கீரைவிற்கும்
கண்ணமாவின் தலையில்
கொலு பொம்மைகள்
நவராத்தி நாட்களென்று
பொம்மைகள் விற்பதை
வியாபாரமாக்கியிருந்தாள்
சாமிகளை தலையில்
சுமந்தவளாக சப்தத்துடன்
கூவி விற்றாள்
சிவன் இருக்கிறான் என்றாள்
கண்ணன் ராதை உண்டா
என்றனர்
விநாயகரை நம்பிக்கையோடு
வாங்குவார்கள் என்று எதிர்பார்த்தால்
தும்பிக்கை சரியில்லையாம்
சிரித்த முகத்துடன் சாமிகள்
இவள் சிரிப்பிற்கு
விலைப் போகவில்லை
விற்காத சாமிகளும்
இவள் வேதனையை
நோக்கவில்லை
’சாமி சாமி’ என்று
பொம்மைகளை விற்றாள்
ஆசாமிகள் யாரும் வாங்கவுமில்லை
இத்தனை சாமிகள்
இருந்தும்
அவள் குழந்தையின்
பசியை யாருமே
போக்கவில்லை.
-ஜெஸிலா பானு
No comments:
Post a Comment