Saturday, May 21, 2022

சமத்துவம்

 எனக்குத் தெரிந்த ஒரு சகோதரமத நண்பர் மனமார உண்மையாகவே நோன்பு வைக்கிறார். அதென்ன ’மனமார’ அப்படியென்ற கேள்வி உங்களுக்கு வரலாம். அதாவது நான் பார்த்த மற்ற நண்பர்கள் எல்லாம் சூரியன் எழும் முன்னெல்லாம் துயில் கலைந்து நோன்பு இருக்க மாட்டார்கள். அவர்களுக்குப் பிடித்த நேரத்தில் எழுந்து சாப்பிட்டு, அதன் பிறகு மாலையில் அவர்களுக்குப் பிடிக்கும் நேரத்தில் நோன்பை முறிப்பது பெரும்பாலும் நாம் பார்க்கக் கூடிய நோன்பாக உள்ளது. இவரும் முதல் வருடம் அப்படிதான் இருந்தார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இஸ்லாமியர்களை மிஞ்சம் வகையில் சுஹூர் நேரத்திற்கு முன்பாகவே துயில் கலைந்து சாப்பிடுகிறார். ”சுஹூருக்கு என்ன சாப்பிட்டீங்க?” என்று கேட்டால் எப்போதும் ஒரே பதில்தான் ’மோர் சாதம்’ என்று. அதேபோல இஃப்தாருக்கு “என்ன சாப்பிட்டீங்க?” என்று கேட்டபோது ”பேரிச்சம்பழமும் தண்ணீரும்” என்றார். அதிர்ச்சியாக இருந்தது. ”வேற என்ன சாப்பிட்டீங்க?” என்றேன். ”வேற என்னங்க, இரவு உணவான மூன்று இட்லியும் சட்னியும்” என்றார் மிகவும் எளிமையாக. என் கண்கள் கலங்கியே விட்டது. கலங்கியதற்குக் காரணம் என்னை நானே சுயபரிசோதனை செய்து கொண்டதால். இஃப்தாரென்றாலே ஒவ்வொரு நாளும் விதவிதமாகச் சமைத்து, ஏதோ அது சாப்பிடும் சடங்காகவே மாறிப் போயிருந்த என் அகராதியில் அதுவும் தெரிந்தவர்களெல்லாம் ‘நான் இதைச் சமைத்தேன்’ என்று படம் காட்டும்போதெல்லாம் ‘ஓ இதை மறந்துட்டோமே, இதைச் செய்வோம்’ என்று அடிப்படையான இறை வணக்கதை மறந்து சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இஃப்தாரை இவர் இவ்வளவு எளிமையாகச் சொல்லும்போது அது எனக்கு ஒரு திறப்பாகவே தெரிந்தது. போன வருட நோன்பில் சில வேளைகள் தொழுதார், அதில் தனக்கு ஆத்மதிருப்தி கிடைப்பதாக உணர்வதாகச் சொன்னதெல்லாம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இவர் முதல் வருடம் நோன்பு இருக்கும்போது, புகைப்பிடித்தல் பழக்கத்தால் நோன்பு வைப்பது சிரமம் என்றார். ’நோன்பை காரணமாக வைத்து புகைப்பிடித்தலைக் கைவிட்டாலென்ன’ என்றேன். சிரமம் என்றார், கொஞ்சம் அறிவுரைத் தந்தேன். முயற்சி செய்கிறேன் என்றார். பல வருடக்காலப் பழக்கமான புகைப்பிடித்தலை அறவே கைவிட்டார். நட்பும் நோன்பும் வென்றது.


மத்திய பிரதேசத்தில் கல்லினாலான கட்டிடங்களை வேண்டுமென்றால் நீங்கள் தகர்க்கலாம், ஆனால் தமிழ் நாட்டவர்களின் சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும், நேசத்தையும் உங்களால் அசைக்கவே இயலாது. அவர்களின் நோன்பும் மாண்பும் ஒருவருக்கொருவரான அன்பும் நம்பிக்கையும் திராவிடமென்ற வலுப்பெற்ற விதையில் வளர்ந்த விருட்சம்.

No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி