Tuesday, December 04, 2012

எங்கிருந்தோ வந்தான் - The Man from Nowhere


நாளை என்பதை மறந்து இந்த நிமிடத்திற்காக மட்டும் வாழ்பவராக நாமிருந்தால் நம்மைப் பற்றி யோசிப்போமா அல்லது சுற்றி இருப்பவர்கள் சந்தோஷத்திற்காகப் பாடுபடுவோமா? நம் சகோதரர்கள் உலகில் பல இடங்களில் இன்னல்களில் இருந்தாலும் அவர்களுக்காக நம் பங்கு என்னவாக இருந்துவிட முடியும்? பிற நாடு வேண்டாம் அண்டை மாநிலம்,, அதுவும் வேண்டாம் சொந்த ஊர் இல்லை, அடுத்த தெரு ம்ஹும் பக்கத்து வீட்டில் பிரச்சனை அல்லது வன்கொடுமை என்றாலும் கூட தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பவர்கள்தான் நம்மிடையே ஏராளம். ஆனால் இந்தப் படத்தின் கதாநாயகன் தே-சிக் (வான் பின்) தன் அடையாளங்களை மறைத்துக் கொண்டு அந்த நொடிக்காக வாழ்பவர், தனக்குத் தெரிந்த பக்கத்து வீட்டுக் குழந்தைக்காக தன் வாழ்வையே பணயம் வைக்கத் துணிபவர்.


தென் கொரியப் படம் ‘தி மேன் ஃபிரம் நோவேர்’ (The Man from Nowhere) 2010- ல் 47 பிலியன் சம்பாதித்து தந்த வெற்றிப்படம். பல விருதுகளைக் குவித்த இந்தப் படம் நடைமுறையில் சாத்தியக் குறைவான கதைதான்... இருந்தாலும் தனி மனிதப் பிரச்சனையைத் துரத்திச் சென்று பின் போதைப் பொருட்கள் மற்றும் உடல் உறுப்புகளை விற்கும் கும்பலையே பிடித்து தன் அன்புகுரிய சோ-மீ என்ற பக்கத்து வீட்டுக் குழந்தையை மீட்டெடுக்கும் கதையை அழகாகத் தன் தேர்ச்சிப் பெற்ற நடிப்பின் மூலம் வெற்றிப் படமாக மாற்றியிருக்கிறார் வான் பின்.


ரொம்ப அதிரடியாக இருக்கும் படங்களை நான் அதிகம் விரும்புவதில்லை. அதில் யதார்த்தமில்லை என்பதாலும், எப்படி ஒரு தனி நபர் இத்தனை பேரை அடிக்க முடியுமென்ற கேள்வி தொக்கி நிற்பதாலும். ஆனால் வன்முறை நிறைந்த இந்தப் படம் மனதில் ஒட்டிக் கொண்ட காரணம் அந்தப் படத்தின் கதாநாயகன் வான் பின்னும் அவர் நடிப்பை பயன்படுத்திக் கொண்ட இயக்குனர் லீ ஜியோன் பியூம்மும்.


அருமையாக நடித்திருக்கும் வான் பின்னுக்கு வசனமேயில்லை. கண்களால் பல மொழிகளைப் பேசியிருக்கிறார். நம்மூர் கதாநாயகர்கள் போல் ’பஞ்ச் டயலாக்’ இல்லை. ’பிளாஷ் பேக்’கின் போது கதாநாயகியுடன் ’டூயட்’ இல்லை. நொடிக்கு பத்து பேரை வீழ்த்தும் கதாநாயகன் சிறப்பு பயிற்சிப் பெற்ற கொரியன் ரகசிய நிறுவனத்தில் பணி புரிந்து பின் தன் கர்ப்பிணியான மனைவியை இழந்த பிறகு கசப்பான கடந்த காலத்துடன் இருட்டில் ஒரு அடகுக் கடை வைத்து தன்னை மறைத்து வாழ்பவர் என்று அவர் வீரத்திற்கும் பலத்திற்கும் தகுந்த காரணங்கள். அவன் மீது அன்பு செலுத்தும் புறக்கணிக்கப்பட்ட குழந்தை சோ-மீயின் நடிப்பு. சோ-மீ மனிதர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பிரித்துப் பார்க்காமல் ஒரு மனிதரில் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு நட்புக் கொள்ளும் நல்லுள்ளம் படைத்த சிறுமி. ‘உன்னையும் நான் வெறுத்துவிட்டால் இந்த உலகத்தில் நான் நேசிப்பவர்கள் என்று யாருமில்லாமல் போய்விடும்’ என்ற ஆழமான வசனமும் உடல்மொழியும் நம்மை கலங்க வைக்கிறது.


பிரசவ வலியுடன் குழந்தை வெளி வர ஒரு தாய் தன் உடலில் உள்ள அத்தனை சக்தியையும் பிரயோகித்து பிரசவிப்பாள். குழந்தை பிறந்தவுடன் அதன் முகத்தைப் பார்த்து முகம் மலர்வாள். அப்படியான கடைசி காட்சி - தன் உடலில் உள்ள வலுவைக் கொண்டு எதிரிகள் அத்தனைப் பேரையும் வீழ்த்தி விட்டு தன் கையாலாகாத்தனத்தை வெம்பி தற்கொலைக்கு முற்படும் போது சோ-மீயின் குரல் கேட்டு அவன் வெளிக்காட்டும் உணர்ச்சிகளை நீங்கள் படத்தில் பார்த்து மட்டுமே தெரிந்து கொள்ளவும் ரசிக்கவும் முடியும். சம்பந்தமே இல்லாத ஒருவன் ஒரு சக உயிருக்காகப் பாடுபடும் படம்.

Tuesday, November 27, 2012

உறவும் பிரிவும் - A Separation

உறவுகள் பலவிதம், நாம் தேர்ந்தெடுக்காமலே பிறப்பினால் ஏற்படும் உறவுகள், நாம் தேர்ந்தெடுப்பதின் மூலம் ஏற்படும் உறவுகள் இப்படி எந்த வகையான உறவாக இருந்தாலும் சரி சண்டை சச்சரவு, மனஸ்தாபம், பிளவு என்பது சகஜம். ஆனால் அது கணவன் - மனைவி இடையில் வந்தால் மட்டுமே திருமணமுறிவுகள் - ஏன் இப்படி? விவாகரத்தின் காரணங்கள், ஒருவரால் ஒருவருடன் வாழவே முடியாது, சகித்துக் கொள்ளவே முடியாது என்ற பட்சத்தில் விவாகரத்தை எதிர்பார்ப்பார்கள் அல்லது வேறு ஒருவருடன் வாழ துடிப்பதாலும் விவாகரத்து நிகழலாம் ஆனால் சிமின் தன் கணவர் ஒழுக்கமானவர், நல்லவர், அன்பானவர் ஆனாலும் எனக்கு விவாகரத்து வேண்டுமென்று நீதிமன்றம் சென்று வலுவான காரணமில்லாததால் அந்த விவாகரத்து ரத்தாவதே ’எ செப்பரேஷன்’ (A Separation) படத்தின் முதல் காட்சி.

நாதர்- சிம்மின் ஒரு நடுத்தர படித்த ஈரானிய குடும்பம், அவர்களுக்கு ஒரு பத்து வயது மகள் தெர்மே. ஈரானை விட்டு செல்ல விசா கிடைத்திருக்கிறது போக வேண்டுமென்று துடிக்கிறார் சிமின் ஆனால் ஆல்சைமர் நோயால் அறிவாற்றல் இழந்த நிலையில் வயதான தன் தந்தையை விட்டு வர மனமில்லாமல் நாட்டைவிட்டு செல்ல மறுக்கிறார் நாதர், வழக்கமான பெண்களின் துருப்புச்சீட்டான பெற்றவர் வீட்டுக்கு பிரிந்து சென்று தன் தேவையை கணவருக்கு நிரூபிக்க பார்க்கிறார் சிமின். தந்தையைப் பார்த்துக் கொள்ளவும் பிற வீட்டு வேலைகளுக்கு மட்டுமே அவள் தேவையென்பது போல் வேலையாளாக ரஸ்யாவை நியமிக்கிறார் நாதர். கர்பினியான ரஸ்யா வறுமையின் காரணமாக அந்த முதியவரை கவனித்துக் கொள்ள தன் சிறிய மகளையும் கூட்டிக் கொண்டு வந்து வீட்டு வேலைகளையும் அந்த முதியவரின் தேவைகளையும் செய்து தருகிறார். ஒருநாள் நாதர் வீட்டிற்கு நேரத்தோடு வந்துவிடுகிறார், வீட்டில் ரஸ்யா இல்லை, தந்தை கட்டிலிலிருந்து கீழே விழுந்து கிடக்கிறார் அவர் கைகள் கட்டிலில் கட்டியபடி. பத்து நிமிடம் கழித்து வீட்டுக்குள் நுழைந்த ரஸ்யாவை திட்டி தீர்த்து, திருட்டுப் பழியும் சுமர்த்தி வீட்டை விட்டு வெளியில் தள்ளுகிறார். மறுநாள் கர்ப்பம் கலைந்துவிட்டது என்று ரஸ்யாவின் வீட்டார் சிமினுக்குத் தெரிவிக்க, கணவன் -மனைவி இருவரும் சென்று பார்க்கிறார்கள். ரஸ்யாவின் கணவர் ஹோட்ஜாத் நாதர் தள்ளியதுதான் இதற்குக் காரணமென்று சினம் கொண்டு சண்டையிடுவதோடு வழக்கும் பதிவு செய்கிறார்.

ஈரானியன் படமான ‘எ செப்பரேஷன்’ நாதர்- சிமின் இருவரின் விவாகரத்தை மையமாகக் கொண்டு அதனை சுற்றி நிகழும் ஒரு கதைக் களம். வலுவான ஐந்து கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு மிக நேர்த்தியாக எழுதி இயக்கியுள்ளார் அஸ்கர் ஃபர்ஹாதி. அற்புதமான திரைக்கதைகள் ஆங்கிலப்படத்திற்கு மட்டுமே என்று தொடர்ந்து ஐந்து வருடங்களாக ஆஸ்கர் வாங்கி வந்ததைத் தகர்த்தது இந்த ஈரானியப் படம். சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை என்று கிட்டத்தட்ட நூறு விருதுகள் பெற்ற படம்.

இந்த கதையின் காட்சிகள் உண்மை- பொய் என்ற இரண்டுக்கும் இடையில் ஒரு இழையாக ஓடுகிறது. நாம் ஒவ்வொருவரும் நம் தேவைக்காக அல்லது பிழைப்பிற்காக எவ்வளவு சரளமாக பொய் சொல்கிறோம். இல்லை நாம் பொய் சொல்வதில்லை உண்மையை மறைக்க மட்டுமே செய்கிறோம் அல்லது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள இடத்திற்கேற்றாற்போல் நடந்து கொள்கிறோம். இதைத்தான் இந்த படத்தில் உடைத்தெடுக்கிறார் இயக்குனர். அதுவும் குழந்தைகளுக்குப் பொய் சொல்ல கூடாது என்று கற்றுக் கொடுக்கும் நாமே இந்த இந்தக் காரணங்களுக்குத் தெரிந்தவற்றை சொல்லாமல் மறைப்பது சரியென்பதாக மறைமுகமாக சொல்லித் தருகிறோம். இதை இயல்பாக காட்டியிருக்கிறார் இயக்குனர் அஸ்கர்.

ஈரானிய வாழ்க்கை முறையை அவர்கள் உடுத்தும் உடைகளிலும் இருக்கும் இடத்தையும் வைத்தே சித்தரித்திருக்கிறார். படித்த, மேற்கத்திய கலாச்சாரத்தில் விருப்பமுள்ளவராக சிமினை காட்ட வெறும் அவரின் இறுக்கமில்லாத உயர் ரக தலைச்சீலையையும், வெளிநாட்டுக்குச் செல்லும் விருப்பத்தையும், ஒரே ஒரு காட்சியில் அவர் படித்துக் கொடுப்பவராக காட்டும் இயக்குனர், வீட்டு வேலைக்கு வரும் இறையச்சம் நிறைந்த ரஸ்யாவை கருப்பு அங்கியால் தன்னை இறுக்கிக் கொண்டு, வயதானவரின் கழிவுகளை அகற்றவும் முதியவரின் கால் உடுப்பை கழற்றவும் கூட ஒரு மார்க்க அறிஞரை அழைத்து ’இதில் தவறில்லையே’ என்று கேட்டு அறிந்து கொள்ளும் காட்சிகள் சான்றளிக்கும் அஸ்கர் சிறந்த இயக்குனரென்று. படத்தில் வரும் இரு குழந்தைகளின் நிலைப்பாட்டை முழுநீள வசனமில்லாத அவர்களின் முகபாவங்கள் பேசிவிடுகின்றன. பெண்களை அடிப்பவர் மிருகம் அப்படியானவன் நானில்லை என்று பேசும் ஹோட்ஜாத் இறுதி கட்டத்தில் மனைவி மீதுள்ள கோபத்தை தன்னைத் தானே அடித்து வெளிப்படுத்தி விளக்கும் கட்டுப்பாட்டை நம்மூர் ஆண்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். தன் மகளின் பாடத்தில் உதவும் தந்தை தம் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுவதோடு, தமக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தையிடம் வெளிக்காட்டாது அவளுக்கு நேரத்தை ஒதுக்கும் நல்ல தந்தையென்று சின்னச் சின்ன காட்சிகள் ஹைகூ போல் உணர்த்தி நம்முள் ஒட்டிக் கொள்கிறது.

படத்தின் முடிவில் தெர்மே தம் எதிர்காலத்தை யாருடன் ஆரம்பிக்க போகிறார் தாயா தந்தையா, அதன் பின்னனி நியாயங்களை இயக்குனர் எப்படி நிரூபிக்கப் போகிறார் என்ற புதிரோடு முடிகிறது படம்.

இயக்குனர் ஒரு கவிஞராகத்தான் இருக்க முடியும் காரணம் கடைசி காட்சியில் சிமின், நாதர், தெர்மே மூவரும் கருப்பு உடை அணிந்திருப்பதை ஒரு படிமமாகக் காட்டி நாதர் தன் தந்தையை இழந்துவிட்டதை உணர்த்துவதோடு, பிரிவில் துக்கம் நீடிக்கிறது என்பதையும் உணர்த்துகிறார்.

மெய்யும்- பொய்யும் விளையாடும் வாழ்க்கை நாவலை படித்து முடித்த திருப்தியை நமக்குள் ஏற்படுத்திவிடுகிறது ‘எ செப்பரேஷன்’.

Wednesday, November 21, 2012

அறம் செய விரும்பு - ‘The Blind Side'


பெரும்பாலான படங்களில் நடிகர்கள் நடிப்பார்கள் ஆனால் ஒரு சில படங்களில் மட்டும் தான் அந்த கதாபாத்திரத்திற்கு நடுவே நாம் உட்கார்ந்து கொண்டு அவர்கள் வாழ்வு முறைகளைக் கவனிப்பது போன்ற உணர்வு ஏற்படும். அப்படியான உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது ‘தி பிளைண்ட் சைட்’.
2009 வெளிவந்த ஒரு அமெரிக்க கால்பந்து விளையாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் மைக்கெல் ஓஹெர் என்பவரின் வாழ்வியல் தான் ’தி பிளைண்ட் சைட்’. உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு கிடைத்த பல விருதுகளில் 2010 சிறந்த நடிகைக்கான (Academy Award for Best Actress) ஆஸ்கர் விருது சான்ரா புல்லக்குக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை, தேர்ந்த, மிக இயல்பான, கொடுத்த கதாபாத்திரமாக மாறியதற்கான பரிசு. படத்தின் இயக்குனர் ஜான் லீ ஹன்குக் 2006-ல் வெளிவந்த புத்தகத்தைப் படிக்கும் போதே இந்தக் கதாபார்த்திரத்தில் இவர்கள் பொருந்துவார்கள் என்று நினைத்து சாதித்த படமா என்று தெரியவில்லை. ஒரு சம்பவத்தைப் படிக்கும் போதும் கேட்கும் போதும் அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து உலா வரச் செய்திருப்பதின் வெற்றியே இந்தப் படம். ஒரு சில படங்களில் கதையின் கரு சிறியதாக இருக்கும் அதனை நீட்டி முழக்க பல காட்சியமைப்புகளும் அதுவும் தமிழ்ப்படமென்றால் கேட்கவே வேண்டாம் 5-6 பாடல் காட்சிகள், 4-5 சண்டைக்காட்சிகள், சிரிப்பு காட்சிகள் என்ற இடைச்செருகலாக துண்டு துண்டாகக் கிடக்கும். ஆனால் உண்மையில் நிகழ்ந்த சம்பவங்களில் அந்தந்த கதாபாத்திரத்தை ஒரே காட்சியில் புரிய வைக்கவும், நம் மனதில் ஆழமாகப் பதிய வைக்கவும் மிகவும் தேர்ந்தெடுத்த காட்சிகளை அமைத்திருப்பது இந்தப் படத்திற்கு வலுவாக அமைந்திருக்கிறது.


நாம் அன்றாட வாழ்க்கையில் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்கிறோம். நம்மைப் போல் அல்லாதவர்களை அந்நியமாகக் கருதுவோம் - அது உருவத்தில், இனத்தில், மொழியில், நிறத்தில் எப்படியான வேற்றுமையாகவும் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக அப்படிப்பட்ட ஒருவரை நாம் கடந்தே சென்றிருப்போம். முகம் சுழித்திருப்போம், அருவருப்பு அடைந்திருப்போம். அப்படியில்லாமல் ஒவ்வொருவருக்குள்ளும் நற்குணங்களும், நல்ல திறமையும் ஒளிந்துகிடக்கிறது அதனை நாம் அறிவுக் கண்களால் பார்க்காமல் புறக் கண்களில் பார்த்து அதனைத் தவிர்த்து கடந்து செல்கிறோமென்று என்றாவது உணர்ந்ததுண்டா?


அப்படி ஒவ்வொருவரும் உணரத் தொடங்கினால் வேற்றுமையில் ஒற்றுமை மட்டுமல்ல இல்லாதவர்கள் இல்லாத உலகத்தை நாம் அமைத்திட முடியும். Don't judge a book by its cover என்று ஒரு ஆங்கிலச் சொற்றொடர் உண்டு அகத்தின் அழகு முகத்தில் சமயங்களில் தெரியாது நாம் தான் தேடியெடுக்க வேண்டுமென்று மனிதம் பேசும் படம் இது. இப்படித்தான் இந்தப் படத்தின் நாயகி லெய் ஆன் தொஹியும் (சான்ரா புல்லக்) இயல்பிலேயே அவருக்குள் இருக்கும் அவரது இரக்க குணம் மைக்கெல் ஒஹெர்ரை கடந்து செல்லும் போது அன்றைய தினத்தில் அவருக்கு உதவலாமென்று வீட்டிக்குள் அழைத்துச் சென்று, பின்பு தமது சொந்தப் புதல்வனாகவே தத்தெடுத்துக் கொள்ளும் அற்புதங்கள் நிகழ்கிறது. இதையெல்லாம் ஒரு நல்ல கிருத்தவரால்தான் முடியுமென்று மதத்தை சில இடங்களில் தூக்கிப்பிடித்தாலும் அது கதையை எந்த வகையிலும் சிதைக்கவில்லை.


கருப்பினத்தைச் சேர்ந்த மைக்கெல் ஓஹெர் ஆஜானுபாகுவான உடல் அமைப்பு கொண்டவர். ’கிங்காங் பக்கத்தில் ஆன் டாரோ இருப்பது போல் மைக்கெல் ஓஹெர் அருகே நீ’ என்று லெய் ஆன்னின் தோழிகள் கிண்டல் செய்யும் அளவிற்கு இருவருக்குள் அவ்வளவு உருவ வேற்றுமைகள் இருந்தாலும் தம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக்கிக் கொள்வதில் அவளுக்கு மட்டுமல்ல அவருடைய கணவர் சியான் மற்றும் குழந்தைகள் கோலின்ஸ், எஸ்ஜே ஆகியோருக்கும் விருப்பம் என்பதை காட்சியமைப்புகளிலேயே பிரமாதமாக காட்டியுள்ளார் இயக்குனர் ஜான் லீ.


”மைக்கெல் ஓஹெரை வீட்டில் ஒருவராக ஆக்கிக் கொள்வதால் பதின்ம வயதிலிருக்கும் உன் மகளுக்கு பாதுகாப்பில்லை” என்று மைக்கெல் இனத்தின் மீது நம்பிக்கையில்லாத வெள்ளைக்காரிகளைக் காரி உமிழ்கிறார் லெய் ஆன். தன் மனைவியின் சொற்களுக்கு மரியாதை தரும் சியான், மற்றவர்களுக்கு உதவுவதில் தான் மட்டற்ற மகிழ்ச்சி என்ற தன் மனைவியின் சுபாவத்தை புரிந்து கொண்டு ஒத்துழைக்கும் நல்ல கணவர். யாரென்ன கேலி பேசினாலும் இவர் என் சகோதரர் என்று பள்ளி நூலகத்தில் மைக்கெல் அருகே வந்து அமரும் கோலின்ஸின் முகபாவங்களே போதும் அவருக்கு அங்கு வசனமே தேவையற்றது. பத்து வயதில் தென்படும் எஸ்ஜேதான் மைக்கெலின் உற்ற தோழன் அமெரிக்க கால்பந்தில் மைக்கெலுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதே இந்தச் சிறுவன் தான். இப்படியான கதாபாத்திரங்களுடன் அழகாகக் கதை நகர்கிறது. இரவில் தாய் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் ’ஃபெர்டினந்த் அண்ட் தி புல்’ (Ferdinand & the Bull) கதை கூட இந்தப் படத்தில் முக்கிய அம்சம் பெறுகிறது. நம்மூர் சீரியல் போல் பல மாதங்களுக்கு பிறகு பார்த்தாலும் புரியுமே அப்படியில்லாமல் ஒவ்வொரு காட்சிக்கும் முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள்.


கதைச்சுருக்கம் படிப்பதைவிட இந்தப் படத்தை தேடிப்பிடித்து பார்த்துவிடுங்கள் இரசிப்புத் தன்மையுடையவர்களுக்கு கட்டாயம் பிடிக்கும், எனக்குப் பிடித்தது போல.

Tuesday, July 17, 2012

தனியே..தன்னந்தனியே...


’தனிமையிலே இனிமை காண முடியுமா?’ கே.டீ.சந்தானம் அவர்கள் எழுதிய அழகிய பாடல். இந்தப் பாடலையே நிறைய பேர் தனிமையில்தான் இரசித்திருக்கக் கூடும். இப்போதெல்லாம் அலுவல் காரணமாக எனக்குத் தனிமையில் மதிய உணவு சாப்பிடும் வாய்ப்பு அமைகிறது. எங்கேயாவது வெளியில் வேலை விஷயமாகச் சென்று விட்டு அவசரகதியில் ஒரு 'சாண்ட்விச்' எல்லாமில்லை. என்னதான் அவசரகதியில் இருந்தாலும் சாப்பிடும் நேரத்தை சுவாரஸ்யமானதாக ஆக்கிக் கொள்வது என் வழக்கம். அன்றும் அப்படித்தான். துபாய் மரினா மால் 'ஃபுட்கோர்ட்டில்' அமர்ந்திருந்து என்னைச் சுற்றியிருக்கும் எல்லோரையும் கவனிக்கும்படியான ஒரு இடத்தில் என்உணவுடன் அமர்ந்து சூழலை இரசிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாட்டவரும் ஒவ்வொரு விதம். அதுவும் ’ஃபுட்கோர்ட்’ அனைத்து விதமானவர்களையும் ஒருங்கிணைக்கும் இடமாயிற்றே. அதனால் ஒரே இடத்தில் வெவ்வேறு நாட்டவர்கள் தங்களுக்குப் பிடித்தவற்றைச் சாப்பிடும் விதம், அலட்டும் தொனி, சண்டை பிடிக்கும் அழகு, சக ஊழியர்களைக் கிண்டலடிக்கும் காட்சி, குழந்தைகளைப் பராமரிக்கும் கலையென்று அந்த ஓரத்தில் உட்கார்ந்து ஓராயிரம் விஷயங்களைச் சிந்தையில் படித்துத் தெரிந்து கொண்டேன்.
வேடிக்கை என்னவென்றால், அந்த இடத்தில் என்னைத் தவிர தனியாக என்று யாருமே வந்திருப்பதாக எனக்குத் தென்படவில்லை.காதலர்களாக, கணவர்- மனைவியாக, குடும்ப சகிதமாக, வேலை பார்க்கும் சக ஊழியர்களுடன் அல்லது நண்பர்களுடன் மட்டுமே வந்திருந்தார்கள். ஒற்றையாளாக சாப்பிடும் நபர் கூட தனியாகவே இல்லை – ஒன்று கைப்பேசியில் பேசியபடி, அல்லது செல்பேசியில் சுவாரஸ்யமான விளையாட்டுடன், அல்லது செல்பேசியில் வேகமாக குறுஞ்செய்தி அதுவுமில்லையென்றால் மடிக்கணினியின் திரையில் ஏதோ இரசித்து சிரித்தபடி அல்லது பேச்சாடல் செய்தபடியென்று. வீட்டில் கூட நம் கூடவே இருந்து நம்மைச் சிரிக்கவும் சமயங்களில் அழ வைக்கவும், நம் மனநிலையைக் கூட மாற்றும் வல்லமை படைத்ததாகிவிட்டது தொலைகாட்சியும், வானொலியும். பேச பக்கத்து வீட்டார் இல்லாவிட்டாலும் கையில் சிணுங்கிக் கொண்டு தவழும் கைப்பேசியென்று உலகமே சுருங்கிவிட்டது. உண்மையில் இப்போதெல்லாம் யாருமே தனிமையில் இருப்பதில்லை. இனி உங்களுக்கு என்னைப் போல் என்றாவது தனிமையில் இருக்கும் வாய்ப்பு கிடைத்ததென்றால் அந்த நொடியை இரசித்து இனிமையுடன் இருங்கள் ஏனெனில் இப்போதெல்லாம் தனிமை அரிதாகிவிட்டது.

Wednesday, April 11, 2012

கனவான நிஜங்கள்


எல்லாமும் கனவாகவேதான் எனக்கு இன்னும் தோன்றிக் கொண்டு இருக்கிறது. சில நேரங்களில் `இது கனவுதான் கனவுதான்` என்று எனக்குள் நானே சத்தமாகச் சொல்லி இன்றும் என்னை நானே சமாதானம் செய்து கொண்டிருக்கிறேன். சில நேரங்களில் மனதிற்குத் தெரியும் ஆனால் `பீறிட்டு வரும் அழுகையை அடக்குவது எப்படி?` என்று சிறப்புப் பயிற்சி பெறாதவளாக, அது பற்றி யாராவது புத்தகம் எழுதி இருக்கிறார்களா என்று இன்னும் தான் தேடிக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் சிலர் ஆறுதல் சொல்ல வந்தால் எப்படி என்னுடைய எதிர்வினையிருக்குமென்று எனக்கே தெரிவதில்லை. சமயங்களில் சிரித்தவாறே தலையாட்டி அப்படியே பேச்சை மாற்றிவிடும் நானே, சிலர் என்னிடம் இது பற்றி விசாரிக்கவில்லை என்றும் வருத்தப்பட்டிருக்கிறேன். என் வருத்தத்தில் நியாயமில்லாமல் இல்லையே. எல்லோரிடமும் எல்லாவற்றையும் நாம் எதிர்பார்ப்பதில்லை. அப்படி எதிர்பார்ப்பவர்களே அதைப் புரிந்து நடந்து கொள்வதில்லை எனும் போது மனது வலிக்கவே செய்கிறது. மனம் ஒரு குரங்கு என்று எதை வைத்துச் சொன்னார்கள் என்று தெரியவில்லை ஆனால் என் விஷயத்தில் அது சரிதான், இல்லையென்றால் இப்படி ஒரே விஷயத்திற்கு இப்படி அப்படி என்று மாறி மாறி நினைக்குமா என்ன?

யார் வீட்டில் தான் இப்படியான சம்பவங்கள் நிகழவில்லை என்று யோசிக்கும் நான், ஏன் இப்படியான சம்பவங்கள் நிகழ்கின்றன என்றும் யோசிக்கின்றேன். என்னை மிகவும் தைரியசாலியானவளாக, மனதிடம் உடையவளாக காட்டிக் கொண்டாலும் இந்த விஷயத்தில் நான் ரொம்பவே பலவீனமானவள் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். பொங்கி வரும் கண்ணீரைத் தனியாக உதிர்த்துவிட்டு உரத்த குரலில் ஆறுதல் சொல்லும் மடமைமிக்க தைரியசாலி நான். இந்த மனப்போராட்டத்திலிருந்து விடுபட என்னை நானே வெவ்வேறு விஷயங்களில் அதிகமாகவே ஈடுபடுத்திக் கொள்கிறேன். என் தலையில் நானே பணிப்பளுவை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறேன். அளவுக்கு அதிகமாக சிரிக்கிறேன். ரொம்பவே மகிழ்ச்சியாக இருப்பதாக பம்மாத்து புரிகிறேன். எப்படி இப்படி மோசமான சூழ்நிலையிலும் இவ்வளவு கச்சிதமாக யாருக்கும் தெரியாத அளவுக்கு நடிக்கிறேன் என்று எனக்கு நானே சபாஷும் சொல்லிக் கொள்வதுண்டு. மிக மிக நெருக்கமானவர்களுக்குக் கூட புரியாத அளவுக்குத் திறமையாக சூழல்களைக் கையாண்டாலும் சமயங்களில் தனிமையில் அழுது புலம்புவதை அவர்களும் தெரியாதது போலவே என்னைவிட சாமர்த்தியமாக நடிக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியாமலில்லை.

வாழ்க்கையென்றால் ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொன்றும் முடிவுக்கு வரத்தான் செய்யுமென்று பொதுப்படையாகச் சொன்னாலும், ஏன் இப்படியான வாழ்க்கை என்று சலிப்படையவே செய்கிறது மனது. முதல் முதலில் துபாய்க்கு அவர்களை விட்டுப் பிரிந்து வரும் போது வாழ்க்கையில் நான் என்றுமே வடித்திடாத அளவுக்குக் கையில் வைத்திருந்த கைக்குட்டையும் கொள்ள முடியாத அளவுக்கு ஈரம் சொட்டியது. அந்த இருபதாவது வயதில் தற்காலிகப் பிரிவென்றாலும் அது என் முதல் பிரிவு என்பதால் அப்படியிருந்தது. அதன் பிறகு ஊரில் நெருக்கமானவர்கள் இழப்பென்றாலும் அந்த நொடிக்கு வருத்தப்பட்டுவிட்டு, அவர்களுக்கு ஆறுதலாக ஒரு தொலைபேசி செய்துவிட்டு வேலைகளைத் தொடர்வேன்.
என் நெருங்கிய தோழி இழப்புக்குப் பிறகு இதைவிட பெரிய இழப்பு வாழ்க்கையில் நான் சந்திக்கவே கூடாது என்பதாகவே என் எல்லா நேர துவாவும் (பிரார்த்தைனையும்) இருந்தது. என் தாய் மாமா, சாச்சா, கன்மா என்று நிகழ்ந்த இழப்புகளெல்லாம் தவிப்பையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியதே தவிர இப்படியான மனதளவு பாதிப்பை நான் சந்தித்ததில்லை. ஊருக்குச் செல்லும் போது அவர்கள் இல்லாத வெறுமையை உணரும் போது அந்த இடத்திலிருந்து கிளம்பி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நான் எதையும் நேரில் பார்க்காததாலோ என்னவோ அவர்கள் இருப்பதாகவே கருதிக் கொள்வேன். விமான விபத்தில் குடும்பத்துடன் பாக்கியவானாக சென்று விட்ட நண்பனை இன்னும் நினைத்தால் கண்கள் ஈரமாகிவிடும். என் கண்கள் உறுதியான முல்லை பெரியார் அணையில்லை இப்படியான திடீர் இழப்புகள் அதுவும் எதிர்பாராத இழப்புகளை நேரிடும் போது வற்றாத ஊற்று அருவியாக மாறிவிடுகிறது. என் சாச்சி அவள் மகளை இழந்த போது அவளுக்கு யாரும் ஆறுதல் சொல்ல முடியாமல் அழுதுகொண்டிருந்த போது நான் மட்டும் இறுகியவளாக `எல்லாம் நன்மைக்கே, அவள் உலகில் கஷ்டப்படுவதை விட இந்த முடிவு அவளுக்கு சாந்தியை தரும்` என்று பெரிய மனுஷியாக சமாதானப்படுத்திய நான் எனக்கென்று வரும் போது சமாதானப்படுத்த வருபவர்களிடமிருந்து ஓடி ஒளிகிறேன்.

எல்லோரும் பயந்து கொண்டிருந்த வேளையிலும் கண்டிப்பாக எதுவும் விபரீதம் நடந்துவிடாது என்று உறுதியாக நம்பிக்கை வைத்தேன்... அந்த நம்பிக்கை யார் மீது எதன் மீது என்று இன்னும் புலப்படவில்லை.

இப்போதெல்லாம் ஆரோக்கிய வாழ்வைப் பற்றி யாரும் பேசினால் நகைப்பாகவே உள்ளது. அன்று என் தோழி எனக்கு `இதயத்தை பாதுகாத்துக் கொள்ள சிறந்த வழிகள்` என்பதாக ஒரு மடல் அனுப்பியிருந்தாள். என்னையும் அறியாமல் அவளை திட்டி `SCAயை எப்படி தடுப்பதாம்? அதற்கு எந்த மருத்துவர்களும் ஒழுங்கான பதில் சொல்ல முடியாது. போகிற உயிர் எப்பவேண்டுமானாலும் போய்விடும் இதெல்லாம் தெரிந்து ஒரு மண்ணாங்கட்டியும் ஆகப்போவதில்லை` என்று பதில் எழுதினேன். அவள் என்னை நேரில் சந்திக்கும் போது `அது ஒரு சாதாரண ஃபார்வேர்ட் மடல்தானே அதற்கேன் இப்படி தெறிக்கிறாய்` என்று முகத்திற்கு நேரே கேட்கும் போது என் கோபத்தைத் தவறான இடத்தில் காட்டியது புரிந்தது. என் கையாலாகாத்தனத்தை யாரிடம்தான் காட்டுவது?

மது அருந்துபவர்கள் அருந்தாதவர்கள், புகைப்பிடிப்பவர்கள் பிடிக்காதவர்கள், நாவை அடக்க முடியாமல் அதிகம் சாப்பிடுபவர்கள் மிகக் கட்டுபாட்டுடன் சாப்பிடுபவர்கள் என்று எந்த பாரபட்சமும் `மரணத்திற்கு`த் தெரிவதில்லை. வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரம் வந்துவிட்டதென்றால் சுலபமாக உயிரை பிடுங்கிக் கொண்டு போய்விடும், கூடவே உயிர் வாழ்பவர்களின் சந்தோஷத்தையும். நான் மரணமில்லாத வாழ்வை விரும்பவில்லை ஆனால் எப்போது நிகழுமென்று தெரியாத மரணம் உறுதியென்ற வாழ்வை விரும்பவில்லை. நான் மிக சுயநலவாதி அதனாலேயே என் மரணத்தைப் பற்றி நான் பயப்படுவதில்லை மற்றவர்கள் அதுவும் மனதிற்கு நெருங்கியவர்கள் இழப்பைக் கண்டு அஞ்சி ஓடுபவள். இப்போதெல்லாம் நாள் நட்சத்திரம் பார்த்து பிள்ளையை அறுவை சிகிச்சையில் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்தாலும் எப்போது மரணம் வருமென்று யாராலும் சொல்ல முடிவதில்லை. எல்லோரும் 80 வயதை அடையும் போது வழியனுப்பி, பார்க்க நினைப்பவர்களைச் சந்தித்து, அனுபவிப்பதையெல்லாம் அனுபவித்து கடமைகளைப் பூர்த்தி செய்துவிட்டு, எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு உறங்கச் செல்லும் வாய்ப்பிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்றே தோன்றிக் கொண்டிருக்கும் ஒரு கிறுக்குத்தனமான - ஆனால் - எல்லோரும் விரும்பக் கூடிய ஆசை எனக்கும் இல்லாமலில்லை.

எப்படி சாப்பாட்டு இலை சாப்பிட்ட உடன் எச்சிலையாகிவிடுகிறதோ அதே போல எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவர் இறந்த பிறகு வெறும் சடலம். `அவர்கள்` என்ற வார்த்தையும் `அது` என்று மாறிவிடுகிறது. வீட்டுக்கு வந்தவர்களை எல்லோரிடமும் அறிமுகம் செய்து பேச்சுக் கொடுத்து மகிழ்பவரை இறுதியாகப் பார்க்க அவரைச் சுற்றி வரிசையாக. வரிசையில் நிற்கும் அந்தக் காட்சியைப் பார்க்கும் போது எனக்கென்னவோ மரண வரிசையில் நாம் அனைவரும் நிற்பது தெரிந்தது. நினைவு தெரிந்து யார் சடலத்தையும் பார்த்திராத எனக்கு மிகுந்த அதிர்ச்சி கலந்த பாதிப்பு. வாழ்வின் உண்மையை உரக்கக் காதில் சொன்னது. எப்போதும் மருதாணியும் கையுமாக பளிச்சென்ற உடை அணியும் உம்மாவுக்கு வேற உடுப்பு தந்து கையை மறைத்து உட்கார வைத்திருந்தவரை காண வரும் அனைவரும் `எப்போதும் எங்கேயும் ஜோடியாதானே போவீங்க` என்று ஆதங்கத்துடன் எல்லோரும் ஒரே மாதிரியான ஆறுதல் சொன்னது எரிச்சலை வரவழைத்தது. `நீங்களெல்லாம் இப்படி இருந்தால் எனக்கு யாருமா ஆறுதல் சொல்வாங்க` என்று உம்மா அழுதது இன்னும் காதில் ஒலிக்கிறது. `சாதாரண மாதாந்திர வயிற்று வலி வந்தாலும் எனக்காக அவர் துடிக்கும் அந்த உண்மையான அன்பை இனி யார் உருவில் பார்ப்பேன்` என்று குரலெடுத்து அழும் அக்காவை சமாதானப்படுத்த முடியாமலும், `என் மகள் ரொம்ப நல்ல சமைத்திருக்கிறாள்` என்று ம்மாவிடமும் வருபவர்களிடமும் சொல்லி மகிழ்பவரை இனி எப்போது பார்ப்பேன் என்று ஒவ்வொரு சம்பவமாக அக்கா சொல்லி அழும் போது இப்படியான சின்னச் சின்ன சந்தோஷங்களை நான் தொலைவில் இருந்துவிட்டதால் இழந்திருக்கிறேன் என்று புரிந்தாலும், அதே சமயம் இப்பவே இப்படியிருக்கிறேனே, இவ்வளவு பாதிப்பில் மழுங்கிக் கிடக்கிறேனே அவளைப் போலிருந்தால் என் மூச்சும் நின்றிருக்குமோ அப்படி நின்றிருந்தால் இவ்வளவு வருத்தத்தை உணர்ந்திருக்க வேண்டாமோ என்று நினைக்கும் தருணம் என் மகன் அருகில் வந்து `ஏன் ம்மா அழுறீங்க, நீங்க அழுதா எனக்கும் அழுகை வருது` என்று என் கண்ணீருக்குக் காரணமறியாத அந்தப் பிஞ்சு உள்ளத்திற்காக அந்த நொடிக்குச் சமாதானம் ஆனவள் போல் நடிக்க ஆரம்பித்து அந்த நடிப்பை இன்றும் தொடர்கிறேன்.

தொலைதூரத்தில் இழப்புகள் கேட்கும் போதெல்லாம் அவர்களுக்காக மனமார பிரார்த்திப்பேன், வருத்தத்துடன் ஒரு சம்பிரதாய வார்த்தையாக `சபூர் செய்யுங்கள்` (பொறுமையுடன் இருங்கள்) என்று தொலைபேசுவேன். அவர்களுடன் நடந்த சிறந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வேன் அவ்வளவுதான். ஆனால் அந்த `சபூர் செய்யுங்கள்` என்ற வார்த்தையின் பலத்தை அந்த நொடியில்தான் உணர்ந்தேன். அதன் ஆழத்தை அப்போதுதான் கிரகித்தேன். மரண விசாரிப்பு என்று வந்தாலே என்ன பேசுவது எப்படிப் பேசுவது என்று தெரியாமல் திணறும் நான். இன்று எப்படிப் பேசுவது என்பதை அனுபவித்துத் தெரிந்து கொண்டேன். வாழ்க்கை பாடத்தைப் புரட்டிப் பார்த்துப் புரிந்து கொண்டாலும் எல்லாமும் கனவாகவேதான் எனக்கு இன்னும் தோன்றிக் கொண்டு இருக்கிறது. இது கனவுதான், அதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை.
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி