Monday, May 16, 2022

ஜன கன மன - தேசியப் படம்

ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களிலும் ஒரு பெண் வன்புணர்வு செய்யப்படுகிறாள். ஆனால் ஏன் ஒரு சில பெண்களுக்கு ஏற்படும் அநீதியைப் பற்றி மட்டும்தான் ஊடங்கள் பெரிதாகப் பேசுகின்றன? ஊடகங்களால் உந்தப்படும் நாமும் ஒரு மரணமென்றால் ’நம் ஊரா? நம் மாநிலத்திலா? நம் சாதிப் பெண்ணா?’ என்றெல்லாம் தெரிந்த பிறகே அதைப் பற்றிப் பேசுகிறோம், பதறுகிறோம். உண்மைதானே? அதேபோல ஓர் என்கவுண்டர் நடந்தால் ’பாஸ்ட் புட்’ மாதிரி ‘இன்ஸ்டண்ட் டீ’ மாதிரி அது ஒரு ‘திடீர் தீர்ப்பு’ என்றெல்லாம் உணராமல், அவன் சாகடிக்கப்பட வேண்டியவன்தான், தூக்கில் போடப்பட வேண்டியவன்தான் என்று ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கும் விஷயங்களை மட்டும் உள்வாங்கி நாமும் அதற்குச் சாதகமான தீர்ப்போடு ஒத்துப்போக இணங்கிவிடுகிறோம்.

அதிகாரவர்க்கம் ஊடகங்களின் துணையோடு, காவல்துறையைக் கைப்பொம்மையாக்கி எப்படியெல்லாம் மக்களை உணர்வுப்பூர்வமாக ஆக்கிரமிக்கிறார்கள் என்பதைப் பற்றித்தான் பேசுகிறது ‘ஜன கன மன’ திரைப்படம். 

இதனை மலையாளப்படம் என்று மட்டும் சுருக்கிவிட முடியாது, இது ஒரு தேசியப் படம். அனைத்துச் சமூகத்தினரும் பார்க்க வேண்டிய படம். அதனாலேயே இந்தப் படத்திற்கு ‘ஜன கன மன’ என்று பெயர் வைத்திருப்பதாக உணர்கிறேன்.


ஒரு படத்தில் நான் எப்போதும் எதிர்பாப்பது கதையையும் காட்சியமைப்புகளையும் மட்டுமேயல்ல. மாறாக, அந்தப் படத்தினால் ஏற்படும் அதிர்வுகளை, புதுச் சிந்தனைகளை, விரியும் எண்ணங்களை, நமக்கு முன் எழும் சவால்களை இவை எல்லாவற்றையும்தான் 

மிகவும் முக்கியமானதென எண்ணுகிறேன்.. 

வெறும் பொழுதுபோக்காகப் பார்க்கப்படும் ’கேஜிஎப்’களோடு இப்படியான படங்களும் வரவேற்கப்பட வேண்டும். படத்திற்குப் பிறகு ஏற்படும் விவாதமே இம்மாதிரியான படத்திற்கான முழு வெற்றி.

முதல்பாதி படு வேகம், விறுவிறுப்பான காட்சியமைப்பால் அடுத்து என்ன? பேராசிரியர் சபாவாக வரும் மம்தாவைக் கொன்றது யார்? அவளுக்கு ஏற்பட்ட அநியாயம் வேறு யாருக்கும் நிகழக் கூடாது என்று சபாவின் மாணவர்கள் போலவே நாமும் சேர்ந்து அவளுக்காகப் போராடி கொண்டிருப்போம் மனதளவில். அதுவும் சஞ்சன் குமாராக வரும் சூரஜின் நடிப்பும் கம்பீரமும் நம்மையும் போராட்ட மனநிலைக்கே தள்ளிவிடும் தந்திரத்தைச் செய்திருக்கிறார் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி.

அதே வழக்கைத் தலைகீழாக மாற்றுப் பார்வையில் விவாதிக்கிறது இரண்டாம் பாதி. அதுவும் காட்சியமைப்பாக இல்லாமல் வெறும் வசனமாக, நம் மனதைத் தொடும், உலுக்கும் வசனமாக மட்டுமே விரிகிறது காட்சி. நிறையப் பேருக்கு வெறும் வசனம் மட்டுமே பிடிக்காதுதான், ஒளிக்கான வேலையே இல்லாமல் ஒலியால் கலக்கியிருப்பது, அதுவும் பொதுவாகவே நீதிமன்றக் காட்சிகளில் ’விஷுவல் ட்ரீட்’ இருக்காது. ஆனால் இதில் திரை முழுக்க நிறைந்திருப்பது பிரித்விராஜ் என்பதால் 

சகித்துக் கொள்ள முடிகிறது, அவ்வளவு உணர்ச்சிப் பொங்க சிறப்பாக நடித்திருக்கிறார்.

2019இல் ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் குழுவாகப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டதை வைத்துத்தான் இந்தப் படத்தைப் பின்னியிருக்கிறது திரைப்படக்குழு. ஆனால் போகிற போக்கில் உன்னாவ் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சேங்கரைப் பற்றியும், உட்கார இருக்கையும் இல்லாததொரு பள்ளிக்கூடத்திலிருந்து, அதுவும் பொதுவான குழாயிலிருந்து தண்ணீர் எடுக்கக் கூடாதென்று 

விலக்கப்படுகிற கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட ஒரு பெண் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு படித்துப் பட்டம் பெற்று, ஆளாகி, ஆராய்ச்சியாளராக முனைவராகப் பாடுபட்டும் முனைவர் பட்டம் பெற முடியாமல் தற்கொலை செய்வது 

என்பது அவளுடைய தோல்வியா? இல்லை, அவளை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறார்களா? என்ற கேள்வியின் மூலம் ரோஹித் வேமுலாவின் "நிறுவனக் கொலை" பற்றியும் நினைவுப்படுத்துகிறது இந்தத் திரைப்படம். 

அத்தோடு நின்றுவிடாமல் வடக்கில் மாட்டிறைச்சிக்காக நடந்த கொலைகள், அரிசி திருடியதற்காக அடித்தே கொல்லப்பட்ட கேரள சம்பவம், முஸ்லிம் பெண்கள் தலையை மறைப்பதை சிலர் அவர்களில் வெளிப்புற தோற்றத்தை வைத்துப் பேசுவது, மனித உரிமையின் சார்புநிலை, நிறத்தால் ஏற்படும் பாகுபாடுகள், சாதி பிரிவினால் ஏற்படும் அட்டூழியங்கள் என்று எல்லாவித சிறுபான்மை மற்றும் விளிம்புநிலை சமூகத்திற்காகப் பேசியிருக்கிறது இந்தப் படம்.

படத்தில் பிடித்த வசனங்கள்:

”அரசியல்வாதிகள் நினைத்தால் பணத்தையும் செல்லாக்காசாக்க முடியும் ஓட்டையும் செல்லாமலாக்க முடியும், காரணம் இது இந்தியா.”

----------

சஞ்சன் குமார் (சூரஜ் வெஞ்சரமூடு): ”உண்மையே வெல்லும்”

அரவிந்த் சுவாமிநாதன் (பிரித்விராஜ்): சத்தமாகச் சிரித்த பிறகு “காந்தியைக் கொன்றதிலேயே வெவ்வேறு கருத்துகள் கொண்ட நாடு சார் நம் நாடு”

இந்தப் படத்தின் ‘டீசரில்/ டிரெய்லரில்’ பார்த்து வாய்பிளந்த காட்சிகளும் வசனங்களும் படத்தில் இல்லாதது பெரிய ஏமாற்றம்.

தற்போதைய இந்திய அரசியல் சூழ்நிலையில் இந்தக் கூறுகள் ஒவ்வொன்றும் துணிச்சலான செயல்தான்.  அதற்கேற்ற தைரியமான வசனங்கள்தான் ஆனால் வேறுபட்டக் கூறுகளான துணிவும் வசனங்களும் ஒன்றிணையாமல் முழுமை பெறாமல் 

பிணைக்கப்படாமல் துண்டு துண்டாக நிற்பது எடிட்டர் சுதீப் இளமோன் மற்றும் ஸ்ரீஜித் சாரங்கின் தோல்வியா அல்லது இரண்டாம் பாகத்தில் முழுமை பெறுமா என்று தெரியவில்லை ஸ்ரீதிவ்யாவெல்லாம் 1-2 காட்சியில் வந்து செல்கிறார், எதற்கு 

என்ன பின்னணியென்று புரியவில்லை. ஒட்டுமொத்தப் படத்திற்கும் பலமென்றால் அது ஜேக்ஸ் பெஜாயின் பின்னணி இசைதான். முக்கியமாகப் படத்தின் கீதமாக வரும் வங்காள மொழிக் கலப்போடு ஒலிக்கும் பாடல் நம் உணர்வுகளைத் 

தூண்டுவதாகவுள்ளது. இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் குழுவினருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும். இரண்டாம் பாகத்திற்காகக் காத்திருக்கிறோம்.

குறைகளை மீறிப் பிடித்திருக்கும் படம். அவசியம் பார்த்துவிடுங்கள் விவாதிப்போம்.


#moviereview #JanaGanaMana

No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி