Saturday, May 21, 2022

நல்லுள்ளம் சூழ் உலகு!

 சம்பளம் வாங்கி வேலையில் இருந்தபோது யாரும் என்னை ஏமாற்றியதில்லை, அதற்கான வாய்ப்புமில்லை. எப்போதும் என்னுடன் இருப்பவர்கள் அனைவருமே நல்லவர்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் தொழில் தொடங்கிய பிறகுதான் ‘டிசைன் டிசைனாக’ ஏமாற்றுபவர்களைக் கண்டு வியக்கிறேன்.

நாங்கள் செய்வதோ பயிற்சி தந்து சான்றிதழ் தருவது அல்லது ஆய்வு செய்து இயந்திரம் வேலை செய்யப் பாதுகாப்பானது என்று சான்றிதழ் தருவது. சான்றிதழ் தரும்போது பணம் தந்துவிட வேண்டுமென்ற ஒப்புதலின் பேரில்தான் பயிற்சிக்கே வருவார்கள். நிறைய வேலைக்கு இந்தச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு அதற்கான வேலைத் திட்டமே (project) கையெழுத்தாகும் அல்லது செயல்படுத்த முடியுமென்பதால் ஓரளவுக்கு எல்லாரும் சரியாகப் பணம் தந்து சான்றிதழ் தருவார்கள்.
ஒரு நிறுவனம் 30 நாட்களுக்கான காசோலையைத் தந்தது. காசோலையைப் பெற்றுக் கொண்டு சான்றிதழைத் தந்துவிட்டோம். 30 நாட்கள் முடியும் முன்புப் பணத்தைச் செலுத்திவிட்டு, காசோலையைத் திரும்ப வாங்கிக் கொண்டனர். எங்களுக்கும் அதில் எந்தச் சந்தேகமோ ஆட்சேபனையோ இல்லாமல் இருந்தது. மறுபடியும் அதே நிறுவனம் வேறொரு ஆய்வுக்கான் (inspection) சான்றிதழ் கேட்டார்கள், முடித்தோம். அதேபோலவே 30 நாட்களுக்கான காசோலையைத் தந்தார்கள் உறுத்தல் இல்லை பெற்றுக் கொண்டோம். சான்றிதழைத் தந்துவிட்டோம். 30 நாட்கள் முடியும் முன் அழைத்துப் போன முறை போலவே பணமாகத் தந்துவிடுகிறோம் காசோலையை வங்கியில் இட வேண்டாம் என்றார்கள். சரி என்று நாங்களும் காத்திருந்தோம். ஆனால் பணம் வரவில்லை. கேட்கும்போதெல்லாம் இன்று நாளை என்றே இழுத்தடித்தார்கள். பெரிய தொகையுமில்லை. 60 நாட்களுக்கு மேலாகிவிட, சரி சின்ன தொகைதானே இதுவுமா அவர்கள் வங்கியில் இருக்காது என்று எண்ணிக் காசோலையை வங்கியில் துணிந்து செலுத்திவிட்டோம். முதல் நாள் வந்துவிட்டதாகக் காட்டிய கணக்கு மறுநாளே சுதாரித்து, இல்லை காசோலை திரும்புகிறது என்று வந்துவிட்டது. அதில் காட்டிய காரணம்தான் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் தந்த காசோலை, வங்கிக் கணக்குச் செயல்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கின் காசோலை. அமீரகத்தைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய குற்றம். நிறுவனத்தை அழைத்து என்ன இப்படி ஏமாற்றி இருக்கிறீர்கள் என்று கேட்க, விழுந்தடித்துக் கொண்டு வரும் வாரத்தில் பணம் செலுத்தி விடுகிறோம் என்று கேட்டுக் கொண்டார்கள். காத்திருக்கிறோம்.
இன்னொரு பெரிய நிறுவனம் என்று தங்களைச் சொல்லிக் கொண்டவர்கள் 2 வருடங்களாகியும் பணம் தரவில்லை. தெரிந்தவர்களின் நிறுவனம்தான் ஏமாற்ற மாட்டார்கள், தாமதமானாலும் தந்துவிடுவார்கள். பெரிய தொகை என்பதால் சுணங்குகிறது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். மேலாளரும், நாங்கள் மற்றவர்கள் மாதிரி இல்லை, காலம் தாழ்த்தினாலும் பணம் வந்துவிடுமென்றே உறுதியளித்தார். சமீபத்தில் நிறுவனத்தை மூடிவிட்டார்கள், பல வழக்கு விசாரணைகள் அந்த நிறுவனத்தின் மேல் இருப்பதாகவும் அவர்கள் திவால்நிலை அறிவித்துவிட்டார்கள் ஆகையால் பணம் வராது என்றும் தெரிந்துவிட்டது. அதன் பிறகு சமீபத்தில்தான் தெரிந்தது, திவாலென்று அறிவித்துவிட்டு, மூடுவதுபோல் காட்டிவிட்டு யாருக்கும் பணம் கொடுக்க முடியவில்லை என்று கைவிரித்தவர்கள், வேறு நிறுவனத்தை வேறு பெயரில் தொடங்கிச் சுகமாகத் தொடர்கிறார்கள் என்று.
இவர்கள் இப்படியென்றால் இன்னொரு நிறுவனம் சான்றிதழ் அவசரம் எங்கள் அலுவலக ஓட்டுநர் காசோலையோடு வருகிறார், உடனே கொடுத்தனுப்பி விடுங்கள். அவர் அங்கு வந்தவுடனே எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிவிடுங்கள் என்று கேட்க, வெள்ளந்தியான நானும் என் கணக்கரிடம் மின்னஞ்சலில் அனுப்பி விடுங்கள் என்று சொல்லிவிட்டேன். வந்தவர் காசோலை தந்தார், வாங்கிவிட்டு மின்னஞ்சல் அனுப்பிவிட்டோம். காசோலையைப் படிமம் எடுக்கும்போது கவனித்தால் அதில் கையெழுத்து இல்லை. அந்த நிறுவனத்தை அழைத்துக் கேட்டால் தவறு நடந்துவிட்டது உடனே அனுப்புகிறோம் என்று இன்னொரு மாதம் இழுத்தடித்துவிட்டு தந்தனர். இன்னொரு நிறுவனம் இப்படித்தான் அவசரமாகச் சான்றிதழ் வேண்டுமென்று காசோலை தந்தார்கள் கையெழுத்தெல்லாம் இருந்தது, ஆனால் Proactive Excel Safety Consultancy என்பதில் lலை விட்டுவிட்டார்கள். படிக்கும்போது மூளை அதனைக் கவனமாகப் பார்க்காதுதானே விட்டுப் போய்விட்டது. ஆனால் அதன் பிறகு பார்த்து கேட்டால் இதோ அதோ என்று அதேபோல் தான் இழுத்தடித்துத் தந்தார்கள்.
இன்னும் சிலர் ஆய்வுச் சான்றில்லாமல் அதற்கான முன் அறிக்கை (first report) மட்டுமே வைத்துத் தனக்கான காரியத்தை முடித்துவிட்டு ‘என்ன ஆய்வு, எப்போ செய்தீர்கள், யார் நீ’ என்பதாக ஏமாற்றுகிறார்கள். எப்படி இப்படியெல்லாம் செய்ய முடிகிறது என்ற அதிர்ச்சியிலேயே பலரை மன்னித்து விட்டுவிட வேண்டியுள்ளது (வேற வழி!?). என்னதான் ஏமாற்றுபவர்கள் ஏமாற்றினாலும் இறைவன் ஏதாவதொரு வகையில் உதவிக் கொண்டுதான் இருக்கிறான். ’நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான்’ என்ற வசனம் நினைவுக்கு வந்திருக்க வேண்டுமே?!


No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி