'மராம்பு' தலைப்பைப் பார்த்ததும் அப்படியென்றால் என்னவென்று தேடினேன். வாசிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது. முதல் இரண்டு அத்தியாயங்கள் என்னை உள்ளிழுத்துக் கொண்டன. வெறும் 100 பக்கங்கள் என்பதால் உடனே முடித்துவிட்டேன். அதனாலேயே கீழேயே வைக்க முடியாத அளவுக்கு இருந்ததென்று சொல்ல முடியாது. நூலாசிரியரின் முந்தைய படைப்பான 'என்னைத் தேடி' யை விடப் பல மடங்கு சிறப்பான படைப்பு இது என்று உறுதியாகச் சொல்ல இயலும். பெண்களை மட்டுமே வைத்துப் படைத்திருக்கும் படைப்பு. இதை ஆண்கள் வாசித்தால் அவர்கள் எப்படி இதனை உள்வாங்குவார்கள் எனத் தெரியவில்லை.
மிக எளிமையான எழுத்து நடை. அடுத்தப் பதிப்பைப் பிழை திருத்தி வெளியிட வேண்டும். மிகவும் சாதாரணமான கதைதான். புதிய விஷயமென்றோ, திருப்பங்கள் என்றோ, எதிர்பாராத நகர்வென்றோ எதுவுமேயில்லை. விக்ரமன் இல்லை இல்லை விசுவின் படம் போல் அல்லது சின்னத்திரை நாடகம் மாதிரி பொழுதுபோக்காக 'அழு மூஞ்சி' கதையாக வயலின் சத்தம் காதைப் பிளக்கிறது.
வள்ளி, ஜானு, மித்ரா, பூஜா, ஆஷியா என்ற பெண்களின் துன்பம் நிறைந்த கதை. வெளிநாட்டில் தனியாக வெவ்வேறு காரணங்களுக்காக வேலைக்கு வந்து கஷ்டப்படும் பெண்களின் கதை.
கனவு தேசம் அல்ல இவர்களுக்குத் துபாய் கண்ணீர் தேசம் என்பதை ஆழமாக நம் மனதில் பதிய முயன்றிருக்கிறார்.
No comments:
Post a Comment