Tuesday, May 31, 2022

நெஞ்சுக்கு நிறைவான நீதி

 'நெஞ்சுக்கு நீதி’யில் வரும் கதாநாயகனைப் போலத்தான் எனக்கும் என் பதின்ம வயதில் சாதிய ஏற்றத் தாழ்வுகளைப் பற்றித் தெரியாமல் இருந்தது. ’உண்மையில் இன்றுமா சாதி அடுக்குகளினால் தீண்டாமை, கொலை எல்லாம் நடக்கிறது?’ என்று ஆச்சர்யமாகவே இருந்தது. வாசிப்பும், ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற படங்களும் அதன் உண்மை நிலவரத்தை, சாதிய பாகுபாடுகளை, அழுக்கைப் படம்பிடித்து மனதில் நிறுத்தின.

‘ஆர்டிகிள் 15’ பார்க்கும்போது மன அழுத்தமே ஏற்பட்டது. தமிழில் அந்தச் சாராம்சத்தைக் கொண்டு சேர்த்ததற்கு படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றி. அவ்வளவு கனமான திரைக்கதையை அனாயாசமாகக் கையாண்டிருப்பார் கௌரவ் சோலங்கி. ஹிந்தியில் ஆயுஷ்மன் குரானா அலட்டிக்கொள்ளாமல் செய்த அந்தக் கதாபாத்திரம், இவ்வளவு நடித்தால் போதுமானது என்று இருப்பதாலேயே தமிழில் அந்தக் கதாபாத்திரத்திற்கு உதயநிதி சரியான தேர்வுதான். தேவையான அளவே நடித்திருக்கிறார் அலட்டாமல். அவருக்குப் போலீஸ் உடை கச்சிதமாகப் பொருந்துகிறது. நல்லவேளையாகச் சண்டைக்காட்சிகள் இல்லை.
திரைப்படத்தைத் தூக்கிப் பிடிப்பதே அதன் திரைக்கதையும், வசனங்களும், ஒளிப்பதிவும்தான்.
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உதயநிதியை விடுத்து தான்யா, ஷிவானி, அப்துல், சுரேஷ், இளவரசு என்று அனைத்துக் கதாபாத்திரங்களையும் சரியாகச் செதுக்கி அவர்களது கதாபாத்திரத்திற்கு நியாயம் கற்பித்துள்ளார். ஆனால் வாசிக்கும் பழக்கம் உடையவராகக் காட்டப்படும் கதாநாயகன் உதயநிதிக்கு அதுவும் பெரியார்: ஆகஸ்ட் 15 நூலை வைத்திருப்பவருக்குச் சாதிய ஏற்றத்தாழ்வுகளும், ‘தீட்டு’ என்ற வார்த்தைக்கே பொருள் தெரியாதது போல் காட்டியிருப்பதெல்லாம் பொருந்தவில்லை. வெளிநாட்டில் படித்தவர் என்பதாலேயே வலிந்து திணித்து ஆங்கிலத்தில் பேசும் வசனங்களும் ஒட்டவில்லை.
பொருந்தாத விஷயங்களையும் தமிழரசன் பச்சைமுத்துவின் வசனங்களால் சரி செய்துள்ளார்.
விஜயராகவன் (உதய்): ‘உங்களுக்கெல்லாம் ஒரு ஹீரோ வேணும்ல’
கதாநாயகி: ”ஹீரோ வேண்டாம். ஹீரோ வேணும்னு நினைக்கிற மனநிலை மக்களுக்கு வேண்டாம்”
----
விஜயராகவன் (உதய்): ”எல்லாரும் சமம்ன்னா அப்ப ராஜா யாரு?”
கதாநாயகி: ”அனைவரையும் சமம் என்று நினைப்பவன்தான்.”
--
”சட்டம்தான் எல்லாத்தையும் சரி செய்யும்.”
”சட்டமா? (எள்ளலுடன்) எங்களுக்கும் அதற்கும் இங்க மரியாதை இருக்கா என்ன?”
----
”நாயப் பேர் சொல்லி கூப்பிடுற நீங்க, மனுஷங்கள ஏன் இது அதுன்னு சொல்றீங்க?”
----
”ஏய் வா போ’ என்று சொல்லி கூப்பிடுவாரே தவிர என்றைக்காவது பெயரைச் சொல்லி கூப்பிட்டிருக்காரா?”
--
சத்துணவு சமைக்க அனுமதி மறுக்கப்படுவது, கூண்டில் இருக்கும் பெரியார் அம்பேத்கார், ஒதுங்கியே நிற்கும் இளவரசு, எரிச்சலைத் தூண்டும் சுரேஷ் என்று வசனமில்லாமல் காட்சியால் நம்மைக் கலங்கடிக்கும் இடங்களும் உண்டு. ஆனால் இப்படியான காட்சிகளுக்கு இரண்டு பாடல்களைத் தவிர, பின்னணி இசை சிறப்பாக அமையவில்லை. அ ஆ ஆ அ என்று பின்னணியில் இழுவையாக யாரோ கத்திக் கொண்டே இருப்பதாக உள்ளது. சத்தியாவைத் தேடும் போது அதற்கான பரபரப்பு நம்மைத் தொற்றிக் கொள்ளவில்லை. அவள் கிடைக்கும்போது அந்த மகிழ்ச்சி நம்மை வந்தடையவில்லை. இந்தப் பின்னடைவிற்கு முக்கியக் காரணம் இசைதான். திபு நினன் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்.
படத்தில் எனக்குப் பிடித்த காட்சியென்றால் ‘டாக்டர் அனிதா, பயப்படாதீங்க உங்க கூட நான் இருக்கேன்’ என்று உறுதியான குரலில் சொல்லும் அந்தக் காட்சி ’நீட்’ தேர்வுக்கான வாக்குறுதியாக எனக்கு ஒலித்தது. உங்களுக்கு?
’நெஞ்சுக்கு நீதி’ மனதிற்குக் கொஞ்சம் நிறைவைத் தந்தது.

No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி