Friday, February 25, 2022

Jesus with Turban

 குளிர்காலத்தில் அதிகாலையில் விடியலைக் காண 'அல் குத்ரா' ஏரிக்குச் சென்றுவிடுவேன். அங்கு செல்லும்போதெல்லாம் நேரமிருந்தால் ‘லவ் லேக்’ என்ற அதன் அருகில் உள்ள மற்றொரு ஏரிக்குச் செல்வதை வழமையாகக் கொண்டிருந்தேன். அன்றும் அப்படித்தான் அக்கா மற்றும் குழந்தைகளுடன் சூரிய உதயத்தை ரசித்துவிட்டு அங்கிருந்து ‘லவ் லேக்’ சென்று மீன்கள் நிறைந்த இடத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது தவறி ஏரியில் விழுந்துவிட்டேன்.

அங்கு நின்றிருந்த என் குழந்தைகளும் என் அக்காவும் பதறிவிட்டனர். என்ன செய்வதென்று யோசிக்கும் கணப் பொழுதில், நீச்சல் தெரியாத எனக்கு யாரோ உள்ளிருந்து வெளியில் வர உதவியது போல் இலகுவாகச் செல்பேசியுடன் மேலே வந்து முதலில் செல்பேசியை வைத்துவிட்டு ஏதோ உத்வேகத்தில் நானும் மேலே ஏறி வந்துவிட்டேன். ஆழமில்லை என்றாலும் அது பாறைகள் நிறைந்த பகுதி. அதுவும் குளிர்காலமென்பதால் நடுங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வேலை பார்ப்பவர் பதறியடித்து ஓடி வந்து தலையில் ஏதும் அடி இல்லையே என்று மீண்டும் மீண்டும் கேட்டார். வேறு எங்கும் அடிபடவில்லை என்பதைக் கேட்டு உறுதி செய்த பிறகு, அவர் சென்று தன் வாகனத்தை எடுத்து வந்தார். அதில் ’ஹீட்டரை’ இயக்கி, அணிந்திருந்த ஆடை காய்வதற்கு உதவினார், சூடாகத் தேநீரும் கொண்டு தந்தார். “இல்லை நான் காபி, டீ குடிப்பதில்லை” என்றேன். ”அதெல்லாமில்ல சூடாக ஏதாவது அருந்தினால்தான் நல்லது” என்றார் பல வருடம் பழகியவர்போல். பேசிய பிறகு நம்மூருதான் என்று அறிந்து மகிழ்ந்தோம். எதிர்பார்ப்பின்றி உதவும் மனம் சிலருக்குத்தான் என்று மகிழ்ந்து விடை பெற்றோம்.
செல்பேசி வண்ணமயமான திரையைக் காட்டியது. அது சாம்சங் 8+ அதனை அணைத்துவிட்டு வெயிலில் சிறிது நேரம் வைத்துவிட்டு, ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இயக்கினேன் சரியாக வேலை செய்தது. இந்த நிகழ்வு நடந்து மூன்று ஆண்டுகளாகிவிட்டது. சமீபத்தில் அதே இடத்திற்கு மீண்டும் சென்றோம்.


என் அக்காவின் மகன் வந்திருந்தான். அவனிடம் நான் அங்கு அந்த ஏரியில் விழுந்த கதையைப் பற்றியும் உதவியவர் பற்றியும் விவரித்துக் கொண்டிருந்தேன். அதே மீன் நிறைந்த பகுதிக்குச் சென்றோம் படமெடுத்தோம். பேசிக் கொண்டிருந்தபோதே ஏதோ தட்டியது போல நான் விழுந்த அதே பகுதியில் இந்த முறை என் கைப்பேசி தவறி வீசியது போல் ஏரியில் விழுந்துவிட்டது. இந்த முறை சாம்சங் 20+, என் கணவரோ வசை பாட ஆரம்பித்திருந்தார். என் அலுவல் வேலை எல்லாமே அந்த ஒற்றைச் செல்பேசியில்தான் இயங்கிக் கொண்டிருப்பதால் என்ன செய்வதென்றறியாமல் நின்றிருந்தேன். வந்த அழுகையை அடக்கிக் கொண்டு அங்கு வேலை செய்பவரிடம் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் யாருக்கோ தன் செல்பேசியில் தொடர்பு கொண்டு வரச் சொல்லிக் கொண்டிருந்தார். என் கணவர் ஏசிக் கொண்டிருந்த நேரம், என் மகள் மெதுவாக மீன்கள் அருகே சென்று மீன்களிடம் உதவி கேட்டிருக்கிறாள். திடீரென்று அந்த ஏரியில் எல்லா மீன்களும் அடித்துக் கொண்டு அலையோடு ஓசையை எழுப்பியது. என் மகள் ‘மொவானா (Moana)’ இல்லைதான் ஆனாலும் அது நிகழ்ந்தது. அதற்காக மீன்கள் என் செல்பேசியைக் கையில் எடுத்துத் தருமென்றெல்லாம் நீங்கள் வீண் கற்பனை செய்யாதீர்கள்.
என் செல்பேசி இன்னும் ஏரித் தண்ணீர் மூழ்கிவிட்டிருந்தது. அரை மணி நேரத்திற்கு மேலேயே கடந்துவிட்டிருந்தது. இவ்வளவு நேரம் தண்ணீரில் கிடக்கும் செல்பேசி செத்துவிட்டது என்று உறுதி செய்ய என் எண்ணை அழைத்தும் பார்த்தோம் ‘not reachable' என்றே வந்தது. அப்போதுதான் அந்த ஆபத்பாந்தவர் வந்தார். ஒல்லியான உயரமான உருவம். சீக்கிய மரபுக்கான முண்டாசை அணிந்திருந்தார். அவரைப் பார்க்க ஏசுநாதர் தலைப்பாகை அணிந்திருந்ததுபோல் தோன்றியது. அவ்வளவு சாந்தமான முகம். என்னைப் பார்த்தவுடன் புன்முறுவல் தந்தார். எந்த இடத்தில் விழுந்தது என்று கேட்டார். நான் கை நீட்டிக் காட்டினேன். புன்னகை மாறாமல் அப்படியே அந்தக் குளிர்ந்த ஏரியில் இறங்கினார். மீன்கள் பயந்தெல்லாம் ஒதுங்கவில்லை. அவரைச் சூழ்ந்தன. நான் ”இங்கே, அங்கே” என்று விசனத்துடன் சொன்னதைப் புன்முறுவலுடன் கடந்து மிதந்து கொண்டே தேடினார். அவர் பெரிய தாடி நனைந்துவிட்டது ஆனால் அவருடைய முண்டாசு நனையவில்லை. நனையாதவாறே மிதந்தார். கூர்மையாக என்னைப் பார்த்து ”இந்த இடம்தானா?” என்று மெல்லிய குரலில் கேட்டார். ”இன்னும் கொஞ்சம் தள்ளி” என்றேன். ஆனால் அவர் நீரில் தியானம் செய்பவர்போல் அங்கேயேதான் நின்றார். என்ன செய்தாரோ தெரியவில்லை பத்து நிமிடம்தான் இருக்கும் சட்டென்று மாயவித்தைப் போல் என் செல்பேசியை எடுத்துத் தந்தார். செல்பேசிக்கு உறை அணியும் பழக்கமில்லை - வெறும் skin wrap மட்டுமே செய்திருந்தேன். ஆனாலும் என் கைப்பேசி அணையாமல் ஒன்றுமே ஆகாமல் அப்படியே உயிரோடு, நனைந்த சுவடே இல்லாமல் இயங்கியது. கண்கள் நிறைந்து அவரை நன்றியோடு பார்த்தேன். அவர் எதையுமே எதிர்பாராதவராகத் தன் வாகனத்தில் ஏறச் சென்றவரிடம் வலுக்கட்டாயமாகச் சிறிது பணத்தை அவர் மறுத்தும் என் கணவர் திணித்தார்.
இந்த அதிசய நிகழ்வை பிரமிப்போடு, என் ஆச்சர்யங்கள் மாறாமல் சிலாகித்து நண்பரிடம் சொல்லி கொண்டிருந்தேன். அவரோ சிரித்துக் கொண்டே வடிவேலு ஸ்டைலில் “சாம்சங் ‘ஐபி68’ அதான் மொபைலுக்கு ஒன்னுமாகல. இதுல ஒரு மாயாஜாலமும் அதிசயமுமில்ல. ‘Jesus with Turban’ஆ ஹைய்யோ ஹைய்யோ”ன் என்று லெஃப்ட் ஹாண்டில் டீல் செய்து அநாயசமாக என் நம்பிக்கையைச் சுக்குநூறாக்கினார்.

No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி