Thursday, June 28, 2007

நாலிரெண்டு எட்டு


எனக்கு ரொம்ப கஷ்டமான விஷயம் தற்பெருமை அடிச்சிக்கிறது, என்னைப் பத்தி நானே அளந்துக்கிறது (பின்ன தனியா அதற்கு ஆளா வைக்க முடியும்னு முணுமுணுக்கிறது புரியுது). அதனாலேயே இந்த எட்டு சமாச்சாரம் வேண்டாமென்று எட்டு பட்டிக்கும் முன் கூட்டியே அறிவிச்சிருக்கணும். ஆனா யார் நம்மளைக் கூப்பிட போறாங்கன்னு அலட்சியமா இருந்துட்டேன். துபாயோரமிருக்கும் அய்யனார் அரிவாளோடு நிற்கிறார் எழுத சொல்லி. நம்ம ப்ரசன்னா அன்போடு அழைச்சிட்டார். அதெல்லாம் போதாதுன்னு நம்ம நிலவு நண்பன் மாட்டிவிட்டுடேன்னு சந்தோஷப்படுகிறார். அதற்காகவேதான் இந்த பதிவு. அப்புறம் எட்டு மணி நேரம் யோசிச்சாலும் ஒண்ணுமே எழுத தோணலை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில்? எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சிக்கோன்னு சொல்லியிருக்காங்கல? அப்ப எனக்கு 64 வயசாகும் போது கேட்டா ஏதாவது சாதனைன்னு அப்பவாவது செஞ்சிருந்தா சொல்லி வைப்பேன். இப்ப தான் நான் பொறந்து எட்டு பல்லு முளச்சிருக்கு என்கிட்டப் போயி...? அதற்கு பதிலா ஒரு 'விட்டு' சொல்லுங்கன்னா சொல்லியிருந்தா சந்தோஷமா ஒரு பிட்டு போட்டிருப்பேன். 'திட்டு'ன்னு 'குட்டு'ன்னு சொல்லியிருந்தாலும் லட்டு சாப்பிடுவது மாதிரி உடனே செஞ்சிருப்பேன். சரி உங்க ஆசையை கெடுக்க வேணாம்னு என் பெருமைக்குரிய விஷயங்களை சொல்லிடுறேன்.

* நான் பிறந்ததே சாதனைதான். மூன்று பெண்களைப் பெற்ற பிறகு, நாலாவதா ஆணாக பிறப்பேன்னு எதிர்பார்த்து பெண்ணாக பிறந்தது முதல் சாதனை.

* பத்திரிகையாளரின் மகள் என்பதால் சுலபமாக எல்லா பத்திரிகையிலும் சின்ன வயதிலிருந்தே என் முகம் வந்திருந்தாலும் அதனை பெரிய சாதனையாக வெட்டி எடுத்து வைத்துக் கொண்டதுகூட இல்லாத நான், ஓவியப் போட்டிக்காக ஓவியர் ஜெகதீஷ், ஓவியர் மற்றும் நடிகர் சிவகுமார் உட்பட பலரின் கைகளிலெல்லாம் பரிசுளும் பாராட்டுகளும் பெற்றிருந்தாலும் அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாத நான், சென்னையில் அனைத்துப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நடந்த 'கண் தானம்' குறித்த ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்று நடிகர் கமலஹாசன் கையில் விருது வாங்கிய செய்தியோடு கூடிய படங்கள் அனைத்து பத்திரிகைகளிலும் என் பள்ளியின் பெயர் போட்டு வந்தது, நான் படித்த சாதாரண அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கே பெருமை சேர்த்த விஷயமாக அமைந்ததால் பெருத்த மகிழ்ச்சியளித்தது.

* பதிவு எழுதுவது சாதனைன்னு சொல்லிக்க மாட்டேன், ஏன்னா எல்லா டாம் டிக் & ஹாரி செய்யும் சமாச்சாரமாப் போச்சு. ஆனா பக்கத்து விட்டுல ஞாநியையும், கலைமாமணி கவிஞர் அவினாசிமணியையும், மேல் வீட்டில் கலைமாமணி கவிஞர் மணிமொழியையும், எதிர் வீட்டில் எழுத்தாளர் நாகைதர்மரையும், அதே குடியிருப்பில் மு. மேத்தாவையும், பல பெரிய பத்திரிகையாளர்களையும், தமிழ் அறிஞர்களையும் பக்கத்திலிருந்து வளர்ந்த எனக்கு அப்ப எழுதணும், ஏதேனும் அவர்களிடமெல்லாம் கத்துக்கணும், தெரிந்து கொள்ளணும் என்ற ஆர்வம் கூட உதிக்காத எனக்கு, மற்றவர்கள் எல்லாம் சொல்லியிருப்பது போல் 'பள்ளிப் பருவத்திலே எழுத்தில் துளிர்விட்டுடேன்' என்றெல்லாம் சொல்லிக்க முடியாத எனக்கு, சாதாரண கதைப்புத்தகத்தையும் ஜனரஞ்சகப் புத்தகத்தையும் கூட "படிக்கக் கூடாது, அதெல்லாம் பெரியவங்க படிக்கிறது"ன்னு ஒடுக்கப்பட்டு, வாசிப்பனுபவமே இல்லாமல் வளர்ந்த எனக்கு, துபாய் வந்த பிறகு தமிழை விட்டு தூரம் போய்விடக் கூடாது என்ற ஞானோதயம் மிளிர்ந்தது போல் பற்றிப்பிடிப்பதற்காகவே திடீரென எழுதத் தோன்றி எழுதி, அதை நாலு பேர் படிக்கிறாங்க என்றால் என்னை நானே மெச்சிக்க வேண்டியதுதான்.

* எட்டுப் போடாமலே ஓட்டுனர் உரிமம் எடுத்தேன். எப்படின்னு கேட்கிறீங்களா உரிமம் எடுத்தது மோட்டார் காருக்கு. அமீரகத்தில் ஓட்டுனர் உரிமம் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருந்த காலகட்டத்தில் முதல் முயற்சியிலேயே உரிமம் பெற்று, போக்குவரத்து நெரிசலை நொந்து கொள்பவர்கள் மத்தியில் சந்தோஷமாக வண்டி ஓட்டிக் கொண்டு போகும் ஒரே ஜீவன் நானாகத்தான் இருக்கும். எத்தனையோ பேருக்கு நடப்பதற்கு செருப்பு கூட இல்லாமல் இருக்கும் போது காரில் பறப்பது பெருமையா இல்லையா?

* துபாயில் நல்ல வேலை கிடைப்பதே கடினம், கிடைத்தாலும் வேலை பிடித்திருக்க வேண்டும், வேலை பிடித்திருந்தாலும் நாளில் முக்கால்வாசி நேரத்தைச் செலவளிக்கும் அலுவலகத்தில் நம்மைச் சுற்றி நல்ல மக்கள் அமைய வேண்டும். இது இரண்டுமிருந்தாலும் தேவையான சம்பளம் கிடைக்க வேண்டும். சம்பளம் நிர்ணயித்தாலும் சொன்னபடி சொன்ன தேதியில் கைக்கு கிடைக்க வேண்டும்- இப்படி பல பிரச்சனைகளோடு இருப்பவர்கள் மத்தியில் எனக்கு நிறைவான வேலை, பிடித்தமான சக ஊழியர்கள் என்பது நம்பிக்கையூட்டும் பெருமிதம்.

* நல்ல குடும்பம், அன்பான கணவர், அழகான குழந்தை. எல்லோரும் துபாயில் - இதுல என்ன பெருமை வேண்டிக்கெடக்குன்னு சொல்வீங்க, ஆனா பலரும் தன்னந்தனியா இந்த பூமியில் நிறையப்பேர் கஷ்டப்படுறாங்களே அப்ப இது ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில்லையா எனக்கு? குழந்தையில்லாம எத்தனையோ பேர் இருக்க அந்த வரம் கிடைத்தது பெரிய பாக்கியமில்லையா?

* என்னால் பேச முடியும், கேட்க முடியும், பார்க்க முடியும், நடக்க முடியும் அது இதுன்னு சொல்லிக்கிட்டே போகலாம். இதெல்லாமும் சந்தோஷப்படும் விஷயம்தானே, எத்தனையோ பேருக்கு அந்த கொடுப்பினைகள் கூட இல்லாத போது? அப்புறம் மற்றவரைப் பற்றி குறை சொல்வதோ, புறம் பேசுவதோ அறவே பிடிக்காத விஷயம் எனக்கு. நாம முதல்ல ஒழுங்கா இருக்க வேண்டாமா மற்றவரை கை காட்டுவதற்கு முன்பு?

* கடைசியா நான் ரொம்ப புளங்காகிதமடையும் விஷயம் இன்னும் நான் உயிருடன் இருப்பது.

தெரியாத்தனமா இவளை எட்டுப் போட அழைச்சிட்டு இப்படி கேவலமா ரம்பம் போட்டிருக்காளே, தேவையான்னு உங்க தலையில நீங்களே அடிச்சிக்கிட்டு சிரமப்படாதீங்க. அடிக்க தோணுச்சுன்னா சொல்லி அனுப்புங்க நான் வந்து இரண்டு குட்டுறேன்.

விதிகளில் ஒன்று என்பதால் விளையாட்டின் விதிகளைப் போட்டாச்சு:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுப் பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுப் பேரை அழைக்க வேண்டும

தொடர்ந்து எட்டுப் பேரை அழைத்து நட்பு வட்டத்தை எட்டுக்குள் சுருக்க முடியாதுப்பா. அதனால் கண்டிப்பாக இந்த தொடர் பதிவில் பங்கேற்கவே மாட்டார்கள் என்று நான் நினைக்கும் ஒரு எட்டுப் பேரை குறிப்பிடுகிறேன், இவர்கள் எனக்காக எட்டுப் போட்டாலே பெரிய சாதனைதான்.

1. அப்துல் ஜப்பார் ஐயா
2. இராம. கி. ஐயா
3. மாலன்
4. பாமரன்
5. யுகபாரதி
6. பெயரிலி
7. இசாக்
8. கவிமதி

17 comments:

லொடுக்கு said...

படிக்க ஆரம்பிச்சவுடனே என்னமோ விஜய டி ஆர் பகுதிக்கு வந்திட்டோமோன்னு பயந்துட்டேன்.

Anonymous said...

ஜெஸிலா ..நல்லா கிறுக்கி இருக்கின்க...

Anonymous said...

Ungalai patriya ettu vithamaana thagavalai puttu puttu eshuti irukeenga jazeela ;-)

selventhiran said...

ஓவியப் போட்டிக்காக ஓவியர் ஜெகதீஷ், ஓவியர் மற்றும் நடிகர் சிவகுமார் உட்பட பலரின் கைகளிலெல்லாம் பரிசுளும் பாராட்டுகளும் பெற்றிருந்தாலும் அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாத நான், சென்னையில் அனைத்துப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நடந்த 'கண் தானம்' குறித்த ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்று நடிகர் கமலஹாசன் கையில் விருது //எம்மாம்பெரிய ஆளு நீங்கோ ஓரே மெர்சலாகீதுகா.... //

Ayyanar Viswanath said...

/ அடிக்க தோணுச்சுன்னா சொல்லி அனுப்புங்க நான் வந்து இரண்டு குட்டுறேன்./

இது வேறயா


/கடைசியா நான் ரொம்ப புளங்காகிதமடையும் விஷயம் இன்னும் நான் உயிருடன் இருப்பது./

பெஸ்ட் 8 இதாங்க

நல்லா இருங்க

கதிர் said...

பெரிய ஆளுதான் நீங்க.

ஓவியமெல்லாம் கூட வரைவீங்களா?

எதாச்சும் ஒரு ஓவியத்தை ஸ்கேன் பண்ணி போடுங்க அப்புறம் நம்புறோம்.(நீங்க வரைஞ்சது :) )

Jazeela said...

//படிக்க ஆரம்பிச்சவுடனே என்னமோ விஜய டி ஆர் பகுதிக்கு வந்திட்டோமோன்னு பயந்துட்டேன்.// லொடுக்ஸ், பச்ச புள்ள பயப்படாம இருக்கதான கார்டூன் படம் போட்டிருக்கேன் ;-)

அனானி கிறுக்குவதில் நாங்க சிங்கமுல்ல ;-)

ஹனீப் பாய் ஒழுங்க பதிவை படிச்சீங்களா? எட்டு தகவலா? எங்கப் புட்டேன்?

Jazeela said...

என்ன சி.சா. செல்வேந்திரன் சென்னை பாஷையெல்லாம்? இதெல்லாம் ஆவாதுப்பா.

//இது வேறயா// வேறெல்லாமில்ல அதேதான் ;-)

//பெஸ்ட் 8 இதாங்க // :-)

//எதாச்சும் ஒரு ஓவியத்தை ஸ்கேன் பண்ணி போடுங்க அப்புறம் நம்புறோம்.(நீங்க வரைஞ்சது :) )// தம்பி, நீங்க நம்புறதுக்கெல்லாம் படம் போடுவதில்ல ;-) ஆமா desert safari எப்போ?

பாலராஜன்கீதா said...

// * நல்ல குடும்பம், அன்பான கணவர், அழகான குழந்தை. எல்லோரும் துபாயில் - இதுல என்ன பெருமை வேண்டிக்கெடக்குன்னு சொல்வீங்க, ஆனா பலரும் தன்னந்தனியா இந்த பூமியில் நிறையப்பேர் கஷ்டப்படுறாங்களே அப்ப இது ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில்லையா எனக்கு? //

வாழ்த்துகள்.
சிமிலர் ப்ளட்.
படித்த பல எட்டுகளில் மனதிற்கு மிகவும் பிடித்த ஒன்று. :-)))

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//முதல் முயற்சியிலேயே உரிமம் பெற்று, போக்குவரத்து நெரிசலை நொந்து கொள்பவர்கள் மத்தியில் சந்தோஷமாக வண்டி ஓட்டிக் கொண்டு போகும் ஒரே ஜீவன் நானாகத்தான் இருக்கும்.//


இதில் என்ன சாதனை இருக்கிறது என்று துபாய் பற்றி தெரியாதவர்கள் நினைக்ககூடும்...

ஆனால் தெரிந்ததால் அனுபவப்பட்டதால் சொல்கின்றேன்...உண்மையிலையே அதிர்ஷ்டம் உள்ளது உங்களுக்கு

பல தடவை முயன்றும் லைசென்ஸ் கிடைக்காததால தற்கொலை செய்தவர்கள் எத்தனை பேர்?

காட்டாறு said...

//எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சிக்கோன்னு சொல்லியிருக்காங்கல? அப்ப எனக்கு 64 வயசாகும் போது கேட்டா ஏதாவது சாதனைன்னு அப்பவாவது செஞ்சிருந்தா சொல்லி வைப்பேன். இப்ப தான் நான் பொறந்து எட்டு பல்லு முளச்சிருக்கு என்கிட்டப் போயி...? //

ராசாத்தீ.... உன்ன 8 போட சொன்ன மக்கள பாத்துட்டு வாரேன். ;-)

விஜய டி ராசேந்தரு உங்க அண்ணாச்சிங்களா?

Jazeela said...

பாலராஜன்கீதா, சிமிலர் ப்ளட்டா? என்னமோ போங்க. ;-)

நிலவு நண்பா சும்மா கிண்டலுக்காகதான் நான் எட்டு போட்டேன், நீங்க ரொம்ப சீரியஸா //பல தடவை முயன்றும் லைசென்ஸ் கிடைக்காததால தற்கொலை செய்தவர்கள் எத்தனை பேர்?// மெய்யாலுமா? அப்படியெல்லாம் கூட கோழைகள் இருக்கிறார்களா என்ன?

//விஜய டி ராசேந்தரு உங்க அண்ணாச்சிங்களா?// இல்லீங்க காட்டாறு, அவரு மகன் நமக்கு அண்ணன் முறை. ;-)

அபி அப்பா said...

kummarv@gmail.com

Jazeela said...

அப்படித்தான் போலிருக்கு டெல்ஃபின் ;-) ஆனா அப்படி நினச்சது தவறுன்னு இப்ப கண்டிப்பா புரிஞ்சிருக்கும்னு நம்புவோம்.

நானானி said...

//உயிரோடு இருப்பதே பெரிய சாதனை//
எட்டிலேயே முக்கியமான எட்டு இதுதான் ஜெஸிலா! நல்லாருக்கு.
அதுசரி...என் அழைப்பை குறிப்பிட
மற்ந்தீர்களோ? மன்னித்தோம்!

பத்மா அர்விந்த் said...

வாழ்க்கையை மகிழ்ச்சியோடு திருப்தியாக வாழ்வது பதிவில் இருந்து தெரிகிறது. ஓவியங்களை எப்போதாவது வலையில் பதியுங்கள். முன்னர் பதிந்திருந்தால், சுட்டி தர முடியுமா? நிறைவாக இருந்தது.

Jazeela said...

நானானி, நான் எட்டு போட்ட பிறகுதான் நீங்க அழைச்சீங்க. அதனாலதான் விட்டு போச்சு ;-( ஆனா உங்களுக்கும் சேர்த்து போட்டதா நினச்சிக்கோங்க ப்ளீஸ்.

நன்றி பத்மா. சும்மா விளையாட்டாக போட்ட பதிவு தான், இருப்பினும் உண்மையில் இருப்பதை வைத்து திருப்தி அடைவது என் சுபாவம். :-) ஓவியங்களை இதுவரை வலையேற்றியதில்லை. ஏதேனும் வரைந்து யாராவது கேட்டால் அப்படியே கொடுத்துவிடுவேனே தவிர வரைந்ததை சேர்த்து வைத்துக் கொள்வதில்லை. முன்பெல்லாம் கொஞ்சமாவது சேர்த்து வைத்திருந்தேன், ஒரு காலகட்டத்தில் இடத்தை அடைப்பதாக குப்பைக்கு போய்விட்டது :-( அதன் பிறகு காகிதத்தை அதிகம் வீண்ணடிப்பதில்லை ;-)

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி