Saturday, December 30, 2006

தீயாக திருநாளில் சதாம் பலி(ழி)

சதாமின் கடைசி காட்சிகள்:

http://www.youtube.com/watch?v=Gf1R_m31KpE&mode=related&search=



1982-ம் ஆண்டு துஜைல் என்ற இடத்தில் ஷியா முஸ்லிம்கள் 148 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின்

தீர்ப்பாக இன்று சனிக்கிழமை காலை 6 மணிக்கு (அமீரக நேரம் 7 மணிக்கு) தூக்கிலிடப்பட்டார்.

148 பேரை படுகொலை செய்ததற்கு சதாமுக்கு தூக்கு தண்டனை என்று தீர்ப்பு. ஆனால் சதாமை பிடிக்க பல

ஆயிரம் அப்பாவி மக்களை கொன்று குவித்தவர்களுக்கு யார் தண்டனை தருவது?

இஸ்லாமியப் பெருநாளில், ஆட்டை பலி கொடுக்கும் தியாகத் திருநாளில், சதாமுக்கு மரண தண்டனை கொடுத்து கொண்டாடுகிறார்கள் காட்டுமிராண்டிகள்.

சதாமின் அழிவு முடிவா? இல்லை ஆரம்பமா? காலம்தான் பதில் சொல்லும்.

Friday, December 29, 2006

சிம்ரனுக்கொரு நியாயம் ரஜினிக்கொரு நியாயமா?

சந்திரமுகியில் வாய்ப்பு புட்டுக்கிச்சு, அப்போ சிம்ரன் கர்ப்பமா இருந்தது காரணம். வயிற்றில் புள்ளய வச்சிக்கிட்டு 'ரா.. ரா..' ஆடியிருந்தால் ஜோதிகா ஆடின 'அந்த' ஆட்டம் வந்திருக்குமா? இப்ப சிம்ரனுக்கு குழந்தை பிறந்து ஒன்றரை வருஷமாகிறதாம், மீண்டும் பணம் சம்பாதிக்க ஆசை வந்துவிட்டது. ருசி கண்ட பூனையாச்சே அவ்வளவு லேசில் திரைத்துறையை விட்டு போக முடியுமா?

அதனால்தான் மீண்டும் திரைதுறைக்கு வந்துவிட்டார். விளம்பரங்களில் வலம் வருபவரை இயக்குநர்கள் அணுகி தாரளமாக அக்கா, அண்ணி, அம்மாவாக நடிக்க நிறைய வாய்ப்புக்கள் தருகிறார்களாம்.

பேரன் கண்ட பிறகும் ரஜினி கதாநாயகனாக வருவார் நாம் பார்க்க வேண்டும். பூசணிக்காய் உடம்பை வைத்துக் கொண்டு சின்னஞ்சிறுசுகளுடன் கைக்கோர்த்து ஆடுவார் விஜயகாந்த் பார்த்துத் தொலைக்க வேண்டும். கமலுக்கு இன்றும் இரண்டு ஜோடிகள் கேட்கிறது. சரத்குமார் முகத்தில் பல சுருக்கம் வந்த பிறகும் நாயகிகளுடன் மரத்திற்கு மரம் மாறி கண்ணாமூச்சி விளையாடுவார் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால் நம்ம கதாநாயகிகள் திருமணமாகி ஒரு குழந்தைப் பெற்றுவிட்டால் அக்கா அண்ணி வேடம்தான் கிடைக்கிறது. என்ன அநியாயம். ஆண்களுக்கு ஒரு நியாயம் பெண்களுக்கு ஒரு நியாயமா? இன்று நேற்றல்ல காலகாலமாக நடந்து வரும் அநியாயம்தான் இது. 'பராசக்தி'யில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்த பண்டரிபாய், 'அன்னையின் ஆணை'யில், இன்னும் பல படங்களில் சிவாஜிக்கு தாயாக நடித்திருக்கிறார். இதே கொடுமையைதான் ரஜினி செய்தார், 'எங்கயோ கேட்ட குரலில்' மீனா மகளாக நடித்து விட்டு, 'வீரா', 'முத்து' படங்களில் ரஜனிக்கு ஜோடியாக வந்தார். ஆண் ரசிகர்களுக்கு எப்பவுமே பார்க்க புதுசு புதுசாக தினுசு தினுசாக இளமை துள்ளும் கதாநாயகிகள் வேண்டும் போலும். ஆண் ஆதிக்கம் நிறைந்த திரையுலகில் இப்படிப்பட்ட கொடுமைகள் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கும். பாவம் சபிக்கப்பட்ட கதாநாயகிகள்.

இந்த வரிசையில் சிம்ரன் தனி இரகம்தான். அணுகிய இயக்குநர்களுக்கு பதிலடியாக 'இன்னும் இளமை துடிப்பில்தான் இருக்கிறேன், கதாநாயகி வேடமென்றால் வாங்க, இல்லாட்டி சோலியப் பார்த்துக்கிட்டு போங்க' என்று சொல்லிவிட்டாராம். பிடிவாதத்திலும் ஒரு அர்த்தமிருந்திருக்கிறது, இப்போது தெலுங்கில் இரட்டை வேடம் நடிக்க வாய்ப்பு தந்திருக்கிறார் இயக்குநர் ஓ.வி.எஸ். சவுத்ரி. படத்தின் பெயர் 'ஒக்கமகடு', ஜோடியாக பாலகிருஷ்ணா.

Wednesday, December 27, 2006

ஐஸ்வர்யா ராயின் முதல் கணவர்...

முன்னால் உலக அழகி ஐஸ்வர்யா ராய் சல்மான் கான், விவேக் ஓப்ராய், அபிஷேக் பச்சன் என்று பலருடன் இணைத்து பேசப்பட்டாலும், அவருடைய முதல் கணவர் யார் என்பதை அறிந்து திடுக்கிட்டேன்.

வாரனாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர்/ சங்கட் மோச்சன் (Sankat Mochan) கோவிலில் மாங்கல்ய தோஷத்துக்கு பரிகார பூஜை நடத்தி, யாகம் வளர்த்து (யாஷ் -கிர்த்தியானா) வாழை மரத்தை திருமணம் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

மங்களூர் அருகில் உள்ள மங்கல்பாடியை சேர்ந்த ஜோதிடர் சந்திரசேகர் சுவாமியின் அறிவுரையின் பேரில்தான் இந்தக் கல்யாணம் நடந்ததாம். ஹரிவன்ஷ்ராய் பச்சனின் 99-ம் பிறந்தநாளையொட்டி வாரனாசியில் நடந்த பூஜையின் போது ஐஸ்- அபிஷேக்கின் இடது புறம் இருந்ததை வைத்துத்தான் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து விட்டது என்று புரளிகள் கிளம்பியது. ஆனால் ஐஸ்வர்யாவின் மாங்கல்ய தோஷம் காரணமாகவும், பிற தோஷங்களின் ஆதிக்கம் இருந்ததாலும் அவர்களது திருமணம் இந்த ஆண்டின் (2006) கூட்டுத்தொகை 8 என்பதாலும் அவர்களது திருமணம் 2007-ல் மகர சங்கராந்திக்குப் பிறகு ஜனவரி 14-க்கும் பிப்ரவரி 27-ம் தேதிக்கும் இடையில் நடைபெறலாம் என்று அந்த ஜோசியரே சொல்லியிருக்கிறார்.

இவரது அறிவுரையின் பேரில்தான் தோஷம் நீங்க ஐஸ்வர்யா ராயுக்கும் வாழை மரத்திற்கும் திருமணம் நடந்ததாம்.

எனது கேள்வியெல்லாம்:

1) இந்த 21-ம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு மூடப்பழக்கத்திற்கு எப்படி துணைப் போக முடிந்தது ஐஸ்வர்யாவினால்?

2) அப்படியானால் அழகிப் போட்டிகளில் அறிவுக்கும் வேலை உண்டு என்பது வெறும் கண்துடைப்புதானா?

எப்படியோ அந்த வாழை மரம் அதிர்ஷ்டசாலி என்று பல ஆண்கள் வெதும்பினாலும் ஒரு முட்டாள் பெண்ணை மணந்த துயரமே மிஞ்சும் அந்த வாழை மரத்திற்கு என்பது என் கணிப்பு.

Sunday, December 24, 2006

தினத்தந்தியில் சவுதி அரேபியாவில் துபாய்?

பெரிய பத்திரிக்கை, பிரபல பத்திரிக்கை ஆனால் பூகோளம் தெரியாத பத்திரிக்கை. தினத்தந்தியில் ஒரு செய்தி. கீழே உள்ள சுட்டியை சுடக்கி படிக்கவும்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=305233&disdate=12/24/2006

சவுதி அரேபியா ஒரு தனி நாடு அதில் ரியாத், ஜித்தா, தமாம், அல் கோபர் என்று பல இடங்கள் உள்ளன. ஆனால் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குயின், ராஸ் அல் கைமா, புஜைரா என்ற ஏழு மாநிலங்கள் (Emirates) அடங்கியதுதான் ஐக்கிய அரபு நாடு. இதை அறியாத பிரபல தின பத்திரிக்கை 'தினத்தந்தி' சவுதி அரேபியாவில் துபாய் இருப்பது போல் செய்தி வெளியிட்டுள்ளது.

தலைப்பிலேயே தவறு. தெரிந்த தவறு ஒன்று தெரியாதது எத்தனையோ?

செய்தி: // சிகிச்சை கட்டண பாக்கிக்காக இந்திய பெண்ணின் குழந்தை பிணைக்கைதியாக சிறைவைப்பு துபாய் ஆஸ்பத்திரியில் மனிதாபிமானமற்ற சம்பவம்

துபாய், டிச. 24-

கட்டண பாக்கிக்காக இந்திய பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தையை துபாய் ஆஸ்பத்திரி பிணைக் கைதி போல பிடித்து வைத்துள்ளது.

இந்திய பெண் குழந்தை.

சவூதி அரேபியாவின் ரியாத்தில் வசிக்கும் இந்தியப் பெண் ரெஹ்னா. ஆந்திர மாநில ஐதராபாத்தை சேர்ந்தவர். இவரது கணவர் தாகிர் அக்ரம் முகமது (வயது 35). இவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்........

Thursday, December 21, 2006

கங்கை அமரன் அரசியலில் குதிக்கிறார்!

போன மாசம் எங்க ஊரில அதாங்க துபாயில 'துபாய் தமிழ் சங்கம்' ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடினாங்க. அதில 'லியோனி' பட்டிமன்றம், அப்புறம் 'கங்கை அமரன்' பாட்டுக் கச்சேரி, குழந்தைகள் நடனம் அப்படி இப்படின்னு அமர்க்களப்படுத்திப்புட்டாங்க.

கங்கை அமரன் தனியா வரல அவர் மகன் வெங்கட் பிரபு, எஸ்.பி.பி. சரண் அவங்க குழுவினரில் ஒருவரான நிர்மலா எல்லோரும்தான் வந்தாங்க. லியோனி பட்டிமன்றம் முடிஞ்சி பாட்டுக் கச்சேரிக்கு எல்லாம் தயாராச்சு, மேடைக்கு வந்த க.அமரன் 'நாலு நாற்காலி போடுங்கப்பா' என்றார் (பட்டிமன்றம்தான் உட்கார்ந்து பேசுவாங்களா? - லியோனி உட்கார்ந்துதானே தீர்ப்பு சொல்வார், நாங்களும் தான் உட்கார்ந்து கொண்டே பாடுவோம் என்பது போல்). போட்டாச்சு உட்கார்ந்து பாடினார்கள் நாலு பேரும் சேர்ந்து மாறி மாறி பாட்டு 'மாரி' பொழிந்தார்கள்.

அதன் பிறகு கங்கை அமரன் சொன்னார், "நீங்க நுழைவு கட்டிணமெல்லாம் வைக்காம எப்படி இலவசமா இந்த நிகழ்ச்சிய நடத்துறீங்களோ அதே மாதிரிதான் நாங்களும் ஒரு பைசா வாங்காம வந்திக்கோம்" என்றார். (நான் உடனே எங்க குடும்பத்தினரிடம் சொன்னேன் எல்லோரும் சேர்ந்து அண்ணனுக்கு ஒரு 'ஓ' போடலாமென்று, 'ஓ' போட்டு கைத்தட்டினோம்.) பிறகு எஸ்.பி.பி. சரணை அழைத்தார், அவரிடம் "என்ன சரண் எத்தன கிலோ பையோட வந்தீங்க இப்ப எத்தன கிலோ பையோட ஊர் போகப் போறீங்க" என்றார், சரண் சொன்னார் "காசு வாங்காம நிகழ்ச்சி நடத்துறதால ஒண்ணும் வாங்கல, வாங்க காசுமில்ல" என்று. (பார்க்கவே பாவமாக இருந்தது). க.அமரன் தொடர்ந்து "சரண் காசில்லன்னா என்ன கடன் அட்டை வச்சிருப்பீங்களே தேய்க்க வேண்டியது தானே" என்று வம்பிழுத்தார். பாவம் சரண் "செலவாகிடும்னு வீட்டிலேயே வச்சிட்டு வந்திட்டேன்" என்றார். (நாங்களே ஒரு பதினோரு உருப்படி எங்க குடும்பதிலிருந்து போயிருந்தோம். அதனால் சொன்னேன் காசு வாங்காம வந்திருக்காங்க கடைசி வரை இருந்து கையையாச்சும் தட்டிட்டு போவோம்ன்னு). நிகழ்ச்சியில் சில பாடல் மட்டுமே முழுமையாக பாடினார்கள். மற்றவையெல்லாம் தொடர் பாட்டுதான். அப்புறம் நேயர் விருப்பம் தந்தார்கள். விரும்பிய பாடல் நான்கு வரி பல்லவி மட்டும். நான் விரும்பி கேட்டேன் 'கடவுள் தந்த அழகிய வாழ்வு' மாயாவி படத்திலிருந்து. பாடினார் சரண். இப்படியே நிகழ்ச்சி பன்னிரெண்டு மணி வரை நடந்தது.

அதற்கு மறு வாரம் 'துபாய் தமிழ் சங்கம்' உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. விழாவைப் பற்றியும், அதில் உள்ள நிறை குறைகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டோம். குறையாக முதலில் பேசியவர் என்னைப் போலவே கங்கை அமரன் மற்றும் குழுவினருக்கு எந்த கட்டணமும் தராமலிருந்தது குறித்து வருத்தப்பட்டார். அவருக்கு அமைப்பிலிருந்து அல்லது உறுப்பினர்கள் சேர்ந்தாவது ஏதாவது பணம் தந்திருக்க வேண்டுமென்று ஆதங்கப்பட்டார். பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த அமைப்பின் தலைவர் சபேசன் விளக்க ஆரம்பித்தார். அதன் பின் தான் புரிந்தது கங்கை அமரன் மற்றும் குழுவினர்கள் காசு வாங்கியிருக்கிறார்கள். அந்த ஒப்பந்த காகிதங்களையும், பணம் பெற்றுக் கொண்ட கையெழுத்துக்களையும் காட்டினார்கள். அதிர்ந்து போய் விட்டோம். பின்ன ஏன் அவர்கள் அப்படி பேசினார்கள் என்று கேள்வி வந்தது. தலைவர் சபேசன் சொன்னார் "அவங்க சின்னப்புள்ளதனமா நடந்துக்கிட்டாங்க அதற்கு நாம் என்ன செய்ய முடியுமென்று" வருத்தப்பட்டார்.

என்னா ஆளுய்யா இந்த கங்கை அமரன்?? என்னை டபாச்சா மாதிரி இத்தனை நூறு பேர்களை நம்பவச்சிட்டார். இப்ப சொல்லுங்க கங்கை அமரன் அரசியலுக்கு வர தகுதிப் பெற்றுவிட்டார்தானே?!

Wednesday, December 20, 2006

வெள்ளைக்காரருங்க முட்டாளா? சாமர்த்தியமா?

சிலருக்கு புது புது உணவை சாப்பிட்டு பார்ப்பதில் அலாதி பிரியம். அதனால்தானோ இந்த 'சாப்பாடு திருவிழா' (Food Festival) வருஷம் தோறும் இங்க அமீரகத்தில தவறாம நடக்குது. பதிவு அதப்பத்தி இல்ல பயந்துடாதீங்க.

'துர்கிஷ் சாண்விட்ச்' வேணுமான்னு சாப்பாடு நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடியே ரொம்ப பாசமா வலம் வந்தா 'ரோஸிலின்' என் சக ஊழியரில் ஒருத்தி. அவ எங்க நிறுவனருடைய மகள்தான் ஆனாலும் எங்களில் ஒருவராக சாதாரண சக ஊழியராகவே பணி செய்யுறா. நான் 'வேண்டாம்ப்பா! நான் வீட்டிலிருந்து கொண்டு வந்தாச்சு'ன்னு தட்டிக்கழிச்சிட்டேன். ஆனா மத்த வெள்ளக்காரருங்க ('வெள்ளக்காரன்'னா கொஞ்சம் மரியாத கொறவா இருக்கும் அதான்) எல்லாம் 'வேணும் வேணும்'னாங்க. அவளும் 10 திர்ஹம்ஸ் (அதாவது 130 ரூபாய்) ஆகும் என்று எல்லோரிடமும் வசூலித்தாள்.

கிட்டத்தட்ட பத்து பேர் கொடுத்தார்கள் எல்லோரும் அவ ஊருக்காரங்கதான் (வெள்ளக்காரரருங்க), கீழ் கடையில் போயி மூணு ரூபாய்க்கு (ரூபான்னா திர்ஹம் என்று பொருள் கொள்க, அப்படி சொல்லி இருபது வருஷத்திற்கு மேல பழக்கமாயிடுச்சில்ல) ரொட்டி வாங்கி, 5 ரூபாய்க்கு மயூனைஸ் வாங்கி, சில காய்கறிகளும் வாங்கி, மொத்தத்தில் வெறும் 15 திர்ஹம் மட்டும் செலவழிச்சி பொருள் வாங்கி வந்து ரொட்டிய வெட்டி சாண்ட்விச், அதில் மயூ தடவி, காய்களை உள்ளே அடுக்கி போட்டுக் கொடுத்தாள். சாப்பிட ஆரம்பித்தார்கள். அவளும் "எப்படி இருக்கு சுவை" என்று ஸ்டைலாக கேட்க, ஒருவர் "'ம்ம்ம்.. ரொம்ப நல்லாயிருக்கு, எப்படி செஞ்சீங்க" (சமையல் குறிப்பு வேறையான்னு நினச்சிக்கிட்டேன்). இன்னொருவர் "ரொம்ப சிரமமெடுத்து செஞ்சது போலிருக்கு, சுவை நல்லா இருக்கு" (கஷ்டகாலண்டா சாமி! ). இப்படி ஒவ்வொருவரும் 'ஆஹா' 'ஓஹோ' பிரமாதம்ன்னு சாப்பிடுறாங்க (சில கவிதைகளை புரியாமே இரசிக்கிற சில பேர் மாதிரி). இவள் பதிலுக்கு "பின்ன சுவையாகத்தானே இருக்கும், அன்போடு பரிமாறியதல்லவா" என்றாள் அடக்கமாக. எனக்கு சிரிப்பு தாங்கல. என்னைப் போலவே வீட்டிலிருந்து கொண்டு வந்தவன் நல்ல வேளை நாம் தப்பித்தோம் என்று முணுமுணுத்தான்.

இந்த கேண கிறுக்கனுங்க (முட்டாள்கள் ஆகிவிட்ட பின்பு இவர்களுக்கு மரியாதை எதக்கு?) அத சும்மா சாப்பிட்டு போகம என்னைப் பார்த்து 'இந்த இந்தியர்கள் நீங்கள் எப்படித்தான் தினமும் சோறும் கறியும் சாப்பிடுகிறீர்கள் ரொம்ப செலவாகவில்லையா?' என்று கேட்டுவைக்க. நானும் உடனே "நாங்க வீட்டிலிருந்து சமைத்துக் கொண்டு வந்துவிடுகிறோம், இங்க வந்து வாங்குவதில்லை என்று அப்பாவியாக பதில் சொன்னதில் உள்ள சூசகத்தையும் மரமண்டைகளுக்கு புரியவில்லை. இவர்கள் ஏமாந்தார்களா அல்லது அவள் சாமார்த்தியசாலியான்னு நீங்களே சொல்லுங்க.

Tuesday, December 19, 2006

வலி

செப்டம்பர் 2006 மாத 'திசைகளில்' வெளிவந்த என் கவிதை:

அடித்தே இன்புறுகிறாய்
நல்ல விஷயமோ
கெட்ட விஷயமோ
வாழ்க்கையின் ஆரம்பமோ
வாழ்க்கையின் முடிவோ
அடிக்காமல் அடங்காதா
விசேஷம்?
இருக்கும் போதுதானென்றால்
இறந்த பிறகுமா?

Sunday, December 17, 2006

நட்பு

தேர்வில் எட்டிப் பார்த்து
எழுதும் போதும்

ஆபாச படத்தை
பார்க்க கூடாத வயதில்
பார்க்கத் துணிந்த போதும்

கல்லூரி மறந்து
ஊர் சுற்றும் போதும்

சுருட்டு, மது, மாது
என்ற போதும்

காதலியுடன்
ஓடிப் போக நினைக்கையிலும்

தடுத்து நிறுத்தி
எடுத்துரைக்காமலிருக்க
முடியவில்லை என்னால்

உளியாகத்தான் எனை
நினைத்திருந்தேன்
உடைப்பேன் நட்பையென்று
அறியாமல்

Thursday, November 30, 2006

பிடிச்சிப் போச்சு ரொம்ப!

முன்பே வா என் அன்பே வா
படம்: சில்லுன்னு ஒரு காதல்
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், நரேஷ் அய்யர்
வரிகள்: வாலி

படத்தின் பலம் பாடலும் என்று சொல்லும் அளவுக்கு இரண்டு நல்ல பாடல்கள் இந்த படத்தில். இரண்டுமே எனக்கு பிடித்தது. நியூயார்க் நகரம் பாடலில் ஏ.ஆர்.ஆரின் குரலையும் இசையையும் இரசித்த வேளையில் அதனை தொடர்ந்தது இந்த பாடலும்.

சில பாடல்களை கேட்கும் போது நம்மை அறியாமல் தலையாட்டி இரசிப்போம், சில பாடலை கேட்கும் போது நமக்குள் நம்மை அறியாமல் ஒரு வித உணர்வு தோன்றும், சில பாடலால் சந்தோஷம், சில பாடலால் பயம், சில பாடலால் மன சஞ்சலம், சில பாடலால் பல பழைய நினைவுகள், சில பாடலை கேட்டவுடன் நம்மை அறியாமல் வார்த்தைகள் நம் உதட்டில் ஒட்டிக் கொண்டு அதையே முணுமுணுத்துக் கொண்டும் இருப்போம். சில பாடல் அதில் வரும் காட்சிகளை நம் கண் முன் கொண்டு வந்து தரும். ஒரு பாடலை பிடிக்க பல காரணங்கள் பல பேருக்கு இருப்பினும், ஒரு பாடலை பிடித்து போக முதல் காரணம் அதிலுள்ள ரம்யமான இசை இணைந்த எளிமையான கவிதை வரிகள்தான் என்பது என் கருத்து.

ஏ.ஆர்.ஆரின் பாடல் எப்போதுமே கேட்க கேட்கதான் இனிக்கும். கேட்டவுடனே பிடித்து போகாது. பல முறை காதில் ஒலித்த பிறகே உதடுகள் உச்சரிக்க தொடங்கும். அப்படி மெல்ல மெல்ல வந்து மனதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கும் பாடலில் 'முன்பே வா என் அன்பே வா' என்ற பாடல் தற்போதையது. நல்ல மெல்லிசை, ஸ்ரேயா கோஷுக்கு தமிழ் பாடம் எடுத்துப் பாட வைத்த பாடல் என்று தோன்றுமளவுக்கு மிக உணர்ந்து பாடியது போல இருக்கிறது அவரது குரலில் தெரியும் உணர்வுகள். ஆனால் இந்த உணர்வுபூர்வமான விசயத்தை திரையில் பூமிகாவின் முகத்தில் துளியும் பார்க்கமுடியவில்லை என்பது வருத்தமே.


முன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா..
முன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா..
நான்..நானா கேட்டேன்..என்னை நானே..?

தன் தலையை தானே தட்டிக் கொண்டு நானா என்று கேட்டிருப்பது அந்த வரிகளின் அழுத்தம் ஒலிக்கும் அளவுக்கு உணர்வுகள் இல்லாமல் ரொம்ப லேசாக, விளையாட்டாக உச்சரித்திருப்பது போல் உள்ளது பூமிகாவின் நடிப்பு.

நான்..நீயா..நெஞ்சம் சொன்னதே..!
முன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா..
முன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா..

ஷ்ரேயா எந்த கஷ்டமும்படாமல் சுலபமாக பாடியிருப்பதாகவே தோன்றுகிறது பாடலை கேட்கும் போது. ஆனால் குரலில் அந்த நுணுகங்களை கொண்டுவர ரகுமான் எத்தனை எத்தனை முயற்சிகள் எடுத்திருப்பார், புரியவைக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாரென்று ஷ்ரேயாவையும் ஏ.ஆர்.ஆரையும் கேட்டால்தான் தெரியும்.

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள் கோலம் போட்டவள் கைகள் வாழி தரிகிட சத்தம். ஜல் ஜல்
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால் கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சித்திர புன்னகை வண்ணம் இந்த ஆ.... ஆ... ஹாஹா...


குழுவினர் பாடும் இந்த ரங்கோலி இடம் இனிமை. வானவில் கீழ் வந்து ஒரு சுற்று சுற்றுவதும், பாட்டில் வரும் இயற்கை சூழலும் நன்றாக வந்திருக்கிறது. பூமிகா கால்பந்தாட்ட திடலுக்கு வந்து குலுங்கி ஆடுவது அழகு, டைரி மில்க் விளம்பரத்தை நினைவுப்படுத்துகிறது.

பூவைத்தாய் பூவைத்தாய்
நீ பூவைக்கோர் பூவைத்தாய்
மன பூவைத்து பூவைத்த பூவைக்குள் தீ வைத்தாய் ஹோ..

தேனீ நீ மழையில் ஆட
நான் மான்தான் நனைந்து வாட
என் நாளத்தில் உன் இரத்தம் நாடிக்குள் உன் சத்தம்
உயிரே ஹோ

வாழும் ஒரு சில நாளும்
கனி என ஆனால் தருவேன் என்னை..ம்

-இந்த வரிகள் எத்தனை முறைக் கேட்டும் சரியாக விளங்கவில்லை

முன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா..
நான்..நானா கேட்டேன்..என்னை நானே..?
நான்..நானா கேட்டேன்..என்னை நானே..?
முன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா..ஆ

நிலவிடம் வாடகை வாங்கி விழி வீட்டினில் குடி வைக்கலாமா
நான் வாழும் வீட்டிக்குள் வேறாரும் வந்தாலே தகுமாஆஆ

அருமையான உவமை வரிகள். நிலவை வைத்துக் கொண்டு கவிஞர்கள் என்னமா எழுதுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கோணம். இந்த இடத்தில் பூமிகாவின் கண்களை நெருக்கமாக காட்டியிருக்கலாம், தவறவிட்டுவிட்டார்கள்.

தேன் மலை தேக்குக்கு நீதான் உந்தன் தோள்களில் இடம் தரலாமா நான் சாயும் தோள்மேல் வேறாரும் சாய்ந்தாலே தகுமோஓஓஒ

இந்த இடத்தில் தவறாமல் சாய்ந்துவிட்டார் பூமிகா சூர்யா தோள் மீது

நீரும் செம்புல சேரும் கலந்தது போலே கலந்திடலாம்..

முன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா
முன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா..
நான்..நானா கேட்டேன்..என்னை நானே..?
நான்..நீயா..நெஞ்சம் சொன்னதே..!
முன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா..
முன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள் கோலம் போட்டவள் கைகள் வாழி தரிகிட சத்தம். ஜல் ஜல்
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால் கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சித்திர புன்னகை வண்ணம் இந்த
(2 முறை)


சூர்யா - பூமிகா காதல் ஜோடியின் நெருக்கத்தை இந்த ஒரு பாடலில் சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர் என்.கிருஷ்ணன்.

ஏ.ஆர்.ஆரின் மெல்லிசை, ஷ்ரேயாவின் குரல் வளம், வாலியின் வரிகள், எனக்கு பிடித்த சூர்யா எல்லாம் கலந்து மனதில் நிற்கும் பாடல். பாடலை கேளுங்கள் பார்த்தால் பிடிக்காமல் போக வாய்ப்பிருக்கு ;-)

பாடலை பார்க்க:


பாடலை கேட்க:
முன்பே வா.. பாடலை இறக்க

Sunday, October 15, 2006

சுதந்திர தினம்

வலைப்பூ பக்கம் வந்து நாளாச்சே அதான் எட்டிப்பார்த்துட்டுப் போலாம்ன்னு வந்தேன். எட்டிப்பார்த்துட்டு பதிவுப் போடாம சும்மா போனா எப்பட,ி அதான் ஏற்கெனவே 'திசைகள்' மின்னிதழில் வந்த கவிதையை இடுகிறேன்.


மாதம் முழுவதும்
சிறை பிடித்து
சாகும் நிலையில்
ஆலிவ் இலை தந்து
திறந்து விட்டு
பறக்க செய்து
கைத்தட்டி
இனிப்பு வழங்கி
கொண்டாடினர்
சுதந்திர தினம்

Saturday, September 09, 2006

உளமாற நேசிக்கிறேன்

எதையாவது எழுதலாமென்றால் யோசிக்காமல் நினைத்ததை எழுதி வைக்கிறோம் அதுவே நம்மைச் சார்ந்தவர்களைப் பற்றி எழுத ஏனோ தயக்கம் வரத்தான் செய்கிறது. இப்படி, நான் 'எழுதலாமா வேண்டாமா?' என்று யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் என் நண்பர் சொன்னார் "என்ன தயக்கம் நீ எழுதாம வேற யாரு எழுதப் போறாங்க" என்று கேட்டது 'சுறுக்'கென்றது. சரிதான் என்று பட்டதும் எழுதலாமென்றால் எங்கே நேரம்?

நேரம் கிடைத்தால்தானே?! நேரம் இருந்த போது எழுதலாமா?ன்னு யோசிச்சேன், எழுதலான்னு நினைக்கும் போது நேரமே இல்ல. கல்லைக் கண்டா நாயக்காணோம், நாயக்கண்டா கல்லைக் காணோம்னு ஆகிப் போச்சு கத. எது நாய், எது கல் என்ற ஆராய்ச்சி வேண்டாம்.

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் புகைப்பட அமைப்பு தொடங்கி மூன்று மாதங்களாக செயல்பட்டுவந்தாலும், அமைப்பை முறைப்படி துவங்கி வைக்க முதலமைச்சர் கருணாநிதியை அழைத்த போது அவர் துவக்க விழாவிற்கு கொடுத்த தேதி செப்டம்பர் 7. கவர்னர் மாளிகையில் தர்பார் மண்டபத்தில் நேற்று காலை முதலமைச்சர் கருணாநிதி, கவர்னர் பர்னாலா தலைமையில் அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் முன்னிலையில், 'நக்கீரன்' கோபால், 'ஹிந்து' ராம், 'தினகரன்' கதிர்வேல் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

அமைப்பின் தலைவர் ஜி. கிருஷ்ணன், துணை தலைவர் முருகராஜ், செயலாளர் ரகுநாதன் ஆகியோர் வரவேற்றுப் பேசினார்கள். அமைப்பின் துவக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் புகைப்பட அமைப்பிற்கான வலைத்தளமும் துவங்கி வைக்கப்பட்டது. மற்றும் பத்திரிக்கை புகைப்பட நிபுணர்களின் தொலைபேசி மற்றும் பத்திரிக்கையாளர்களின் விவரங்கள் அனைத்தும் அடங்கிய புத்தகத்தை கவர்னர் வெளியிட
முதல் பிரதியை பரிதி இளம்வழுதி பெற்றுக்கொண்டார். முதலமைச்சருக்கு 1895ல் எடுக்கப்பட்ட சென்னை துறைமுகத்தின் படத்தையும், 1920ல் எடுக்கப்பட்ட சென்னை சென்ட்ரல் தொடரூர்தி நிலையத்தின் புகைப்படத்தை கவர்னருக்கும் நினைவுப் பரிசாக வழங்கினர்.

முன்னதாக பழம்பெரும் புகைப்பட கலைஞர்கள் தினமலரில் இருந்த கே.விஸ்வநாதன், மகாராஷ்டிரா நிலநடுக்கத்தின் போது எடுத்த சிறந்த படத்திற்காகவும், மாலைமுரசில் பணியாற்றிய அமீது முதலமைச்சர் கருணாநிதியின் தாய் இறந்த போது அவருக்கு அறிஞர் அண்ணா ஆறுதல் சொல்வதுபோல எடுத்த புகைப்படத்திற்காகவும், ஹிந்துவில் இருந்த நாராயணச்சாரி, விளையாட்டு சம்பந்தப்பட்ட புகைப்படத்திற்காகவும் முதலமைச்சர் கையால்
பொன்னாடை அணிவித்து, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

'இந்த செய்திக்கும் இவளுக்கும் என்ன?' என்று நீங்க மண்டையை உடைத்துக் கொள்ளும் முன்பே, கவுரவிக்கப்பட்ட அமீது என் தந்தையார் என்று சந்தோஷத்தோடு சொல்லிக் கொள்கிறேன். என் தந்தையின் பிறந்த தினமான செபடம்பர் ஏழாம் தேதியன்றே இந்த கவுரவ
விருது கிடைத்தது இன்னொரு மகிழ்ச்சி. உங்களை நினைத்தாலே பெருமையாயிருக்கிறது வாப்பா. உளமாற நேசிக்கிறேன் உங்களை அன்றைப் போல இன்றும்.

Saturday, September 02, 2006

எதற்காக வலைப்பூ?

வலைப்பூன்னு ஒண்ணு ஆரம்பிக்கிறோம் அது எதுக்காக யாருக்காக? எல்லோரும் ஆளுக்கு ஒண்ணு வச்சிருக்காங்களே நானும் ஆரம்பிக்கிறேன்னு ஒரு வலைப்பூவாளர் கிட்ட கேட்டா அவங்க சொன்னாங்க "ஆரம்பிக்கலாம் யாருவேணாலும், ஆனா நீ எழுதுற எழுத்துக்கு பதிலடி வரும். தலையில குட்ட நெறைய பேர் காத்து கெடப்பாங்க. கன்னாபின்னான்னு திட்டி வரும் பெயருடனும் பெயரில்லாமலும். ஒரு பொது எடத்துல நின்னு உன் கருத்த சொல்றா மாதிரி வலைப்பூ. அதனால எழுதிற எல்லா கிறுக்கலையும் வலையேற்றாம உனக்கே 'ஆஹா நானா எழுதினேன்'னு தோணுற அளவுக்குள்ள பதிவை மட்டும் போடு" அப்படின்னு ஒரு பெரிய பில்டப்பே கொடுத்தாங்க. இலவசமா கிடைக்குது என்பதற்காக அப்படியேவா அறிவுரைய அள்ளிக்க முடியும்? எடுத்துக்கிறத மட்டுந்தான் எடுத்துக்க முடியும் அதான் என் வலைப்பூவையே கிறுக்கல்னு போட்டு பிரிக்காம எல்லாத்தையும் கொட்டி வைக்கிறேன் நீங்களும் பாவம் படிச்சு தொலைக்க வேண்டியிருக்கு.

யாரும் யாருடைய வலைப்பூவுக்கும் தேடிப் போவதில்லை மாறாக
* 'அண்மையில் மறுமொழி இடப்பட்ட இடுகை',
* 'பரிந்துரைக்கப்பட்ட இடுகை',
* 'அதிகம் பார்வையிடப்பட்ட இடுகை',
* 'தேன்கூடு போட்டி'யில் பங்கேற்றவர்கள்

இந்த மாதிரி இடங்களில் தலைப்பும் கூடவே வரும் நான்கு வரிகளும் சுவாரஸ்யமாக இருந்தாலே ஒரு பதிவை திறந்து படிக்கிறோம். அல்லது பதிவின் சுட்டியை தனிமடலிலோ, பின்னூட்டத்திலோ படிக்க தருவதால் படிக்கிறோம். படிக்கும் எல்லா பதிவுகளுக்கும் எல்லோரும் பதில் எழுதுவதில்லை அதிலும் ஒரு கணக்கு இருக்கு

* சிலர் பிடித்திருந்தாலும் சரி பிடிக்கவில்லையென்றாலும் சரி ஏதாவது பதில் எழுதி தன் வருகையை நியமனம் செய்து கொள்கிறார்கள்.
* சிலர் பாராட்ட மட்டுமே செய்வார்கள், நன்றாக இல்லை என்றால் படித்து விட்டு ஓடிவிடுவார்கள். (எண்ணிக்கையில் இப்படிப்பட்டவர்கள் குறைவு என்று சொல்லலாம்).

* சிலர் குறைகள் கண்டுபிடிக்கவே மற்றவரின் பதிவுக்கு போய் இரண்டு குத்து குத்திவிட்டு வரவில்லையென்றால் இவர்களுக்கு தூக்கம் வராது. இதில் தவறில்லை, குறை தெரிந்தால்தான் அடுத்த முறை நிறையாக இருக்கும்.

* சிலர் தனக்கு தானே ஒரு ரேஞ்சு வைத்துக் கொண்டு தனக்கு சரி சமமாக நினைக்கும் நபர்களின் பதிவுகளுக்கு மட்டும் போய் பதில் எழுதும் பழக்கம் கொண்டவர்கள். தன் உடம்பைவிட தலையின் எடை இவர்களுக்கு ரொம்ப அதிகம்தான்.

* சிலர் வாக்குவாதம் செய்ய, சண்டை போட, வம்பிழுக்கவே மற்றவர்கள் வலைக்கு போய் சுறுக்கென்று எழுதி வைத்துவிட்டு வருகிறார்கள். (இதுல எந்த குத்தும் இல்லப்பா நம்புங்க)

மொத்தத்தில் ஒருவரை மெச்சி ஒருவரும் அல்லது ஒருவரை தூற்றி மற்றவரும் வலைத்தளத்தில் தனக்கென்று ஒரு இடம்பிடித்துவிடுகிறார்கள்.

எதற்காக யாருக்காக எழுதுகிறோமென்றால்

* என் கருத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க என்பதுதான் பலரது கருத்து. ஆனால் அந்த நோக்கம் கூட இல்லாமல் பல பேர் தம் கருத்தை சொல்வதை விட மற்றவனை தாக்குவதில் ரொம்பவும் பெரிய குறிக்கோள்களுடன் திரிகிறார்கள்.

* இப்படித்தான் எழுத வேண்டும், இந்த கட்டுப்பாட்டுக்குள்தான் நிற்க வேண்டுமென்றெல்லாம் இல்லாமல் என்ன தோன்றுகிறதோ அதை எழுதி வைப்பது ஒரு விதம். எழுதுகோலைப் பிடித்து எழுதும் போது நம் மனசு சொல்றபடி எழுதுவோம் ஆனா இந்த கணினி முன்னாடி தட்டுறது இருக்கே அது நம்ம மூளை என்ன சொல்லுதோ அதன்படி கேட்டு செயல்படுகிறோம். அதனால்தான் பலர், மற்றவர்களைக் காயப்படுத்துகிறோமா என்று கொஞ்சம் கூட மனதால் யோசிக்காமல் செய்யும் செயலாகிவிடுகிறது.

* சிலர் எழுதும் போது எப்படித்தான் இப்படி எழுதுகிறார்கள் என்று தோன்றும் அளவுக்கு இருக்கும். இது நமக்கு தோணாம போச்சேன்னு தோணும். அப்படிப்பட்டவர்கள் எழுத்து சில நேரங்களில் அங்கீகரிக்கப்படாமல் போய்விடுவது ரொம்பவும் கஷ்டமாகி போகிறது. (போன மாத தேன்கூடு போட்டியில் 'திரைச்சீலை' என்ற கதை படித்து அப்படி தோன்றியது. யாருமே அந்த கதையை படிக்கவில்லையோ அல்லது புரிந்துக் கொள்ளவில்லையோ தெரியவில்லை பத்து இடத்திற்குள்ளும் வராமல் போனது ரொம்ப கஷ்டமாக இருந்தது மனதுக்கு.)

* சிலர் வணிக முறையாக உபயோகிக்கிறார்கள் இந்த வலைப்பூவை. தன்னுடைய நிறுவனத்தைப் பற்றி பலருக்கு கொண்டு செல்ல, தன் பொருளை விற்க, தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள என பலதரப்பட்ட வணிகம் இந்த வலைப்பூவில்.

சுருக்கமாக சொன்னால், எல்லோருக்கும் நம் கருத்து கேட்கவே இடுகைகள். மூன்று கோட்பாடுகள், கொள்கைகள், குறிக்கோள்களுக்குள்தான் வலைப்பூவாளிகள் என்பது என் கருத்து.

1. இரகிசய டைரியை பலர் பார்க்க படிக்க வைப்பது. அதாவது நிகழ்வை, நடந்த சொந்த அனுபவத்தை, ஏமாற்றத்தை, வெற்றியை, சந்தோஷத்தை, சோகத்தை கொட்டி தீர்க இணையத்தில் ஒரு இடம். அதை மற்றவர்கள் பார்ப்பதில் படிப்பதில் ஆட்சேபனை இல்லாதவர்கள் இவர்கள்.

2. சிலர் நிறைய நட்பு சம்பாதிக்க, பொழுதுபோக்காக அரட்டையடிக்க, நூல்விட, கடல போட. இவர்களது ஒரு குறுகிய வட்டம் மட்டுமே நிறைய தேடல் இல்லாதவர்கள். எழுதுவதை 'ஆஹா' 'ஓஹோ' போட ஒரு சிறிய வட்டம் சம்பாதித்தால் போது என்று இருப்பவர்கள்.

3. நிறைய பேர் வித்வான்களாக, புலவர்களாக, அறிஞர்களாக, துத்துவ ஞாநியாக, அறிவு ஜீவிகளாக தன்னை நியமித்துக் கொண்டு தன் கருத்தை பலருக்கு கொண்டு செல்லும் எண்ணம் உடையவர்கள். இவர்கள்தான் தான் எழுதுவதோடு மட்டும் நிறுத்திவிடாமல் மற்றவர்கள் என்ன எழுதிகிறார்கள் என்ற தேடலுடன் படிப்பவர்கள்.

ஆயிரம் பேரைக் கொன்றால்தான் ஒரு சிறந்த மருத்துவர் என்பது போல். கண்டதை படிப்பவர்கள்தான் கற்றவர்களாகிறார்கள். இவ என்னடா பெரிய லார்டு லபக்குதாஸ் மாதிரி எழுதிருக்காளேன்னு நினைக்காதீங்க, எனக்குத் தெரிஞ்ச காரணத்த நா சொல்லிட்டேன். எதுக்கு பதிக்கிறீங்கன்னு நீங்க சொல்லுங்க.

எழுத்து சுதந்திரம் நிறைந்த இந்த வலைப்பூவை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா?

Thursday, August 31, 2006

சின்ன சின்ன ஊடல் - குட்டிக்கதை

சின்ன சின்ன ஊடல்

'எப்பதான் மணி 6 ஆகும் வீட்டுக்குக் கிளம்பலாம்' என்று காத்திருந்தாள் சுதா. அவள் காத்திருப்பிற்குப் பின்னால் நிறைய அர்த்தமிருந்தது. அன்று சுதந்திர தினம், புத்தம் புது ஆடை அணிந்துக் கொண்டாள், இனிப்பையும் எடுத்துக் கொண்டாள் வெள்ளைக்காரனிடம் வேலை பார்ப்பதால் சுதந்திர தினத்தை அவர்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடுவதில் அவளுக்கு பெரும் மகிழ்ச்சி. நிறுவனத்தில் நிறைய இந்தியர்கள் என்பதால் நிர்வாகமே சுதந்திர தினத்தன்று எல்லாருக்கு 'டோனட்' வழங்கியது. இந்தியர்கள் பேரைச் சொல்லி அனைத்து நாட்டினரும் உண்டு மகிழ்ந்தனர். அவள் அணிந்த புத்தாடையில் அவள் அழகாக இருக்கிறாள் என்று அலுவலகத்தில் உள்ள எல்லா நபர்களும் கூறினாலும் அவள் அந்த வார்த்தையை தன் காதலிடமிருந்து எதிர்பார்த்து, அலுவலகம் முடிந்தவுடன் அவன் சந்திப்பிற்காகக் காத்திருந்தாள். அலுவலகம் முடிந்த பிறகு இருவரும் சந்திப்பது வழக்கம்.

மணி 6.15 ஆனதும் காதலன் விக்ரமுக்கு செல்பேசியில் அழைத்தாள்.

"கண்ணா, நான் கிளம்புறேன்" என்றாள் - அவன் அவளைக் காக்க வைத்ததால், செல்லக் கோபத்தில்.

"கிளம்புறியா? சரி செல்லம் கிளம்பு" அவனிடமிருந்து பதில் வந்தது. 'நான் வருவேன் என்று தெரிந்தும்
ஏன் கிளம்புகிறாள்?' என்று மனதில் அவள் கோபத்தை புரிந்தவனாக எப்படியும் அவளை 'சுருதி மியூசிக்கில்' பிடித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டு உத்தரவு கொடுத்துவிட்டான் அவன்..

அலுவலகம் முடிந்தபின் இருவரின் சந்திப்புக்குப் பிறகு அவள் செல்லும் வீணை பள்ளிதான் 'சுருதி மியூசிக்'.

அலுவலகத்தில் வேலைப் பளுவில் மூழ்கிவிட்டதால் அவனுக்கு நேரத்திற்குக் கிளம்ப முடியாமல் போனது.

'கிளம்புறேன்னு சொல்லிக் கூட ஒரு வார்த்தை, இரும்மா வந்திடுறேன்'னு சொல்ல தோணுச்சா?' என்று
எண்ணியவளாக அலுவலகத்தில் இருந்து கீழே வந்தாள். அப்படி நினைத்தாலும்,

அலுவலகத்திற்குக் கீழே தன் வாகனம் அருகே வந்து நிற்பான் விக்ரம் என்று எதிர்பார்த்து அவள் கண்கள் இங்கும் அங்கும் தேடியது. ஏமாந்தவளாய் வண்டியை கிளப்பிக் கொண்டு விரட்ட ஆரம்பித்தாள்.. போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லாததாலும், அவனை எதிர்பார்த்து ஏமாந்த காரணத்தாலும் வேகம் கூடியது. வண்டி ஓட்டியபடியே மறுபடியும் அவனை செல்பேசியில் அழைத்தாள், ஒலித்துக் கொண்டே இருந்தது அவன் கைப்பேசி,

கோபத்தில் இணைப்பை துண்டித்து அவள் கைப்பேசியை பக்கத்து இருக்கையில் எரிந்தாள். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு செல்பேசி ஒலிக்கவே, எடுத்து காதில் வைத்தாள். - அவனேதான்

"ம்ம், சொல்லுங்க" அவள் குரலில் கோபம் தணியவில்லை.

"எங்கடா இருக்க?" கனிவாகக் கேட்டான் விக்ரம்.

"நீங்க எங்க இருக்கீங்க?" ஒருவேளை பக்கத்தில் எங்கேயாவது இருக்கிறானோ என்று நினைத்துக் கொண்டு கண்ணாடியில் அங்கும் இங்கும் தேடிய படி கேட்டாள்.

"நான் இப்பதாண்டா கிளம்பினேன், ரோடு காலியா இருக்கு, அதனால் வண்டி பறக்குது" என்றான்
அவள் கோபத்தை கண்டுகொள்ளாமல்.

"ம்ம் சாருக்கு 'கிளப்'புக்கு போக அவசரமோ?!" என்றாள் எரிச்சலாக.

'கிளப்' என்பது சீட்டு விளையாடி அரட்டை அடிக்கும் 'கிளப்' அல்ல, அவன் சிறுவர் சிறுமியர்களுக்கு இலவசமாக தமிழ் சொல்லிக் கொடுப்பான். அந்த இடத்தைதான் 'கிளப்' என்று கேட்கிறாள்.

"பசங்களுக்கு இன்னிக்கு விடுமுறதான?! அதான் மதியானமே போய் சொல்லிக் கொடுத்துட்டு வந்திட்டேன்" என்றான் அலட்டலாக.

'ஓஹோ! அதான் ஐயா நேரத்திற்கு வேலையை முடிக்க முடியாம, சீக்கிரம் கிளம்பி வந்து என்னப் பார்க்க முடியாம இருந்த காரணமோ' என்று மனதில் நினைத்துக் கொண்டதில் இன்னும் சூடேறியது அவளுக்கு.

வண்டியை இன்னும் விரைவாக்கினாள். கொஞ்ச நேர மவுனத்திற்கு பிறகு "சரி என் வீணை கிளாஸ் வந்திடுச்சு நான் போறேன்" என்று அவன் பதிலுக்கு காத்திராமல் இணைப்பைத் துண்டித்தாள்.

அவள் வீணை வகுப்புக்கு வந்து நிற்கும் போது பின்னால் விக்ரமுடைய 'காம்ரி' தெரிந்தது.

இருப்பினும் காத்து கிடக்கட்டும் என்ற நினைப்பில் கண்டுகொள்ளாமல் உள்ளே சென்று விட்டாள். தவமாக தவம் கிடந்தாலும், காதலிக்காக என்பதால் 45 நிமிடம் வெளியில் காத்துக் கொண்டு இருந்தான் அவன். இவள் இப்படி அடிக்கடி அவனைக் காக்க வைப்பதால், நேரத்தைப் போக்குவதற்காக வண்டியில் நிறைய புத்தகம் வைத்திருப்பான். புத்தகத்தின் உதவியில் நேரம் பறந்தது. வெளியில் வந்தவள் அவனைப் பார்க்காதது போல் வண்டி எடுத்தாள்.

அவனைக் கண்ணாடியில் பார்த்து 'துத்துத்துத் பாவம் கண்ணா நீ, காத்திருந்தியா, நம்ம போற வழியில் நிறுத்தி ஐஸ்கிரீம் சாப்பிடுவோம்' என்று மனதிலேயே பேசிக் கொண்டாள்.

அவன் இவளைப் பின் தொடர்ந்தான். மறுபடியும் செல்பேசியில் இணைந்தனர். அவன் பின்னால் வண்டியில் இருக்கும் சந்தோஷம் தன் குரலில் தென்படாமல், அவனை பார்க்காதது போலவே பேச்சைத் தொடங்கினாள் "என்ன வீட்டுக்கு போய் சேர்ந்தாச்சா?"

"இல்லடா, வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் 'சிக்னலில்' நிற்கிறேன்" அவனும் விடாமல்,

அவளுக்கும் தான் பின்னால் இருப்பது தெரிந்திருக்கும் என்று தெரிந்தும், தான் அவளைப் பார்க்காமல் வீடு வரை சென்றதாக ஊற்றினான்.

கண்ணாடியில் அவனைப் பார்த்தபடி சிரிப்பை அடக்கிக் கொண்டு "சரி சரி சீக்கிரம் வீட்டுக்கு போங்க, அம்மா தேடப் போறாங்க" என்றாள் கிண்டலாக.

அவன் கார் 'டிராக்' மாறி அவளின் இடது புறத்திற்கு வந்தது.

"கண்ணா, இந்தப் பக்கம் கொஞ்சம் திரும்பி பாரு" அவளைப் பார்த்தபடி பின்னால் வேகமாக வரும் வண்டிகளுக்கு வழி தராமல், இவளுடைய காரின் வேகத்திலேயே வண்டியை செலுத்திய படி கேட்டான்.

ஒன்றுமே தெரியாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு, அவன் பக்கம் திரும்பாமல்

"எங்கே எங்கே?" என்றாள் தேடுவது போன்ற பாவனையில்.

பின்னால் வரும் வண்டி விளக்கை அணைத்து அணைத்துக் காட்டவே, அதே வேகத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் விரட்டி வேறு பக்கம் திரும்பினான். இதை சற்றும் எதிர்பாராத சுதா, "செல்லம், அந்தப் பக்கமா எங்க போற?" என்றாள் திகைப்பாக.

அவள் திரும்பாத கோபத்தில், "ம்ம் கிளப்புக்கு தான்" என்று பதில் வந்தது அவனிடமிருந்து.

அதைக் கேட்டவுடன் தாங்காமல் இவள் தொண்டை அடைத்தது. "மதியானமே போய்ட்டு வந்துட்டேன்னீங்க" என்றாள் ஏமாற்றத்தை அடக்கிய படி.

"சும்மா சொன்னேன். அதான் உன்னை பார்க்க வீணை கிளாஸுக்கு வந்தேன். நீதான்

கண்டுக்காம போன. பக்கத்தில் வந்து கொஞ்சம் 'திரும்பிப் பாருடா'ன்னு கெஞ்சினேன், ரொம்ப அலட்டிக்கிட்ட, இப்ப நான் எங்க போனா உனக்கு என்ன? விடு" என்றான் - அவள் கோபம் இவனுக்கு ஒட்டிக் கொண்டதுபோல.

"சாரிடா கண்ணா, சத்தியமா கொஞ்ச நேரம் இப்படி தெரியாதது மாதிரி விளையாடிட்டு

ஒரு 'ஸ்டார் மார்டில்' நிறுத்தி ஐஸ்கிரீம் சாப்பிட்டு ரெண்டு பேர் கோபத்தையும் தணிக்கலாம்ன்னு நெனச்சேன்,

ஏமாத்திட்டேடா. என்கிட்ட ஏன் கிளப்புக்கு மதியானமே போனேன்னு பொய் சொன்ன, அதனாலதான் ..." என்று அவள் சிணுங்கினாள்.

"என்ன ஏமாத்த நினச்சு நீ ஏமாந்திட்ட, அதற்கு நான் என்ன செல்லம் செய்ய முடியும்?.

சரி இன்னக்கி இல்லாட்டி என்ன நாளைக்கு சந்திப்போம்ல" என்றான் திடமாக.

ஆறுதலாக அவன் பேசினாலும் ஏமாற்றத்துடன் வாடிய முகமாய் வீடு வந்தாள் சுதா.

எல்லோரும் அவள் அழகாக இருக்கிறாள் என்று சொன்ன அந்த புது ஆடையை அதிர்ஷ்டக் கெட்டது என்று ஒதுக்கி வைத்தாள்.

ஊடலில்தானே காதலின் வலிமை தெரிகிறது.

Saturday, August 26, 2006

'வேட்டையாடு விளையாடு'

பொதுவாகவே மற்றவங்களைப் பற்றி புறம் பேசுவதோ, பின்னால் கிண்டல் செய்வதோ எனக்கு அறவே ஒவ்வாத விசயம். இந்த திரைவிமர்சனங்களும் அதுபோலத்தான் என்று எனக்கு நானே ஒரு வளையம் போட்டுக் கொண்டேன். கஷ்டப்பட்டு ஒரு படத்தை
பெரிய குழு எடுத்து முடித்து வினியோகஸ்தர்கள் தலையில் கட்ட, நல்லதா கெட்டதா, ஓடுமா ஓடாதா, நல்ல குதிரையா நொண்டி குதிரையா என்று தெரியாமல் மக்களுக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்று யூகிக்க முடியாமல் வாங்கி வெளியிடுகிறார்கள். படம் பார்த்து
விட்டு மக்களும் 'சுமார்', 'போர்', 'ஒருவாட்டி பாக்கலாம்', 'இது குறுந்தகடுல பாக்கதான் லாயக்கு', 'பாட்டுக்காக வேணும்னா படம் ஓடலாம்' என்றெல்லாம் சவடால் விடுகிறார்கள். அதைவிட பகிரங்கமாக கால் மீது கால் போட்டுக் கொண்டு படத்தை வரிசைப்படுத்துகிறார்கள். இந்த வாரம் முதலிடத்தை பிடித்த படமென்று ஆஹா ஓஹோ என்று புகழ்வார்கள் 'தெனாவட்டாக' உட்கார்ந்து கொண்டு. பல வாரத்திற்குப் பிறகு அதே படம் கீழே இறங்கி ஆறுவது இடத்திற்குப் போகும் போது படத்தில் உள்ள குறைகளை கூறுபோடுகிறார்கள். எதன் அடிப்படையில் விமர்சனமென்று அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

படத்தை விமர்சனம் செய்வதல்ல - மாறாக இந்தப்படத்தைப் பற்றிய எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதுதான் நோக்கம். அப்படிச் செய்வது தவறில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகே நேற்று துபாய் ஹயாத் கலேரியாவில் பார்த்த 'வேட்டையாடு விளையாடு' பற்றி எழுதுகிறேன்.


'வேட்டையாடு விளையாடு' படத்தை செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரித்திருக்கிறார். கமல்ஹாசனுக்கு காக்கி சட்டையே பொருந்தாது ஆனாலும் 'காக்கி சட்டை', 'சூரசம்ஹாரம்', 'குருதிபுனல்' என்ற எல்லா படங்களிலுமே அவ்வளவாக காக்கி சட்டையே போடாமல் ஒப்பேத்திவிடுவார். அதை தொடர்ந்து இந்த படத்திலும் கமல் அவ்வாறே சமாளித்திருக்கிறார். அதுவும் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடிப்பவருக்கு காக்கி உடுப்பு அதிகம் தேவையில்லைதானே? காவல்துறையைச் சேர்ந்த நேர்மையான அதிகாரி ராகவனாக கமல், தன்னுடன் வேலைப் பார்க்கும் பிரகாஷ்ராஜின் மகளின் கொலையில் ஆரம்பித்து நியூயார்கில் ஆரோக்கியராஜாக வரும் பிரகாஷ்ராஜின் கொலை விசாரணையில் தொடர்ந்து, வில்லன்களை துப்பறிந்து கண்டுபிடிப்பதில் முடிகிறது. 'நேர்மை'யில் வழக்கமான படம் போலவே மனைவி கயல்விழியாக வரும் கமலினி முகர்ஜியை இழந்து விடுகிறார். நியூயார்கில் ஆராதனாவான ஜோதிகாவின் சந்திப்பு காதலில் முடிகிறது. 'தெனாலி'க்கு பிறகு மீண்டும் கமல்- ஜோதிகா இணைந்துள்ளனர். பாட்டைத் தவிர மற்ற எந்த இடங்களிலும் காதல் காட்சியில்லாதது படத்தின் பலமா பலகீனமா என்று படத்தின் வெற்றி தோல்விகள் சொல்லும். கமல் முகம் அப்படியே இருந்தாலும் உடல் வயசைக் காட்டிக் கொடுக்கதான் செய்கிறது. இதில் குட்டியாக தொப்பை வேறு.

நன்றாகவே எழுதி இயக்கியிருக்கிறார் கெளதம் மேனன், அவருக்கு சரி ஜோடியாக அமைந்து விட்டனர் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும்.

படத்தில் இரத்தக் காட்சிகள் அதிகம். பிணமாக நடித்தவர்கள் அனைவருமே நிஜ பிணமாகவே நடித்திருக்கிறார்கள். மயக்க ஊசி போட்டு விட்டார்களோ என்று தோன்ற வைக்கிறது. ஆனால் ஆரோக்கியராஜ் மனைவி சித்ராவின் சடலத்தைக் காட்டும் போது கண்கள் லேசாக
அசைவதை உணர முடிந்தது. படத்தில் ஒரு ஹாலிவுட் நடிகருக்கு முக்கிய வேடம் மற்றபபடி கமல், ஜோதிகா, பிரகாஷ்ராஜ், கமலினி, அந்த இரு வில்லன்கள் மட்டுமே படத்தில் கனமான பாத்திரங்கள். 'காக்க காக்க' படத்தில் சூர்யாவின் நெருங்கிய நண்பராக வரும் அந்த போலீஸ் அதிகாரிதான் இந்த படத்தின் வில்லன் அமுதன். அமுதன் மற்றும் இளா இரண்டு வில்லன்களின் நடிப்புத்தான் படத்தில் நச்சென்று நம் மனதில் பதிந்து நிமிர்ந்து உட்கார வைக்கிறது. வெறி கொண்ட பார்வை, அவர்கள் வரும்போதெல்லாம் அடிமனதில் ஒரு திகில் ஏற்படுகிறது. குறையின்றிச் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர் பேசத் தொடங்கினாலே 'ஓ....' 'F...' & 'B...' (Food & Beverage இல்லை) வார்த்தைகளை நம் காதுகளில் கேட்காத அளவுக்கு ஓசையை அடக்கியிருக்கிறார்கள். கமலினி தெலுங்கில் பிரபலமாம் தனக்குரிய பாத்திரத்தை அழகாக செய்து முடித்திருக்கிறார்.

பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது. படம் வெளிவருவதற்கு முன்பே தாமரையின் வரிகள் மனதில் பதிந்தே விட்டன. என்னமா எழுதுறாங்க தாமரை...

'பார்த்த முதல் நாளே' பம்பாய் ஜெயஸ்ரீ, உன்னி மேனன் குரலில் பாட்டு நன்றாக இருந்தாலும், பைக்கில் போகிற காட்சி வரும் போது பழைய படத்தில் வருவது போல் பைக்கை ஒரே இடத்தில் நிற்கவைத்து பின்னாடி படம் ஓட்டி இருக்கிறார்கள். கமல் பைக் ஓட்ட பயந்தாரா அல்லது கமலினி பின்னாடி உட்கார மறுத்தாரா, பயந்தாரா என்று தெரியவில்லை.

வெண்ணிலவே! வெள்ளி வெள்ளி நிலவே! - எனக்கு மிகவும் பிடித்த பாடலிது. ஹரிஹரன், விஜய், நகுல் இணைந்து கலக்கியிருக்கும் இந்த பாடல் வரிகள் அருமை. ஒரு நாள் முழுவதும் கமல் - ஜோதிக்கா மான்ஹத்தனில் (Manhattan) சுற்றிப்பார்த்து நாளை கழிக்கும் அழகான பாடல். அதிலும் அழகான ஐந்து ஆங்கிலேய வடிவான ஆண்கள் கிளோஸப்பில் 'வெண்ணிலவே! வெள்ளி வெள்ளி நிலவே!' என்று பாடுவதும், அந்த வீதி மக்கள் பின்னாடியே வந்து பாடுவதாக வரும் போதும் எனக்கு சிரிப்புதான் வந்தது.

உயிரிலே - மகாலக்ஷ்மி ஐயர், ஸ்ரீனிவாஸ் பாடிய அற்புதமான வரிகள் கொண்ட பாடல்.

கற்க கற்க - படத்தின் முதல் பாடல். தேவன், திப்பு, நகுல் பாடிய விரைவான பாடல்.

நெருப்பே சிக்கிமுக்கி - அது ஏனோ தெரியவில்லை அடிதடி படமென்றாலே ஒரு ஐட்டம் நம்பர் அவசியமாகிவிடுகிறது. அதுவும் கமல் படத்தில் ஒரு முத்த காட்சியாவது எதிர்பார்த்து வரும் அன்பர்கள் ஏமார்ந்து விடாதபடி இந்த பாடல் அமைந்துள்ளது. பிரான்கோ, சவ்மியா ராவ், சோலார் சாய் பாடிய பாடல் இது.

கண்டிப்பாய் எதிர்பார்ப்பை ஏமாற்றாத பாடல்கள். ஆனால் பாடல்கள் எல்லாம் ஒரே மாதிரியாய் இருப்பது போல் தோன்றுகிறது. அதனால் வெற்றி, படமாக்கிய விதத்திலுமிருக்கிறது.

ரினைசன்ஸ், ஹார்ட் ராக், பெரிய பெரிய கட்டிடங்கள், வண்ணமயமான வாகனங்கள் என்று கேமிரா நியூயார்க்கை ஒரு வலம் வந்தாலும் பெரிய பிரமிப்பாக ஏதும் தோன்றவில்லை எல்லாம் துபாயிலும் இருப்பதாலோ என்னவோ. மேட்ரிக்ஸ் II, பிளேட் III என்ற படங்களுக்காக உபயோகித்த அதே உபகரணங்கள் என்றெல்லாம் செய்தி வந்தமையாலும், மின்னலே, காக்க காக்க என சாதனை படைத்த கெளதம் - ஹாரிஸ் ஜோடி மூன்றாவதாய் இணைந்த படம் என்பதாலும் அதிகமாக எதிர்பார்த்து ஏமாந்த உணர்வு.

படத்தின் டைட்டில்களைக் கவனித்தேன் ஏனோ எல்லாம் ஆங்கிலத்திலேயே வந்தது, பெயர்கள் மட்டும்தான் ஆங்கிலத்தில் வந்து மறைந்த பிறகு ஒப்புக்காக தமிழிலும் காட்டப்பட்டது. நாள் கிழமைகளும் ஆங்கிலத்திலேயே காட்டினார்கள். ஒருவேளை எல்லா தமிழர்களுக்கும் ஆங்கிலம் தெரியாமல் இருப்பத்தில்லை என்று நினைத்ததாலோ என்னவோ.

படம் முடிந்து வெளியே வந்தவுடன் கேட்டது: 'நம்ம ஊரிலயே முடிச்சிருக்கலாம் (தமிழ்நாடு) நியூயார்க் வரைக்கும் போகவே அவசியமில்ல'. இதை கேட்கும் போது குங்குமத்தில் படித்த 'சுமார் நான்கு கோடி ரூபாய் நஷ்டத்தில்தான் படத்தை வெளியிடப் போகிறாராம் நாராயணன்' என்பதுதான் நினைவுக்கு வந்தது. உண்மையில் காசை கரியாக்கியிருக்கிறார்கள் நியூயார்க்கில்.

ஆங்கில பட சாயலில் ஒரு சாதரணமான படம். திரையரங்கில் பார்த்தால் படம் 'சுமார்' வீட்டில் குறுந்தகடில் பார்த்தால் படம் 'போர்'.

மற்றப்படி சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை. மொத்ததில் ஒரு குறுநாவல் படித்து முடித்த திருப்தி மட்டுமே. கமலுக்காக ஒருமுறை பார்க்கலாம்.

Tuesday, August 22, 2006

துபாயில்...

துபாய் நகராட்சிக்கு ஒரு கோடி உடனே தரேன்னு சொல்லியும் வேணாம்னு சொல்லிட்டாங்க. ஒரு கோடி தரேன்னு சொன்னது நானில்ல. ஒரு பணக்கார வியாபாரி. ஒரு கோடி ரூபாய்ன்னா நம்ம ஊருபணமில்ல. ஒரு கோடி திர்ஹம்ஸ் அதாவது பதிமூணு கோடி ரூபா. எதுக்கு தரேன்னு சொன்னாரு தெரியுமா?

ஒரு அதிசய மீனுக்கு. அப்படி என்ன அதிசயம் தெரியுமா? அந்த மீன் உடம்பு மேல 'அல்லாஹ்'ன்னு அரபி எழுத்துல எழுதிருப்பது அழகா துல்லியமா தெரியுது.



இறைவன் இல்லாத இடமும் உண்டோ? மனிதர்களிலிருந்து எல்லா உடைமைகளும் அவனுடையதுதானே? இதில் என்ன அதிசயம்?

அரபிக்கடலில் கிடைக்கும் சஃபி (Safi) என்ற மீன் மீதுதான் இந்த எழுத்துக்கள். விஞ்ஞான ரீதியான பெயர் சிகாரியஸ் கனாலிக்குலாட்டஸ் (Sigarius Cunaliculatus) இந்த மீன் தற்போது, தெய்ரா மீன் சந்தையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

Monday, August 14, 2006

அம்மா தாயே...







யாருடா அது பதிவு போட்டு பிச்ச கேட்குறாங்கன்னு பார்க்கிறீங்களா? பிச்சைதாங்க இது ஒரு வகையான வேண்டுகோள் பிச்சைன்னே வச்சிப்போம்.

பசின்னா பத்தும் பறந்துடும்ன்னு படிச்சவங்க, பெரியவங்க சொல்லி கேட்டிருப்பீங்க. இந்த உலகத்துல பல பகுதில ஒரு வேள சோத்துக்குக் கூட வழியில்லாதவங்க எத்தனையோ சனங்க இருக்கிறாங்கன்னு தெரிஞ்சும் நம்ம வீட்டுல தின் பண்டங்கள, சமச்ச பதார்த்தங்கள வீணடிக்கிறோம். தெரிஞ்சா செய்றோன்னு கேள்வி வரும். தெரிஞ்சோ தெரியாமலோ மிச்சம் வைக்கிறீங்களா இல்லையா, அது தவறுன்னு நெனச்சு மட்டும் என்ன பிரயோசனம், எப்ப திருத்திக்கப் போறீங்க? பெரும்பாலும் சாப்பாட வீணாக்குறது குழந்தைங்கதான், அதற்கு காரணம் பெரியவங்க நீங்க தானே? இல்லையா பின்ன..

தாய்மார்களுக்கு எப்போதும் தன் குழந்தைகள் அதிகம் உண்டு ஆரோக்கியமா இருக்கணும்னு ஆவல். அதில் தவறில்லை. ஆனால் தன் குழந்தை இவ்வளவுதான் சாப்பிடுவாள்/ வான் என்று தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். வீணாக்கும் அந்த உணவு வேறு குழந்தையின் பசியை தீர்க்கும் என்று அறிந்திருந்தாலே இந்த அலட்சிய போக்கு வராது.

ஒரு குழந்தை மிச்சம் வைக்கும் அந்த உணவு பண்டத்தை வீட்டில் யாராவது சாப்பிட்டு முடித்து விரயம் செய்யாமல், குப்பைத்தொட்டியில் போடாமல் இருந்தாலே உத்தமம். நிறைய சமைத்து விட்டு மிஞ்சி, வீணாக்குவதற்கு பதிலாக அளவாக சமைத்தாலே போதுமானது.

சிலர் பழங்களை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக நிறைய வாங்குவார்கள். வீட்டில் ஆர்வமாக யாரும் சாப்பிடாததால் அழுகி, கடைசியில் குப்பைக் கூடைக்கு செல்லும். இப்படி வீண் விரயம் செய்வதை விட தேவையானவையை மட்டும் வாங்கி உண்ணலாமே?

வீட்டில், பார்க்கவே ருசியாக இருக்கும் உணவை, தட்டு நிறைய அள்ளிப் போட்டு நிரப்பிக் கொள்வோம், வாயில் வைத்த பிறகு 'நல்லாவே இல்ல வேண்டாம்' என்று ஒதுக்கி வைத்து விடுவோம். அப்படி செய்யாமல் கொஞ்சம் முதலில் வைத்து ருசி பார்த்து மீண்டும் வைத்துக் கொள்ளலாமே?



விரயம் செய்வதை விட வீட்டில் வேலை செய்பவரிடம் தவறாக நினைக்கவில்லை என்றால் தரலாம், இல்லை பிச்சைக்காரர்களுக்கு தரலாம் அதுவும் வாய்பில்லை என்றால் குடியிருப்பு காவலாளியிடம் கொடுக்கலாம். இவர்களெல்லாம் ஏழ்மை அறிந்தவர்கள், பசி புரிந்தவர்கள் வீணாக்காமல் கண்டிப்பாக பசியோடு இருக்கும் வயிறுக்கு சேர்த்து விடுவார்கள். இதெல்லாம் முடியாவிட்டாலும் பூனை, நாய், பறவைகளுக்காவது போடலாம். ஆனால் தயவு செய்து யாருக்கும் பயனில்லாத வகையில் தூர எறிவது சரியில்லைதானே?

குற்ற உணர்வில் எழுதும் பதிவாகவும் இதை கொள்ளலாம். ஏனென்றால் துபாயில் பிச்சைக்காரனே இல்லை. அளவாக சமைத்தாலும் எஞ்சிவிடுவதை என்ன செய்வது? மறுநாள் வைத்து சாப்பிட முடியாமல் சமயங்களில் விரயமாகிவிடுகிறது.

அப்படித்தான் போன வாரம் அலுவலகத்திற்கு உணவு கொண்டு போனேன் எல்லோரும் சாப்பிட்டும் நிறைய மிஞ்சிவிட்டது. எங்கள் அலுவலகத்தில் கீழ் மட்டத்தில் வேலைப் பார்ப்பவரிடம் கொடுத்தேன். மறுநாள் நான் கொடுத்த பாத்திரத்தின் மீது ஒரு சீட்டு அதில் 'நன்றி. நான் மனிதன் கோழி அல்ல' என்று எழுதி இருந்தது. நிறையதானே தந்தோம் பற்றாமல் போய்விட்டதோ என்று எண்ணிக் கொண்டேன். மறுநாள் அதை விட கொஞ்சம் நிறைய மிஞ்சவே, எடுத்துக்குறீங்களான்னு அவரிடம் கேட்டேன். "நான் எழுதியத படிக்கலையோ நீங்க" என்று கேட்டதும். "கோழி சாப்பிடுற அளவை விட கூடத்தான் இருக்கு" என்றேன். அதற்கு அவர் சொன்னார் "நான் எழுதியது உங்களுக்கு புரியலன்னு நினைக்கிறேன். எங்க ஊர்ல சாப்பிட்டுவிட்டு கையை நக்காம கோழிக்கு காட்டுவோம் அது கொத்திக் கொள்ளும், வயறு நிறைந்ததா நாங்க சந்தோஷப்படுவோம். அதுமாதிரி இருக்கு நீங்க செய்றது" என்று தலையில் அடித்துக் கொண்டு போய்விட்டார். குத்தலாக இருந்தது எனக்கு. சாப்பிட்டு மிச்சம் வருவதை சாப்பிடமாட்டோம், எனக்கு என்று தனியாக எடுத்து வந்தால் சாப்பிடுவோம் என்று அவர் சொல்லவந்த செய்தி பிறகு புரிந்தது. என்ன செய்வது நாம ஒண்ணு நெனச்சா மத்தவங்க அதயே வேற மாதிரி நினைக்கிறாங்க.

சாப்பாடு வீணாகும் போதெல்லாம் இந்தப் படங்கள் கண்ணுக்கு முன்னாடி வந்து நிற்கிறது, மனசு பதறுகிறது. இப்பவெல்லாம் எல்லோரையும் மிச்சம் வைக்காதீங்க, வீணாக்காதீங்கன்னு சொல்லி விரட்டியே எல்லாத்தையும் சாப்பிட்டு முடிக்கச் செய்கிறேன், அதுவே பெரிய மன ஆறுதல். நீங்களும் செய்ய முயற்சிப்பீங்களா?

Monday, August 07, 2006

உறவில்லாத உறவு

பிறந்தவுடன்
பெற்ற உறவில்லை
பின்னாளில்
உற்ற உறவும் இல்லை

உன் சந்திப்பே
என் சந்தோஷமானது
மலிவாக மகிழ்ச்சி என்றால்
அதன் மறுபெயர் நீ என்பேன்
என் பிரச்சனைகளுக்கு
யோசனை கிடங்கானாய்
பாதிப்பில் பாசி படிந்தால்
பூசி தேற்றுபவன் நீ தானே
என் அறிவு வறுமையிலும்
ஆதரவாய் நீ நின்றாய்

நீயே என்
இன்பத்தின் ஆரம்பம்
தவிப்பின் துணை
தனிமையின் தீர்வு
துன்பத்தின் தேடல்

என் உளறல்களையும்
காது கொடுத்து கேட்டாய்
பதிலாக கனிவாய் மொழி பேசினாய்
கருணை பார்வை வீசினாய்
தேவைக்கு தோள் கொடுத்தாய்

என் ஐம்புலனையும் ஆட்சி செய்யும்
புதிய பிரதிநிதியே
நீ என்
சாதியோ, மதமோ, மொழியோ, ஊரோ,
காதலோ, உடன்பிறப்போ, இரத்த பந்தமோ
இல்லாதபோது
உணர்வால் உணர்த்திய
உறவில்லாத உறவாக
எங்ஙனம் முளைத்தாய்?

Monday, July 31, 2006

நெஞ்சு பொறுக்குதில்லையே...



போடும் பருக்கைகளை
பகிர்ந்து உண்டு பழகிவிட்டது
பறவை இனம்

நாய் பூனையும் கூட
சேர்ந்து உண்ண
கற்றுக் கொண்டது

மனிதர்களாகிய நாம்தாம்
தவித்தாலும் தாகத்தை
தொலைக்க தவிர்க்கிறோம்
நதிநீரை

Wednesday, July 26, 2006

லேசா லேசா...

பூக்களின்
வேர்வை
பனித்துளிகள்
**

அலை அடித்து
கலைந்த கற்பனை
மணல் வீடு
**

விலைப்போகாத
வேதனைக்குரிய விளைச்சல்
முதிர்க்கன்னி
**

காக்கை பயந்ததோ இல்லையோ
குழந்தையின் வயிறு நிறைந்தது
சோலைக்காட்டு பொம்மை
**

என் பெயர்
கரைந்தது
அவள் நாக்கில்
**

இந்த அனாதையுடன்
விளையாட வந்துவிடு
தாயில்லா பறவையே!
**

குஞ்சு பறவையே
பறந்து போய்விடு
பூனை வரும் நேரம்
**

உயரத்திலிருந்து விழும்
உனக்கு வலிக்கவில்லையோ
அருவி
**

Sunday, July 23, 2006

இல்லாமை இல்லை!?

தானத்தில் சிறந்த தானம் எது?

சமாதானம், நிதானம், பிரதானம் என்று ஆரம்பித்து விடாதீர்கள்.

வரவில்லாத சேவை நிறுவனங்கள் (Non-profit organisation) பற்றியோ அல்லது உடல் உறுப்பு தானம், இரத்த தானம் என்ற விஷயங்கள் பற்றியது என்று எதிர்பார்த்து விடாதீர்கள்.

நான் சொல்ல இல்ல இல்ல எழுத வருவது நம்மால முடிந்த செய்ய கூடிய சின்ன தரும சிந்தனைகள் பற்றியது.

தானம் என்கிற இந்த மூன்று எழுத்துக்குள் எவ்வளவு பெரிய விஷயங்களெல்லாம் அடங்கி இருக்கின்றன். ஆனால் தானத்தின் அடிப்படையென்று பார்த்தால் அன்பு செலுத்துவதிலிருந்து ஆரம்பமாகுகிறது.

ம்ருதுவாக்ய ப்ரதாநேந
ஸர்வே துஷ்யந்தி ஜந்தவா:
தஸ்மாத் ததேவ வக்தவ்யம்
வசநே கா தரித்ரதா

(பயந்துவிடாதீர்கள். ஹந்தி இலவசமாக படிக்க வேண்டுமென்றால் கட்டாயம் சமஸ்கிரதம் படிக்க வேண்டுமென்பதால் கற்றது. கற்றதை அகராதியில் கண்டபோது புகுத்த வேண்டுமென்பதால், மன்னிக்கவும் பதிக்க வேண்டுமென்பதால்...) அதாவது தாழ்ந்த குரலில் அன்புடன் இனிமையாகப் பேசினால் எல்லா பிராணிகளும் மகிழ்ச்சியடைகின்றன. பாய வரும் பசுவை 'பா, பா' என்று அன்புடன் அழைத்துத் தட்டிக் கொடுத்தால் நாக்கால் நம்மை நக்கிக் கொடுக்குமன்றோ! (முட்டாமல் விட்டால் சரி, என்று சொல்வது கேட்கிறது). ஆகவே, இனிமையாகப் பேசுதலென்ற தானத்தைச் செய்ய வேண்டும். இனிய பேச்சுக்கென்ன ஏழ்மை வந்து விட்டது?

இதையே தான் இரண்டு வரியில் சுருங்க சொல்கிறார் நம்ம திருவள்ளுவர்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

என்னடா தானம் என்று ஆரம்பித்து விட்டு அதன் அடிப்படையில் திசை திரும்பிவிட்டேன் என்று எண்ணலாம். எண்ணும் எண்ணத்தில் தான் தானம் உருவாகுகிறது. ஒருவர் மீது அன்பு செலுத்துவதில், இரக்கப்படுவதில்தான் 'தானம்' பிறக்கிறது.

வேண்டுதல், நேர்த்திக்கடனுக்காக உணவளிப்பது இவைகள் தான- தர்மத்தில் அடங்காது. தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்ற பாடல் கேட்டிருப்பீர்கள். அதில் எவ்வளவு உண்மை அடங்கியுள்ளது என்று உணர்ந்ததுண்டா?

அதற்காக பேகனாக, பாரியாக, சீதகாதியாக, கர்ணனாக இருக்க சொல்லவில்லை. தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும், ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போட வேண்டும், அதைதான் ஒளவையார் வானம் கருக்கின் தானம் சுருங்கும் என்று சொல்லியிருக்கிறார். வறட்சி, பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் அதை மீறி தானம் செய்ய முடியாதுதான். ஆனால் வறட்சியே வராமலிருக்க சிறந்த வழியும் தானம்தான். என்ன குழப்புகிறேனா? உண்மைதான்.

நம் சம்பாத்தியத்தில், மாத வருமானத்தில் 5 அல்லது 10 சதவீதம் கட்டாயமாக இல்லாதவர்களுக்கு வழங்கி வாருங்கள் வறட்சி, பற்றாக்குறை, இல்லாமை, கடன் என்ற வார்த்தைகளைக்கூட மறந்தவர்களாகி விடுவீர்கள்.

அதற்காக அந்த பணத்தை CRY, UNICEF, உதவும் கரங்கள் என்று தேடிபிடித்து அனுப்ப சொல்லவில்லை. வீட்டிலிருந்துதான் உதவி ஆரம்பிக்கிறது. உற்றார் உறவினர்கள், நண்பர்கள், அயலார்கள், தெரிந்தவர்கள், அவர்களை சூழ்ந்தவர்கள் என்று தேவைகள் அருகாமையிலேயே இருக்கும். அதற்காக உதவும் நிறுவனங்களுக்கு அனுப்ப அவசியம் இல்லை என்று சொல்லவரவில்லை, இந்த மாதம் இவர்களுக்கென்றால் அடுத்த மாதம் அவர்களுக்கு அவ்வளவுதான்.

இப்படி எல்லோரும் ஒரு கொள்கையாக, செயற்திட்டமாக கொண்டுவிட்டால் நமக்கும் துன்பமில்லை பிறருக்கும் இன்னல் இல்லை.

வலது கையால் கொடுப்பது இடது கையிற்கு கூட தெரியாமல் கொடுங்கள். பண உதவியை நமக்கு நாமே கட்டாயமாக்கிக் கொண்டோமானால் தானாக வரவு பெருகும். எப்படின்னு கேட்காதீர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பண உதவியை தவிர அறிவு தானம் தரலாம், ஓய்வு நேரத்தில் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி சொல்லி தரலாம். நமது பழைய உடுப்பை சுத்தம் செய்து இல்லாதவர்களுக்கு தரலாம். அலுவலகத்தை பழுதடைந்த கருவிகளை, கணினிகளை இலவச பாடசாலைகளுக்கோ, பிற உதவி நிறுவனங்களுக்கோ தந்து உதவலாம். உதவி என்று ஆரம்பித்து விட்டாலே தானாக சிக்கனம் கூடி, பிறருக்கு கொடுக்க கை நீளும்.

'எங்க வாங்குவது கையிற்கும், வாயிற்கும் தான் சரியாக இருக்கு' என்று நினைத்துக்கூட விட வேண்டாம். அந்த ஐந்து சதவீதம் நீங்கதான் கையில் கிடைப்பதாக எடுத்துக் கொள்ளுங்களேன். கடன்கள் எல்லாம் முடிவடையட்டும் பிறகு கொடை கொள்கையை ஆரம்பிப்போம் என்று தள்ளிப் போட வேண்டாம். நாளை என்பது எப்போதும் வராத இன்றின் நேற்று. ஆகவே நல்ல காரியத்தை தள்ளிப் போடாமல் உங்கள் வருவாயிலிருந்து மாத மாதம் 5 அல்லது 10 சதவீதத்தை உதவிக்கு என்று எடுத்து வையுங்கள்.

இப்படி எல்லோரும் செய்ய தொடங்கி விட்டாலே எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும், இல்லாமை இல்லாத நிலையும் இருக்கும்.

Thursday, July 20, 2006

தனி மரம்

பரபரப்பான சாலையில் அமைந்திருந்தது அந்த அலுவலகக் கட்டிடம். பத்து வருடங்களுக்கு மேலாகியும் புதிதாகவே இருந்தது. சாளரத்தின் கண்ணாடிகள் கூட தினம் துடைப்பதால் பளிச்சென்று இருந்தன.

காலையில் தினமும் வாசனைத் திரவம் இங்கும் அங்கும் தெளித்திருந்ததால் உள்ளே நுழைந்ததுமே அந்த இடமே கமகமக்கச் செய்திருந்தது. கதவின் இரு பக்கமும் செடிகள் தொட்டியில் வளர்ந்திருந்தன. வெளியில் இருந்து வருபவர்கள் உட்காருவதற்கு சொகுசான இருக்கைகளும், அவர்கள் காத்திருக்கும் நேரம் தெரியாமலிருக்க படிப்பதற்கு நிறைய நாளிதழ்களும், மாத இதழ்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

உள்ளே நுழைந்ததும் உடலே உறைந்து விடும் அளவுக்குக் குளிராக இருக்கும் அந்த முன் வரவேற்பறை பெரிய இடம் என்பதால் குளிரூட்டியின் தட்பம் எப்போதும் 17-18 தான் இருக்கும். வெயிலில் இருந்து உள்ளே வருபவர்களுக்கு ரொம்பக் குளிராக தெரிவதில்லை.

படியேறி உள்ளே நுழைந்தால் முதலில் அமர்ந்திருப்பது காவல்காரனாக இருந்தாலும், ஏனோ அவன் இடத்தில் அவன் இருப்பதே இல்லை. டீ குடிக்க என்று ஒரு அரை மணி நேரம் காணாமல் போய்விடுவார், பளு இறக்கி வைக்க ஆள் தேவையென்றால் முன்னாடி போய் நிற்பார். எந்த மாடியிலாவது குழல் விளக்கோ, தண்மியோ வேலை செய்யவில்லை என்றால் அதற்கும் இவர் தான் ஓடுவார்.

அந்த முன் முகப்பே அமைதியாக இருக்கும். அந்த வரவேற்புக் கூடத்தில் கேட்பது வரவேற்பாளினி புஷ்பாவின் குரல் மட்டும்தான்.

உயரத்திற்கேற்ப சரியான உடல் வாகு. அதில் ஆறு கஜ சேலையை அழகாக சுற்றிக் கொண்டு அதற்கு ஏற்ற வண்ணத்தில் பொட்டும், சேலையின் இரு வண்ணத்தைக் கடன் வாங்கி செய்தது போலான வளையல்கள் கை நிறைய. கைச்சட்டையின் கழுத்து அகலமாக வைத்து, கழுத்தில் சின்ன சங்கிலியில் பளபளக்கும் தொங்கட்டான். கிள்ளினால் இரத்தம் ஓடுவது தெரியும் அளவுக்கு நல்ல நிறம். உதடு வெளிறாமல் தெரிய அடர்த்தியான உதட்டுச் சாயம். கண்களில் மையிட்டு, கண் முடிக்கு வர்ணம் பூசி, கண் இமைகளில் உடைக்கு ஏற்ற நிறம் நிரப்பி இருந்தாலும் அது கவர்ச்சியாக இருக்காது. நீளமான, மைப்பூசிய கூந்தலை விரித்து விட்டிருப்பார்கள். உடை அலங்காரம் வயதை குறைத்துக் காட்டும் யுக்தியாக இருந்தாலும், முகத்தின் சுருக்கம் அவர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று சரியாகக் காட்டிக் கொடுத்துவிடும்.

“குட் மார்னிங் ஜெ.என். குரூப்” என்று 60 வினாடிகளுக்குள் 30 முறைக்கு மேல் அதையே ஸ்லோகம் போல் திரும்பத் திரும்ப தொண்டைத் தண்ணீர் வற்றினாலும் சளைக்காமல், குரல் பிசிறாமல், முகம் வாடாமல் தெம்பாக, நாள் முழுக்க முழங்குவார்கள்.

மணியடித்தால் தொலைபேசியை எடுத்து புன்முறுவலுடன் காலை வணக்கத்தைத் தொடர்ந்து அலுவலகத்தின் பெயரை அழகாக உச்சரித்து விட்டு உரியவர்களுக்கு தொடர்பைக் கொடுக்க வேண்டும். ஆனால் அது ஓயாத தொலைபேசி மணியாக இருந்ததால் அவர்கள் அதனை தொல்லைபேசி என்று செல்லமாக அழைப்பார்கள். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதை ரொம்பவும் உணர்ந்து நடந்துக் கொள்வார்கள்.

எட்டு அழைப்பு வந்தாலும் ‘மட மட’வென அடுக்கி நிலுவைய்¢ல் போட்டு ‘டக் டக்’கென்று உரியவர்களுக்குக் கொடுப்பார்கள். இடை இடையே அலுவலகத்தின் முகவரி, தொலைநகல் எண், கடைகளின் தொலைபேசி எண்கள், அலுவலகம் அமைந்திருக்கும் இடத்தின் குறிப்பு என்று பல வித அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும். இதில் தவறான எண்ணைச் சுழற்றுபவர்கள் மன்னிப்பு கேட்டும் வைப்பார்கள். நடு நடுவே உள்ளே நுழையும் பார்வையாளர்களுக்கும் இவர் 2வது மாடியில் இருக்கிறார், அவர் இருக்கை நேராக போய் 2வது வலதில் முதல் இருக்கை என்று சொல்ல இவளை அமர்த்தி இருக்கிறார்கள்.

புஷ்பா இவ்வளவு பம்பரமாக மும்மரமாக வேலை செய்தும் இவர்களுக்கு மேலாளர் துண்டுச் சீட்டு அனுப்புவார். அதில் ‘நம்ம இயக்குனர் காலை 11 மணிக்கு அழைக்கும் போது 5 ரிங் போன பிறகுதான் நீ அவர் அழைப்புக்கு பதில் அளித்தாயாம், இனி அப்படி நடக்காமல் இருக்க எச்சரிக்கிறேன்’ என்று.
“ஒரே ஆள் அத்தனை அழைப்பையும் ஒரே நேரத்தில் எடுப்பது எப்படி சாத்தியம்?” என்று அடிக்கடி என்னிடம் புலம்புவார் அவர்.

பார்க்கப் பாவமாக இருக்கும் “அதெல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில் விடுங்க, அவரவர்களுக்குத்தான் அவரவர்கள் வேலையில் உள்ள சிரமம் தெரியும்” என்று நான் சொல்லும் சமாதானம் அவர்களுக்குப் பெரிய விஷயமாகத் தோன்றும்.

புஷ்பா விவாகரத்து பெற்று தனித்து வாழ்பவர். 14 ஆண்டுகள் கணவனுடன் வாழ்ந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் கணவனால் விவாகரத்து தரப்பட்டவர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உண்டு. ஆனால் குழந்தைகளும் இவருடன் இல்லை. நான் இந்த நிறுவனத்தில் சேர்ந்த பிறகே அவர் வந்து சேர்ந்தார். வயதில் மூத்தவர் என்று கூடப் பாராமல் ச்¢றியவரில் இருந்து பெரியவர்கள் வரை அவர் மீது ஒரு அலட்சியம். அது எனக்குப் பிடிக்காமல் போனாலும், ‘வயதிற்கு ஏது மரியாதை இங்கு நாற்காலிக்குத்தானே?!’ என்று என்னை நானே சமாதானம் செய்து கொள்வேன்.

இரண்டரை வருடமாகியும் அவருடன் யாருமே ஒட்டுவதில்லை. அப்படியே பேசினாலும் அந்த நபர்களின் கண்கள் சரியான இடங்களில் அவரை பார்ப்பதில்லை. நேரடியாகவே ‘இன்று என்னோடு வருகிறாயா?’ என்று கேட்கும் துணிச்சலான, பொறுக்கித்தனமான ஆண்களையும் சந்தித்திருக்கிறார் அவர்.. எல்லாவற்றையும் சமாளித்து சகித்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்த அவர் பழகிக் கொண்டது போல எனக்குத் தோன்றும்.

பார்வையாளர்கள் நிறுவனத்தின் உள்ளே நுழையும் போது அவர்களின் பெயர், செல்பேசி எண், பார்க்க வரும் நபரின் பெயர், உள்ளே நுழையும் நேரம், வெளியே செல்லும் நேரம் என்று எல்லாவற்றையும் காவல்காரன் பதிவு செய்ய வேண்டும். அவன் இருக்கையில் எப்போதும் இல்லாமல் போவதால் அந்த வேலையும் அவனுக்கு வரும் அழைப்பையும் இவர்தான் எடுக்க வேண்டி இருக்கும். இப்படிப்பட்ட சின்னச் சின்ன உதவிகள் செய்தும் கூட அவன் மற்றவர்களிடம் இவரைப் பற்றி தவறான வதந்திகளை பரப்புவான். “இந்த கிழவி எப்போதும் போனை பிடிச்சுக்கிட்டு கொஞ்சிக்கிட்டு இருக்குன்னு” இரக்கம் இல்லாமல் அவதூறு அளப்பான். அதெல்லாம் தெரிந்திருந்தும் அவன் விட்டுச் செல்லும் பணியை முகம் சுளிக்காமல் செய்வார் அவர்.

அவருக்கு நாள் முழுக்க பேசிக் கொண்டே இருக்கும் வேலையாக இருந்தாலும் தொண்டையை ஈரமாக்கிக் கொள்ளக்கூட தண்ணீர் குடிக்க முடியாது. காரணம், இயற்கை அழைப்பு வரும் போது எழுந்து போனால் அந்த இடத்தில் இருந்து அந்த வேறுவிதமான தொலைப்பேசியை இயக்க என்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. என்னையும் அவர்கள் அடிக்கடி கூப்பிட முடியாது - என் மேலாளர் மிகுந்த கோபக்காரர் என்பதால் அவரால் நான் ஏச்சுக் கேட்பதை அவர் விரும்பவில்லை. குளிரூட்டியால் குளிர்ந்து இயற்கை அழைப்பை தவிர்க்க முடியாதபட்சத்தில் மட்டுமே என்னை அழைத்துக் “கொஞ்சம் வர முடியுமா?” என்று கெஞ்சிய குரலில் கேட்பார் அவர்.
எல்லோரிடமும் இடைவெளிவிட்டே பழகும் இவர் என்னைக் கண்டால் அன்பைப் பொழிவார். அதிகம் பேசிக் கொள்ள நேரம் கிடைக்காவிட்டாலும் அவரை நான் கடந்து செல்லும் போது நான் தரும் புன்முறுவலே அவருக்குப் போதுமானதாக இருந்தது. எத்¢ர்பார்ப்பில்லாத அன்பு என்று புரிந்துக் கொண்டதால் என்னை பிடித்ததோ என்னவோ?!. சாப்பாட்டு இடைவெளியில் வீட்டுக்குப் போகவில்லை என்றால் நானே போய் அவரிடம் பேசிக் கொள்வேன். நான் யாருடனாவது சகஜமாக நெருங்கிப் பேசிப் பழகுவதை பார்த்தால் போதும் கூப்பிட்டு அறிவுரை தருவார் புஷ்பா. அவரது காதல் திருமணம் தந்த கசப்பான அனுபவத்தை மனதில் வைத்துக் கொண்டு என்னை, “அதிகம் யாருடன் நெருங்கிப் பழகாதே, நீ நட்பாக பழகினாலும் மற்றவர் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடும்” என்று அறிவுரை சொல்வார். அது எனக்குள் கோபத்தை வரவழைத்தாலும் என் நல்லதுக்குத்தானே சொல்கிறார் என்று எண்ணி சமாதானம் ஆவேன்.

நிறுவனத்தைப் பற்றியோ அதில் உள்ளவர்களைப் பற்றியோ பேசிக் கொள்ளவே மாட்டோம் எங்களைப் பற்றி பேசிக் கொள்வோம். அவர் குடும்பத்தைப் பிரிந்து வாழ்பவர் போல் பேசாமல் இன்னும் அவர்களுடனேயே வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள் போல் கணவனைப் பற்றியும், மகள்களைப் பற்றியும்தான் எப்போதும் பேசுவார். அப்படி பறிமாறிக் கொள்ளும் போதே அவரின் முகத்தில் சந்தோஷம் தலை தூக்கும். சாப்பிட நான் எதைக் கொண்டுப் போனாலும் ‘இது என் ஷில்பா குட்டிக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்பார். என்னிடம் ‘கலகல’வென பேசினாலும் யாராவது நாங்கள் பேச்¢க் கொண்டிருக்கும் போது வந்தால் முகத்தை சட்டென்று மாற்றி நாங்கள் அமைதியாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு மட்டும் தான் இருக்கிறோம் என்பது போல் காட்டிக் கொள்வார்.

என்ன மனக் கஷ்டமாக இருந்தாலும் சமாளித்தவாறு புன்சிரிப்புடன் பேசி, வருபவர்களை உபசரிப்பதே வேலையாகக் கொண்ட அவர்களைப் பார்க்கும் போது அதுவே எனக்கு தன்னம்பிக்கை தருவதாக இருந்தது.

அன்றும் அப்படித்தான்.

நிறைய வேலையால் சுழன்று கொண்டிருந்த நான் ஒரு தொலைநகலை எதிர்பார்த்தவளாக அதனை எடுக்க வரவேற்பரை பக்கமாக போன போது புஷ்பாவின் முகம் சிவந்திருப்பதைக் கண்டேன். வழக்கம் போல் அழைப்புகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் குரலில் உற்சாகம் இல்லை.

என்னைக் கண்டதும், காத்திருந்தது போல் ‘கொஞ்சம் இதப் பார்த்துக்குறியாம்மா? நான் கழிப்பறை வரை போய்ட்டு வந்திடுறேன்’ என்றார். பல வேலைகளுக்கு நடுவே நான் இருந்தாலும் குறிப்பறிந்து ‘சரி சீக்கிரம் வந்திடுங்க’ என்று சொல்லிய படி காதில் அந்த பேசும் கருவியை மாட்டிக் கொண்டேன்.

பத்து நிமிடம் கழித்து வந்தவர், முகமெல்லாம் சிவந்து இருந்தது. தண்ணீர் குடித்ததில் கொஞ்சம் சிந்தி மேலே அங்கங்கு நனைந்து இருந்தது. பொய்யான சிரிப்பை வரவழைத்து சூட்டிக்கொண்டார்கள் ‘வந்துட்டேன், நீ போம்மா’ என்றார்கள். அவர்கள் குரலே அழுதுவிட்டு வந்திருக்கிறாரென்பதை காட்டிக் கொடுத்து விட்டது. ஆனால் நான் ஒன்றுமே கேட்டுக் கொள்ளவில்லை- அந்த நேரத்தில்.

சாப்பாட்டு இடைவெளிக்கு அரை மணி நேரமே இருந்தது, காத்துக் கொண்டிருந்தேன் இடைவெளிய்¢ல் அவரைச் சந்திக்க. வீட்டுக்குச் சாப்பிட வரவில்லை என்று அக்காவை அழைத்து சொல்லி விட்டேன். அவரது அழைப்பிற்காகக் காத்திருக்கத் துவங்கினேன். அடுத்தவர் பிரச்னையில் மூக்கை நுழைப்பது அநாகரிகம் என்று அறிவு உணர்த்தியதை மனசு ஒப்புக் கொள்ளவில்லை. நான் காத்திருந்ததற்கு ஏற்ப சரியாக ஒரு மணிக்கு புஷ்பாவே என்னை அழைத்தார்.

“கொஞ்சம் வர்றியாம்மா” என்றார் அழுகை கலந்த வறண்ட குரலில்.

“வரேன்” என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நான் கீழே போனேன். என்னவாக இருக்கும் யாராவது திட்டினார்களா, வெளி இருந்து யாராவது கூப்பிட்டு கண்டபடி பேசிவிட்டார்களா, ஒருவேளை உடல்நிலை குறைவோ என்று பலவாறு யோசித்தபடி வரவேற்பறை பக்கம் சாப்பிட ஒதுங்கும் சின்ன அறைக்கு சென்றேன்.

கலங்கியிருந்த கண்களில், நீயாவது என்னிடம் ஏதாவது என்னைப் பற்றிக் கேளேன் என்ற ஏக்கமான பார்வை தென்பட்டது.
“என்ன புஷ்பா அக்கா ஒரு மாதிரியா இருக்கீங்க? உடம்புக்கு ஏதாவது...” என்று தொடங்கி விட்டுப் பின்னர் அவரே தொடரட்டும் என்று இடைவெளி விட்டேன்.

அவரைப் பார்க்காதது மாதிரி நான் மேசையை நோக்கிக் குனிந்த நேரத்தில் எச்சிலோடு சேர்த்து அழுகையை அவர் முழுங்குவது தெரிந்தது. அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொஞ்சம் தண்ணீர் குடித்துத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டவர் என் கண்களைப் பார்க்க முடியாமல் தவிர்த்து “ஒண்ணுமில்லையேம்மா ” என்றார்கள்.

அவரே சொல்லும்வரையில் நானாக துருவிக் கேட்பது நாகரீகமில்லை என்பதால் பேச்சை மாற்றியபடி “சரி வாங்க. சாப்பிடலாமா?” என்றேன் வரவழைத்துக் கொண்ட உற்சாகக் குரலில்.

என் கண்கள் அவரை நேரே பார்த்த போதும் முகம் கொடுக்காமல் “ம்ம்” என்று மட்டும் தலை குனிந்தபடி கூறினார்கள்.

எனக்கு மனசு கேட்கவேயில்லை புஷ்பா அக்கா இப்படி மனம் ஒடிந்து பார்த்ததே இல்லை நான். என்னிடம் ஏதோ சொல்ல நினைக்கிறார் ஆனால் ஏனோ ஆரம்பிக்க முடியவில்லை. ஒருவேளை சத்தமாக அழுதுவிடுவாரோ என்ற பயம் உள்ளுக்குள் இருக்கிறதோ என்னவோ என்றெல்லாம் நான் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவராகவே ஆரம்பித்தார்.

கலங்கிய கண்ணுடன் என்னை நிமிர்ந்து பார்த்து, “இன்னிக்கு ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்” என்று கொஞ்சம் நிறுத்தி மறுபடியும் தண்ணீர் குடித்து தொடர்ந்தார்கள் “என் மூத்த மகளுக்கு திருமணமாம்” என்று அழுகையோடு கூடிய குரலில் சொன்னார்கள்.

அதன் பின்னணியே புரியாமல் “நல்ல விஷயம் தானே, அதற்கு ஏன் கலங்கி இருக்கீங்க?” என்று வெளியில் சிரிப்புடனும் உள்ளுக்குள் திகைப்புடனும் கேட்டேன்.

நான் அறியாமையில் கேட்பதை உணர்ந்து, ஆதங்கக் குரலில் “அது இல்லம்மா, நான் ஒரு நல்ல மனைவியா இருந்தேனான்னு தெரியலை. ஆனா சத்தியமா நல்ல தாயா இருந்தேன்.” என்றவுடன்,
அவரது நிலையைக் கொஞ்சம் புரிந்தவளாக, பீறிட்டு வரும் அழுகையை தடுக்க முனைந்து சமாதானப்படுத்து வதற்குள்...

“வீட்டுல ஒவ்வொரு வேலையைப் பார்க்க வெவ்வேறு ஆட்கள். சமையற்காரர், தோட்டக்காரர், எடுபிடிகள், இப்படி நிறைய உதவி செய்றதுக்கு ஆள் இருந்தாலும், என் குழந்தைகளுக்குரிய அத்தனை வேலைகளையும் விரும்பி செய்வேன் நான். மற்ற பணக்கார வீட்டு பொண்ணுங்களப் போல கடைத்தெரு, கிளப்ன்னு இல்லாம என் நேரத்த முழுக்க அவர்களுக்காகத்தான் செலவிட்டேன்.” அவரது குரலின் ஒலி அளவு கூடிக் கொண்டே போனது.
நடுவில் புகுந்து “இப்ப என்ன நடந்து போச்சு?” என்று அமைதியான குரலில் பேசி அவர்கள் சத்தமாகப் பேசுவதை சூசகமாக உணர்த்தினேன்.
மறுபடியும் குரலை தாழ்த்திக் கொண்டு “இரட்டை பொண்கள் பிறந்தவுடன் முகம் சுளித்த அந்த மனுஷனுக்கு “பெண்ணுனா அதிர்ஷ்டம்”ன்னெல்லாம் சொல்லி தேற்ற்¢யவ நான். ஒரு குழந்தைக்கு பால் கொடுத்துக் கொடுத்துக்கிட்டிருக்கும் போதே அடுத்த குழந்தை அழுதால் துடித்து அடுத்த குழந்தையை எடுத்து பாலூட்டுவேன். இரண்டு பேரையும் இரு கண்ணா நெனச்சு பதினைந்து வயசு வரை வளர்த்தேன்.” கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டதில் அவர்களின் மார்பு ஏறித் தணிந்தது. அதில் இருந்த ஏக்கம் எனக்குப் புரிந்தது.

அவர்கள் சோகம் என்னையும் தாக்கியதில் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன். அமைதியை நிரப்ப மீண்டும் ஒலித்தது அவர்கள் குரல் “மேற்படிப்புக்காக மகள்கள் இரண்டு பேரும் அமெரிக்காவிற்கு போய்ட்டாங்க. எனக்கும் என் கணவருக்கும் பிளவு ஆரம்பமாகி விவாகரத்தில முடியும் போது கூட குழந்தைகளை என் பக்கம் வாதாட கேட்டதில்ல. ஏன் தெரியுமா, சொகுசா வாழ்ந்து பழகிய குழந்தைகள் என் சுயநலத்துக்காக எங்கூட அழைச்சிக்கிட்டேனா பணத்தால கிடைக்குற சந்தோஷம், அமெரிக்க மேல் படிப்பு, ஆடம்பர வாழ்க்கை எல்லாமே பறிபோய்விடும்ன்னு குழந்தைகள் பற்றியே வாய் திறக்கவில்லை நான். ஜீவனாம்ச பணம் வாங்கிக்கிட்டதுல மகள்களுக்கு என் மேல கோபம். அந்தப் பணம் என் வாழ்க்கையை நகர்த்தறதுக்குன்னு புரிந்துக்கொள்ளக் கூட அவங்க தயாரா இல்ல. அவங்க இங்கு வந்து போகும் போது என்னைக் கூப்பிட்டுப் பேசக்கூட பிடிக்காமல் போயிடுச்சு. நான் நினைச்சிக்கிட்டேன் அவர்களோட அப்பாவுடைய கட்டுப்பாட்டால் எங்கிட்ட பேச முடியிலன்னு. பிறகுதான் தெரிஞ்சது அவர்களுக்கேதான் என்னை பிடிக்காம போய் விட்டதுன்னு.” நிறுத்தும் போது அந்த பக்கம் யாரோ போவது கேட்கவே கொஞ்சம் மௌனத்தைப் போர்த்திக் கொண்டு, எங்களை தாண்டிப் போகும் வரை காத்திருந்து மீண்டும்,
“இன்னிக்கு என் தோழி மூலம் என் மூத்த மகளுக்குத் திருமணம்ன்னு கேள்விப்படும் போது என் ஈரக்குலையே நடுங்கிவிட்டது தெரியுமா? இருபத்தி-மூன்று வயதே இருக்கும் என் மகளுக்கு திருமணம் நடத்த என்ன அவசரம்? அவள் ஏதாவது தவறான வழியில் போய் விட்டாளோ? பெரிய இடத்து மாப்பிள்ளை அவனும் படித்துக் கொண்டிருப்பவன் தான். அதுவும் வேறு சாதின்னு சொல்லும் போதே காதல் திருமணம்ன்னு யூகிக்க முடிந்தது. அதைத் தவிர வேறு விபரங்கள் தர முடியவில்லை என் தோழியால்.”
கொஞ்சம் யோசித்தபடி “என் மகளுடைய திருமணத்தைப் பற்றி யாருக்கிட்ட கேட்க? எங்களுக்கும் காதல் திருமணம்தான் இப்ப நான் எங்கு நிற்கிறேன் வாழ்க்கையில? மனம் ஒத்துப்போகலைன்னு அவருக்கு 14 வருஷம் கழிச்சிதான் புரிந்து வெட்டி விட்டார். உடைந்து போன நான் போக கதி இல்லாம தற்கொலை செய்துக் கொள்ள துணிந்து, அப்புறம் சில நல்ல சொந்தங்களால் உருக்குலைஞ்ச நான் மீண்டும் தெளிவானேன். என் படிப்பு உதவிச்சு சொந்தக் காலில் நிற்க. எது எப்படிப் போனாலும் என் தாய்மைதான் என்னைக் கொல்றது. என் மகளுடைய தாயா கடமைக்காவது என்னைத் திருமணத்திற்கு அழைப்பார்களா? அழைத்தாலும் போகத்தான் என்னால முடியுமா? இப்படிப்பட்ட பெரிய விஷயம் வீட்டில் நடக்கிறது, அடுத்த வாரம் திருமணம், பெற்றவளிடம் ஒரு வார்த்தை சொல்லலாம் என்ற நெனப்பு வந்துச்சா?” என்று பல கேள்விகள். மனதில் தேக்கி வைத்திருந்ததை கொட்டித் தீர்த்தார்கள்.

யோசித்தவளாக, வார்த்தை தேடுபவளாக ஆரம்பித்தேன். என்னாலும் இந்தக் கேள்விகளுக்கு விடையைத் தேட முடியவில்லை. அடுத்தவர் வாழ்க்கையில் ஆயிரம் சிக்கல்கள் இருக்கும்போது என்னுடம் எல்லாம் திறந்து விவாதிக்கும் அவருக்கு என்னால் வார்த்தைகளாலாவது ஆறுதல் சொல்ல முடியுமா என்று யோசித்தேன்.

“எல்லாம் முடிஞ்சி போச்சு, ஏன் வீண் எதிர்பார்ப்புகள்? ஆடு பகையாகி, குட்டியை உறவுக்கு அழைச்சா எப்படி? அவர்கள் திருமணத்திற்கு அழைச்சாலும் நீங்க போனீங்கன்னா யாரும் மதிக்கவே மாட்டாங்க. உங்களுக்குத் தாயின் அங்கீகாரம் கூடக் கிடைக்காது. உங்க மகள் கூப்பிட்டுப் பேச வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீங்க, நீங்களே நல்ல தாயாக ஆசீர்வதிக்க அழைத்துப் பேசுங்க” என்று சமாதனப்படுத்த முடியாத வார்த்தையாக இருந்தாலும் என்ன சொல்லித் தேற்றுவது என்று தடுமாறி தோன்றுவதைச் சொல்லி வைத்தேன்.

ஏதோ நான் சொல்லியது புது தெம்பு தந்தது போல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்து களைந்து “ரொம்ப சரியா சொன்னேம்மா, நான் கூப்பிட்டுப் பேசுறேன். ஒண்ணு சொல்றேம்மா என்ன சண்டை வந்தாலும் கணவனுடன் சகித்துப் போய் விட வேண்டும். நம்ம சமுதாயத்தில் தனியாக வாழ்வது ரொம்பக் கொடுமை. அனுபவிச்சவ தனியா தவிக்கிறான்னு சில கேலி பார்வைகள். நண்பர்கள் வீட்டில் விசேஷம்னு போனா யாரும் சரி வர பேசுறதில்ல, நல்ல பேசி பழகிட்டா இவ வீட்டுக்கெல்லாம் அடிக்கடி வரத் தொடங்கிடுவா என்ற பயம். அவளவளுக்கு நம்ம புருஷனை இவ கவர்ந்து விடுவாளோன்னு என்னிடத்தில் பேசுவதே தயக்கம். எந்த குற்றமும் செய்யாத என்னை சமுதாயம் ஒதுக்கியே பார்க்குது” என்று மனவலியுடன் அவர் அறிவுரை போலச் சொன்னபோது என் பெண்ணுரிமை வாதங்களை ஒதுக்கி வைத்து விட்டு எரிச்சலின்றி கேட்டுக் கொண்டிருந்தேன் ஆறுதலாக..

அவர் சொன்ன அறிவுரை மனதில் ஆழமாகப் பதிந்தது. அவரும் தன்னம்பிகையுடன், தன் மகளுடன் பேசப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் தான் மதிய சாப்பாட்டைச் சாப்பிடவில்லை என்பதை மறந்தவராக திறக்காத உணவு டப்பாவை பைக்குள் திணித்து “பார்க்கலாம்மா” என்று வேறு எதையோ யோசித்த படி வெளியில் நகர்ந்தார்கள்.

சாப்பாட்டு இடைவெளி நேரம் முடிந்து விட்டாலும், அரக்கப் பரக்க உருளைக்கிழங்கை ரொட்டிக்குள் வைத்து சுருட்டி வாய்க்குள் திணித்துக் கொண்டேன். மிச்ச அலுவல் நேரத்தில் தெம்பாக வேலை செய்ய வேண்டி இருக்கே அதற்கு.
மறுபடியும் “குட்டா·ப்டர்னூன் ஜெ.என். குரூப்” என்று தொடர்ந்தது..

அமீரகத் தமிழிணைய நண்பர்கள் அமைப்பின் 5-ஆவது ஆண்டுவிழா மலருக்காக எழுதியது


Tuesday, July 18, 2006

ஆதங்கம்!

புது வண்டியில்
முதல் விபத்து
எலுமிச்சை
**

பால் அபிஷேகம்
பட்டினியில் அழுதது
பச்சிளங்குழந்தை
**

உடையாமல் இருக்க
உடைத்தார்கள்
பூசனிக்காய்
**

நீ தூங்கினாலும்
சிணுங்கி எழுப்பியது
கொலுசு
**

மழையில் நனையாத
பூ
முழுநிலா
**

மழையில் நனையாமல் இருக்க
நான் நனைந்தேன்
குடை
**

உபசரித்து விரித்தது
முடிந்த பின்
எச்சில் இலை
**

காலி பணப்பை
வெதும்பும் திருடன்
கடன் அட்டை
**

உச்சரிப்பு சிதைவு
இந்திப் பாடகர்
பிரபலமானது தமிழ்பாட்டு
**

நூறுநாள் ஓட்டம்
தமிழ்படம்
ஆங்கிலத்தில் தலைப்பு
**

Sunday, July 16, 2006

திருமணம் - வாழ்வின் மாற்றம்

திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவு வாழ்வின் அர்த்தமுள்ள அவசியமான திருப்புமுனை என்று சொல்வதைவிட வாழ்விற்கே புது உருவம் தரும் தருணம் எனலாம்.

திருமணத்தின் போது புகைப்பட நிபுணர் நகைச்சுவைக்காக சொல்வது, ‘கடைசியாக ஒருமுறை சிரிச்சுடுங்க பார்க்கலாம்’ என்று. அது கடைசி சிரிப்பா அல்லது வாழ்வின் ஆரம்பமா என்று நாம் வாழ்வதை பொறுத்தே அமையும்.

திருமணம் வாழ்வின் தரம் மாறுவது, மேம்படுவது மட்டுமல்லாமல் வாழ்வையே மொத்தமாக மாற்றிவிடுவது பலப்பேருடைய அனுபவமாக இருக்கலாம். இரு மனம் கொண்ட வாழ்வில் பல ஒற்றுமைகளை விட வேற்றுமைகளையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்து அதன்படி நம்மை மாற்றிக் கொண்டு விட்டுக்கொடுத்து போவதுதான் நுண்ணறிவுள்ள செயல்.

பெரும்பாலான இன்றைய தலைமுறைகள் திருமண வாழ்வின் நன்மை தீமைகளை, ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொள்ளாமல், தான் திட்டமிட்ட கனவு உலகை காண மட்டுமே ஆயுத்தமாகுகிறார்கள்.

நிச்சயித்த திருமணமோ, காதலித்து திருமணமோ, திருமணத்திற்கு முன்பு லட்சக் கேள்விகள் கேட்டு அதில் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துக் கொண்டதாக திருப்த்தியடைந்து அதுவே வாழ்விற்கு தேவையான எல்லா பதில்கள் என்று மகிழ்ச்சிக் கொண்டு வாழ்வை தொடங்குகிறார்கள். திருமணத்திற்கு முன்பு எல்லோருமே தன்னுடைய ஒரு பக்கத்தை மட்டுமே காட்டுகிறார்கள். இவளை கவர அவனும், அவளை கவர இவனும் தன்னையறியாமல் நாடகம் நடத்திவிட்டு, இயல்பு வாழ்க்கை என்று வரும் போது ‘தவறு செய்து விட்டோமா?’ என்ற குற்ற உணர்வில் குழம்பி நிற்கிறார்கள். எதிர்பார்ப்பைவிட இருப்பதை அப்படியே நேசிக்க கற்றுக் கொண்டாலே வாழ்விற்கு வெளிச்சம்தான்.

வேற்றுமையா ஒரு திருமணமுறிவிற்கான காரணம்? அதை விட முக்கியமானது அதனை எப்படி கையாளுவது என்பது. கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு, மனஸ்தாபம் இதெல்லாம் எல்லா உறவுமுறைகளிலும் இருக்கும் போது ஏன் கணவன் - மனைவி இடையில் வந்தால் மட்டும் திருமணமுறிவுகள், விவகாரத்துகள்? யோசித்திருக்கிறீர்களா?

வாக்குவாதம், விவாதத்தின் பிறகு செய்ய வேண்டியவை எல்லாம்:

  • மன்னித்து மறந்து விட வேண்டும் (இருவரும் ஒரே விஷயத்தை மனதில் வைத்திருப்பதில் பயனில்லை பாருங்க).
  • தவறிலிருந்து திருத்திக் கொள்வது (வாயே திறக்க கூடாதுன்னு திருத்திக்கிட்டா பிரச்சனையே இல்லை)
  • புரிந்துக் கொண்டு இன்னும் நெருங்குவது (புரியா விட்டாலும் புரிந்தது போல் சமாதானப்படுத்தி முடித்து விட வேண்டும், சண்டையை.)
  • இருப்பதை அப்படியே நேசிப்பது (வேற வழி!)
  • சிநேகபாவமாக விட்டுக்கொடுப்பது (விட்டுக்கொடுக்கலன்னா வாங்கி தர வேண்டி இருக்கும், அன்பளிப்பு).

கருத்து வேறுபாடு என்பது எப்போது வருமானால்

  • மற்றவர் கருத்தை காது கொடுத்து கேட்காத போது (என்றுதான் பேசுவதை கேட்டிருக்காங்க, அவங்களே பேசிக்கிட்டிருந்தா?)
  • மற்றவர் கருத்தை மதிக்காத போது (மனுஷன மதிச்சாதானே கருத்தை மதிக்க!)
  • மற்றவர் கருத்தை ஏற்க முடியாத போது (கேட்டாதானே ஏற்பதைப் பற்றி பேச)
  • மற்றவர் கருத்தை சரியென தெரிந்தும் மனம் ஒப்பாமல் மறுக்கும் போது (எகத்தாளம், அகங்காரம்.)

திறமையாளர்களுக்கு தெரியும் திருமணத்தின் மூலம் தனக்கு என்ன வேண்டுமென்று, எப்படிப்பட்ட துணை அமைய வேண்டுமென்று, எந்த மாதிரியயன குணநலம் கொண்ட துணையை தேர்ந்தெடுத்து வாழ வேண்டுமென்று.

ஆரோக்கியமான தாம்பத்தியத்திற்கு நெருக்கடி, பொறாமை, சந்தேகம், உரிமை கொண்டாடுதல் (Possessiveness) இதெல்லாம் இல்லாமல் இருந்தாலே போதுமானது.

சுதந்திரமாக வெளிப்படையாக பேசுதல், கிண்டல் செய்தல், கருத்து பரிமாற்றம் இவைகளைக் கொண்டு மிகுந்த நெருக்கம் உண்டாக வேண்டுமே தவிர சண்டையின் ஆரம்பமாக கூடாது.

‘என்னைப் பற்றி கொஞ்சமாவது கவலை இருக்கா’ என்று துணைவி கேட்டால்.

‘நீதானே தேவையில்லாதவற்றிக்கு எல்லாம் கவலைப்பட கூடாதுன்னு சொன்ன’ என்று நையாண்டியாக பேசினால். கிண்டல் என்று புரிந்துக் கொள்ளும் தன்மை இருத்தல் வேண்டும்.

அறிவாளிகளுக்கு தெரியும், காதலோ அன்போ வரையறுக்கப்பட்டதோ அல்லது வரம்பற்றதோ இல்லையென. அந்த உணர்வானது தனது துணை தம்மை நடத்துவது சார்ந்தது, மங்கும் மிளிரும் ஆனால் நிச்சயமாக மறையாதது. இதை புரிந்து நடந்தால் நெருக்கம் கூடும். நாம் என்ன கொடுப்போமோ அது அதிகமடங்காக திருப்பி கிடைக்கும். (கொடுக்கல்- வாங்கல் வியாபாரம் மாதிரிதான்).

கர்வம் - தன்னம்பிக்கை, நேர்மை - நேர்த்தியின்மை, மிதமிஞ்சிய நம்பிக்கை(over confidence) - திட நம்பிக்கை (optimism), அடக்கம் - பவ்யம் இவைகளுக்கு ஒரு நூல் இடைவெளிதான் வித்தியாசம் இருப்பதை புரிந்துக் கொண்டு நடக்க வேண்டும்.

இவையெல்லாம்தான் திருமணத்தை உருவாக்கவும், உடைக்கவும் செய்யும்.

Thursday, July 13, 2006

குருதி வியர்வை

விவசாயின் காயம்
மருந்து
உழவு மண்
**

செத்தால்தான்
சோறு
சாவு கூத்தாடி
**

கடன்பட்டவனின்
இரத்த வாடை
வட்டிப்பணம்
**

பிணம் எரிந்தால்தான்
எரியும் வயிற்றுக்கு சோறு
வெட்டியான் வாழ்க்கை
**

நிலத்தில் வயிற்றை கழுவ
வானத்தை நோக்கினர்
விவசாயிகளின் வறுமை
**

உயர்ந்தது உன் கொள்கையென
கைத்தட்டி உயர்த்தி விட்டோம்
உயர்ந்தது விலைவாசியும்.
**

எச்சிலை சேர்த்து
தாகத்தை தொலைத்தனர்
தண்ணீர் பஞ்சம்
**

பழைய சன்னல் திரையில்
புது பாவாடை
ஏழை குடியாள்
**

Wednesday, July 12, 2006

மரணப் போட்டி



அடக்கம் செய்தனர் எனை
ஆடம்பரமில்லை, கூட்டமில்லை
கண்ணீருமில்லை, கவலையும் தென்படவில்லை
நான் நிழலாக சுவற்றில் மட்டும்

நிசப்தத்திலும் நித்திரையில்லை
இறந்த பின்பும் நிம்மதியில்லை
செத்தும் சாகடித்திருந்தேன்
குழந்தையை, அவள் தகப்பனுடன்

குடித்து வண்டி செலுத்தினேன்
இடித்து மரணித்தோம்
யார் முந்தி, அதிலும் போட்டி
என்னால் இரண்டு விதவைகள்

நேற்று இருந்த நண்பர்கள்
இன்று இருக்கவில்லை
சந்தோஷத்தில் ஊற்றி திளைத்தனர்
சடங்கில் எங்கோ தொலைந்தனர்

நிறுவனம் நிரப்பியிருந்தது
என் இடத்தை
குடும்பத்தில் ஈடுகட்டமுடியுமா
என் இடத்தை?

இறந்த இதயமும்
வெட்கத்தில் அழுதது
‘அப்பா’ என்று அழுபவனை
அணைத்துக் கொள்ள துடித்தது

இறப்பில் தெளிந்தது
என் போதை மட்டுமல்ல
என் பேதமையும்தான்
கடந்த பின் விடிந்து பயன்?

மணமற்ற மலர் படத்திற்கு
மீண்டும் பிறக்க பிடிக்கவில்லை
வாழ பிடிக்காமலல்ல
மீண்டும் மரிக்க பிடிக்காமல்.

Tuesday, July 11, 2006

உயிரினமே

குடத்தை கீழே வைக்காமல்
நகர்ந்தது தண்ணீரை தேடி
நத்தை
**

வண்ணங்களின் கலவையை
களவாடினேன் இறையிடமிருந்து
பட்டாம்பூச்சி
**

வீட்டுக்குள்ளே
வீட்டைக்கட்டியது
எறும்புகள்
**

சேமிப்பை கற்றுக்கொண்டேன்
ஒழுகினத்தை கற்றுக்கொண்டேன்
எறும்புகளிடமிருந்து.
**

பூமியில்
பிணைந்த வாழ்க்கை
மண் புழுக்கள்
**

நிர்வாண குளியலை
ஒழிந்து பார்த்து ரசித்தது
சுவற்று பல்லி
**

கண்ணீரால்தான்
கடல் கசந்ததோ
மீன்கள்
**

கனவில்லை காரணம் தூக்கமில்லை
ஓசை காதை பிளந்தது
கொசுக்கடி
**

ரங்கோலி
ஏமாற்றம்
பசியுடன் எறும்புகள்
**

Monday, July 10, 2006

ஆறாவது அறிவு

செந்தில் குமரனின் அழைப்பிற்கிணங்க ஆறு சேர வந்தேன்.

ஆறு அறிவு கொண்ட மனிதன் வலைப்பூவில் ஆறு பதிப்பதால் அவன் காயங்கள் ஆறிவிடபோவதுமில்லை, வடுக்களையும் ஆற்றிவிட போவதுமில்லை.

என்ன ரொம்ப சீரியஸா போகுதேனு பயந்திடுடாதீங்க..

எப்பவுமே இப்படிதான் நாம் ஒரு புத்தகம் படிக்கும் போது அந்த புத்தகத்திகிணங்க நம் மனநிலையும் மாறிவிடும். அதே போல் ஒரு படம் பார்க்கும் போதும். என்ன ஒப்புக் கொள்ள முடியவில்லையா? ஒரு அறையில் இருவர் சண்டைப்போட்டுக் கொண்டு காரசாரமாக விவாதம் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் நீங்கள் நுழையும் போது நம்மை அறியாமல் நிகழும் ஒரு பதற்றம் - அது ஏன்? எதற்காக? சில சமயங்களில் நாம் சொல்ல வந்ததை மற்றவர்கள் சொல்வதும், நாம் இப்படி நடந்துவிடுமோ என்று பயங்கொள்ளும் நேரத்தில் நிகழ்ந்துவிடுவதும், மனசே சரியில்லை என்று தோன்றும் போது நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்களும் நம்மை தேடுவதும் எதனால்? ஆமா இவ என்னடா ஆறு விளையாட்டுல கலந்துக்க சொன்னா ஆறாவது அறிவை ஆராய்கிறாள் என்று சலிப்பு ஏற்பட்டிருக்கும். என்ன செய்றதுங்க ஆறு என்றவுடன் எந்த ஆறு நினைவுக்கு வருதோ அதைதானே கிறுக்க முடியும். இப்படி என் ஆறாவது அறிவை வைத்து முன் கூட்டிய அறிந்த ஆறு விஷயங்கள்:
  1. 1. ஆசையாக வளர்த்த மீன் குட்டிப் போட்டு சில நாட்களிலேயே செத்து போகும்ன்னு தோனுச்சு - செத்து போச்சு ;-(
  2. 2. வீட்டுக்கு வரிசையாக நிறைய விருந்தாளிகள் முன் அறிவிப்பு இல்லாமலே வர போறாங்கன்னு தெரிந்து வீட்டை சுத்தம் செய்து சாப்பிட, அருந்த ஏதேதோ செய்து வைத்தது.
  3. 3. என் நண்பனும் தோழியும் காதலில் மாட்டி கல்யாணத்தில் முடிவார்கள் என்று வாய்விட்டு கூறி, இரு தரப்பினரிடமிருந்தும் நட்பை கொச்சைப்படுத்துவதாக திட்டு வாங்கி. கடைசியில் நான் சொன்னதே ஆரம்பமாகி, திருமணத்தில் முடிந்து இப்ப ஒரு குழந்தை. ;-)
  4. 4. வண்டி எடுக்கும் போதே ஏதோ அசம்பாவிதம் நேரும் என்று தோன்ற.பிராத்தித்து வண்டி எடுத்து, கவனமாகத்தான் ஓட்டினேன், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது போல் லேசான மோதலில் தப்பியது என் வண்டியும் மற்றவர் வண்டியும்.
  5. 5. இரண்டு பெண் குழந்தையை பெற்றவர்கள் மூன்றாவதை சுமக்கும் போது. 'தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் இதுவும் பெண் குழந்தைதான்' என்று மனசுல பட்டதை பட்டுன்னு சொல்லி, 'அடிப்பாவி அப்படிலாம் சொல்லாதேன்னு' சொன்னாங்க. அப்படியே ஆகிவிட்டது. மூன்றாவதும் முத்தான பெண் குழந்தை.
  6. 6. நேற்றுக் கூட ஏதோ காரணமே இல்லாமல் மனசே சரியில்லை. ஊருக்கு அழைத்து பேசிய பிறகுதான் ஏன் என்று புரிந்தது. அக்காவுக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்களாம்.
ஆறு: 666 இது சாத்தான் எண்ணாக இருக்கலாம் ஆனால் 6+6+6=18 (1+8=9) 6x6x6=216 (2+1+6=9) ஒன்பது பலருக்கு அதிஷ்ட்ட எண். அதிஷ்டம் துரதிஷ்டம் என்று பலர் நம்புவார்கள். சிலர் உணர்ந்து அதனை பொய் என்பார்கள். சில சமயங்களில் இந்த சம்பவங்கள் நடந்திருக்க வேண்டாம் என்று தோன்றும் வாழ்க்கையிலலும் கணினி போல undo செய்யும் வசதி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்படிப்பட்ட மனதை பாதித்த ஆறு சம்பவங்கள்.
  • * அஞ்சலி நாய் புத்திபேதலித்து இறந்தது.
  • * பால்காரன் பசு கன்னு போடும் போது செத்துப் போனது.
  • * பத்தாம் வகுப்பு இறுதியான பொது தேர்வில், ஒரு சக மாணவி நல்ல படிக்கும் பெண், இரவு முழுக்க கண் விழித்து படித்ததில் சுயம் இழந்து ஏதோ குழம்பி, தன்னிலை மறந்து பரிட்சை தாளை கிழித்து, வகுப்பறையில் கலாட்டா செய்து எல்லோரையும் பீதியடைய செய்து, அந்த 15 நிமிட கோலத்தால் அன்று அவள் பரிட்சை எழுத முடியாமல், ஒரு வருடம் வீண் செய்ய வேண்டியாகிவிட்டது.
  • * என் தோழி அபிராமியின் அப்பா திடீர் மரணம். வாழ்க்கையின் மேல்மட்டத்தில் இருந்து திடீர் சரிவு. பெரிய பள்ளியில் படித்துக் கொண்டிருந்தவர்கள் தொடர்ந்து பணம் கட்டணம் கட்ட இயலாமல் சாதாரண பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள். அப்பாவின் இழப்பின் துயரத்தில் இருந்து மீண்டு அவள் வாழ்வின் முதல் நாளில் எங்களை எல்லாம் சந்தித்து புது பள்ளிக்கூடம் சேர்ந்துவிட்டேன் நாளை புது பள்ளி உடுப்பு (uniform) என்று உற்சாகமாக சொல்லி சென்றவள். அப்பாவின் இழப்பை தாங்காத அவள் அம்மா, மகள் குளிக்கும் சமயத்தில் எரிவாயுவை திறந்துவிட்டு. கடைசிக்குட்டி மகனுடன் சேர்ந்து செய்துக் கொண்ட தற்கொலையில் அபிராமியும் பலியானது.
  • * பக்கத்து வீட்டு ரோஜா அக்காவின் கணவர் கால் தடுக்கி விழுந்து, சின்ன கல் நெற்றிபொட்டில் குத்தி அகால மரணமடைந்தது.
  • * சக ஊழியர் 29 வயதிருக்கும். திருமணமாகி, கர்பிணி மனைவியை தாயகம் விட்டு, வேலையை துபாயில் தொடர வந்தவர் இயற்கை எய்தியது.

ஆறு என்றவுடன் ஆறாவது அறிவை தவிர நினைவுக்கு வருவது:

  1. கடலில் இணையும் கரைக் கொண்ட ஆறு
  2. ஆறுநாள் யுத்தம் (இஸ்ரேல் - அரபு நாடுகள் 1967)
  3. ஆறு வித்தியாசங்கள்
  4. ஆறு விரல் கொண்ட என் தோழி
  5. ஆறு படம்
  6. டிசம்பர் ஆறு

வேரென்ன எழுதுவது?

-என்னை விரும்பிய ஆறு உள்ளங்கள் என்று காதல் காப்பியம் எழுதலாம். ;-)

-நான் சமைத்து திட்டு வாங்கிய ஆறு பண்டங்கள் பற்றி சமையல் குறிப்பு எழுதலாம். ;-)

-நான் பெற்ற பாராட்டு பரிசுகள் என்று பெருமை பட்டியலிடலாம்.

எதற்கு வம்பு, அப்படியே நிறுத்திப்புட்டு வேறு நபர்களை ஆறு விளையாடிற்கு அழைப்போம். பெறும்பாலும் எல்லோரும் ஆறு போட்டாகிவிட்டார்கள், இருப்பினும் அழைத்து பார்ப்போம்.

  1. ஆசிப் மீரான் (சின்ன பசங்க விளையாட்டுன்னு ஒதுங்கிட வேண்டாம். உங்களை இளசாக்க சின்ன முயற்சி ;-) ஊரிலிருந்து வந்த பிறகு எழுதினால் போதும்.)
  2. முஜீப்
  3. மஞ்சூர் ராசா
  4. கோவி.கண்ணன்
  5. உமா கதிர்
  6. கவிமதி

Sunday, July 09, 2006

தாயின் தவிப்பு

(காக்க காக்க படத்தின் உயிரின் உயிரே பாட்டின் மெட்டுக்கேற்ப எழுதப்பட்டது)

uyirin uyirae...uyirin uyirae
nadhiyin madiyil kaathu kidaikindrean
eera alaigaL neerai vaari mughathil iraithum
muzhudhum vaerkindrean

கண்ணின் மணியே கண்ணின் மணியே
உலகில் உதிக்க பார்த்து இருந்தேனே
கருவில் துடித்தும் உதைத்தும் மிதித்தும் கடினம் கொடுத்தும்
உணர்வில் ரசித்தேனே

nagarum neruppai kozhundhu vetterindean...
aNaindha pinbhum...analin maelirundean
kaalaipaniyaaga yeNNai vaarikondaay
naeram kooda yedhiri aagivida...yughaNgaL aaga vaedam maarivida...
aNaththu kondaayae...pinbhu yaenoa sendraay

அசையும் தேராய் மெல்ல நடந்திருந்தேன்
பார்த்தும் பூத்தும் ... காத்துக் கொண்டிருந்தேன்
சிப்பி முத்தாக எனக்குத் தாய்மை தந்தாய்
பத்து மாதம் சுலபமாகிவிட..
பகலும் இரவும் ஒன்றாய் மாறி விட
உயிராய் உதித்தாயே.. தாய்ப்பால் ஏனோ மறுத்தாய்

swasamindri thavikiraenae
unadhu moochchil pizhaikkiraenae
idhazhLgaLai idhazhLgaLaal nirappida vaa peNNae
ninaivu yengoa neendhi chella
kanavu vandhu kaNNai kiLLa
nizhal yedhu nijamayedhu kuzhambinean vaa peNNae
kaatril yendhan kaigaL rendum
uNNai andri yaarai thaedum
vilagi poagaadhae tholaindhu poavaenae
naan...naan...naaan

சுவாசமாக நானிருந்தேன்
கவசமாகக் காத்திருப்பேன்
அன்னையை மன்னித்து அருந்திட வா கண்ணே
நிலை தடுமாறி நடந்து செல்ல
கண்ணீர் வந்து கண்கள் நிரம்ப
துயரங்கள் துடைத்திட துடிக்கிறேன் குடித்திடு கண்ணே
உலகில் உந்தன் பிறப்பென் உச்சம்
உன்னால்தானே என் வாழ்வில் வெளிச்சம்
வெறுத்து ஒதுக்காதே இறந்து போவேனே
நான் நான் நான்...

Tuesday, July 04, 2006

பெண்ணே...

கொலை செய்தால் ஊரறிய
வலி அவளுக்குள்
கருசிதைவு
**

பெண்கள் கேட்டால் -விபச்சாரம்
ஆண்கள் கேட்டால்
வரதட்சணை
**

நாளைய கல்பனாசாவ்லாவை
இரையாக்கினால் கள்ளிப்பாலுக்கு
பெண் சிசுக் கொலை
**

சாதி தீயினால்
துணிந்து எரிந்தால்
‘சத்தி’
**

தாள்ளிட்டு ஆடினால் விபச்சாரம்
அம்பலத்தில் ஆடினால்
அழகி போட்டி
**

துளிப்பா

எச்சிலை சேர்த்து
தாகத்தை துளைத்தார்
தண்ணீர் பஞ்சம்
**

உயிர்
மேட்டுக்குடி பகற்டுடுப்பானது
பட்டு பூச்சி
**

முகத்தில்
அழகிய வளைவு
சிரிப்பு.
**

மனம் அறிந்து கூறினேன்
மனம் அழுதது
காயப்படுத்திய பொய்
**

மாலை காற்றில்
கலைந்தது வண்ணம்
காலை பொழுது.
**

Monday, July 03, 2006

மறக்க முடியுமா?

நிலவை வான் மறக்குமா
வான் உலகை மறக்குமா
உலகம் பூமியை மறக்குமா
பூமி நிலத்தை மறக்குமா
நிலம் பாதையை மறக்குமா
பாதை கால்சுவடை மறக்குமா
கால்சுவடு உரிய கால்களை மறக்குமா
கால்கள் வழிகாட்டிய கண்களை மறக்குமா
கண்கள் காக்கும் இமையை மறக்குமா
இமை உடலை மறக்குமா
உடல் உயிரை மறக்குமா
உயிர் எதுவும் மறக்குமா
எதுவும் எதையும் மறக்காத போது
என்னை மட்டும் நீ ஏன் மறந்தாய்?

Sunday, July 02, 2006

அய்கூ வடிவம்

தொண்டையில் மேகம் கூடி 
கண்களில் மழை வந்தது 
தேங்கி நின்றது பிரிவு. 

** 

இரு கைகளுக்கு நடுவே 
நகர்கிறது நாட்கள் 
குயவன். 

** 

சூரியனுக்கு கீழ் 
எல்லாம் வெளிச்சம் 
கடற்கரை குளியல் 

** 
மயங்க வைத்ததும் அதுதான் 
காயப்படுத்தியதும் அதுதான் 
சுழலும் நாக்கு. 

**

Tuesday, June 27, 2006

போலி வார்த்தைகள்

உன் உதடுகள் என்னை
அழைக்காமல் இருக்கலாம்
நீ வீசும் பார்வையின் ஒளி
என்னை வந்து கிள்ளுது.

உன் உதடுகள் என்னை
அழைக்காமல் இருக்கலாம்
நீ விடும் மூச்சு காத்து
உன் ஏக்கம் சொல்லி கொல்லுது

உன் உதடுகள் என்னை
அழைக்காமல் இருக்கலாம்
வெளிவரும் உன் வேயர்வை துளிகள் ஆவியாகி
மேகமழையோடு என்னை தொட்டு செல்லுது

உன் உதடுகள் என்னை
அழைக்காமல் இருக்கலாம்
என்னை நினைத்து தளையணைக்கு அளிக்கும் ஸ்பரிசம்
என்னை அணைத்து என்னமோ பண்ணுது

மனதால் உணர்த்தும் காதல் போதும்
வார்த்தைஜாலம் வேண்டாம் காதலா!

Monday, June 26, 2006

எப்போது நுழைந்தாய் என்னுள்?

கல் தோன்றி மண் தோன்றா
காலத்தில் தோன்றியிருப்பினும்
வயதில்லாமல் திரிவதால்
வயதுப் பாராமல் பற்றிக் கொள்கிறாயோ?

மனதிற்கு அருகில் இருக்கும்
கருவறையில் கற்க தொடங்கியதால்
உள்ளத்தை மட்டுமே
விரும்பச் செய்தாயோ?

கண்டவுடன் வராததால்
நட்பாக விதைத்தாயோ?

வேற்று கருத்து வாக்குவாதத்தின்
வெற்றியில் வேருட்டாயோ?

மின்னஞ்சல்களை கண்டு
மின்னலடித்ததில் முளைத்தாயோ?

என்னைவிட அதிகம்
என்னை அறிந்திருந்ததில்
அடைப்பட்டேனோ?

என்னை எனக்கே
உணர்த்தி உயர்த்த நினைத்ததில்
உறைந்தேனோ?

தொலைவில் நீ சென்றால்
தவிப்பில் நான் தொலைந்தேன்!

அழையா விருந்தாளியாக
வந்துவிட்டதால்
மனதிற்கும் மூளைக்கும் போராட்டம்.

தோற்றது நானென்றாலும்
ஜெயித்தது காதல்தானே!

வாடகை வீடு - வில்லா 72

வீடு தேடினோம்
பாலைவனத்தில்
விரைந்து நடந்தோம்
பாதசாலையில்
வின்னை முட்டும்
கட்டிடங்கள் இடையில்
வீதி வீதியாய்
வரிசை வீடுகள்
விசால வராண்டா
வேண்டாம்டா எனக்கு
நிம்மதி குடியிருக்கும்
வீட்டை காட்டுடா
வில்லை வில்லையாய்
குட்டி வீடுகள்
கொட்டி கொடுத்தாலும்
கிடைக்காத இல்லங்கள்
வெளிச்சம் நிறைந்த
திறந்த வெளி
வில்லாவானாலும் பாலையிலே
பூத்த சோலை
வயல்காடு போல்
புற்கள் அளவாய்
வேப்பம் ஒன்று முருங்கை இரண்டாய்
வளர்ந்து நிற்க
வெட்கத்தில் வெக்கிய
மல்லி கொடி கவிழ்ந்து படற
விக்கி விக்கி என்று பூனை பெயரை
விளிக்கும் கிளி
விடிந்ததும் சூரியனை கண்டு
கூவ சேவல்
விட்டு விடாமல் பட்டென்று
குடியேறினோம் வீட்டின் உள்ளே.

Sunday, June 25, 2006

விச்சித்திர பிறவி

விரும்பாத வேதனை வந்தால்
விரும்ப கூடியவர்கள் நினைவில் வரும்.
வலியால் துடிக்கும் போது
வழிவகுக்கும் துணையை தேடி.

வினோதமானவனே, உனக்கோ...
வந்தது வந்தது வேதனை வந்தது
வேதனையோடு கூடிய வலியும் வந்தது
வலியிலும் ஞானம் வந்தது
வெற்றி பெற்றது போல் உயரம் தெரிந்தது
விதிவிளக்கு போல் ஒளி தெரிந்தது
வெற்றிலைக்காட்டையும் இரசிக்க தோன்றியது
வெற்று மனலையும் விரும்ப செய்தது
வெறித்த கண்ணால் செதுக்க முடிந்தது
வற்றாத ஊற்றாக கற்பனை பிறந்தது
வர்ணித்தபடியே வேதனையும் குறைந்தது.

தன்னை மறக்க எழுதும் கவிஞனுக்கு
தன்னை மறந்து கவிதை பிறந்தது.

Monday, June 19, 2006

காதல் கடிதம்

பெயரில்லாததால்
பெரிதுப்படுத்தவில்லை
அறிவுறுத்தியிருந்ததால்
அலட்சியப்படுத்தவில்லை
கவரும் காகித அட்டையால்
கவிழ்ந்துவிடவுமில்லை
இதுவரை யாரென்று தெரியவில்லை
இருப்பினும் சந்திக்க விருப்பம்
விருப்பத்தை சொல்லவல்ல
விபரீதம் காதல் எனவே.

Monday, June 12, 2006

பாதுகாப்பு!

துபாய் நிலா வெளிச்சத்தில்
நள்ளிரவில்
துணையின்றி
பூச்சிகளின் ஒலிகளுக்கு நடுவே
மூடிய கடைகளை பார்த்தபடி
எங்கோ கேட்கும்
வாகன சத்தத்தை உணர்ந்தபடி
தெரு விளக்கின்
பிரகாசத்தை இரசித்தப்படி
சுத்தமான அகல தெருவில்
நிமிர்ந்த நடையுடனும்
நேர் கொண்ட பார்வையுடனும்
காசு நிறைந்த கைப்பையுடனும்
விலைமதிப்புள்ள பொருட்களுடனும்
விலைமதிப்பில்லா கற்புடனும்
சின்ன சீண்டலுக்கும் கிண்டலுக்கும்
சிக்காமல் வீடு திரும்பும்போது
ஆதங்கம் தொட்டது

எப்போது விடியும்
என் தேசம் இப்படியென்று!

www.thisaigal.com/jan06/jazeelakavi.htm

Sunday, June 04, 2006

வாழ்வே உனக்காக

கால காலமாக இயற்கையோடு
வளர்ந்த நான்
அதை இரசிக்க மறந்ததேனோ?
உன்னுடன் காலம் கடந்த போது
எல்லாம் புது உலகமாக மாறியதேனோ?
புல் நுனியில் பனிதுளியில் இருந்து
பூத்து குலுங்கும் பூக்கள் வரை
புதிதாக தோன்றியது ஏனோ?
புத்தம் புது பூமியாக
உன்னுடன் மட்டும் தோன்றுவதேனோ?

பிரிவென்றால் புரியாது இருந்தேன்
பெற்றோரை விட்டு பிரிந்து
உன்னிடம் ஒப்படைக்கும் போது கூட
எனக்கு அது பிரிவாக வலிக்காததேனோ?
உன்னை பிரிந்த நாள் முதல்
என்னைவிட்டு எல்லாம்
தூரம் சென்றதாக
உணரும் உணர்வுதான் ஏனோ?

உன்னுடன் வாழ்ந்த சில நாட்கள்
பல சந்ததியை கடந்ததாக
பிறவிகள் பல கழித்தவளாக
பல நாட்கள் பழகிய சிநேகிதமாக
பலநூறு ஜென்மம் பேசியதாக
நூற்றாண்டுகள் மகிழ்ந்து வாழ்ந்ததாக
பிரியாத உன் பந்தம் வேண்டி
நிற்பதுதான் ஏனோ?

பூ தளிர்த்து விரியும் முன்பே
பூங்காற்று பூ பறித்து சென்றதேனோ?
இசைக்கு மட்டும் தலையசைத்த நான்
இசையோடு ஒன்றி உன்னோடு
இளைப்பாருவதேனோ?
பாட்டை கேட்டும் கேட்காத நான்
மகுடிக்கு மயங்கும் பாம்பாக
பாடல் வரிகளை உனக்காக
உச்சரிப்பது ஏனோ?

இமயம் கூட சுமையாக தோன்றாது
என் இதயத்தில்
உன் பிரிவின் சுமை
சொல்ல வார்த்தை தொலைத்ததேனோ?

நீ இருக்கும் இடத்தில் நான் வந்து
அவரை பார்க்க ஒரு வாய்ப்பு தருவாயா
என நிலவை கெஞ்சுவதேனோ?
தொட்டு விட்டு போகும் தென்றலை
ஆடையாக நான் அணிந்து
உன்னை தொட்டு செல்ல
தவம் செய்வதேனோ?
பறவைக்கு உணவளித்து
நான் பசியாறாமல் இருப்பதை
உன்னிடம் உணர்த்த கூறுவதேனோ?

நெஞ்சில் வலி இருந்தாலும்
அது அதிகமாவது
அப்படி உனக்கும் வலிக்கும் என
எண்ணும்போதுதானே.
கண்ணீர் துளிகள்
என் கன்னங்களை கழுவினாலும்
நிற்காது வழிவது
உன் கண்ணில் நீர் கண்டபோதுதானே

கனவுகளே இல்லை
உறக்கம் இல்லாததால்
கற்பனையில் வாழ்கிறேன்
உன் நினைவுகளே என் நேர போக்கு
தொலைபேசியே என் தெய்வம்
இது தொடர வேண்டாம்
நமது காதல் காவியமாக வேண்டாம்
காப்பியங்களாக கைமாற வேண்டாம்
நீண்ட ஆயுளும் வேண்டாம்
நிறைய செல்வமும் வேண்டாம்
இனி இந்த பிரிவு வேண்டாம்
சிறிது காலமாவது சேர்ந்து வாழ்வோமே?

Sunday, May 21, 2006

பெட்டிக்குள் அடங்காதது

ஆண்கள் இயல்பு கொண்ட
ஆண் வண்டுகள்
மலர் விட்டு மலர் தாவி
மூங்கில்களுக்கு அருகே வளர்ந்திருக்கும்
காட்டு பூக்களின்
தேனை மட்டும் உண்ணாமல்
துளைக்கவும் துடங்கியது
மூங்கிலை.

தூது போன தென்றல்
புல்லாங்குழலென எண்ணி
மூங்கில் துளையில் நுழைந்து
ராகம் எழுப்பியது.

மரங்கொத்தி ராகத்திற்கேற்ப
மரத்தை தட்டி தாளம் துவங்கியது.

குயில் சூழலுக்கேற்ப
பாடி மகிழ்ந்தது

மர பொந்துக்கள் ஒலிப்பெறுக்கியாக மாற
புல்வெளி மேடையாக இருக்க
நேற்று பெய்த மழையின் சாரல் துளிகள்
புல்நுனியின் ஓரம் நாட்டியம் ஆட
வண்ண வண்ண விளக்காக
வானவில் வந்து நிற்க
எழிலகத்தை காண
இரண்டு கண்கள் போதாதே

என் புகைப்பட பெட்டி கூட
இவ்வழகிய காட்சியை அதனுள்
பூட்ட நினைத்ததை எண்ணி
ஏலனமாக புன்னகையித்தது.

Saturday, May 13, 2006

புல்வெளியில் பனிதுளி

விடியல் விடியல்
எனக்கோ குளிரின் நடுக்கம்.
உன் மேல் ஏந்தான்
வேர்வையோ?

பாவம் நீ என்று நான் விசுற
வேர்வைகள் உன்னுடன்
உறவாடி ஒட்டிக்கொள்ள
விரல்களால் உன் வேர்வை
துடைக்க அச்சம்
உன் துயில் கலைந்து விட்டால்?

உற்று நோக்கி கொண்டிருக்கையில்
சூரியன் எழுந்தான்
உன் வேர்வைகளும் மறைந்தன
வேர்வைகள் என்னை பற்றிக் கொண்டன

Wednesday, April 12, 2006

குமுறல்

பிறந்த உனை
திறந்த மேனியாய் விடா
சிறந்த துணியால் பொதித்தோம்

வளரும் பருவத்தில்
எமக்கு பிடித்ததெல்லாம்
உடுத்தி பார்த்தோம்

நிமிர்ந்த நடையும்
நேர் கொண்ட பார்வையும்
அஞ்சா மடமும் பயிற்றுவித்தோம்

வளர்ந்த பின்னே
மறைக்க வேண்டியதை மூடவில்லை
அறிவுரைகளை கேட்கவில்லை

பாராட்டும் பத்திரமும்
புகழும் பெயரும்
பொருளோடு சேர்த்துக் கொண்டாய்

அழகிப் போட்டியில் அலங்கரித்தாய்
விளம்பரங்களில் வெளிக்காட்டினாய்
வெட்கத்தை வாடகைக்கு விட்டாய்

எனக்கு பெருமையும் இல்லை
உன் மீது வெறுப்பும் இல்லை
உன்னை பெற்றவளாய் மகிழ்ச்சியும் இல்லை

மன குமுறல்கள் பல இருந்தாலும்
உன் மகிழ்ச்சிக்காக
என் வாய் வளைந்தது புன்னகையாக

Monday, April 10, 2006

வேலை பளு

வயிற்றில் கருச்சுமை சுமந்து
மனதில் பாரத்துடன்
அரை வயிற்றுடன்
கண்களில் மகிழ்ச்சியுடன்
தலையில் கற்களை சுமக்கும்
சித்தாளை கண்ட போது
வெட்கப்பட்டேன் எனக்குள்,
அலுவலகத்தில் வேலை பளு எனக்கு
என்று சொல்லிக் கொள்ள.

மார்ச் 2005 'திசைகள்' மகளிர் சிறப்பு இதழில் வெளிவந்த கிறுக்கல்

Sunday, April 09, 2006

சுனாமி அழிவு

கடலோரம் கடக்கும் போது
கிடைத்த சங்கை காதில் வைத்தால்
ஓ என்று எழும் சத்தம்
ஓராயிரம் குடும்பத்தின் மரண ஓலம்
என்று அறியாது இருந்து விட்டோம்.

வான நிறத்தை எடுத்துக் கொண்டு
நீலமாக தெரிகிறாய் என்று எண்ணி இருந்தோம்
கொடிய எண்ணத்தை கொண்டதனால்
அது உனக்கு கிடைத்த நிறம்
என்று அறியாது இருந்து விட்டோம்

உன்னிடம் உள்ள கடலினங்களை
நாங்கள் கொன்று தின்றோமென்றால்
உன் பாரம் குறையும் என்று நினைத்திருந்தோம்
அது பொறுக்க முடியாமல் பொங்கி எழுவாய்
என்று அறியாது இருந்து விட்டோம்

உணர்வுகள் நாங்கள் அறிய
உப்பை தந்தாயென நாங்கள் உள்ளம் மகிழ்ந்தோம்
நீ விழுங்கிய சந்ததியின் கண்ணீரினால்தான்
நீ உப்பாக கரிக்கின்றாய்
என்று அறியாது இருந்து விட்டோம்

தாய் மடியாக நினைத்து உன்னுடன்
விளையாடிய குழந்தைகளையும்
விட்டுவைக்கவில்லை நீ

வங்கியாக நினைத்து உன்னிடம்
வாழவை என்று கையேந்தி நின்றவர்களையும்
விட்டுவைக்கவில்லை நீ

மொத்தத்தையும் அள்ளிக் கொண்டு
உயிரை மட்டும் எடுத்துக் கொண்டு
உடலை ஓரம்கட்டும் வித்தையை
எங்கே கற்றுக் கொண்டாயோ?

ஆழி பேய்க்கடலாய்
ஆட்களை அழித்துவிட்டாய்
பலி தீர்க்கும் பாவத்தை
இனியாவது செய்யாமல் இருப்பாயோ?

http://www.thisaigal.com/jan05/poem_jazeelabanu.html

Saturday, April 08, 2006

சுதந்திரப் பறவை

என்ன பார்க்கிறாய்
என்னை பார்க்கும் போது
என்னில் என்ன பார்க்கிறாய்?

நான் சுதந்திர பறவையா?
கட்டுக்கோப்புகுள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?

கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணடியாக என் மேனி தெரியாததாலோ?
கறுப்பு முடிகள் மறைந்திருப்பதாலோ?

நாகரீகம் அறியாதவளாக
பிணைக்கப்பட்ட கைதியாக
நான் தெரிகிறேனோ உனக்கு?

எனகென்று சொந்த குரல்
எனகென்று சுயசிந்தனை இல்லை என்கின்றாய்
வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்

மூடி மறைப்பது - கூண்டு கிளியா?
முடியை மறைப்பது - அநாகரீகமா?
காட்ட மறுப்பது - திணிப்பா?

சிறு வட்டத்தில் அடைப்பட்டவளாக
பரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்
‘சுதந்திரத்தின்’ பொருள் அறியாமலேயே

கவலை, துயரம்
கோபமும், வேதனனயும் எனக்கு
கண்களின் ஓரம் கண்ணீரும் இருக்கு

கண்ணீரின் காரணம்
நீ என்னை ஒதுக்குவதாலும்
உன் கேலிக் கூத்தாலும் அல்ல

நீ உனையே ஒதுக்குவதால்
உனை நீயே ஏமாற்றிக் கொள்வதால்
இறுதி நாளில் பாவியாக நிற்கப் போவதால்

கண்களுக்கு நான் அழகாக
காட்சிப் பொருளாக
வடிவமான சிலையாக இல்லாமலிருக்கலாம்

எனக்கு தந்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்
அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்
ஆதிக்கம் இல்லாமல் என்னையே ஆள்கிறேன்

பின்னால் பார்க்க அண்டாங்காக்கா
அடையாளம் கண்டால்
நான் அறிவின் ஊற்று

அமைதியில் என் அழகும்
பொறுமையில் என் மென்மையும்
ஒழுக்கத்தில் என் பெண்மையும் காணலாம்

மன வலிமை
சரியான முடிவெடுக்கும் திறன்
சிந்திப்பதை செயல்படுத்தும் பக்குவம் உண்டு

வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும் போதும்
உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும்
குட்டை பாவடையும் கட்டி இறுக்கும் மேலாடையும்
கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்

கிடைப்பது எனக்கு மதிப்பும், மரியாதையும்
கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை
அந்நிய கைகள் எனைத் தொட நினைத்ததில்லை
கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை

உண்மையில் நானே சுதந்திரப் பறவை
விண்ணில் பறக்கும் என் சிறகே ‘ஹிஜாப்’
அபயத்தை அளிக்கும் கவசமே ‘அபாயா’
அணிந்துக் கொண்டு பறப்போம் சுதந்திரமாக!!

Sunday, April 02, 2006

விபத்து

முருங்க இலை பறிக்க மரமேறி
முழங்கால் சிராய்த்தும் அழாமல்
ஒட்டிய மண்ணைத் தட்டி விட்டவனை
பதறியடித்து தடவிக் கொடுத்த
பல்லில்லா பாட்டி நினைவில் நிற்கவில்லை

கோலி உருட்டி விளையாடி
எறும்பினால் கடிப்பட்டதால் அதை மிதிக்க
பாவம் என்று பரிதாபப்பட்டு
விஷக்கடியாய் பாவித்து வலிபோக்கிய
வழிப்போக்கன் மனதில் நிலைக்கவில்லை

காய்ச்சலில் சுருண்டதும்
கோவில் வேண்டுதல்களும்
பக்கத்து வீட்டு ·பாத்திமா அக்கா
·பாத்திஹ ஓதி தந்த தண்ணீரும்
பெரிய விஷயமாகப்பட வில்லை

பழுத்த முகத்தோடு
பார்ப்பார் முகம் சுளிக்கும் அம்மையேறி
முகம் தெரியாத நபர்களெல்லாம்
விசாரித்து பக்குவம் சொல்லியது
எப்போதும் என் நெஞ்சை தொட்டதில்லை

பெருநகர நெரிசலில்
இருசக்கர வண்டி ஓட்டிச் சென்றவனை
பல்லவன் தட்டிச் செல்ல
ஓரமாகக் குருதி வலிய உயிர் ஊசலாடக் கிடப்பவனைக்
கேட்பாரில்லை

உச்சுக்கொட்டி விட்டு
ஒதுங்கி நின்று பார்க்கக்கூட
நேரமில்லாமல் விரைந்து செல்லும் நகர மனிதர்களுக்கு
மனித நேயம் மரத்து போய்விட்டதா
மறந்து போய்விட்டதா?

Tuesday, March 28, 2006

யார் காரணம்!?

கனவோடு மனமேடையேறி
இன்பமாய் இல்லறம் தொடங்கி
விரைவிலே உற்றவன் இறக்க
நாட்பது கழிந்து வேலை தேடி
சேரவும் செய்தேன்
நானா காரணம்?

இருள் சூழ்ந்த வாழ்க்கையில்
விளக்காய் கிடைத்த வேலையை
தெய்வமாக போற்றி
கண்டவர் பார்வையை கடந்து
சீண்டுவான் கிண்டல் தாங்கினேன்.
துணிவா காரணம்?

ஒரு வாரத்திலே தெரிந்தது
புதிய துணை உண்டானது என்று
இழந்த துயரை மறந்து
கவசமான உயிரை
கவனமாய் பாவித்தேன்.
நம்பிக்கையா காரணம்?

எதிர்ப்புகளே மிகுந்தது
உணர்வுக்கு புரிதல் இல்லை
அழிக்க வற்புறுத்தல்
தாங்ககூடிய சுமை என்றேன்
கேட்பாரில்லை.

காரணம் தந்தார்கள்
சமுதாய சந்தேகம் என்று!
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி