Saturday, April 12, 2025

திரைக்குப் பின்னால்

வாழ்வில் பல சூழல்களைக் கடந்து வந்தாலும், சில சம்பவங்கள் மனதில் பதிந்துவிடுகின்றன. அந்த ஒரு சில சம்பவங்களிலும் மிகச் சொற்பமான தருணங்களை எழுத்தில் வடிக்க விரும்புகிறோம். எழுத்தில் உள்ளதைக் காட்சிப்படுத்த ஆசைப்படும்போது உருவாவதுதான் குறும்படம். சம்பவங்களின் கோவையைக் கதையாக மாற்றி அதனைப் படமாக எடுத்து, எழுத்தில் உள்ளது காட்சியாக விரியும்போது, உள்ளக்கிடக்கையில் இருக்கும் கற்பனைகளை வெளிக் கொண்டு வர அதனைச் சமயங்களில் வார்த்தைகளில் விவரிக்கத் தடுமாறியும் இருக்கிறேன். 

நம் மனதில் உள்ளதை மேம்படுத்தும் விதமாக இதை இப்படிச் செய்யலாம் அப்படிச் செய்யலாம் என்று பலர் பலவற்றை சொன்னாலும், எனக்கு என்ன வேண்டும் என்ற இறுதி முடிவை மட்டும் நான் எடுப்பதாகத் தீர்மானித்துக் கொண்டு, நலன் விரும்பிகளைப் பொறுமையாகக் கையாண்டதில் பிறந்தது ‘திரைக்குப் பின்னால்’. 


ஹரீஸ்- இலக்கியா Sri Hareesh  Elakkiya Thavadurainathan என் அலைவரிசையில் இருப்பதால் நான் நினைப்பதை அப்படியே புரிந்து கொள்ளக் கூடியவர்கள். நீளமாக எழுதியதை எங்கெல்லாம் கத்தரிக்கலாமென்று முதலிலேயே தீர்மானித்துவிட்டதால் சுலபமாகக் குறும்படப் போட்டி விதியின்படி பன்னிரண்டு நிமிடத்திற்குள் அடக்கிவிட முடிந்தது. இதற்கு முழுவதுமாக உதவியவர்களும் இவர்களே.


முழுப் படப்பிடிப்பிலும் மிகப் பெரிய சவாலாக இருந்தது ஒலியும் ஒளியும் மட்டுமல்ல கதாபாத்திரங்கள் நம் எதிர்பார்ப்புக்கு நம் இழுப்புக்கு அந்தச் சட்டகத்திற்குள் பொருந்துவதுதான். கதாநாயகி வித்யாவின் Vithya Damodharan ஆறு மாதக் கைக்குழந்தையின் அழும் குரல்தான் படம் முழுக்க ஒலித்தது ‘டப்பிங்’குக்கு முன். குழந்தை அழுகிறதே என்ற தவிப்பு அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிவது சில காட்சிக்கு பலமாகவே அமைந்தது. பெண்கள் எல்லாக் காலக்கட்டங்களிலும் யாரையாவது சார்ந்தே வாழ வேண்டும். அப்படிதான் வித்யாவும், பல சூழல்களைத் தாண்டி, சமாளித்து எப்படியோ வந்து நடித்துக் கொடுத்துவிட்டார்.  சில சமயங்களில் நான் அவரைப் படுத்தி எடுக்கிறேன் என்று எனக்கே தெரிந்தாலும், ‘சாரிம்மா ஐ காண்ட் ஹெல்ப் இட்’ என்பதாகவே நடந்து கொண்டேன். வீண் போகவில்லை அவருக்குத்தான் ‘Best Character Artist Award’ கிடைத்தது. 


கடைசி நேரத்தில் குழுவில் இணைந்த ஸ்ரீஜா தன் பங்கை அற்புதமாகச் செய்தார். கலைவாணியின் அம்சமான பூர்ணி Poorni Balaj  சொல்லவே வேண்டும் கிளிப்பிள்ளை, இதுதான் வேண்டும், என்று ஒரு முறை சொல்லிக் காட்டினால் கற்பூரமாகப் பற்றிக் கொள்வார். 


Nakaj A Alem ஆலம், இவருடைய ‘ரீல்ஸ்’ தந்த பாதிப்பில் உருவான என் கதையில் சொற்பமான வசனங்களைக் கொண்டிருந்த முக்கிய கதாநாயகி. வசனம் இல்லாவிட்டாலும் கண்களிலும், உடல்மொழியிலும் எல்லாக் காட்சிகளிலும் நிரம்பியிருந்தார். மலர், கடைசியில் வந்து ஐக்கியமானவர், இருப்பினும் ‘ஈகோ’ பார்க்காமல் கேட்டதை நடித்துக் கொடுத்துவிட்டார். 


குழந்தை ஆஃபினாவை விட தன்னலமற்ற அர்ப்பணிப்போடு சரியான நேரத்திற்குக் குழந்தையைக் கூட்டி வந்து உடன் இருந்து ஒத்துழைப்பு தந்த அவருடைய தந்தை ஃபைசலுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். ஆஃபினா, குழந்தையாக இருந்தாலும் சொன்னதை உள்வாங்கிக் கொண்டதால் காட்சிகள் சிறப்பாகவே விளைந்திருந்தன.


ஒலியைச் சரிப்படுத்த மிகுந்த சிரமப்பட்டாலும் எடுத்த நோக்கில் பின் வாங்காமல் ஒத்துழைப்பு தந்ததோடு, கை வலிக்க வலிக்க ‘ஒன் மோர்’ கேட்கும்போதெல்லாம் ‘இது நல்லாதானே இருக்கு, என்னவாம்’ என்று சலித்துக் கொள்ளாத ஒளிப்பதிவாளர் பூபாலன். 


பல இடங்களில் என்னோடு சண்டையிட்டு, சில காட்சி எடுக்கும் போது பிணக்கால் அவர் உடல்நலமே சரியில்லாமல் போனபோதும் ‘ஆல் ஓகே’ என்று அடிக்கடி அக்கறையோடு என்னை உயிர்ப்போடு வைத்திருந்த இணை இயக்குநர் கலைஞர் நாஷ். டப்பிங்காக தன் நண்பர் கஜாவை அழைத்து வந்து அவர் வீட்டிலேயே தங்க வைத்து ஒரே நாளில் எல்லாவற்றையும் முடிக்க உதவியவரும் நாஷ்தான். Kalaignan Nash 


கஜாவின் குரல் தேவைப்பட்ட போது ‘ஹலோ, சொல்லும்மா’ என்ற ஒரு வரி வசனத்தை நூறு முறை பேசி சாகடித்தவர் சாரி சாதனை புரிந்தவர். உண்மையில் கஜா அன்று பேசிக் கொடுக்காவிட்டால் சரியான நேரத்திற்கு எல்லாம் முடிந்திருக்காது. நன்றி கஜா. 

எல்லாவற்றுக்கும் மேலாக படப்பிடிப்புக்கான இடத்தைத் தந்து உதவியதோடு, இரவு தாமதமானாலும் முகம் சுழிக்காமல் ஒத்துழைப்பு நல்கிய Balaji Baskaran  & அவர் துணைவியார் தேவர்ஷிணிக்கும் மனமார்ந்த நன்றி.

இசைக்கும், எடிட்டிங்கும், டி.ஐ.க்கும், எஸ்.எஃபெக்ஸ்க்கும் சென்னை குழுவினர் கைகொடுத்தனர். மொத்தத்தில் படம் எடுத்து உரிய நேரத்தில் சமர்ப்பித்துவிட்டோம். குறும்படப் பயணம் சிறப்பானதொரு அனுபவத்தை எனக்குத் தந்தது. டெக்னிக்கல் மட்டுமல்ல பலவிதமானவர்களைச் சமாளிக்கும் கலையையும், பொறுமையையும் பெற்றுத் தந்தது. 


எங்கள் குழந்தையான ‘திரைக்குப் பின்னால்’ வெள்ளித்திரையில் தெய்ரா கேலரியா திரையரங்கில் பார்க்கும்போது பன்னிரண்டு நிமிடம் காணாமல் போனது எனக்கு. ’அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல’ மற்ற படங்கள், பெரும்பாலான படங்களின் பன்னிரண்டு நிமிடம் நீளமாகத் தோன்றியது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. 

போட்டியில் மொத்தம் 25 படங்களின் கதைகளில், 16 படங்களின் கதைகள் மட்டுமே தேர்வானது. அதுதான் எங்களின் முதல் வெற்றி. அதன் பிறகு 16 படங்களையும் ஒன்றன்பின் ஒன்றாகப் பார்க்கும்போது, ’பரவாயில்லையே நம் உழைப்பு வீண் போகவில்லை’ என்பதை உணர்ந்தேன்


மாலை விருது வழங்கும் விழாதான் ‘க்ளைமேக்ஸ்’. மொத்தம் 28 விருதுகள். Early bird Script என்று தொடங்கி ஒன்றன்பின் ஒன்றாக அறிவிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது.  என் மகன் குறித்துக் கொண்டே வந்தான். 19 விருதுகள் முடிவடைந்திருந்த நிலையில் அதில் ஒன்றுகூட ‘திரைக்குப் பின்னால்’ வராததைக் கவனித்து என் முகத்தைப் பார்த்து. ”ம்மா பாதிக்கும் மேற்பட்ட பிரிவுகளுக்கு விருதுகள் கொடுத்தாச்சே, ஒன்றுமே கிடைக்கவில்லை என்றால் disappoint ஆகிவிடுவீர்களா” என்று வினவினான். நானோ, “இது வரை கொடுத்த பிரிவுகள் எல்லாம் சின்ன விருதுடா – the better is coming for me” என்றேன். என் நம்பிக்கையைப் பார்த்து வாயடைக்கும் முன் ‘Best Character Artist Award’ for Vithya Damodaran for Thiraikku Pinnal என்று அறிவித்த போது, வித்யா வராததால் நானே சென்று பெற்றுக் கொண்டேன். 


தொடர்ந்தது அறிவிப்பு, 25 பிரிவுகளின் முடிவுகள் நிறைவடைந்த நிலையில், மறுபடியும் என் முகத்தை அனுதாபத்தோடு பார்த்து என் மகன், “ம்மா இன்னும் மூன்று விருதுக்கான முடிவுதான்” என்றான். “ஆமாம், மூன்றும் முக்கியமானது அதில் நான் கண்டிப்பாக இருப்பேன்” என்றேன் நம்பிக்கையோடு. 


Best Director Award என்று என் பெயர் அறிவித்தபோது இறைவன் கருணையாளன் என்பதை நன்றியோடு நினைவுகூர்ந்தேன். அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லியபடி பரிசைப் பெற்று வந்தேன்.


இப்படியான குறும்படத் திருவிழா வேறு எந்த நாட்டிலாவது நடத்துகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் அமீரக வாசிகள் கொடுத்து வைத்தவர்கள். எங்கள் வேட்கைக்குத் தீனியாகத் தளம் அமைத்துத் தந்துள்ளனர் ரமா மலர் Rama Malar  மற்றும் ஆனந்த் சுப்ரமணியம், இருவருக்கும் மனமார்ந்த நன்றி. அது மட்டுமல்லாது இந்த வருடம் அவர்களின் நடுவர் தேர்வும் சிறப்பு. ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான இளவரசு Malaisami Ilavarasu மிக அற்புதமான மனிதர். சொல்ல வேண்டியதை வாழைப்பழத்தில் ஊசியாக தைக்கத் தெரிந்தவர். நகைச்சுவையாகவும் கலகலப்பாகவும் நிகழ்ச்சியைக் கொண்டு சென்றதில் அவர் பங்கு அலாதியானது. மஞ்சுளா ராமகிருஷ்ணனும் Manjula Ramakrishnan  நடுவராக இருந்து நிகழ்ச்சிக்கு வலு சேர்த்து இருந்தார்.


நிறைவான பொழுது. அல்ஹம்துலில்லாஹ்!

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி