Monday, July 13, 2020
ஒரு சொல் சில மெளனங்கள்
Sunday, July 05, 2020
முரண்பாடு
தூய்மையான காற்று
நாம் முகமூடியில்.
வெறுமையான சாலைகள்
நாம் வீட்டுக்குள்.
சுத்தமான கைகள்
தீண்டாமை அமலில்.
செல்வந்தர்களுக்கு
செலவிட வழி இல்லை.
இல்லாதவர்களுக்கு
சம்பாதிக்க வழி இல்லை.
நேசத்திற்குரியவர் நோயில்
நேரில் நலம் அறியவில்லை.
அன்புக்குரியவர் இறப்பு
அருகில் அழவில்லை.
நேரான எண்ணங்கள்
எதிர்பார்ப்பில் எதிர்மறை.
விசித்திர உலகம்
விந்தை மனிதர்கள்.
-ஜெஸிலா
04 ஜூலை 2020
Thursday, June 25, 2020
சொர்க்கமே என்றாலும்
புத்தம் புதுச் சூழலில் இதமான தட்பவெப்பத்தில்
எழிலுடன் கூடிய இடத்தில் ரம்யமான மணம் தன்னைத் தொட்டுச் செல்ல, சலீம் எழுந்தான். உடலில்
எந்த வலியும் இல்லாததை உணர்ந்தான். கை, கால்களை உதறினான், தன் இளமை திரும்பி விட்டதாக
அவனுக்கே தோன்றியது. அவன் வழக்கமாக அணிந்திருக்கும் கண்ணாடி இல்லை. ஆனாலும் கண் பார்வை
மிகச் சிறப்பாகத் தெரிந்தது.
தன் பிறந்த மேனியில் வெள்ளைத் துணி
சுற்றி இருப்பதைப் பார்த்தான். அவன் அருகில் எல்லா வண்ணங்களும் கொட்டிய குடுவையில்
முக்கி எடுத்ததுபோன்ற சிறகுகளையும் அகல் போன்ற அலகையும் கொண்ட ஓர்அழகிய பறவை அவனுக்காகக்
காத்திருந்தது.
அதனுடன் புதுத் துணியைக் கண்டான், கையில் எடுத்தான். எங்கேயோ அதைப் பார்த்த நினைவு,
அதனைத் தொட்டபோது உடனே உடுத்திக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் அவனுக்குள் எழுந்தது. வான்
வண்ணத்தில் மேகத்தையொத்த வடிவமைப்பிலிருந்த உடையை உடுத்திக்கொண்டான். அந்த உடை அவனுக்காகவே
அளவெடுத்துத் தைத்தது போல் இருந்தது.
கால்களுக்குக் கீழ் இது மண் தானா என்ற
சந்தேகத்தில் கையில் எடுத்துப் பார்த்தான். வாயில் அள்ளிப்போட்டுக் கொள்ள வேண்டும்போல,
சிலிர்ப்பை உண்டாக்கும் அளவிற்கு அந்த மணல் வித்தியாசமான நிறத்தில் இருந்தது. அவன்
இதுவரை கண்டிருந்த தேரிகாட்டு மணல் போலவோ பாலைவன மணல் போலவோ இன்றி
புதுவித மணலாக இதமான குளிராகக்
கால் புதையாமல் அதே சமயம் பறக்காமல் தன் உயிர் இப்போது வேறு வித ஆற்றலாக மாறியிருந்ததை
உணர்ந்தான். நடக்கவும் இல்லாது பறக்கவும் இல்லாது நகர்வது சலீமுக்கு இன்பமாக இருந்தது.
‘இந்த மணலில் எப்படி இந்தப் பூ பூத்தது?’ என்ற யோசனையில் அருகில் சென்றால் வான்
நட்சத்திரம் பூவாக மலர்ந்திருந்தது அதனை மினுமினுத்தது என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக
இருக்கும். இவனுக்கு ஒரே குழப்பம், ‘விண்மீன்கள் வாயுக்களினாலானவை, அது தரும் ஒளி,
வெப்பம் மிகுந்தவை ஆனால் இந்த வகை வகையான கண்களுக்குச் சுகமான வண்ணங்களில் தென்படும்
நட்சத்திரம் பரவசத்தை அளிக்கிறதே எப்படி?’ என்று ஆராய்ச்சியில் அங்கேயே நின்று உற்று
நோக்கினான். அருகில் குளிர்ந்த நீரோடை இருந்தது.
அதனைக் கண்டதும் அவன் எண்ணம் அங்கே குவிந்தது., நீரில் இறங்கி ஒரு குளியல் போடலாமா
என்றும் அவனுக்குத் தோன்றியது.
எதைப் பார்ப்பது, எதைத் தவிர்ப்பது என்று வியக்கும் அளவிற்கு ஒவ்வொரு நுணுக்கங்களும்
புதுமையாக இருந்தன.. வானம் மட்டும் எப்போதும்போல் ஓவியமாக இருந்தது.
யாருமில்லாத புத்தம் புது இடம்தான்.
சமநிலையில் ஒரே பரப்பில், சீரான அமைப்பில் எழில் கொஞ்ச, பார்த்திராத பறவைகளின் ஒலி
சூழந்திருக்கும் அந்த ஆத்மார்த்த அமைதி அவனுக்குள் பயத்தை எழுப்பவில்லை மாறாக மனம்
சாந்தமாக மிகவும் பாதுகாப்பாகவே உணர்ந்தான். கால் போன போக்கில் அடுத்து என்னவென்று
அறியாமலே நகர்ந்தான். கொஞ்சம் தொலைவிலேயே தனக்குப் பழக்கமான ஒரு முகம் அவனை நோக்கி
புன்னகைத்தபடி வந்தது. அடுப்படியில் கரிப்பிடித்த துணியை ஒத்த உருவத்தில் இருப்பான்
சாகுல். இப்போது ஆஜானுபாகு உருவத்தில் அகன்ற மார்பு, வலிமையான புஜங்களுடன் “சலீம்”என்று
உறுமிக் கொண்டுவந்தார். வயிற்றுப்புற்றுநோயில் அவதிப்பட்ட சுவட்டையே காணோமே.
அவரைக் கண்ட ஆச்சர்யத்தில் ஓடிச் சென்று,
அதுதான் இளமை திரும்பிவிட்டதே அதனால் பறந்து நகர்ந்துஅவரைக் கட்டிக் கொண்டு "சாகுல்,
எப்படி இருக்கீங்க? உங்களை இங்க பார்ப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல" என்றான்.
அதற்கு அவர் கம்பீரமான குரலில்
"வா சலீம். எனக்கும் நீ வருவதா எந்தத் தகவலுமே இல்ல. ஏதோ மனசு இந்தப் பக்கம் வரணும்னு
தள்ளுச்சு வந்தேன். நீ எப்போ இறந்த? நீ இறக்கப் போறதாகவோ, இங்க வரப் போவதாகவோ ஒரு துப்புமில்லயே!!"
என்று ஆச்சர்யத்துடனும் சலீமை சந்தித்த மகிழ்ச்சியும் பொங்க, முகம் மலர்ந்து கேட்டார்
சாகுல்.
சாகுலைப் பார்த்த மகிழ்ச்சி பொங்க மடை
திறந்த வெள்ளமென சலீம் பேச நினைத்தாலும் ஏதோவொரு குழப்பத்திலேயே வார்த்தைகள் வெளிவந்தன.
"நானே எதிர்பார்க்கல சாகுல் அசந்து தூங்கிட்டேன், நீண்டதூக்கம்போல அங்கிருந்து
இங்க வந்துட்டேன். ஏதோ நான் ஒரு செடி மாதிரியும் என்னை வேரோடு பிடுங்கி போட்டா ஒரு
வலி வருமே அப்படியொரு உயிர்போற வலி. அப்புறம் நான் என்னை இங்க பார்த்த போதுதான் புரியுது"
என்று நிச்சயமற்ற தன்மையோடு சொன்னான் சலீம்.
சலிப்பான நமட்டு சிரிப்போடு விளக்கினார்
சாகுல் "உயிர் போற வலின்னு சரியாதான் சொல்ற. ஆமா, உன் உயிர் போயிடுச்சு. இப்ப
நீ மறுமைக்குள்ள நுழஞ்சுட்ட. ஆனா நீ அதிர்ஷ்டக்காரன்பா எவனையும் அந்த உலகத்துல நீ சுத்தல்ல
விட்டுருக்க மாட்டேன்னு நெனைக்கிறேன், அதான் சட்டுன்னு என்னை பார்த்துட்ட. இங்க வந்த
பிறகு ஒருத்தரை சந்திக்கிறதுக்கு அவ்வளவு நாளாகும்.
அதுவுமில்லாம புதுத் துணி வேற உடனே
கிடச்சிட்டுது போல, இது நீ அங்க உடுக்கத் துணி கொடுத்து உதவின யாரோ உனக்காகக் கையேந்தி வேண்டியதாலதான்
அது அமஞ்சிருக்கு, சரி வா உனக்குப் போகப் போகப் புரியும்” என்றபடி பேசி கொண்டே நகர்ந்தார்கள்.
“அட! நம்ம மாத்யூ வீடா அது?” என்று
ஒரு பெரிய வீட்டைச் சுட்டிக் காட்டி வாய் பிளக்கக் கேட்டான் சலீம். “நீ வரேன்னு தெரிஞ்சி
இங்க குடி பெயர்ந்திருப்பான்” என்று சாகுல், சலீம் முகம் பார்த்தபோது, சலீம் அவநம்பிக்கையில்
சந்தேகப் பார்வை தந்தான்.
அதனைப் புரிந்து கொண்ட சாகுல் உடன்
மறுத்து, ”நெசமாத்தான் சொல்றேன், நமக்கு வேண்டிய இடத்துல நம்ம வீட்டை நகர்த்திக்கலாம்.
அவனுக்கு வந்த வாழ்வ பார்த்தியா… ஒன்னுமில்லாத பையன்” என்று சொல்லி கொண்டிருக்கும்
போது மாத்யூ, “சலீம், எப்படி இருக்க?” என்று எல்லாப் பற்களும் தெரிய புன்னகைத்தபடி
வந்தார்.
எப்போதும் ஒரு சோகத்தில் மூழ்கியது
போன்றே முகத்தை வைத்திருக்கும் மாத்யூ மிக பொலிவான, சாந்தமான முகத்துடன் தெளிவாகப்
பேசியதை பார்த்தவுடன், “மாத்யூ, உன்ன இந்த நல்ல நெலமையில பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக
இருக்குப்பா. நான் அப்பவே சொன்னேன்ல உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்னு”
என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் சலீம்.
“எப்பவுமே சொல்வேனே சலீம், சமமான வாழ்வுன்னு
அத நான் இங்கதான் பார்க்கிறேன். எந்தவித பாகுபாடுமில்ல, உயர்வு தாழ்வு இல்ல, நினைத்ததை
வாழ முடியுது. சக மனிதன் சந்தோஷமா இருக்கான், சுற்றுப்புறம் நல்லா இருக்கு, யாரும்
யாருக்கும் கெடுதல் நினைக்க முடியாது. களவு இல்ல, வன்மம் இல்ல, பிரிவு இல்ல, பொறுப்பு
இல்ல. விடுதலை உணர்வை முழுமையா சுவாசிக்கிறேன். தானதர்மம் செய்யணும்னு ஆசப்பட்டேன்,
ஆனா அப்ப பணமில்ல. மனசார உதவணும்னு ஆசப்பட்டதுக்கே
இப்படியான வாழ்க்க அமைந்திருக்கு. அப்ப மனசார கொடுத்து உதவுனவங்களுக்கு? இங்க எல்லாமே
இப்படித்தான். எங்க வீட்டு பக்கத்துல பார்த்தியா ஓடை, அதுல நான் நெனைக்கிற பானம் கிடச்சிடும்.
நம்மூர்ல தான் தண்ணீர்ப் பஞ்சம். ஆனா இங்க ஆசை தீர குடிச்சுக்கலாம். ம்ஹும் ஆசை அந்த
வார்த்தையே மறந்துடுச்சு சலீம்” என்று ஞானி மாதிரி பேசியவனை உடைக்கும் வகையில் சாகுல்
“ஆமாமா ஆசை இல்லாததாலதான் மாத்யூ, அப்பப்ப கனவுபிரவேசம் பண்ணி உலக ஒட்டுதலிலேயே இருக்கான்,
அதுவும் அழியா வீட்டுக்குள் வந்துட்டு இன்னும் விழிக்காம இருக்கான்” என்றார் கிண்டல்
தொனியில்.
மாத்யூ பேச்சை மாற்றும் விதமாக “என்
கதைய விடு சலீம், நம்ம மொன வீடு சேகர சந்திச்சியா?” என்றார்.
அதற்கும் சாகுல் “சேகர் எப்படித்தான்
இங்க வந்தான்னு தெரியல. ‘தான் தவறுதலா இங்க வந்துட்டேனோன்னு’ அவனுக்கே சந்தேகம் வர
அளவுக்கு நல்லாயிருக்கான்” என்று எதையோ எதிர்பார்த்தவராகப் பொறாமையின் வெளிப்பாடில்
கறுவலுடன் பேசுவதாக இருந்தது சாகுலின் பேச்சு.
‘இங்க வந்தும் சாகுலின் குணம் மாறலையே.
அப்ப குணத்திற்கேற்ற சலுகையும் வசதி வாய்ப்புமா!? இங்க பொறாமை கிடையாதுன்னு மாத்யூ
சொன்னாரே, அப்ப இது பொறாமையில் சேராதா?’ என்று சலீம் யோசித்தான்.
மூவரும் தெரிந்த நபர்களை பற்றியெல்லாம்
பேசி கொண்டே நடந்தனர். ஆனால் உறவுகள் பற்றியோ சேகருக்கு முன்பே காலமாகிவிட்ட அவர் மனைவியை
பற்றியோ அவர் பேசவில்லை. சலீமால் கட்டுப்படுத்த முடியாமல், “சேகர், உன் மனைவி செளமியாவ
இங்க சந்திக்கலையா!?” என்று கேட்டான்.
எந்த செளமியா என்ற முகபாவனையுடன் சேகர்
“சலீம், ஆற்றலாக மாறிய நமக்கு தெரிந்தவர்களைக் கண்டால் மகிழ்ச்சி, ஆனால் மனைவி, மக்கள்,
என்னைச் சார்ந்து அவள், ஒருவனுக்கு ஒருத்தி என்ற எந்தவித உறவு பந்தங்களும் இங்கு இல்ல.
இதனை ஒருவித சுதந்திரமா நான் பார்க்குறேன். நான் யாரையும் தேடி போறதுமில்ல, என்னை தேடியும்
யாரும் வருவதில்ல. வழிப்போக்கரா சந்திப்பவருடன் மகிழ்ந்து பேசி நகர்கிறோம்” என்று விளக்கம்
அளித்தார்.
சிறிது தூரத்திலேயே சலீம் என்ற பெயர்ப்
பலகை தொங்கிக் கொண்டிருந்த கடை மாதிரியான அமைப்புத் தென்பட்டது. ”இது என்ன கடை மாத்யூ?
என் பெயரில்!!?” என்று கண்கள் விரிய சலீம் கேட்டான். "ஓஹ்! கடைத் தெருவா? உன்
பெயரிலா? சரி போய்ப் பாரு, எங்க கண்களுக்குத் தெரியாத இடத்திற்குள்ள நாங்க வரவே முடியாது.
அதுக்குள்ள நீ மட்டுந்தான் போக முடியும் சலீம். நாம இறந்த புதுசுல நமக்குப் பிரியமானவங்க
செய்யும் ஒவ்வொரு பிரார்த்தனையும், மனசார நமக்குச் சொல்லும் வாழ்த்தும், நல்ல வார்த்தைகளும்
நமக்குப் பிடிச்ச தின் பொருளா மாறி இப்படிக் கடையா விரிஞ்சிருக்கும். எதுவுமே கெட்டுப்
போகக் கூடியதில்ல. எப்ப வேணும்னாலும் நீ போய் எடுத்துச் சாப்பிடலாம். பணமெல்லாமில்ல.
இங்கதான் பணமென்ற ஒரு விஷயமே இல்லையே, நாம அங்க சம்பாதிச்ச குணம்தான் இங்க எல்லாமே”
என்று தன் சரக்கில்லாத கடையை நினைத்துப் பேசினார் சாகுல்.
மாத்யூ உடனே அங்குள்ள யதார்த்ததைப்
பற்றி சலீம் தெரிந்து கொள்ள வேண்டுமென்று, “சலீம், நம்ம மக்கள், நாம் செத்த உடனே நம்மை
நெனச்சு உருகி நமக்காகப் பிரார்த்திப்பாங்க, நம்ம பெயரில தானம் செய்வாங்க. ஆனா நாட்கள்
போகப் போக பசங்க மறந்திடுவாங்க. அவங்க உண்டு அவங்க பொறுப்புகள் உண்டுன்னு இருப்பாங்க.
அவங்கள நாம் குற்றம் சொல்ல முடியாது” சமாதானப்படுத்த முயன்றார்.
“நாம மட்டும் என்னவாம் நம்ம அம்மா அப்பாவுக்குச்
சமீபத்துல எப்பவாவது தனியா பிரார்த்தனைச் செய்திருப்போமா? இல்ல அவங்க பேருல தர்மந்தாஞ்
செஞ்சிருப்போமா?" என்ற சாகுலின் கேள்விக்குச் சலீம் பதில் சொல்லும் முன்பாகச்
சாகுல் மீண்டும் தொடர்ந்தார்.
"நாம பேரன் பேத்தி கண்ட பிறகு
நம்ம தாத்தா பாட்டியெல்லாம் நமக்கெங்க நெனவிருக்கு
சொல்லு? நான் சாகக்
கெடந்தப்ப பேரன் ஷாகிர்
வந்து, ‘உங்க பேரு என்னான்னு கேட்டான். சொன்னேன். உங்க வாப்பா பேரு என்னன்னு கேட்டான்
ரபீக்ன்னு சொன்னேன். அவங்க வாப்பா பேரு என்னான்னு கேட்டான். ஜாஹிருன்னேன். அவங்க வாப்பா
பேரு தெரியுமான்னான்.. தெரியுல தம்பின்னு சொன்னேன். பழைய வீட்டு பத்திரத்த விரிச்சி
காட்டினான். சுப்ரமணியின் மகன் ஜாஹிருன்னு இருந்துச்சு. சரி அதுக்கு இப்ப என்னடான்னு
கேட்டேன். ‘இப்ப நான் காதலிக்கிற பொண்ணோட அப்பா பேரும் சுப்ரமணிதான், வாப்பாக் கிட்ட
சொல்லி சம்மதிக்க வையுங்க’ன்னு கேட்டான். அப்ப தான் நான் இங்க வந்து சேர்ந்தேன். அப்புறம்
நான் அங்க எட்டிக் கூடப் போய்ப் பார்க்கல.
இங்க வந்த பிறகுதான் தெரிஞ்சுது இசாக்குன்னாலும்
எசக்கின்னாலும் ஐசக்குன்னாலும் ஒன்னுதான்னு. நான், போதும் போதும்னு வாழ்ந்தாச்சு இன்னும்
அந்த உலகத்துலயே சுத்திக்கிட்டு இருக்கப் பிடிக்கல” என்று சலீமுடன் பேசிப் பல காலமாகிவிட்டதால்
வசமாக மாட்டிக் கொண்டவனிடம் மூச்சுவிடாமல் பேசிவிட்டு இடைவெளி தராமல் தொடர்ந்தார் சாகுல்.
“எதையோ சொல்லப் போய் எங்கயோ போய்டேன்…
ம்ம் ஆமா காலப் போக்கில் நம்ம பிள்ளைங்க நம்மல மறந்திடுவாங்க. அவங்களுக்கும் பல பொறுப்புகள்னு,
உலக இன்பங்கள்னு கரஞ்சிடுவாங்க. நம்ம மாதிரிதானே நம்ம புள்ளைகளும் இருப்பாங்க?” என்று
இடை இடையில் சிரித்துக் கொண்டார்.
அப்போது அங்கு வந்து சேர்ந்த இணையப்
போராளி வேந்தன், “என்ன மாத்யூ, நட்பூக்களெல்லாம் சேர்ந்திருக்கீக போல. இப்பதான் “சிலர்
வாழ்க்கை முழுக்கச் சொர்க்கத்துக்குப் போகணும்னு விரும்புவாங்க, ஆனால் சாவுன்னா பயப்படுவாங்க.
எவ்வளவு முரண்!” அப்படின்னு ஒரு பதிவு போட்டுட்டு வரேன், என்று கடமையுணர்ச்சியோடு இளித்தார்.
நல்ல உயரம், உயரத்திற்கேற்ற பருமம், கருகருவென அலையலையான சுருள் முடியுடன் கலையான முகமுடையவரை
சலீமுக்கு யாரென்று தெரியவில்லை. மாத்யூ அவரை மதுரை வேந்தன் என்று அறிமுகப்படுத்தியதுதான்
தாமதம். “அட, நீங்கதான் வேந்தனா? நான் உங்கள் ஃபாலோவர், நீங்க எந்த பதிவு போட்டாலும்
லைக் போடுவேன்” என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு, வேந்தன் புகைப்படத்தில் வழுக்கையாக
இருந்ததை நினைவுப்படுத்தியும் பேசினான்.
“அட ஆமங்க, இங்க வந்ததும்தான் இயற்கையாக
நான் தொலைச்சிருந்த எல்லாம் திரும்ப கெடச்சுது. முடி மட்டுமில்ல, இளமை, உடல் வலிமை,
சந்தோஷம் எல்லாந்தான்” என்று மகிழ்ச்சியில் இருந்த வேந்தன் தன் அறிவுஜீவித்தனத்தைத்
தத்துவங்களாக பொழிந்தார் “செத்த பிறகு என்னாகும்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீகளா சலீம்? சில பேரு இங்க வந்த பிறகும்
உலக ஒட்டுதலிலிருந்து வெளிய வர முடியாம சிக்கித் தவிக்கிறாங்க – அது ஏன்னா, இந்த உலகத்துல
அவய்ங்களுக்கான எந்த வரவேற்புமில்ல. எப்படி இருக்குங்கிறேன்? பக்கத்து வீட்டுக்காரஞ்
சாப்பிடலானலும் எனக்கென்னானு கவலையில்லாம இருந்தவய்ங்களுக்கு
இங்க என்ன வரவேற்பு இருக்கும்ங்றேன்? தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்னு
சொன்ன பாரதியாரு பேச்சையும் கேக்கல பக்கத்து வீட்டுக்கும் சேர்த்துச் சமைக்கிற அன்பு
இங்கு வாழும்னு சொன்ன நா முத்துக்குமார் பேச்சையும் கேட்கல” என்று வழக்கமான மற்றவர்கள்
மீதான தன் அக்கறையை பறைசாற்றினார்.
இந்த முறை சாகுல் குறுக்கிட்டு “சரி
அதவிடு, இப்ப நீ கடைக்கு உள்ள போறியா இல்ல..." என்று அவர் இழுக்கும் முன்பாகவே
சலீம். "இல்ல சாகுல் எனக்குப் பசி இல்ல. மகிழ்ச்சியில மனசு நெறஞ்சி இருக்கேன்.
எனக்காக மலையளவு பிரார்த்தனைகளான்னு மலச்சுப் போய் இருக்கேன்" என்று வராத கண்ணீரை
வரவழைத்துக் கொண்டிருந்தான்.
வேந்தன் சலீமின் வயிற்றைத் தட்டியவராக,
"பசியா? நமக்கு உயிரே இல்ல அப்புறம் எங்கிட்டிருந்துய்யா பசிக்கும்? ஆனா நம்ம
சாப்பிடுறதெல்லாம் எங்கிட்டுத்தான் மாயமா மறையுமோன்னு தெரியலப்பா. வெளியிலயே இறங்காதுய்யா
சலீமு” என்று சொன்னபோது,
சலீமுக்கு ஒன்றுமே புரியவில்லை என்று
இன்னும் விரிவாக விளக்கினார் சாகுல். “உன் ஆற்றலை இன்னுமா நீ புரிஞ்சிக்கல? ஒலியா சுற்றி
திரியலாம் சலீம்” என்றார்.
அவரைத் தொடர்ந்து வேந்தன், “நமக்கு
விடுதலை கெடச்சிருச்சுப்பா. நீ எத தேர்ந்தெடுக்குறீயோ
அதுவாத்தான் இருப்ப, யாதுமாய் வாழலாம். ஆனா
அதுக்கான பக்குவமும் தகுதியும் மொத உனக்கு
இருக்கணும்” என்று பக்குவத்தை சலீமின் உடல்மொழியில் தேடினார்.
கடுமையான முகத்துடன் கூர்ந்து கவனித்த
சலீமை லேசாக்கும் விதமாக மாத்யூ “அடுத்தக் கிரகத்தைப் பார்க்கணும்னு இப்பவே கிளம்பிடாத,
இங்க பார்க்க வேண்டியதே நிறைய இருக்கு” என்று நட்புணர்வுடன் பேசினார்.
எல்லோரையும் சிரிக்க வைக்க வேண்டுமென்ற
எண்ணத்தில் சாகுல் சொன்னார் “நீ உலகத்துக்குத் திரும்பப் போகலாம்ன்னு நினைக்கலாம்,
போனாலும் அவங்களுக்கு உன்ன பார்க்க முடியாது. பார்த்தாங்கன்னா சலீம்ன்னா கூப்பிடுவாங்க?
இல்லவே இல்ல.” என்று சிரித்தார்.
அவர் எதற்காகச் சிரிக்கிறார், வேறு
நம்மை எப்படிக் கூப்பிடுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு பார்த்த சலீமிடம் “உன்ன பேய்யுன்னு
ஓட ஓட விரட்டுவாங்க, நீ வராதபடி என்னலாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்வாங்க."
ஏதோ அனுபவ வலியோடு பிடி கொடுக்காமல் பொடி வைத்தே கண்ணடித்தபடி பேசினார் சாகுல்.
கண்களுக்குக் குளிர்ச்சியாகவே எல்லாக்
காட்சிகளும் விரிவதாக உள்வாங்கிய சலீம் ‘இதெல்லாம் இவர்களுக்கும் தெரியுதா? இல்ல தனக்கு
மட்டுந்தானா?’ என்ற யோசனையில் இருந்த போது ஒரு மரத்தில் வித்தியாசமான கனியைக் கவனித்தான்.
"என்ன மரம் இது?" என்று கைகளுக்கு எட்டும் கனியை தடவி ’சுவைக்கலாமா கூடாதா’
என்று எண்ணிக் கொண்டே, முதல் மனிதர் ஆதாம் கதையாக ஆகிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை
உணர்வோடு கேட்டான்.
"மரமா?" என்று தங்களுக்கு
காட்சி தராத மரத்தைப் பற்றி கேட்கிறார் என்று உணர்ந்து மூன்று பேரும் சிரித்தார்கள்.
ஏதோ விளங்கி கொண்டவனாகச் சலீம், "சரி விடுங்க, உங்க வீடு ரொம்பத் தொலவா? யார்
கூடத் தங்கியிருக்கீங்க?" என்று பேச்சை திசை திருப்பினான்.
வெண்கல குண்டாவில் சில்லரையைக் கொட்டிய
சிரிப்போடு சாகுல், "சரியாப் போச்சு வீடா? வந்தவுடனே வீட்ட பத்தி கேட்குற... நான்
வந்து எவ்வளவு காலத்திற்குப் பிறகு எனக்குத் தங்குறதுக்கு இடம் கெடச்சது தெரியுமா?”
என்று அலுத்து கொண்டார்.
“என் வீட்டைத்தான் நீ பார்த்தியே, அப்படியான
வீடு உனக்கும் விரைவில் அமையும்” என்றார் மாத்யூ.
வேந்தன் வீட்டைப் பற்றி கேட்டால் தன்
முதல்நாளை நினைவுக் கூர்ந்தவராக “நான் வந்தப்ப முதல் முதலா நான் பார்த்தது, என் சீனியர்
வீராவையும் பாலாவையும்தான். அவய்ங்க ரெண்டு பெரும் ரொம்ப நெருக்கமான சிநேகிதய்ங்க.எல்லாரையும்
கிண்டலடிப்பாய்ங்க, புள்ளைகள கூட்டிவச்சு கத சொல்லுவாய்ங்க, பாடம் கத்துக் கொடுப்பாய்ங்க.
மாமிகளுக்கு வரிசைல நிண்டு ரேஷன் வாங்கித் தருவாய்ங்க, வயசானாலும் அவங்களால முடிஞ்ச
எல்லா உதவியும் எல்லாருக்கும் செஞ்சாய்ங்க, அவய்ங்க ரெண்டு பேரும் சொல்லி வச்ச மாதிரி
ஒருத்தன் பின்னாடி ஒருத்தனா இங்க வந்து சேர்ந்து இங்கயும் திண்ணையில உட்கார்ந்துகிட்டு
அடிக்கிற லூட்டி இருக்கே, அடேங்கப்பா. அதுமட்டுமில்ல
அன்னைக்கு பொசுக்குனு ரெண்டு பேரும் அன்பை வெளிப்படுத்துறோம்னு வாயோட வாய் வச்சு முத்தம்
கொடுத்துக்கிட்டாய்ங்க, அதைப் பாத்ததும் எனக்கு என்னவோ மாதிரி ஆகிப் போச்சு… அப்படி
எனக்கானது அந்த முதல் நாள் மட்டுந்தான். அப்புறம் நான் ஒரு முழுமையான ஆற்றலாக மாறுன
பின்னாடி எந்தவித வேறுபாடும் இல்லப்பா” என்று வியந்து கூறியபடி, “உனக்கு இந்த மாதிரி
எதும் அனுபவம் இருக்கா மாத்யூ” என்று கேட்டார்.
“அந்த உலகத்துலதான் எல்.ஜி.பி.டி.ன்னு
பிரித்து பார்த்துக்கிட்டு இருந்தோம், நான் ஏற்கெனவே சலீம்கிட்ட அதான் சொல்லிட்டு இருந்தேன்.
இந்த உலகத்துல பாலினப் பிரிவுமில்ல, அதனால வர ஏற்றத் தாழ்வுமில்லன்னு. எனக்கு எந்த
வித்தியாசமும் தெரியல. இதெற்கெல்லாமா வெறுப்பை வெளிப்படுத்தியிருக்கோம்னு நெனச்சா எனக்கே
அசிங்கமா இருக்கு” தன் உண்மையான உள்ளார்ந்த
குமுறலை வெளிப்படுத்தினார்.
“தப்புன்னு நெனச்சதெல்லாம் இங்க தப்பே
இல்ல. இம்மையில யாருதான் தப்பு சரியெல்லாம் விதியாக்குனாங்களோ!? வாழ்க்கையை சரியாக
வாழாமல் விட்டுவிட்டோமோ?” என்று மாத்யூவின் வேதனையில் இணைந்து கொண்டார் சாகுல்.
கையையே கைப்பேசி போல் பாவித்த வேந்தன்,
தான் பார்த்து வியந்த விஷயங்களை மறுமை இணையத்தில் மட்டுமல்ல, சலீமுக்கும் புரிய வைக்கும்
முயற்சியில் தன் பங்குக்கு, “இங்க எனக்குப் பிடிச்ச விஷயமே, நம்ம ஊருல நாம் ஆன்னு பாத்த
பிம்பங்கள், எல்லாம் இங்க அவன்பாட்டுக்கு சாதாரணமாத்தான் திரிவான், நம்ம வயித்துல அடிச்ச
அரசியல்வாதிப்பயகளெல்லாம் நமக்காகச் செக்கிழுப்பான், விவசாயம் பார்ப்பான், வண்டி ஓட்டுவான்,
நம்ம சொல்ற எல்லா ஏவல் வேலையையும் செய்வான். ஏமாத்தி பொழச்ச அம்புட்டுப் பயகளும், பெட்டி
பாம்பா அடங்கி, தொடர்ச்சியா இடத்தத் தூய்மைப்படுத்திக்கிடே திரிவான், செடிக்குத் தண்ணீர்
பாய்ச்சுவான், இயற்கையைப் பராமரிப்பான், ஏதாவது ஒரு வேலையைச் செஞ்சிக்கிட்டு சுத்திக்கிட்டே
கெடப்பான். அவய்ங்கள பாக்கும் போது இதெல்லாம் தேவையாடா உனக்குன்னு சிரிப்பு சிரிப்பா
வரும். ஆனா பார்த்துக்க, இங்க சாக்கடையில்ல, இல்லாட்டி அதை இந்த அயோக்கியப்பயகதான் தூய்மைப்படுத்தி இருப்பாய்ங்க, பார்க்க கண் கொள்ளா காட்சியா இருந்திருக்கும். அப்புறம்
நீ வீட பத்தி கேட்டேல்ல, அதுக்கு நீ தகுதியாகிட்டா உன் பெயருக்கான அழியாத வீடு உனக்கே
தெரியும். சிலருக்கு வந்ததும் கெடச்சிரும் அப்படியே செட்டிலாகிடுவாங்க. உள்ள போனதும்
அவங்க மனசப் பொறுத்த எல்லாம் செமயா இருக்கும்” என்று வியக்கும் விதமாக சொல்லி வைத்தார்.
“போன வாரம் மன்னடி ஆலிம்ஸா தர்மர் சர்புதீன்
மவுத்தாகி இங்க வந்ததும் அவருக்கான வீடு வாசல் கனி வகைகள் அது இதுன்னு தடபுடலா இருந்ததுன்னு
பேசிக்கிட்டாங்க. யாரு பேசிக்கிட்டாங்கன்னு என்கிட்ட கேட்க கூடாது. அப்புறம் அந்தத்
தடபுடலையெல்லாம் நான் எதையும் என் கண்ணாலப் பார்க்கல. ம்ஹூம் இதெல்லாம் இப்படிதான்
இருக்கும்னு தெரிஞ்சிருந்தா என் சொத்த பூராம் தர்மத்துக்கே கொடுத்திட்டு, உலக மக்களுக்காகவே
உழச்சிட்டு வந்திருப்பேன்" என்று பெருமூச்சு விட்டார் சாகுல்.
’தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கும், ஊரை
அடித்து உலையில் போட்டவர்களுக்கும் இவ்வளவுதான் தண்டனையா?’ என்ற யோசனையில் தலையசைத்துக்
கேட்டுக் கொண்டிருந்த சலீம் 'இதற்கு மேல் இவர்களை தம் கேள்வியால் தொந்தரவு செய்ய கூடாது'
என்று முடிவெடுத்தான். அந்தக் கணமே அந்த மூவரும் அங்கிருக்கவில்லை. சுற்றித் தேடினான்,
யாரையும் காணவில்லை. நினைத்த மாத்திரத்தில் நினைத்த விஷயங்கள் நடக்கிறதே என்ற மயக்கத்தில்
இருக்கும் போது அவன் பூமியில் பார்த்திராத அதி அற்புதமான இயற்கை அழகுகள் கண் முன் விரிந்து
கிடந்தது. 'எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு யுகமாகும், இங்கேதானே நிரந்தரமாக இருக்கப்
போகிறோம் எவ்வளவு காலமென்றால்தான் என்ன' என்ற நினைப்பிலேயே இருந்தவனின் நெஞ்சை யாரோ
அமுக்குவது போல் இருந்தது. உடல் வலிமை இழந்து பலகீனமாக படுக்கையில் கிடத்தி இருப்பதும்.
சுற்றி மனைவி மக்கள் அழுவதும் தெரிந்து, மூச்சை இழுத்துவிட்டான்.
“தேங்க் காட், ஹி இஸ் பேக் வித் அஸ்”
என்று மருத்துவர் மகிழ்ச்சியாக கூறினார்.
சலீமின் மகிழ்ச்சிதான் முற்றும் வடிந்துவிட்டது.
Monday, June 22, 2020
வாப்பாவின் எழுத்து
திருச்சி சையது குறிப்புகள் கேட்டதை நானும் வலியுறுத்தவே எனக்கு ஒரு சம்பவத்தை நினைவுக்கூர்ந்து கூறினார்கள்:-
காமராஜரும் நேருவும் கலந்து கொண்ட விழாவில் படம் எடுத்துக் கொண்டிருந்த போது மேடைக்குக் கீழே இறங்கி வந்து பின்னால் நின்று பேசி கொண்டிருந்ததைக் கவனித்து வாப்பா அங்குச் சென்றபோது காமராஜர் நேருவுக்குச் சிகரெட் பற்ற வைக்க அதனை அழகிய காட்சியாகப் பார்த்தவர், படம் எடுத்துவிட்டார். இதனைக் கவனித்த காமராஜர் வாப்பாவிடம் “ஹமீது பாய் அந்தப் படம் வெளியில் வராம பார்த்துகோங்க” என்று தயவாகச் சொல்லவே, வாப்பா அதனை நெகடிவாகக் கூட மாற்றவில்லை. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை அவருடைய மகளாக நான் பகிர்கிறேன் என்றால் இப்படியான அரசியல்வாதிகள் இன்றில்லை என்பதைச் சொல்ல இந்தச் சம்பவம் தேவைப்படுவதால் மட்டுமே.
எம்.ஜி.ஆருடனான வேறு நிகழ்வை வாப்பா கைப்பட எழுதியதை இங்கு பகிர்ந்துள்ளேன்.

Sunday, June 07, 2020
தெரிந்த எழுத்தாளரின் தெரியாத எழுத்து
பக்கீர் பாய், அண்டி, இராமசாமி வாத்தியார், வள்ளியம்மை என்று நான்கு கதையின் முக்கியக் கதாபாத்திரத்திற்கும் ஒற்றுமை இருப்பதாக உணர்கிறேன். அதனால் முதல் நான்கு கதைகளுமே ஒரே மாதிரியான வடிவமாக எனக்குத் தெரிந்தது. முதல் பகுதி அந்த முக்கியக் கதாபாத்திரத்தின் விவரணையோடு நம் குவியத்தை அவர்கள் மீது செலுத்தி கடைசியில் அவர்கள் மன அளவு பாதிப்பை நம்மிடமும் கடத்துகிறார் நூலாசிரியர். என்னதான் வெள்ளை காகிதத்தில் ஒரு கருப்பு புள்ளி வைத்து அதனை என்னவென்று யாரிடமாவது காட்டி கேட்டால் வெள்ளை காகிதம் என்று சொல்லாமல் கருப்பு புள்ளி என்று சொல்லும் மனங்கள் தான் அதிகம் என்பதைத் தமது கதைகளில் நிறுவியுள்ளார்.
ஒரே மாதிரி கதைகள் அமைவதிலிருந்து வெளிவர அல்ல அந்த வடிவத்தை உடைக்கும் உபாயமாக அடுத்ததை ஜமீன் கதையாக்குகிறார் ஆனால் முடிவு நமக்கு முன்னதாகவே உய்த்துணர முடிகிறது.
நூலாசிரியர் சிவாவின் பலமே அவருடைய விவரணைகள்தான் என்று தோன்றுகிறது. சூழலை நம் கண்முன்னே கொண்டு வந்து, அதில் வரும் கதாபாத்திரங்களின் அமைப்பை நம்முடைய கற்பனைக்கு விட்டு வைக்காமல் அவர்களையும் விவரித்து நம் முன் நிறுத்தி பிறகு கதைச் சொல்ல ஆரம்பிக்கிறார். அதில் மிளிர்ந்தது 'வெத்தலப்பட்டி' கதை.
வேட்டியை மட்டும் கட்டும் என் மாமாவை நினைவுப்படுத்தியது 'பேண்ட்' கதை.
ஒவ்வொரு கதையும் வெவ்வேறு வகைமையாக்க வேண்டுமென்றே பேய்களையும் யட்சினியையும் சேர்த்துகொண்டு மூன்று கதைகளில் நம்மைப் பயமுறுத்துகிறார்.
குட்டிகோரா, நருவல் ஆகிய கதைகளில் எழுத்துக்களின் நறுமணத்தை நமக்கு விட்டுச் செல்கிறார்.
'முடியன்' என்ற கதையில் நையாண்டியில் முத்திரைப் பதிக்கிறார். ஜெமோவின் 'மாடன் மோட்சம்' கதையை நினைவூட்டுகிறார். அதைப் போலவே 'அண்டி' என்ற கதையும் நாஞ்சில் நாடனின் 'இடலாக்குடி ராசா'வை நினைவுப்படுத்துகிறார். சிவாவும் நாஞ்சில் எழுத்தாளர் என்பதால் அதே கதாப்பாத்திரத்தை ஒரே இடத்தில் நின்று பார்த்து எழுதலாம், ஆனால் ஒரே கதையைக் கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கும் தாக்கமே இரண்டு கதைகளிலும் வெளிப்பட்டது. அபிமான எழுத்தாளர்களின் எழுத்து சாயல் இருக்கலாம் கருத்து சாயலுமா என்ற கேள்வி எழாமல் இல்லை.
சிவாவின் எழுத்தில் ஆங்காங்கே நகைச்சுவையோடு கலந்த ஒருவரி அழகியல்கள் அழகு. நான் இரசித்ததில் சில:
'கிளாசுக்களோடு அந்த நினைவுகளையும் கழுவ ஆரம்பித்தார்'
'சாமியாப் பொறந்தா வைணவச் சாமியா... அதுவும் திருப்பதி வெங்கடாச்சலபதியா பொறக்கணும்'
இயல்பான நடையில் சொல்லப்பட்ட வெவ்வேறு வகைமையான கதைகளென்றாலும் ஒரே மாதிரியாகக் கட்டமைத்து கொண்டுவந்து நேர்மறையாக நிறைவாகிறது எல்லாக் கதைகளும். சிறுகதையென்றால் இப்படித்தான் கட்டமைக்க வேண்டுமென்று எழுத்துப் பட்டறையில் ஏதும் நூலாசிரியர் கற்றறிந்திருக்கலாமாக இருக்கும்.
நூற்றி ஐம்பது பக்கத்தில் பதிமூன்று கதைகள் இலகுவான வாசிப்புக்குத் துணையாகிறது ஆனால் எழுத்துப்பிழைகளை அடுத்தப் பதிப்பில் திருத்திவிட்டால் நன்றாக இருக்கும் அத்தோடு நூலின் உள்ளடக்கமும் எனக்கு அவசியமாகப்படுகிறது. ஜீரோ டிகிரி பதிப்பகத்தில் வெளிவந்த 'குட்டிகோரா' உண்மையானவர்களை நமக்கு அறிமுகப்படுத்திச் சில இடங்களில் நமக்குப் புன்முறுவலை அள்ளித் தருகிறது. நீங்களும் வாசித்தால் நான் சொல்வது சரியென்று ஒத்துக்கொள்வீர்களாக இருக்கும். தெரிசை சிவாவுக்கு வாழ்த்துகள்
Saturday, June 06, 2020
தெரியாம சாப்பிடலாமாம்...
இதைக் கவனித்த உம்மா “சரி முக்கியமான நோன்பு மட்டும் முதலில் வை. அப்புறம் உன்னால் தாக்குப்பிடிக்க முடிந்தால் மட்டுமே மற்ற நோன்பு” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள். நானும் மறுநாள் நோன்பு வைத்தேன். ஏற்கெனவே சொன்னதுபோல் வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்க நான் தான் கடைக்குச் சென்று வருவேன். அப்படிப் போகும்போதெல்லாம் ’கமிஷன்’ எடுப்பேன் - அதிகமில்லை நான்கு அணா அல்லது எட்டு அணா தான். இப்படிக் கிடைக்கும் கமிஷனில் முறையாகத் தேங்காய் பிஸ்கெட் வாங்கித் தின்றுவிடுவேன். அதுவும் வாங்கி வந்து வீட்டில் சாப்பிட மாட்டேன். வீட்டில் வந்து சாப்பிட்டால் உடன்பிறப்புகள் பங்கு கேட்பார்களே, அதனால் வரும் வழியிலேயே சாப்பிட்டுவிட்டு, கடைசிக் கடியை வீட்டில் வந்து அக்காவிடம் காட்டி “பாத்தியா தேங்காய் பிஸ்கெட்” என்று வெறுப்பேற்றிய பிறகே கடைசிக் கடியை முடிப்பேன். அன்றும் அப்படித்தான் கடைக்குச் சென்று மீதம் கிடைத்த சில்லறையில் தேங்காய் பிஸ்கெட் வாங்கித் தின்று கொண்டே வீடு வந்தேன். கடைசிக் கடியை அக்காவிடம் காட்டியபோது “நீ நோன்புல்ல?” என்றாள். ’அடடா நோன்பாச்சே’ என்று அவசரமாக வாய்க் கொப்பளித்து, வாந்தி எடுக்க முற்பட்டேன். என் வாப்பா பார்த்துவிட்டார்கள் “தெரியாம சாப்பிட்டா தப்பில்ல ஆனால் தெரிந்தே வாந்தி எடுத்தா தவறு” என்றார்கள். “ஓ அப்ப தெரியாம சாப்பிடலாம் போல” என்று அடிக்கடி தெரியாமல் சாப்பிட்டேன். “நீ சரிப்பட்டு வரமாட்ட” என்று என்னை அந்த வருடமும் நோன்பு வைக்க விடவில்லை. "இனி அப்படியான தவறுகள் நடக்காது நான் சரியான முறையில் நோன்பு வைக்கிறேன்" என்று உறுதி தந்தபின், அந்த உறுதியை நான் காப்பாற்றுவேன் என்று நம்பிக்கை வந்த பின் நோன்பு வைக்க எனக்கு அனுமதி வழங்கப்பட்டது, ஊத்தாப்பமும் கிடைக்க ஆரம்பித்தது.
Monday, May 11, 2020
நடிகர் கமலஹாசன் பிறந்தநாள்
எனக்கு அப்படி நிகழ்ந்துள்ளது.
அப்போது நான் எட்டாம் வகுப்பில் இருந்தேன். நடிகர் கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி நடந்தது. எங்கள் பள்ளியிலிருந்தும் கலந்து கொண்டோம். நான் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டேன், என்னைப் போலவே தோழி சாய்ராவும் அதே போட்டியில் எங்கள் பள்ளியிலிருந்து, என் வகுப்பிலிருந்தே கலந்து கொண்டாள். போட்டியின் தலைப்பு 'கண் தானம்'. வரைந்து முடித்த பிறகு மற்றவர்களெல்லாம் என்ன வரைந்திருக்கிறார்கள் என்று பார்வையிட்டேன்.
நிறைய அழகான ஓவியங்கள் இருந்தன. 'சொக்கா எனக்கில்ல' என்று நினைத்தபடியே வந்துவிட்டேன்.
சில தினங்களுக்குப் பிறகு நான் பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றபோது என் வீட்டுக்கு கமலஹாசன் நற்பணி மன்றத்திலிருந்து வந்து ஒரு 'போஸ்ட் கார்ட்' தந்து, நான் ஓவியப் போட்டியில் முதல் பரிசு வென்றதாகச் சொல்லி, பல பள்ளிகள் கலந்து கொண்ட அந்தப் போட்டியில் எனக்கு முதல் பரிசு என்று சொல்லியதோடு, என் தந்தையிடம் ஏன் நான் வரைந்த ஓவியத்தை திரு. கமலஹாசன் தேர்ந்தெடுத்தார் என்பது வரை சொல்லிச் சென்றுள்ளனர். அந்தப் 'போஸ்ட் கார்டில்" "நீங்கள் போட்டியில் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி. நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் வரும், வந்து சேருங்கள்" என்பதாக இருந்தது.
மறுநாள் பள்ளியில் அதைக் காட்டி காலையில் கூடும் சபையில் கைத்தட்டுக் கிடைக்கப் போகிறது என்று மிகுந்த உற்சாகத்துடன் சென்றேன். வழக்கம்போல் தாமதமாகச் சென்று விட்டதால் தனியாக நிற்க வைத்துவிட்டார்கள். அந்த அட்டையைக் காட்டி இது பற்றிச் சொல்ல வேண்டுமென்று என்னை வழிமறித்த ஆசிரியரிடம் காட்டினேன். 'அதெல்லாம் வேண்டாம் இங்கேயே நில்லு' என்று தள்ளினார். சபையில் யாருக்கோ கைத்தட்டல் கிடைப்பது தெரிந்து உற்றுநோக்கிக் கேட்டால் சாய்ராவும் அதே அட்டையைக் காட்டி கைத்தட்டல் வாங்கிக் கொண்டிருந்தாள். வெற்றி பெற்றதை அங்கீகரிக்க எனக்குக் கிடைக்க வேண்டிய கைத்தட்டு, ஆனால் அவளுக்குத் தபால் மூலம் வெறும் பங்குபெற்றதற்கான பாராட்டு அட்டைக்காகக் கைத்தட்டு. 'சொக்கா எனக்கில்ல' என்று நினைத்தபடியே விட்டுவிட்டேன்.
அதன் பிறகு இது பற்றி நான் யாரிடமும் சொல்லாமல் அட்டையைப் பையில் வைத்துக் கொண்டேன். முறையான அழைப்பிதழ் வரும்போது இவர்களுக்கு உண்மை புரியட்டும் என்று நினைத்தேன். நாள் நெருங்கியது, அழைப்பிதழ் வரவில்லை. அந்த நிகழ்வும் நடக்கவில்லை. காரணம் நடிகர் கமலஹாசனின் தந்தை இறந்துவிட்டதால் அவருடைய பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு ரத்தானது. கமல் தந்தை இறந்ததற்கு அவரைவிட நான் மிகுந்த சோகத்தில் இருந்தேன்.
சில வாரங்கள் கழித்துத் தலைமையாசிரியர் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. 'ஏன் எனக்கு அழைப்பு? நான் எந்தத் தவறும் செய்யவில்லையே' என்று நினைத்தபடி தலைமையாசிரியரைச் சென்று சந்தித்தேன். அவர் பெயர் ஃபாத்திமா. அந்தத் தலைமையாசிரியருடன் ஒருவர் இருந்தார். என்னைப் பார்த்து புன்னகைத்தார், வாழ்த்தினார். ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றதைச் சொல்லி, மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வைப் பற்றிச் சொல்லி அதற்கான அழைப்பிதழ் தந்து, என்னுடன் மற்றுமொருவரும் நிகழ்வில் கலந்து கொள்ளலாம் என்றார் கமலஹாசன் நற்பணி மன்றத்தைச் சேர்ந்தவர். என் தலைமையாசிரியரின் முகத்தில் எந்த மகிழ்ச்சியும் இல்லை. இத்தனை பள்ளிகளுக்கு நடுவே தன் பள்ளியிலிருந்து ஒருவர் வெற்றி பெற்றதில் அவருக்கு மகிழ்ச்சியில்லை. அந்த அலுவலகத்தில் சாய்ராவின் மாமாவும் உட்கார்ந்திருந்தார், அவர் பள்ளி தொடர்பான பணியிலிருந்தார்.
நற்பணி மன்றத்தினர் சென்ற பிறகு தலைமையாசிரியையிடம் சாய்ராவின் மாமா "இந்தப் போட்டியில்தானே சாய்ரா வெற்றிப் பெற்றதாகச் சொன்னாள், எப்படி இப்போது இவள் பெயர் அழைப்பிதழில்?" என்பதாக உருதுவில் கேட்டார். எனக்கு மொழி விளங்காது என்று நினைத்து என் முன்னிலையில் தலைமையாசிரியரும் "ஆமாம், இவள் தந்தை பத்திரிகையில் இருப்பதால் ஏதாவது சொல்லி பரிசு வாங்கி இருப்பார்" என்பதாக விஷத்தைக் கக்கினார். எனக்கு அது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
இந்த ஃபாத்திமா என்பவர் தலைமையாசிரியர் ஆகும் வரை பள்ளி நிர்வாகத்தில் எனக்கு எந்தச் சிக்கலும், பாகுபாடும் தெரியவில்லை. ஆனால் இவர் வந்த பிறகு, அதுவும் இவர் தலைமைப் பொறுப்புக்கு முன்பே துணைத் தலைமையில் இருந்தபோதே என்னைத் 'தமிழ்' என்று ஒதுக்குவார். எந்தப் போட்டியில் பெயர் கொடுத்தாலும் எனக்கு வாய்ப்பு தர மறுப்பார். என் ஆசிரியை எனக்காகப் பேசி வற்புறுத்தினால் மட்டுமே போனால் போகிறது என்ற விதத்தில் வாய்ப்பளிக்கப்படும். அது உருதுப் பள்ளி என்பதால், தமிழ் பேசும் என்னைப் போன்றவர்களை வேறு விதமாகவே பார்ப்பார்.
அதன் பிறகு விழாவுக்கு ஆசிரியை யாரும் உடன் வர விருப்பம் தெரிவிக்காததால் அதே தலைமையாசிரியருக்குப் பயந்து கொண்டுதான், நான் என் தாயாருடன் நிகழ்ச்சிக்குச் சென்றேன். நிகழ்வில் எனக்குப் பரிசளிக்கப்பட்ட இந்தப் புகைப்படம் செய்தியுடன் எல்லாத் தமிழ்ப் பத்திரிகைகளிலும் வந்தது. சில ஆசிரியைகளுக்கு மட்டும் காட்டினேன்,
மற்றவர்களுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாததால். பத்மாவதி தமிழ் ஆசிரியர் மற்றும் மீஹால் ஆங்கில ஆசிரியர் இருவரும் என்னைப் பாராட்டி மகிழ்ந்தனர் 'நம் பள்ளிக்கூடம் மேல்நிலைப் பள்ளி என்றும் தெரியவில்லை, பத்திரிகையில் உயர்நிலைப் பள்ளி என்று செய்தியில் இருக்கிறது' என்று மட்டும் குறிப்பிட்டார்.
நான் சென்னையில் இருந்த வரை இந்த சம்பவத்தைத் தவிர வேறு எந்தப் பாகுபாடுமில்லாமல் மிகவும் பாதுகாப்பாகவே வளர்ந்துவிட்டேன். இந்தப் பாகுபாட்டையும் என்னுடன் படித்த மற்ற தமிழ் பிள்ளைகள் உணர்ந்தே இருக்க மாட்டார்கள். காரணம் வெளி பள்ளிகளுடனான போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று வரும்போது மட்டுமே இந்தப் பிரச்சனை எழும்.
ஆனால் அமீரகம் வந்த பிறகுதான் சாதி, மத, மொழியால் நாம் பிளவுபட்டிருப்பதே எனக்கு புலப்பட்டது. சமீபத்தில் பஞ்சகனி எனும் சுற்றுலா தளத்திற்கு சென்றிந்த போது மத அடையாளங்களால் பல இடங்களில் வித்தியாசமான பார்வைக்கு ஆளாக்கப்பட்டோம். கோவில் போன்ற சுற்றலா தளத்திற்கு சென்றிந்தபோது அவர்களின் பார்வையால் ஒரு அச்ச உணர்வே ஏற்பட்டு வேண்டாம் திரும்பி சென்று விடலாம் என்று பயந்து திரும்பிய இடங்களும் உண்டு. இப்படியான நிலை தமிழ்நாட்டில் வராமல் இருக்க வேண்டும்.
இப்போது வன்மத்தை முகநூலில் கொட்டும் நபர்களைக் காணும்போது மிகுந்த ஆச்சர்யமாக உள்ளது, 'இவர்கள் வளரும்போது இப்படியான பாகுபாடு எண்ணத்துடனே வளர்வார்களா? அல்லது அப்படி சொல்லித்தான் வளர்க்கப்படுவார்களா?' என்று விளங்கவில்லை. ஆனால் நான் 'பீட்டர்ஸ் காலனி'யில் மாற்றுமதச் சகோதரர்கள் என்று எந்த வேறுபாடுமில்லாமல், (இப்பவும் 'மாற்றுமத' என்று எழுதும்போதும் எனக்கு வித்தியாசமாகதான் தெரிகிறது.) அப்படியான எந்தவித பிளவுமில்லாமல் வேறுபாடுமில்லாமல் மிக நெருக்கமாகவே அண்டை அயலாரோடு பழகினோம்.
எப்போது சாதி மதப் பிரிவினை ஏற்பட்டது? ஏற்கெனவே இருந்ததா அல்லது நான் தான் அது குறித்துத் தெரியாமலேயே வளர்ந்திருக்கிறேனோ? அல்லது நகரத்தில் இல்லை. கிராமங்களில் தான் பிரிவினை அதிகமாக இருந்து அதன்பின் பரவியதா?
இப்போது எதற்காக இந்த மலரும் நினைவுகள் என்று நீங்கள் நினைக்கலாம், கொரோனா நேரத்தில் பழைய புகைப்படங்களை எடுத்துக் குழந்தைகளுடன் அதன் பின்னணி பற்றிச் சொல்லும்போது எழுந்த கேள்விகளின் தொகுப்பே இந்த நினைவலை.
Tuesday, March 17, 2020
'எழுதாப் பயணம்' - என்னை எழுத வைத்த நூல்
அவர் எழுதிய 'எழுதாப் பயணம்' ஆட்டிசம் பற்றியது என்றதும் படிக்க ஆவலானேன், காரணம் என் நெருங்கிய நண்பரின் குழந்தைக்கும் ஆட்டிசம் பாதிப்பு இருந்தது. 'இருந்தது' என்று இறந்தகாலப் பதத்தில் எழுதக் காரணம் உள்ளது.
என் நண்பருக்கு இரட்டைக் குழந்தைகள். அதனால் அந்தக் குழந்தையின் தாய் மிக எளிதாக, ஒரு குழந்தை போல் மற்றொரு குழந்தை இல்லை, ஒரு குழந்தை கொஞ்சம் பின் தங்கியிருப்பதைக் கணவரிடம் சொல்ல, அவரால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கடும் மனவுளைச்சலில் இருந்தார். தன் மனைவி தன் குழந்தையைப் பற்றி இப்படிச் சொல்வதாக, புகாராகவே என்னிடம் சொன்னார். அதிக நேரம் குழந்தைகளுடன் நேரம் செலவளிக்கும் அவருக்குச் சந்தேகம் இருப்பின் மருத்துவரைக் கலந்தாலோசித்தால் நல்லது என்று நான் சொன்னபோது மனமில்லாலம் மருத்துவரை அணுகினார்கள். அவருடைய மனைவி சந்தேகித்தபடி ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருப்பதை ஏழாவது மாதத்திலேயே தெரிந்து கொண்ட பிறகுதான் அவர்கள் இருவரும் பல பிரச்சனைகளுக்கும் பிணக்குகளுக்கும் உள்ளானார்கள். தேவையற்ற சண்டை, புரிதலின்மை, யார் இதற்குக் காரணம், இருவருக்கும் தங்களுக்கென்று செலவிட நேரமில்லாமல் தவித்தனர். ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதும் குறைந்தது, இருவரும் வேலைக்குச் செல்வது குழந்தையை மேலும் பாதிக்கும் என்பதால் ஒருவர் வேலையை விடச் சம்மதித்தார். யார் வேலையை விடுவது என்ற விவாதம் வேறு. ஏன் எப்போதும் பெண்தான் தன் தொழில் முனைப்பை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற பிளவு. பல பிரச்சனைகளைத் தாண்டி குழந்தையின் நலனை பிரதானமாக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தனர். அந்தக் குழந்தை சில மாதங்கள் மட்டுமே பின்னடைவில் இருப்பதாகத் தெரிந்ததால் அதிகம் கவனம் செலுத்தி இப்போது இரு குழந்தையில் யாருக்கு ஆட்டிசம் என்று தெரியாத வகையில் ஈடுகொடுத்க்ச் செல்கின்றனர். இப்போது குழந்தைகளுக்கு ஐந்து வயது. ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் இருவரும் படிக்கின்றனர்.
ஆட்டிசம் குறைபாடு என்பது மூளை வளர்ச்சியுடன் தொடர்புடைய ஒரு நிலை, இது ஒரு நபர் மற்றவர்களுடன் எவ்வாறு உணர்கிறார் என்பதும், சமூகத் தொடர்பு மற்றும் தகவல்தொடர்புகளின் சிக்கல்களின் கோளாறாக வரையறுக்கப்படுகிறது. அதுவும் ஆட்டிசம் நோயல்ல குறைபாடு மட்டுமே என்றும் சொல்கின்றனர். அப்படியிருக்க, அதனைச் சரியாக்க முடியாத ஒரு நிலையென்று லக்ஷ்மி எழுதியிருக்கிறார். யாராவது குணப்படுத்த முடியும் என்று பொய் அறிக்கை தந்தால் நம்பாதீர்கள் என்றும் சொல்கிறார். ஆனால் ஆட்டிசம் நோயல்ல தன்முனைப்பு குறைபாடு என்று வரும்போது அதுவும் அதனை ஆரம்பக் காலத்திலேயே கண்டறிந்து அதை ஏற்றுக் கொண்டு புரிந்து அதற்கேற்ற பயிற்சியும், முயற்சியும், செய்ய வேண்டியவைகளையும் செய்தால் சரியாகிவிடுவதைக் கண்கூடாகக் கண்டுள்ளேன்.
யார்தான் தனக்குப் பிறந்த குழந்தைக்குக் குறைபாடுள்ளதை ஏற்றுக் கொள்வார்கள்? ஆரம்பக் காலக் கட்டத்திலேயே புரிந்து செயல்படுவார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான். அதற்காகவே லக்ஷ்மியின் நூலை ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டுமல்லாது, குழந்தையைப் பெற்ற அல்லது பெறப் போகிற அனைவருமே வாசிக்க வேண்டிய நூல் எனலாம். கருவுற்றபோது 'வாட் டு எக்ஸ்பெக்ட் வென் யு ஆர் எக்ஸ்பெக்டிங்' என்ற நூலைப் படிக்கும் பெண்களைப் போல் இந்த நூலை கணவர்- மனைவி இருவருமே வாசித்தல் அவசியம்.
அதிலுள்ள பயிற்சிகள், முக்கியமாகத் தொலைக்காட்சியும் செல்பேசியும் குழந்தையின் மூளையைப் பாதிக்கும் என்ற உண்மைகளைப் பலர் அறிந்திருந்தும் "கார்ட்டூன் பார்த்தால்தான் என் புள்ள சாப்பிடுவான்" என்று பெருமைப்படும் தாய்மார்கள் இருக்கவே செய்கிறார்கள்.
லக்ஷ்மி தன் மகன் கனிவமுதனை சிறப்புக் குழந்தை என்று குறிப்பிடுகிறார். எல்லாக் குழந்தைகளுமே ஒரு வகையான சிறப்புக் குழந்தைகள்தான் என்பது என் கருத்து. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகை, அதில் அவர் மகன் கனிவமுதன் ஒரு வகை அவ்வளவுதான். என் மகனும் குழந்தையைப் பார்த்துக் கொள்பவரிடம் நான் அவனை விட்டுவிட்டுச் செல்லும்போது மூச்சில்லாமல் அழுவான், பத்து நிமிடத்திற்கு ஒரு இடத்தில் உட்கார மாட்டான், சுற்றிக் கொண்டே வருவான். நெடும் பயணமல்ல சிறு பயணமென்றாலும் போய்ச் சேரும் வரை போரடிக்குது என்பான், தண்ணீர் வேண்டுமென்பான், தேவையில்லாமல் அழுவான். என் மகன் மட்டுமல்ல பல குழந்தைகளை இப்படிப் பார்க்கிறேன். படிக்க அல்லது எழுத உட்கார வைத்தால் கை வலிக்கிறது என்று முறுக்குவான், கழிப்பறை போக வேண்டும் என்பான், தூக்கம் வருது என்று சோம்பல் முறிப்பான். இதெல்லாம் செய்தால்தானே குழந்தை?. இந்த நூலில் குழந்தைகளுக்கு 'ப்ளாஷ் கார்ட்' வைத்து சொல்லி கொடுக்கும் முறை, பல் துலக்க 28 ஸ்டெப், தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்த, அறிவு வளர்ச்சிக்குத் தேவையான பயிற்சி, பேச்சுப் பயிற்சி, கைவிரலை பலமளிக்கும் வேலைகள் என்று சிறப்புக் குழந்தைக்கு என்று சொல்லப்பட்டவை எல்லாமும் மற்ற குழந்தைகளுக்கும் பொருந்தும், அவசியமும்.
ஆட்டிசக் குழந்தையின் தனிச் சிறப்பே அவர்கள் பல விஷயங்களில் வல்லுனர்களாக மற்ற குழந்தைகளை விட மிக விரைவாகக் கற்றுக் கொள்ளும் திறன்மிக்கவர்கள். அதனை ஹைப்பர்லெக்ஸியா என்கின்றனர், அதையும் குறைபாடாகக் கொள்கின்றனர். காரணம் பொருளில்லாமல் எழுத்துருக்களையும் அதன் உச்சரிப்பையும் மட்டுமே கற்றுக் கொண்டு படிக்கக் கூடிய திறன். பொருளைக் கற்றுக் கொள்ளச் சிரமப்படுவதை அவர்கள் குறைபாடாகக் கருதுகின்றனர். ஆனால் குர்ஆன் படிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் எழுத்துருக்களையும் உச்சரிப்பையும் மட்டுமே கற்கின்றனர். அதைச் சிறப்பாகச் செய்வதால் சர்வதேச அளவிலும் பரிசும் பெறுகின்றனர். இதை ஒப்பிட்டு பார்க்கும் போது அந்தக் குறைபாடு எனக்கு முரண்பாடாகத் தெரிந்தது.
கனியைக் கண்டபோது தூக்கிக் கொஞ்ச வேண்டுமென்று பரபரத்த கைகளைக் கட்டிப்போட்டு புன்முறுவலோடு நகர்ந்தேன். பொதுவாகக் குழந்தைகளைப் பார்த்தாலே கொஞ்சவும், கைக் குலுக்கவும், ஏதேனும் பேச்சு கொடுக்கவும் செய்யும் என் போன்றவருக்கு எச்சரிக்கை விடுப்பது போல் லக்ஷ்மி சொல்வது 'ஆட்டிச நிலை குழந்தைகள் யாரையும் எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை அதனால் தள்ளி நில்லுங்க' என்பது. ஆனால் அதே லக்ஷ்மி அவர்களுக்கு நண்பர்கள் கிடைக்கவும் வழி செய்வதாகச் சொல்வது முரண்.
இயல்பாகவே சின்னக் குழந்தைகள் என்றில்லை பெரிய குழந்தைகளுமே இருட்டைக் கண்டால் பயப்படுவார்கள், அப்படியிருக்கச் சிறப்புக் குழந்தைகள் இன்னும் அதிகமாக எதிர்வினையாற்றுவதில் ஆச்சர்யமில்லை. பொதுச் சமூகம் இதையெல்லாம் புரிந்து கொள்ளாததால் கழிப்பறை அருகே இரவு முழுக்க நிற்க வேண்டிய அவலம் லக்ஷ்மிக்கு ஏற்பட்டுள்ளது, இதில் குழந்தையின் குறைபாட்டை என்னால் பார்க்க முடியவில்லை, மாறாக இந்தச் சமூகத்தைத்தான் குறைசொல்ல வேண்டும்
'அடி' என்ற வார்த்தையைக் கேட்டவுடன், 'அடி! அடி!' என்று கூறியபடி தன்னைத் தானே கைகளால் அடித்துக் கொள்ளும் குழந்தை, வலித்தால் வலிக்கிறது என்றும் அடித்தால் அடிக்கிறார்கள் என்றும் சொல்லத் தெரியாத குழந்தையை அடிக்கும் அந்த ஆசிரியரைதான் சாத்தவேண்டும்.
நூல் முழுக்க ஆசிரியர்கள், கற்றறிந்தவர்கள், பராமரிப்பாளர்கள் என்று எல்லாருமே குழந்தையைத் தவறாகக் கையாள்வதைக் காண முடிகிறது. ஆனால் லக்ஷ்மி- பாலா இருவருமே நல்ல பெற்றோர் என்பதால் கனி எதையாவது கற்றுக் கொள்கிறானா இல்லையா என்று கூர்ந்து கவனித்து, எதுவும் கற்கவில்லை அல்லது அங்கு ஏதேனும் தவறு நடக்கிறது எனில் உடனே அந்த இடத்திற்குச் செல்வதைத் தடுத்துவிடுவது சிறப்பு. கனி சிறப்புக் குழந்தையாக இல்லாவிட்டால் இப்படியான தனிக் கவனம் கிடைக்குமா என்பது சந்தேகமே.
இந்நூலில் எனக்கு அவருடைய எழுத்துநடை மொழிநடை மட்டுமல்ல, அவர் ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர்களைப் பயமுறுத்தாமல், அறிவுரைகளை அடுக்காமல், கட்டளைகளிடாமல் தான் அனுபவித்தது, எதையெல்லாம் எதிர்பார்க்கலாம், எப்படித் தவிர்க்கலாம், தங்களை எப்படிக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற பொறுப்புணர்வோடு, சமூக அக்கறையோடு தங்களைப் போல் போராடும் பெற்றோருக்காகப் பலவற்றை யோசித்து அவர்களையும் கரை சேர்க்க எழுதப்பட்ட நூலாகக் கருதுகிறேன்.
பொதுவாகப் பெற்றோர்கள் தான் கற்க முடியாததை, பயிலக் கிடைக்காததைத் தன் குழந்தைகள் கற்க வேண்டுமென்று திணிப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடியும். ஆனால் குழந்தைக்காகத் தன்னைத் தயாராக்கி கொண்டு, புதியவற்றைக் கற்ற தாய் லக்ஷ்மி சிறப்புக்குரியவர், அவருக்கு உறுதுணையாக ஆட்டிசம் பற்றித் தமிழில் நிறைய வாசிக்க வழி வகை செய்து ஆனந்த விகடன் விருது பெற்ற அவர் கணவர் பாலபாரதிக்கும் வாழ்த்துகள்
சர்வ சிக்ஷா அப்யான் என்னும் திட்டம் அனைவருக்கும் கட்டாயமாக இலவசக் கல்வி என்னும் இலக்கை கொள்கையாகக் கொண்டதாம். அதன் அடிப்படையில் எல்லாருக்கும் எந்நிலையிலும் கல்வி மறுக்கப்படலாகாதாம். சட்டங்களெல்லாம் சரியாக இருந்தும், கனியிடம் குறைபாடிற்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டும், கனிவாக இயல்பாக நடந்து கொள்ள இவர்களுக்கு யார் சொல்லித் தருவது அல்லது எந்தப் பள்ளியில் இந்த ஆசிரியர்களை சேர்க்க வேண்டுமென்று தெரியவில்லை. குறைகளை நம்மிடம் வைத்துக் கொண்டு குழந்தைகளின் குறைபாடு பற்றிப் பேச இங்கு யாருக்கும் தகுதியில்லை.
அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய 'எழுதாப் பயணம்' நம் குழந்தை வளர்ப்பு பயணத்தைச் சீராக்க உதவும்.
Sunday, May 20, 2018
அர்ஷியாவின் "ஸ்டோரீஸ்"
தன் மகள் அர்ஷியாவின் பெயரில் எழுதிய இந்நூலின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு சம்பவங்கள். எனக்கென்னவோ என் வாப்பா வீட்டில் வந்து சொல்லக் கூடாத சொல்லத் தயங்கிய விஷயங்களை மென்று முழுங்கியவாறு சொல்லும் விஷயங்களாகப் பல பகுதிகளைக் கடந்தேன். அர்ஷியா அவர்களை இதற்கு முன் வாசித்திருக்கவில்லை. ஆனாலும் அவர் தன்னைப் பற்றி விவரிக்கும் ஒவ்வொரு விஷயமும் என் வாப்பாவையே எனக்கு நினைவுபடுத்தியது. குறிப்பாக அவருடைய அன்பு, நேர்மை, கட்சி பேதமில்லாமல் எல்லோரும் அவரிடம் பழகியதாலேயே அர்ஷியா அவர்களின் திருமணத்திற்குக் கட்சி பேதமில்லாமல் அனைவரும் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தார் அப்படித்தான் எனது திருமணத்திற்கும் என் வாப்பாவிற்காகக் கட்சி பேதமில்லாமல் அரசியல் தலைவர்கள் வந்திருந்தனர். தங்கை மகளுக்கு ஓபிசி சான்றிதழ் வாங்க அலைந்தது என் பாஸ்போர்ட் தொலைந்து அதற்காக யாரையெல்லாம் நாங்கள் சென்று பார்த்தது என்று நிறைய ஒற்றுமைகள் இருந்தது இந்நூலுடனுடன் எனக்கு நெருக்கத்தை அதிகரித்தது.
சரளமான எளிமையான மொழிநடையால் சொல்ல வந்த செய்தியைப் புரியும்படி இலகுவாகக் கடத்திவிட அவருக்குக் கைவந்திருக்கிறது. அடுத்தது எதைப் பற்றியது, என்ன சம்பவம் என்று ஒவ்வொரு பகுதியாக மூழ்கி, பக்கங்களைத் திருப்பிக் கொண்டே செல்லச் செய்தது அவருடைய தேர்ந்தெடுத்த சம்பவங்கள். அதில் சிலது இதை ஏன் சேர்த்துள்ளார், இப்படி அரைகுறையாகச் சொல்வதற்குச் சொல்லாமலே இருந்திருக்கலாமென்றும் தோன்றாமலில்லை.
ஒரு பேனாவால் என்ன செய்துவிட முடியும், என்ன கிழித்துவிட முடியும் என்பதைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது இந்நூல். பேனாவால் விளைந்த நன்மையை மட்டுமல்ல தீமையையும் சரியாகவே பதிவு செய்துள்ளார். கள்ளச் சாராயத் தொழிலில் ஈடுபட்டவர்களைக் காட்டிக் கொடுத்து கட்டுரை வரைந்தால் அது எதிர்மறையாகத் தொழில் முன்னேற்றம் தந்ததை வருத்தத்துடன் பதிந்துள்ளார். செய்தியை நிரப்புவதற்காகப் பாம்பு கடி செய்தி வெளியிட்டு எம்எல்ஏ கண்ணப்பன் அமைச்சரான கதை என்று எல்லாவித துணுக்குகளையும் பதிவு செய்துள்ளார். இந்த நூலுக்கு மிகப் பொருத்தமான நூல் அறிமுகத்தை அதற்கு மிகவும் தகுதி வாய்ந்த கே.என்.சிவராமன் தந்தது மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
பிரபல பத்திரிகை மூலமாக அன்று செய்ததை இன்று பலர் புகைப்படச் சாட்சியங்களுடன் சமூக வலைத்தளத்தில் ஏற்றினாலும், அந்தக் காலக்கட்டத்தில் தட்டச்சில்லாமல் ‘கட் & பேஸ்ட்’ செய்யாமல், பிலிம்சுருள் இல்லாமல் மறுபடியும் சென்று படமெடுத்ததையும் பதிவு செய்தவர், தரவுகளைச் சேகரித்து, ஒரு முழுநீள கட்டுரையையும் கவர்ஸ்டோரீஸ்களையும் எழுதித் தயாரித்தது சாதாரண விஷயமாக எனக்குத் தெரியவில்லை. கண் விரியும் சம்பவங்கள் அதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.
சண்டியர்- கல்வி தந்தையரானதற்குச் சாட்சியானார், மனசாட்சிக்காகக் களவாடிய சைக்கிளை திருப்பித் தந்த ஏட்டையா, ஜெயலலிதாவின் வளர்ச்சி, ஜானகியம்மாவின் ஆண்டிப்பட்டி தோல்வி, ஓ. பன்னீர் செல்வம் பதவி வந்தவுடன் அணுகுமுறை மாறியது, பள்ளத்தூர் கல்லூரிக்கும் மதுரை ஆயுதப்படை வளாகத்திற்கும் விமோசனம் கிடைத்தது, மக்களின் பேராசைகளால் ‘டூன் டிரேடிங் கம்பெனி’கள் உருவாகியவை, ‘பங்களா பாலிடிக்ஸ்’ என்று பல்வேறு விஷயங்களைக் கோர்வையில்லாமல் பதிவு செய்யப்பட்ட ‘அசை’.
ஸ்டோரீஸ் புத்தகத்தில் இப்படி எழுதியிருப்பார், “யாரையும் புனிதப்படுத்தவோ காயப்படுத்தவோ நான் முயலுவதில்லை. அதே வேளையில் நெஞ்சத்தின் கரைகளைத் தொட்டுவிட்டுத் திரும்பும் எண்ண அலைகளில் சில சிப்பிகளையும், சில முத்துகளையும் கொஞ்சம் கடல் நுரையையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வது மட்டுமே என் நோக்கம்” என்று.
இப்படியான மனிதர்களை இனி கடப்பது அரிது.
Tuesday, April 10, 2018
ஓரிதழ்ப்பூவை ஒரு பெண் எழுதியிருந்தால்?
குழந்தைகள் வளரும்போது அவர்களுக்கு ஒவ்வொரு பொருளின் பெயரையும் சொல்லித்தருவோம். சில வார்த்தைகளை நாம் சொல்லிக் கொடுக்காமலேயே அவர்கள் கற்றுவிடுகின்றனர். என் மகள் ஏதாவது செய்வதை மறைத்தால் திரித்தால் ‘பொய்’ சொல்லாதே என்று கடிந்துக் கொள்வேன். “பொய்’ என்றால் என்னம்மா?” என்று மகள் கேட்டாள். “உண்மையை மறைப்பது, நான் திட்டுவேனென்று தவறை மறுப்பது” என்றேன். “எது உண்மை, எது தவறு” என்று திரும்பக் கேட்டாள். “நிஜம்,யதார்த்தம், நிகழ்ந்தது” என்று சொல்லி விவரிக்கப் பார்த்தேன். அதே போல ‘பயப்படாதே. தவறு செய்தால்தான் பயப்பட வேண்டும். நல்ல விஷயங்களை, சரியானவற்றைச் செய்யும்போது தயக்கம் இருக்கக் கூடாது” என்றேன் மகனிடம். அதற்கு அவன் “நல்லது எது கெட்டது எது? எது சரி, எது தவறு? யார் அதை நிர்ணயிப்பது? எது சரி என்று எனக்கெப்படி தெரியுமென்று” மறு கேள்விகள் கேட்டான். “உன் மனதுக்குச் சரியென்று படுவது நல்லது. இல்லை தவறு, இது செய்தால் அம்மாவுக்குப் பிடிக்காது என்று நீ நினைத்து அதை மறைக்க நினைப்பது கெட்டது” என்றேன். இப்படி நாம் வளரும்போதே நல்லதையும் நல்லது அல்லாததையும் மத ரீதியாகவோ, நமது கலாச்சாரப் பண்பாடு ரீதியாகவோ, சமூகத்திற்கு மட்டும் ஏற்புடையதை வைத்துப் பிரித்துப் பார்த்து ஒரு முன் முடிவோடு இருப்பதால். நாம் சந்திக்கும் நபர்,பழகும் நண்பர், நம் சுற்றுச் சூழலில் உள்ளவர்கள், ஏன் பார்க்கும் சினிமாவிலிருந்து வாசிக்கும் நூல் வரை நல்லவை என்று நாம் நம்புபவையே அவ்வாறு இருக்க வேண்டுமென்று நினைக்கிறோம். நமக்கு சகஜமான வார்த்தை மற்றவருக்கு ‘கெட்ட வார்த்தையாக’ இருக்கலாம்.
உதாரணமாக மலையாளிகளை நண்பர்களாகக் கொண்டவர்களுக்குத் தெரியும் அவர்கள் எவ்வளவு சரளமாக ‘தெண்டி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள் என்று. ‘போடி தெண்டி’ என்று சொன்ன நண்பரிடம் பல நாட்கள் பேசாமல் இருந்திருக்கிறேன். பிறகு “இல்லை இதை நாங்கள் மிக நெருக்கமானவர்களிடம் அப்படிப் பேசி பழகிவிட்டோம், அந்தச் சொல்லுக்கான பொருளை முன்னிறுத்தி சொல்லப்படும் வார்த்தை இல்லை” என்று விளக்கி மன்னிப்பு கேட்ட பிறகே நான் சமாதானமானேன். அப்படித்தான் ஓரிதழ்ப்பூவில் வெளிப்படையாக மனம் திறந்து யதார்த்தமாக, புனைவாக மிகு புனைவாகப் பேசியுள்ளார் நூலாசிரியர். அதைப் படிக்கும்போது அவருடைய வசீகரிக்கும் எழுத்துநடையும் இடையில் வரும் வட்டார வழக்கும் வாசிக்க விடாமல் நம்மைத் தடுப்பதில்லை.
நூலாசிரியர் உச்சத்தில் (ரொம்ப ‘ஹை’யாக) இருக்கும் போது எழுதியவை அதனாலேயே வாசிக்கும் நமக்கும் அவ்வகையான உணர்வை கடத்தியிருக்கிறார். இவ்வகையான போதையை மனம் ஏற்றாலும் அதை ஏற்கும் நம்மை இச்சமுதாயம் ஏற்குமா என்ற பயம் உள்ளூர ஏற்படாமலில்லை.
‘கொம்பில்லா இலையில்லா காம்பில்லா ஓரிதழ்ப் பூவாம்’ என்ற பாடலை எழுதியவர் போகரா? கம்பரா?தொல்காப்பியரா? என்று கடைசி வரை நூலாசிரியர் சொல்லவேயில்லை. ஒரு வகையான பித்துப்பிடித்த கதாபாத்திரங்களோடு வாசிக்கும் நம்மையும் மாமுனியோடு சேர்த்து,பொதிகை மலையையே சலித்து அப்பூவைக் கண்டறிய கட்டற்ற நிலையில் அலைந்து திரிந்து நம்மையும் சேர்ந்து கண்டெடுக்க வைக்கிறார். அதற்கான உந்துதலை அவர் எழுத்து நமக்குத் தருகிறது.
வாசிக்க வாசிக்கத் திருவண்ணாமலையை வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டுமென்று ஏற்கத்தை ஏற்படுத்துகிறது அவரது விவரணை. இப்படி இடங்களை மட்டுமல்ல அவர் கதையில் வரும் ஒவ்வொரு பெண்களையும் அவ்வளவு ஆசையோடு அழகாக விவரித்து ரசிக்க வைத்த நூலாசிரியர் வர்ணித்த அந்தப் பெண்களை மட்டும் ஏன் அசிங்கப்படுத்தியிருக்கிறார் என்று புரியவில்லை. ஒருவர் இருவரல்ல கதையில் வரும் பிரதானப் பாத்திரங்களான அங்கையற்கன்னி, அமுதாக்கா, துர்கா, மலர்செல்வி என்று யாரையும் விட்டு வைக்கவில்லை. மனப்பிறழ்வு மாந்தர்களாகவே இருக்கட்டுமே, தீயாகப் பூத்த துர்கா சாமியுடன் 'இருந்தவுடன்' பெரிய அமைதியைப் பெற்றாராம். அதே துர்கா மாமுனியைப் பார்த்தவுடன் கையோடு அழைத்துச் சென்று, அமுதத்தில் விழ வைத்து அவருக்கு ஆயிரம் வருடப் பிறவி பயனை அடையச் செய்தாராம். அங்கையற்கன்னி சங்கமேஸ்வரனைப் பார்த்த மாத்திரத்தில் தழுவிக் கொண்டதோடு, அவன் மீது பாய்ந்தாளாம். மலர்விழி,கோலப்பொடியை விட்டுவிட்டு கிடைத்தவனுடன் பைக்கில் ஏறி தொலைந்தாள். அமுதா அக்கா சாவு வீட்டுப் பூ வாசத்துடன் ஆசையோடும் தவிப்போடும் ரவியை ஏந்திக் கொண்டாளாம்.
நான் ஒரு அடிப்படைவாதியோ, கலாச்சாரம் பண்பாடு கற்பு அப்படியென்ற ‘டெம்ப்லேட்டிற்குள்’ சிலரது செயலை வைத்து ஒழுக்க மதீப்பீடு செய்பவள் அல்ல. ஆனால் மனம்பிறழ்ந்த பெண்ணுமே கண்டவுடன் கட்டுடலை அவிழ்ப்பாளா? எத்தனை சதவீதம் இது சாத்தியம்? பல வருடங்கள் சென்றும் பேசக் கூடிய ஒரு படைப்பில் பெண்களை இப்படிச் சித்தரிப்பதை ஏற்க முடியவில்லை.
அதே சமயம், காமம் அற்புதமான விஷயம் அதை அற்பமாக்கி விடாமல் ரசனையோடு இப்படிப் பேசியிருக்கிறார்.
“கனிகளை மட்டுமே கொண்டிருந்த பெரும் பழமரமொன்று வெளவாலை இழுத்து அணைத்துக் கொண்டது. கிளை, இலை, வேர் எங்கும் கனிகள். வெளவாலின் குருட்டுக் கண்களால் கனிகளைக் காணமுடியவில்லை. அதன் சிறு வாயால் எத்தனை கனிகளைச் சுவைக்க முடியும்?” என்பதாக விவரணை நீள்கிறது.
வாழ்வில் காமம் ஒரு பகுதிதான், ஆனால் வாழ்வே காமம் என்பதாக இந்நூல் உணர்த்துவதால் அந்த இரசனைக்கும் இறைந்து கிடக்கும் காமநெடிக்கும் ஈடுகொடுக்க முடியவில்லை. அதனால்தான் வாசிக்கும் போதே தரையில் கால் நழுவும் என்ற எச்சரிக்கையை விடுக்கிறது நமக்கு கிழக்குப் பதிப்பகம்.
நான் யோசித்துப் பார்க்கிறேன் ‘ஓரிதழ்ப்பூ’வை ஒரு பெண் எழுதியிருந்தால் இவ்வளவு பேர் இங்கு கூடித்தான் இருப்பார்களா? கவிதை தொகுப்புக்கு ‘முலைகள்’னு தலைப்பு வைத்ததற்காகவே பலரது வாயில் அவலானார் குட்டி ரேவதி. ராஜாத்தி சல்மாவை இன்னும் ஏற்காத சமூகம் இது, இந்த நூலை ஒரு பெண் எழுதியிருந்தால் அவரை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்பது என் கணிப்பு.
ஆனால் ஒரு ஆண் எழுதும்போது படைப்பைப் படைப்பாளியோடு கலக்காமல் பார்க்க முடிகிறது நம்மால். மகிழ்ச்சி!
இந்நூலை வாசிக்கும் பெண்களை ஆசுவாசப்படுத்தும் விதமாக “எல்லாப் பொம்பளயும் சாமிதான” என்ற வார்த்தையைப் புகுத்தி நூலாசிரியர் நம்மை ஆறுதல்படுத்துகிறார்.
அதேபோல லட்சுமி, சாமிநாதனை மாடு மேய்க்கும் கழியால் அடிப்பது கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியை அளிக்கிறது. அந்தச் சம்பவத்தைக் காட்சிப்படுத்தும் விதம் அழகு, அங்கு மட்டுமல்ல இந்நூல் இவ்வளவு எதிர்மறையான விஷயத்திற்குப் பிறகும் பிடித்துப் போனதற்கான காரணம் அவரது விவரணை, பிரமிப்பான கனவுகள் நினைவலைகளாக நம்மைப் பின்தொடர செய்த எழுத்தின் சூட்சுமம்.
இப்படியான நல்ல எழுத்துக்குச் சொந்தமான அய்யனார் விஸ்வநாத்தை இனி வரும் படைப்புகளில் பெண்களைத் தூய்மைவாதியாகக் காட்டச் சொல்லவில்லை. இயல்பிற்கு மாறாகப் புனைய வேண்டாமென்ற வேண்டுகோளோடு அமர்கிறேன்.
Monday, May 08, 2017
கடவுளின் கை - சாயிரா பானு
மீஜோ ஜோசஃபின் இசை வழியாகப் படத்தின் முதல் பாதியை கதாபாத்திரத்தின் அறிமுகமாகக் கொண்டு சென்றுள்ளனர். படத்தின் அறிமுகக் காட்சிகளாக வரும் முன் பகுதியை மிக அழகாக இரண்டாம் பகுதியோடு இணைத்திருக்கிறார் இயக்குநர் ஆண்டனி சோனி. அதே போலவே அவருடைய கதாபாத்திர தேர்வுக்காகவே, இப்படத்தைப் பார்த்தாக வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுகிறோம். காரணம் சாயிரா பானுவாக வரும் மஞ்சு வாரியார் மட்டுமல்ல ஆனி ஜான் தரவடியாக வரும் அமலாவுக்காகவும். பல வருடங்களுக்குப் பிறகு திரையுலகில் நல்ல ஒரு கதாபாத்திரமாக மிகப் பொருத்தமாக வக்கீலாகக் கால்பதித்துள்ளார் அமலா. இரண்டு பெண்களும் இப்படத்தைத் தம் முதுகில் சுமக்கின்றனர். படத்திற்கு வலு சேர்த்தது ஜோஷ்வாவாக வரும் ஷேன் நிகம். அலட்டல் இல்லாமல் கல்லூரி மாணவராக, தனக்காகத் தன் வாழ்வையே தியாகம் செய்து இவரை வளர்தெடுத்த தாயின் வலிமையையும் அன்பையும் புரிந்து கொள்ள முடியாத பருவத்தில் வலம் வருவதை மிக இயல்பாக உடல்மொழியில் பதிவு செய்துள்ளார். புகைப்படப் போட்டியில் வெற்றி பெற்ற இன்பச் செய்தியை சாயிராவிடம் பகிரும் போது அவரது தலை லேசாகச் சுவற்றில் முட்டும்போது புரிந்திருக்கவில்லை எதற்காக அப்படியான காட்சியென்று, ஆனால் அந்தத் தடங்கலிலிருந்துதான் கதையின் பாதை மாறுவதைப் பின் வரும் காட்சிகள் விளக்குகிறது.
இப்படம் முழுக்கத் தாயின் பரிதவிப்பை வெவ்வேறு வகையில் நிரல்படுத்தியிருந்தாலும் எந்த இடத்திலும் தாயைப் பற்றியோ, அவர் அன்பைப் பற்றியோ, அவர் செய்த தியாகத்தைப் பற்றியோ எந்த ‘க்ளிஷே’வுடனான நாடகத் தன்மையில்லாமல் கதையைப் பதிந்துள்ளனர் ஆண்டனி மற்றும் ஷான். அதற்காகவே அவர்கள் பாராட்டப்பட வேண்டும்.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நீதி விசாரணை, வழக்குகளில் மாட்டிக் கொண்டால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், தாய்- மகன் கதையாக விரிகிறது படம். பெறாத மகனுக்காகப் போராடும் தாயின் கதை இது. ஆனால் அந்தக் கதாபாத்திரம் ஏன் சாயிரா பானுவாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் புலப்படவில்லை. தலையில் துணி அணிவது, சமயங்களில் அவர் தொழுவதைக் காட்டியுள்ளனர் மற்றபடி அந்தப் பாத்திரப்படைப்பு ஏன் முஸ்லிம் பெண்ணாக இருக்க வேண்டுமென்று கதாசிரியர் விரும்பினார் என்று தெரியவில்லை. தற்கொலை செய்வது இஸ்லாம் மதத்திற்கு எதிரானது அதனால்தான் புள்ளிவிரவப்படி இஸ்லாமியர்களின் தற்கொலை அரிது. ஆனால் இப்படத்தில் மகள் தலையில் துணியிடாமல் இருக்கும் மகளைக் கண்டிக்கும் இஸ்லாமிய குடும்பத்தினர் பின்னாளில் ஏதோவொரு காரணத்திற்காக ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்து கொள்வதும் ஏற்கும்படியாக இல்லை. ஆனால் கதையென்று வரும்போது கதையாசிரியரே கர்த்தா என்பதால் விட்டுவிடலாம்.
மஞ்சு வாரியார் ‘போஸ்ட் உமனாக’ மிக இயல்பாக அவருக்கே உரிய மிடுக்கோடு அக்கதாப்பாத்திரத்தைச் சுமந்துள்ளார். அவர் ஸ்கூட்டீயில் போகும் போது தலையிலிருந்து துணி விலகாமல் இருக்க எப்படி ஒரு முஸ்லிம் பெண் அனாயாசமாகத் தலையைச் சுற்றி முக்காடிடுவாரோ அப்படியே இவரும் இயல்பாகச் செய்வது அழகாக இருந்தது. தமிழ் முஸ்லிம்கள் வணக்கம் சொல்வதே தவறு என்று பட்டிமன்றம் நடத்தும் வேளையில், சாயிரா நன்றி சொல்ல பல இடங்களில் இரு கைக்கூப்பியது இடறியது, ஆனால் மலையாள கலாச்சாரத்தில் அது இயல்பான செயல் என்று தெரிந்து ஆச்சர்யத்திற்குள்ளானேன்.
அதே போல அமலாவும் என்னதான் கண்டிப்பான வக்கீலாக இருந்தாலும் ஒரு மகனுக்குத் தாயாக வரும்போது அதற்குரிய உருமாற்றத்தை மெல்லிய முக மொழியில் சொல்லியுள்ளார்.
மஞ்சு, அமலா, ஷேன் இம்மூவரைத் தவிர்த்து வரும் மற்ற கதாபாத்திரங்களும் தனக்கான பணியை மிகச் சிறப்பாக இயல்பாகச் செய்துள்ளனர். குறிப்பாக, பிஜு சோபனம் கையாலாகாத எளிய வக்கீலாகத் தம் பங்கை சரியாகச் செய்துள்ளார்.
இப்படத்தில் ஒரு காட்சியில் ஒருவர் சொல்வார் ‘யதார்த்த வாழ்க்கையும் சில நேரங்களில் நாடகத் தன்மை பூண்டிருக்குமென்று’ இன்னொரு இடத்தில் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டும் ஜோஷ்வாவிடம் மற்றொருவரின் அறிவுரையாக வருவது ’வலிந்து திரிந்து சூழலை ஏற்படுத்திக் கொண்டு காட்சியைப் பதியாமல், கிடைக்கும் அரிய காட்சிகளை உள்ளடக்குவதே சிறந்த புகைப்படமாக அமையுமென்று’. இந்த இரு வசனங்களை முன்னிறுத்தித்தான் முழுப்படமும் அமைந்துள்ளதாக நான் கருதுகிறேன்.
சட்டத்தில் இருக்கும் ஓட்டையைக் கொண்டு நிறைவுபெறும் படம் பல கேள்விகளை நம் முன்னே விட்டுச் செல்கிறது. இறுதி காட்சியில் சாயிரா, மகனுக்காகக் காத்திருக்கும் இன்னொரு தாயைப் பார்க்கச் செல்வது படத்தை முழுமைப்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் ‘ஹேண்ட்ஸ் ஆஃப் காட்’ பற்றிப் பேசப்படுகிறது. ஆண்டவனின் ஆயுதமாக நாம் மாறுவது ஹேண்ட்ஸ் ஆஃப் காட், பிறருடைய பிரச்சனைகளைப் படம் வழியாகப் பேசும் இப்படக்குழுவினரும் ‘ஹேண்ட்ஸ் ஆப் காட்’தானே?
Monday, May 01, 2017
பறந்தெழு - டேக் ஆஃப்
திக்ரித்தில், ஈராக்கின் உள்நாட்டுப் போரில் சிக்கிக் கொண்ட இந்திய செவிலியர்களை ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து மீட்ட கதைதான் 'டேக் ஆஃப்'. இப்படத்தைப் பார்க்கும்போது எனக்கு 'ஏர்லிஃப்ட்' நினைவுக்கு வந்தது. அது பல்லாயிரம் இந்தியர்களை ஈராக்- குவைத் போரின் போது இந்திய ராணுவம் போராடி மீட்ட கதை. இரண்டுமே மீட்கப்படுவதைப் பற்றிய கதையாக இருந்தாலும் அது காப்பாற்றிய அதிகாரியின் பார்வையில் வந்த கதை, இதுவோ மிகப் புத்திசாலித்தனமாகப் பிணைக்கைதியில் ஒருவருடைய கதையை விரிவுபடுத்தி, அவருடைய பின்னணி, அவருடைய கடன் சுமை, அவருடைய குடும்பத்தின் பின்புலமென்று சமீரா என்ற பாத்திரப்படைப்பை சுற்றி நிகழும் காட்சிகளிலிருந்து தொடங்கி அவருடன் நாமும் ஈராக் வரை பயணித்து, சமீராவை நமக்குப் பிரியப்பட்ட பெண்ணாக மாற்றி, அந்தச் சமீராவிற்கு நிகழும் துயரங்களை நம் துயரமாகச் சுமக்க வைத்திருப்பதே இயக்குநரின் வெற்றி. திரைக்கதையை மஹேஷுடன் இணைந்து எழுதியிருக்கிறார் பி.வி. ஷாஜி குமார்.
இப்படத்தின் பலமே இயக்குநருடைய கதாபாத்திர தேர்வு எனலாம். சிறிய கதாபாத்திரத்திலிருந்து பிரதான பாத்திரப் படைப்பு வரை நடிப்பென்றே சொல்ல முடியாதபடி அடித்து ஆடி தூள் கிளப்பியிருக்கிறார்கள். சமீராவாக வரும் பார்வதி நம்மோடு ஒட்டிக் கொள்கிறார். அவர் சிரித்தால் நாம் அகம் மகிழ்கிறோம், அவர் அழுதால் நாம் விசனப்படுகிறோம், அவர் கோபம், ஏமாற்றம், எரிச்சல் என்று மாறிக் கொண்டே இருக்கும் அவர் முகபாவம், உடல்மொழி, உடை தேர்வு என்று சின்னச் சின்ன நுணுக்கங்களையும் கவனமாகக் கையாண்ட படக்குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும். ஓர் இஸ்லாமியப் பெண் தன் தாய் வீட்டிலிருந்து வேலைக்குச் செல்வதற்கும், கணவர் வீட்டிலிருந்து வேலைக்குச் செல்வதற்குமான வித்தியாசத்தைச் சிறிய காட்சியில் போகிற போக்கில் பலமாக நாம் இடறும் அளவிற்குத் தட்டிவிடுகிறார். அந்நியர்கள் வீட்டிற்குள் வந்தால் இயல்பாகத் தலை முக்காடை இட்டுக்கொண்டு வந்து நிற்பது, செவிலியாகப் பலரோடு சேர்ந்து வேலை பார்த்தாலும், ஓர் இஸ்லாமியப் பெண்ணாக அறையிலிருந்து வெளியில் வரும்போது மேலாடையெடுத்து மூடிக் கொண்டு மற்றவரிடம் வந்து அதட்டலாக, பயமின்றித் தன் தேவைகளை வெளிப்படுத்துவது என்று அந்தக் கதாபாத்திரத்தை சுவையுடன் பறிமாறியுள்ளனர். இஸ்லாமிய வாழ்வியல் பின்புலத்தைச் சரியாக அவதானித்தால் மட்டுமே இப்படியான நுணுக்கங்களைக் கையாள முடியும். இதில் படக்குழுவினரின் அர்ப்பணிப்புத் தெரிகிறது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம்தான் ஆனால் ஈராகின் மொசூல் இப்படிதான் இருக்குமென்று நம்மை நம்ப வைத்துவிடும் அளவிற்குச் சானு வர்கீஸின் ஒளிப்பதிவு காட்சிப்படுத்தியுள்ளது.
சமீரா - விவாகரத்தான பெண், எட்டு வயது குழந்தைக்குத் தாய், கடன் சுமையுடையவள், செவிலியாக இருப்பவள், பணத் தேவைக்காக ஈராக்கில் வேலைக்கு விண்ணப்பிக்கிறாள். அவள் மீது 'காதல்' என்ற காரணத்திற்காக மட்டும் செவிலியான ஷஹீதும் விண்ணப்பிக்கிறான். ஈராக் பயணத்திற்கு முன்பாகவே காதலை வெளிப்படுத்திக் கரம் பிடிக்கிறான். இரண்டாவது கணவரின் குழந்தையுடன் இரண்டாவதாகத் தாய்மை அடையும்போது தனது மூத்த மகன் அதனை எப்படி எடுத்துக்கொள்வான் என்ற உள்ளத் தவிப்பை ஒரு தாயாக, புது மனைவியாக, செவிலியாகச் சமநிலைப்படுத்தி அந்தந்த காட்சிக்கு தகுந்த முகபாவத்தை அழகாக வெளிப்படுத்துகிறார் பார்வதி. ஷஹீதாக வரும் குஞ்ஞாக்கோ போபனும் எங்கும் அலட்டாமல் இயல்பாக நடித்துள்ளார். இஸ்லாமின் பெயரில் செய்யும் அட்டூழியங்களை, 'தீவிரவாதம் இஸ்லாமே அல்ல' என்பதைப் பறைசாற்றும் விதமாக, ஐஎஸ்களிடம் மாட்டிக் கொண்டு அடி வாங்கி, அங்குச் சந்திக்கும் மலையாளியிடம் ஷஹீத் "எனக்குத் தெரிந்த இஸ்லாமில் வன்முறை இல்லை" என்று சொல்லும் காட்சியில் முத்திரைப் பதிக்கிறார் இயக்குநர்.
தாய்- தந்தை பிரிவின் குழப்பத்தையும், புதியவரை தன் தாயுடன் பார்க்கும்போது ஏற்படும் எரிச்சல், யுத்தபூமி ஏற்படுத்திய பயம் எல்லாவற்றையும் சரியாக வெளிப்படுத்தியுள்ளார் குழந்தையாக வரும் இப்ராஹிம். அதே போல் சிறிய கதாப்பாத்திரமாக இருந்தாலும் கொடுக்கப்பட்ட இடத்தைச் சரியாகச் செய்திருக்கிறார் ஆசிஃப் அலி. சொல்லியே ஆக வேண்டிய முக்கியக் கதாப்பாத்திரம் ஃபஹத் ஃபாசில், ஈராக் இந்திய தூதராக, கம்பீரமாக, விவேகத்துடன் செயல்படும் புத்திசாலி அதிகாரியாக, கவுரவ வேடத்தில் சில காட்சிகளிலேயே தோன்றினாலும் கலக்கியிருக்கிறார். அவரிடம் சமீரா தன் கணவரை கண்டுபிடித்துத் தரக் கோரி கெஞ்சுமிடத்தில், அதனை ஓர் அதிகாரியாக எப்படி உள்வாங்கிக் கொள்கிறார் என்பதைத் தனது கண்களாலேயே நமக்கு உணர்த்திவிடும் நடிப்பாற்றல் கொண்டுள்ளார் மனோஜாக வரும் ஃபஹத்.
ஷான் ரகுமான் மற்றும் கோபி சுந்தர் இருவரின் பின்னணி இசையும் பின்னிபெடலெத்து இறுதி காட்சியில் தேசிய கொடியை பார்த்தவுடன் செவிலியர்களுடன் சேர்ந்து நாமும் ஆவலாக ஓடவில்லையென்றாலும் நம் இருக்கைக்கு முனைக்கே வந்து வாய் பிளந்து உட்கார வைத்துவிடுகிறார்கள்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள் அப்படியாகக் காதலின் வலியில் கணவரை பிரிந்த சமீராவின் அழுகையில் ஐஎஸ் ஆட்களும் உருகி ஷஹீத்தை கரம் சேர செய்யும் உணர்ச்சியூட்டும் காட்சியையும் இயல்பாக மிக நுட்பமாக மட்டுமே காட்டியிருப்பதும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது. இந்தக் காதலின் மெல்லிய இழைதான் பிணைக்கைதிகள் எப்படி மீட்கப்படுகிறார்கள் என்ற கதைச்சொல்லலில் ஒளிந்துக் கிடக்கும் சூட்சமம்.
'நாம் எவ்வளவு பாதுக்காப்பான இடத்தில் வாழ்கிறோம்' என்ற உள்ளுணர்வை படம் பார்த்த எல்லோரிடமும் விட்டுச் செல்கிறது 'டேக் ஆஃப்'.
Wednesday, March 08, 2017
பெண்கள் தினம்
வேலி கட்டுவதில்லை
மதில் சுவர்கள் வீட்டிலுள்ளவர்கள்
தாண்டிச் செல்வதை முறியடிக்க எழுப்புவதில்லை
எம் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு
வரையறை வகுப்பது அவர் தம் மீதான
நம்பிக்கையின்மையல்ல
கேள்விப்படும் சமூக சங்கடங்கள்
வீட்டில் நுழையாமல் இருக்கவே கட்டுப்பாடுகள்
என் போன்ற தாய்மார்கள்
பெண் பிள்ளைகளை வளர்க்கும்
பீதியிலிருந்து விடு்படும்
பாதுகாப்பான நாளே
பெண்கள் தினம்
Wednesday, October 12, 2016
Pink & Parched - இரண்டு படங்களும் சுட்டெரிக்கும் நிஜங்களும்
இரண்டு படங்களுமே இச்சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தைரியமாக முன்னிறுத்துகின்றன. படம் பார்த்த பிறகு மனதில் திரும்பத் திரும்ப எழும் காட்சிகளும், நடைமுறையில் இன்னும் இப்படியான நிகழ்வுகள் உண்மையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றனவே என்ற அவலமும் நம்மைத் தின்று தீர்க்கிறது.
‘பிங்க்’ - நமது சமூகத்தில் நிலவும் ‘கறுப்பு’ எண்ணத்தையும், பெண்களுக்காக மட்டுமே விதிக்கப்பட்ட எழுதப்படாத சட்டங்களைப் பற்றியும் பேசும் அற்புதமான படம். இயக்குநர் அனிருத் ராய் சவுத்ரிக்கு இது முதல் ஹிந்திப் படமாம். ஆனால் அவர் இப்படத்திற்காக மிகத் தெளிவாகத் தமது பாத்திரப்படைப்புக்கான முகங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். இப்படத்தில் ஒரு கதாநாயகி கதாநாயகன் என்றில்லை. ஒவ்வொருவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
அமிதாப் பச்சன் முதிர்ந்த வழக்கறிஞராகக் கலக்கியிருக்கிறார். அவரது நடையுடை பாவனை அத்துனையும் முதிர்ச்சியையும், இயலாமையும் சேர்த்து அமைத்த பிம்பமாக வருகிறார். மினலாக வரும் தாப்ஸி கதாபாத்திரத்திற்கேற்ப எந்த அதிர்வுமில்லாமல் தொலைந்து போனவராக, தனது கையாலாகத்தனத்தை உடல்மொழியில் சொல்லியிருப்பது இயக்குநர் கேட்டுக் கொண்டபடியா அல்லது இதற்கு மேல் அந்தக் கதாபாத்திரம் எதையும் வெளிப்படுத்தக் கூடாதா என்பது விளங்கவில்லை. 'தைரியமான பெண்மணி' என்று ஃபலக் மினலை குறிப்பிட்டாலும், அந்தத் தைரியத்தை வெளிப்படுத்தாமல் அதிர்ந்தும் பேசாமல் அடக்கப்பட்ட சமுதாயத்தால் நசுக்கப்பட்டவராய் எல்லாக் கட்டத்திலும் காட்சி தருகிறார் தாப்ஸி.
மினலாக வரும் தாப்ஸியைவிட, ஃப்லக்காக வரும் கிர்த்திக் குல்ஹரி மிக நேர்த்தியாக நடித்துள்ளார். குறைந்த வசனங்கள் என்றாலும் சரியான தருணத்தில் முறையாக, தேவைக்கேற்பப் பொருந்தி நடித்துள்ளார். அப்படியே ஆண்ட்ரியாவும். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றியும் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இப்படத்தில் இம்மூன்று கதாபாத்திரங்களும் பிரதானம் என்பதை வலியுறுத்த அவர்களின் பெயருக்குப் பிறகே அமிதாப்பின் பெயர் ‘டைட்டில் கார்டில்’ வருகிறது. நம்மூர் சூப்பர் ஸ்டார்கள் இப்படியான விஷயத்திற்கெல்லாம் எக்காலத்திலும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். பாலிவுட்டிலிருந்து இப்படியான நல்ல விஷயங்களை எப்போது கற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.
நம் நாட்டில் சக்தி வாய்ந்த இடத்தில் அல்லது பண பலத்துடன் கூடியவர்கள் பெண்களை எப்படி மடக்குகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள், பிடிக்காத பெண்ணை ஆபாசமாகச் சித்தரித்து வெளியிட்டு எளிதாக அவள் வேலையை இழக்க வைக்கிறார்கள் என்று படத்தில் காட்சிகளாகப் பார்க்கும் போதே மனம் பதறுகிறது.
ஆண்களுடன் ஒரு பெண் சகஜமாகக் கொஞ்சம் சிரித்துப் பேசினால், அவனுடன் வெளியில் சென்றால் அல்லது பார்ட்டிக்குப் போனால் அல்லது குடித்தால் அல்லது இரவு உணவகத்திற்குச் சென்றால் அவளைத் தவறான கண்ணோட்டத்தில் இச்சமூகம் பார்க்கிறது என்பதையும் படித்த பண்பான ஆண்களும் கூட இப்படியான கறுப்பு எண்ணங்களுடன் இருப்பதையும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளார் இயக்குனர்.
‘பிங்க்’கில் நகரத்தில், படித்த பெண்களின் குரலாக வழக்கறிஞர் இருந்து பேசுகிறார் ஆனால் ‘பார்ச்ட்’ படத்தில் வறண்ட பூமியில் வாழும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கான தேவைகளை, விருப்பங்களை அவர்களே பேசுகிறார்கள். சிக்கலின் தீர்வுகளைத் தேடுகிறார்கள், தமக்கான சந்தோஷத்திற்காகப் போராடுகிறார்கள் இறுதியில் விடுதலையும் பெறுவதாக முடிகிறது படம்.
‘பார்ச்ட்’ படத்தில் வரும் பெண்கள் ஏனோ எனக்கு இஸ்லாமியப் பெண்களையே நினைவுபடுத்தினார்கள். அதற்குக் காரணம் படத்தின் முதல் காட்சியாகவும் இருக்கலாம். இறுக்கமான தலை முக்காட்டை ஒதுக்கி தலையைப் பேருந்தின் ஜன்னலில் நீட்டி சுதந்திர காற்றைச் சுவாசிக்கிறார்கள் லஜ்ஜுவாக வரும் ராதிகா ஆப்தேவும் ராணியாக வரும் தனிஷ்தா சாட்டர்ஜியும். அதுமட்டுமின்றிப் பொருள் கொடுத்து பெண் எடுப்பது இஸ்லாமியர்களின் முறையென்பதாலும் எனக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். பெண்ணை ஆட்டை விலை பேசுவதுபோல் மிகச் சரியாகவே காட்டியுள்ளனர். செதுக்கப்பட்ட ஒவ்வொரு காட்சியிலும் வலியும் வலிமையும் நிறைந்து நிற்கிறது. இதில் மதிக்கப்படாத பெண்களின் உள்ளுணர்வுகளைப் பற்றிப் பேசியுள்ளார் இயக்குனர் லீனா யாதவ். ‘பார்ச்ட்’, படத்தைத் திரையில் பார்ப்பது போலில்லை புதியதொரு உலகத்தைச் சுற்றிப் பார்த்து வந்ததுபோல் மனதிற்கு மிக நெருக்கமான ஓர் உணர்வை ஏற்படுத்தியது. யாருமே இப்படத்தில் நடிக்கவில்லை மாறாகக் கதைமாந்தர்களாக மாறியுள்ளனர். லஜ்ஜு, ராணி, பிஜ்லியுடன் நாமும் தோழமையுடன் சுற்றி திரிந்து வரும் வகையில் மிக இயல்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ரஸ்ஸல் கார்பென்டர்.
இரு படங்களின் முடிவுகளும் நமக்குத் திருப்தியையும் நியாயமான தீர்ப்பையும் தந்தாலும் நிஜ வாழ்க்கையில் பொசுக்கப்படும் உண்மைகள் சுடவே செய்கின்றன.
Wednesday, March 30, 2016
மண(ன) முறிவு - Gett: The Trial of Viviane Amsalem
"வன்முறையென்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நீங்கள் உடல் வன்முறை பற்றிக் கேட்கிறீர்கள் என்றால் தீங்கு இல்லை."
"மனைவியின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறாரா?"
"இது விவாதத்திற்குரியது"
"என் கேள்வியானது கணவர் பணம், உணவு அளிக்கிறாரா?"
"இவள் கடந்த மூன்று வருடங்களாகக் கணவரோடு இல்லை, தனக்கும் தன் குழந்தைகளுக்கும் தேவையானதை அவரே பார்த்துக் கொள்கிறார்."
"கணவர் விபசாரம் அல்லது தான்தோன்றியாக சுற்றித் திரிவது, ஏமாற்று வேலை என்று ஏதேனும்?"
"இல்லை"
"கணவர் ஏதாவது ஒரு வகையில் அவரது மனைவியை அச்சுறுத்துகிறாரா?"
"இல்லை"
"இவரால் இந்தப் பெண்ணின் வாழ்வில் ஆபத்து உண்டு என்று நம்புகிறாரா? "
"பல ஆண்டுகளாக அவர்கள் பேசிக் கொள்வதுமில்லை."
கணவன் இடைமறித்து: "நான் பேச விரும்புகிறேன். அவளுக்குத் தான் என்னுடன் பேச விருப்பமில்லை."
"எல்லாம் சரியாகத்தானே இருக்கு பிறகு விவாகரத்திற்கான காரணம்தான் என்ன?"
"அவள் தன் கணவரை விரும்பவில்லை."
-இப்படி நீதிமன்ற விசாரணையோடு துவங்குகிறது இஸ்ரேலிய திரைப்படமான Gett: The Trial of Viviane Amsalem.
ஒரு பெண்ணின் தேவையை அறிய முற்படாமல், அவள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், அவளுக்கான மரியாதையைத் தராமல் அவள் கணவரின் விருப்பத்தை மட்டுமே பிரதானமாக்குகிறார்கள். முடிந்த வரை அவருக்குச் சாதகமாக விசாரணையைக் கொண்டு செல்கிறார்கள். இரண்டு மணிநேர முழுத் திரைப்படமும் விசாரணையாக, நீதிமன்ற காட்சிகளாக மட்டுமே இருப்பினும், அயர்ச்சியில்லாமல், பல கேள்விகளுடன், வாழ்வியல் சிக்கலுடன், ஆண் ஆதிக்க நீதிபதிகளின் அமைதியான அட்டூழியங்களாக விரிகிறது.
இப்படத்தின் மூலம் இஸ்ரேலின் வாழ்வியல் முறையை விளங்க முடிகிறது. இஸ்ரேலில் எந்த உள்நாட்டு திருமணமும் அல்லது விவாகரத்தும் மதக்குருக்களால் மட்டுமே சட்டப்பூர்வமாக்க முடியுமாம், அதுவும் 'கணவரின்' முழு ஒப்புதலுடன் மட்டுமே சாத்தியமாகுமாம். மத அடிப்படையிலான திருமணச் சட்டங்களில் மாட்டிக் கொண்ட கதாநாயகி வீவியன், கணவர் எலிஷா ஆம்சலெமிடமிருந்து விவாகரத்து கோருகிறார். அவர் தர மறுக்கிறார். வீவியன் தன் தரப்பு நியாயங்களை விவரிக்க அழைத்து வரும் சாட்சியங்களும், எலிஷா நல்லவர் என்று சான்றிதழ் தருகிறார்கள். அவர் நல்லவர்தான் ஆனால் அவர் தனக்கு நல்ல கணவரில்லை என்பதைத் தனது வழக்கறிஞர் மூலம் விளங்க வைக்கப் பாடுபடுகிறார் வீவியன். சாட்சிகளாக வரும் ஒவ்வொருவரும் சமூகத்தில் ஒரு பெண்ணை அவர்கள் பார்க்கும் வெவ்வேறு பார்வைகளின் பிம்பங்களாக உரு தந்திருக்கிறார் இயக்குனர். இந்தச் சமுதாயத்தில் பலருக்கு, ஏன் பெண்கள் உட்பட பலருக்கு, கணவர் அடிக்கவில்லை, குடிக்கவில்லை, வேறு பெண் தேடி செல்லவில்லை, உண்ண உணவு, இருக்க இடம் இதெல்லாம் மட்டுமே மகிழ்ச்சியான வாழ்க்கை என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்.
பெரும்பாலானவர்களுக்கு இவ்விதமான மனநிலை இருப்பதால்தான் வீவியன் போன்ற பெண்களின் மனம் இவர்களுக்குப் புரிவதில்லை. இதையெல்லாம் மீறி திருமண வாழ்வில் ஒரு பெண் எதிர்பார்க்கும் விஷயங்கள் பற்றி இவர்களுக்கு விளங்குவதில்லை. அதே போல ஒரு மனைவியின் கடமையாகப் பொதுவாகப் பலர் சிந்திப்பதும், அதுவே இந்தப் படத்தில் சொல்லப்படுவதும், கணவருக்குப் பிடித்ததைச் சமைத்துப் போடுதல், கணவரின் பெற்றவர்களைக் கவனித்தல், குழந்தைகளைப் பராமரித்தல், கணவரின் கண்ணுக்கு மட்டும் குளிர்ச்சியாக இருத்தல், கணவரின் தேவைக்கு இணங்குதல் இதைத் தவிர வேறில்லை. அந்தப் பெண்ணுக்கென்று ஒரு மனம் உண்டு, அதில் அவளுக்கும் ஆசைகள், கனவுகள், தேவைகள், எதிர்பார்ப்புகள், உணர்வுகள் உண்டு என்பதை நியாயப்படுத்த முற்படும் போது அதைப் புரிந்து கொள்ளாமல் அதனையும் தவறாகப் பார்க்கும் சமுதாயமும், மத அடிப்படையிலான திருமணச் சட்டங்களும் அவளுக்கு விவாகரத்து என்ற விடுதலை கிடைக்கச் செய்யாமல் செய்கிறது.
இந்தப் பெண் கதாபாத்திரத்தின் மொத்த வலியையும் பணிவையும் செருக்கையும் சேர்த்து அதன் முழு வடிவமாகவே மாறுகிறார் கதாநாயகி வீவியனாக வரும் ரோனித் எல்காபெட்ஸ். அவரே தன் சகோதரர் ஷலோமி எல்காபெட்ஸோடு இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தைப் பொறுத்தவரை பெரிய ஆறுதலானது இஸ்ரவேலர்களின் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் 'Ophir Award' இப்படத்திற்குக் கிடைத்தது மட்டுமல்லாது ஜெருசலேம் திரைப்பட விழாவில் 'பார்வையாளர்களுக்குப் பிடித்த படம் பிரிவுக்கான விருதும் இப்படத்திற்கே கிடைத்துள்ளது ஒரு வகை நம்பிக்கையைத் தருகிறது.
யூதர்களும் பிற மத அடிப்படைவாதிகளுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்பதைப் பறைசாற்றும் படம். கடவுளின் பெயரில் ஆண்கள் மாறு செய்யும் ஒரு பெண்ணின் கதை.












