந்தா விளையாடி விளையாடி கொஞ்ச நாள் பைத்தியமா இருப்பேன். அப்புறம் அந்த சீசன் முடிந்த பிறகு அடுத்த கணினி விளையாட்டு அல்லது வேறு பொழுதுபோக்குன்னு தொடரும். பொழுதை போக்கும் விதம் நேரமில்லாவிட்டாலும் மூச்சு முட்டும் அளவுக்கு அலுவல் வேலையிருக்கும் நேரம் எரிச்சல் ததும்பும் போது இளைப்பாறும் நிழல் ஒரு வகையான மாற்றம்தான் நமக்கு இந்த முகப்புத்தம் விளையாட்டெல்லாம்.

நான் விவசாய விளையாட்டுன்னு குறிப்பிட்டது ‘ஃபார்ம் வைல்’ (Farm Ville) பற்றி தான். முகப்புத்தகத்தில் இருப்பவர்கள் எனக்கு தெரிந்து அத்தனை பேரும் இதனை ருசிப்பார்க்காமல் இருந்திருக்க மாட்டார்கள். பொதுவாக கணினி விளையாட்டு நம்மை மீண்டும் மீண்டும் விளையாட தூண்டும் நம் மனதில் குறிக்கும் இலக்கை எட்டும் வரை. சில வகை விளையாட்டின் மீது கிறுக்காகவே மாறுவோம். அப்படித்தான் நான் ஸ்கிராம்பிலில் கிடந்தேன். தூக்கத்தில் கூட இந்த வார்த்தை அந்த வார்த்தை என்று நினைத்து கோட்டை கட்டுவேன். கை பரபரக்கும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாட தூண்டும், பொறுமை இழக்கவும் செய்யும் ஆனால் இந்த விவசாய விளையாட்டு மிகவும் மாறுபட்டது, நமக்கு பொறுமையையும் கற்பிக்கிறது என்றால் மிகையாகாது. நமக்கு தந்த நிலத்தில் சாகுபடி செய்ய வேண்டும், விதைக்க வேண்டும். விதை தேர்வு நம்முடையதே. ஒவ்வொரு விதைக்கும் கால அவகாசமுண்டு. விதையை வாங்கும் போது பணம் செலுத்த வேண்டும். மகசூலை உரிய நேரத்தில் அறுவடை செய்யவேண்டும் யாருடைய உத்தரவிற்கும் காத்திராமல், இல்லாவிட்டால் காய்ந்துவிடும் என்று நம் அரசாங்கத்திற்கு தெரியாத விஷயங்களெல்லாம் கணினி விளையாட்டுக்கு கூட தெரிந்திருக்கிறது. ஓய்வு நேரத்தில் பக்கத்து தோட்டத்தை பார்த்து காக்கா விரட்டினால், குப்பையள்ளிப் போட்டால், புல்லுருவி நீக்கினால் நமக்கு பொற்காசு வழங்கப்படுகிறது. நல்ல மகசூல் (மகசூல் என்பது ஒரு அரபி வார்த்தை) கிடைத்தால் அதற்கும் பாராட்டி பொற்காசுகள். இந்த நடைமுறை போல உண்மையாக இருந்தால் நம் நாட்டு விவசாயிகளின் பிரச்சனை தீர்ந்து நாடும் நலம் பெருமில்லையா?

இந்த விளையாட்டை வெறும் விளையாட்டாகப் பார்க்க முடிவதில்லை. ஒவ்வொரு விதைநெல்லுக்கும் நமக்கு கொடுக்கப்படும் குறுகியக் காலகட்டத்தில் காத்திருக்க கடினமாக இருக்கும் நேரத்தில், கண்டிப்பாக விளையாடும் ஒவ்வொருவரும் விவசாயிகளின் வாழ்க்கையை பற்றியும், துயரங்களை பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் கொஞ்சமாவது யோசிப்பார்கள் கவலை கொள்வார்கள் என்பது உறுதி. விளையாட்டில் கூட விவசாய விளைபொருட்களில் விலை அதிகமாகவே இருக்கிறது.

உண்மையில் விவசாய விளைபொருட்களின் தேவை எப்போதுமிருக்க அதன் விலை உயர்வுக்கு காரணமென்ன? இவர்கள் விளைச்சலுக்கு ஏன் வேறு நபர் விலை நிர்ணயிக்கிறார்கள்? பருத்தி பயிரீட்டின் நஷ்டத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது நமக்கெல்லாம் வெறும் செய்தியாகவே இருந்திருக்கிறது. இவர்களைப் பற்றி அக்கறை கொள்வதுதான் யார்? விவசாயிகளுக்கு விளையவில்லையென்றாலும் இழப்பு, அதிக அளவில் எல்லோருக்கும் ஒரே விதமாக அதிகமாக விளைந்துவிட்டாலும் விலை சரிவு என்றாலும் பேரிழப்பு. அவர்கள் எதிர்பார்த்தபடி அவர்கள் வாழ்க்கை அமைவதேயில்லை என்பது பெரிய சோகம். என் நண்பர் ஒருவர் உர மருந்து வியாபாரியாக இருந்து பிறகு அந்தத் தொழிலின் துரோகத்தை உணர்ந்து கைவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். எப்படியென்றால் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதைதான் உர வியாபாரிகளுடையதாம் நோயையும் உண்டாக்கி மருந்தையும் விற்பனை செய்வார்களாம். என்ன கொடுமை!

கொஞ்ச நாட்களுக்கு முன்பு வந்த மடலில் பூச்சிக் கொல்லி மருந்தை அந்த பகுதி மக்கள் சுவாசிப்பதால் ஏற்படும் அபாயங்களை விளக்கியிருந்தது. மருந்தை சுவாசிப்பதனாலேயே பிரச்சனையென்றால் அந்த விளைச்சலை சாப்பிடுபவர்களுக்கு என்ன நேரும்? வெளிநாட்டில் செய்ய முடியாத அபாய ஆராய்ச்சிகளை அந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்து தந்திரமாக நமது நாட்டிற்கு யோசனைகளை அனுப்பி சோதனைகளை மேற்கொள்கிறார்கள். நம் மக்கள் உயிர் வழக்கம் போல் அவர்களுக்கு வெறும் மயிர் என்பதால்.

விவசாயிகளும் கூட்டுறவு சங்கமென்றெல்லாம் வைத்திருந்தாலும் அதன் மூலம் பால் பிரச்சனை ஓய்ந்ததே தவிர கரும்பு சாகுபடியாளர்களோ, பருத்தி பயிரீட்டாளரோ பயன் பெறவில்லை. இந்த விஷயத்தையெல்லாம் எல்லா வகையான ஊடகங்களும் கட்டம் கட்டி காசு பார்த்து நகர்ந்துவிட்டதே தவிர தீர்வை எதிர்பார்த்து யாரும் செயல்படுவதில்லை என்பது துரதிஷ்டமே. நான் மட்டும் எழுதி கிழித்து ஏதெனும் தீர்வு வந்துவிட போகிறதா என்ன? நம்முடைய பல வகையான கையாலாகாத்தனத்தில் மற்றொன்று.

ஒருவேளை நம்ம அரசியல்வாதிங்க இந்த விவசாய விளையாட்டு விளையாடினால் திருந்துவார்களோ? ம்ஹும் விளையாட்டையே மாற்றியமைக்க உத்தரவிட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. சரி, நீங்க Farm Ville விளையாடினால் மறக்காமல் எனக்கு பரிசு அனுப்பிவிடுங்கள்.
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி