
சென்னையைப் பற்றிய ஒரு முகவுரையோடு படம் ஆரம்பிக்கும் போது பலவிதமான எதிர்பார்ப்புகள் இருந்தாலும் பெரிய ஏமாற்றங்கள் இல்லையெனலாம். என்னவொரு முரணான வாக்கியமென்று நீங்கள் நினைக்கலாம். எழுதிய எனக்கும் அப்படித்தான். பூசிமெழுகும் காரணத்தைக் கடைசியில் சொல்கிறேன். பீமா கதாபாத்திரத்திற்கு விக்ரம் சரியானவர்தான். படத்தில் மிகப் பெரிய ஆறுதல் எந்த 'பஞ்ச்' வசனங்களுமில்லை. கதாநாயகன் என்று எந்த 'பில்டப்'பும் இல்லாமல் சாதாரணமாகப் படத்தில் நுழையும் விக்ரம், ஒரே நபர் பலரைச் சுற்றிச் சுற்றி அடிப்பது எரிச்சலைத் தந்தாலும் சண்டை போடுவது 'பீமா' விக்ரம் 'சுள்ளான்' இல்லை என்று மனதைத் தேற்றிக் கொண்டேன். படத்தை வண்ணமயமாக மாற்ற ஆங்காங்கே ஒரு பெண்ணைக் கொண்டு நிரப்பும் தமிழ்த்திரை உலகிற்கு இந்தப் படம் மட்டும் எப்படி விதிவிலக்காகும்? அதனால் திரிஷா அப்பப்ப எட்டிப்பார்க்கிறார். ஒரு அடிதடி மன்னனைக் காதலிக்கும் கல்லூரி மாணவியின் 'டிரெண்ட்' எப்பதான் மாறுமோ தெரியவில்லை. பார்த்தவுடன் காதல் என்ற கண்றாவி வேறு - பரவாயில்லை ஏ.எம். ரத்தினத்திற்காக சகித்துக் கொள்ளலாம். பிரகாஷ்ராஜ் வழமையான கதாபாத்திரமாக வராமல் கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பதால் நல்லாவே பொருந்தியிருக்கிறார். சுஜாதாவின் வசனமாக இருந்தாலும் எந்த அசிங்கமான இரட்டை வசனங்களுமில்லை - ஒருவேளை எனக்குப் புரியவில்லையா என்று தெரியவில்லை. எனக்கு ஏனோ ரகுவரனை பார்த்தால் சுஜாதாவைப் பார்ப்பதாகத் தோன்றியது - மிகப் பரிதாபமான கதாபாத்திரம். என் மகள் கண்களுக்கு ரகுவரன் தோற்றம் எப்போதும் ஷாருக்கானாகவே தெரியும் - இதை ஷாருக்கான் கேட்டால் அழுதுவிடுவார். விக்ரம் படமென்றால் ஆஷிஷ் வித்யார்த்தி தொற்றிக் கொள்வாரோ? கமிஷனராக சில காட்சிகள் வந்தாலும் அவர் நுழைந்த பிறகுதான் 'டுமீல்' சத்தம் அதிகரிக்கிறது.
படத்தின் ஒலிநாடா ரொம்ப காலத்திற்கு முன்பே வந்துவிட்டதால் கேட்டு அலுத்துப் போன நல்ல பாடல்கள். ஹாரிஸ் ஜெயராஜ் நல்லாவே தட்டியிருக்கிறார். ஆனால் பாடல் காட்சிகள் மெனக்கெட்டு வேறு நாட்டில் தேவையில்லாமல் படமாக்கி ஏம். ரத்தினத்திற்கு செலவு வைத்திருக்கிறார்கள் தவிர பிரம்மாண்டமெல்லாமில்லை. சில படங்களில் கதாநாயகியாக வலம் வந்த ஷெரின் பாவம் ஒரே ஒரு குத்து பாட்டுக்கு மட்டும். ஒவ்வொரு பாடல் வரும் போதும் எனக்குப் பிடித்த 'எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்' என்ற யுகபாரதியின் வரிகள் சாதனாசர்கம் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடலை தேடிக் கொண்டே இருந்தேன். வந்தது கடைசியாக, எதிர்பார்ப்பை தகர்த்து.
இந்தக் குழுவிடம் வேற என்ன புதுமையை எதிர்பார்க்கச் சொல்றீங்க? ஒரு சண்டை, ஒரு பாடல் கொஞ்சம் வசனமென்று மாறி மாறி சரியான தமிழ் மசாலா படங்களில் ஒன்று. பொழுதை மட்டும் போக்க, மூளையை கழற்றி வைத்து படத்தைப் பார்ப்பவர்களுக்கு நல்ல தீனி. விறுவிறுப்பான 'போர்' அடிக்காத படம். என்ன, திரைகதையை சொதப்பியிருக்கிறார் லிங்குசாமி. போகட்டும் அதையும் பொறுத்துப் போகலாம்- யாருக்காக எல்லாம் ஏ.எம். ரத்தினத்திற்காக. விக்ரம், லிங்குசாமி தங்கள் சம்பளத்தையே விட்டுக் கொடுத்து வெளிவந்துள்ளது 'பீமா'. 'இந்தியன்', 'தூள்', 'கில்லி' என்று தூள் படுத்திக் கொண்டிருந்த ரத்தினம் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தால் விழுந்த அடி இந்த அடிதடி படத்தில் மீட்டெடுக்க வேண்டும். இல்லையெனில் ஜீவி நிலை வந்துவிடும் அபாயமுள்ளது. அவர் வறுமையை ஈடுகட்டவாவது படம் 'ஆஹா ஓஹோ' என்று ஓட வேண்டும். 'சந்திரமுகி', 'சிவாஜி', 'பில்லா' என்ற படங்களையே பெரிய அளவில் ஓட வைத்த நம் மக்கள் இதைச் செய்துவிட மாட்டார்களா என்ன? 'பீமா' படத்தில் 'சுப' முடிவு இல்லாததை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? இந்த முடிவுதாம்பா சரி. ஓடாதோன்னு பயந்து இன்னொரு முடிவை ஒட்டவைத்தால் அபத்தமாகிப் போகும். மொத்த படமே அபத்தம் இதுல தனியா இதுவேறயான்னு கேட்காதீங்க நான் ஜூட். ஆனா மறக்காம படத்தை திரையரங்கில் பார்த்துடுங்க.